செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

வாய்மை - வாஸ்தவம்

 இன்று வாய்மை என்பதனுடன் கொடியுறவு கொண்ட சொல்லான வாஸ்தவம் என்பதை உற்று நோக்குவோம்.  இதை நாம் சுருக்கமாகவே அடைந்துவிடலாம்.

முன் தமிழ் வடிவம்:  வாய்மை.

யகரம் சகரமாகத் திரியும். சகரம்.> ஸகரம் >  ஸகர மெய். இதை மனத்தில் இருத்திக்கொண்டு: மேற்செல்க.

மை என்ற சொல்லிறுதி தமிழுக்கே சிறப்பாக உரியது.  அதை விலக்க, மிச்சம் இருப்பது வாய்.

வாய் >  வாய்த்து:   இதன் தமிழ்ப்பொருள்:  வாயைத் ( தளமாக )  உடையது. ( அல்லது தோன்றிடமாக உடையது)

வாய்த்து +  அ ( இடைநிலை ) + அம்.

> வாய்த்து +  அ +வ் +  அம்   ( வ் என்பது உடம்படு மெய் ).  து அ > த. இங்கு உகரம் கெட்டது.

> வாய்த்த + வ் + அம்  

> வாய்த்தவம். > வாஸ்தவம்.  ( திரிபு)    இங்கு ய் த் விலக்கு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

புவி தோன்றியது( என்னும் பொருள் )

இன்று "புவி" என்னும் சொல்லை மிக்கச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்.

இதற்கு முன்பே பூமி என்ற சொல்லை நாம் ஆய்ந்து ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறோம் அல்லோமோ? ( அல்லவா?)

இந்நில வுலகைக் குறிக்கும் சில சொற்களை முன்பு ஆய்ந்தது உங்களுக்காக இங்கு  உள்ளது.  சொடுக்கி அதையும் வாசித்துவிடுவது ஆய்வுக்கு கொஞ்சம் ஒளி தருவதாகுமே!

பூமி :   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_6.html

பூமி சுற்றுவதைப் போல நாம் ஒரு சுற்று வருமுன்பு சில ஆண்டுகள் கழிந்தன. இருந்தாலும் வந்துவிட்டோம்.

முன் கூறியபடி,  இன்று நாம் எடுத்துக்கொண்டது புவி என்பதாகும்.

இச்சொல்லில் உள்ள தமிழை நாம் இவ்வாறு காணலாம்:

பூத்தல் என்றால் தோன்றுதல்.  பூமி தோன்றிய ஒன்று என்பது மனிதர்களின் பொதுவாக ஏற்புடையதாகத் தோன்றும் கருத்தாக உள்ளது.  மனிதன் எதை நடந்திருக்கும் என்று நம்புவானோ, அதன்படியே சொல்லையும் சொற்றொடரையும் அமைத்துக்கொள்வான். இது அன்றும் இன்றும் என்றுமே உண்மையாகும்.


சொல்லாக்கச் சிந்தனை அடிப்படை:

பாலால் ஆன கடல் இருக்கிறதென்று நினைத்தான். பாற்கடல் என்ற ஒரு சொற்றொடரைப் படைத்தான். பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டார் என்று எண்ணினான்:  " பாற்கடலில் பள்ளி கொண்ட பஞ்சவர்க்குத் தூதனே:" என்று ஒரு ( நாட்டுப்) பாடலைக் கட்டிக்கொண்டான்.   மரம் ஓர் உயிரற்ற பொருள்  அல்லது மரத்துப் போன பொருள் என்று எண்ணினான்.  அதன்படியே அதற்கு  "  மர் + அம் " மரம் என்று பெயரிட்டு அழைத்தான்.  மரத்தல் >  மர + அம்= மரம் என்று பெயர் வைத்தான்.   மரி + அம் = மரம் என்று விளக்குதலும் ஆகும். அவ்வாறானால் செத்த பொருள் என்பது பொருளாக ஏற்படும்.  ஒப்பு நோக்க,  Tree என்ற ஆங்கிலச் சொல்லோ "டெரு" என்ற கெட்டிப்பொருள் என்னும் பொருள்தரும் இந்தோ ஐரோப்பியச் சொல்லிலிருந்து வந்ததென்பர்.  

இயற்கையை மீறிய ஆற்றல் அல்லது அமைப்பு இருப்பதாக எண்ணிச் சொல் புனைவதோ, அல்லது பொருளின் தன்மை மட்டும் கருதிச் சொல் ஆக்குவதோ, மொழியிற் காணப்படும் ஓர் இயல்பே ஆகும். மொழிக்குமொழி, இவ்வெண்ணம் கூடியும் குறைந்தும் காணப்படும்.

மர் என்ற தமிழடிச் சொல்லும் கெட்டிப் பொருள் தரக்கூடும்.  இறந்த பொருள் இறுகிக் கெட்டியாகி, பின்னர் அழியுங்கால் மென்மை பெற்று உதிரும்.  (அல்லது மட்கிவிடும்). மரம் என்பது புனைவு என்று கருதத்தகும் எண்ணம் எதுவும் கலவாத ஒரு சொல் என்ற நிலையை நெருங்கி நிற்கும் ஒரு சொல்லாய் அமைந்துள்ளது.

நாம் அறியாத தோற்றம்:

கல் தோன்றி மண் தோன்றா.....  என்று தமிழிலக்கியம் கோட்பாடு வைப்பதால், பூமி தோன்றியது என்றே தமிழனும் நினைத்தான்.   ஆகவேதான் பூத்தல் என்ற தோன்றுதற் கருத்தின் அடிப்படையில் சொல்லை உருவாக்கினான்.

ஆனால் தோன்றியதை எந்த மனிதனும் பார்த்தவனல்லன். ஒருவகையில் இதுவும் ஒரு புனைவை அடிப்படையாகக் கொண்டுள்ளதாய்த் தோன்றுகிறது. பூத்தலென்பது பூமியின் தோற்றத்தை, மரஞ்செடி கொடி முதலியவற்றினோடு ஒப்புமையாக வைத்து இயற்றிய சொல் என்பதையும் முற்றிலும் மறுத்துவிடுதல் இயலாதது ஆகும்.  தோன்றுதல் என்பது புவிக்கும் பூவிற்கும் ஒப்ப இயலும் தன்மை என்பது மறைவதன் கால அளவில் மட்டும் வேறுபடுவ தொன்றாகி விடும்.

புவி என்பது அதுவே

புவி என்பதும் அத்தோன்றுதல் கருத்தையே உட்கொண்டு ஆக்கப்பட்ட சொல்.

பூத்தல் - வினைச்சொல்.

பூ + வி  ( இங்கு வி என்பது விகுதி ). >  புவி.  இங்கு பூவி எனற்பாலது புவி என்று குறுகி அமைந்தது.  இதுபோலும் அமைந்த பிறசொற்கள்:

காண் ( காணுதல் ) >  கண். 

சா > சா+ அம் >  சவம் ( இங்கு வகர உடம்படு மெய் வந்தது).  முதனிலை குறுகிற்று.  சாவு என்ற தொழிற்பெயர் பின்னும் அம் விகுதி பெற்று சவம் என்று குறுகிற்று என்பது இன்னொரு  விளக்கம்.

தொடுதல்:  ( பொருள் தோண்டுதல்).

தொடு = தோண்டு.

" தொட்டனைத்  தூறும் மணற்கேணி"  ( குறள் ).

தோண்டு> தோண்டு+ ஐ >  தொண்டை.

( தோண்டப்பட்டது போன்ற அல்லது தோடு உடையதுபோன்ற  உணவுக்குழல்).

இன்னும் பல உள்ளன.

ஆகவே புவி என்பது பூவி என்பதன் குறுக்கம்.  தோன்றியது என்று பொருள்படும் நல்ல தமிழாகும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில கருத்துகள் இணைக்கப்பட்டன: 01092021 0708





 


அருள்மிகு துர்க்கை அம்மன் பூசை


துர்க்கை அம்மன்



 

சனி, 28 ஆகஸ்ட், 2021

பாரதி என்ற சொல் எங்கு எழுந்தது

 பழந்தமிழ் நாட்டிலும் பொதுவாக இந்திய மாநிலங்களிலும் சிற்றூர்களில் வாழ்ந்தோரும் பாட்டுக் கட்டினர்.  பாட்டைக் கட்டுவது என்றுதான் பெரும்பாலும் சொல்வது வழக்கு.  ஒரு நூறாண்டுக்கு முன்னர், பாட்டை எழுதுவது என்று சொல்லமாட்டார்கள். பாட்டைப் பாடுவது அல்லது கட்டுவது என்று சொல்வது இயல்பான உரையாடல்களின் வந்த சொற்றொடர் ஆகும்.  தமிழ் நாட்டில் கொஞ்ச காலம் வரை, பல பாடல்கள் வாய்மொழியாக வழங்கிவந்தன. பாடியும் வந்தனர். ஏற்றம் இரைக்கும்போது பாடுவதும் நாற்று நடும்போதும் பாடுவதும் பாரம் தூக்கும்போது பாடுவதும் பெருவரவு ஆகும்.  வாத்தியார்களும் பாட்டைப் பாடியே மாணவர்களுக்குக் கற்பிப்பர். இப்போது அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது போலும்.  வாத்தியார்கள் பாட வெட்கப் படுகின்றனர்.  பாடுவதே எமக்குப் பிடித்த பாணி.  பணத்துக்குப் பாடுவதில்லை. சொந்த மகிழ்ச்சிக்கும் பாடவேண்டும்.  நாமே கேட்டு நோய்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை ஒழிக்கவேண்டும்.

ஆலத்தி எடுக்கும்போது பாடுவர்.  லகர ரகரப் பரிமாற்றம் காரணமாக,  ஆலத்தி என்பது ஆரத்தி என்றும் திரியும்.  பின்னர் ஆரத்தி என்பதில் தகர ஒற்று (த்) குன்றி, சொல் ஆரதி என்றும் வரும்.   ஆர்  அர் என்பன ஒலி குறிப்பவை.  அர்ச்சனை என்ற அர் தொடக்கத்தில் அர் = ஒலி.   ஆரத்தி என்பதிலும் ஆர் - ஒலி ஆகும்.  அலைகடல் ஆர்த்து ஆர்த்து ஓங்குவதாக மாணிக்கவாசகர் கூறுகிறார். ஆர்த்தல் என்'ற சொல்பற்றி  வேறு சில குறிப்புகளையும் முன் இடுகைகளில் அளித்துள்ளோம்.  கண்டு மகிழ்க.

பா என்பது பாடலைக் குறிப்பது.

இந்த ஆரதிக்காக சொந்தப் பாடல்களைப் பெண்களும் பிள்ளைகளும் புனைந்துகொண்டனர்.  சிலர் நல்ல பாக்கள் எழுதினர்.  அவர்கள் அடிக்கடி எழுதி   பா ஆரதி ஆயினர்.  பாக்களை ஆர்த்து எழச் செய்தனர். பெண்கள் சொந்தமாகக் கட்டிக்கொண்ட பாடல்கள் ஒருபுற மிருக்க, பாக்கள் கட்டிக் கொடுத்தவர் பா ஆரதி ஆனார்.  இவர்கள் பின்னர் செல்வர்கள் முன்னும் அரசர்கள் முன்னும் பாக்கள் கட்டி அவற்றை ஒலித்தனர்.  இப்படிச் செய்தால் பணமோ பொன்னோ கிடைத்தது.  பெண்களிடம் அந்தக் குடும்ப நிகழ்வுக்குச் சுட்ட வடையும் பாலும்தான் கிடைத்திருக்கும், பாவம்.  மனித முயற்சியானது அவைகளுக்குள் கொண்டுபோய் நிறுத்தி இவர்களைப் பாடவைத்தது.

பா  ஆரதிக்குப் பாடியவர்கள்   நாளடைவில் பாரதி ஆயினர்.  பாரதி மிக்க அழகுடன் அமைந்த தமிழ்ச்சொல். பா ஆரதி என்பது  பா கட்டியவரைக் குறித்தது.

இவ்வாறு குடும்ப நிகழ்வுகளிலிருந்து அரசவைக்குச் சென்ற பா ஆரதிக் காரர்கள்   ,  பாரதி ஆகிப் பாரதக் கதைகளோடும் தொடர்பு கிட்டி  மகிழ்ந்தனர்.

பா ஆரதிக் (காரர்)   -   பாட்டுக்கட்டும் ஆரதிக் காரர். என்பது பொருள்.

பாரதி.

பாரதியார்.

ஆரதிக்குரிய பாவைக் குறிக்காமல் அதை எழுதியவரைக் குறித்தல்.

----------------------------------------------------------------

ஆசிரியர் குறிப்புகள்.

திருவாசகம் :   3.151

லாலி பாடுதல்:  :மணமாலை குலாவிடும் மாப்பிள்ளை பொண்ணுக்கு லாலி லாலி லாலி லாலி  -  உடுமலை நாராயணக்கவி.

அறிக மகிழ்க


மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

குமரன் பிள்ளை - பிறந்தநாள் வாழ்த்து

 

தி இன்டிபெண்டன்ட்  ஆசிரியரும் சமுக சேவகருமான 

திரு குமரன் பிள்ளை.  அவருக்குப் பிறந்தநாள்  வாழ்த்துக்கள்.

உரியவாகுக.


கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


பிறந்தநாள் கொண்டாடும்  குமரன் பிள்ளை

பெற்றுமகிழ்ந்  தார் பலவே வாழ்த்துச்   செய்தி,

சிறந்தனவாய்ப் பலதொண்டும் நாட்டுக் காற்றிச்

சிங்கையில்பல் லாண்டுகளே வாழ்க வாழி!.

சுரந்துவரும் நல்லன்பு  நெஞ்சம் கொண்டார்

சோர்வின்றி உழைத்தற்கோ அஞ்சா  நெஞ்சர்

பறந்துவரும் பல்செய்தி மக்கள் பான்மைப்

பகிர்வில்மெய்  அதிர்வேற்றிப்  பதித்த சீலர்.


 

சுவாரசியம் - பொருள்.

 இன்று சுவாரசியம்  அல்லது சுவாரஸ்யம் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

சுவை எனற்பாலது தமிழ்ச்சொல்லே.  சுவாரஸ்யம் என்பதில் சுவா என்பது சுவை என்பதன் திரிபு. இதிற் பெருந்திரிபு ஒன்றுமில்லை.  சுவை (ஐ) இறுதியை  (ஆ) என்று மாற்றியுள்ளனர்.  ஐ என்பதும் ஆ என்பதும் தமிழில் உள்ள விகுதிகள்தாம்.  மலை என்பதில் ஐ இறுதி வந்துள்ளது.   உலா என்பதில் ஆ இறுதி வந்துள்ளது. ஆகவே தமிழ் விகுதியையே பயன்படுத்தி,  ஐ ( சுவை ) என்பது  ஆ ( சுவா) என்று மாற்றியுள்ளனர்.

யார் மாற்றினர் எனின் மக்கள் நாளடைவில் வேண்டியவாறு ஒலித்து மாற்றினர்.  இன்னோர் எ-டு:  உயர்த்தி/ உயர்ச்சி > ஒஸ்தி.

ரஸ்யம் என்பது ரசியம் என்பதுதான்.  அதாவது ஒன்றை ரசித்தல். தமிழில் ரகர முதலாகச் சொற்கள் வருவதில்லை  ஆனாலும்,  பல தமிழ்ச்சொற்கள் தம் தலை இழந்தபின் ரகர வருக்கத் தொடக்கமாகத் தோன்றியுள்ளன.  எடுத்துக்காட்டு:  அரங்கன் > ரங்கன்.  அரங்கு என்பது மேடை.   நாம் சாய்ந்து கும்பிடும் சாமிகளெல்லாம் மேடைகளில் வைத்தே போற்றப்படுபவை. ( சாய்+ ம் + இ >  சாய்மி > சாமி> ஸ்வாமி  ) மேடை - மேடு+ ஐ:  மேடான இடம்.    அதில் வைத்து அல்லது அரங்குபோன்ற உயர்விடத்தில் வைத்துப் போற்றப்படுவோன். எனவே ரசி என்பது தலையிழந்த சொல்லா என்பதை அறியவேண்டும்.  ரசம் என்பது வேகவைத்த சாறு என்று பொருள்படும்.  ரசம் என்பதும் ரகரத் தொடக்கமுள்ள சொல் ஆதலின், அதற்குத் தலை எங்கேயும் உண்டா என்று அறிவது நம் கடனாகிறது.

முற்காலத்தில்,  ரகர. டகரம்  முதலிய எழுத்துத் தொடக்கமாகச் சொற்கள் இருக்கக்கூடாது என்று தொல்காப்பிய முனி  ( என்ற பிராமணர்!)  சூத்திரம் செய்தார்.  ஏன் இருக்கக்கூடாது,  காரணம் மொழியியலில் எதுவும் இல்லை. That was his own idiosyncrasy.  ரகரம் லகரம் முதலியவை எழுதும்போது ஓலைகள் அதிகம் கிழிந்துபோயினவா, தெரியவில்லை.  ஒரு செய்ம்முறைப்பயிற்சி மேற்கொண்டு இதை நிறுவ முயற்சி  செய்யலாம்.

பண்டைக் காலத்தில் பல மருந்துச் சரக்குகளை ஏற்றவாறு வைத்து அரைத்து அதிலிருந்து சாறு  எடுத்தனர்.  எடுத்ததை கொதிக்கவைத்ததன்பின் குடித்தனர். அவ்வாறின்றி கொதிக்கவைக்காமலும்  சாறு வரச்செய்து குடித்தனர்.

அரைத்தல் - வினைச்சொல்  (.  அர : ஒலி.  அரை:  பொடித்துச் சிறிதாக்கல் )

அரை>  அரைசு >  அரைசம் > ரசம் ஆனது. ( இது அரசு என்ற சொல்லின் அமைப்புச் சுவடுகளோடு ஒன்றித்துச் செல்வது .  இதனினும்:  )

அரை > அரையம் > அரயம் > அரசம் > ரசம் ( எனினுமாம்.)

இகர வினையாக்க விகுதி இணைத்து.  ரசம்  என்பதும் ரசித்தல் ஆனது  ரசி என்பதில் அம் சேர்த்தால் ரசியம் > ரஸ்யம் ஆகிவிடும்.

சுவாரஸ்யம் என்பது சுவைத்து மகிழும் ரசம் என்ற அமைப்பைக் குறித்தது. நாளடைவில் எதையும் அரைத்தாலும் அரைக்காவிட்டாலும் சுவையான கொதிக்கவைத்து ஆக்கியதைக் குறித்தது.

தமிழ்மூலங்களை எடுத்து இவ்வாறு புதிய புனைவுகளை விடுத்தலென்பது நீண்டகாலம் நடந்த ஒரு முயற்சி ஆகும்.  இது திடீரென்று நடைபெற்ற முயற்சி என்று கூற ஆதாரமில்லை. சங்ககாலம் உட்படப் பல காலங்களிலும் நடைபெற்றிருக்கலாம் எனினும் எப்போது இது கூரிய செயலாய் நடைபெற்றது என்று அறிதலில் சில இடர்ப்பாடுகள் உள்ளன. ஆரியர்கள் என்பது ஒரு புனைவு ஆதலின், அதை அவர்கள் செய்தார்கள் என்பதும் புனைவுதான். எல்லா நாடுகளிலும் நடைபெறுவதுபோல, வெளிநாட்டவர்கள் குடியேற்றம் நடைபெற்றது என்பதை நம்பலாம் எனினும் அவர்களுக்கு ஆரியர் என்ற பெயரை ஏன் கொடுத்தல் வேண்டும் என்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.  ஆரியர் என்பது ஆர் விகுதி பெற்ற பெயருடைய அறிவாளிகள், புலவர்கள் இவர்களைக் குறிப்பதாகும். எடுத்துக்காட்டு:  மருதனிளநாகனார்,  சீத்தலைச் சாத்தனார், முடமோசியார் , இவர்கள் சங்கப் புலவர்கள். இவர்கள்  ஆர் உயர்வு பெற்ற அறிவாளிகள் ஆதலின், இவர்கள் தாம் ஆரியர்கள், அவர்கள் பெயர்கள் யாவும் புலமையினாலும் கல்வியினாலும் ஏற்பட்ட  உயர்வினைக் குறிக்கிறது.  ஆர் விகுதி பெற்றுள்ளன.  நண்ணிலக் கிழக்கு (  மத்தியக் கிழக்கு), ஐரோப்பா என்ற இடங்களிலிருந்து வந்தவர்கள்தாம் ஆர் விகுதிக்குரிய அறிவாளிகள் என்றால், உள்நாட்டின் உள்ள உயர்ந்தோரெல்லாம் மடையர்களா? பிழைப்பைத் தேடி வந்த வெளிநாட்டான் என்ன ஆரியன்?  இப்படிப்பட்ட முட்டாள்தனமான தெரிவியல்களை (theories)  குப்பையிலிட வேண்டும்.  மேலும் இனவாரியாக அவர்கள் எல்லாம் ஓரினத்தவர் அல்லர்.  சங்கப் புலவர் போன்றோரே ஆர் விகுதி பெற்ற ஆரியர்.  அவர்கள்தாம் வேதங்கள் முதலியவற்றை இயற்றினர் என்பதும் புளுகுதான். எல்லா நாட்டிலும் பழங்கதைகள் உள்ளன. அவை யாராலும் தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஒன்றிரண்டு வெளிநாட்டினர் இருந்திருக்கலாம். எல்லிஸ் ஆர் டங்கன் தமிழ்ப்படம் தயாரித்ததுபோல.  மக்கள் அவற்றை ச் சுவைக்கவும் அதனால் ஒரு வணிகம் நடைபெறவும் இவை உதவியிருக்கலாம்.  இவற்றால் எல்லோரும் முட்டாள்களாகிவிட மாட்டார்கள். தெரிவியலே முட்டாள்தனமாக இருக்கிறதே!

சுவாரசியம் என்ற சொல் ஆர் விகுதிபெற்ற அறிவாளிகளால் உண்டான சொல்லாகத் தெரியவில்லை. இது மக்களிடைச் சிலர் திரித்து வழங்கியமையால் வந்த சொல்.  சீனி என்பதை  ஜீனி என்பதும் உயர்த்தி என்பதை ஒஸ்தி என்பதும் சிலர் அவ்வாறு ஒலித்தமையால் ஏற்பட்ட சொற்கள்.

வேகமாய் என்பதை பேகனே என்றும் வாராய் என்பதை பாரோ என்றும் சொல்லலாம்.  ஆறு மலை விரிந்த நிலவெளிகள் முதலிய தொலைவிருப்புகளால் விளைந்தவை இவை. இவற்றை ஒருமுகப்படுத்த அன்று வானொலியோ தொலைக்காட்சியோ இல்லை.  இவைதாம் காரணம். எல்லா நாட்டு மொழிகளிலும் இவ்வாறான வேறுபாடுகள் உள்ளன.  ஆரியன் எவனும் உண்டாக்க முடியாதவை இவை. சொந்தமாகச் சோறாக்கிச் சாப்பிடவே பெரிய முயற்சிகள் தேவையாயிருக்கும்போது எவன் போய் இந்த ஒலிப்புகளையெல்லாம் புகுத்திக்கொண்டிருந்திருப்பான். 


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

.



வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஆணின் பின்னால் பெண் ஓடுவதில்லை.

 ஆண்களின் முகமெல்லாம் கொள்ளை அழகென்றே

ஆண்டவன் நினைத்ததுண்டு-----  அதனால்

அதை மறைப்பதும் வேண்டுமென்று  -----  அந்த

ஆண்டவனும் நினைத்ததுண்டோ?


அவன்முகம் மறைக்க மீசையும் தாடியும்

ஆண்டவன் கொடுத்ததுண்டு----- இருந்தால்

அவனை விலகிச் செல்வாள் -----  அதனால் 

அவள்தன்னைக் காத்துக்கொள்வாள்.


உலகைப் படைத்து முடித்தபின் நோக்கினால்

பெண்பின்னே  ஆண் ஓடினான்,

பலவும் அறிந்தவர் சிலவே சிந்தித்தார்

படுதாவைப் போட்டாகிலும் ---- பெண்முகம்

தடுத்தாலே தக்கதென்றார்.


அப்பப்பா உலக நிறுவாகம் என்பது

ஒற்றைத் தலைவலியாய்   ----- இங்கு

உண்டாகி விட்டதப்பா.


பின்னே ஓடாமல் முன்னால்  போவதே

தன்னைத் தான் காப்பதாம்.


கு+ இ = கி ஆகிவிடும். இது சரிதானா?

 ஒற்று  என்பது புள்ளி வைத்த எழுத்து.   எடுத்துக்காட்டு:   ( ச் ) ( ம் ) என்பன.  ஓர் எழுத்து "கி"  ஆவது என்றால்,  அது  க் + இ என்ற இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும்.  இதை அறிந்தவரிடம் கு + இ என்பது கி ஆகிவிடும் என்றால் முன்னரே அவர் அறிந்துவைத்துள்ளதற்கு அது முரண்படுவதால்,  அவர் குதித்தெழுந்து கத்தவில்லை என்றால்,   செவிடரோ இவர் என்ற ஐயப்பாடு உங்களுக்கும் எழ வேண்டுமே!

சிலரைக் கத்தவிட்டுச் சில வேளைகளில் நாம் அதில் நுகர்ச்சி ( அனுபவித்தல் ) அடைந்து மகிழலாம்.  அவர் கத்தலால் கேட்பவர்க்குக் குத்தல் எதுவும் ஏற்படப் போவதில்லை.

இப்போது இதைப் பாருங்கள்.

வருதல் என்பதில் வரு என்பதே வினைப்பகுதி அல்லது ஏவல் வினை.  ஆனால் வருகிறான் என்ற ( இலக்கணப்படி அமைந்த சொல்லில் )  :

வரு + கிறு  + ஆன் என்பதுதான் உள்ளுறைவுகள் ஆகும்.

ஆனால் கிறு என்ற சொல்துண்டு எங்கிருந்து வந்தது?   ஏனைத் தமிழின மொழிகளில் இதைக் காணமுடியவில்லையே!

வருகின்றான் என்பதை எடுத்துக்கொண்டாலும் கின்று எங்கிருந்து வந்தது?

புலவர்கள் சிலர் கின்று என்பதைக் கண்டுபிடித்துக் கூறினர்.  கிறு என்பதையும் தான்.

கிறு என்பது கிறுக்கு என்பதிலிருந்து வரவில்லை.

வரு +   கு  + இன்று + ஆன்.    

இன்று என்பது தான் நிகழ்காலம் என்று உங்களுக்குத் தெரியுமே.

இங்கு கு + இன்று இரண்டும் சேர்ந்து  கின்று ஆகிவிட்டது.

கின்று என்பதிலும் ஓர் இடைக்குறை ஏற்பட்டு கிறு ஆகிவிட்டது.

எனவே கு + இ என்பது குவி என்றாகாமல் இங்கு கி ஆகிவிட்டது.

ஆனால் சந்தி இலக்கணப்படி குவி என்றாகவேண்டும் என்றால்  அப்படி ஆகவில்லை.  இந்தச் சொல் அமைப்பில் ஆகவில்லை. மற்ற சொற்களைப் பற்றி நாம் பேசவில்லை.

கு+ இன்று என்பது கின்று என்று வரும்.  குவின்று என்று வராது.  வாக்கியத்தில் வரும் சந்திக்கான இலக்கணம் இங்கு அடிபட்டு வீழ்ந்துவிடுகிறது. அது இங்குப் பொருந்தாது.

  இன்னும் எழுதலாம். நேரமாவதாலும்,  நாளை மருத்துவரைக் காணவேண்டி இருப்பதாலும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


புதன், 25 ஆகஸ்ட், 2021

விலாசம் என்பதென்ன? பெயர் என்பதென்ன?

 ஒரு  மனிதனுக்குப் பெயர் என்பது மிக்கத் தேவையானது ஆகும். இதனாலே பெயர் என்ற சொல்லுக்குப் புகழ் என்ற பொருளும் நாளடைவில் மக்களிடையே ஏற்படுவதாயிற்று.  பெயர்தலாவது ஓரிடத்தினின்று இன்னோரிடம் செல்லுதல். இதிலடங்கிய கருத்தை, ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனைப் பெயர்த்து அல்லது வேறுபடுத்தி அறிய உதவுவது என்று விரிவுபடுத்தினர். எவ்வளவு சிறிய இடமாயினும் ஒரு மனிதன் இன்னொருவனிடமிருந்து அப்பால்தான் இருக்கமுடியும். ஒருவனின் கால்வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் இன்னொருவன் கால்வைக்கமுடிவதில்லை. அதற்குப் பக்கத்தில் கால்வைக்கலாம், இதன் காரணமாகப் பெயர்த்தறிதல் என்பதைத் தமிழன் கூர்ந்துணர்ந்துகொண்டான். இடப்பெயர்வு போன்றதே மனிதக் குறிப்பின் பெயர்வும் ஆகும்.  ஆதிமனிதற்கு மிகுந்த அறிவு இருந்தது என்பது இதனால் புரிந்துகொள்ளமுடிகிறது. The space occupied by an individual  on ground can only be taken up by one person at a time. Different persons occupying the same place at different times must be differentiated. 

ஒருவன் தன் வீட்டைக் கட்டிக்கொண்டு அதில் வாழ்கிறான்.  இன்னொருவன் அதற்கு  அடுத்துக் கட்டுவான்.  இப்போது உள்ள அடுக்குமாடி வீடுபோல், அதே இடத்தில் முற்காலங்களில் வீடமைக்கும் வழக்கமோ திறனோ வளர்ந்திருக்கவில்லை என்றாலும் ஒருவீட்டிலிருந்து இன்னொரு வீட்டைப் பெயர்த்தறிதல் நடைபெறவே செய்தது.  வீட்டுக்கும் பெயரிட்டுக் குறித்தான். அந்தப் பெயர்,  அழகாக, "நீவாசம்" என்றோ  " அக்காவீடு" என்றோ இருந்திருக்கலாம். பெயர்ப்பலகை போடாமல் குறிப்பிட்டு அறிந்துகொள்வது  " அக்காவீடு"  என்பது.  மாமாவீடு என்பது வேறுவீடு.  இதன்மூலம், மாமாவீடு என்பது அக்காவீட்டிலிருந்து " விலக்கி"  அறியப்பட்டது.  விலக்குதலுக்கான இந்த சிந்தனைத் தெளிவு 'பெயர்" என்பதன் தன்மையை உணர்ந்ததனால் ஏற்பட்டதாகும். 

இவ்வாறு விலக்கி அறிய ஏற்பட்டதுதான் விலாசம் என்பது.  வில என்பது அடிச்சொல். ஆசு என்பது விலக்க ஆவதான பற்றுக்கோடு ஆகும்.  ஆகவே வில+ ஆசு+ அம் = விலாசம் ஆகும்.   நல்ல தமிழ்ச் சொல் என்று அறிந்து,  உங்கள் மாணவர்களுக்கோ கேட்பவர்களுக்கோ விளக்கிச் சொல்லுங்கள். பிற்காலத்தில் இது முகவரியைக் குறித்தது.  கடைகள் முதலிய இடங்களுக்கு இடப்படும் குறிப்புச்சொல்லையும் முன்நிறுத்தியது.  விலாசம் என்பதை விலாஸ் என்று பலுக்கினால் அது பிற சொல்லைப் போல் தெரியும்.  அன்று என்று அறிக.

ஆசு என்பது முண்டாசில் கூட இருக்கிறதே. முண்டு என்பது துண்டுத்துணி. முண்டு ஆசு முண்டாசு.

வில்லிருந்து அம்பு புறப்படுகிறது.  அம்பை விலகிச் செல்ல உதவுவதே வில். வில் என்பது இங்கு அடிச்சொல் -  பிரிந்து சொல்லுதல் குறிக்கும்.  இதிலிருந்து விலகுதல் என்ற சொல் ஏற்பட்டது.  விலாசம் என்பது இவ்வடியிற் பிறந்ததுதான்.

வில்லா என்ற இலத்தீன் சொல்லும் இதனோடு தொடர்புடைய இரவல்தான். வில்லாக்கள் தனித்தனியான மாளிகைகள்.

வங்காளத்தில் தாம் கண்ட வளையல்களை  வங்காளம் > பங்காள் > பேங்கள் என்று குறித்த ஆங்கிலேயனும் கெட்டிக்காரனே.

வில் ஆசு அம் என்பது வில்லாசம் என்று லகரம் இரட்டிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால்,  ஒரு லகர ஒற்றை இடைக்குறைத்து விளக்கலாம்.  உங்கள் மனநிறைவுக்கு.  எம் சிந்தனையில் அது தேவையில்லை.

விலகி விலகி அமைந்த உடற் பக்க எலும்புகள் விலா என்ற பெயர் பெற்றன. ஒரு மனிதனிடமிருந்து ஏதேனும் பெற்றுக்கொண்டு அடுத்தவனிடம் சென்ற பொருள்  வில்> வில்+தல் > விற்றல் ஆனது.  வில் > விலை.  வில் பு அன் ஐ > விற்பனை.

ஒரு சொல்லமைவது,  அந்த அமைப்புச் செயலின் முன்நிற்போனையும் அவன்றன் சுற்றுச்சார்பினையும்,  அவன் சிந்தனையையும்  சிறிதளவு அவன் சார்ந்துள்ள மொழிமரபினையும் நிலைக்களனாகக் கொண்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.  எடுத்துக்காட்டாக பெயர்தல் என்ற சொல் அவன் சிந்தைக்குள் வரவில்லை என்றால்,  "வேறு" என்பதையே அவன் எண்ணிக்கொண்டிருந்திருப்பான் என்றால், பெயர் இட்டுக்கொள்ளப்படுவதன்று, ஆடைபோல் உடுத்துக்கொள்ளப்படுவது என்று கருதிக்கொண்டிருந்திருப்பான் என்றால்  அவன் அமைக்கும் சொல்:  வேறுடை என்று வந்துவிடும். உடுத்தும் உடையைக் குறிப்பதால் சரியில்லை, அடை என்பதே சரி என்று அவன் மனைவி சொல்கிறாள் என்றால் அதை அவன் வேறடை என்று மாற்றிக்கொள்வான்.இதில் இன்னும் கருதுவதற்கு இடமுள்ளது. இத்துடன் நிறுத்துவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

கசானா கஜானா (கருவூலம்)

கஜானா  காலி என்னும் தொடர் மக்களிடையே பெரிதும் வழங்குவதொன்றாம். இதை முன் ஆராய்ந்தவர்கள் இச்சொல் உருதுமொழியில் வழங்கித் தமிழுக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.  உருதுமொழி தமிழ்நாட்டுக்கு வடபால் பேசப்பட்டது என்பதை நாம் அறிவோம்.  இது முஸ்லீம் மக்களிடையே வழங்கி வளர்ச்சி பெற்றது. இம்மொழியில் அரபுச் சொற்களும் பல உள்ளன.

கஜானா என்பதற்குத் தமிழில் தொன்றுதொட்டு வழங்கும் சொல்:  கருவூலம் என்பது.

பிற்காலத்தில் வழக்குக்கு வந்து வளர்ச்சியடைந்து இனியன என்றும் பேசுவோரால் பாராட்டப்படும் மொழிகள்,  தமக்கு வேண்டிய சொற்றொகுதிகளை முன்னரே வழங்கிவந்த பழைய மொழிகளிலிருந்து மேற்கொண்டன என்பது தெளிவு.  பழைய மொழிகளின் சொற்களை எடுத்துத் திரித்து தமக்கு வேண்டியவாறு ஆக்கிக்கொள்வதைத் தவிரப் புதுமொழிகட்கு வேறுவழியில்லை. 

மரித்தல், மரணம் என்ற சொற்களிலிருந்து "  மாரோ " என்ற சொல்லைப் படைத்துக்கொண்டமை போலவேயாகும்.  மாரோ - இறப்பைக் குறிக்கிறது. இதேபோல் ஈரானிய மொழியிலிருந்து எடுத்தாளும் வசதி அவைகளுக்கு இருந்தது.

கஜானா என்ற சொல்லை முன்னிருந்த மொழியிலிருந்து பெற்றனர். தமிழ் முதலியவை முன்னிருந்த மொழிகள்.

செய்த சேவைக்கோ, விற்கும் பொருளுக்கோ விலையைப் பெற்றுக்கொண்ட பின்,  பணத்தைப் பெட்டியில் போடுவர்.  

விற்பனையில் காசு ஆனால் அதைப் பெட்டியில் போடுவது வழக்கம். 

காசானா(ல்)  பெற்றுப் பெட்டியில் போடு என்பது குறுகி காசானாப் பெட்டி என்றானது.  காசானா என்பது பின்னர் மெருகேறி கஜானா ஆனது.  இவ்வாறு சேர்த்து வைக்கும் பெட்டி கஜானா ஆகி,  பெட்டிக்குக் கஜானா என்பதே பெயருமானது.   பணம் சேமித்த பெட்டி ஆனதால், சேமிப்புக்கும் அதுவே பெயரானது.

வறுத்த முந்திரிக்கொட்டை விற்றுக்கொண்டிருந்த ஒரு மலையாளிப் பெண்ணிடம் ஒரு வெள்ளைக்காரர்  என்ன இது என்று கேட்க,  விலையைக் கேட்கிறார் என்றெண்ணிய பெண்,  காசினெட்டு   ( காசுக்கு எட்டு எண்ணம்) என்றாள்.  அதுவே " காஷியுனட்"  என்று அதற்கு ஆங்கிலத்தில் பெயராகிவிட்டது என்பது நீங்கள் அறிந்திருக்கலாம். 

ஒம்னிபஸ் என்றால் இலத்தீனில் எல்லாருக்கும் என்பது பொருள். அதுவே பின் குறுகி பஸ் என்று ஆயிற்று. இச்சொல்லில் பஸ் என்பது ஒரு வெறும் விகுதி.

கசனா அல்லது கஜானா என்பது அழகான சொல்தான்.


அறிக மகிழ.

மெய்ப்பு பின்.




ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

திருவும் திருப்தியும் திரட்சியும்,

முன்னுரை:

 திருவென்பது தமிழில் உயர்வு என்று பொருள்தரும் சொல். ஆனால் இந்த உயர்வு என்னும் தன்மை அச்சொல்லுக்கு வந்ததற்குக் காரணம், நல்லது திரண்டுவருதல்தான். திருவென்பது ஓர் உருவற்ற, மனத்தால்மட்டும் அறியத்தக்க பண்பினைக் குறிக்கின்றது. ஆயின் திரட்சி என்பது உருவுள்ள ஒரு பொருள் தன்போல் உருவுள்ள பிறவற்றுடன் ஒன்று சேர்ந்து காட்சிதருதலையும் உற்றுணரத் தருதலையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டு :  பாலில் நெய் திரளுதல்.  அல்லது மண்ணிற் பொன் திரளுதல்.  இவ்வாறு கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் இருந்தது முயற்சியால் திரட்சியாவதிலிருந்தே திருவில் உயர்வுக் கருத்துத் தோன்றியது.  திரட்சி என்பது அரும்பொருள் திரளுதல். பின் திருவென்பது அதற்கு உண்டான மதிப்பீடு ஆகும். இவற்றுக்கு அடிச்சொல் "திர்" என்பதே.  உண்மையில் திர் என்பதில் உகரம் சேர்ந்து திரு என்றானது சாரியை என்றே கூறவேண்டும். என்றாலும் அது அடியிலிருந்து ஒரு சொல்லுருவைத் தருவதால் அதை ஒரு விகுதி எனல் தக்கதாம்.

ஈறு,  விகுதிகள்:

திர் >  திரள் > திரள்தல். அல்லது திரளுதல். இங்கு ள் என்பதில் வரும் உகரம் (  ள் >ளு)  சாரியை ஆகும்.  திரள்+ சி = திரட்சி.

திர் > திர்+ உ > திரு.

ஒன்று மற்றொன்றாவதைத் திரிதல் என்பர்.

திர் > திரி  ( திர் + இ).

பெரும்பாலும்   அள் ( திரள் ),  திரு ( உ)  மற்றும் திரி ( இ ) என்பனவற்றை நாம் விகுதியாக உணர்வதில்லை. இதற்குக் காரணம் திர் என்பது ஒரு வேர்  ஆகும். அடிச்சொல்லிலும் முந்தியதை வேர் என்று சொல்லவேண்டும், சொன்னால் வேறுபடுத்த எளிதாகவிருக்கும்.

வினையாக்கம்:

அள் என்பது வினையாக்க விகுதி.   வினையாக்கத்திற்கு உதவும் விகுதிகளை முன்பு பழைய இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  இப்போது இனியும் ஓர் உதாரணம் தருவோம்.  வறு என்ற அடியுடன் அள் சேர்ந்து வறள் ஆவதும், இவ்வேவல் வினை பின்னர் ~தல் விகுதி பெற்று வறள்தல் ஆவதும் காணலாம்.  வறு>  வறுத்தல் என்று வறு வினைப்பகுதியாக ஈண்டு வந்தது. வறட்சியே அடிக்கருத்தாயினும்,  வறள்தல் (வரளுதல்) என்பது நீரின்மைகொள்ளுதலைக் குறித்து பொருள் வேறுபட்டதையும் அறிக.

உருவிலதாய மதிப்பீடு

எந்த ஒன்றிலும் அதனால் மனமகிழ்வு தோன்றுமாயின், அது திருவினை வரப்பெற்றது எனலாம். அம் மனமகிழ்வே மதிப்பீடு  ஆகும். திருவென்பதே ஒரு ஸகர ஒற்று முன் தோன்றி,  ஸ்திரு> ஸ்திரி  > ஸ்ரீ  ஆனது. முன் இல்லாதது புதிதாக வருமாயின் அது தோன்றல். ஒன்று பிறவொன்றாகுமாயின் அது திரிதல்.  ஸ்திரி என்ற பெண்ணைக் குறிக்கும் சொல்லும்  ஒரு தோன்றலும் பிறிது திரிதலும் உண்டான சொல்லாகும்.  ஸ் + திரு + இ என்று பிரித்துக் காட்டி இகரம் ஒரு விகுதி எனினும் இன்னும் தெளிவாகும்.  திருவென்பதன் ஈற்று உகரம் கெட்டு ஓர் இகரம் ஏறிற்று.  ஆகவே ஸ்திரீ என்னும் பெண் குறிக்கும் சொல்லில் பெண்ணின் உயர்வு  ஓர் உட்பொதிவு எனல் தக்கதாம்.

இவ்வுயர்வினைத் தமிழால் விளக்கினால் மட்டுமே அறியத் தருமென உணர்க.

மனமகிழ்வு என்பது நிறைவினால் உண்டாகும். எனவே ,மனநிறைவு திரு என்ற சொல்லிலே அமைந்தது அது உயர்வானது என்பதை நமக்குக் காட்டும். இச்சொல் முன்னர் திருத்தி என்றே இருந்தது சொல்லின் தெரிகிறது.  ஆயினும் திருத்தி எனல்,  ஓர்  எச்சவினை போலிருப்பதால் அதைத் திருப்தி என்று மாற்றியுள்ளமை அறியத்தகும்.

முடிவுரை

இந்தத் திருப்திச் சொல் சங்கததிலும் சென்றேறியுள்ளது.  அங்கும் இதே பொருளைத் தருகிறது.  இதுவேயன்றி, சங்கதத்துக்கு மனநிறைவு குறிக்கும் வேறு சொற்களும் உள்ளன.  பாலில் நெய்போல மனவுணர்வும் திரளும் தன்மை உடையது என்பதில் மாற்றுக் கருத்து இலது.  ஆயினும் உருவின்மையால் இத்திரட்சி மனத்தால்மட்டும் அறியத்தக்கது ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

அரோகம் - சுகம், அசுகம் இரண்டும்

 சிலர் எப்போதும் " சுகமாகவே" இருக்கிறார்கள்.  சிலர் சிலவேளைகளில்தான் சுகம் காண்கிறார்கள்.  வாழ்வின் பேரளவு துன்பத்தில் அவர்கட்குச் சென்றுவிடும் போலும். எல்லாம் இன்பமயம் என்பார் ஒருபுறமிருக்க, எல்லாம் துன்பமென்பாருமுண்டு.  வேறுசிலர், தத்துவக் கருத்தாக, இன்பம் யாவுமே பின் துன்பமாகிவிடும் என்றும் கூறுவதுண்டு.  இன்பம் துன்பமிரண்டும் ஒரே கிணற்றில் ஊறிய மட்டைகள் என்னலாம் போலிருக்கின்றது.

சிலருக்கு இன்பம் அரிய பொருள் ஆகிவிடுகிறது.  அரியது என்றால் அடிக்கடி கிட்டாதது.  சிலருக்குத் துன்பம் அரியது.

துன்பம் வாராமல் காத்துக்கொள்தல் எவ்வாறு என்று புத்தர்பிரான் அருளியிருக்கிறார்.  பிறரும் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

எது சரி, எது தவறு என்பதைவிட, ஒவ்வொருவரும் தாம் பட்டறிந்த படியே இதில் எண்ணுவர் என்பதே உண்மை.

சுகம் என்பது ஓர் உகந்த நிலை.   உக >  சுக > சுகம்.  அகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பது சொல்லியலில் தெளிவான முடிபு ஆகும்.

சுகம் அல்லாதது அசுகம் என்பர்.   அல் ( அல்லாமை) > அ ( கடைக்குறை ) > அ + சுகம் >  அசுகம் ஆகும்.

இன்று நாம் அரோகம் என்ற சொல்லை  அறிந்துகொள்வோம். 

இன்பம் துன்பம் என்பவை, சிலருக்கு அரியவை;  சிலருக்கு அவ்வாறு அல்லாதவை.

ஓங்குவதென்பது,   மிகையாவது.  ஓங்கு(தல்) >  ஓகுதல் > ஓகு+ அம் > ஓகம் ஆகும்.

அரிதாக ஓங்குவது அரு+ ஓகம் > அரோகம்.  அது துன்பமாகவும் இருக்கலாம்; இன்பமாகவும் இருக்கலாம்.  நோய் - துன்பம் ஆகும்.

ஓகம் இடைக்குறைச் சொல்.

ஆகவே அரோகம் என்ற சொல்லுக்கு இருபொருளும் உள.  ஒன்று சுகம், இன்னொன்று அசுகம் அல்லது நோய்.

ஆகவே அரோகம் என்பது இரண்டும் குறிக்கும் பொதுச்சொல்.  இன்பம் துன்பம் அவ்வப்போது ஓங்கி நிற்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 21 ஆகஸ்ட், 2021

அம்மா அருள் பொழிக




படம் எடுத்தவர்  திரு ஜீவா கரு.


கவிதை:



சிந்துகவி


விதிமுறைகள் 
(கோவிட் கட்டுப்பாடு):


 புதிய விதிகளைக் கண்டனர் ----  நோய்ப்

போக்கின் கடுமையை   வென்றிட,

இதுவே செலும்வழி என்றனர் ---  பிறர்

எவரும் வராநிலை கொண்டனர்.    (1)


பூசை நடத்தல்


சிலவரே ஆதரித்  தோர்வர  --- பூசை

செவ்வனே சென்றதே துர்க்கையின்,

மலரழ கேயலங்  காரமே --- கண்டு

மலைத்தன நம்மனோர் உள்ளமே!     (2)


அம்மனை வேண்டுதல்


நோய்வரும்  வாயடைப் பாய்நலம் ---  அம்மா!

நுடங்கா  மலேவரச் செய்திடு!

வாய்வயி றானவை நெஞ்சுடன் ---  நல்ல

வன்மை அடைந்திட நல்குவாய்.    (3)


பூசை முடிவு


ஆவன செய்தனர் பூசைஓர் --- மணி

அடுத்து வராமுனம் ஆனதே!

மேவு மகிழ்வொடும் வந்தவர்  ----  அருள்

பெற்ற நிறைவொடும் ஏகினர்.  (4)


சிவமாலாவின் கவிதை.


பொருள்:

செலும் - செல்லும் (தொகுத்தல் விகாரம்)

நோய் வரும் வாய் - நோய் வரும் வழி.

நலம் - எல்லா நலமும் அல்லது பிற நன்மை யாவும்

நுடங்காமலே - உடல்நலம் கெடாமல்.

பிற நலம் வந்தாலும் உடல்நலம் கெட்டால் பயனில்லை.

வராநிலை -  தடை.

வராமுனம்  -  வரா முன்னம்.   (முன்னம் -  முன்பு.)

நம்மனோர் -  நம் மக்கள்




அறிக மகிழ்க.

மீள்பார்வை பெறும்.

   

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மழை வெள்ளம் சிங்கப்பூர்

 

நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -  கெஞ்சுவோர்

பொழிவு - கொட்டுதல்

வாரி - கடல்

மாறுபாடுகள் -  எதிர்மாற்றங்கள்

மலைவு - கடவுள் ஓரிடத்தில் ஒன்றை அதிகமாகவும் 

இன்னோரிடத்துக் குறைவாகவும் தருதல் ஏன் என்னும்

ஐயப்பாட்டு நிலை  உண்டாகுதல்.





கொஞ்ச நேர மழை.  வெள்ளப்பெருக்கு.  தொடர்வண்டி மேம்பாலம் அருகில்.




For more news on this topic:  pl click,

கோவிட் நிலையில் பூசை. ஆள்நுழைவுக் கட்டுப்பாடு.


 கோவிட்டுக்கு முந்திய நாட்களில் இப்பூசைக்கு 300 பேர் வரை ஆதரவளிப்பர். பெருங்கூட்டம் வந்து, அன்னதானம் பூசை அபிஷேகம் ஹோமம் ஆகியவையும் நடக்கும்.  இப்போது கோவிட் என்பதால்  அமைப்பாளர்கள் தவிர வேறு யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. பூசை நடைபெறுகிறது. ஓரிருவரே படத்தில் காணப்படுகின்றனர்.  கோவிட்டினால் அச்சம் மிகுதியாக வுள்ளது. நம் இறைவி சிவதுர்க்கை எல்லோரையும் காக்கவேண்டும். ஒவ்வோருயிரும் அம்மையின் அருள்பெற்று வாழ்க,

கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் பெருந்திரளானவர்கள்  கூடியபோது எடுத்த படம் காண்க:

சுமங்கலிப் பூசையில் பெருந்திரள்.

அந்த நன்னாள் அணுகுமோ  மீண்டும்?
சொந்தம் சூழ்வரு மக்கள் யாண்டும்!
மந்தம் வீழ்ச்சி மாட்சியிற் குந்தகம்
நொந்ததிவ் உலகே உந்துதல் ஒழிந்தே.

----சிவமாலையின் கவிமாலை.

யாண்டும் - எப்போதும்.
சூழ்வரு -  சுற்றி நிற்கும்
மந்தம் - நிறைவின்மை
குந்தகம் - கெடுதல்.
உந்துதல் - உற்சாகம்.



தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன 1427  21082021
If our readers gain access to the compose window by error, please exit without changing 
the text.  By moving your mouse over the text, you may effect unwanted changes and
errors.  Please cooperate.

சுமங்கலிப் பூசைப் படங்கள்

அருள்மிகு துர்க்கையம்மன்





இவை கடந்த ஞாயிறு 15.8.2021ல் சிங்கப்பூர் சிவதுர்க்கா ஆலயத்தில் நடைபெற்ற சுமங்கலிப் பூசையின்போது எடுக்கப்பட்ட படங்கள். தந்துதவியவர் திருமதி சிவலீலா அவர்கள் குடும்பத்தார்.  நன்றி.

பூசை ஆலயத்தாரால் ஸ்ரீ  துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

அருள்மிகு துர்க்கையம்மன் திருமுன் நடைபெறும் பூசை காண்க.


அழகிய சிவதுர்க்கை  அருள்மழை பொழிகின்றாள்

இளகிய உளம்கொண்டே இன்னலற வந்துசிறு

குழவியை அணைத்தல்போல் குரல்காதில் கேட்டதுமே

உழைவந்து பிழைபொறுப்பள்  உலகினையே காத்திடுவள்


-   சிவமாலையின் கவி.


குழவி -  குழந்தை

உழை -  அருகில்


.


 

பரவசம்--- மனிதவசமும் தெய்வவசமும்

 பரமன் என்ற சொல்லுக்குப் பொருள் ஆயும் முகத்தான்,  பர என்ற  சொல்லின் அடிப்படைப் பொருளை நாம் அறிந்துகொண்டோம்.    1  இவற்றை நீங்கள் வாசித்தறிய ஆர்வம் கொண்டிருப்பீர்;  அவை கீழ் (அடிக்குறிப்பில் ) தரப்பட்டுள்ளன.  இது மிக்க விரிவாக ஆய்வு செய்யப்பட்ட சொல்லாதலின் பட்டியல் மிக்க நீளமே.  தலைப்பை நோக்கிச் சிலவற்றையாவது படித்து, பரம் பரத்தல் என்பவற்றின் சொல்லமைப்புப் பொருளை அறிதல் நலம்.

சுருங்கச் சொல்லின்,  பர என்பது எங்கும் விரிந்திருத்தல்.  இறைவனுக்குப் பரமன்  (ப்ரம்மன்) என்ற பெயர் இதனாலேயே ஏற்பட்டது.

ஆகவே பர வசம் என்பது இறைவனின்  வசப்படுதல் என்றும்  பொருள் கொள்ள இடமுண்டு.

பரம் முழுமைச்சொல் ஆதலின் பர எனற்பாலது எச்சச்சொல்லே ஆகும். இவ்வெச்சம் புணர்ச்சித் திரிபு என்பர் நம் இலக்கணியர்.

இன்னொருவனுக்கோ இன்னொருத்திக்கோ வயப்பட்டால், அதுவும் பரவசம் எனப்படுதலுக்கு வழக்கு அல்லது பயன்பாடு உள்ளது.

பரவசம் என்பது உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதலையும் ( சத்தியப் பிரமாணத்தையும்) குறிக்கும் என்பர்.  ஓர் உறுதிமொழி எடுத்தல், எங்கும் எடுப்பவனை உட்படுத்துவதால் இப்பொருள் எனலாம்.

பரவசத்திற்கு விவசம் என்பதும் ஒப்புமைச் சொல்லாகலாம்.  விவசம் என்பது விரிந்து வசமாவது.  விரிவசம்> விவசம்  இடைக்குறையாகும்.

பரவசம் எனின் பரந்து வசமாதல்.  விரிந்து வயப்படுதல்.

தெய்வப்பற்றினாலும் ஒருவர் வசப்பட்டு நிற்றல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.









------------------------------------------------------------------------------------------------------------------------

அடிக்குறிப்பு:

1.  முன்னர் நாம் அறிந்துகொணட பொருளின் பட்டியல்

பரமன்  https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_27.html

பரம், கடவுள், பரந்தாமன் https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_7.html

பராக்கிரமம்  https://sivamaalaa.blogspot.com/2016/07/blog-post_9.html

பணபரம்  ( சோதிடத்தில் )  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

பரம்பரை  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

பரவை https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_22.html

பரத்தல்  https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_28.html

சூரியன் https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html

பனம்பாரனார் https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_30.html

இடைநிலைகள்  https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_7.html

மற்றும்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_64.html

சிவஞான போதம் பா.2  https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_11.html

அப்பரம் அப்புறம்  https://sivamaalaa.blogspot.com/2015/01/apparam-and-appuram.html

பரத்துவாசர் https://sivamaalaa.blogspot.com/2021/02/blog-post_27.html

தாவரம் தாபரம்  https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_7.html


புதன், 18 ஆகஸ்ட், 2021

வீட்டுக் கவிபாடி வெட்டிக்கிருமியை விரட்டி அடியுங்கள்.

 எப்போது வந்தாலும் தென்றல் தென்றல்

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம்

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி!

இதுநம்முள்  ஒட்டுவதால் நன்மை கம்மி.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே

நந்தமிழிற் கவிபாடி வாட்டம் இல்லாப்

பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். 


எப்போது வந்தாலும் தென்றல் தென்றல் - தென்றல் என்பது எப்போது வீசினாலும்  அது இனிமைதான்; முதல் சொல் தென்றல் என்பது தென்மென் காற்று என்பது.  இரண்டாவது தென்றல் இனிமைப் பொருளது.

எப்போதோ வந்தாலும் சூறை வேறாம் --- அடிக்கடி வராத புயல் என்பதில்

இனிமை இல்லை,  அது துன்பமே.  வேறாம் - இனிமையிலிருந்து வேறு படுவதாம்,  அதாவது துன்பமே.

இப்போது வந்ததுவோ  நோயின் நுண்மி! --  இக்காலத்தில் நம்மிடையே வந்துள்ளது  வைரஸ்

இதுநம்முள் ஒட்டுவதால் நன்மை கம்மி. --  இது  நம்மை ஒட்டிக்கொள்ளுமாயின் இதனால் நன்மை மிகக் குறைவு.  பிழைத்துவிட்டால் ஒருவேளை நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், அது ஒரு குறைந்த நலமே.  வழுக்கியும்  விழாதது போல.

நற்போது வருநாளே வீட்டுக் குள்ளே--  வருங்காலத்தின் நல்ல பொழுது உள்ளது; நீங்கள் வீட்டினுள்ளே இருந்து,

நந்தமிழிற் கவிபாடி -  நமது தமிழில் கவிகள் இயற்றி, 

 வாட்டம் இல்லா  - கெடுதல் இல்லாத,

 பொற்போதாய் மாற்றுங்கள் பூத லத்தின்  - இவ்வுலகத்தில் பொன்னான பொழுதாய் அதை மாற்றிவிடுங்கள்.

வருங்கால மக்களுக்கு நல்ல கவிதைகளாவது கிடைக்குமே!

புன்முடியைப் பொன்முடியாய் ஆக்கிக் கொள்வீர். ---  புன்மை மகுடமாகிய கொரனாவைப் பொன் மகுடமாக மாற்றி இன்பம் சேருங்கள்.

புன்மை-- இழிவு.

புன்முடி - இழிமுடி, கொரனா.

( If a compose copy of this post is in circulation anywhere, it is an error. Please reload to obtain the correct output )






செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

பற்றும் பக்தியும்.

 பற்றுக பற்றற்றார் பற்றினை என்ற குறளை நாம் செவிமடுக்குங்கால், பக்தி என்ற சொல் நம் மண்டைக்குள் அந்நேரத்தில் புகுவதில்லை. இரண்டும் ஒரே சொல்லின் வெவ்வேறு வடிவங்கள் என்று நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. குளிர்நீர்க் கட்டிகள் இட்டு எலுமிச்சைப் பழச்சாறு அருந்தும்போது,  குளத்து நீர் நம் நினைவுக்கு வராததுபோலத்தான் இது.  இரண்டும் ( குளிர்நீர்க்கட்டியும் குளத்து நீரும் ) எல்லாம் தண்ணீரின் வடிவங்கள் தாம். பக்தி என்ற சொல், பற்று என்பது பயணித்துச் சென்று அடைந்த வடிவவேற்றுமையை உடையதாய் இலகுவது என்பதை உணரக் கொஞ்சம் முயற்சி தேவைப்படுகிறது.

பற்று என்பது பல்+து என்ற சொற்பகுதியும் விகுதியும் இணைந்த சொல்லாகும். பற்றுதல், பற்றிக்கொள்தல்  என்ற வினைகள் இச்சொல்லிலிருந்துதான் தோன்றின. இதன் மூலச்சொல் புல்லுதல் என்பது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  நல்வினைப் பயனால்,  இந்த முந்துவடிவங்கள் இன்னும் இழக்கப்படாது தமிழில் இன்றுகாறும் இலங்குகின்றன.

பற்று என்ற சொல், இகர விகுதி பெற்றுப் பற்றி >பத்தி என்றானது.   பத்தி என்பது நூற்புகவு பெற்றுள்ளது என்ற போதிலும் பற்றி என்பது தொழிற்பெயராய் எங்கும் காணப்படாமைக்குக் காரணம்,  பற்று என்பது நன்கு ஊன்றி வழக்குப் பெற்றுவிட்டமைதான். பத்தி என்பது ஒரு காலத்தில் பேச்சு வழக்கில் இருந்து மறைந்தது என்று தெரிகிறது.  இன்று யாரும் பத்தி என்றால் அது ஊதுபத்தியைக் குறிப்பதற்காக இருக்கும்.  பத்தி என்பது திருமுறைகளில் வந்துள்ளது.  அது பற்றி அல்லது பற்று என்பதன் பேச்சு வடிவத்திலிருந்து போந்ததே என்பது விளக்கவேண்டாதது ஆகும்.  சிற்றப்பன் என்று சொல்லாமல் சித்தப்பா என்றுதான் சொல்கிறார்கள். அதுபோல் பத்தி என்றுதான் ஒருகாலத்தில் சொல்லியிருப்பர். பற்று அல்லது பற்றி என்பது எழுத்து வடிவம் என்பது தெளிவு.

பத்தி என்பது பக்தி என்று மிடுக்கு வடிவத்தை அடைந்து இன்றும் வழக்குப் பெற்றுள்ளது.  இது ஒருவேளை வட இந்திய மொழிகளின் தாக்கமாகவே இருக்கவேண்டும்.  தமிழிலும் அது நல்ல வழக்குப் பெற்றுள்ளது. முதிர்ந்த உணர்வுநிலை முக்தி எனபது நீங்கள் அறிந்ததே.  அதுவும் இறையன்பில் முதிர்நிலையைக் குறிக்கிறது.  ஓர் அரசன் இறையன்பு முதிர்நிலை கொண்டதை  " ராஜமுக்தி" என்ற பெயரில் எம்.கே. தியாகராச பாகவதர் திரைப்படமாகத் தயாரித்திருந்தார்.  வட இந்திய ஆடை அணிந்திருந்தாலும் தமிழன் தமிழ்னே.

பற்று > பற்றியே இக்காலத்தில் பக்தி ஆகியுள்ளது.  மூலமொழி தமிழே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

வை: வசம்; வாய்: வசம்.

 மனிதராயினும் மற்ற விலங்குகள் ஆயினும் சில சூழ்நிலைகளில் வசமிழந்து தம்போலும் மற்றொரு பிறவிக்குப் பணிந்துவிடுகின்றன(ர்) . இதை வசம் என்று முன் கூறும்வழியே கூறுகிறோம்.

வசம் என்ற சொல்லுக்கு வை என்பதே அடிச்சொல்.

வை -  சொல்லாக்க நெறி நிற்குங்கால் வய் என்று வரும்.

வய் >  வய்+ அம் > வயம்.

யகர சகரப் போலியால்  வயம் > வசம் ஆகும்.  ( ய - ச).  வாயில் -  வாசல் போல.

வை என்பது மேற்குறித்தவாறு வய் என்று ஒலியொற்றுமைத் திரிபு அடையாமல் வை என்றே நின்று  அம் விகுதி பெறுவதுமுண்டு.  அப்போது:

வை > வை+ அம் > வையம்  ஆகும்.  அப்போது வைக்கப்பட்டதான உலகம் என்று பொருள்படும்.  இறைவனால் வைக்கப்பட்டது,  இயற்கையால் வைக்கப்பட்டது என இருவகையாகவும் பொருள்தெரித்துக் கொள்ளலாம்.  தெரிதல்> தெரித்தல் (பிறவினை).  தெரித்தல் என்பது தெரியும்படி செய்தல். தெரிவித்தல் - பிறர் தெரிந்துகொள்ளுமாறு செய்தல்.

வையம் என்பது அம் விகுதி கொள்ளாமல் அகம் என்னும் விகுதி பெற்று வையகம் என்றும் வரும்.

ஒரு பொருளை ( பழத்தை ) எடுத்துக் குரங்கினிடம் வைத்தால்,  பழம் குரங்கின் வசமானது என்க.   ஆகவே வசமென்பது  ஒன்றன்பால் அல்லது ஒருவன்பால் வைக்கப்பட்ட நிலை.  தானே தன்னை வைத்துக்கொள்வதும் பிற ஆற்றலால் வைப்புறுவதும் அடங்கும்.

உயிர்கள் ஓரு கவர்நிலையில் வைக்கப்பட்டுக் கிடக்கும் பருவமே வசம்+தம் ஆகும்.   இங்கு தம் என்பது து+ அம் கலவை விகுதி.   வசம் + து + அம்.  வசத்ததாகி அமைதல்..   வசம் +து : வசத்தது (ஆகி)  அம் - அமைதல், விகுதியும் ஆகும்.  து  இடைநிலை எனினுமது. 

மாலை நேரம் உயிர்களை வயப்படுத்துகிறது. வயந்த ( வசந்த) காலமும் வயம் செய்கிறது. 

இனி வாய் என்ற சொல்லாலும் இதையே விளக்கலாம்.

வாய்  - இது இடம் குறிக்கும்.  எ-டு: தோற்றுவாய் :  தோன்றுமிடம்.

ஓரிடத்து வைப்புற்றுக் கிடத்தலே வாய் + அம் >  வய் + அம் > வயம்.

சாவு + அம் என வந்து குறுகிச் சவமானதுபோல,   வாய் + அம் > வயமென்றும் குறுகுதற் குரித்தேயாம்.

வை, வாய் என்பன ஏனை மொழிகளிலும் பரவியுள்ளது. இதனை இன்னோரிடுகையில் பார்ப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





திங்கள், 16 ஆகஸ்ட், 2021

பத்தியும் பரவசமும்

 பத்தி (பக்தி) என்பதையும் பரவசம் என்பதையும் ஆய்வு செய்வோம். அதன்முன் இந்தக் காணொளியைக் கண்டு மகிழுங்கள். இதைப் படமெடுத்தவர் யாரென்று தெரியவில்லை. பதிப்புரிமையும் தெரியவில்லை. அவர் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டால் இதை அப்புறப்படுத்திவிடுவோம்.  அதுவரை இது இங்கிருக்கும்.

இது எந்த இடம் என்பதும் தெரியவில்லை. இப்படி விவரம் அறிய இயலாத படங்கள் பல வருகின்றன.  நன்றி.

பின்னூட்டம் செய்து தெரிவிக்கவும்.




















ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

அந்தி, மந்தி, அந்தம் , அன்று முதலிய

 அனந்த என்பது ஒரு சொல்.  ஆனந்த என்பது இன்னொரு சொல். இவற்றின் ஒலிக்கிடையே உள்ள முன்மையான வேறுபாடு  அகரமும் ஆகரமும் ஆகும், அதாவது ஒன்று குறில் தொடக்கமானது, மற்றொன்று நெடில் தொடக்கம் ஆகும். இசைப்பாடல்களில் பாடகர் வேண்டியாங்கு வேண்டியபடி வேறுபடுத்தாமலும் ஒலித்துக்கொள்வதால்,  இரண்டும் ஒரு மாதிரி செவிக்குக் கேட்கலாம், என்றாலும் நாம் கவனமாகவே பொருள்கொள்ளவேண்டும்.

இரண்டும் தமிழிலிருந்து திரிந்த சொற்கள்.  தமிழிலும் வழங்குவன ஆகும். ஆனந்த என்ற சொல்லை இங்கு அலசவில்லை.

அனந்த:

அன் + அந்த.   அன் என்பது இங்கு அல்  ( அல்லாதது) என்பதைப் பொருளாகக் கொண்டது.  அல் - அன் என்பது லகர 0னகரப் போலி.   (ஒரு மாதிரியாக இருப்பவை ).  இதை உணர்ந்து கொள்வது எளிதே.

அடுத்திருக்கும் சொல்  அந்த (இங்கு நாம் இந்த அந்த என்ற சுட்டுச்சொல்லைக் குறிக்கவில்லை ).  அந்த என்ற எச்சச்சொல்லைக் குறிக்கிறோம்.)  என்பது. இதன் முழுமை அந்தம் ,  இது முடிவு என்று பொருள்படும்.  ஆதி அந்தமில்லாதவர் கடவுள் என்பார்கள்.  முடிவு மில்லை, தொடக்கமும் இல்லை என்பது இதன் பொருள். இதை உணர்ந்து கொள்ள முதலில் அன்று என்ற தமிழ்ச்சொல்லை அறியவேண்டும்.

அன்று, அந்தம்

இன்று, அன்று என்பவை நாட்களைக் குறிப்பவை.  அன்று என்பது முடிந்த நாளைக் குறிக்கிறது.  இதை அன் + து என்று பிரிக்கவேண்டும்,  பிரித்தால்,  அல்லாதது,  என்ற பொருள் கிட்டும். அதாவது இன்று அல்லாத நாள். அப்படி என்றால் நேற்று, அதற்கு முன்னே என்று பொருள் கிடைக்கும். ( மலையாளத்தில் "இன்னல" என்பது போல் ).   இன்று தான் இருக்கும் நாள்.  நேற்று,  அதற்கு முன் என்பவெல்லாம் முடிந்து போனவை. இதை உணரவே  அன்று என்பதும் ஒரு முடிவையே குறிக்கிறது என்பது தெரியும்.  அன்று என்பதில் அம் விகுதி இல்லை. இருந்தால் அது அன்றம் என்று வந்து, அந்தம் என்பதனுடன் ஒலியணுக்கம் உண்டாகிவிடுமென்பதைக் காணலாம்.  ஆனால் அன்றம் என்ற சொல் மொழியில் அமையவில்லை.  அன்று மட்டுமே உள்ளது,  ஒப்புமை உணர, அதுவே போதுமானது ஆகும்.  வேண்டுமானால் அன்றம் என்ற புனைவையும் வைத்துக்கொண்டு அறிய முற்படலாம்.

என்ன வேறுபாடு

அன்று என்பது அன் து என்பதுதான்.  அது "அன்று" என்று வந்தது புணர்ச்சித் திரிபு. There is no substantial difference.  அடிப்படை வேறுபாடு ஒன்றுமில்லை.  இவ்வாறு புணர்ச்சித் திரிபு ஏற்படாமலே முந்தி, பிந்தி என்ற சொற்கள் உள்ளன.  முன் தி > முந்தி;  பின் தி >பிந்தி.  முன்றி, பின்றி என்று வரவில்லை. ஒப்புப்பேறுக்காக முன்றி பின்றி என்பவற்றை வைத்துக்கொள்ளலாம், ஆயினும் அது அவ்வளவாகப் பயன்படாது. அதிலிருந்து புதிய கருத்தமைவுகள் கிட்டமாட்டா.

அன் து என்பது முடிதலையே குறித்து நிற்பதால், அன் து அம் > அந்தம் என்பது முடிவு என்றே குறித்து நிற்பதை உணரலாம்.  

இதற்கு முடிபு:  அந்தம் என்று உருக்கொண்டு, முடிவு என்ற பொருள்பெற்ற இச்சொல்,  புணர்ச்சித் திரிபு கொள்ளாமையினாலேதான் அன்று ( அல்லது நாம் புனைந்த அன்றம் ) என்பதனுடன் வேறுபாடு அடைகிறது.

ஒப்பீடுகள்

அந்தி என்ற சொல் நாளின் முடிவைக் குறிப்பதுடன் தமிழிலும் நல்ல வழக்கு உடையது.  அது அன் + தி > அன்றி என்று வந்திடவில்லை.  ஆனால் பல் (தந்தம்) உடையது என்று பொருள்தரும் பன்றி என்ற விலங்கின்  பெயர், பந்தி என்று வரவில்லை.  பந்தி என்பது பலர் அமர்ந்து உண்ணும் நிலையைக் குறிக்கிறது. அல்லது உணவருந்துகையில் வரிசைகள் பலவாக இருந்துண்ணுதலைக் குறிக்கவும் செய்யலாம்.

ஆகவே,  பல் என்ற வாயுறுப்பை குறிக்கும் போது பல் தி> பன்றி என்று விலங்குப் பெயராகவும்,  உணவு ஏற்பாட்டைக் குறிக்கும்போது  பல் + தி > பந்தி என்று பன்றி என்பதில்போல் புணர்ச்சித் திரிபு இன்றியும் வருதலை அறியலாம். புணர்ச்சிமுறைகளை நோக்கிடுங்கால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததுபோல் இச்சொற்களைப் படைத்திருக்கிறார்கள். 

இவ்வாறு சொல்லமைப்புப் புணர்ச்சிகளெல்லாம் ஒரு திட்டத்தில் தான் வரவேண்டும் என்ற உறுதிநிலை கடைப்பிடிக்காதது, அதிக சொற்களை உண்டாக்கிக் கொள்ள உதவியுள்ளதைக் காணலாம்.  மன் > மான் என்ற மனிதற் குறிச் சொற்களை எடுத்துக்கொண்டாலும் இது விளங்கும்.  மன் < மன் இது அன் > மனிதன்;  மன் + தி என்பது மந்தி என்றே வந்தது; மன்றி என்று வரவில்லை. மந்தி சிந்து கனிகளுக்கு வான் கபிகள் கெஞ்சும் என்பது பாடல் வரி.

முடிவுரை

இவ்வாறு, அந்தி என்பது தமிழொலி உடையதும் தமிழ்ச்சொல்லுமாகும்.  அந்தம் என்பதும்  அஃதே.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.

சனி, 14 ஆகஸ்ட், 2021

ஆப்கான் நிலவரத்துக்கு ஒரு கவி

எண்சீர் விருத்தம். 

நடுவிலொரு தூண்போல நின்று கொண்டு

நாற்புறம் மேலுயர்த்தி  நாட்டிக் கொண்டு.

கெடுதலென வாராமல் பார்த்துக் கொண்டான்

கேடற்ற நண்பனவன்  ஓடிப் போனான்!

படுவீழ்ச்சி அதன்பின்னே தொடரும் என்று

பார்த்தவர்கள் யார்க்குமன்று வேர்த்த துண்டோ?

கொடுங்கோன்மைப் பின்புலத்தார் கூரை ஏறிக்

குறுஞ்செயலால் விரைந்தெழுவார் பரந்த வானில்.


{ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரத்தைக் குறித்தெழுந்த எண்ணங்கள்

இந்தக் கவிதை வரிகட்கு ஊட்டம் தந்தன.} 

சொல்லாக்கச் சிந்தனைகள் - அறிவிப்பு

சொல்லாக்கத்தில் நாம் அடுத்து இரண்டு சொற்களைக் கவனிக்கப்போகிறோம். அவையாவன:

1 ]   மகரந்தம்.

2 ]   வசீகரம்  வசீகரித்தல்.

யாம் அவற்றை இன்னும் மூன்று  நாட்களில் வெளியிடுவோம்.  இச்சொற்கள் எவ்வாறு அமைந்தவை என்று நீங்கள் அறிந்திருந்தால்,  உடனே இவ்விடுகைக்குப் பின்னூட்டம் இட்டுவிடலாம்.  வெளியிடவேண்டாம், நாங்கள் வெளியிடவிருக்கிறோம் என்றும் நீங்கள் குறிப்பிடலாம்.  அல்லது அவற்றைச் சுருக்கமாக இங்குக் குறிக்கலாம்.  இதன் நோக்கம் மற்றவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிப்பதே  ஆகும்.  அவ்வாறு நீங்கள் தெரிவிக்கும் காலை, யாம் ஒன்றும் வெளியிடமாட்டோம்.   பழைய ஆய்வாளர்கள் இச்சொற்களை ஆய்ந்து இருந்தால்  ( நீங்கள் அல்லர் ஆனால் )  முன் ஆய்ந்துள்ளனர் என்று குறிப்பிட்டு அவர்கள் பெயர்கள் குறிக்கவும்.

இதன்மூலம் நீங்களே அசல் சிந்தனையாளர் என்பது ஒருவாறாவது உறுதிப்படும். சில சொற்கள் பல்பிறப்பிகளாக இருக்கும். அதில் ஒரு வரவினை யாம் எழுத, இன்னொன்றை நீங்கள் எழுதுவதும் தவிர்க்கப்படும்.  பகர்ப்புச் செய்தல் ( காப்பியும் )  இராது.

எல்லாம் நலமும் உங்களுக்கே.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

விக்கிரகம் என்பதென்ன?

 கோவிலில் ஒரு சிலைக்குப் பூசனைகள் ஆகம விதிகளின்படி செய்து வைத்தார்கள் என்றால் அது அப்புறம் வைத்த இடத்திலிருந்தே நகர்வதில்லை. நகர்த்தப்படுவதும் விலக்கப்பட்டுள்ளது.  அப்படியில்லை என்றால் எவனும் அதை நகர்த்தித் தான் உறங்குமிடத்துக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வான். [ சிலைத்திருட்டு   ] விட்டால் என்ன தான் செய்யமாட்டான் மனிதன்? அப்படிச் செய்ய நினைப்பவன் உலகில் இல்லை என்று யாராலும் உறுதியாகக் கூறவியலாது. அதை மாற்றிடத்தில் வைப்பதென்றால்,  கோவில் அலுவலர்கள் அதை முடிவு செய்து இடமும் முறைப்படி தேர்வு செய்து, மீண்டும் பூசனைகள் இயற்றி,  அப்புறமே நகர்த்தவேண்டும்.  இது பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.

சிலை கடவுள் இல்லை என்று சொல்லலாம். கடவுள், தான் எங்கெல்லாம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறாரோ அங்கெல்லாம் இருப்பார். அந்தச் சிலையில் உள்ளிருப்பேன் என்று எண்ணிவிட்டால், அவர் அங்கிருப்பார். அவருக்கு நாம் ஒன்றும் அக்கா தங்கை இல்லையென்பதால் அது நமக்கும் தெரியாது. தெரியும் என்போனுக்கும் தெரியாது.  அவருக்கு நாம் வரையறைகள் செய்யமுடியுமானால்,  நாம் கடவுள்களாக வேண்டும். அதனால்தான் அவர் எல்லாம் வல்லார் என்கின்றோம்.  இப்போது மீண்டும் சிலைக்கு வருவோம்.

சிலை அமர்த்தப்படும் இடம்,  அதனை  விடுக்கும் இடம்.   "அவர்" விடப்பட்ட இடம்.  அது விடுக்கும் இடத்தில் இருக்கும்.  விடுக்கும் என்ற எச்சத்தில் முக்கிய எழுத்துகள்  விடு + கு  இவைதாம்.

விடு + கு + இரு  + அகம் >  விடுக்கிரகம் > விக்கிரகம்.  ஆகும்.

வினைப்பகுதியிலிருந்து விகுதி சேர்த்து அமைக்கப்படுவது சொல் என்பது அரிச்சுவடிப் பாடம்.  அதிலிருந்து மேல் எழ வேண்டும்.

இங்கு டு என்ற கடின ஒலி விலக்கப்பட்டுச் சொல் அமைந்துள்ளது  இது கடின ஒலிச்சொற்களில் இயல்பாக நடைபெறுவது.   க ச ட த ப ற கடின ஒலிகள். இவற்றை எடுத்துவிட்டுச் சொல் அமைப்பது நமது முன்னோர் கண்ட தந்திரம்.

கடின ஒலிகள் விலக்கச் சொற்கள் பல முன் இடுகைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.  படித்துப் பட்டியல் இட்டுக்கொள்ளவும்.

இதைச் சரியாகப் புரிந்துகொள்ளான்,  இதன் அமைப்பை அறிந்துகொள்ளான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




வியாழன், 12 ஆகஸ்ட், 2021

Ultra-modern Singapore's dark secret: female genital mutilation

நம்மை ஏமாற்றிய கோவிட் கிருமி...

கொட்டிக் கிடக்கும் மகரந்தத்து

மொட்டவிழ்ந்த ஒரு கவின்பூ

தேன் தரவே  நானென்றது...

குடிக்க முந்திய நொடியொன்றுக்குள்,

கோடுவாய்  மூடிக்கொண்டது ,

கொள்ளிபோல் எரிய முள்ளே குத்திற்று,...

ஞாயமில்  லாத நோய்நுண்மிக் கோவிட்டே!

நீயும் தான்  அதுபோல்!. ஓயாக் கொடுமுடியாய்,

வெற்றி  வாயிலைச் சுற்றி மூடிவிட்டாய்.

விடுதலைத் தேன் தேறாக் 

கெடுதலைச் செய்தாய்.

ஏமாற்றிவிட்டாய் எங்களை நீ,

ஆம் மாற்றி விட்டாய்  எங்கள் திசையே.


ஒரு பூவுக்குள் புகுந்து தேன் குடிக்க விருக்கும் நேரத்தில் திடீரென்று

பூவிதழ் மூடிக்கொண்டது...மிகுந்த இன்னல் எல்லாம் கடந்து நோயைக் 

கட்டுப்படுத்தி வெற்றித்தேனைப்  பருகுவோமென்றால் அதற்குள்

கதவுகள் மூடிக்கொண்டன.  என்ன வேற்றுமை?  கொவிட் நம்மை

ஏமாற்றிய கதையைக் கூறுவது இந்தப் பாடல்.


அருஞ்சொற்கள்

மகரந்தம் -  பூந்துகள்

கவின் -  அழகிய

கோடு வாய் -  வளைந்த வாய்

கொள்ளி -  தீ

நோய் நுண்மி -  நோய்க் கிருமி

ஓயாத -   நிறுத்தாத

கொடு முடி  -  வளைந்த  மகுடம். கொடிய மகுடம் தரித்திருத்தல்.

நுண்மி மகுட அல்லது முடியின் வடிவிலிருத்தலைக் குறித்தது

தேறா  -   வலிமை அடையாத  ("   உருப்படாத " )


மெய்ப்பு பின்பு




செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கேதாரம் - மலைப்பகுதி. சிவன் கேதாரநாதன்.

 இமைய மலைப்பகுதியில் மலைச்சாரலை ஒட்டிய வயல் பகுதிக்குக் கேதாரம் என்று பெயர். மலையில் உயரத்திலிருந்து நோக்க இப்பகுதி கீழே உள்ளது. ஆகவே:

கீழ்,   தாரம் என்ற சொற்கள்

கீழ் என்பது மலைச்சரிவின் கீழுள்ள நிலப்பகுதியைக் குறிக்கிறது.

தாரம் என்பது தரையைக் குறிக்கும் இணைப்பு.

கீழ் > கேழ்(தாரம்) > கேதாரம்  ஆகிவிடுகிறது.

இங்கு வந்த தாரமென்ற துண்டுச்சொல்,  தாரம் என்ற இன்னொரு தனிச்சொல்லுடன் தொடர்பற்றது.  அடிச்சொல் தொடர்பு இருக்கலாம்.  அது ஆயிரக் கணக்கான சொற்களில் அவ்வாறு இருக்கலாம். அஃது அகழ்ந்துரைக்க வேண்டாதது ஆகும்.

தரு > தரு+ ஐ > தரை.  ( நிற்க இடம் தருவது,  விளைச்சல் தருவது, நீர் தருவது என்பனவால் தரு என்பதிலிருந்து தரை என்னும் சொல் அமைந்தது ).

தரு > தரு+அம் > தாரம்  ( தரை என்ற சொல்லே இவ்வடிவம் பெறுகிறது.). தரு என்ற அடிச்சொல்லே இவ்விரு சொற்களுக்கும் தோற்றுவாய் ஆகும்.

கீழ்தரு > கீழ்தரு+அம் > கீழ்தாரம் > கேதாரம் என்றும் இதைக் காட்டலாம். இது புரிந்துகொள்ளக் காட்டப்படுகிறது. இலக்கணத்துக்கு இதில் வேலை குறைவு அல்லது இல்லை.

திரிபின் திறம் உணர்தல்

நெடிலை ஒட்டி வரும் ழகர ஒற்றுகள் நாளடைவில் மறையும்.  கே என்பது நெடில். ழகர ஒற்று என்பது  "ழ்"  இதற்கு ஓர் உதாரணம்:

வாழ்த்து இயம் >  வாழ்த்தியம் >  வாத்தியம்.  (வாழ்த்திசை வழஙகும் கருவிகள் இசைப்போர்)

சூழ் திறன் > சூ  திரன் >  சூத்திரம் என்பதும் அவ்வாறே ழகர ஒற்று மறைவுச் சொல். ( ஆலோசிததுத் தம் மூளையால் வேலை செய்வோர்)

கேழ்வரகு என்ற சொல்லும்  கேவர் என்று திரியும்.  ழகரம் தொலைந்ததுடன், வரகு என்பது வர் ஆகிவிடும்.

இவைபோலும் திரிபுகள் தமிழ்ச் சந்தி இலக்கணத்திற்கு அப்பாற் பட்டவை. இலக்கணம் என்பது மொழியைத் திருத்தமாகப் பேசவும் எழுதவும் உதவ அமைந்ததே யன்றி,  சொந்தச்சொற்களை நீங்கள் படைத்துக்கொள்வதற்கு உதவும் நூலன்று. சொற்கள் மக்களால் பயன்பாட்டில் உருவாகுபவை. சில புலவர்களால் குறியீடுகளாக கலைச்சொல் முறையில் உருவாக்கப்படுபவை.
  • கேதாரம் என்பதில் நிலைமொழி வருமொழி இல்லை. பகுதி, விகுதிகள் உள்ளன. சிலவேளைகளில் இணையான சொற்களும் ஒருசொன்னீர்மை அடைந்து சொல்லாகும்.  எடுத்துக்காட்டு:  முதலமைச்சர்.  முதல் அமைச்சர் இரண்டும் இரு தனிச்சொற்கள். எனவே இச்சொல் இருதனிக் கூட்டமைப்புச் சொல்.

மக்கள் நாவின் திறம் என்னே!

அமைப்பு நோக்கிச் சொற்களை இருவகைப் படுத்தலாம்.  அவை:

மக்கள் படைப்புச் சொல்

 உதாரணம்:

சிற்றம்பலம் > சித்தம்பரம் > ( இடைக்குறைந்து) :  சிதம்பரம்.

பல் து >  பத்து > பது. ( இரு-பது,  முப்பது).

பத்து என்பதன் அமைப்புப் பொருள்:   ஒன்பதுக்கு மேல் பல ஆனது.  பல் = பல. து என்பது சொல்லமைப்பு விகுதி. இதைப் புலவர்பாணியில்

பல்து > பற்று > பத்து > பது.

பல் கடைக்குறையானால் ப. அப்புறம்  +து > பத்து,  பது.  

இதை இலக்கணத்தில்போல பத்து > இடைக்குறை பது என்னாமல்:  ப து என்பது பத்து என்றும் பது என்றும் இருவகையாகவும் உருவாகும் என்பது பாசாங்குகள் இல்லாத உண்மைத் தெளிவிளக்கம்  ஆகும்.  சிறிதுசிறிதாக அதை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

மக்கள் பேச்சிலிருந்துதான் எழுத்துமொழி தோன்றி  வரையறவுகள் செய்விக்கப்பட்டன.  தலைகீழ் உணர்வு தவறு ஆகும்.

ப + து > பத்து, பது என இருவகையாகவும் புணரும், என்று சொன்னாலும் ஒன்றும் முழுகிவிடாது. இலக்கணத்தோன் சொன்னதுபோல் அது இல்லை, ஆனால் உண்மை அப்படியும் வரும் என்பது அறிக.

புலவர் படைப்புச் சொல்:

உதாரணம்

ஒழி >  ஒழிபு > ஒழிபியல். ( இலக்கணத்தில் விடுபாடு உள்ளவற்றைக் கூறும் பகுதி ).

இது மக்கள் உருவாக்கிய சொல் அன்று:  " ஒழிபியல்".

இவ்வாறு புலவர் படைத்த சொல்லையும் மக்கள் படைத்த சொல்லையும் இனமறிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

இமையமும் தமிழரும்.

இமயம் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியத்தில் கிடைக்கின்றன. மேரு மலையும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இவ்விடங்களில் வாழ்ந்துபயின்ற காலை இச்சொற்கள்( கேதாரம் போலும் சொற்கள் )  அமைவுற்றன.  தமிழ்ப்பேரகராதிக்கு மானியம் பகுதி வழங்கும் அமெரிக்க கல்வித்துறைக்கும் அரசுக்கும் நாம் நன்றி செலுத்தவேண்டும்.  கடமை.  சிவன் கேதாரநாதன்  (கெடார்நாத்)   ஆவார்.  நாவினால் துதி பெறுவோன் நாதன்.

இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 




திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.

 நகர்களில் முன்னிற்கும் சிங்கை நகருக்குப்

புகர்மிடை  வில்லதாம் போற்றி   நாமிசைக்க

நிகருற  எந்நகரும் நேர்ப  டாதோங்கிச்

சிகரமே  தொட்டுயரச் சேர்ந்து வாழ்த்துவமே.


ஆசியா  ஞாலத்தே  ஆர்ந்தெழும் சிங்கைக்குத்

தேசிய  நாள்சிறக்கும்  தேன்.



புகர் -  கெடுதல் 

மிடைவு இல்லதாம் -  தொடர்பு இல்லாததாகிய.

போற்றி - புகழ்ச்சி.

நிகருற -  ஒப்புமை உண்டாகும்படி

நேர்படாத - அடைய இயலாத

சிகரம் - மலையுச்சி.

ஞாலத்தே  - உலகில்.


தும்பியும் தம்பியும்.

 வண்டுகள் பறந்துகொண்டே முரல்கின்றன.  முரலுதலாவது ஒலி எழுப்புதல்.  முரல் என்பது குரல் என்பதற்கு எதுகையாகிறதே  என்று ஆனந்திக்கலாம். அது கவிஞனுக்கும் கவர்வரிகள் வரைவோனுக்கும் பயன்படும்.

முரலும் வண்டுகள் முர்ர்ர்ர் என்று ஒலியெழுப்புவன.    அவை ரீ .......ரீ  என்று ஒலிசெய்வதாயும் நாம் சொல்லலாம்.  (ரீ என்று )+ (இங்கு )+  (ஆர்தல்)  இது வாக்கியத்தின் உட்குறிப்பு.  இதிலிருந்து ஆர்தல் என்ற  சொல்லின் பொருளைத் தேடலாம்.  ஆர்தல் - ஒலித்தல்.   ரீ + இங்கு+ ஆர் + அம் = ரீங்காரம் ஆகும்.  ரகரம் மொழிமுதலாகாது என்று தொல்காப்பியனார் சொல்லிக்கொண்டிருப்பதால், அவருக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட்டு,  ஓர் இகரத்தை முன்வைத்துக்கொள்ளலாம்.  அப்போது அது  இரீங்காரம்  ஆகிவிடும். ரீங்காரம் தமிழன்று. சரி. அப்புறம் ஏன் உள்ளுறைவுகளெல்லாம் தமிழாக இருக்கிறது? நான் இட்டிலி சாப்பிடமாட்டேன் , எனக்குத் தோசைதான் வேண்டுமென்று அழுதால் தாய் என்ன செய்வது?  நீ தோசையே சாப்பிடு என்று விடவேண்டியதுதான்.  நீ வேண்டுமானால் தோசை சாப்பிடு. நான் இட்டிலியே சாப்பிடுகிறேன்.

தம் தாம் என்பன சந்தங்கள். தம் தம் தம் > தம் தம் > சம் தம் > சம் தம் > சந்தம்.  த - ச போலி.   ஆனால் அந்த வண்டு  தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று ஒலித்துக்கொண்டே பறக்கிறது.    தும்மை எடுத்துக்கொண்டு,  ஒரு ~பி என்னும் விகுதியைச் சேர்த்துவிட்டால்  அது தும்பி  ஆகிவிடுகிறது.

தும்பியும் காமரம் செப்புகிறது என்கின்றது சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூல்.  காம் -  விரும்புகின்ற (ஒலி) .  அர் ...ர்...-  ஒலி.   அம் - விகுதி.    அந்த அர் .......தும்ம்ம்ம்ம்ம்ம் என்று சூழ்புறத்து  ஆர்கின்றது.

ஆனால் தம்பி என்ற சொல்லில் வரும் பி  என்பது பின் என்ற சொல்லின் கடைக்குறை.  தம்பின் வருபவன் தம்பி.   இங்கு வரும் ~பி விகுதியன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கம்பி - சொல்லுக்கு எளிய விளக்கம்.

கம்பி என்ற சொல் மிக்க விரிவாக விளக்கப்பட்டுள்ளது,  முன்னர் நாம் கண்ட இடுகையில்.  அஃது:

கம்பி   https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_13.html

ஆனால் இதை இன்னும் எளிதாக உணர்ந்துகொள்ளலாம். இது ஒரு குறுக்கென்றே சொல்லவேண்டும்.:

கடு + பு + இ  >   கடும்பி.  இது இடைக்குறைந்து கம்பி   ஆகிவிடும்.

இது மெலித்தல் உத்தி ஆகும்.

[  இங்கு,  பி என்ற இறுதிக்கு  ஒரு விகுதியென்னும் தகுதியை வழங்கலாம்.  அவ்வாறாயின்  பு + இ என்று பிரித்து இடைநிலை + விகுதி என்று விவரிக்க வேண்டியதில்லை. விவரிப்பது  என்றால் விரித்து வரிப்படுத்துவது .  இந்தப் பயிலாக்கத்தில் அடிச்சொல்லைக் கண்டுபிடிப்பதே நோக்கம். விகுதி இடைநிலைகள் எல்லாம் ஆக்கிய சொல்லை வேறுபடுத்தும் ஒலிகளின் உருக்களே.   அவற்றில் பெரிதும் பொருண்மை இருப்பதில்லை .  இது சொல்லாக்கத் தத்துவம்.  உணராதோன் உண்மை அறிந்து மேலெழுவதில்லை ] 

பல சொற்களில் கடின இடையொலிகள் குறைந்துள்ளன.  இன்னோர் எடுத்துக்காட்டு:  கட  வினைச்சொல்.  : கடப்பல் >  கப்பல்.  கடந்துசெல்ல உதவும் மிதப்பூர்தி. மற்றொன்று:  அடங்கு + அம் = அடங்கம், இடைக்குறைந்து அங்கமானது. ( உடல்).

இதில் வந்த புணர்ச்சித் திரிபு:

கடு + கை >  கடுங்கை என்பதுபோலுமே இது.  கடுங்கை என்றால் கடுமையானது என்று பொருள். எமன் என்னும் உயிர்குடிப்போன்,  கடுங்கைக்கூற்றுவன் என்பதும்  காணலாம்.  இது  தேவாரத்தில்  (. 167, 1)  வந்துள்ளது.

கொடு + கோல் +  அன் என்பது கொடுங்கோலன் ஆகும்.  கொடு> கொடுமை,  மை விகுதி கெட்டுப்புணர்த்தல் என்பது இலக்கணியர் உரைப்பது.

இனி, கடு > கடும்பு > கடும்பி என்பது எளிதான விளக்கம்.

கடும்பு +இ  = கடும்பி >  கம்பி.

கடுமையானது என்பதே பொருள்.  பு, இ என்பன வெறும் விகுதிகளே.

இகர இறுதி இல்லாமல் கடும்பு என்று இடைக்குறையாமல் வருங்கால் அது  வேறுபொருள் கொள்ளும்

இதற்கு இன்னொரு காட்டு.   மை என்பது ஒரு கரிய கறைநீரைக் குறிக்கிறது. அது அப்பொருளை இழந்து, இர் என்ற விகுதி பெற்று மை இர் > மயிர் என்னும் போது  தலைமுடியைக் குறிக்கும், பிற மயிரும் குறிக்கும்.   மை + இல் என்று இல் இணையும்போது மை இல் > மயில் என்று மைதெளித்தது போலும் இறகுகளின் நிறமுள்ள ஒரு பறவையைக் குறிக்கும்  மை என்ற தனிச்சொல்லுக்குள்ள பொருள் மற்ற அமைப்புகளில் இல்லை.  ஆனால் ஒரு பொருள் தொடர்பு இருக்கிறது. அது கருமைநிறம் என்பது..  கடும்பு என்பது தனிச்சொல்லாய்,  கடும்புப் பால் குறிக்கும்.   அது இகர விகுதி பெறுகையில் அந்தப் பொருள் தொலைந்து,  கடுமைப்பொருள் மட்டுமே எஞ்சியபடி " கம்பி" ஆகி, கடும் இரும்புத் தடி  என்ற பொருள் பெறுகிறது. பல்வேறு விகுதிகளை ஏற்கையில் மூலப்பொருள் மட்டும் எஞ்சும்.

இவற்றுள் பெரும் வேறுபாடுகள் எவையும் இல்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சனி, 7 ஆகஸ்ட், 2021

மருவற்குரிய மருத நிலமும் சில மருவற் சொற்களும்.

பண்டைக் காலத்திலும் சரி, இன்றும் சரி.  மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் முன்மை வகிக்கும் பொருளென்றால்  அது உயிர்களுக்கு உணவே அன்றிப் பிறிதில்லை என்பது மிக ஆழ்ந்து சிந்திக்காமலே யாவரும் ஒப்புக்கொள்ளக்  கூடிய கருத்தாகும். மனிதற்கும் மன்னுயிர்க்கும் உணவளிப்பதே ஒரு பேரறம் என்பர் அறிந்தோர்.

எனவே, உலகனைத்தும் மருவிச் செல்லற்குரிய நிலப்பகுதி என்றால் அது மருத நிலமாகும். இவ்வுலகில் எங்கெங்கு நெல்லும் பிற கூலங்களும் விளைகின்றனவோ அவற்றை யெல்லாம் மருதம் என்றே சொல்லவேண்டும். மருதமானது உலகின் முதன்மை.

மருதம் என்ற சொல் மருவுதல் என்ற சொல்லுடன் மிகுந்த  தொடர்புடைய சொல்.

இதன் அடிச்சொல் மரு என்பது.

மரு >  மருவு >  மருவுதல்  ( வினைச்சொல்).  தல் - தொழிற்பெயர் விகுதி.

மரு >  மருது:    உலகம் மருவுதற்குரிய ஒன்று,  அல்லது மருதமகன்.

மரு > மருது >  மருதம்   ( அதாவது மரு + து + அம் = மருதம் ).   மருதநிலம் .  பயிர்செய்யும் நிலம்.  உலகத்துயிர்கள் உணவுக்காக மருவி -  தழுவிச் செல்லும் நிலம்.  மற்ற நிலங்கள் இதனையே  மருவி நிற்கும் பெருமையுடைய நிலம்.

பிறர் தொழுதுண்டு செல்லும் பெருமையுடைய நிலம்.

மரு என்னும் சொல் மார் என்று திரியும்.

கரு என்ற சொல் கார் என்று திரிவது போலுமே இது.

மரு > மார் > மார்+ அன் > மாரன்.  காதலியரால் தழுவப்படும் ஈர்ப்பு உடையவன்.

குறு என்ற சிறுமை குறிக்கும் சொல் தன் இறுதி எழுத்தை இழந்து கு என்று நிற்கும்.  அப்போது அது குறுக்கம் குறிக்கும். 

கு+  மரு + அன் >  குமரன்.  இளமை உடையோன்,  அகவை ஆகாதவன்.

கு + மரு >  கு + மார் >   குமார்.  இளையவர்.

இவ்வாறு சொற்கள் பல வுளவாதலின்,  அவற்றைப் பின்பு நோக்குவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

நிதியும் நிலையும்.

 நிதி என்பது இப்போது பெரிதும் மக்கள் அறிந்துள்ளதாக உணரும் ஒரு சொல். ஒவ்வோர் அரசிலும் ஒரு நிதி அமைச்சர் இருப்பார். ஆண்டுக்கு ஒருமுறையாவது நாட்டிலுள்ள மக்களெல்லாம் அவரது கையையோ அல்லuது அதன் வழங்கு திறனையோ எதிர்பார்த்திருப்பர். நிதி என்பது எந்தமொழிச் சொல் என்று ஒரு சிலராவது தங்கள் உள்ளங்களில் எண்ணிக்கொண்டிருப்பர்.

நிதி என்பது நிலையான வைப்புத் தொகை என்று சிலர் பொருள் கூறுவர். சிலர் பெயரிலும் நிதி என்ற சொல் ஒரு பகுதியாய் இருக்கும்.

பணம் என்பதும் நிதி என்பதும் ஒருபொருட் சொற்கள் என்று சிலர் கருதினாலும் "பணநிதி"  என்ற சொல்லும் வழக்கில் உள்ளது. ( " அனைத்துலகப் பணநிதி நிறுவனம்" ).  இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னவென்றால்,  நிதி என்பது பலவகைப்படும்.  எல்லாம் பொன்னாகவோ வெள்ளியாகவோ மான் குட்டிகளாகவோ தொகுத்து வைத்துக்கொண்டிருந்தால் அவையும் " நிதி "  என்றே கொள்ளவேண்டும்.  ஒரு குறிப்பிட்ட காலத்துக்  காகவாவது நிற்புடைமை இருக்கவேண்டும். என்றுமே இருக்கவேண்டிய ஒழுங்குமுறை அதற்கு வேண்டியதில்லை.   ஆகவே பணநிதி என்பது பணமாக மட்டுமே நிற்புத் தொகுதியாய் இருப்பது.  இவற்றையெல்லாம் கருதுகின்ற காலை, நிதி என்னும் சொல் நில் என்பதிலிருந்து வந்ததாக இருக்கவேண்டும் என்று முடிபுகொண்டதில் ஏற்கத்தக்க உள்ளுறைவுகள் இருக்கின்றன என்றே நாம் எண்ணவேண்டும்.

நிதி என்ற சொல்லை உண்டாக்கியவர்கள், யாமறியக் குறிப்புகள் எவற்றையும் தந்து செல்லவில்லை.  ஆதலால் எதையும் முற்றும் ஏற்கத்தகாதது என்று முடித்தல், எனது என்னும் ஆணவத்தின்பாற் படலாம்.  அப்படிக் கொள்வதற்காக இது எழுதப்படவில்லை.

நில் > நி > நிதி.  நிற்பு உடைய தொகுதி அல்லது சேமிப்பு.

நில் > நி  ( கடைக்குறை)

தி  - தொழிற்பெயர் விகுதி.

இன்னொரு வகையில்:  நில் + தி > நிற்றி > நித்தி > நிதி ( இடைக்குறை).


நாம் இங்குக் காட்டவிருப்பது  இவ்வாறு:

நேடுதல் - சம்பாதித்தல். வினைச்சொல்.

நேடு > நே ( கடைக்குறை ) >  நேதி >  நிதி.

    இகரம் எகரமாகத் திரியும்.   இழு  வினைச்சொல்  --     இழுது > எழுது.  

    எகரம் - ஏகாரம் தமக்குள் திரியும்.    ஏழு நிலை மாடம் >   எழுநிலை மாடம்.

    எழுபிறவி :  ஏழு பிறவி.  இது உண்மையில் குறில் நெடில் மாற்றீடு.  அதிகம் உள.

ஆகவே நிதி என்பது சம்பாதித்துச் சேர்த்துவைத்த மதிப்புள்ளவை.

நேடு > (தி விகுதி சேர ) நேடுதி >  நேதி > நீதி.

இடைநிற்கும் டகரங்கள் அதன் வருக்கங்கள்  மறைதல் பெருவாரி. நாம் எப்போதும் காட்டுவது 

பீடு > பீடுமன் > பீமன்.  ( பெருமிதத்துக்குரிய மன்னன் ).

பிறவும் உள:

கடப்பு :  கடப்பல் > கப்பல்  ( கடலைக் கடக்க உதவும் மிதப்பூர்தி ).  டு இடைக்குறை.

அடங்குதல்:    அடங்கம் > அங்கம்.  ( உள்ளுறுப்புகள் அடங்கிய வெளிப்போர்வையான உடல் ).

இதிலும் பலவுள. இவற்றைப் பழைய இடுகைகளைப் படித்துப் பட்டியலிடுக.

எனவே நேடுதல் என்ற வினையினின்றும் நிதி என்ற சொல் ஏற்படுமாதலின், இது ஒரு பல்பிறப்பிச் சொல் என்று முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.

{இடையீடுகளிடையே பல முறை நிறுத்தி எழுதவேண்டியதாயிற்று. ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.}



வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பேய்மாதம் வந்துகொண்டிருக்கிறது.

 சீனர்களின்  " காலகண்டரில்"  ( காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு அல்லது பொருளடைவு ) சொல்கிறபடி  அவர்களின் ஏழாவது மாதம் ஒரு பேய்மாதம். அது வந்துகொண்டிருக்கிறது.

அதற்கு முன்னறிவிப்பாக, பேய்க்காற்று  வீசுகிறதாம்.  அதைப் பற்றிய ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது.  அதனைப் படித்துப்பாருங்கள்.


https://theindependent.sg/eerie-wind-sound-captured-on-video-reminds-netizens-the-seventh-month-ghost-day-is-nearing/

எது எப்படி இருந்தாலும் முடிமுகி நுண்மிநோய் ( கோவிட் 19 கொரனா) கூடிவிடாமல் இருந்தால்  அது நம் முன்னோர்செய் தவப்பயன் ஆகும்.

பேய் -- வர எண்ணலாம்.  ஆனால் சிங்கப்பூருக்கு வருவதாய் இருந்தால் அதற்கு கடவு ஏடு ( பாஸ்போர்ட்) வேண்டும். அப்புறம் இரண்டு வாரமாவது தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். சும்மா கைவீசிக்கொண்டு வந்துவிட  முடியுமா என்ன ---  என்று நம் இணையமகார்கள்  ( நெட்டிசன்) கேட்டுள்ளார்கள்.    

கட்டுரை ஆங்கிலத்தில்:  குமாரி பீட்ரிஸ் டெல் ரொசாரியோ.

கூகுள் தமிழாக்கம் செய்துகொள்ளலாம்.


செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

'தெய்வன்' 'தெய்வி' தெய்விகம்

 தேவன், தேவி என்ற சொற்கள் பலபொருட் சொற்கள். தேவன் கடவுளையும் குறிக்கும். தேவி என்பதும் கடவுளைப் பெண்ணாகக் கொண்டு குறிக்கும். தேவன் தேவி என்பன மனிதருள் அரச பதவி உடையோரையும் குறிக்கும்.  இவையல்லாமல்,  இயற்பெயர்களாகவும் வரும்.  ஒரு குழுவாரிடைப் பட்டப்பெயராகவும் வரும்.  இச்சொல் தன் அன் விகுதியை இழந்து தேவ் என்று மட்டும் வழங்கும்.  தமிழ் ஆய்வாளர்கள்,  தேய் என்பதே இச்சொற்களுக்கு அடிச்சொல் என்று முன்னர் விளக்கியிருக்கிறார்கள். பிசைந்த மாவை மீண்டும் பிசையத் தேவையில்லை என்பதுபோல்,  இவை தமிழிற் போந்த சொற்களென்பதை முன் ஆய்வுகளே விளக்குவதால், நாம் அவற்றை மீண்டும் செய்வது  பகர்ப்புச்செய்தலாக (  காப்பி )  இருக்கலாமே அன்றி அது புது ஆய்வாக இருக்க இயலாது.

தெய்வம் என்ற சொல்லிருப்பதால் தெய்வன் என்ற வடிவமும் அமையும் தரத்தது என்று நாம் முடிக்கலாம் எனினும்,  தெய்வன் என்ற சொல்லை அகரவரிசைகளில் காணமுடியவில்லை.  தெய்வி என்ற சொல்லையும் நாம் காண்பதற்கில்லை என்று தோன்றுகிறது.

இப்போது இவை தொடர்பான சில திரிபுகளை நோக்குவோம்.

செய்தி என்ற சொல்.  சேதி என்று திரிகிறது. இரு நண்பர்கள் முன்னர் சந்தித்துக்கொண்டால், என்ன சேதி,  நலமா என்று கேட்டுக்கொள்வதில் சேதி என்ற சொல் வந்துவிடுகிறது. ஆங்கிலப் படிப்பு மிகுந்துவிட்ட இக்காலையில் இதை அவர்கள் தமிழில் சொல்லப்போவதில்லை. ஆகையால் சேதி என்ற சொல்லினாட்சி குறுகிவிட்டிருக்கும்.  இருப்பினும் இன்னும் இது வழக்கில் உள்ளது.

செய்தி என்பது சேதி என்று திரிவதால்,  செய்> சே விதியின்படி, தெய்வி என்பது தேவி என்று திரியவேண்டுமே!

தேய் > தேய்வு > (தெய்வு) > (தெய்வி )

இவற்றுள் பின்னை இரண்டும் மொழியின் சொற்றொகுதியில் எம்மால் காணப்படவில்லை.  எல்லாச் சொற்களையும் நாம் அகரவரிசையில் எழுதி வைத்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட வில்லை.  சில அகப்படாமல் ஒழிந்தன.  வேடன் எல்லா முயல்களையும் கண்டுவிட முடிவதில்லை. சில ஒளிந்துகொண்டுவிடுகின்றன.  இருப்பினும் முயல் வாழும் குழித்தோடு காணப்படுவதால், அவை ஓடிவிட்டன என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டியதுதான்.   ஆகவே மீட்டுருவாக்கம் செய்வதில் தவறில்லை.  அவை மீட்டுருவாக்கங்கள் ஆகும்.

செய்தி என்பது சேதி என்று திரிவதால்,   தெய்வி என்பதும் தேவி என்று திரிதல் ஏற்புடைத் திரிபுதான். இதேபோல் தெய்வன் என்ற மீட்பு வடிவமும் தேவன் என்றாகும்.

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பெய்தல், பெய்தி > பேதி என்பதாகும்.  நீராய் மலக்கழிவு. பெய் என்பது நீரானதைக் குறிக்கிறது.

இனி தேய்வு என்பதைத் தெய்வு என்று மீட்காமல்,  தேய்வு > தேவு என்று இடைக்குறை வடிவாகக் காணலாம்.  தேவு என்ற வடிவம் இருக்கின்றது; அது பாட்டிலும் வந்துள்ளது.

செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர் - 

சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர் 


என்று பாரதியார் பாடுகிறார்.


 தெப்பக் குளமும் கண்டேன் -  சுற்றித்

தேரோடும் வீதி கண்டேன்,

தேவாதி தேவனை--- எங்கும் 

தேடியும் கண்டிலேனே 

என்பது கவிமணி தேசிகவிநாயகனாரின் பாடல்.

இவ்வடிவங்களை,  தேய்வு > தேவு,  தேவு > தேவி என்று காணுதல் மற்றொரு வழியாகும்.

இப்படி இரண்டாவதொரு வழியிலும் இதனைக் காட்டலாம் என்பதை முன்வைக்காமல் இதை முடித்திருக்கலாம்.  சில வேளைகளில் ஒன்று மட்டுமே கூறிப் பிற கூறாதும் விடுக்கலாம்.  ஆயின் அதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். 

இவ்வாறு இடைக்குறையான நல்ல சொற்கள் பல.  சுற்றிலும் அடுத்த நிலத்தொடர்பு நீங்கிவிட்ட ஒரு நிலத்துண்டினை,  தீவு என்கிறோம்.  தீர்வு> தீவு ஆனது:  நிலத்தொடர்பு தீர்ந்த ஒரு நிலத்துண்டு என்று பொருள். இதை dheevu  என்று எடுத்தொலிக்காமல் தீவு என்றே ஒலித்துத் தமிழாதல் காண்க. இப்படி எடுத்தொலித்தால்,  தேன் என்பது ஜேனு என்றன்றோ பிறமொழியில் வருகிறது. ஆயின் தேன் தமிழில்லையோ?  உயர்ச்சி, உயர்த்தி என்பது ஒஸ்தி என்று வந்தால் தமிழன்று என்று ஆகிவிடுமோ? இந்த வேற்றொலிகளெல்லாம் மூஞ்சியில் மாவு பூசுவதைப் போன்றது. கழுவிக் கருத்துடன் காண்க.

இதைப்பற்றி மேலும் அறிய:

தேவன், துரை :

https://sivamaalaa.blogspot.com/2020/11/god.html

தீயைப் பற்றி   https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html

தெய்விகம், தெய்வீகம்.

தெய்விகம் என்பதே சரி என்று கூறுவதுண்டு.  ஆயினும் தெய்வீகம் என்பதும் எழுத்தில் வந்துள்ளது.

தெய்விகத்தைத் தேவகம் என்றும் எழுதியுள்ளனர். ஆனால் இந்த வடிவம் இப்போது பயன்பாடு குன்றிவிட்டது.

தெய்விகம் என்பதற்கு மூர்த்திகரம் என்றும் ஓர் ஒப்புமைச்சொல் உள்ளது. தெய்விகமான இடம் என்னாமல் மூர்த்திகரமான இடமென்றும் கூறலாம். மூர்த்தி என்பதில் தி விகுதி.  முகிழ் என்பதே மூர் என்று திரிந்துள்ளது.  முகிழ்த்தலாவது தோன்றுதல். தோன்றும் கடவுள் வடிவம் மூர்த்தி.   முகிழ்> மூர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியம்.  இதில் கீர்த்தி என்பது சீர்த்தி என்பதன் திரிபு.  ச- க போலி.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.



திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தோரணமும் தொங்கரணும்

 தொங்கு என்ற சொல் இன்னும் தமிழில் வழங்கிக்கொண்டுள்ளது.  "இந்தத் தையல்காரனிடம் இரவிக்கையைத் தைக்கக் கொடுத்தால் கிடந்து தொங்கிக் கொண்டிருந்தால்தான்  அது திரும்பிவருகிறது" என்பது நம் செவிகளை எட்டும் உரையாட்டின் பகுதி ஆகும்.  என்ன செய்வது?  தீபாவளி பொங்கல் என்று வந்தால்தான் தையற்காரரிடம் தையலார் சென்று எதையும் தைக்கக் கொடுக்கிறார்கள்.  மைவிழியார் முதல் மெய்விழியார்வரை அப்போதுதான் அங்குச் செல்வதால், பாவம் இந்தத் தையற்காரர்கள் அப்போதுதான் கடின உழைப்பில் களைத்துப்போகிறார்கள். அது நிற்க.

தொங்கு என்பதைப் பற்றிப் பல சொல்லலாம்.  எல்லாவற்றையும் எழுதினால் மோசமாகிவிடும்.1  ஆதலால் சில சொல்வோம். "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லத் தேற்றாதவர் என்றார் தம் குறளில் நாயனார். இது ஈண்டு கடைப்பிடிப்போம்.  தொங்கு என்பது துங்கு,  தூங்கு என்பவற்றோடும் தொடர்புடையது என்று பேராசிரியர் மு. அரசங்கண்ணனார் கூறினார். ( 23.10.1956 சிங்கப்பூரில் மந்திரி ஹாஜீ ஜூமாட் அவர்கள் தலைமையில்  அப்பேராசிரியருக்கு  நடந்த வரவேற்புரையில் )  "தூங்குக தூங்கிச் செயற்பால" என்று தொடங்கும் குறளையும் மேற்கோளாக ஓதினார் அப்பேராசிரியர். இது தொங்கு துங்கு தூங்கு என்பவற்றினை நீங்கள் ஆராய ஓர் உந்துதலாகும்.

இவைபோல யாரும் சொல்லாவிட்டாலும் ஆய்வுக்கண்ணுடன் அனைத்தையும் நோக்குதல், விழிப்புற்ற தமிழ் மாணவற்கு வேண்டியதோர் அணுகு முறையாகும்.

பழங்காலத்தில் மனிதன் அல்லது மனிதக் குடும்பம் குடியிருந்த மரத்தின் பக்கக் கிளைகளில் தொங்கரண்கள் இருந்தன.  இந்த அரண்களில் ஒரு குரங்கையோ ஒரு பையனையோ ஒலியெழுப்பும் பறவையையோ  வைத்திருப்பர். கொடிய காட்டுவிலங்கு குடிமரத்தை அணுகுமாயின் இவர்கள் ஒலிசெய்து கவனத்தை  ஏற்படுத்துவர்.  அப்போது மைய மரத்தில் இருக்கும் மனிதர் எழுந்து தயாராய்விடுவர்.  

இப்படி ஒரு காவலுக்காக வைக்கப்பட்ட தொங்கரண்கள்  பிற்காலத்தில் அலங்காரப் பொருட்களாகித் தோரணங்கள் என்று அறியப்பட்டன.

தொங்கு >  தொகு > தோ.    ஓ.நோ:   பகு> பகு(தி) > பா(தி)

அரண் >  அரணம்.   அம் விகுதி.

தோ + அரணம் >  தோ(வ)ரணம் > தோரணம்   ஆயிற்று. 

இதைச் சுருக்கமாக,  தோ + ரணம் >  தோரணம் என்று விரைவிலறியக் காட்டினும் பேதமில்லை.  பேச்சில் வந்த இச்சொல்லை இப்படி அறிதல் எளிதாம். இலக்கணத்துடன் ஒப்ப முடிக்கவென்று சிலர் ஆசைப்படுவர். இலக்கணத்தை ஆதரித்துச் செல்வதும் பழுதின்று.

தொங்கரண் என்பது தொங்குஅரண் - வினைத்தொகை. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:-

மற்ற சொல்லாய்வுகள்:

மோசம் : https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_94.html

நாசம்:  https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_35.html

தீபத்தம்பம் https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html

கடப்பல்> கப்பல்,  அடங்கம் >  அங்கம் என்பனவும் காணலாம்.  இடைக்குறை. கடல்கடக்க உதவுவது.  பன்னிரண்டு.

இதிலேதான். மேற்படி https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html.

அனைத்தும் அறிந்து மகிழ்க.