செவ்வாய், 31 அக்டோபர், 2017

பொருள்சேவை வரியும் எதிர்க்கட்சிகளும்!




ஒரு சிந்தனை

விலைகள் ஏறுவதும் இறங்குவதும் இயல்பாதே. அவை ஏறுவதற்கு வரியொன்றே காரணம் என்று முடிவுசெய்வது எப்படி? குறிப்பிட்ட பொருள் வரத்துக் குறைந்தாலும் விலை ஏறுவது எங்கும் காணக்கூடியதே.  அதனால் பலர் வேலையில்லாமல் போனார்கள் என்று கட்சிக்காரர்கள் சிலர் சொல்வது எப்படி நடந்தது என்று தெளிவு கிட்டில்லை.

ஒருவேளை வரிவிதிப்பினால் குறிப்பிட்டவர்கள் விற்கும் பொருள்களை யாரும் வாங்கவில்லை, அதனால் விற்பவர்கள் வேலையிழந்தனர் எங்கிறார்களோ? வரி விதித்தாலும் விதிக்கவிட்டாலும் வேண்டியபொருளைத் தேவைப்படுகிறவர்கள் வாங்கத்தான் செய்வர்.

ரொட்டிக்குப் பத்துக்காசு வரிகூடிவிட்டால் அதை உண்ணாமல் நிறுத்திவிடுவோமா என்ன? அதை வாங்கித்தான் ஆகவேண்டும்.
வரியே கட்டாமல் ஒரு  நாட்டினர் இருந்துவிடமுடியுமா?  நாட்டில் செய்யவேண்டிய வேலைகளையும் இன்னும் தற்காப்பு முதலியவற்றுக்கும்  பணம் தேவையாயிற்றே! தற்காப்புக்காக ஓர்  எறிபடையை உருவாக்குவதற்கு மில்லியன் கணக்கில் செலவிடவேண்டியுள்ளதே!

பொருள்சேவை வரிவிதிப்பின்போது வேறுபல வரிகள் இரத்துச் செய்யப்பட்டன என்று கேள்விப்படுகிறோமே! குறைகூறுவோர் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை போல் தெரிகிறதே…

ஓர் அரசு வரிவிதிக்கும்போது அதை எதிர்த்துப் புகழ் பெற வேண்டுமென்று ாரும் நினைக்கலாம். அதற்காகப் பொருளில்லாப் புதிர்களைக் கட்டவிழ்த்துவிட்டால் – ஒருவேளை படிப்பறிவில்லாத மக்கள் நம்பிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

கட்சிக்காரர்கள் தெளிவான எதிர்ப்புகள் எதையும் முன்வைக்கவில்லை.

(இங்குக் காணப்பட்ட எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. 2.11.2017.)


The English text editor and connected auto correct feature gets confuseð  between Or (English)  and Or (Tamil} which means one. Consequently oru becomes corrected as Or.  If you spot this please inform us.


திங்கள், 30 அக்டோபர், 2017

தக்கை தடுக்கையிலிருந்து......




இன்று “தக்கை” என்ற சொல்லின் அமைப்பை அறிவோம்.

ஒரு புட்டியில் நீர் உள்ளது. அது ஊற்றிப்போகாமலும் காய்ந்து விடாமலும் இருக்கவேண்டுமானால் அப்புட்டியின் வாயை அடைக்கவேண்டும். எழுத்துத் தமிழில் அங்கு பொருத்தப்படும் அடைப்பினை “அடைப்பு “  என்றோ “அடைப்பான்” என்றோ சொல்லலாம்.

பேச்சில் இதை “தக்கை”  என்பார்கள்.  அல்லது ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவோரும் உளர்.

இது ஓர் இடைக்குறைச் சொல்.

நீர் வெளியில் ஊற்றிவிடாமல் தடுப்பதால் அது ஒரு தடுக்கை. இதில் உள்ள டு என்ற எழுத்தைக் குறைத்தால் அது தக்கை என்று சுருங்கிவிடுகிறது. 

இத்தகைய சுருக்குச் சொற்கள் பல தமிழில் மிளிர்கின்றன.

“தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்” என்ற பாடல்வரியில் எல்லாம் என்ற சொல் “எலாம்” என்று குறைந்தது.

இல்லார் என்பது இலர் என்றும் குன்றும்.

இதுபோன்றதொரு மாற்றமே தக்கை என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது காண்க.

தடுக்கை > தக்கை.

இத்தகு பல வசதிகளை உடைய மொழி தமிழாகும்.

குறைச்சொற்கள் தனித்தகுதி பெற்று முழுச்சொல் என்ற மதிப்புடன் மொழியில் வருதலும் உண்டு. இப்படியுள்ள வசதியால் நமக்குச் சொ/ற்கள் அதிகம் கிடைக்கும்.  புதிய சொற்கள் கிட்டும். மொழி வளர்ச்சி காணும்.
தடுக்கை என்ற மூலம் வழக்கிறந்தது நல்லதுதான், அதன்மூலம் தக்கை என்ற சொல் நிறைச்சொல்லாய் நிற்கிறது.





தங்கு > தக்கு > தக்கை.  ( வலித்தலும் ஐ விகுதியும்) எனினுமாம்,
 


தீபாவளியும் வீடு தூய்மையும்

ஆண்டுக்  கொருமுறை தீபாவளி ---- -நீ
அதற்குமுன் ஆத்துக்குச் சாயமடி!
வேண்டாத குப்பைகள் வீசிவிடு---- அ டி
வீதியிலா? உரிய மேட்டிலிடு.

மேசைகள்  கண்ணாடி வீடெங்கினும்--- ஒரு
மேன்மை வரும்படி தூய்மையேசெய்.
ஆசைகொள் வார்வந்து பார்ப்பவர்கள் ---- வரும்
அடுத்தநன் னாள்தமைச் சேர்ப்பவர்கள்.

ஏதும் எனக்கில்லை என்றிருந்தால் --- அக்கா
இருக்கலாம் எப்போது தூய்மைசெய் நாள்?
ஓதும் அந்நாள்உன் தீபாவளி ----ஊருடன்
ஒருநாளில் செய்வதில் தீங்குளதோ?

அகலிகை - உடல் மனம் ஒப்புமைக் கொள்கை



அகலிகை என்பது ஒரு பெண்ணின் பெயர். இது அகல்யா என்றும் இன்னொரு வடிவம் கொள்ளும். இன்னும் “அகலியை” என்றும் சிலர் எழுதுவர்.

இந்தப் பெயரை அமைத்த புலவர் தமிழறிந்தவர். தமிழிலிருந்து ஒரு சொல்லை எடுத்து அம்மொழி அறியாத பாகதங்கள் பேசும் மக்களிடை பரப்பினால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. இப்போது பல நோய்களுக்கு இலத்தீன் மொழியிலிருந்து ஒரு சொல்லை எடுத்து அதிற் சில விகுதி முதலியவற்றை இணைத்துச் சொல்லாக்கி. “அந்த நோய் தான் உம்முடைய நோய்” என்று மருத்துவர் கூறவில்லையா? அதைக்கேட்டு மருண்டு நாமும் மகிழ்ச்சியுடன் காசைக் கொடுத்துவிட்டு அயர்வுடன் வீடு திரும்புவதும் அன்றாட வாழ்க்கையில் உள்ளதாயிற்றே.  அதே போன்ற மதிப்பைத்தான் குறிப்பிடுகிறோம். இத்தகைய தனி மதிப்புக்கு நீங்கள் ஒரு பெயரைச் சூட்டி மகிழுங்கள் -  முன்னரே பெயரிடப் படாமை காணின்.

அகலிகை என்ற பெயரால் குறிக்கப்பட்ட பெண் வேறொரு பெயரில் இருந்து வாழ்ந்து மறைந்திருக்கலாம். கதையில் ஆசிரியர் அந்தப் பெயரையே போடாமல் “அக்லிகை” என்று பெயரிட்டுப் பெருங்கவி யானார் பிற திறங்களும் வந்து உதவி நிற்கும்படியாக..

அகலியைபற்றி ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் குறிப்பிடுவதாய்ப் புலவர் கொள்வர். அந்நூல்கள் உரைக்கும் பொருளை இங்குத் தவிர்ப்போம்.
இனி நம் ஆய்வு:

அ+கல்+இயை:

கல்லாக இருந்து, பின் கல் என்ற நிலையிலிருந்து மாறிப்  பெண்கள் குமுகத்தில் இயைந்தவள்.

இயை (இயைதல்) என்ற வினைச்சொல், பின் யா என்று திரிந்தது.

அ என்பது எதிர்மறை:  அல் என்பதன் சுருக்கம். (கடைக்குறை).  “அல்லாத”.

கல் என்பது பாறையிற் சிறியது.

அகல் (அ + கல் ) என்பதில் வல்லெழுத்து மிகவில்லை.
இயை > இகை. ய- க திரிபு. பழைய எம் இடுகைகளில் விளக்கம் காண்க.


அகல் +  இயை  :  இன்னொரு பொருள்.

அகல்  -  அகலுதல். (கணவனை அகன்று, இந்திரனிடம் போய் )
இயை :  மீண்டும் கணவனிடமே வந்தவள்.

கதை விளக்கம்:

அகலிகை ஒரு பத்தினி 1 
இவள் கெளதமன் சொன்ன கொள்கைகளிலிருந்து மாறி இந்திரன் கொள்கைகளைப் பின்பற்றினாள். பத்தினி தம் இறைவனாகிய கணவனையே பின்பற்றவேண்டும்.  மத நம்பிக்கைகளில் கூட மாறக்கூடாது.. இது கணவனின் கட்டுப்பாடு
.
இந்திரன் கொள்கையைப் பின்பற்றியதால் கற்பிழந்தவளுக்கு ஒப்பானாள். ( உடல் தொடர்பில்லை. ).

இது இக்காலத்தில் அரசியல் கட்சி மாறுவதற்குச் சமம்.

பலர் அவள் செய்ததை ஒப்புக்கொள்ளாமல்  அவளை வைதனர்.  அவர்கள் ஏச்சுக்களை அவள் பொருட்படுத்தவில்லை.  ஆகவே எதையும் கேட்காமையால் “கல்”  எனப்பட்டாள்.

இராமனின் போதனையால் மீண்டும் கணவன் கொள்கைக்கே மாறினாள்.
ஆகவே கல் என்ற திண்மை நிலையிலிருந்து தன்னை மாற்றிக்கொண்டு மீண்டும் நல்ல மனைவி ஆனாள்.  ( கல் என்ற நிலையில் மாற்றம்)

இவை தொழுகைக்கொள்கை தொடர்பான நிகழ்வு ஆதலால் உடலால் அவள் என்றும் பத்தினிதான். மனத்தால் கொஞ்சக்காலம் தன் பற்றினி (பத்தினி)த் தன்மை  இழந்து இகழ்ச்சிப்பேச்சுகளைக் கேளாத கல்லாகி மீண்டு நல்லுணர்வு பெற்றதால் மீண்டும் நல்ல பெண்ணாகி மனத்தாலும் பத்தினி ஆகிவிட்டாள்.

உடலெல்லாம் குறியானது பிற கொள்கையில் அவள் கொண்டிருந்த முழுமையான ஈடுபாடு, மும்முரமான உள்ளாழ்வு.

அவள் பத்தினித் தன்மை மாறாமல் கதை முடிவதற்குக் காரணம் இது உடல்தொடர்பான பற்று அன்மைதான்.

கொள்கை மாற்றமும் உடல் மாற்றத்திற்கு ஈடாக வைக்கப்பட்டது.
அகலியை -  அகன்று இயைந்தவள்.
இந்திர வணக்கத்திற்கு எதிர்ப்பு இருந்தமையை மறைத்துக் கதைசொல்லும் உத்தி இதுவாகும்.

தமிழ் நாட்டிலும் இந்திர விழாக்கள் நடைபெற்றன.  இந்திர வணக்கம் இருந்தது.  நாளடைவில் மறைந்தது.  எதிர்ப்பில் ஆதரவு குறுகி ஒழிந்ததே காரணம்.  இந்திர வணக்கக் கொள்கை என்பதென்ன?  மற்றவகை வழிபாடுகளின் கொள்கை என்ன?  வேறுபாடுகள் என்ன? போராட்டங்கள் எப்படி நடந்தன?  எப்படித் தோற்றனர்? வென்றனர்?  இவையெல்லாம் வேண்டாத விடயங்கள் என்று கதையை வெட்டிவிட்டார் ஆசிரியர். (வால்மிகியாராய் இருக்கலாம்). அகலிகை சோரம் போனாள் என்று கதையை மாற்றிப் பின் கல்லானாள் என்று பிறவற்றை மறைத்து, இராமரால் திருப்பம் அடைந்தாள் என்பதைச் சொல்லி அதனை ஆசிரியர் கோடிட்டுக் காட்டியது பெருந்திறல் ஆகும்.  சோரம் போன பெண் பத்தினியாகவே தொடரமுடியுமோ? முடியாது.  ஆகவே அது சோரமில்லை. அது மனச்சோரம். பிற கொள்கைப் பற்று. உடலால் அவள் பத்தினிதான் என்பதை உறுதிப்படுத்த, இறுதியில் அவளைப் பத்தினியாகவே வைத்துக் கதை முடிக்கிறார்.

இதைப் புரிந்துகொள்ள நமக்குத்தான் அறிவு வேண்டும். புத்தி வேண்டும்.



------------------------------------------
1  (பற்று + இன் + இ). பற்று > பத்து ;  இது பேச்சுத் திரிபு. ).



.