வெள்ளி, 31 ஜூலை, 2020

கஷாயம். கசாயம்

இவண்  இனிமை தெரிவிக்காத ஒரு சொல்லைப் பற்றி
ஆய்ந்தறிவோம்.

அது கஷாயம் என்ற சொல்தான். பாயசம் குடிக்கப்
பலர் விரும்பும் இந்நாளில் யார் கஷாயம் குடிக்க
விரும்புவார்?

கஷாயம் எத்துணை கசப்பாய் இருக்கும் என்பது 
உண்மையில் யார் அதைத் தயாரிக்கிறார்கள் 
என்பதைப் பொறுத்ததே ஆகும். சித்தவைத்தியரே
அதைத் தயாரித்தால் மிகக் கசப்பு உடையாதாய் 
இருக்குமென்று நாம் எண்ணலாம்.

கஷாயம் என்பது உண்மையில் கச ஆயம் தான். 
கசப்பாய் ஆயது கசாயம்.

இச்சொல்லில் முன் நிற்பது கசத்தல் என்ற 
வினைச்சொல்.

கச என்பது கஷ என்று திரிந்துவிட்டதால் பலருக்குத்
தடுமாற்றமாய் உள்ளது. வடவெழுத்து என்ற அயல் ஒலி
நீக்கி, உரிய ஒலியோடு (எழுத்தொடு) புணரின் அது சரியான
சொல்லாகிவிடும். தொல்காப்பியம் சொல்வது இது,

ஆயம் என்பதையும் இவ்வாறு அறியலாம்:

ஆதல் - வினைச்சொல்.
ஆ வினைப்பகுதி.

ஆ + அம் =  ஆயம்,  யகர உடம்படுமெய் தோன்றியது..

ஆய என்ற எச்சவினையினின்று இதை அறிய:

ஆய + அம் =  ஆயம்,  இங்கு ஆய என்பதன் ஈற்று அகரம் 
கெட்டது.
ஆய் என்ற வினை எச்சத்திலிருந்து அறிவதானால், 
இன்னும் எளிதாகிவிடும். ஆய்+அம் = ஆயம்.

எச்சங்களிலிருந்து பிற பாலி, சங்கதம் போலும் 
மொழிகளில் சொற்கள் பல பிறந்தனவென்று சொல்வர்
ஆய்வாளர்.

சொற்களில் ஒவ்வொன்றும் வினைப்பகுதி, விகுதி
என்று இணைந்து தோன்றியிருக்கும் என்பது 
இலக்கண ஆசிரியர்கள் கருத்து. இலக்கணம் 
காணப்படுமுன்னரே சொற்களும் மொழியும் 
தோன்றிவிட்டமையால், இப்படிக் கருதுவது
மொழிவரலாற்றுக்கு முரண்பட்ட தவறான 
கருத்து அல்லது கொள்கை. இலக்கியம் அல்லது
மொழியில் காணப்பட்டதற்கே உண்மை கண்டு
இலக்கணம் உரைக்கவேண்டும். விடப்பட்டதை
சொந்தபுத்தியில் அறிக.

பெய்ப்பு பின். 



வியாழன், 30 ஜூலை, 2020

இனி யாம் செய்யவிருப்பது

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 


இதன் பொருள்:

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;

பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை 
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;

இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்;  அது உங்களுக்குக்
கிட்டும்;  ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.

நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.

அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி

மெய்ப்பு - பின்...


திங்கள், 27 ஜூலை, 2020

மருத்துவர் உயிரிழப்பு.

பீடிக்கும்  எந்த வயதிலும் 
நோயிம் மகுடமுகி
மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை
ஓடி உழைத்த மருத்துவர்
ஒய்ந்துயிர் விட்டகன்றார்
கூடும் இருபத் துடனேழில் 
நோய்நுண்மி கூடியதே

உரை:

பீடிக்கும்  எந்த வயதிலும் நோய் -  எந்த
வயதிலும் நோயானது பற்றிக்கொள்ளும்;

இம் மகுடமுகி மாடியில் வாழினும் மண்குடில்
வீழினும்  பார்ப்பதில்லை - கொரனா வைரஸ்
நோய் மகுடமுகி என்பது  மாடியில்
வாழ்பவரையும் மண்குடிலில் வாழ்க்கையில்
வீழ்ச்சி காண்பவரையும்
வேறுபடுத்தி நடத்துவதில்லை;

(டெல்லியில்) ஓடி உழைத்த மருத்துவர்
  -  முன்னணியில் இருந்துகொண்டு
 ( இந்த நோயாளிகளைக்) 
கவனித்துக்கொண்ட மருத்துவர்,

கூடும் இருபத்துடன் ஏழில் -  அடைந்த
தன் இருபத்து ஏழாம் (வயதில் )

ஓய்ந்து  -  மருந்துவமனையில் படுக்கையில் 
நடமாட்டம் இன்றிக் கிடந்து;

உயிர்விட்டு அகன்றார் -  இறப்பினை எய்தி
உலகினைப் பிரிந்தார்;

நோய்நுண்மி கூடியதே -  நோய்க்கிருமிகள்
அதிகம் ஆகிவிட்டன.

( அதனால் )  என்றவாறு.



செய்தி:
கொரனா நோய் மருத்துவர் 27 வயதில்
தொற்றின் காரணமாய் மறைந்தார்.
டில்லியில்.

கவனமாய் இருங்கள்.
நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

மெய்ப்பு பின்

சனி, 25 ஜூலை, 2020

டகர ரகர ஒலிப்பரிமாற்றங்கள்


எழுத்து திரிபு அடைந்தாலும் பொருள் மாறாமையைப் போலி
என்பர். இங்கு யாம் அந்தக் குறியீட்டினைப் புழங்கவில்லை.
பழைய குறியீடுகளையே பயன்படுத்தி மருட்சியை
விளைக்காமல் புதிய தென்றாலாய் உட்புகுத்துதல் வேண்டு
மென்பதும் எம் நோக்கமாகும்.  இலக்கணத்தையும் உள்ளிலங்கும் குறியீடுகளையும் கொணரப் போதகர்கள் போதுமான அளவில் இருக்கிறார்கள். மட்டுமின்றி, நூல்களும் அனந்தம். பல
படிப்பாரற்றுக் கிடக்கின்றன. வேறு வழிகளில் அவர்களுக்கு
ஆர்வமூட்டுதல் வேண்டும்.

மேலும் சொல்லாய்வு என்பது வேறு. சொல்லாய்வு என்பது
இலக்கணம் அன்று.  தெரிந்த இலக்குகளை வைத்துக்கொண்டு
தெரியாத. உணரப்படாத, உணரமறுக்கின்ற பலவற்றை
வெளிக்கொணர்ந்து ஆய்வதுதான் எம் சொல்லாய்வின்
நோக்கமாகும். தெரிந்ததற்கு நூல்கள் உள்ளன. அதை இங்கு
எழுதவேண்டியதில்லை. மாறுபட்டுச் சென்று உண்மை
காண்பதும் யாம் மேற்கொள்வதாம்.

ஓர் எழுத்துக்கு இன்னோர் எழுத்து மாற்றீடு ஆன
போதும் சில நிலைகளில் பொருள் மாறுவதில்லை. இதை
நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மடிதல் என்பது இறத்தலைக் குறிப்பது. இச்சொல்லுக்கு
வேறு பொருளுமுண்டு. இதன் பிறவினை வடிவமாகிய
மடித்தல் என்பது பொருளில் வேறுபடும். இவை ஒரு
பொருளனவல்ல.  இந்தத் துணி மடித்துப்போய்விட்டது
என்றால் அது தரமிழந்து, கையால் தொட்டால் தானே
கிழியும் வண்ணம் அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டது
என்பது பொருள்.

மடிதலென்பது :  மடி > மரி என்று திரியும். இதைப் பிற
அறிஞர்களும் கூறியுள்ளனர்.  மடிதல் எனற்பாலதற்கு
மரித்தலென்பதே ஈடான பொருளுடையது ஆம். ஒன்றில்
வலிமிக்கு வரினும்,  மடி > மரி என்று வினைப்பகுதிகளை
ஈடாக நிறுத்துவதே பொருத்தமாகும்.

இந்த மாற்றம் பழைய இடுகைகளில் தரப்பட்டுள்ளன.  இன்று
இன்னொன்றையும் அறிந்து இன்புறுவோம்.

ஒடுக்குதல் என்பது ஒருக்குதல் என்று மாற்றமாய்
நிற்பதுண்டு. இங்கும் டகர ரகர மாற்றீடு காணலாம்.

மேற்காட்டியபடி டகரத்துக்கு ரகரமேதான் வருமென்பதில்லை.
டகரத்துக்கு றகரமும் வருதலுண்டு.  அந்நிகழ்வினை
ஒண்டி >< ஒன்றி என்பதிற் காணலாம்.

இவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்தவகையில் டகரம் ரகரமாகவோ றகரமாகவோ
மாறுமென்னும் போது இதை நினைவில் வைத்துக்கொள்ள
வேண்டும். 

இது நினைவில் இருக்குமானால் ஒரு திரிபைக்
காட்டும்போது எடுத்துக்காட்டுகள் கூறாமல் சுருக்கிக்
கொள்ளலாம், நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

அறிக மகிழ்க.

கொரனா (முடிமுகி)ப் பரவலில் சிக்கிக்கொள்ள
வேண்டாம்


Edit later 






வியாழன், 23 ஜூலை, 2020

ஒவையுடன்... ஆசை... வைரசுடன் வாழ்க்கை


முன் வைத்த இடுகைத் தலைப்பு:
ஓளவையுடன் அளவளாவ ஆசை, 
ஆனால் வைரசுடன் வந்த வாழ்க்கை.
இந்தத் தலைப்பு மேற்கண்டவாறு
சுருக்கப்பட்டது.

அம்மையும் அவ்வையும்

அவ்வை என்பது ஒரு பழம் பெண்பாற் புலவரின் 
பெயரென்பது தமிழறிந்தார் பலரிடமும் 
குடிகொண் டிருக்கும் ஒரு வரலாற்றுக் 
கருத்தாகும். இதனினும் மேலாக அவர் இப்போது 
நிலவில் காணப்படுகிறார் என்பது பாட்டிமார் 
சிலர் சிறுபிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்த
கதைகளின் ஒரு சுவைத் துணுக்கு என்பதும் 
நீங்கள் அறிந்திருக்கக் கூடும்நமக்கெல்லாம்
எவ்வளவோ நற்கருத்துக்களை அறிவுறுத்திய 
பாட்டி நம்முடனே வைகிவிடாமல் நிலவிலேறித் தனிமையில் இருப்பது நமக்கு வருத்தம் 
விளைக்கும் கதையே  ஆகும்.

எங்கள் மனங்களை வென்றாய் --- மறந்தே
எளிதாக நீங்கி நிலவிற்கோ சென்றாய்?
தங்க நிலவுடன் ஒன்றாய் --- கருப்பாய்
எங்கள் விழிகளில் தோன்றினை நன்றாய்!
-- சிவமாலா

ஆய்வு:

அவ்வை அல்லது ஒளவை என்பது அம்மை என்ற 
சொல்லிலிருந்து வந்ததாக அறிஞர்கள் கூறி
யுள்ளனர்.மகர வகரத் தொடர்புத் திரிபு இது
வென்பர். அம்மா என்ற சொல்லும் பிற தமிழின
(திராவிட) மொழிகளில் அவ்வா என்று திரிதலும் 
காணலாம். செய்யுளில் வகரத்துக்கு மகரம் 
மோனையாகவும் நிற்கும்மிஞ்சு(தல்) என்பது 
விஞ்சுதல் என்று திரிதலும் காண்க
மிகுதி எனற்பாலது விகுதி என்று திரிந்து 
இறுதிநிலையைக் குறிப்பதும் அறியலாகும்
மகர வகரங்கட்குச் சொன்னது அவற்றின் 
வருக்கங்கட்கும் பொருந்தும்.

ஒளவை என்ற பெயருள்ள புலவர்கள் ஒன்றுக்கு
மேற்பட்டோர் இருந்ததாகக் கூறுவர். ஒன்றுக்கு 
மேற்பட்ட பட்டினத்தார்கள் இருந்தது போலுமே 
இது.

அவ் + ஆய் = அவ்வாய் என்பது குறுகி அவ்வை 
என்று வருதல் கூடுமெனலும் கருதற்குரியதே 
ஆகும். ஆய்= தாய்.

அரசன் அதியமான் அருநெல்லிக்கனியை 
ஒளவைக்கு அளித்து, இதை உட்கொண்டு 
அதனால் நெடுநாள் நீங்கள் உயிர்வாழ்வது 
தமிழுக்கும் உலகுக்கும் நல்லது என்று தலையை 
வருடிவிட்டான் என்பர். அதிக அளவில் 
கள் கிடைக்குமானால் இருவரும் ஓரிடத்தமர்ந்து 
அதை அருந்துவராம். சிறிதே கிடைத்தால், அதைத் 
தானுண்ணாமல் ஒளவைப் பாட்டியிடமே தந்து
மகிழ்வானாம் அதியமான். அவ்வேளைகளி
லெல்லாம் அவர்களிடைத் தமிழ்ப்பாக்களே வழிந்து செழுந்தேனாய் ஓடுமாம். யாம் பாடத் தான்மகிழ்ந்
துண்ணு மன்னே என்று பாடுவார் ஒளவை
அம்பொடு தடிபடு வழியெல்லாம் தானிற்கு 
மன்னன் அவன்.

அப்போது நாம் அங்கிருந்திருந்தால் நம் 
மகிழ்ச்சிக்கும் ஓர் எல்லை இருந்திருக்காது.
இப்போது  நம் வாழ்க்கை மகுடமுகி 
நோய்நுண்மி எனும் இக்கொரனா வைரசுடன்
ஒன்றாகி விட்டதுஎன் செய்வோம்?

மெய்ப்பு: பின்




செவ்வாய், 21 ஜூலை, 2020

தூது தூதன் தூதுவன்

தூது என்பது அழகிய சொல். இன்று தொன்றுதொட்டுத்
தமிழில் வழங்கி வந்துள்ளது. இந்தச் சொல் வேறு 
இந்திய மொழிகளிலும் உலவுவதுடன் மலாய்மொழி
யிலும் வழங்கிவருகிறது. அயல்நாட்டுத் தூதர்கள்
செயலகம் அமைந்துள்ள சாலைக்கு "ஜாலான் துத்தா" 
(தூதுவர்கள் சாலை) என்று பெயரிட்டுள்ளனர்.

தூத(ன்) > தூதா > டுத்தா.

தூதன் என்பவன் ஒரு பதிலாளன் ஆவான்.  இன்னோர்
அரசுடன் எதைப்பற்றியும் பேசுவதென்றால், அதை 
விழைகின்ற அரசன் நேரடியாகப் போய்ப் பேசலாம் 
என்றாலும் இது கடினமான காரியமே. செலவும் பிற
இடர்களும் விளையலாம்.  அதற்கு ஒரு தூதுவனை
அனுப்பிவைப்பதே சரியாகும்.


அரசனுக்காக அடுத்த அரசினரை அண்மிச் செல்வோன்
"ஆகமைவன்"   ( அரசுக்கு ஆக அமைதல்) என்றோ, 
அடுத்த அரசை அண்முகிறவன் என்ற பொருளில், 
" அடுத்தண்மி " " அடுத்தரசண்மி" என்றோ,  இன்னுமுள்ள
பலவழிகளில் ஏதாவதொரு வகையிலோ ஒரு சொல்லைப்
படைத்துக் கையாண்டிருக்கலாம். அரசணவர் என்றால்
நன்றாக இல்லையா?  அரசை அணவி நிற்பவர் என்பது,
முயன்றால் பல நூறு சொற்களை வடிவமைத்து 
அதிலொன்றைப் பற்றிக் கொள்ளலாம். ஊடுருவன்
எனலாமோ? அரசுகளுக்கிடை நின்று பணிபுரிதலால்
அரசிடைஞர் எனலாம்.1  இதிலெதுவும்.  கடினமுள்ளதாய் எமக்குத் 
தெரியவில்லை. அமைத்த சொல் வழக்குக்கு வந்து 
அன்றாடக் கிளவியாய ஆகிவிட்டால் அப்புறம் 
தடையுணர்ச்சி கழன்றுபோகும்.

ஆக ( முழுமையாக ) அண்டிவந்து  ( அண் - அண்டு - 
அண்மு), இங்கு எடுத்துச் செல்லும்   ( இகு), அவனுக்கு 
 (அன்)  [ பொருளைத் திருடிச் செல்வோனை]  "ஆக+ 
அண்+இகு + அன் "  ஆகணிகன் என்று சொல்ல
வில்லையா? சொல் படைக்கவில்லையா?
அதைப் போன்றதே மேலே யாம் சொன்னவையும். 
இங்கு என்பது இகு என்ற குறைவதில்லையா?  
முமுமையாக அமைந்த இறைப்பற்றுச் செயல் 
அமைப்பு,  ஆக+ அமை+ அம் என்று காணப்பெற்று
ஆக+அம்+அம் = ஆகமம் ஆகவில்லையா?
இவைபோல்வனவே உரைக்கப்பட்டனவும்.

அரசாணை பெற்று இத்தகு பணியினை
 மேற்கொண்டு அடுத்த அரசனிடம் செல்வோன்,  
தூயவனாய் இருக்க வேண்டும். மேற்குறித்தவாறு 
பருப்பொருள்கொண்டு சொல் லமைப்பதினும்  
பண்புப்பொருள்கொண்டு அமைத்தலே
தகுமென்று கருதி  தூய்(மை)+ து >  தூய்து > 
தூது > தூதன், தூதுவன் என்றனர்.2  தூய்  என்ற 
அடியின் யகர மெய் வீழ்ந்தது.இவ்வாறு 
வீழ்ந்தனவற்றைப் பழைய இடுகைகளில் காண்க.

அவனுக்குக் கட்டுப்பாடுகள், எல்லைக்கோடுகள்
 இருந்தன. அவன் யாருக்குப் பதிலாளனாகச் சென்றானோ
அவனுக்குத் தீங்கு நினையாத தூயவனாக என்றும்
இருக்கவேண்டும். 

அறிக மகிழ்க

தட்டச்சுத் திருத்தம் பின்பு.


===========================

1 ஒருவரை அடைந்து அண்டிச் சாப்பிடுகிறவனுக்கு
:'அடையுணி" ( அடை + உண் +இ). என்னும் சொல்
வழங்கிற்று.  இதைப்பின்பற்றினால் தூதுவருக்கு
"அடையுறவர்" என்றும் சொல்லலாம். இன்னோர்
 அரசினைச் சென்றடைந்து உறவினை வளர்ப்பவர்
என்று பொருள்தரலாம்!! நீங்கள் சில சொற்களை
உருவாக்கிப் பின்னூட்டம் செய்யுங்கள். 

2.  தூது என்பதில் இறுதி -து விகுதி.  இது எல்லா
 வகைச் சொற்களிலும்  ( பெயர், வினை பிற) வரும்.
எ-டு:   விழுது (விழு),  கைது( கையிலகப்பட்டுத் தடுத்து
வைக்கப்படுதல்),  வேது  ( வெம்மை),   இது,  யாது, மாது.

3 சங்கதம்:  தூத,  தூதக, தூதமுக, தூத்ய ( தூதுவ 
அலுவலகம்) முதலியவை;  இனி அம்மொழியில் இது
ஒரு குருவியையும் குறிப்பதாலும்  மற்றும் தேவி
துர்க்கையின் ஒரு சேடியையும் குறிப்பதாலும், இச்சொல்
பலவழிகளில் அம்மொழிக்கு வந்து சேர்ந்துள்ளது
என்பது தெளிவாகிறது.

தமிழில் தூது என்பது ஒரு நூல்வகை;  ஒரு சிறுகல்;  செய்தி;
தூதன் என்பவை. நூல்வகையானது,  தூதுபோவதாகப் 
புனைந்து பாடினமையால்;  செய்தி, தூதன் என்பவை 
சொல்லுடன் தொடர்புகொண்டவை.








திங்கள், 20 ஜூலை, 2020

இவ்வளவுதான் கடைப்பிடிக்க வேண்டியவை

இடைத்தொலைவே இருந்தவன்பால் 
    முடிமுகியோ நெடுந்தொலைவு
படைக்கிருமி பரவாமல் 
    கைத்தூய்மை கைக்கொளலே
நடைச்செலவு  புறப்படினோ 
    உடைகளுடன் முகக்கவசம்
கடைப்பிடித்தல் கொடுங்காலக் 
    கடுந்தொற்றில் வாழ்வகையே.


உரை:

இடைத்தொலைவு -  ஒருவனுக்கும் இன்னொருவருவனுக்கும்
இடையில் இத் தொற்று நாட்களில் கடைப்பிடித்தற்குரிய
இடைவெளி;

இருந்தவன் - இடைத்தொலைவு போற்றிக்கொண்டு 
இருந்தவன்,

முடிமுகி -   கொரனா வைரஸ் என்னும் நோய்நுண்மி;

நெடுந்தொலைவு -  (இவ்வாறு  போற்றிக்கொள்வானிடமிருந்து
நோய்நுண்மி  )வெகுதூரம் சென்றுவிடும்.

படைக்கிருமி -  கொல்லும் கொடிய நோய்க்கிருமி.

கைத்தூய்மை -  கழுவவேண்டும் என்று உடல்நலத்துறையோர்
கூறிய வேளைகளில் கைகளைக் கழுவுதல்;

கைக்கொளல் -  கடைப்பிடிக்கவேண்டும்;

நடைச்செலவு - நடந்து செல்லுவதற்கு 

புறப்படினோ - வெளியில் போகுங்கால்

உடைகளுடன் முகக்கவசம் -  உடுத்துக்கொள்வதுபோல 
முகக்கவசமும் அணிந்துகொள்ளுக;

கடைப்பிடித்தல் - இவைகளைச் செய்தல்,

கொடுங்கால  -  துன்பகாலமாகிய;

கடுந்தொற்றில் -  கடுமையான நோய்த்தொற்றின்போது;

வாழ்வகையே -  வாழும் வகை ஆகும்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

நோய்தவிர்க்க எண்ணாத நம்மக்கள்.

நாட்டுக்கும் தீமை நலத்திற்கும் கேடுதான்
பாட்டுக் கவரவரும் கூடிநின்று ---- கேட்டினையே
வாவென்  றழைப்பார்போல் வாய்கிழிய வெற்றியை
வாவென்று கூவியழைத் தால்.

நோய்த்தொற்று நாட்டில் நுழைந்துவிட்ட இக்காலம்
பாயிட்டெல் லாரும் படுத்துறங்க ---- கோவிட்டும்
கொஞ்சம் மனமிரங்கும் கூட்டில் உயிர்தங்கும்
தஞ்சம் அகமாகும் தான்.



இது தேர்தல் அறிவிப்பைக் கொண்டாடக் கூடிநின்று
நோய்த்தொற்று வாய்ப்புகளை மறந்து, பேரிடர்க்குள்
மாட்டிக்கொள்ளும் நிலையில் தம்மைப் புகுத்திக்கொண்ட
மக்களை நினைந்து பாடியது. 

நலத்திற்கும் -  உடல் நலத்திற்கும்.பிற நலத்துக்கும்
இது நோய்த்தொற்று பற்றிய பாடலாதலின் உடல்நலம் முதன்மை.
பாடு - துன்பம் ( நேரும்படி)
கோவிட்டு - கொரனா நோய்
கூட்டில் - உடம்பில்
"கூடுவிட் டாவிதான் போயின்" என்ற ஔவையின்
பாட்டை நினைவுகொள்க.
தஞ்சம் -  புகலிடம்
அகம் - வீடு.
  

என்னைத் தழுவின் மழை (2008)

பூமிக் கொளிபாயும் கோமகள் கண்விழித்து;
பூவிற் கவள்முகம் மண்ணியதால் --- மேவுபனி; 
பல்லைத் துலக்கின் நுரையாம்் பரவைக்கே; 
என்னைத் தழுவின் மழை.


நண்பர் ் போட்டிருந்த சொற்களையே கூடுமான வரை
வைத்துக்கொண்டு இப்படி மாற்றினேன்்.


 கோதைகண் ஊடொளியால் இவ்வுலகு வெட்டமுற 
வாதை யிலாஅங்கை் நீர்கழுவ --- கூதை 
அதழில் பனிநீர் நுரைகடலாய் ஆழ்ந்தே 
இதழ்வாய் அணைக்கும் மழை. 

 வெட்டம் = வெளிச்சம்; ( ஒரு நண்பருக்காக எழுதிக் கொடுத்தது).

[ கண்டெடுத்த பழைய பாடல், சிதைந்துள்ளது. ]

இதன் முழு வடிவமும் உங்களிடம் இருந்தால்
தந்து உதவுங்கள்.

சனி, 18 ஜூலை, 2020

பிழைக்க வழி இல்லை.......

அழுக்கறியா மேலாடை கழுத்துக் கட்டாம்
ஆடையழ கோடுயர்ந்து வழக்கில் முட்டும்

வழக்கறிவு மேன்மக்கள் வாயிற் பாங்கில்
வாங்கிடுவீர் எனக்கூவி மாங்காய் தேங்காய்

கிழங்கினொடு கீரைஎனப் பலவும் விற்றார்
கேட்டுநிலை வந்ததிந்தக் கிருமித் தொற்றால்

முழங்கியவாய் முடங்கிற்றே இன்னும் என்ன
மூதுலகில் மூண்டிடுமோ    பன்னும் அன்னாய்!


செய்தி:-

வாசித்தால் துன்பமே.


கழுத்துக்கட்டு:  "டை" என்ற கழுத்தணி.
வழக்கறிவு மேன்மக்கள் -  வழக்கறிஞர்
முட்டும் - வாதங்களில் முட்டிக்கொள்கின்ற
பாங்கில் -  பக்கத்தில்
வாயில் - கட்டிட வாசல்
கேட்டு நிலை -  துன்ப நிலை
கிருமித் தொற்று - மகுடமுகி (கோவிட்19) 
கொரனா நோய்.
பன்னும் - தெளிவாகப் பேசும்
அன்னாய் -  அன்னையே.

வெள்ளி, 17 ஜூலை, 2020

அழகிரி என்னும் பெயர்.

இன்று அழகிரி என்ற பெயரின் சொல்லமைப்பைக் காண்போம்.

இப்பெயரை இயற்பெயராய்க் கொண்டோர் பலர் உள்ளனர். 
இது  சொல்லாய்வே அன்றி வேறில்லை. இப்பெயரைப் பற்றி
எழுதி அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவேண்டுமென்பது
நோக்கமன்று.  ஆகவே,  ஆய்வினை ஏற்றுக்கொள்வீர்கள் ; 
அவ்வாறே வேண்டிக்கொள்கிறோம்.

அழகு+ இரு + இ  என்று பிரித்து அழகிரி என்று முடித்து, 
அழகிருப்பவர் எனினும்  ஆகும்; ஆனால் அதனினும் 
சிறந்த முடிபினை எட்ட மேலும் ஆய்வோம்.

அழகு என்ற சொல்லில் அழ என்பதே முதனிலை ஆகும். 
கு என்பது விகுதியே ஆகும். ஆனால் இவ்விகுதி பெயர்ச்
சொல் அமைப்பிலும் வினைச்சொல் அமைப்பிலும் வருவது.  வினைச்சொல்லில் வருதற்கு எடுத்துக்காட்டு:  பழகு (பழகுதல்), 
மூழ்கு (மூழ்குதல் ) எனக் காண்க.

எனவே  அழ என்ற முதனிலையும் மலை என்று பொருள்படும்
"கிரி" என்ற கிளவியும் இணைந்ததே அழகிரி என்ற பெயர். 
இஃது விகுதிகெடுத்துப் புணர்த்திய சொல் ஆகும்.  இப்பெயரை 
வேறு விதமாகச் சொல்வதென்றால் " அழகுமலை" என்னலாம். 
கிரி என்பது மலை.

கிரி என்பது திரிசொல்.  குன்று என்பது (சிறிய) மலை. இது 
இடைக்குறைந்து  குறு என்றாகி,  குறு > கிரி என்று திரிபுற்றது.
குறு என்ற அடியினின்று பல சொற்கள் தோன்றியுள்ளன. குறி, 
குறை என்பவை தொடர்புற்றவை.

அறிக. மகிழ்க.

திங்கள், 13 ஜூலை, 2020

ஒரேநாளில் 4328 நோய்த்தொற்று [ த-நா]



ஆயிரத்து முன்னூற்றின் இருபத் தெட்டாம்
ஆயிரத்தில் நாலுறழும் கிருமித் தொற்றே
மாயறவு கொண்டவர்கள் திரும்ப வேண்டும்
மாநிலத்தில் இன்றொருநாள்  பெருக்கம்  ஈதே!
தூயவர்கள் பலர்புகழில் துவன்ற நாட்டில்
தொடர்கின்ற துன்பங்கள் அகன்றி டாவோ?
தாயொடுமே பிள்ளைகளும் தழைத்து நின்று
தமிழன்னை தயைபெற்றே எழுதல்  வேண்டும்.


ஆயிரத்தில் நாலுறழ -  நாலாயிரம்
மாயறவு -  மரணம் நீங்குதல்
கொண்டவர்கள் -  கொண்டு +  அவர்கள்
துவன்ற -  கூடிய, நிறைந்த
அகன்றிடாவோ = நீங்கிட மாட்டாவோ?


ஞாயிறு, 12 ஜூலை, 2020

மரபுத் தொடர்: " எந்த மூலை?"

நாம் வழங்கும் சொற்றொடர்களில் சில ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவையாய் இருக்கும்.  எடுத்துக்
காட்டாக, " என்ன இவர் செய்து சாய்த்துவிட்டார்? 
இப்போது இங்கு வந்து பீத்திக்கொண் டிருக்கிறார்" 
என்பது காட்டில் மரங்களை வெட்டிச் சாய்த்துக்
கொண்டுவந்து அறுத்தெடுத்துப் பலகைகளாக்கும்
தச்சுத் தொழில் சார்ந்த வேலைக்காரர்கள்
பயன்படுத்தி வந்த சொற்றொடராகும்.  இதே
போலும் ஆங்கிலத்திலும் உண்டு. "Are you fighting
 your case or taking a certain course?" என்ற கேள்வியில்  
taking a certain course என்பது  கடலோடிகளின்
பேச்சுவழக்கில் தவழ்ந்து வளர்ந்து மிகுந்து மக்கள்
பிறரிடமும் பரவிவிட்ட சொற்றொடரென்று அறிஞர்
கூறுப. இவற்றைச் சுருக்கமாகத் துறைத்தொடர்கள்
என்று சுட்டலாகும்."taking a certain course" எனற்
பாலதை   ஆங்கில மொழிநூலறிஞர்  natutical term
என்பர்.

தச்சுத் தொழிலில் அறுத்துக் கொணர்ந்த மரம் அல்லது
மரங்கள் அளவிலோ எண்ணிக்கையிலோ குறைந்துவிட்டால்
"இது எந்த மூலை?" என்ற கேள்வி எழும். நான்கு மூலைக்கும்
நான்கு தூண்கள் நிறுத்தவேண்டுமே.  மூன்று தூண்களுக்கே
மரங்கள் உள்ளனவென்றால் பற்றாக்குறையை உணர்த்துவதற்கு
இவை எந்த மூலை என்பர்.  இதற்குப் போதவில்லை என்பதே
பொருளாகும். இப்போதைய வழக்கில் " எந்த மூலை" என்பது
கவலைக்குரிய பற்றாக்குறையைச் சுட்டவே வெளிப்படும்
சொற்றொடராக உள்ளது.

சாய்த்துவிட்டாயோ என்று வரும் மரபு வழக்கினின்று சில
சொற்கள் அமைந்துள்ளன.

செய்து முடிக்க இயன்றதை  சாத்தியம் என்பர்.  இது சாய்த்து+
இயம் என்ற இரு உள்ளுறுப்புச் சொற்களை உடையது.  இயம்
என்பது இ+ அம்  என்ற பகுவிகுதிகளின் இணைப்பு.  இ = இங்கு.
அம் - அமைதல் உணர்த்தும் விகுதி..  சாய்க்க இயன்றது, அதாவது
செய்தற்கியன்ற நிலை என்பதே சாய்த்தியம் > சாத்தியம்
ஆயிற்று.  யகர ஒற்று (ய்)  கெட்டது (௳றைந்தது).    வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர், வாய்த்தியார் > வாத்தியார் ஆனார்'
அதுபோலவே சாய்த்தியம் > சாத்தியம் ஆயிற்று.  சாதித்தல்
என்பதும் சாய்தல் அடியினதே.  சாய் > சாய்தி > சாதித்தல்
என்பது யகர ஒற்று இழந்தது. சாதித்தல் என்பதில் வரும் சாதி
என்பது ஜாதி ( மக்கட்பிரிவு) குறிக்காது.  இது தன்வினை
பிறவினை வடிவங்கள் இரண்டிலும் சாதித்தல் என்றே
இயல்வதாகும்.

இவ்வாறு அறிந்து மகிழ்க..


மெய்ப்பு - பின்னர்.

திங்கள், 6 ஜூலை, 2020

அபிப்பிராயம் பின் வரும்கருத்து.


யாமோர் இடுகையை எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்புக் கொடுக்க முனைந்தேம். அவ்விடுகை சமீபம் என்ற சொல்லைப்பற்றியது. “சமீபம் என்ற அழகான சொல்" என்ற தலைப்பினை அதற்கு இட்டேம். இதைப் படிப்பவர் எவரும் என்ன அழகான சொல் என்று கேட்க மாட்டாரென்பதே எமது துணிபாகும். அந்தச் சொல்லில் என்ன அழகு கண்டீர் என்று எம்மிடம் யாரும் சண்டை பிடிக்க வரமாட்டார் என்பது யாமறிவேம். அழகோ அழகில்லையோ பலர் அவ்விடுகையின் உள்ளுறைவிலேதான் ( substance or content ) கவனம் செலுத்தியிருப்பர் என்பதும் யாம் பட்டறிவுகொண்டு அறிந்து வைத்துள்ளதாகும்.

ஒன்று அழகாக இருக்கிறதோ இல்லையோ, இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருத்தி அழகு என்றால் இன்னொருத்தி அழகு இல்லை என்பாள். இதனைக் கருத்து அல்லது அபிப்பிராயம் என்று குறிப்பிடுவர். பேச்சு வழக்கில் இதை "நினைப்பு" என்றும் இதற்கு எதிராக உண்மைநிகழ்வை "நடப்பு" என்றும் வேறுபடுத்தி உரைப்பர். நடப்புக்கு நினைப்பு ஒரு முரணிகழ்வு ஆகும். நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடுமென்பதற்கு என்ன பொருள்?

சட்டத்துறையில் கருத்துக்கும் நடப்புக்கும் வேறுபாடு கண்டுகொள்ளுமாறு பல விளக்கங்கள் கூறப்படுவதும் வரையறவுகள் வழங்கப்படுவதும் உண்டு.

அபிப்பிராயம் என்ற சொல்லுக்கு வேறுவிதங்களில் அமைப்பு காணப்படுவதுண்டு. இப்போது இச்சொல்லை ஆய்வுசெய்வோம்.

அபி என்பது ஒரு சங்கத முன்னொட்டு. ஆனால் அது உண்மையில் " அதன் பின் " என்ற தொடரிலிருந்து சுருக்குண்டதாகும். அபிவிருத்தி என்ற சொல்லில் அதன் பின் செய்யப்படும் விருத்தி என்று விளக்குக. முன்னாளில் கட்டிய ஒரு வீட்டுக்கு அபிவிருத்தி மேற்கொள்ளுதல் என்பது வழக்கில் கூறப்படுவதாகும். இங்கு வழக்கு என்பது உலகவழக்கு. விருத்தி என்பதோ விரி > விரித்தி என்பதன் திரிபு.

உலகில் ஆதியில் ஏற்பட்ட அபிப்பிராயம், ஒன்றைப் பார்த்து அது அழகியது, நல்லது என்பனபோலும் பாராட்டுக்களே. அடுத்தவன் அதை ஏற்கமறுப்பதாகிய ஒரு புகழ்ச்சி. இது அழகு என்றால் இதனினும் அது அழகு என்று பதில்வரும். ஆகவே அபி+ பர + ஆயம் > அபிப்பிராயம் என்று திரிந்த சொல். அதன் பின் புகழ்தலாவது கண்ட அல்லது கேட்ட பின் புகழ்தல், முதலியவை. பின்னர் இச்சொல் பொதுப்பொருள் எய்தியது. "பொதுவாகக் கருதப்படுவது" என்ற பொருளை அடைந்தது. அகரத் தொடக்கம் இகரமாதல் அதழ் > இதழ் என்பதனால் அறிக.

இவற்றையும் நோக்குக:

பரமன் > பிரமன் > ப்ரம்மன்  ( ப> பி > ப் )   அ > இ திரிபுவகை.

பரமன் - எங்கும் பரந்திருப்பவன்,  கடவுள். பிரமனும் கடவுள் தான்.

தெய்வப்பெயர்கள் ஒரு நடுவண் கருத்தினின்றே உருவெடுத்துப் பல்கியவை. சொல்லாய்வில் இவற்றை ஏற்புழி ஒன்றெனவும் பலவெனவும் கருதி அறிக. தெய்வப்பன்மை மீண்டும் ஒருமையாகிவிடும். இவற்றை விரிக்கும் நூல்களின்வாய் உணர்க. யாமதற்குள் செலவுமேற்கொள்ளவில்லை.



இவ்வாறாகப் பர என்பது பிர என்றானது. பரத்தல், புகழ்தல் , பரவுதலும் இப்பொருளில் வரும். “ அயோத்தியர் கோமானைப் பாடிப்பர" என்று வாக்கியத்தில் வருதல் காண்க.
அபிப்பிராயம் என்பது ஒன்றைக் கண்டபின் அல்லது நிகழ்த்தியபின் வரும் கருத்து. சுருக்கமாகப் "பின்னுரை" என்னலாம் எனினும் பின்னுரைகள் கருத்துமட்டுமேயன்றிப் பிற உள்ளுறைவுகளையும் 'உள்ளடக்கும்'.

பிராயம் என்பது வேறு. அது பிற ஆயம் என்பது ஆகும். ஆய்+அம் = ஆயம். ( ஆனது, ஆவது முதலியவை. )  பிறந்தபின்னரே வயது ஓடத்தொடங்கும். பிறந்தபின் ஆவதுதான் வயது/ அகவை. பிற ஆய அம் > பிராயம். றகரத்துக்கு ரகரம் மாற்றீடு. ௳. ரகர றகர வேறுபாடின்றி இயலும் சொற்கள் பல உள. எழுத்தியலில் றகரம் என்பது இரு ரகரங்களின் இணைப்பு.  ரர>ற.  மலையாளமொழியில் இவற்றின் எழுத்தமைப்புகளைக் கருத்தில் கொள்க. புரிந்துகொள்ளலாம்.
.

இவ்வாறு அறிந்து மகிழ்க.

மெய்ப்பு - பின்பு.

சனி, 4 ஜூலை, 2020

சமீபமும் ஈதலும்

ஈதல், தருதல், கொடுத்தல் என்பவற்றின் பருப்பொருள் 
ஒன்றே ஆயினும் அவை நுண்பொருள் வேறுபாடுடையவை.
தன்னினும் குறைவான தகுதி உடையா னொருவனிடத்து
ஒரு பொருளைச் சேர்ப்பிப்பது ஈதலாம். இவ்வாறு தகுதி 
குறைந்தோனுக்குப் பொருளைத் தருவதனால் ஏற்படும் 
புகழை " இசை" என்று சொல்கின்றன தமிழ் நூல்கள். 
இதனை ஈதலற மென்றும் ஈத லிசைபட வாழ்தல் என்றும்
தமிழனின் பண்பாடு கோடிட்டுக் காட்டுகின்றது. \
(மற்ற சொற்களை ஈண்டு விளக்கவில்லை.)


இன்று நாம் சமீபம் என்ற சொல்லை அணுகி ஆய்வோம்.


சமீபம் என்பது அயற்சொல் என்று முன்னர் கூறப்பட்ட
தெனினும் அது தமிழில் வழங்குவதாகும். அஃது எத்திறத்த
தாயினும் ஆய்வதே இவண் நோக்கமாகும்.


தாம் எங்கு இருக்கின்றோமோ, அங்கு தமக்கு ஒன்று 
கைக்கு எட்டும் தொலைவிலோ அல்லது வந்து சேரும் 
தொலைவிலோ இருந்தால் அதுவே சமீபம் ஆகும். நெடுந் 
தொலைவில் இருந்து தம்மை வந்து சேர்வதில் தடையோ 
தாமதமோ ஏற்படக்கூடுமாயின் அது சமீபத்தில் இருப்பதாக
யாரும் கூறார். ஒரு வாழைமரம் தமக்குப் பழந்தரும் 
படியாகப் பக்கமிருப்பதே சமீபத்திலிருக்கிறது என்று 
சொல்லற்குரியது ஆகும். இங்கு ஏன் சேர்தல், வருதல், 
தருதல் என்ற கருத்துகளையெல்லாம் புகுத்தி இந்த 
இயல்பான விடயங்களைச் சொல்கிறோமென்பது சிறிது
நேரத்திற் புரிந்துவிடும்.


சமீபம் என்பதில் சம், ஈ (ஈதல் ), பு (இடைநிலைவிகுதி).
அம் (இறுதிநிலை அல்லது விகுதி ) என்ற உள்ளுறுப்புகள்
உள்ளன.


சம் என்பது தம் என்பதிலிருந்து பிறந்த சொல். இரண்டு
 “தன்”கள் சேர்ந்தால் தம் ஆகிறது. ஆகவே சம் என்பது 
கூட்டு அல்லது சேர்க்கை.


தம் என்பதே சம் ஆனது. தகரத் தொடக்கம் சகரத் தொடக்க
மாகும். எடுத்துக்காட்டு இன்னொன்று: தனி > சனி. ( சில 
தனி இயல்புகள் உடைய ஒரு கோள். ) இது சொல்லிடையிலும் 
வருந்திரிபாம். எ-டு: அப்பன் <> அச்சன்> <அத்தன். 
இத்திரிபில் எது அடி, எது முடி என்று ஆயாமல், ஒன்று
 இன்னொன்றாய்த் திரியுமென்பதையே நோக்குக.


ஈதல் : ஈ என்பது சேர்ப்பிப்பது உணர்த்தும். வெகு
தொலைவில் ஒன்றிருப்பதும் சரிதான், அது இல்லாமல்
போவதும் சரிதான்.  அதன் பயன் நம்மை எட்டுவதில்லை.
ஆகவே பயன் கருதி வாழ் மனிதன் தொலைவு கருதியது -
எதுவும் கிட்டுமா இல்லையா என்பதை மனத்துக்கண்
கொண்டுதான் என்பதறிக. ஆகவே ஈதல் அல்லது ஈ 
என்ற சொல் இவண் பொருண்மை உடையதாகிறது.


தம் + ஈ + பு + அம் > சம் ஈ பு அம் > சமீபம் ஆகும்.


பு என்ற இடைநிலை மிக்க அருமை. புடை = பக்கம் இருப்பது. 
புடைசூழ என்ற தொடரின் பொருள் தெரியுமானால் இதை 
உணர்ந்து போற்றுதல் எளிதே. ஆகவே பொருத்தமாகப் 
புனைந்துள்ளனர் இச்சொல்லை. முதலெழுத்து மட்டும் 
இடைநிலையாய் நிற்கிறது.


இதை வாக்கியமாக்கிப் பார்க்கவேண்டுமானால் இப்படிக்
கருத்துகளை கோவை செய்யுங்கள்:


தமக்கு ஈயும் புடைமையில் இருப்பது. அதுவே சமீபம்.
 இப்போது வாழைப்பழம் பற்றி மேற்கூறியதையும்
மீண்டும் வாசிக்கவும்.

அறிக மகிழ்க.


குறிப்புகள்

சமீப்யம் - ஒரு குருவானவர் தமக்கு அருகிலே இருந்து வழிகாட்டுவது. இது ஒரு பேறு என்று இறைப்பற்று மார்க்கத்தில் சொல்லப்படுகிறது.



பருப்பொருள் -  பரும்பொருள் என்று மாறிக்கொள்கிறது.  இது திருத்தம் பெற்றுள்ளது. 5.05  05072020





மெய்ப்பு - பின்னர்.