செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

தாக்கல் செய்தல், சொல்வழக்கு

 ஏதேனும் அலுவலகம் போன்ற அமைப்பில்  சில சான்றேடுகளைக் கொண்டுபோய்ப் பதிந்து  வருவதை,  " தாக்கல் செய்தல்"  என்னும் வழக்கு,  பெரிதும் பேச்சு வழக்கில் காணப்படுகிறது.   " வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் பண்ணிவிட்டோம்"  என்பதைச் செவிமடுக்கின்றோம்.  இச்சொல், தாளிகைகளிலும் வழக்குப் பெற்றுள்ளது.  ஆனால் இப்போது ஆங்கிலச் சொற்களின் மிகுதிப் பயன்பாட்டால்,  இத்தகு சொற்பயன்பாடு குன்றிவருதல் அறியலாம்.   இதனிடத்தில் submit,  file, tender(ing)  எனப் பல ஆங்கிலச் சொற்கள் வந்துவிடுகின்றன.

முழுமையாக ஆங்கிலத்திலே பேசி முடித்துவிடாமல்,  கொஞ்சமாகவாவது ஆங்கிலம் கலந்து பேசிமுடித்தல்,  தாய்மொழிப்பற்று இன்னும் இருப்பதைக் குறிக்கலாம். இதை விருத்தி செய்துகொள்தல் வரவேற்கத்தக்கது.

தாக்கல் என்பது தாக்கு என்ற வினையினடியாக எழும் சொல்லாகும்.  பதிந்திடுதலைக் குறிக்குங்கால்,   இது "அடித்தல்"  (தாக்குதல் )  என்று பொருள்படும் சொல்லினின்று  வேறுபடும் சொல்லாகும்.

பதியத் தருதல் என்று பொருள்தருகையில்,    இது தரு~ என்னும் வினையினோடு தொடர்புடைய கருத்தே  ஆகும்.  தரு என்ற வினைப்பகுதி,   தா என்றும்  திரியும்.  தா என்ற திரிபுநிலையை அடைந்தபின்,  இச்சொல்  மீ ண்டும்  வினைவிகுதி பெற்று,  தாகு(  தாக்கு)  என்றாகி,  அல் விகுதியும் பெற்று,   தா + கு+ அல் > தாக்கல் என்ற வடிவை அடைந்தது.  கணிப்புக்கு ஏற்றல்,  பதிந்திடத் தருதல், முன்வைத்தல்,  அறியத்தருதல் என்று பல நுண்பொருள்களை விரிக்கலாம்.

வினையானபின் மீண்டும் வினைவடிவம் அடைதல் தமிழில் காணப்படும் அமைப்பு  ஆகும்.   பழைய இடுகைகளில் இதனை விளக்கியிருக்கிறோம்.  முயலுதல்> முயற்சித்தல்  என்பதும்  சிலர் வழங்கும் இத்தகைய வினைச்சொல்லே ஆகும்.   அடுத்தல்,  அடு+இ >  அடி > அடித்தல் என்பதும் காண்க.  நொண்டு(தல்) >  நொடு>  நொடி > நொடித்தல் என்பதுமாம்.  கடு> கடு+இ >  கடித்தல் என்பதும் அது.  கொள் > கொள்தல்,  கொள் -  கொடு,  கொடுத்தல் என்பன பொருள்மாற்றத்துடன் வருகின்ற திரிபுகள்.

தாக்கல் என்பது  உருது அன்று. 

அறிக மகிழ்க

மெய்ப்பு - பின்னர்.




வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

தயையும் தாயும் சொல்லுறவு

 நாம் இன்று தாய் பற்றிய தமிழர் சிந்தனை,  எத்துணை அளவு மொழியில் (அதாவது சொல்லைமைப்புகளுக்குள் ) அடைவுகண்டு கிடக்கின்ற தென்பதை அறிந்துகொள்வோம்.

தமிழ்மொழியைப் பேசியோர்,  தாய்மேல் உள்ள பற்றுதலால்  தாய் என்ற சொல்லையும் அம்மா என்ற சொல்லையும் எப்படி இணைத்து,  இருசொல் பகவொட்டாக  அமைத்தனர் என்பதை விளக்கியுள்ளோம்.

அம்மை > அம்மா   ----   மா. (முதற்குறை).

தாய்  >   தா  ( கடைக்குறை ) 

மா+ தா =  மாதா.

பன்முறை அம்மா என்பது  அன்பின் திண்மை காட்டும்.

மாதாவை  ஒருநாளும் மறக்கவேண்டாம் என்பது தமிழர்பண்பாடு.

பெற்றதாய் தனை  மகமறந்தாலும்.  ( வள்ளலார்).

தெய்வத்தைக் குறிக்கும்  அம்மன் என்ற சொல்லும்,  அம்மை என்ற சொல்லினடியாய் வந்தது நீங்கள் அறிந்தது.

அம்மன் என்ற சொல் அன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று முடிந்தாலும்,  அவ்விகுதி பெண்பாலையே பொருட்குறியாய்க் கொண்டது,  அன் என்னும் விகுதி  அணுக்கம் என்னும் பொருளிலிருந்து புறப்படுதலின்,  வெகு பொருத்தமாம்.  அன் என்பது அன்பு என்பதன் அடிச்சொல்லுமாகும்.

குறுக்கினும் நீட்டினும் ஒருபொருள் தரும் சொற்கள் உள,  எ-டு  பதம்  -  பாதம்.  (கால் கீழ்).

அம்மைக்குப் பின்புதான் அப்பன் என்பதால்,   பிதா என்ற சொல் அவ்வாறே அமைந்தது.

தாய்ப்பின் > (முறைமாற்றாக )  பி(ன்) + தா(ய்) >  பிதா.

முறைமாற்று அமைப்புக்கு இன்னொரு காட்டு :  இலாகா <   இல்லாமாக அல்லது இடத்திலமைந்த  காப்பு  இயக்கம்.   இல் - இடம்.  ஆ :  ஆகிய அல்லது ஆக்கம்;  கா-   காப்பு.   ( காப்புக்காகிய இடம் ).   இல் என்பது இடப்பொருள் உருபு.   இது திறம்பட அமைக்கப்பட்ட சொல். உருது அன்று.

மேற்கூறிய பதங்கள்  பூசாரிகள் வழக்கில்,    திறம்பட அமைக்கப்பட்டிருப்பது  பாராட்டுக்குரித்தாகும்.

பின் என்பது பி என்று கடைக்குறைவு எய்திற்று,  எ-டு இன்னொன்று:  தன் பின் > தம்பி.   பின்பு அம் > பிம்பம் என்பதும் அது . ( பின்னிழல்).

இத்தகு  சொற்கள்  பல,  தாய்தரும் அன்பைக் காட்டத்தக்கவை.

யார் பின் -  யார் முன் என்பது ஒருவகை மனந்தரு தகுதியே ஆகும்.

அப்பனைக் காட்டிலும் அன்பு மிக்கவள் தாயே  ஆவாள்.   அப்பனிடம் அத்துணை மென்மை இல்லை.  கைபார்த்த ஒரு புத்தபிக்கு,  நீ உன் " "அம்மாக் கடவுளிடம்" போய் வணங்கு"  என்று வந்தவரிடம் சொல்லியனுப்புகிறார் என்றால்  அம்மாவின் (  அம்மனின்)   அன்புதான் எத்துணை என்று அளவிடல் அரிதேயாகும்.

தாய்  >  தய்+ அண் + கு>  தயங்கு.  ( விரைந்து ஒறுக்காமல், நின்று நிதானிக்கும் தன்மை).

தாய் >  தய் + அ + கு + அம் .>  தயக்கம்.

தாய்>  தய்+ ஐ  >  தயை  (  அன்பு,  கருணை)

சொல்லமைப்பில் சொற்கள் குறுகிப் புதுச்சொற்கள் உண்டாகும்.  இது  முன் நீங்கள் அறிந்தது.  தய் = தை.

எ-டு:   சா > சா+அம் > சவம்;    தோண்டு+ ஐ>  தொண்டை.  காண் > கண்.

சொல் குறுகி வினையும் பெயரும் அமையும்:  நாக்கு >  நக்கு;     காது>கத்து.

காண் -  கண்,  (மேற்கண்ட இரண்டிலிருந்து இஃது முறைமாற்று)

தயை, தாய் என்பவற்றின்  சொல் திறம் கண்டீர்.   தயை என்பதன் தொடர்புகள் கொண்டாடத்தக்கவை.

தாயாகி நிற்போன்:  தாய் + ஆ+ நிதி >   தயாநிதி. பூசை ஆர்வோர் இலக்கணம்,  இஃதொரு வடமொழிப் புணர்ச்சி எனினும்,  உண்மை இதுதான் .  தாய் ஆ = தாய் ஆகும் என்பது பொருள்.

ஒரு புதிய இலக்கணம் சொல்லும்போது மாற்றுரையாகச் சொல்வதில் குற்றமொன்றுமில்லை.  அவ்வாறு தமிழிலக்கணியரும் கூறியுள்ளனர்.  தமிழில் "மாட்டிக் கூறாமல்," தனியாக்கிக் கூறுவது  ஓருத்தி. 

தயை என்பது தைத்தல் வினையோடு தொடர்புடையது.  இனியொருநாள் காண்போம்.  மக்களை இணைக்கும் மாதமும் தை எனப்பட்டது. தோலில் ஒட்டும் மருந்தெண்ணெயும்  தைலம் எனப்பட்டது. அடிப்பொருள்  ஒட்டுதல், மனவொட்டுதல். இணைப்பு. [ மனத்துள் தைக்கவேண்டும்.]  குழந்தையை ஒட்டிநிற்பவள் தாய்.



அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

சில சேர்க்கப்பட்டன.  மீள்பார்வை பின். 27022022


செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

பராக்கும் பார்வையும்.

 சொற்கள் சில, மிக்கச் சுருக்கமாக விளக்க இடந்தரும் உருவுடையனவாம்.

ஆங்கிலத்தில் ,  நேராகவும் நிமிர்ந்தும் நிற்குமாறு படைஞர்கட்கு  உத்தரவிடும் முகத்தான்,  "அட்டென்ஷன்"  என்று கட்டளைதருவர்.  மலாய் மொழியில் "சிடியா" என்று கத்தல் எழும். ஒவ்வொரு தேயத்தும் இத்தகு கட்டளைச் சொற்கள் உள்ளன. இராசராசனின் படையினர் எத்தகு கட்டளைகளைப் பிறப்பித்துப் படைநடத்தினர் என்பதைக் கூறும் நூல் எதையும் யாரும் இதுகாறும் வெளியிட்டிலர் என்பது அறிகிறோம்.  

எழுதுவதில் தமிழர் நல்லபடி செய்கின்றனர்,  எழுதியவற்றைப் படிப்பதில் தமிழர் முன்னணியில் இல்லை என்பது எம் கருத்து ஆகும்.  இரண்டும் சமமாக  நடைபெறுதல் நன்று.

பழங்காலத்தில் படைஞனின் கவனத்தை ஈர்க்க  "  பார்  ஆக்கு" என்று குரலெழுப்பினர்.

பார் - பார்வை;  ஆக்கு -- கவனமுடன் நிற்பாய் என்பது.  இது அரசர் காலத்தில் வழங்கியதாகத் தெரிகிறது. 

ஆங்கிலத் தொடர்கள், பாராக்கு என்பதன் மொழிபெயர்ப்பு. இது போன்ற கட்டளைகள்,  நீட்டி இழுத்து வெட்டுப்பட்டதுபோல் ஒலிக்கும்படி விடுக்கப்படுதல் வேண்டும். ப....ரா.........க்   என்பதுபோல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

சோனியாக் குழந்தை

 

கவனமுடன் படித்தல்  கருத்தினுக்கு  ஊட்டம்--- அந்தக்

கணத்தினுக்கு அமையாதே  ஆட்டம் பாட்டம்!


( ஆட்டம் பாட்டமின்றி அமைந்து படிக்கவேண்டும் )


திங்கள், 20 பிப்ரவரி, 2023

இலம்போதர சுந்தரன் விநாயகன்--- தமிழ்ப் பொருண்மை

முற்சொலவம்:-
(foreword)
  இதற்கான தமிழ்ப்பொருளை இங்கு ஆய்வோம்.  அதற்குமுன் இதற்குக் கூறப்படும் சங்கத  ( சம்ஸ்கிருதப்) பொருளை  அறிந்துகொள்வோம்.  எத்தனை பொருள்கள் இவ்வுலகில் உண்டோ,  அத்தனையையும் ஆய்ந்து கூறுவதுதான் உண்மை ஆராய்ச்சி.  ஒன்றை அறிந்து இன்னொன்றை ஆய்ந்தறியாமல் விடுவது  ஆய்வாளன் செய்வதன்று.  பற்றன் மனத்தால் நாடுவோன் ஆதலின், அவன் தன் மனத்துக்கண் தோன்றுவதையே  உண்மைப் பொருள் என்று கொள்வது அவன் காட்சிக்கு ஏற்புடைத்தாகலாம்.

ஒன்றுக்கு ஒன்றன் மேற்பட்ட பொருளிருந்தால் அவற்றுள்  ஒன்று பொய் 
என்கின்றான் ஒரு மேல்நாட்டு ஆய்வாளன்.  இது சரியன்று.  தலைவலி வந்தால் அதற்கு மருத்துவத்தில் ஒரு காரணம் என்று கூறமுடியாது.  அது பல காரணங்களால் எழலாம் என்பதுபோல்,  சொல்லிலும் பல காரணங்கள் ஏற்படலாம். ஒன்றுதான் வேண்டும் எனின் அதைக் கண்டுபிடிக்க முயலலாம். உலகில் மொழிகள் பல.  விநாயக வணக்கம், இந்தியாவிலும்  தாய்லாந்திலும் இந்தோனேசியாவிலும் தென் கிழக்காசியாவிலும் இருந்துள்ளபடியால்,  பொருண்மைகள் எல்லை கடந்துவந்துமிருக்கலாம் என்று அறிக.  ஒரு குறுகிய புட்டிவாயிலின்மேல் கட்டிப்பிடிக்கும் பருமன் உள்ள கல்லை நிறுத்திக்காட்டுபவன், வேறு நிலப்பகுதிகளிலும் உள்ளான். நம்பிக்கை இல்லாதவன் அதைச் செய்து காட்டினால் அதை அப்போது ஆராயலாம்.  பொருண்மை இரண்டிருந்தால்  இரண்டையும் ஏற்று அமையலாம்.  இரண்டு கடைகளில் சாப்பிட்டு சாம்பார் இருவ்கைச் சுவைதருமேல்,  ஒன்றை இன்றும் இன்னொன்றை அடுத்தநாளிலும் சாப்பிடலாம்.

பொருண்மைகள்:

சங்கதத்தில்:

லம்போதர.   இதை லம்போ + உதர என்று பிரித்து,  நெடிதான வயிறு உடைய   என்று உணர்த்துவர்.

விநாயகனுக்கு  ( வினை ஆய் அகன் > வினாயகன் )  ( வி + நாயகன் என்பது இன்னொன்று)   பெருவயிறு என்பது உருவவழிபாட்டு முறையில் அறியப்படுவது.  லம்போ உதர.  சங்கத எழுத்துக்களைப் பார்த்து ளகர இருப்பு இன்மை உணர்ந்த காலை இன்னும் சுவை ஆகுமே.   முதற்குறை என்பது தமிழிலக்கணத்தில் உள்ள எழுத்துச்சுருக்க வசதிதான். 

நீளம் என்ற சொல்லின் முதற்குறை இச்சொல்.  நீளம்போ >  லம்போ.   ல-வுக்கும்  ளவுக்கும்  மாற்றீடாக சங்கதத்தில் ல-   என்பதே (லகரமே) வரும்.. ஆனால் தமிழில்  மொழிமுதலாக ( சொன்முதலில்)  லகரம் வராது என்னும் இலக்கணதத்தால் இதை ஒன்று சங்கதச்சொல் எனவேண்டும்,  அல்லது தவற்று வீழ்ச்சி எனவேண்டும்.  முன்னதே கடைப்பிடித்தனர்.

இனி உதரம்.    முதுகுத் தண்டு பின்புறம்  அருகிலும்,  உடலின் முன்புறமாகவும் இருப்பது வயிறு.   ஆதலின்,  உது -  முன்புறமாகாவும்,  அரு - முதுகெலும்புக்கு  அருகிலும்  அம் - அமைந்திருப்பது  உதரம்.  ஆகவே வயிற்றுக்கு நல்ல பெயராய் அமைந்தது.  தமிழ்மூலங்களால் அமைந்த சொல் உதரம். சுட்டடியில் எழுந்தது.   அது, இது, உது என்பன சுட்டுச்சொற்கள்.  "போஉதர(ம்)"  தமிழ் வினைத்தொகைப் பாணி.   நீளம்போ உதரம்!!

தமிழில்:

இப்போது  லம்போதர என்பதை  இரண்டாம் (தமிழ்) முறையில் பார்க்கலாம்.
லம்  என்பது  இல் + அம் .  இலம்பாடு என்பது போல.  இலம்பாடு என்பது  வறுமை.

இலம் போது என்றால்  இல்லாத காலம் .  இன்மை, வறுமை.

அற -  இல்லாமல்.

இலம்போதற  -  இலம்போதர:   வறுமைத் துன்பமில்லாமல்.   றகரத்துக்கு ரகரம்.

வறுமை என்னும் துன்பம் இல்லாத  (  தினமும் கொழுக்கட்டை கிடைக்கிற என்றும்  வைத்துக்கொள்ளலாம்.).  யாருக்கும் வறுமையைக் கொடுக்காத,  வளம் தருகிற என்றெல்லாம் கொள்ளலாம்.

வயிறு நீண்டவன் என்பதினும் வளமெலாம் தருகிறவன் என்பது ஆன்மிகத்துக்கு மேலும் உகந்தநிலை.  எல்லாம் நன்று  என்றும்  ஏற்றுக்கொள்ள இயலும். 

விண்ணில் நாற்றிசையிலும் உள்ள இடங்கள்,   கண் - இடம்,   கணம்   ( கண்+அம் >  ~: திசையாமிடங்கள்.)  விண் என்பது ஐம்பூதங்களில் ஒன்று. விண்டிசைக் காவலன் தான் விநாயகன் - வினாயகன்.  கணங்களில் அதிபதி,  ஆதலின் கணபதி.  பூமண்டலத்தினுள் கேடுறுத்தும் யாதும் வந்துவிடாமல் காக்கும் இயற்கை ஆற்றல். இந்த இயற்கையுண்மையில் அறியப்பட்ட தெய்வத்திருவே கணபதி. இயற்கையன்னையின் மறுவிளக்கமே நம் மதம் அல்லது கொள்கை.  சூரியன்,  சந்திரன் முதலியன இயற்கைத் தேவர்கள்.  ஆகவே எந்தக் கற்பனையும் இல்லை.  இவற்றினை வணங்குமுறைகளை  நெறிப்படுத்தியே கொள்கை அமைந்தது காண்க.  விண்ணனோ நீரைக் குடிக்கிறான்.  நெருப்பைக் கக்குகிறான்.  எல்லாம் நடக்கிறது.  அவன்- அவள் பெருமூச்சு ஒரு புயல்.  எல்லாம் இல்லை இல்லை என்று பழித்தாலும், துருக்கியில் ஆட்டம் கண்டபோது -  இயற்கை அன்னை கூத்தாடியபோது செத்துக்கிடப்பது தவிர மாற்றொன்று உண்டோ?  அலையாகவும் வருகிறாள், கலையாகவும் வருகிறாள் அன்னை.  நீ என்பது இல்லை என்றே அடங்குவது நன்று.
அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்.


சனி, 18 பிப்ரவரி, 2023

சிபாரிசு என்ன சொல்?

 சிபாரிசு என்ற சொல்லை இப்போது பார்ப்போம்.  இதைச் சிற்றூரார் "சிவாரிசு" என்று திரித்து ஒலிப்பர்.  இது யாது என்று சொல்லாராய்ச்சியாளனை இது மருட்டும், பிற மொழியோ என்று மயங்கச் செய்யும்.

இங்குச் சி  என்ற ஒற்றை எழுத்தாய் இருப்பது " சீர் " என்ற  சொல்லேதான்.

சீர் அரங்கம் என்பது சீரங்கம் ஆனது காண்க.  மரூஉ.

அடுத்து  " பார் " என்ற சொல் வருகிறது.

கடைப்பாகம் : இது  என்பதன்றி வேறில்லை. தகர வருக்கம் சகர வருக்கமாகும்.  அதன்படி,  இது என்பது இசு  என்றாகிவிட்டது. தனிச்சிறப்புடைய காரி,  தனி- சனி என்றானது போலுமே. கோள்களில் ஈசுவரப் பட்டமுடையது சனி.

எழுத்துக்கள் சொல்லியன்முறையில் திரிந்துள்ளன.

"சீர்பாரிது!"  என்பது சிபாரிசு ஆனது.  சிவ்வாரிசு  என்று திரித்துச் சொல்வார்கள்.   ஓர் ஓலையில் நல்லதொன்றிருந்தால், அடுத்தவரிடம் குறிப்பாக எழுதியனுப்ப : " சீர் பார் இது" என்பது இனிய வேண்டுகோள் ஆகும்.

இது உண்மையில் ஒரு வாக்கியத்தின் மரூஉ   ஆகும்.  இற்றைச் சொல் : பரிந்துரை.

சீர்ச்சை என்ற சொல் மறைந்து  சிகிச்சை என்றானது போலும் ஒரு திரிபு இது.  ஆனால் சீர்ச்சை என்பது வாக்கியம் அன்று.  ஒரு சொல்;  சை என்பது  விகுதி.

இதையும் வாக்கியம் ஆக்கலாம்:  சீர்செய் > சீர்ச்செய்> சிகிச்சை. என்று. செய் என்பதை முதனிலைப் பெயர் என்னலாம்.  ஒரு வினைச்சொல்லின் பகுதியே நின்று பெயரானது.  தண்செய் > தஞ்சை என்பதும் இத்தகையதே.  இதில் செய் என்ற வினைச்சொல் நிலங்குறித்துப்பெயரானது. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

வியாழன், 16 பிப்ரவரி, 2023

"பகு" என்ற தமிழ்ச்சொல்லின் உருவாக்கம், மற்றும் "ப்ளஸ்" (இலத்தீன்)

 இதனை ஒருவகையில்  உணர்ந்துகொள்ளலாம்.

ஒருவகையிலன்றி, இன்னொரு வகையிலும் உணர்ந்துகொள்ளலாம்.  அல்லது ஒன்று என்ற வகையிலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளிலும் உணர்ந்துகொள்ளலாம்.

பல்  என்பது  பல என்னும் பொருளதாம்.

இதனுடன் "கு: என்ற விகுதி,   -   இது ஒரு வினையாக்க விகுதி --  கொண்டு சேர்க்கலாம்.

ஆகவே,  பல் + கு >  பல்கு ஆகிறது.   ~தல் என்ற தொழிற்பெயர்விகுதி  சேர்ப்பின், பல்குதல் ஆகிவிடும்.  பல்  என்பதே அடிச்சொல். 

இப்போது,   பல்குதல் என்பதை  மேல் சொன்னதைப்போல்,  பிரிக்கவும் செய்யாமல் சேர்க்கவும் செய்யாமல்,  முழுச்சொல்லாகக் கொண்டு,  ஆராய்வோம்.  

பல்குதல்,  இதில் லகர ஒற்றை எடுத்துவிட்டால்  ( எடுத்துவிட்டால் என்றால் ஒலிக்காமல் விட்டுவிட்டால் ) ,  அது பகுதல்  ஆகிவிடும்.  அவ்வாறானால்,  பகுதல் என்பது ஓர் இடைக்குறை.  இவ்வாறு கருதுவது சரியானால்,  பல்குதல் எனற்பாலது இடைவிரி  ஆகிவிடும்.

ஆகவே நாம் எவ்வாறு கருதிக்கொண்டு ஒரு சொல்லைப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே,  ஒன்று இடைக்குறையாகவோ,  இடைவிரியாகவோ நமக்குத் தெரிகிறது.

பல்குதலென்பதும் பகுதல் என்பதும் ஒன்றுதான்.

பகுதல் என்பதில் கு என்பது  ~கு என்ற வினையாக்க விகுதியானல்,  ப -   என்பதே  அடியாகும். ( கு என்பது வேற்றுமை உருபும் ஆம்.)

மொழி தோன்றிய ஆதிமனிதனின் காலத்தில்,   ப என்பது  ஒன்று ஓர் உருவினதாக இருத்தலினின்று வளர்வதையும்  அதுவன்றி ஒன்றிலிருந்து வெட்டுண்டு ஒன்றுக்கு மேற்பட்டு உருக்கொண்டு தோன்றுவதையும் ஒருங்கு குறித்திருந்தது என்பது தெளிவாகிறது.

இது மொழியில் கருத்துகள் வளர்ச்சி பெற்றதைக் காட்டுகிறது..

கருத்துக் குறுக்கம் பின் பெருக்கம் ஆவதே வளர்ச்சி.

~us  என்பது இலத்தீன் மொழியில் ஒரு விகுதி.

பல் ( அடிச்சொல்)  >   பல் + us >  plus   (ஒன்று பலவாவது அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாவது),  அல்லது ( ஒன்றுடன் இன்னொன்று கூடுவது அல்லது சேர்வது)  ஆகிய இரண்டுக்கும் பொதுவானதாகிய கருத்து  ஆகும்.

 அது =  அஸ்.

து என்பது சு  ஆகும்.  த- ச போலி.

சு என்பது ஸ்  ஆகும்.

எனவே,  சு என்பது ஸ் ஆனது நிறுவப்பட்டது.

ஒரு மரத்துண்டு நீண்டிருந்து சப்பட்டையாகவும்  இருந்தால் அது "பலகை" என்று பெயர்பெறுகிறது.

இது ஒரு துண்டு ஒன்றாக இருந்து நீள்வதையும்  இரண்டாகவோ அல்லது அதனின் மேற்பட்டிருத்தலையும் குறிக்கும்.

பல் > பல்+ அ +கை(விகுதி) > பலகை.

அ என்பது அங்கு நீள்தலையும் அல்லது இடைநிலையையும் குறிக்கும்.

அ என்பது சுட்டடிப் பொருளையும் தரவல்லது.



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிடி என்பது.

 பகிடி என்ற தமிழ்ச்சொல்லில்  அடிச்சொல்லாயிருப்பது  பகு என்ற சொல்தான்.

பகிடி செய்ய விழையும் ஒருவன், தன் முன் இருப்போர்களில் ஒருவனையோ அதனின் மேற்பட்ட எண்ணிக்கையினரையோ தனியே பகுத்து,  நகைவிளைக்கும் எதனையும் கூறி  தாழ்வுரைத்தல் செய்தலை அறிந்திருப்பீர்கள்.  இதனால்தான் இச்சொல் பகுத்தலினடியாகத் தோன்றியுள்ளது.

பகு+  இடி என்ற இரு சொற்களின் கூட்டில் விளைந்ததே பகிடி யாகும்.

பகிஷ்கரித்தல் என்பதும் இதன் தொடர்பில் விளைந்த சொல்லே  ஆகும்.

இதை மேலும் விரிவாக அறிய இதையும் வாசிக்கவும்:

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_11.html 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

புதன், 15 பிப்ரவரி, 2023

ஆட்சேபம்

  இன்று ஆட்சேபம் என்ற சொல்லமைந்த விதத்தை அறிந்துகொள்வோம். இது ஓர் இனிய தமிழ்ச்சொல் ஆகும்.


இந்தச் சொல்லை ஆராய்ந்தால், மன்னர்கள் படைக்கு ஆட்சேர்க்குங்கால்,  மக்களிடையே ஒரு வித எதிர்ப்புணர்வு தோன்றி இம்முயற்சிக்கு எதிராக நின்றமை அறியலாகும். தப்புவதற்கு எளிதான முறை யாதென்றால், சேர்க்க வருகிறவர்கள் அறிமுகம் இல்லாதவர்களாய் இருப்பின், தேடமாட்டார்கள் என்ற தெளிவினால், ஓடிப்போவதுதான். இன்றும் கூட தடுப்பூசி போடவருகிறவர்களைச் சந்திக்காமல் ஓடிப்போகும் சிற்றூர்வாசிகளும் இருக்கிறார்கள். அகப்பட்டபின் சேரமுடியாது என்பவர்கள்  துன்புறுத்தப்படுவதுண்டு என்றும் தெரிகிறது.


இந்நடப்பிலிருந்து " ஆட்சேர்ப்பு"  >  ஆட்சேர்ப்பம் >  ஆட்சேபம் என்ற சொல் அமைகிறது.


ரகர ஒற்றுக்கள் மறைவது இயல்பு. வருகிறார்கள் என்பது வாராங்க என்று மாறிவிடுவதிலிருந்தே இதை உணர்ந்துகொள்ளலாம்.  ~றார்கள் என்பது ~ராங்க  என்று மாறிவிடுகிறாது.  அது இன்னும் திரிந்து  ~ராக என்றுமாகிறது.  ~ராவ என்பதை ஒட்டியும் திரியும்.  வரு என்பது வர் என்று வரண்டுவிடுதல் காண்க.


திரிதல்   " இயல்பாக" நடைபெறுவது.  ஆகவே,   சேர்ப்பம் என்பது சேபம் என்றும் திரியும்.  இஃது இடைக்குறைதான். இது மறுப்பு என்ற பொருளைத் தருவதால்,  பொருள்திரிபும் ஆகும்.


அறிக மகிழ்க..

மெய்ப்பு பின்னர்.

Broadband disruption

 Cannot upload any post. Broadband problem 

Anyway ,  had a pneumonia VAX. Resting.

திங்கள், 6 பிப்ரவரி, 2023

லியா குழந்தையின் புன்னகை

 

k


 அகலிட அறையில்  அழகிய சாயணை

இருக்கையில் வைத்தால் எத்துணை இதமோ?

பகலிலும் இரவிலும்  பன்முறை  முகிழ்க்கும்

நகையோ  புன்னகை நலமிக வளர்க.


You  feel not  lonely  in recline!

In happiness you unfold a smile.

Your dogs' absence you do not mind,

Your delight is long,  a mile!


Happy New Year Leah from Blog Sivamala.

Notes  


Photo from Mrs Roshini Kuzhanthai.


உரை:-
அகலிட அறையில் அழகிய சாய்அணை  ---- அகன்ற இடமுள்ள அறையில் காண்பதற்கினிய சாய்வான படுக்கை.

இருக்கையில் வைத்தால் எத்துணை இதமோ? --  கிடத்தும் இடத்தில் உன்னை உட்கார வைத்தால் எவ்வளவு விரும்பத்தக்கதாய் உனக்கு இருக்கின்றதோ?

பகலிலும் இரவிலும் பன்முறை முகிழ்க்கும்   -  பகலாயினும் இரவாயினும் பல முறை தோன்றுகின்ற;

நகையோ புன்னகை நலமிக வளர்க. -  ( நீ உதிர்க்கும்)  சிரிப்போ,  ஒரு இளஞ்சிரிப்பே  ஆகும். அல்லது மென்னகையே ஆகும்.

வளர்க ---   இவ்வாறே நீ வளர்ந்து பெரியவளாக வேண்டும் என்றவாறு.

சாயணை என்பது வினைத்தொகை.  வினைத்தொகை என்பது ஓர் இலக்கணக் குறியீடு.  ( a term in Tamil grammar).

எத்துணை   -    to what extent.

இது நேரசைகள் அருகிவந்த பாடல்.  


You  feel not  lonely  in recline!  -  means you do not feel lonely when reclining.

Feel not is usually found in  Old English.  Biblical style English is similar.

"Your dogs absent" means your dogs are absent. Are is missing.  As this is more conversational and Singlish style, this is changed now.

" a mile" is in apposition to the preceding sentence.  Apposition is a grammatical construction in which phrases etc stand by side. More useful in poetry.

So much for grammar.

Thank you.













பிற்பாடு தெரிந்த பண்புநலன்.

 அடிக்கடி அக்காள் வீட்டுக்கு போய்வருவேன்.  அப்போது அக்கள்,    வீட்டிலிருக்கும் பலகாரங்களுடன் கொழுந்து ( தே)  நீரும் தருவாள். நான் போவது பெரும்பாலும் சம்பளநாள் முடிந்து மறுநாளாகவோ அதற்கு அடுத்த நாளாகவோ இருக்கும். கால்வாசிச் சம்பளத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். அதை அவள் புருடன்1 வாங்கி,  மதுவை அருந்தி மகிழ்வதாகத் தெரிந்தது.  நான் பார்க்கவில்லை.

அப்பால் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில்  ஒரு  நண்பர் எதிரில் வந்தார்.  அவர்பெயர் சுப்ரத்.    சுப்ரத் என்ன உன் அக்காளைப் போய்ப் பார்க்கவில்லையா என்று கேட்டார்.  இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன் என்று அவரைத் தேற்றினேன்.  அவர் சொந்த அக்காளைப் பற்றிய கவலையைத் தீர்த்துகொள்வது போல பின் எல்லாவற்றையும் கேட்டறிந்துகொண்டார் சுப்ரத்  (  சுப்புரத்தினம்).

பின்பு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.  வீட்டிலுள்ள வேலைக்காரி,   செடிச்சட்டியில் இருந்த நீரில் கொசு வளர்ந்துகொண்டிருந்ததைக் கவனிக்காமல் விட்டுவிட்டதால்,  அரசுக்குத் தண்டம் கட்டவேண்டி வந்துவிட்டது.  300 வெள்ளி  அதில் போய்விட்டது.   அப்புறம்  எனக்கும் மருத்துவரைப் பார்க்க வேண்டி ஏற்பட்டு   அதில் ஒரு  $120  .(வெள்ளி)  போகவே,  அக்காளுக்கு எந்தத்  தொகையும் கொடுக்க முடியாமல் போய்விட்டது.   அக்காள் புருடன்,  மதுவருந்தக் கிட்டும் தொகையில் குறைவு ஏற்பட்டுவிட்டது.  அக்காள் வீட்டில் சண்டை என்று செவிகளுக்கு எட்டியது.

சில நாட்களில் தெருவில் போய்க்கொண்டிருந்த போது முன் பார்த்த அவரே எதிரில் வந்துகொண்டிருந்தார்.  வாழ்த்து வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டபின்,  அக்காள் வீட்டுக்குப் போய்க் கவனித்தாயா என்றுகேட்டார்.  உன் அக்காவைப் போய்ப் பார்,  போகாமல் இருக்காதே என்று  மென்மையான எச்சரிக்கை செய்தார்.  அதிக வேலைகளாக இருந்ததால் அடுத்தமாதம் தான் போகவேண்டும் என்று சொல்லிப் புறப்பட்டேன்.

இவரும் என் அக்காள் புருடனும் ஒரே இடத்தில் வேலை செய்வதால், இருவரும் நண்பர்கள். ஒன்றாக மதுவருந்தும் அளவுக்கு நெருக்கம்.  இதை ஒரு மூன்றாமவரிடமிருந்து  ஒருநாள் தெரிந்துகொண்டேன்.   அக்காள் வீட்டுக்குப் போய்ப் பார்த்தாயா என்று அவர் கேட்பதில் " அர்த்தம் "2 இருக்கிறதல்லவா? ஆனால் இது முதலில் எனக்குப் புரியவில்லை.   இதை ஒருவர் சொன்னபின்தான் அதுவும் எனக்குப் புரிந்தது.


பின்னுரை: 

மேல உள்ள எண்களைப் பின்பற்றிய உரை.  இதை அடிக்குறிப்பு என்பர்.  ஆங்கிலத்தில் footnote.(s)

1புருடன் - புருவம் போன்றவன்.  கண்போன்றவன் என்ற பொருளில் வரும் சொல் கணவன். ( கண் அவன் >  கண்ணவன்> கணவன் என்பது இடைக்குறை3) 

2 அர்த்தம் -  இச்சொல்லைப் பெரும்பாலும் அருத்தம் என்றுதான் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.  அருந்து -  அருத்தம். இதேபோல் பொருந்து - பொருத்தம்.  அருத்தம் -  அர்த்தம்.   சொற்கள் பொருளை அருந்திக்கொள்கின்றன.  Meanings are fed into words.  அதனால் அருத்தம் என்பது பொருள் என்று புரிந்துகொள்ளல் வேண்டும்.  அருந்து >  அருத்து;  இது ஒரு பிறவினைச் சொல்.  பொருத்து , இருத்து என்பன போல.

3 இடைக்குறை.   இதுவும் தொகுத்தல் என்பதும் இங்கு வேறுவேறாகக் கருதப்படமாட்டா/[து].  நன்னூல் முதலிய இலக்கணநூல்கள் வேறுபடுத்தும்.. இலக்கண மாணவர்கள் அதுவே தொடர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

கடைச் சாப்பாடு முடிந்தால் தவிர்

 கடைகளில்  சாப்பிடும்  போது-----  தம்பி,

கையுடன் கண்களும் நன்றாய்,

இடையிடை வைத்திடும்  உணவில் ---- நெடுங்

கவனமும்  கொண்டிட   வேண்டும்.


பூச்சிகள் வண்டுகள்  இருக்கும் ----  நோய்கள்

புசித்தபின்  போர்தரும்  உடலில்;

காய்ச்சல் தலைவலி  வாந்தி  --- எனக்

கண்டவை வந்துனைத் தாக்கும்.


வருமுன் காப்பதே  மேன்மை --- இன்றேல்

வந்தபின் பயன்சிறு பான்மை!

இருவளர்  காலம் காறும்  ---- உனக்கு

இல்லத்து உணவெனில் வான்மை.



வான்மை -  உயர்வு.

இருவளர்....... -  நீண்டகாலம், (வாழ்நாள்)

இன்றேல் -   இல்லாவிட்டால்

காறும்  -  வரை. (  வாழும் காலம் வரை என்பதுபோல் பொருள்)



இதை வாசித்து உணரவும்:

Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)


சனி, 4 பிப்ரவரி, 2023

திருடும் வழிகளும் தடுக்கும் முறைகளும்.

 ஒரு நாள் கோயிற் பூசையின் போது இலவசமாக வசதிகுறைந்த சிலருக்கு வழங்குவதற்காக வென்று அம்மன் அருகில் இருந்த மேசையில் வைத்திருந்த சேலைகள் சில காணாமற் போய்விட்டன  .   தேடிக் கிடைக்காததால் கொஞ்சம் காசுபோட்டு அதை ஏற்பாட்டாளர்களான யாமே வாங்கிக் கொடுக்க வேண்டிய தாயிற்று. கொஞ்சநேரம் கழித்து இடைவேளைபோல் கிடைத்தபோது,  தலைமை தாங்கிய ஐயர் வந்தார்.  "திரைக்கவி பாடிய  :  "திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்ற வரிகளை வாய்மொழிந்து , என்ன செய்யமுடியும் என்ற ஏக்கத்தை முன்மொழிந்தார்.  யாமும் காசு எப்படி யெல்லாம் நம்மை விட்டு ஓடிப்போகிறது என்று கவன்றவா றிருந்தோம்.  தவறாமற் கண்டுபிடித்துச் சொல்லும் திறந்தெரி சோதிடர்கள் அருகிலே இருத்தப் பட்டிருந்தால்,  ஒருவேளை இத்திருட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

"கூடுவிட்டு ஆவிதான் போனபின்னே யாரே அனுபவிப்பார், பாவிகாள் அந்தப் பணம்"  என்று ஒளவைப் பாட்டி சொன்னதைக் கேட்டு,  இலக்கிய நயம் தோய்ந்த யாரும்,  இன்னொரு முறை அந்தச் சேலைகளை வாங்கிக் கொடுக்காமலிருக்க,  இயல்வதில்லை.  கோவிட்  என்னும் இந்தத் தொற்றுவளர் காலக்கட்டத்தில்,  பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே திருட்டுகள் மிகுவது இயல்பு என்னலாம்.  வேலையில்லாமற் போய் வீட்டிலிருந்துகொண்டு காய்ந்த உரொட்டியுடன் காலை உணவை முடித்துக்கொள்ளும் இரங்கத்தக்கோர்,  இதைச் செய்துவிட்டனர் என்று நினைப்பதை விட்டு,  கண்டிக்கப்படாமல் வளர்க்கபட்டு, பழக்கத்திருட்டில் ஈடுபடும் அறத்திறம் வேர்க்கொள்ளாத மாக்களில் ஒருவர் இதனைத் செய்திருக்கவேண்டும், என்பதே சரியாக இருக்கும். 

மருந்தகத்தில் மாத்திரைகள் புதியன வந்தவுடன் அவற்றைக் கேட்பவர்க்கு விற்காமல்,  இதை எவ்வாளவு நாளாக உண்கிறாய், நன்மை ஏதும் கண்டாயா என்று கேட்டுத் தடுமாற விட்டு, காலக்கடப்பினால் அவை அப்புறப்படுத்தப் பட்ட பின்னர் எறியப்படுங்காலை மறைமுகச் சந்தையில் யாரும் வெளிக்காணாத தருணத்தில் விட்டெறியும் விலையில் விற்றுக்கொஞ்சம் கிட்டுமானால்,  அதனாற் பிழைப்பவர்களும் உலகில் இல்லை என்று கூறிவிடமுடியாது.  பிழைப்பு என்பதும் பலதிறப்பட்டது.  பிழைபடு வழிச்செல்வோரும் நன்கு பிழைக்க வழியுள்ளது,  பிழையஞ்சுவார் வாடவும் நேர்தலுண்டு.

திருட்டை ஒழிக்க முயன்ற வரலாற்றின் முதற் பேரரசன்,  ஹம்முராபி என்னும் மத்தியக் கிழக்கினன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அந்தக் காலத்தில் சட்ட நூல்கள் என்று தனியாக யாதும் இல்லை.  ஹம்முராபி, பெரும்கற்பலகைகளில் எழுதி,  யாவரும் காண பலர் நடமாடும் இடங்களில் வைத்துத் திருட்டினைக் கண்டித்தான். பழங்காலத்தில் சட்டம் என்று சொல்லத்தக்கவை, அறநூல்களின் இதழ்களில் பிணைந்திருக்கும்.. மனுவின் சாத்திரம்,  சட்டம் எனத்தகும் முதனூல் என்னலாம். குற்றவியற் சட்டமும்,  மன்பதைச் சட்டமும் ( வாழ்வியல் விதிகள் ) இன்னபிறவும் கலந்துறையும் நூல்கள் இது போல்வன.

எப்படி எப்படி எல்லாம் திருடலாம் என்று கூறும் நூல் யாரும் தனியாக எழுதியதாகத் தெரியவில்லை.   தடுக்கும் முறைகள் பற்றிய நூல்களிலிருந்து அவற்றை அறிந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் திருடனிடமிருந்து நேராகத் தெரிந்து இன்புறலாம்.  திருட்டு நிகழ்வுகளை  அவை அறியவைக்கும்.  இந்தச் செய்தியைப்  படித்து  சிறிது அறிந்துகொள்ளுங்கள்.

இங்குச் சொடுக்கவும்:-

Woman claims she found cockroach in curry rice at Yishun eatery (msn.com)

விடுமுறைக்குப் போகிறீர்கள்?   வீட்டிலிருக்க முடியாமல். உங்களுக்குப் பாடம் இதோ!

‘Taking a Rolex on a trip like that is asking for it,’ netizens tell actor whose cash & watch worth $20K were stolen in Phuket - Singapore News (theindependent.sg)


நீங்கள் கடிகாரம் அணிந்த உடன், உங்களுக்கு ஒரு பாட்டு வேணுமா?


இன்றொரு நாள் போதுமா?  ---ரோலக்ஸ்சுக்கு

இன்றொரு நாள் போதுமா-  கையில் கடி காரத்துக்கு

இன்றொரு நாள்  போதுமா---- நாளைத் திருட்டுக்கு

எனக்கிது தோதம்மா!


என்று திருடன் பாடிக்கொண்டே வருவான்.


( இந்தச் செய்தியை வாசிக்க இந்தச் செய்திச்செருகலில் சொடுக்குங்கள் )


https://theindependent.sg/taking-a-rolex-on-a-trip-like-that-is-asking-for-it-netizens-tell-actor-whose-cash-watch-worth-20k-were-stolen-in-phuket/?

அறிக.

மெய்ப்பு  பின்