ஞாயிறு, 31 மே, 2020

18ம் பெற்றுச் சிங்கப்பூர் வாழ்க!


கொரனா நோய் குறைந்து நலம் சிறந்தமைக்கு வாழ்த்து.

ஏறு  முகம்கண்  டிருப்போர்  வதைத்த 
வீறு மிகுநோய் முடியுரு  நுண்மி
சீறு விரைவைச் சிதைத்தசிங் கப்பூர்
ஆறு உறழ்மூன் றனைத்தும் பெறுமே.


ஏறுமுகம் கண்டு ---  எண்ணிக்கையில் கூடிவந்து,
இருப்போர் வதைத்த --- குடிவாழ்நரைத் துன்புறுத்திய,
வீறு மிகுநோய் ---  உறுதியுடன்  பற்றுதிறமும் மிக்க நோயான
முடியுரு நுண்மி ---  கொரனா வைரஸ் நுண்மி,
சீறு விரைவை  ---- எதிர்த்துக் கிளம்பும் வேகத்தை,
சிதைத்த சிங்கப்பூர் --- தடுத்து மாற்றிய சிங்கப்பூர்,
ஆறு உறழ்மூன்று --- பதினெட்டுப் பேறுகளையும் (பாக்கியங்கள்),
அனைத்தும் பெறுமே --- எல்லாவற்றையும் பெற்று உயரும்.
முன் கூறிய 16 செல்வங்கள் ஒரு நாட்டுக்கு ஏற்ற
மாற்றங்களுடன் அமைவதுடன், நிலையான ஆட்சியையும்
ஊழலற்ற அமைச்சர் பெருமக்களையும் அடைந்து
ஓங்குக என்றவாறு.
என்று சிங்கையை வாழ்த்துகிறது இக்கவியின் வரிகள்.
வாசித்து மகிழ்வீர்.



சனி, 30 மே, 2020

மந்திரியும் மினிஸ்டரும்.

இதுகாலை நாம் மினிஸ்டர் என்ற ஆங்கிலச் சொல்லையும்
 மந்திரி என்ற தமிழையும் பற்றிச் சிறிது சிந்தித்து 
உரையாடுவோம்.

இப்போது கடைத்தெருவில் போய் "மினிஸ்டர்" என்ற 
சொல்லை நாம் பலுக்கினால் எல்லோரும் அரசில் மிகப்
பெரிய பதவியில் இருப்பவரைப் பற்றித்தான்  ஏதோ
சொல்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள். 
உண்மையும் அதுதான். ஆனால் இந்தச் சொல்
 " மைனர் " " மைனஸ்"என்ற சொல்லிலிருந்துதான்
 அமைந்தது என்பது, பலர் முன் படித்துஅறிந்திருந்
தாலும் அந்தச் சமயத்தில் அது நினைவுக்கு வராமல் 
போய்விடலாம்.   மந்திரி என்ற ஒருவர் நம் 
வட்டாரத்துக்குள் வருகின்றார் என்றவுடன், 
 அவருக்குப் பாதுகாப்புத் தருவதற்காக எத்தனை
காவலர்கள், மேலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முன்னர்
 வந்துஆங்கு நின்று பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்
கிறார்கள்? இவ்வளவும்பார்த்துவிட்ட நாம் அவரை 
மைனசுடனும் மைனருடனும் ( சிறு அகவையர்) தொடர்பு 
படுத்தமுடியுமா?

படிப்பு வேறு, நடப்பு வேறு. படித்ததெல்லாம் 
பயன்படுவதில்லை. என்னத்தைத்தான் 
படித்திருந்தாலும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி
ஓடவில்லை என்றால், நாம் தாளம்போட்டுக்கொண்டு 
காத்துக்கிடக்கவேண்டியுள்ளது.

1300வது ஆண்டு வாக்கில் அது கிறித்துவ மதப் பூசாரி
 ஒருவரின் உதவியாளரையே குறித்தது.  அப்போது இந்த
 "மினிஸ்டர்" என்றசொல்லுக்கு  பூசாரிக்குதவி என்றுதான் 
அர்த்தமாக இருந்தது. மக்கள் அப்போது "மினிஸ்ட"ரைப் 
பெரியவராகக் கருதவில்லை; உத்தரவுக்கு
உட்பட்ட கீழ்ப்பணியாளர் என்றுதான் நினைத்தனர். 
அதுவே அப்போது மினிஸ்டர் என்பதற்கு அர்த்தமாகும்.


பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் "மினிஸ்ற்றல்" 
என்ற பாடகர்கள்குறிக்கப்பட்டனர். மினிஸ்டர் என்பதும்  
மினிஸ்ற்றல் என்பதும் சொல்லமைப்புத் தொடர்பு உடையன 
என்று இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  
அந்தக் காலங்களில் பெரும்பாலான சிறிய உதவியாளர்கள்
 பூசைகளின் போது பாடிப்பாடி அருளோ மருளோ வரும்படி
 செய்து வணங்கி நின்றோரை அசத்தினர் என்பதே உண்மை.

உலகெங்கும் இறைப்பாடகர்கள் வாயிலின்முன் நின்று பாடி பொருளுதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.  தமிழில் முன்
 என்பது வேறு. மின் எனற்பாலது வேறாகும்.  ஆனாலும்
 பேச்சு வழக்கில் முன் என்பது பலரால் மின் என்று ஒலிக்கப்
பெறுகிறது.  வாழைப்பழமா? அந்தக் கடைக்குப் போங்க, அங்கே 
மின்னே தொங்கும் எனப்படுதலைக் கேட்டிருக்கலாம். 

மினிஸ்டர் என்பது ஆங்கிலத்துக்கு   Old French menistre என்பதிலிருந்து  வருகிறது.  அது இந்தோ ஐரோப்பிய
 மூலத்தில் மெய் என்பதிலிருந்து புறப்பட்டதாம். இதன் 
மூலப்பொருள் சிறியது,  சிறுமை என்பதாம்.  தமிழில் மெய்
 என்பது உடல் என்று பொருள்தரும்.  உடல் என்பதோ சிறியது.
   இது சின்மெய் ( சின்னதான மெய் அல்லது உடல் ) என்பதனுடன்
 உறவு கொண்டது.  இரண்டு மயங்கள் உண்டு. ஒன்று  அகண்ட 
மயம் அல்லது மையம். இன்னொன்று சின்னதான உடல்
 என்னும் மையம் அல்லது மயம். (சின்மயம் ). உடல் 
சிறிதானால் அதன் அகத்துப் பெரிதாய் இலங்குவது  எது?
  அது அகண்ட பெருவெளியில் உள்ள பெரியோனுடன் ஒரு 
தன்மையினது ஆகும்.  எவ்வாறாயினும், அகத்து
இருப்பது பெரிது.  அகத்து மா - உள்ளில் உடலினும் பெரியது.  
 அகத்துமா > ஆத்துமா. ( ஒ.நோ:  அகத்துக்காரி > ஆத்துக்காரி ). 
 இந்த அகத்துள் இருக்கும்  பெரியது மிக்க அகன்றது.  எல்லையற்ற அகல்வுடன் ஒருதன்மையது. ஆகவே உண்மையில் அது 
அகல்+ மா = அகன்மா>  ஆன்மா ஆகும்.  (  அகல் மரம் > ஆல் மரம் >  ஆலமரம்.  அங்கு அமர்ந்திருப்பார் ஆலமர் கடவுள் ).

சிறிதான இம்மெய்யை சிறிதென்றே இந்தோ ஐரோப்பியம் 
கூறுவது,  பழுதான் மெய்யைப் பழுதென்றே தமிழ் பெயரிட்டது
 போலுமே ஆகும்  பழுது என்பதன் இன்னொரு பொருள் இம் மெய்.

வீட்டின் முன் நின்று பாடிப் பெறுபவர் மினிஸ்ற்றல்.   
மின் நிற்றலும் (  அதாவது ) :  முன் நிற்றல் > மின்நிற்றல் > : ~  
மின்நிற்றலில் பாடிச் சேவை செய்பவர்.  சிறியவர்.

சிறியாருலகிலிருந்து பெரியவரானவர்தான் மினிஸ்டர் 
என்னும் மந்திரி.

எதிலிருந்து எது வந்தது நாம் சொல்லவில்லை.  பெரியது எது? 
சிறியது எது?சிறியதே பெரியதானதே என்பதுதான்,


இதையும் வாசிக்க விரும்பக்கூடும்:

https://sivamaalaa.blogspot.com/2016/02/murder.html    : போற்றியும் பூசாரியும்.


உடல்நலம் காக்க.
முகக்கவசம் அணிக. இடைவெளி போற்றுக.

நலமுண்டாகுக


தட்டச்சுப் பிறழ்ச்சிகள் திருத்தம் பின்..

வெள்ளி, 29 மே, 2020

ஓச்சர் என்ற சாதிப்பெயர்

இச்சொல்லின் பிறப்பை அறிதல் இயல்பே.

ஓச்சர் என்போர் பூசாரிகள். இச்சொல் உவச்சர் என்றும்
வழங்கும்.


ஓச்சம் என்பது பதிற்றுப்பத்து  (வெவ்வர் ஓச்சம் பெருக...41.20)
 முதலிய நூல்களில் காணப்படுகின்றது. இது ஓங்குதல் என்ற
சொல்லுடன் தொடர்புடைய சொல்லே.

ஓச்சம் - உயர்வு.

செங்கோல் ஓச்சுதல் என்ற வழக்கும் உளது.


உவ என்பது முன்னிருத்தல் என்னும் பொருள் உடையதாதலின்
உவ + சு + அர் = உவச்சர் என்று அமையும்.  சு விகுதி.  அர் என்பது
பலர்பால் விகுதி.

உவ + அச்சர்  என்று பிரித்து,   முன்னிருக்கும் தந்தையர் என்றும்
பொருள்கூறுதல் பொருந்துவதே ஆகும். அப்பன் - அச்சன் - அத்தன்
என்பன சொற்போலிகள்.

புதன், 27 மே, 2020

இன்று ஐந்நூற்று முப்பத்து மூன்று.

சிங்கப்பூர் நிலையை உன்னிப்
பாடிய எண்சீர் விருத்தம்.




இன்றுமட்டும் ஐந்நூற்று முப்பத்து மூன்றாம்
இணையற்ற நல்லோர்க்கு முடியுருவித் தொற்று.

என்றுமுற்றும்  பின்மீண்டிங் கில்லையென வாகும்
இனிதான நன்னிலையாம் தனியின்ப முற்று.

கொன்றுகுவித் துப்புவியின் மக்கள்பெரு வாழ்வைக்
கூழாக்கி மாய்த்திட்ட பாழான கொல்லி

என்றுமிருந்  திட்டதிலை என்பேனே வேண்டாம்
எளியோர்க்கே இதுதந்த எய்த்துழல்வை உள்ளி.




பதப்பொருள்

சொல்லில்தான் பொருளானது பதிந்துள்ளது.
அதனால் அது பதமெனப் பட்டது.

பதி  + அம் = பதம்.
தி  என்பதில் உள்ள இகரம் கெட்டது ( மறைந்தது).
அம் என்பது அமைவு, அமைப்பு என்பன குறிக்கும் விகுதி.
மிகுந்து பொருள்கூட்டுவது விகுதி.  மிகுதி> விகுதி.
மிஞ்சு > விஞ்சு என்பது போலும் திரிபு.

முடியுருவி( னி ) -  முடியின் உருவில் அமைந்த கொரனா
(கோவிட்19) நோய்நுண்மி, (வைரஸ்)

முற்றும் -  தீரும்.

பின்மீண்டிங்கு - இனிமேல் இங்கு

கூழாக்கி - திடத்தன்மை நீக்கிக் குழைவு  ஆக்கி

கொல்லி -  கொன்றிடுதலை நோக்கமாகக் கொண்டது.

என்றுமிருந்  திட்டதிலை - முன் அறியாத ஒன்று.

எய்த்துழல்வு -  துன்பநிலை.


நோயிலிருந்து தப்பும் வழிகளை விடாப்பிடியாகப்
பின்பற்றுங்கள். அரசு ஓரளவுதான் உதவமுடியும்.

இதோ இன்னொரு கவி உங்களுக்கு:

விடுதிகள் தங்குவோர் விட்டிலர் தாம்தமக்குள்
இடைவெளி  அன்னதால் இத்துணை நோய்ச்சீற்றம்
படுதுயர் கேட்டவர் பாகினைப்  போலுருகக்
கடினமே நாட்டிலிக் காலம் செயலறியோம்.


இது அடிதோறும் வெண்டளையாகவும் அல்லாதவிடத்து
வேற்றுத்தளையாலும்  அளவடிகளால்  புனையப்பெற்ற பாடல்.


பதப்பொருள்

விட்டிலர் - விடவில்லை.
அன்னதால் - அதனைப்போல் காரணங்களால்
படுதுயர் - படும்துயர்.
செயலறியோம் - என்ன செய்யலாம் என்று தெரியவில்லை.
கடினமே - கடுமையான நிலையே.

தட்டச்சுப் பிறழ்ச்சிகள் பின் சரிசெய்யப்படும்
இப்போது எதுவும் காணப்படவில்லை.
இன்று இடுகை புதுமுகத்துடன் வருகிறது
என்று அறிகிறோம். மென்பொருட் பின்னடைவுகள்
இருந்தால் பின்னூட்டம் இடுக, அல்லது
மின்னஞ்சல் அனுப்புக.

நன்றி. வணக்கம்.






செவ்வாய், 26 மே, 2020

நீண்ட கருத்தைக் குறுக்கிச் சொல்லாக்கும் தந்திரம்.

பல சொற்கள் பல நீண்ட கருத்துகளை உள்ளடக்கியவை.
இவை போல்வனவற்றைக்  குறுக்கி ஒரு சொன்னீர்மை அவை 
பெறும்போது சில தொல்லைகள் விளைவதுண்டு என்பர். 
வகுப்புகளில் வாத்தியார்கள் மணாக்கருக்கு எளித்தாக்கி 
விளக்கும்போது "நாற்காலி" என்ற சொல்லை முன்வைப்பது
வழக்கம்.  "நாய்க்கும்தான் நாலு கால்கள்;  அது நாற்காலி 
ஆகுமா?"என்று வினா எழும். இதுபோன்ற சொற்களுக்கு  
அமைப்புக் காரணம் உண்டெனினும் காரணங்கள் ஓர் 
எல்லைக்குட்  பட்டவை. நாற்காலி நாயைப்போல் குரைக்காது.

நாய்க்குப் புதுப்பெயர்.

குரைத்தல்தான் மிக்க முன்மை வாய்ந்த கருத்து என்பதால்
அதைத் தவிர்த்து ஒரு புதுப்பெயரைச் சொல்லாக்கம் செய்ய 
இயலாது என்று ஒரு முடிவை எட்டிவிட்டால் நாயைக் 
குரைக்காலி என்றுதான் சுட்டவேண்டும்.ஆனால் பட்டினப்பாலை
பாடிய சங்கப் பெரும்புலவர் அதன் கூரிய நகமே முன்மைத்
தன்மை உடையது என்று சொல்வார் போலும்.

குரைக்காலி:   ஒரு புலவர் இங்கு "க்" மெய்
வரக்கூடாது என்பார்.  வினைத்தொகை வடிவில் "குரைகாலி"
என்றுதான் சுட்டவேண்டும் என்பார்.  சொல் அமைத்தவர் இது
வினைத்தொகை அன்று; முதனிலைத் தொழிற்பெயர் என்பார்.
தொழிற்பெயர் இன்னொரு சொல்லுடன் புணரும் பொழுது க்
வரலாம்.  இப்போதெல்லாம் இலக்கணம் என்பது ஒரு தனிப்
பாடமாக இல்லையென்பதால் பலருக்கு இது தொல்லையாவ
தில்லை..

நாய்க்குப் பின் உள்ள கருத்து

நாய் என்ற சொல்லில் காரணம் தெளிவாய் இருக்கிறது. 
நாயில் புறவுறுத்து* ஆவது கால் அல்ல.  அது நாவுதான். 
அது நாவைத் தொங்கவிட்டுத் திரியும் விலங்கு. நா > நாய். 
 அதனால் பெயர் சரியானது என்று வாதிடலாம். 
பழைய பெயர் ஞமலி. மலையாள
மொழியில் பட்டி. இதுவும் தமிழில் முன் வழங்கிய 
சொல்லாதலால் நிகண்டு அகரவரிசைகள் முதலியவற்றில்
 உள. இன்னும் தமிழில் குக்கல் (போலி : குக்கர்), 
தெலுங்கு: குக்கா. தமிழன் நாய் 
லொள்லொள் என்று குரைக்கிறதென்பான். சீனன் 
அது காவ்காவ் என்று குரைக்கிறது என்று நினைத்து
நாய்க்குக் காவ் என்று சொல்கிறான். அது 
பௌவௌ என்று குரைப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
நாம் சொல்லவருவது என்னவென்றால், நாய் என்பது 
ஒரு நீண்ட கருத்தை உள்ளடக்கி அமைந்த ஒரு சுருக்கமான
 சொல். நாவு > நாய்.இது மொழிநூலார் கருத்தாகும்.


கருத்தைக் குறுக்கி அமைத்த சொற்கள்

ப்போது இவ்வுலகில் இருந்த பலர் கொரனாவால்
இறந்துவிட்டனர். அத்துடன் கொசுக்கடிக் காய்ச்சலும் 
பன்றிக் காய்ச்சலும் ஆங்காங்கு  கலந்து உலவுகிறது.
கடைக்குப் போன இடத்தில் தொற்று ஏற்பட்டு எமக்கு
ஒருகண்ணில் வலியும் கொஞ்சம் ஏற்பட்டுள்ளது.  
மருத்துவரைப் போய்ப் பார்க்கவேண்டியதாயிற்று.
நோயில் வானுலகு சென்றோரை எண்ணி மனம் வருந்துகிறது.
இங்கிருந்து நீங்கியவர்கள் என்ற பொருளில் ஒரு சொல்லை 
அமைக்கவேண்டும் என்று எண்ணினேம். அதற்குமுன் அதே
காரணத்திற்காக முன் நம் மூதாதையர் அமைத்த ஒரு சொல்
நினைவுக்கு வந்தது.  அப்படியாகவே, அந்தச் சொல்லை இங்கு
வழங்கி மனத்தா  னினிது அமையலாகுமென்ற  ஒரு முடிவை
எட்டி அமைகின்றனம்.

சொல்: இலேகர்.
தமிழ்ச்சொல் தான்.  எப்படி?
இல் =  இடம்.  (கண்ணில், மண்ணில் :   இல் இடம் 
குறிக்கும்). ஏகு = எங்கோ  போதல்,  நீங்குதல்.
அர் =  அவர்கள்.  (படர்க்கைச் சொல்.  அ+ அர் = அவர், வ்
என்பது வகர உடம்படு மெய், அவர் என்பதில் இரண்டு 
அகரச் சுட்டுகள் உள்ளன. அத்தனை தேவை
இல்லை என்றாலும் சொல்லமைப்பில் இன்னொரு
 சொல்லை அமைக்கச் சேர்த்துக்கொண்டு " அவர் " 
என்பதில் தவறில்லை. மொழிவளர்ச்சிக்குச் சில 
விலக்குகள் வேண்டும்.

இலேகர் என்ற சொல் இங்கிருந்து போய் விட்டவர்கள் 
என்ற கருத்தைச் சுருக்கி  ஒரு சொல்லாக அமைகிறது,
என்னே மொழியழகு.

எ ( எங்கு) + கு ( சேர்விடம்)  = ஏகு (வினையாக்கம்) > ஏகுதல்.
எங்காவது போய்ச் சேர்வது அர்த்தம்,   எ என்னும் வினாச்
சுட்டின்'  முன் வடிவம் ஏ தான்.


ஒரு திரைக்கவியாவது ஏகுதல் என்ற சொல்லைப் பயன்
படுத்தியுள்ளார்.  அவர் கம்பதாசன்,  "மோகினியே காதல்
ராகினியே ஏகாதே " என்றும்  " மன(த்)தில் மெய்க் காதல்
......கொண்டேகுவேன்" என்றும் எழுதி இச்சொல்லை
வழக்கில் வளரவிட்டுள்ளார். 


இங்கிருந்து எங்கோ போய்விட்டவர்கள்தாம்  இலேகர்.

வானிற் புகுந்திருக்கலாம்.
தவறு இல்லை. இது நீட்சி குறுக்கி அமைந்த சொல்.

தமிழ் மொழியமைப்பில் உலக மொழியாதலால்,
தமிழில் ஒன்றைச் சீனமொழி போலவும் சொல்லலாம்.
" நாய் வாய் தேய், போய் மாய்!"  என்பது சீனமொழிபோல்
இருக்கிறது. சில சொற்களும் அயல் ஒலி போல் 
ஒலி பெறலாம். இப்படி ஒலியில் இலேகர் என்பது 
போலி அயல் ஒலி உடைய சொல். ஒரு சொல்லில்
சில பொருள்கள் எடுபடுவது சில+ எடு + ஐ = சிலேடை
ஆகும்.  எடு+ ஐ = ஏடை என்பது முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.  சில என்பது சில் ஆகும், சில்+ நாள் 
= சின்னாள். சில்+ஏடை = சிலேடை. 

சின்னேரத்தில் வந்து சொல்லாடுவோம்.


எழுத்து தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்

* இது திருத்தம் பெற்றது. 07012021











ஞாயிறு, 24 மே, 2020

ஒரு கேள்வி: சொக்கட்டான் என்ற சொல் எப்படி வந்தது?

இவ்விடுகையின் பின் சொக்கட்டான் என்ற சொல் எப்படி
வந்தது என்பதைத் தெரிவியுங்கள். (பின்னூட்டம் இடவும்)

வீரியம் என்பது ( மற்ற விளக்கத்துடன்.)

விர் என்ற சொல் விய் என்று திரியும். இதனை மனப்பாடம் 
வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அடிப்படைகள்
சிலவற்றை மனனம் செய்து கொள்ளுதல் இன்றி-
யமையாதது ஆகும்.

விர் விய் என்று மாறுவதற்கு இன்னோர் உதாரணம்
தருக என்றால், நாம்   அர் - ஐ என்பதை மேலுறுத்தலாம்.
 அர் என்பது ஆர் என்று நீளவும் செய்யும். இஃது
முதனிலைத் திரிபு.

அர் எப்படி ஆர் என்று நீளும் என்பவருக்கு, இனி
 ஓர் எடுத்துக்காட்டினைத் தரவேண்டும்.  அப்போதே
அவருக்குப் புரிதல் உண்டாகும்.

அர் >  ஆர்.    வந்தனர் ( அர் ) >  வந்தார் (ஆர்).
இர் > ஈர்.       இரு முறை  >  ஈரடி.   இங்கு உயிர்
முதலாய் வந்த சொல்முன் ( அடி )   திரிந்தாலும், (இரு
ஈர்  என்று .....)
அதுவன்று காணத்தக்கது;   சந்தித்  திரிபு என்று ஒதுக்க
வேண்டாம். 

இர் > ஈர் எனத் திரியும்.

கவிதையில் ஏற்றவிடத்து உயிர்முன் திரியாமலும்
 உடம்படுமெய் பெற்று வரும்.  எ-டு:    ஒரு +  அந்தம் >
ஒருவந்தம்.  ( ஓரந்தம் என்று வரவில்லை). கவிதையில், சொல்லமைப்பில்போல ஏற்றவிடத்துத் திரியாமல்
போற்றப்படும்.  பெரு + அளவு  = பேரளவு,
அப்படியானால் பெருமளவு என்பது அமைந்த
தெங்ஙனம்? பெருமளவு என்பதும் வழக்கில் உள்ளது.

பெரு என்ற சொல்லும் பேர் என்று திரிய,
பெயர் என்ற சொல்லும் பேர் என்று திரிவதால்,
பேரளவு என்பதைச் சிலர் விரும்பவில்லை போலும்.

பெருமை + அளவு >  பெரு + அளவு > பேர் +
அளவு > பேரளவு. பெருமை + அளவு >
 பெரும் + அளவு > பெருமளவு.
( மை விகுதியில் ஈற்று ஐ வீழ்ந்தது.)

பெய் > {பெயர்}.
பெய் > பெர் >{ பேர்.} ( இடுதற்கருத்து )
விய்  >  விர்>{  விரி }  ( விரிவுக்கருத்து. )

பெயர் என்பது ஒரு வினையினின்று தோன்றி,
அர் ஈறு பெற்றபின், மீண்டும் வினையாகும்.
பெயர் > பெயர்தல்.  [அதாவது பெருண்மையைப்
பொருந்தியவகையில்,  பெயர்தல் என்பது  ஒன்று
மாறிப்போதல்/மாற்றி இடுதலைக் குறிக்கின்றது.
 இன்னொருமுறை நகர்தல்-இடுதலே பெயர்தல் >
பெயர்த்தல். தன்வினை பிறவினை -
தானமர்தல் அன்றிப் பிறனால் அமர்த்த~ல்  / ~ப்படுதல்;
மற்றபடி பொருள் தரையில் இருத்தலை அடைதலில்
வேறுபாடின்மை அறிக. திரிபு ஆய்வுக்கு இதன் விளக்கம்
தேவையில்லை ]

( மேலே சுருங்கச் சொல்லியிருப்பதால் கவனித்து
உணரவும். )

சரி, இனி வீரியம் என்ற சொல்லை ஆய்வோம்,.
விர் என்பது விரிவுக்கருத்து ஆதலின்,  விரி + இயம் =
வீரியம் என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயரே
ஆகும்.  அதாவது, ஒன்று விரிவு படுதல். அது மன
 உணர்ச்சியாகவும் இருக்கலாம். உடலுரமாகவும்
இருக்கலாம்.  அடிப்படைக் கருத்து விரிவு.

ஒன்று விரியும்காலை, அவ்விரிவில் உள்ளுறைவுகள்
மிகுதியாய் வேண்டப்படலாம். எ-டு: சாலை
விரிவாக்கத்தில் மண், கல் முதலிய தேவைப்படுதல்
போல். கல்வி விரிகையில் மிகுந்த நூல்களை
வாயிக்க (வாசிக்க) நேரலாம், குருவிடம் பாடம்
கேட்க நேரலாம்.

வீரியம்போல் திரிந்த இன்னொரு சொல்:
காரியம் என்பது.

கரு + வி = கருவி.
கரு + இயம் = காரியம்.

கர் என்பது கையைக் குறிக்கும் அடிச்சொல்.
கர்  > கரம்.
கர் > கரு > கார்
ஓ.நோ: வர் - வர்றாள், வருவாள். வாராய்.
இலக்கிய வடிவம்:  நீ வரினே, யாம் செல்வோம்.  வர்>
வரின். (வர்+ இன்).

அடிச்சொற்கள் மட்டும் பட்டியல் , விளக்கத்துடன்.

கர் > கை அல்லது கை > கர். ( கை > (கைர்) > கர்.)
அல்லது :  கர் >< கய் ( கை )
ஒப்பு நோக்குக: :
விர் > விய்
அர் > ஐ
மர் >< மை ( மரித்தாரைக் கிடத்தும் இடம் மையம், )
மர் > மரி; மை> மையம்.  மை <> மாய்.

இவற்றின் திரிபு வகை அறிக.
குறிப்பு: மையம் என்பதற்கு வேறு பொருளும் உள.

கை; கைக்கு உதவும் பொருள் கருவி.  தொடர்பு அறிக.
கர் > கரு > கருவி.
கை செய்வது காரியம்.
கர் > கார் > காரியம்.

 இரண்டும் இணைந்தால் ("கைக்காரியம்"
என்றால் " ) சிறு காரியம் என்பது.

அர்  > ஐ.
வந்தனர் > வந்தனை.  (படர்க்கைப் பன்மை, முன்னிலை ஒருமை.)
உறவு அறிக. நுண்பொருள் வேறுபாடு).


விரைவுக் கருத்தும் விர் அடியினதே. பின் விளக்குவோம்.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் திருத்தம்.


சனி, 23 மே, 2020

அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட கொரனா நோய்நுண்மிச் (CNA ) செய்தி


ஒரு தட்டச்சுத் தவறும் விளைவுகளும்


சில வேளைகளில் ஒரு தட்டச்சுத் தவறுகூட பெரிய பொருட்
பிறழ்ச்சிகளையும் உரைமுரண்பாடுகளையும் ஏற்படுத்தக்
கூடும் என்பதற்கு "ஆசியச் செய்தி ஒளிவழி" ( சேனல் நியூஸ்
ஏசிய ) ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சி எடுத்துக் காட்டாக
அமைந்துவிட்டது.

இதைச் சிங்கப்பூர் இணைய தள வெளியீடான " சார்பின்மைச்
செய்தி இதழ்" ( The Independent Sg )  நன்கு தெரிவிக்கிறது.

இதனை இங்கே சென்று வாசித்துப் பாருங்கள்: நல்ல நகைச்
சுவையும் இங்குக் கிட்டும்:

சொடுக்கவும்:
http://theindependent.sg/its-definitely-not-shits-cna-broadcast-gets-people-talking/


அதிபர் டிரம்ப் என்ன சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

வியாழன், 21 மே, 2020

வீட்டுக்குள் இருப்பீர் இடைவெளி போற்றி நோய் தடுப்பீர்.


(கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

வீட்டுக்குள் இருந்திடுங்கள் வேதம் ஈதாம்
விலகி இடை வெளிவிட்டால் நலமே மீதம்
கோட்டுக்குள் இருந்திருந்தால் சீதா அன்னை
கொல்வினைசேர் இராவணன்பேர் சொல்லும் இன்னல்
ஏட்டுக்குள் ஏறிடாதே  கூட்டுள் ஆவி
இந்நாளில் தீமைதவிர்த் தாலே மேவும்
பாட்டுக்குள் பதிந்திருங்கள் படிப்பில் ஆழ்வீர்
பாரியைப்போல் சீர்மிகுத்துச் சிறக்க வாழ்வீர்.



பதவிளக்கம்:

வேதம் -  கடைப்பிடிக்க வேண்டிய  விதிமுறை
 ஈதாம் - இதுவாம்
மீதம் -  உண்டாகுமென்பது
கோட்டுக்குள்:  கட்டுப்பாட்டுக்குள்.
ஏட்டுக்குள் ஏறிடாதே - இலக்கியமாகி இருக்காது.
மேவும் -  வந்து சேரும்.
கூட்டுள் - உடம்பில்
ஆவி - உயிர்

ஓரே எழுத்துச் சொல் - பொருள் ஒன்றாதல்.

ஒன்று சேர்தல் என்பதற்கு ஒரே எழுத்தால் தமிழில் ஒரு சொல்லைத் தருக என்று யாரேனும் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

அந்தச் சொல் "கு" என்பதுதான்.

இந்தக் கு என்ற சொல்லைத் தமிழன் கண்டுபிடித்துப் பேசிய காலம், மனிதன் காட்டுவாசியாகவோ குகைவாசியாகவோ இருந்த தொல்பழங்காலம் ஆகும். காரணம், "ஓரெழுத்து ஒருசொற்கள்" தமிழில் இன்னும் சிலவே உள்ளன.

எடுத்துக்காட்டு:-

ஆ.  இந்த ஆவென்னும் சொல் பசு என்று பொருள்படுகிறது.  தமிழனுக்குப் பசுவுடன் அல்லது ஆவுடன் உள்ள தொடர்பு, தமிழ் உருவாகத் தொடங்கிய நெடுமுற் காலமே ஆகும்.  அக்காலத்தினைப் பற்றி நம் அறிவினால் ஒன்றிரண்டை அறிந்துகூறலாம். அந்நிலை கடந்து மிகுதியாக ஒன்றும் நாம் கூறுதற்கில்லை. ஏன் பசுவை ஆவென்று சொன்னான் என்பது அறிய இயலாமல் இருக்குமானால் அச்சொல்லை  இடுகுறிப் பெயர் என்றே இலக்கணம் கூறும்.

பூ என்ற சொல்லும் ஒரே எழுத்தால் ஆன சொல்தான். ஆகவே தொல்பழந்தமிழன் பூவை அறிந்த காலம் நினைக்கவும் இயலாத பழங்காலமே. பூத்துக் குலுங்குங்கால் அதை நோக்கி  " இவ்வளவு அழகா?" என்று வியந்து பாராட்டிக்கொண்டு "பூ!" என்றுஓசையிட்டிருந்தால், அது வியப்புக் காரணமாக வந்த பெயர் என்று சொல்லலாம்.  ஆனால் இக்காரணம் பலரும் ஒப்பமுடிந்த காரணமாக இருக்கவேண்டும். தமிழில் பூத்தல் என்பது வினைச்சொல்லாகவும் இருக்கிறது. இந்நிலையில்  இது பல்பொருளொரு சொல்.  மலர் பூத்தது என்று வாக்கியமாவது மட்டுமன்று; தோன்றுதல் என்றும் பொருளாகும்:  நிலவு பூத்த இரவு,  கண் பூத்துப் போயிற்று என்றெல்லாம் வழக்குண்மையால், இச்சொல்  பல்வேறு வகைகளில் பயன்பாடு காணும் சொல்லாகும். பாருங்கள்:

காத்திருந்து கண்கள்
பூத்துப் போனதடி,
கையினில் வேலேந்தி
மயிலினில் வருவானென்று   (காத்.)

என்று தமிழிசையில் பாடல் வருகிறது.

பூமியும் தோன்றிய ஒன்றே என்ற பொருளில்  "பூ+ம்+இ" என்று  வந்து தோன்றுதற் பொருளும் தருகிறது.   ம் - எழுத்திடைநிலை; இ என்பது விகுதி ஆகும். நெஞ்சில் பூத்த எண்ணம்,  வானில் பூத்த நிலா ---- என்பவெல்லாம் தோன்றுதல் கருத்தே.

கு என்பதற்கு வருவோம்.  கு என்பது ஒன்றுசேர்தல் பொருள் உடையது. இப்பொருளில் அது வேற்றுமை உருபாகவும் வருகிறது.

மதுரைக்குச் சென்றான்.  ( மதுரை சேர்தல் பொருள்)
கண்ணுக்கு மருந்து இட்டான்.  ( கண்ணிற் சேர்தல் பொருள்).
முகத்துக்குக் கவசம் ( இதுவும் அது).

பொருளில் இஃதே அவற்றோ ரன்ன  என்று  நூற்பா ( சூத்திரம்) செய்திருப்பார் தொல்காப்பியனார்.

இந்தக் கு என்பது சொற்களிலும் பதிவுகண்டு இலங்குவதாகும். இவற்றை நோக்குக.

குவிந்த நெல் -----    குவி என்பது நெல் ஒன்றுசேர்ந்திருத்தல் குறிக்கிறது. இங்கு கு என்பதே சொல்.  வி என்பது வினையாக்க விகுதி.  அவி, தவி என்பனபோல். அன்றி வி என்பது பிறவினை விகுதியுமாகும்.  அறிவி(த்தல்)  காண்க.

குப்பை.  (கு + பு+ ஐ).  இங்கு பு, ஐ என்பன விகுதிகள். வேண்டாதவை, வீசப்பட்டவை ஒன்றுசேர்தல் கருத்து.

குப்பம் (கு + பு+ அம் ).  ஒன்று சேர்தல் குறிப்பு.  மக்கள் சேர்ந்து வாழிடம்.

குவை . (கு + வை).  குவியல்.  இங்கு வை என்பது விகுதி.

கு  > குடு.அடிச்சொல்.

குடு > குடி. (  நீரை வயிற்றுள் சேர்த்தல்)
குடு > குடும்பம். குடும்பு. குடும்பி.
குடு > கூடு>  கூடுதல் ( ஒன்று சேர்தல்)
குடு > குடாப்பு. கோழிக்குடாப்பு.
குடு > கூடு > கூடை (பொருளை ஒன்றுசேர்த்தெடுக்கும் முடைவு).
குடு > கூடம் : மக்கள் அல்லது பிற சேர்ந்திருக்கும் இடம்).
கூ+ இடம் > கூடம் எனினும் ஆகும்.  (பகவொட்டு எனவும் தகும்.)
குட்டை: நீர்சேர் இடம். டகர இரட்டிப்பு.

டு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.

கூடு> குடும்பம்,  இது சா(வு) > சவம் போலும் குறுகி அமைந்த பெயர் எனினும் ஆகும்.

இதுகாறுங்கூறியவற்றால்,  ஒன்றுசேர்தலுக்குக்  கு என்பது ஓரெழுத்து ஒருமொழியாம் அறிந்து மகிழ்க.

ஓய்ந்து சந்திப்போம்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் கவனம்.



செவ்வாய், 19 மே, 2020

வாய் என்ற சொற்பெருமை வாயால் அளவிடமுடியாதது.

வாய் என்ற தமிழ்ச்சொல் பல மொழிகளில் பரவியுள்ளது. ஆனால் ஒவ்வொரு மொழிக்குள்ளும் அது புகும்போது, சற்று மாறுதலுறும்.  மாறுதல் இல்லாமல் புகுதல் அரிது.  எடுத்துக்காட்டாக இங்கு என்ற சொல்லைச் சீன மொழிக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் அது இங்கு என்ற வடிவத்திலிருந்து சீனமக்கள் ஒலித்தற்கியலும் வழியில் எளிமையாக்கப் படவேண்டும்.  அம்மொழிக்கு ஏற்ப அது  " இங்" ஆகிவிடும்.  சீனமொழியில் முன்னரே இங் என்றொரு சொல் இருப்பதால்,  மேலும் திரிபுறக்கூடும். அல்லது தள்ளுபடியாக்கப் படுதலும் கூடும். திரிபின்றி ஏற்கப்படுதலும் கூடும்.

Subcuntaneous என்ற ஆங்கிலச் சொல் இன்னொரு ஐரோப்பிய மொழியில் sous cutanee  என்று மாறிவிடுகிறது.மொழிக்கு மொழி மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது ஆகும்.

இவைபோலவே வாய் (பொருள்: வாய் என்னும் உறுப்பு,  மற்றும் வழி)   என்பது வய via என்று இலத்தீனில் மாறுகிறது./ வாய் -  வழியென்பது வாய்ப்பு என்ற பொருளிலும் வழங்கும்  "ஓல்லும்வா யெல்லாம் செயல்"(பொருள்: இடம்) ( (குறள்) என்பது காண்க.

உருவமில்லாத வாய்:

உலகத்தில் யாம் சொல்லப்போகும் வாய் இரண்டு.  ஒன்று முடிந்த வாய். இன்னொன்று முடியாத வாய்.  அதாவது ஒல்லும் வாய், ஒல்லாத வாய். ஒல்லுதல் என்பது வள்ளுவனார் பயன்படுத்திய சொல்.

ஏதேனும் ஒரு திட்டத்தில் முடிந்த வழி முடியாத வழி இருக்கலாம்.  இந்த வாய் உருவமில்லாத வாய் அல்லது இடம். இதனைத்தான் வாய்ப்பு என்று சொல்கிறோம்.

வாய் என்ற உறுப்பினின்று வருவது:

வாய் > வாய் இ >  வாயி+த்தல் >  வாசித்தல்.   பொருள்: வாயிலிருந்து
வெளிப்படுத்துதல்.

வாய்நீர் -  உமிழ்நீர். பேச்சில் இது வானி, வாணி என்று இடைக்குறைந்து
வழங்கும்.

வாய்மலர்தல் -  (பெரியோர்) சொல்லுதல்.

வாய்வது - உண்மை.

வாய்மை - உண்மை.

வாய்வாளாமை - மவுனம். பேசாமை.

வாயுறை -  உறுதிமொழி  மற்றும்....

வாசி+ அகம் (விகுதி) >  வாசகம். (  திருவாசகம்).

வாத்தியார்: வாய்ப்பாடம் சொல்பவர்.  ( உபாத்தியாயி வேறு)  உப அத்தியாயி.
வாய் > வாய்த்தியார் > வாத்தியார். யகர ஒற்று இடைக்குறை.

வாய்+ உ = வாயு..  வாயிலிருந்து ,முன்வருங்காற்று.   பொதுவாகக் காற்று.
ஓர் இடத்திலிருந்து வெளிப்படும் காற்று என்பதுமாம்.   உ - முன். சுட்டுச்சொல்

வாய் - நீட்சிக்கருத்து.

கால்வாய்.

வாய்க்கால்

வீட்டின் பகுதி

வாய் > வாயில் > வாசல்.

இடமிருப்பது

வாய் > வயம்.  ஒருவனிடம் இருப்பது.

இடத்தில் கிடத்துவது:

வாய் > வய் > வை.

இவற்றைக் காண்க:  பை > பய் > பயல்.  பை > பையன்.

பை > boy  எப்படி? ஆய்வு  செய்க.

இவற்றில் சில,  ---  அறிஞர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிந்து மகிழ்க.



இன்னும் பல. பின் காண்போம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம்.

இதில் ஓரிடத்தில் "  இதனைத்தான்" என்பது
" இதனைததான" என்று மாறிவிட்டிருந்தது. கண்டுபிடித்து
த என்பதற்கு த் என்று ஒரு புள்ளிவைக்க உடனே
"ன " என்பது  "ன்" என்று தானே மாறிவிட்டது..
இவற்றின் தொடர்பு புரியவில்லை.  மென்பொருள்
வல்லுநராயின் அன்புகூர்ந்து ஏன் என்பதைத்  தெரி-
விக்கவும். 5.51 21.5.2020 சில திருத்தங்கள் செய்யப்பட்டன.






திங்கள், 18 மே, 2020

பண் - பலபொருளுள் நிந்தை

பண் என்ற சொல் தமிழறிந்தோரிடையில் அறியப்பட்ட இனிய சொல்லே ஆகும். இதற்குப் பல பொருள். என்றாலும் பெரும்பாலும் பண் என்றால் பாட்டு என்ற பொருளில் அது மக்களிடை  வழக்குப் பெற்றுள்ளது. இஃதன்றி பண்பாடு, பண்பட்ட, பண்படுத்துதல் என்பன போலும் சொல்லாட்சிகளிலும் அது உணரப்படுகிறது.


பண் என்பதற்குப் பல பொருள் இருத்தலால்,  பயன்படுத்துதற்குக் கடினமான சொல்லானாலும்,  அதன் பல்வேறு பொருள்களில் ஒன்றிரண்டு மட்டுமே நினைவில் அல்லது பொருண்மையறிவில் வைத்துக்கொண்டுள்ளபடியினால் , நடைமுறையில் இச்சொல்லால் நமக்குத் தொல்லையொன்றுமில்லை என்பதே உண்மை. மறதியும் சிலவேளைகளில் நம் கடினத்தை நீக்கிவிடுதல் கூடும்.

பண் என்பது நிந்தனை என்ற பொருளுடையதாகவும் உள்ளது. இப்பொருளின் இதைப் பயன்படுத்திய  இந்நாளைய  ஆசிரியர் யாரும் நம் நினைவில் இல்லை.

இப்பொருள் எவ்வாறு ஏற்பட்டது எனக் காண்போம்:

பள் >  பள்ளம், தாழ்வு.
பள் > படுகை, தாழ்வு.
பள் > பண்> பணிதல் ( தாழ்நிலை மேற்கொள்ளுதல் அல்லது அடைதல்)


நிந்தனை செய்யப்படும் ஒருவன்,, பிறர் காட்சியில் தாழ்நிலையில் எண்ணப்படுகிறான். பணிதலுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பள் > பண் ஆவதனால், பண் எனற்பாலது நிந்தனை என்றும் பொருல் படும்.

பள் ( அடிச்சொல் ) > பண் > பணிதல், பணிவு.

ள் என்ற ளகர ஒற்று உடைய சொற்கள் ணகர ஒற்றாக மாறுவது சொல்லியல் விதிப்படியாகும்.

சந்தி என்னும் சொல்புணார்ச்சியிலும் மற்றும் ஏனை இடைச்சொற்களின் சேர்க்கையாலும்  ள் என்பது ண் ஆகிவிடும்.  எ-டு:

மாள் > மாண்டார்.


ஆள் எனற்பால பெண்பால் விகுதியும் ஆண் என்ற வடிவத்தையடைந்து  பின் ஆண்பால் விகுதியுமாகும்.

 ஆள் > ஆண்
ஆண் >  ஆன்.  ( எ-டு: வந்தான் ).

புணர்ச்சியில்:  ஆள் - ஆண்ட, ஆண்டு. ( எச்ச வினைகள்)
இங்கு வினைப்பகுதுயுடன் சேர்ந்தவை இடைச்சொற்கள்.

ஆள் என்ற சொல்லே  ஆட்சியுடைமை அல்லது ஆளுகையைக் காட்டும். அதனின்று திரிபுற்ற ஆண் என்ற சொல்லில் இப்பொருள் சிறக்கவில்லை.


ஆண்மை என்ற சொல்:

இது இருவகையிலும் பெறப்படும்.  எ-டு:

ஆள் + மை =  ஆண்மை.
ஆண் + மை = ஆண்மை.

சொல்லாண்மை, நகராண்மை என்று வரும் சொற்களை  ஆள்+மை = ஆண்மை என்றும்   ,  ஆண்தன்மை என்று குறிக்கும்போது  ஆண்+மை என்றும்  பிரித்தலே சரி.

சொல்லமைப்பில்:  ஆள் - ஆண்டவன்.

பிளவுக் கருத்து:  பாள் > பாண்டம்.

                                    பாள் > பாளம் என்பதும் பிளவுக் கருத்தே.

இதுகாறுங் கூறிய சிலவற்றால்,  பண் என்பது ஏன் நிந்தை என்ற பொருளிலும் நிகண்டு மற்றும் அகரவரிசைகளிலும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிழைகள் பின் கவனிப்பு.

5.30 மாலை 19.5.2020 -  சில தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 15 மே, 2020

நுண்ணுயிர் கொரனாவிடம் மனிதன் தோற்பானோ?

முன்னூ  றாயிரத் தின்மேல் அழிந்தனர்
இந்நாள் இதுவே உலகப் பெரும்போர்
எந்நாள் இருள்முகில் நீங்குமோ அறியோம்
நன்னாள் புவிமேல் நண்ணுதல் அரிதே.

அறிந்ததும் இலையே முன்னிது வகிலம்
தெரிந்து விலகிடப் பட்டறி விலதே
பரிந்து பேசிடும் தாயொடு தந்தையர்
இழந்து தவிப்பவர் எல்லை மிகுந்தனர்

தமிழறிந்  திலங்கிய தகைசால் பெரியோர்
இமிழ்கடற் கப்பால் இருந்தனர் பலபேர்
குமிழ்பல முளைத்த மகுட  முகிப்புழு
உமிழ்நஞ்   சூடுரு வியதோ அறியோம்.

வழக்கம் போல வந்திலர்  அன்னவர்
இளக்கம் அடைந்தது என்மனம் இவணே
துலக்கம் பெற்றிவ் வுலகினைப் பேண
கலக்கம் விலக்கும் கரைகண் காணுமோ?

கண்ணுறக் காணா நுண்ணுயிர் தன்னொடு
மண்ணர  சன்மனி தன் தொடுத் திடுபோர்
விண்ணவர் நகைக்க வியன்புவி திகைக்க
மன்னவன் மனிதன் தன்னிலை தாழ்வனோ?


பதப்பொருள்:

முந்நூறாயிரம் -  3 இலட்சம்
இருள்முகில் - கார்முகில், கருமேகம்.
(முன்னர் காரிருள் என்பதில் மாற்றம்)
நண்ணுதல் - வருதல். நெருங்குதல்
அறிந்ததும் இலையே முன்னிது வகிலம் -அகிலம்
முன் இது அறிந்தது இல்லை.
பட்டறிவு - அனுபவம்
எல்லை மிகுந்தனர் - தாங்கும் எல்லையைக்
கடந்துவிட்டனர்
இலங்கிய - விளங்கிய
தகைசால் - நற்பண்பு நிறைந்த.
இமிழ்கடல் - அலையோசைக் கடல்
மகிடமுகி - கொரனாவைரஸ் (நோய்நுண்மி)
இளக்கம் - வலிமை இழந்த நிலை, நெகிழ்வு
புழு - இங்கு நோய்நுண்மி.
துலக்கம் - தெளிவு. ஒளி
மண்ணரசன் -  பூமியை ஆளும் மனித வருக்கம்.
(ஓருமை பன்மைக்கு நின்று பொருள் உணர்த்தல்)
விண்ணவர் - உயர்ந்தோர்.  விண் - உயர்வு.
வியன் - விரிந்த
மன்னவன் மனிதன் -  நிலைபேறு உடையவனான
இம் மனிதன்.
தன் நிலைபேற்றினை இழந்து வீழ்வானோ?
(போர் தொடுப்பவன் மனிதன், அவனே வீழ்வானோ?
நோய்நுண்மி வீழாதோ? என்பது ).

மண்ணரசன் தொடுத்த போரில் தன் ஆட்சி இழந்து
வீழ்வானோ என்று முடிக்க.

மன் என்பது நிலைபேறு குறிக்கும்.  அரசன் என்ற
சொல்லின் இக்கருத்து இல்லை. அதனால் மன்னன்
என்ற சொல் பெய்து முடிக்கப்பட்டது.





வியாழன், 14 மே, 2020

தொல்காப்பியர் இன்னொரு பெயர் திரணமாதக்நி?

தொல்காப்பியருக்கு திரணமாதுக்கினி  என்ற ஒரு பெயரும் சொல்லப்படும்.

இவர் தம் நூலை அரங்கேற்றிய போது  பேராசானாக விளங்கிய
அதங்கோடு ஆசான்  தொல்காப்பியரை அரசவையில் தமக்குச் சமமானவராகவும்  தக்கவராகவும் ஏற்றுக்கொண்டார். அப்படி இல்லாவிட்டால் இருவரும் எப்படி ஒன்றாக அவையில் அமர்ந்து  ஒருவர் இலக்கணத்தைச் சொல்ல இன்னொருவர் கேட்பது? அரசன் தந்த வேலை ஆதலால் இருவரும் ஒத்துப்போனால்தான் காரியம் நடைபெறும்.  ஒருவர் இக்காலத்தில்போல் இணையதளத்தில் சொல்லி இன்னொருவர் வீட்டிலமர்ந்து படித்துக்கொள்வதானால் இந்த ஏற்பாடு தேவையில்லை அன்றோ?  இருவருக்கும் அரசன் தரும் சம்பளமும் தேவை. அவை பெரும்பாலும் பொன்னும் மணியுமாய் இருந்திருக்கும்.

இது நடைபெற்றது இடைச்சங்கத்தின் இறுதி என்பதே சரியான கொள்கை.


ஆசான், தொல்காப்பியரை திறனில் மாதக்க நீர் என்று போற்றிக்கொண்டாடினார்  என்று அவையில் உள்ளவர்கள் நினைத்தனர். அதுவே உண்மையும் ஆகும்.

இதிலிருந்து திறனில் மா + தக்க + நீ  என்ற பெயர் அமைந்து, பின் அயல் நாவுகளும் அறிந்து போற்றியதால் திரணமாதக்கநி என்று பேதமுற்றுச் சுருக்கம்பெற்றுப் பெயராயிற்று.

திரணமாதக்கனி என்பதும் காரணப்பெயர்தான்.

சீனி என்பது சில தமிழின மொழிகளில் ஜீனி என்று வருதல் காண்க

பழம் + நீ  = பழநி என்பதும் நீ  என்பதில் முடிந்தது  காண்க, பின் குறுகிற்று.


 அந்தக் காலத்துப் பெரும்புலவர்கள் தங்கள் இயற்பெயர்களால் அறியப்படவில்லை என்பர் ஆய்வாளர் சிலர். எடுத்துக்காட்டு:


வள்ளுவர் >  வள்ளுவக்குடி
தொல்காப்பியர் >  காப்பியக்குடி
பாணினி > பாணர் குடி  (பாண்+ இன் + இ)
வால்மிகி > வால்மிகக் குடி.  வான்மிகி என்ற வடிவமும் வழங்கும்.

இப்பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிலும் வழங்கியிருக்கக்கூடும்.
அதாவது : பாணினி என்பது பாண் குடியினர் என்றும் பாட்டில் வல்லவர் என்றும் இருபொருளில் அந்தக்காலத்தில் வழங்கியிருக்கலாம். இதை அறிய வழியில்லை,

பாணினி என்ற பெயரின் அமைப்பைப் போலவே பாடினி என்ற சொல்லும் அமைதல் காண்க. எடுத்துக்காட்டு:  காக்கை-பாடினியார். பாணர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்கள். பாட்டு எழுதிப்  பாடிப்  பிழைப்போர்.

பாண் இன்  இ
பாடு  இன் இ


அவர்களில் ஒருவரே சங்கதத்துக்கு  Sanskrit  இலக்கணம் வரைந்தார் .Sanskrit was then known by a different name. Does not matter here.

காப்பியக் குடியினர் பலர் புலவர்களாய் இருந்தனர். எடுத்துக்காட்டு: பல்காப்பியனார் ,  இவர்களுள் தொன்மையானவர் தொல்காப்பியனார்,

பழம் பண்டிதர்களை அறிக  மகிழ்க 

தட்டச்சுப் பிறழ்வு - பார்வை பின்.

( தமிழ் எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை )


மகுடமுகி  ( கொரநாவால்  ) இவை குறைவான தொகையினரால் இயக்கப் படுகின்றன  போலும் .

உங்களைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.




மூர்க்கமும் முறுக்கும்

கடுமை என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம்.   "கடு"  என்பது தொட்டுப்பார்க்கும்போது ஒரு பொருள் நெகிழாமலும் அமுங்காமலும்  திடமாக இருப்பதையே குறிப்பதாகிறது.  பொருளில் கடினம் அல்லது கடுமை இருக்கின்றது என்று சொல்கின்றோம்.  அதனால்தான் உண்பொருளாகிய கடலைக்கு அப்பெயர் ஏற்பட்டது. இச்சொல் ஏற்பட்ட விதம்:

கடு >  கடு + அல் + ஐ >  கடலை

என்பதுதான்.

கடு என்ற உரிச்சொல்லில் அல் விகுதியும் ஐ விகுதியும் இணையவே, கடலை என்ற சொல் தோன்றுகிறது.  கடு என்பது  கடு அல் என்று இணைக்கப்படும்போது சொல் நீட்டமாகிறது. இவ்வாறு மிகுவதால் அல் என்பதை விகுதி என் கின்றோம்.  மிகுதிதான் விகுதி.  இது சொல்லின் மிகுதி.
மிஞ்சு என்பது விஞ்சு என்றாவது போல் மிகுதி என்பது விகுதி என்று திரிவதால் அல் என்பதை விகுதி எனலாம்.  ஆனால் இங்கு இன்னொரு விகுதியான ஐ என்பது இணைக்கப்படாதாயின் வேறுபொருள் ஆகிவிடும். ஆதலின் ஐ வரவேண்டும். அப்போதுதான் கடலை ஆகும். இல்லாவிட்டால் கடல் என்று நின்று வேறுபொருள் ஆகிறது.  வேறுபொருள் ஆயினும் ஆகவில்லை எனினும் இடையில் நிற்கும் விகுதியை  இடைநிலை என்ற இன்னொரு பெயரால் வழங்குவது நன்று என்று தோன்றுகிறது. நினைத்த எல்லையை அடையாதவரை இடைவரவுகளை இடைநிலை என்று கொள்வது நல்ல கொள்கையாகும். இதில் சரி-தவறு என்பதினும் வசதியே குறிக்கோள் ஆகும்.

கடு என்பதில் கடினம் அல்லது திடத்தன்மை மட்டுமே பொருளன்று.  கடு என்பது வேகத்தையும் குறிக்கும். இன்னும் பல்வேறு பொருள் உள்ளன. அவற்றை நீங்கள் அகரவரிசைகளில் கண்டுகொள்ளலாம்.  வேகமாக அல்லது விரைவாக ஓடும் விலங்காகிய குதிரைக்குக் கடுமா என்ற பெயரில்லை. அது புலி, யானை, அரிமா என்னும் சிங்கம் முதலியவற்றைக் குறிக்கும். மான் என்னும் மென்மை விலங்குக்கு முரணாக அரிமாவிற்குக் கடுமான் என்ற பெயருள்ளது அறிக. ஆனால் கடுக என்பது விரைய என்றே பொருள்தரும்.

சொற்களில் பலபொருள்  இருக்கக்கூடும் என்பதை மனத்திலிருத்தவே இதைக் கூறினோம்.  இப்போது மூர்க்கம் என்ற சொல்லுக்கு வருவோம்.

மூர்க்கம் என்பது  எதையும் விடாமல் நின்று மிகுதி காட்டும் தன்மையையே குறிக்கிறது. விட்டுக்கொடுத்துப் போவதே சாலச்சிறந்த தந்திரமான தன்மை என்று பிறர் நினைக்கையில், விடாமைபற்றும் தன்மையையும் மூர்க்கம் என்று சொல்லலாம்; சிலர் அத்தன்மையை மடமை என்றும் கொள்ளலாம் ஆதலின், இதற்கு மடமை என்ற பொருளும் ஏற்பட்டது. மிகுசினம், கடுங்கோபம் என்பவும் இச்சொல்லுக்கும் பொருளாகக் கூறப்படும்.

முறுகுதல் என்ற சொல்லுக்கும் விரைவு, முதிர்தல், மிகுதல், செருக்குதல் என்னும் பொருள்கள் உள்ளன. முறுக்குதல் என்பதற்கும் இதை ஒட்டிய பொருள் வரும். இவற்றின் பகுதி அல்லது முதனிலை "முறு" என்பதாகும்.

முறு எனற அடியே மூர் என்று திரிந்தது.  ஆனால் மூர்த்தி என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பில்லை.  அந்த மூர் வேறு. இந்த மூர் வேறு.

முறு மூர் என்ற இவ்வலைக்குள் அகப்பட்ட பகுதிகள் விரைவு, மிகுதி, சினமிகை,  செருக்குதல் என்ற பொதுப்பொருள் உடையன.  ஆகவே முறு, மூர் என்பன நுண்பொருள் வேறுபாடு உடையனவே.  இவற்றின் முந்திய மூலவடி முல் என்பது. அதனை ஈண்டு விளக்கவில்லை.

அடிப்படையில் இப்பகுதிகள் கடுமை அல்லது கடினம் காட்டுபவை.

எனவே, இதன் முடிபு  முறு என்பதே மூர் என்று திரிந்தது. என்னும்போது முல் என்பதும் மூர் என்று திரியும்.  அப்பன், அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்னும் உறவுகள் போல்வன. ஆதலின் இன்னொருவர் முல் மூல் என்பதே மூலமெனினும் பேதமின்மை அறிக.

-------------------------------------------------------------------

அடிக்குறிப்புகள்


பெயர்தல் :  பெயர் > பேர் > (பே{ர்})+ து+ அம்) > பேதம்.
மிகு> விகு+ஆர்+அம் > விகாரம்.  மிகுந்து வேறுபடல், வேறுபாடு. ஆர் - நிறை(வு.) சொற்பொருள் மிகுதியினால் வேறுபடல். வழக்கில் பொதுவாக
வேறுபடுதல்.

தட்டச்சுப்பிறழ்வுகள்: மறுபார்வை பின்
  

ஞாயிறு, 10 மே, 2020

எறும்பை விலக்கிவைத்த மனிதன்

இடியுடன் கூடிய அடியல் மழையே
விடியலை அடுத்து விழைவுறு வண்ணம்

நல்ல துளிகளாய்ப் பெய்வதிம் மழையே
வானி   லிருந்து வழிதல் நோக்கினென்

மேனி குளிர்ந்திட அழகு காட்டிடும்
நல்லது நமக்கெனில் எறும்புக் கெப்படி?

அவற்றின் வீடுகள் அனைத்திலும் வெள்ளம்
வைத்திருந்   திட்ட வத்துகள் எல்லாம்

வெற்று முயற்சியாய் வீணா கிற்றே!
எறும்புகட் கென்றே இரங்குவர் யாரோ?

சுவர்சூழ் கூரையுள்   இவர்வாழ் மனிதன்
நவைதீர் இரங்குதல் நாட்டினில் இல்லை.

எரிமலை வெடித்து நரன்தலை வீழ்ந்தால்
ஒருகுலை நடுக்கில் உழல்வர் மாந்தர்.

மனிதரை மனிதரே உகப்பர்,
தனித்துயர் எறும்பினைத் தாங்குவர் யாரே?


சுவர்சூழ் கூரை - வீடு.
இவர்வாழ் - இவர்வுஆழ் - ஏறுதல் அல்லது
ஆசையில் மிகுந்த.
அடியல் -  சொரிதல்.
நரன் - மனிதன்
நவை - கெடுதல். தீர் - இல்லாத

மறுபார்வை பின்.

ஆந்திரா ஆலை ஆவிக்கசிவு


இன்னிசை வெண்பா:

ஆலைக்குள் நின்றகன்ற ஆவிநஞ்- சைப்பரப்பி
ஓலைக் குடிலுக்குள் உள்ளாரைக் கொன்றவர்தாம்
தீவிர வாதியரோ ஏவும் எதிர்தரப்போ
யாவர்? அறிந்தார் இலர்.

இன்னிசை வெண்பா

இருந்தார் நடந்தார் இடங்களில் நின்றார்
சரிந்தார்கள் ஆங்காங்கு சாவொத்த தன்மை
பெருந்துயரே இன்னோர் இழந்தார்  உயிரைப்
பரந்துகொல் துன்பத் தொடர்.

நேரிசை வெண்பா:

அண்டைநாட்  டாரும்  அடைவிப்பார் இத்துன்பம்
உண்டநன்றி இல்லாரும் உள்ளாரே ---- மண்டையிடி
காவல் துறையோர்க்கே காத்திருப்போம் செய்திக்கு
சேவல் பலகூம் வரை.


அரும்பதவுரை:

ஆவிநஞ்சு  -  நச்சு ஆவி. ( கியாஸ்)
அடைவிப்பார் - உண்டாக்குவார்
மண்டையிடி -  சான்றுகளுடன் வழக்கை மெய்ப்பிக்கும் தலைப்பாரம் அல்லது பொறுப்பு.  ( ஐகாரக் குறுக்கம்)
கூம் - கூவும். ( தொகுத்தல் விகாரம்.)

இது ஆந்திராவில் நடந்த ஆலை ஆவிக்கசிவு பற்றிப்
பாடியது.

இவற்றை அலகிட்டுத் தளைதட்டியிருந்தால்
பின்னூட்டம் இடவும். நன்றி.  தளைதட்டின்
வெண்பாவின் இனப்பாடலாகிவிடும். துறை, விருத்தம் இன்னும்.

துன்பத்திலும் பங்குகொள்வோம்.

மறுபார்வை பின்.


There was server error at the time of writing. Post options were
not generated in direct handling. Not the usual method was used
to obtain this post. Typos will be looked into later.

சனி, 9 மே, 2020

அழிச்சாட்டியம் மற்றும் இனாம்.

அழிச்சாட்டியம்: அழி > அழித்து (வினை எச்சம்) > அழிச்சு ( பேச்சுத் திரிபு). ஆடு > ஆட்டு (பிறவினை). அழிச்சு+ஆட்டு+இ+அம் = அழிச்சாட்டியம். அழி + சாட்டு = அழிச்சாட்டு, இ, அம் என்று முடித்தலும் ஆம்

2008

இனாம் என்ற சொல்:

https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_4.html

இனாம் எனில் இன் ஆவது: இன் = உரிமை. அதாவது
விலையின்றி உரிமை. இது இன்றைப் பொருள்.
ஆம் என்பது ஆகும் என்பதன் இடைக்குறை அல்லது
தொகுப்பு. (பகுபதம் பகாப்பதம் என்று வேறுபடுத்தல்
இப்போது வேண்டாம்.)

முன் காலத்தில் இனாம் கொடுப்பதானால், உரிமையான
மக்களுக்குக் கொடுப்பது.

ஒருவர் அமைச்சர். தம் இனத்தாருக்குக் கொடுப்பது இனாம்.

இன்+ அம் = இனம் (  உரியோர்).
இன் + ஆம் = இனாம் ( உரிமை ஆவது அல்லது ஆக்கப்படுவது).
-வர்களுக்குக் கொடுப்பது.

செல்வியின் வீடு.  ( செல்வி  இன்).


மறுபார்வை பின்.

வியாழன், 7 மே, 2020

அன்னமும் அன்னாசியும்

தமிழ்நாட்டிலுள்ள நம் மக்கள் என்னென்ன குழம்புகள்
வைக்கிறார்கள் என்பதை நாம் நேரில் அறிய
முடியவில்லை. சுற்றுப்  பயணங்களின் போது
கடைகளில் நிலவரம் எப்படி என்று ஒருவாறு தெரிந்து
கொண்டாலும் வீட்டில் வைக்கும் குழம்புகட்கு அவை
ஈடாம் என்று கூறிவிட முடியாது.

அன்னாசி மோர்குழம்பு:

திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மலேசியாவுக்கு -
சிங்கப்பூருக்கு வருகையளித்தபோது அவருக்கு மாரான்
என்னும் நகரில் ஒருகால் அன்னாசிமோர்குழம்பு வைத்து
உணவளித்தனராம். அன்னாசி என்பது ஊட்டச்சத்து
நிறைந்த பழமென்பது யாவரும் அறிந்ததே.  அது இட்டு
வைத்த குழம்பும் சுவையாகவே இருந்திருக்கும்.

அன்னாசியின் சொல்லமைப்பு பற்றி இங்கு
அறிந்துகொள்ளுங்கள்:
https://sivamaalaa.blogspot.com/2012/10/abbaasu.html


அன்னம் என்னும் சொல்லும் அன்னாசி என்ற சொல்லும்
 " அரு" என்ற அடிச்சொல்லுடன் தொடர்புடையவை.

அரு >  அன் > அன்னம்.  ( அருந்துவதற்கானது என்று
பொருள்.)அரு > அருந்து ( வினைச்சொல்லாக்கம்).
பொருள்:  தின்னு/ உண்ணு என்பது.



இயற்கையில் காணப்படும் பொருள்களை மனிதன் கடித்தோ, வெட்டியோ, இடித்தோ, பிட்டு எடுத்தோ,   ---- ஏதேனும் செய்து மென்று சிறிதாக்கித் தான்
சாப்பிடவேண்டும். மலைப்பாம்புக்கு உள்ள இயற்கைத் திறம் எதுவும் மனிதனுக்கு இல்லை. பாவம் மனிதன்.

அருந்துவதைச் சிறிதாக்கித் தான் மனிதன் உண்கிறான்.

ஒரு நீதியரசர், வழக்குக்கு எது தேவைப்படுகிறதோ அதைமட்டுமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.  பக்கக் கருத்துகளை ஈடுபாட்டுக்குள் புகுத்தலாகாது என்பதுண்டு.  அதுபோலவே எந்த வாதமும்.

அருந்துதலும் சிறுமையும் தொடர்புதரு கருத்துகள் ஆகும்.

அரு என்பதான அடிச்சொல்லிலிருந்தே அரிசி என்ற சொல்லும் வந்தது.


அரு > அரு+ இ =  அரி > அரிசி.  (  சிறுவிதை என்பது சொல்லமைப்புப் பொருள் ).
 அரு > அருந்து என்ற சொல்லின்வழிச் சென்று,  அரு> அரி என்று பொருளும் கொள்ளவே வேண்டும்.  இரண்டும் பின்னிப் பிணைந்து நிற்கின்றன.

அரு > அரி > அரிதல்.    ( சிறுசிறு துண்டுகளாய் வெட்டுதல்.).

அரி > அரித்தல்.1  கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து எடுத்தல்  2. தோலில் புள்ளியிடங்கள் போலும் குறுகியும் பரவின் விரிந்தும் ஏற்படும் சொறியச் செய்யும் தோலுணர்வு.

அரு என்பது அன் என்று திரியும் என்றோம்.

அரு > அன் > அன்னம்.   (  அம் விகுதி).

அருநாசி > அன்னாசி.

பென்னம் பெரிய என்ற வழக்கும் நோக்குக.  பெரு > பென்.
சின்ன ஞ் சிறிய என்பதும் கவனிக்க.   சிறு > சின்.

இதையும் அறிக.

குறு என்றால் சிறியது.   குறு > குற்றம் ( இதன் சொற்பொருள் சிறு செயல் என்பதுதான்.  அது அடிப்படைக் கருத்து. இன்றைய அளவில் குற்றம் என்றால்
சட்டத்தை மீறிய எதுவும் குற்றம். இது ஒரு பொருள்விரி ஆகும்.

அரி என்பது சிறுமைப் பொருள் உடையது என்றோம் அல்லோமோ?  அவ் வடிச் சொல்லும் அம் விகுதி பெற்று "  அரியம் " என்றாகிக் குற்றம் என்று பொருள்படும்.

இன்னும் சான்றுகள் பல.  நேரம் கிட்டினால் பேசி மகிழ்வோம்.

அன் > அண் என்பதிலும் தொப்புள்கொடி உறவு இல்லாமலா போய்விட்டது?


சரிபார்க்கும் மென்பொருள் பழுது.
பின் சரிபார்க்கப்படும்.















ஞாயிறு, 3 மே, 2020

மகுடமுகி என்ற சொல்லைப் பயன்படுத்தி....

சென்ற இடுகையில்


கொரொனா துயரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி (சொடுக்குக)
https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_6.html

 கொரனா என்ற அயற்சொல்லைப் பயன்படுத்தி வெண்பா புனைந்திருந்தோம். கொரனா என்பதற்குப் பதிலாக " மகுடமுகி" என்னும் மொழிபெயர்ப்புச் சொல்லை உள்ளுய்த்து அதே வெண்பாவைப் புனைந்து பார்க்கிறோம்.

மகுடமுகித் தொற்று மடைதிறந்த தெங்கும்
பகலிர வென்று பகவில் -----  தகவிலரால்
இத்தகு சண்டைகள் ஏற்படல் வெட்கமே
எத்துணைக் காலமிது போம்?

 பகலிர வென்று பகவில் என்று வரும் வரியில் பகவில் என்பது
கடின நடையாகத் தோன்றலாம். அது கடினமென்பதற்காக நீக்குதல்
உடன்பாடில்லாதது ஆகும்.  எனினும் இவ்வாறு எளிதாக்கலாம்:

"பகலிர வென்றுபா  ராத ----- தகவிலரால்"

இவ்வாறும் வெண்பா சிதைவுறாது வரும். 

அரும்பொருள்:

மகுடமுகி -  கொரனா தொற்றுநுண்மி  (வைரஸ்)
பகவில் ( பகவு இல் ) - பகுத்து உணராத.
தகவிலரால் -  (முன்னையப் பாடலில் நரகரால் என்ற
சொல் பயன்பாடு கண்டது.  தகவிலர் - நற்குணமில்லாரால்).

 

கொரனாத் துயரிலும் தீவிரவாதிகள் சண்டை!

ஊர்மக்களைப் பிணைக்கைதிகள் ஆக்கியது:

ஓய்வதும் இல்லையே தீவிர வாதிகளே
நாய்களே போலும் நடமாடித்----தாய்பிள்ளை
அப்பன் அணுக்கனினி  எப்பா லவரையும்
ஒப்பப் பிடித்திருத்து வார்.


அரும்பதவுரை:
ஓய்வதும் - நிறுத்துவதும்;  அணுக்கன் - உறவினன்;
எப்பாலவர் = ஆடவர் பெண்டிர் இருபாலாரையும்;
ஒப்ப - வேறுபாடின்றி;   பிடித்து இருத்துவார் - வன்மை
காட்டிப் பிணைக்கைதிகள் ஆக்கிக்கொள்வர்.


படையினர் காவலதிகாரி தியாகம்:

படைஞரும் காவலரும் பாவமுயிர் தந்து
நடைபெற்ற போரில்தம் நாட்டாரைக் காத்தே
உடைக்கும் உயரணிக்கும் ஓரேற்றம் உய்த்தார்
கிடைப்பில் தியாகம் இது.


அ-ரை
படைஞரும்  - இராணுவத்தினரும்;  காவலரும் - காவல்
துறையினரும்;  பாவம் - இரங்கத்தக்கவர்கள்;  உயிர்தந்து -
தியாகங்கள் செய்து;  உடைக்கும் - தாம் அணிந்த 
சீருடைக்கும்;  உயர் அணிக்கும் - தம் போற்றலுக்குரிய 
படையணிக்கும்;  ஓர் ஏற்றம் உய்த்தார் -  சிறப்பைத் தேடித் 
தந்தனர்;   கிடைப்பு இல் -  அரிய;  தியாகம் - ஈகம்.



தொற்றுநோய்க் காலத்திலும் சண்டையா ?

கொரனாநோய்த்  தொற்றிது குன்றாப்  பரவல்
இரவென்றும் நாளென்றும் பாரா  -----  நரகரால்
இத்தகு சண்டைகள் ஏற்படலும் வெட்கமே
எத்துணைக் காலமிது  போம்.


அ-ரை:
குன்றாப் பரவல் -  குறையாமல் பரவும் நிலை(யில்);
நாள் - பகல்;   பாரா - பாராத;   நரகரால் - தீயோரால்;
வெட்கமே -  நாணத்துக்குரியது;  போம் - நடைபெறும்?


கொரனாவுக்குத் தமிழ்ப்பெயர் " மகுடமுகி".


மடையர்கள் தொகைக்கென்ன பஞ்சம் ----- அட
மாறாத இந்நிலைமை காணாத கண்ணும்,
படைதரும் வீர்ர்தமைத் தாக்கும்----- ஒரு
பாழான தீவிர வாதத்தைக் காணின்,
விடைகண்டு வெதும்புமே நெஞ்சம் -----  தம்பி
வேறென்ன ஊறாவ தூருக்குள் என்றும்.




படையினர் ஐவர் மரணம்:  செய்தி (சொடுக்குக.)

https://www.livemint.com/news/india/army-colonel-major-among-5-others-killed-in-j-k-s-handwara-terrorist-attack-11588477923676.html 

Increase Internal Storage Of Any Android Phone | Use Sd Card as Internal...

நண்பர் சண்முகம் குறிப்பு

ிு சண்முகம் என்னும் அன்பர் ஒருகால் வரைந்த  கருத்துக் குறிப்புக்ு     யாம் எழுதிய பதில்   இவ்வலைப்பூவில் பல இடுகைளில் காணப்படுகிறது.  தொடர்பற்ற இடுகைகளில் அடியில் குறிப்பாக அது தோன்றுகிறது.  இது ஏன் இப்படி என்று தெரியவில்லை. இதை அகற்றவும் இயலவில்லை. இதை அகற்று‌ம்  முயற்சியைக் கைவிட்டு விட்டோம். இக்குறிப்பு ஆங்காங்கு வாசிக்கும் இடுகைகளில் தோன்றுமாயின் . கவனிக்கவேண்டாம்.

இது ஒரு புகுபிறழ்ச்சி (  bug)  என்றறிக.

சனி, 2 மே, 2020

குன்றில் வந்த கிரி. குன்றுபடு அருஞ்சொல்.

இன்று வேங்கடகிரி என்ற சொல்லில் வரும் கிரி என்ற சொல்லைத் தெரிந்தின்புறுவோம்.

கிரி என்பது மலை. கிரி என்பது பெரிதும் எடுத்தொலிக்கப்படும் சொல்லாகும். பலர் Giri  என்றே ஒலிப்பது வழக்கம். இஃதொரு திரிசொல் ஆகும்.  அதாவது மாற்றங்கள் அடைந்து வந்த சொல். இதிலேற்பட்டது சொல்லின் பலுக்குமுறை மாற்றமே.  ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களை ஒப்பீடு செய்தால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்லுங்காலை ஒலிப்பு மாறுதலை நல்லபடியாக அறிந்துகொள்ளலாம். இவற்றைப் பாருங்கள்:

சாலமன்  >  சுலைமான்.

மேலும் சில குறிப்புகள்:



https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_36.html

ஏன் மாறியது?

தமிழ்முறைப்படி விளக்குவதானால்  ஜூலியஸ் என்பது யூலியஸ் என்று மாறவில்லை  (  சொற்போலி)?  மொழிக்குள்ளேயே இருவகையாய் வந்தால் போலி என்று சொல்கிறோம்.  இரண்டுமொழிகட்கிடையில் இப்படி நிகழ்ந்தால் அதுவும் போலிதான். இலக்கணப்புலவன் ஒத்துக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அது போல இருக்கும்போலியே. வேறுபெயரால் தான் சொல்லவேண்டுமென்று அடம்பிடிப்பதானால் அயற்போலி என்று ஒரு புதிய பெயரைக் கொடுக்கலாம்.  இவற்றைத் திரிசொல் என்றார் ஒல்காப்  பெரும்புகழ்த் தொல்காப்பியமுனி. ஆனால் அவர் சொன்னது சொல்லுரு மாற்றம் அடைந்து பொருள் வேறுபடாமையும் சொல் மாறாமல் பொருள் மாறியதும்,  இரண்டும் மாறியமைந்ததும் என விரியும்.

[ தொல்காப்பியர் காப்பியக்குடியில் பிறந்தவர்.  பழஞ்சுவடிகளைக் கற்றுத் தெளிந்து, அவற்றைக் காப்பதான கடம் மேற்கொண்ட தொல்காப்பியக் குடி என்றறிக. தொல் - பரம்பரையாக அதே தொழில் என்று பொருள்.
காப்பியங்கள்  "சாஸ்திரங்கள்". இக்கால முறையில் அறிந்தவர்,   "சாஸ்திரி" என்க. " பல்புகழ் நிறுத்தப் படிமையோனே என்று புகழ்கிறார் பனம்பாரனார். படிமையோன் -  முனிவர்.    நன்னூலை ஐரோப்பாவுக்குக் கொண்டுபோய் மொழிபெயர்த்து அங்குள்ள புலவர் பெருமக்கள் இலக்கணம் அறிந்துகொண்டது நீங்கள் அறிந்ததே.  ஓர் இடுகையில் சொல்லியிருக்கிறோம். ]


  நிற்க.

மிகுதியான திரிபுகள் உண்டான காரணத்தால் மொழிகள் பல்கின.

இப்பொழுது கிரிக்கு வருவோம்.

தமிழ்ச்சொல் குன்று.  ( சிறிய மலை).

எது சிறிது எது பெரிது என்பது சொல்வோன் கேட்போனின் மனத்துட் பட்டது ஆகும்.

குன்று, இது இடைக்குறைந்தால் குறு.

குறு > கிறு > கிரி.    மலை.  று >ரு > ரி  பேதச்செருகல்.

இவையும் காண்க:

குறு > குன்று  ( இடைமிகை).


குறு > குறுகு.

வினைகளாக:  குன்றுதல்,  குறுகுதல். வெவ்வேறு வடிவங்கள், பேதம் இல்லை.

அதாவது பொருள் பெயர்ந்து வேறு நிலையை அடையவில்லை.

[பெயர் > பெயர்+ து + அம் > பெயர்தம் > பேர்தம் > பேதம்.

பெயர் என்ற தனிச்சொல்லும் பேர் என்றுமாகும்.]

கிரி பலமொழிகளிலும் வழங்குவது தமிழனின் பெருமை. தன்மொழி வளமை.

தட்டச்சுப் பிறழ்வுகள் திருத்தம் பின்.




வெள்ளி, 1 மே, 2020

புட்டாமாவு (முகப்பூச்சு மாவு)

பழங்காலத் தமிழர்கள்  (பெண்டிர் )   முகத்துக்கு மஞ்சள் தேய்த்துக்கொண்டனர். மஞ்சள் என்பது நோய்நுண்மிகளைக்  கொல்லும் ஆற்றல் மிக வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.  எனினும் இக்காலத்தில் அம்மி குழவி முதலியவை இல்லாமலாகவே,  மளிகைக் கடைகளிலிருந்து சிறு பைக்கட்டுகளில் மஞ்சள் பொடி கிடைக்கிறது. இது குழம்பு வைக்கப் பயன்படுகிறது,  தவிர முகத்துக்குப் பூசப்படுகிறதா என்று தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் முகமாவு சிறு கட்டிகளாகச் சீனாவிலிருந்து வந்தன. அவற்றைத் தேய்த்தால் கையில் மாவு கிடைக்கும். வாசனை உள்ள மாவுதான்.  மலேசியா சிங்கப்பூர் முதலிய இடங்களில் பெண்களும் சிறு பிள்ளைகளும் இம்மாவு பூசிக்கொண்டு  முகம் சற்று வெளிறிக் காணப்பட்டு அழகுநிலையை அடைந்து மகிழ்ந்தனர்.

உலோகப் புட்டிகளில் முகமாவு வேண்டுவோர்க்கு  அதுவும்  கிடைக்கவே செய்தது. இப்போது நெகிழிப் பெட்டிகளில் வருகிறது.

நெகிழி - பிளாஸ்டிக்.

மேற்கூறிய முகமாவுக் கட்டிகளைத் தமிழர்கள் "புட்டாமாவு" என்றனர். மாவுக் கட்டியைப் பிட்டால்  ("புட்டா" ) அது மாவாகிவிடும்.

பிட்டு என்பதைப்  புட்டு என்பதும்  பிட்டால் என்பதைப் புட்டா என்பதும் பேச்சுத் திரிபுகள்.

பிட்டுக்காக மண்சுமக்க வந்தவரும்
வாங்கினார் முதுகுவீங்கப்
பாண்டியன்  கைப் பிரம்பாலே

என்பது ஒரு சிற்றூர்ப் பாட்டு.

நம் மூத்த குடிமக்களிடம் யாம் அறிந்துகொண்டது இது. ( புட்டாமவு)

பிட்டால் மாவு >  புட்டாமாவு, புட்டாமா.

இது இப்போது வழக்கில் இல்லை.


உங்களில் யாராவது முனைவர்ப் பட்டத்துக்கு வழக்கிறந்த சொற்களை ஆய்வு செய்யலாமே. சுரிநாம் முதல் உலகில் பல மூலைகளிலும் தமிழர்கள் இருந்துகொண்டுள்ளனர்.  அவர்களிடம் ஒருகாலத்தில் இருந்து இப்போது மறைந்துவிட்ட சொற்களை ஆய்வுசெய்தல் நன்மை பயக்கும்.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்னர்.