வியாழன், 31 ஜனவரி, 2019

மாளப் பல வழிகள்.

மனிதனையும் நீபடைத்தாய் மாளப் பலவே
வழிகளையும் கூடப் படைத்தாய் ---- புனிதரா
அன்றிப்புன் மையோரா என்றிவற்றை நோக்கிப்பின்
கொன்றிடுவாய் அல்லையே  நீ,


 

புதன், 30 ஜனவரி, 2019

தமிழ் நேசன் நாளிதழ் நிறுத்தம் மலேசியாவில்

தமிழ் நேசன் என்பது மலேசியாவில் ( முன்னர் மலாயா என்று அறியப்பட்ட பகுதியில் )  வெளிவந்து கொண்டிருந்த நாளிதழ்.  பிப்ரவரி ஒன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக செய்தி வந்துள்ளது.

தமிழ்த் தொண்டு புரிந்துவந்த நேசன் இதழ் நிறுத்தப்படுவது கவலைக்குரியதுதான். நேசனால் எழுத்தாளர் நிலைக்குச் சென்றவர்களும் கவிஞர் தகுதி பெற்றவர்களும் செய்திகள் அறிந்து இன்புற்றவர்களும் பலர் ஆவர். சட்டத்துறையில் பட்டம்பெற்ற நம் நண்பர் திரு. அ. மாசிலாமணி அவர்கள் கூட ஒரு கட்டுரையை அதில் வெளியிட்டிருந்தார்.  அது ஒரு குமுக அமைப்பைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை.  அதைத் தொடர்ந்து  பல ஆய்வுகள் வெளிவந்தன. தமிழ் நேசனின் இவ்வாறு நேயம் பெற்ற அறிவாளிகள் பலர் ஆவர்.

இப்போது மலேசியாவில் பல தமிழ்ப் பத்திரிகைகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போது பத்திரிகைகள் நாளிதழ்கள் முதலியவை அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.  எல்லாச் செய்திகளும் கணினி மூலமாகவும் கைப்பேசி மூலமாகவும் வந்துவிடுகின்றன.  உலகம் மாறிவிட்டது.

சிங்கப்பூரில் " தி இன்டிபென்டன்ட்"  முதலிய கணினி வழி இதழ்கள் இப்போது சக்கை போடு போடுகின்றன.  நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும்   இவ் விதழ்களைப் ப் படிக்கமுடியும்.  தாளிதழ்கள் இவ்வாறு பயன் காணக் கூடியவை அல்ல. விற்பனை வீழ்ச்சிக்கு இதுவும் காரணங்களில் ஒன்றாகலாம்.

கவிதை:

முப்பாட்டன் காலமுதல் முத்தமிழைச் சுமந்துகொண்டு
தப்பாமல் தவழ்ந்துவந்த  தமிழ்நேசற் கோநிறுத்தம் ?
எப்பாலா ரும்புகழ இனிக்குநகை யுடன்வருவாய்
எப்போது ம் இனிக்காணா எழிலெண்ணிக் கவல்கின்றோம்.

நாளைமுதல் கோளில்பொறி நயவாநிலை எய்திடினும்
நீளும்பல  நல்லாண்டுகள் நீஇயற்று  தமிழ்த்தொண்டை
நாளும்யாங்  களெல்லாமே  நன்னினைவில்   தாளிகைகள்
பாளையத்துள் அரசெனவே பண்புடனே புகழ்வோமே.
 

செவ்வாய், 29 ஜனவரி, 2019

தமிழ் என்ன மலையாளம் எந்து

இன்று இரண்டு சொற்களைப் பற்றிச் சிந்திப்போம்.

எவனாவது சொல்லிக்கொடுப்பான் என்று காத்திருக்கக் கூடாது.  ஒரு வாத்தியார்  அவருக்கு அவர்தம் ஆசிரியர் கற்றுக்கொடுத்ததையும் தாமே உணர்ந்த சிலவற்றையும் சொல்லிக்கொடுப்பார்.  ஆசிரியர் சிலர் அதிகமாகப் பேசாமல்  மேலீட்டு ஒளிச்செலுத்தியின் ( overhead projector) மூலமாகத் தம்  வரைவுகளைத் திரையில் காட்டி எழுதிக்கொள்ளுங்கள், இவையெல்லாம் தேர்வுக்கு வரும் என்று சொல்லிவிடுவார்.   அதுவும் கற்பிப்பதுதான்.  ஒரு பாடநூலில் உள்ளதைச் சுருக்கிவரைந்து  உதவுவதும் கற்பிப்பு என்றே சொல்வோம்.  இரண்டாயிரம் பக்கங்கள் உள்ள ஒரு பாடநூலை முமுமையாகப் படித்து முடிக்க மாணவன் கரணம் அன்றோ போடவேண்டும்?
விரிவுரையாளர் பேசுகையில் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்ல பழக்கம்.

இனிச் சொற்களைக் கவனிப்போம்.

என்ன என்பது பன்மை வடிவில் உள்ளது.  என்ன என்ற சொல்லில்  இறுதி அகரம் பன்மைப் பொருள் உடையது.  ஓடுகிறது என்னாமல் ஓடுகின்றன எனின் பலவற்றைக் குறிக்கும் காண்க.  து: ஒருமை; அ : பன்மை..

என் +  அ  =  என்ன.

இப்படிப் பார்த்தல்  இது  என்ன?  என்று கேட்பது தவறு என்பது புலப்படும்.  இது என்பது ஒருமை.  என்ன என்பது பன்மை.  ஆகவே பொருந்தவில்லை.  இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

என் என்பதே அடிச்சொல்.  என்ன என்பது அகரம் சேர்ந்த பன்மை வடிவம்.

வாழ்ந்தாலும் செத்தாலும் என்?  என்று பண்டைத் தமிழில் கேட்பதே இலக்கணப்படி சரியானது. இந்த இரண்டு செயல்களுக்கும் ஒருமை பன்மை தேவையற்றதாகும்.

ஒருமை பன்மை என்பது பெரும்பாலும் எண்ணிக்கைக்குரியவற்றுக்கே பொருந்துவது.

ஆனால் மலையாளத்தில் எந்து  என்ற சொல்லே வழங்குகிறது.  என்ன என்பது வழங்கவில்லை.  எந்து என்பது ஒருமை வடிவம்.  என் + து  = எந்து.    வாக்கியத்தில் வரும் சொற்றொடர்ப் புணரியலின்படி  என் து  என்பதை இணைக்க அது "என்று" என வந்து காலக் கேள்வியாகும்.  ஆகவே அப்படிப் புணர்த்தாமல் என் து > எந்து  என்றே முடிக்கவேண்டும்.  அந்தச் சொற்றொடர்ப் புணரியல் இலக்கணம் ( என் து > என்று  எனவாதல் ) இங்குப் பொருந்தாது.  பல சொற்கள் இப்படிப் புணர்வன. சில காண்போம்.

பின் >  பின் தி >  பிந்தி
மன் >  மன்  தி >  மந்தி.
ஆதி  + மன் + தி  =  ஆதிமந்தி  (  சோழன் கரிகாலன் மகள் )
மன் + திறம் >  மந்திரம்  (  நிலையாகும் தன்மை பெற்ற வாயொலி வெளிப்பாடு)

அன் து >  அன்று > அன்றுதல்  (முடிதல் ) 1
அன் தி  >  அந்தி  ( பகலின் ஈற்றுக்  காலம் ) 2
முதலாவது  என்று என்ற பாணியிலும்  இரண்டாவது  எந்து என்ற பாணியிலும் இற்றன காண்பீர்

இரண்டிலும் வருமீறு தகர வருக்கமே .  அடிச்சொல்  அன் . சுட்டு : அ .

இது எந்து?  இது எலி.   ( சரி.  காரணம்: ஒருமை )
இவை என்ன?  இவை எலிகள்  (  சரி.  காரணம் பன்மை)

தமிழில் ஒருமைப் பொருளை என்ன என்று பன்மையில் கேட்பது தவறானாலும் மரபில் வந்துவிட்ட படியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது என்பதை உணரவும்.  ஒன்று தவறாக இருக்கலாம்; இலக்கணத்துக்குப் பொருந்தாததாகவும் இருக்கலாம்,  பரவலாக வழக்கில் உள்ளதாலும் எந்து என்ற வடிவம் தமிழில் வழக்கிறந்துவிட்ட படியினாலும் அதை மலையாளக் கரையிலிருந்து மீட்டுவந்துவிடலாம் என்றாலும் குழப்படி ஆகுமென்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழுவமைதி ஆகிறது,

சரியில்லை என்றாலும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது நம் இலக்கணம்.  ஐந்து பத்து நூற்றாண்டுகள் பின்னால் போய் இத்தகைய தவறுகளைத் திருத்திக்கொண் டிருக்க முடியாதல்லவா?

எழுத்துப் பிழைகள் திருத்தம் பின்

சிவப்பு விளக்கம்

வரலாற்றுக் காலத்துக்கு முந்தியிலிருந்து சிவப்பு என்பது ஓர் அடிப்படை நிறமாகத் திகழ்ந்துவருகிறது.  தமிழரிடை மட்டுமன்று பிற இன்ங்களிடமும் ஒரு பண்பாட்டுக் கூறாக இது நிலவுதல் காணலாம்.   திருமணம் முன்மையான சடங்காகக் கருதப்பட்டமையால்,  சீனா முதலான தேயங்களில் மணப்பெண் முழுமையாகச் சிவப்பினால் அலங்காரம் செய்யப்பட்டுக்  கூடி யிருப்போர்முன் கொண்டுவரப்படுகிறாள்.   அங்கு சிவப்பே மங்கல நிறமாகும்.  இதேபோன்று ஏனைப் பண்பாட்டு நாடுகளிலும் சிவப்பு கோலோச்சியுள்ளது.  
 நாம் சிவப்பு(குங்கும)ப்பொட்டு இடுவதன் காரணமும் மங்கலம் எனற் பொருட்டே. கும் என்பது ஒரு தமிழ் அடிக்சொல். இதற்குச் சேர்த்துவைத்தல் என்று பொருள்.  இதை அறிந்துகொள்ள குமித்தல் என்ற சொல்லைப் பாருங்கள். கும்> குமி. நெல்லைக் குமித்து வைத்தார்கள் என்பார். குமி பின் குவி என்று திரிந்தது, மகர வகரப் போலி.
 மிஞ்சு > விஞ்சு,  மகர வகரப் போலி. நாம் குங்குமம்  இடுவது இந்தக் கூட்டுறவைக் குறிப்பதே. ஆண் பெண் இணைந்த இல்லற வாழ்க்கை.  கும் என்ற அடிச்சொல் இரட்டி வந்து அம் விகுதி பெற்றது: கும்+கும்+அம் = குங்குமம். கும்முதல்:  குமுக்குதல்;  கும்> கும்மி;  கும்> கும்மாளம். இவை இணைந்து செய்தல் அடிப்படைக் கருத்து. 
நாளடைவில் சில குவிதல் = கூடுதற் கருத்தில் சற்று நீங்கி நிற்கலாம். பிற்காலத்து கும் என்பது சிவப்பு என்ற பொருள்டைவு கொண்டது. குமரி என்பதும் திரட்சிக்கருத்து ஆகும்.  இளமையில் உடல் திரட்சியே பெரும்பான்மை.
முழுமுதல் கடவுளான சிவனை,  எடுத்துரைக்கும் நிறம் சிவப்பே ஆகும்.  சொல்லமைப்பும் சிவ> சிவப்பு;   சிவ> சிவ+அம் =  சிவம் என்றிருத்தலை அறியலாம். செங்கதிரோன் என்பதே சூரியனுக்குத் தமிழில் பெயர். வெண்கதிரெனற்பாலது நிலவு குறிப்பதே.  பெண்ணுக்கும் கவிகள் சிறப்பாக ஓதுவன செவ்விதழும் புன்சிரிப்புமாகும்.   
சிவனிலிருந்து தோன்றிய முருகப் பெருமானும் செவ்வேள் என்றே தமிழ் நூல்கள் ஓதுகின்றன. தீமை ஏதுமிலாத அடிகள் செவ்வடிகள்:  இது செ+ அடி =  சே+அடி =  சேவடி ஆகிறது.  செக்கல் செக்கம் என்பனவும் செம்மை நிறமே.   செய்ய தாமரை என்பதென்ன?
நீரால் கழுவப்படும் மலர் கழுமலர்.   இது பின் தன் ழுகரத்தை இழந்து கமலம் என்று ஆனது.  இது அயற்றிரிபில் கமல என்று மாறிற்று;.  இத்தகைய சொற்றிரிபுகள் தமிழின் வளத்தைக் காட்டுகின்றன.
செந்தமிழ் என்பது பிறமொழி விரவாத நல்ல தமிழ்.  செம்மை நிறம் எதைக் குறிக்கிறது கண்டீரோ?  செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்கிறார் பனம்பாரனார்.  சிவணுதல் என்றால் பொருந்துதல்;  அதுவும் செம்மையாகப் பொருந்தி நிற்றல்.  சி:   செம்மை;  அண் =  அண்மி நிற்றல்.  சி+ அண் =  சிவண் >  சிவணுதல்.   சிறப்பாகப் பொருந்துதல் என்பது சொல்லமைப்புப் பொருள்.
இவற்றையும் படித்து சிவப்பைப் பற்றிய புரிதல்களை விரித்துக்கொள்ளுங்கள்:

மரங்கள் ஆடியது நாட்டியமா உடல்பயிற்சியா?

ஒளிமங்கிய மாலையிலே களிபொங்கிய ஆட்டம்
ஒவ்வொன்றாய் இலைகொம்பு கிளையெல்லாம் கூட்டும்
வளியெங்கும் புகுந்தோடி வழைச்சுறுத்தும்,   சீன
வளைநீரில் மேலெழுந்து வந்தடைந்த  வற்கே;

கலைகளிலே நாட்டியமோ கிளைகளுமே மேவிக்
காட்சியிதைப் படைத்தனவே கைகால்கள் போல
இலைகிளைகள் அசைவும்தான் மரங்களுமே செய்யும்
ஏற்றதொரு உடல்பயிற்சி எனப்புகலல் சாலும்.

அசைவில்லா மரங்களவை உடற்பயிற்சி  கொள்ளும்
அணியில்லை என்பதெலாம் அறியாரின் சொல்லோ?
இசைவெல்லும் மெல்லொலியும் எழுகின்ற தம்மா
இயற்கையழ கிதனையான் என்னென்று சொல்வேன்.


அரும்பொருள்

களி -  மகிழ்வு
வழைச்சு -  புதுமை  fresh
"வழைச்சற விளைந்த" (பெரும்பாணாற்றுப்படை 280)
வழைச்சுற  ( எதிர்ச்சொல்)  வழைச்சற.
கூட்டும் -  நடத்தும்
சீன வளைநீர் -(   தென்)   சீனக் கடல்
வற்கு -   அழகு   (வல்+கு,  வன்மையான அழகு)
ஒரு  -  கவிதையில் ஓர்  எனற்பாலது
ஒரு என்று வரும்.
புகலல் -  சொல்லுதல்.
அணி -  வகை, பிரிவு

வல் + அழகு = வல்லழகு : இதில் லழ என்பது குறைய வல்கு என்றாகும்.
வல் கு என்பவை புணர்த்த வற்கு என்பது இறுதியாம்.  இது இடைக்குறைச் சொல்  ஆகும்.

நீரைக் கழுவிய படி (  தொட்டுக்கொண்டு)  மலர்ந்து நிற்பது  " கழுமலர்",  செந்தாமரை என்பது  செங்கழுமலர் அல்லது செங்கழுநீர்மலர்.  கழுமலர் என்பதில் ழு  மற்றும் ர் என்பவை நீங்க கமல என்றாகும்.  இடைக்குறையும் கடைக்குறையுமான சொல்.  இது பின் அம் விகுதி பெற்றுக் கமலம் ஆகி  தமிழன்று என்று குறிக்கப்பட்டது,  இதன் இடைக்குறை அமைப்பை அறியாமல்தான்.  கமலம் என்பது ஒருவாறு தனிச்சொல்லாக ஏற்றமுற்றுவிட்டது.

தாமரை என்பதும்  நீருடன் தாழ்ந்து அதை மருவி நிற்கும் மலர் எனப்பொருள் தரும் சொல்.  தா :  தாழ் என்பதன் கடைக்குறை.  மருவு என்பதில்  மரு + ஐ என்று சேர்க்க மரை ஆகிறது.  ஆக :   தாமரை.


திங்கள், 28 ஜனவரி, 2019

வேற்றுமை வித்தியாசமான கதை

வே என்ற எழுத்துக்கும் ( வேகாரம் )   வி என்ற எழுத்துக்கும்  (  விகரம் )  உள்ள ஓர் ஒலித்தொடர்பினை இப்போது கண்டு இன்புறுவோம்.

வேதம் என்ற சொல் வித் என்னும் சொல்  லடிப்படையில் தோன்றியதென்று  ஏறத்தாழ சில நூற்றாண்டுகட்கு முன் சொல்லியிருந்தனர்.  அதனை இன்றும் பலர் மகிழ்வுடன் சுட்டிக்காட்டுவதுண்டு.

வித் >  வேத்    :  வேத் + அம் = வேதம்  என்றனர்.

இவர்கள் இப்படிக் கூறக் காரணம் நாம் இங்குக் கூறியவாறு இவ்வொலிகள் திரிதொடர்புடையன என்பதே.

வேறு,  வேற்றுமை என்ற சொற்கள் தமிழில் உள்ளன.

அதே பொருளுடைய இன்னொரு சொல்:  வித்தியாசம் என்பது.

இங்கும்  வே > வி தொடர்பு நல்லபடியாகப் பளிச்சிடுகின்றது.  ஆதலின் திரிபு வகையை ஒரு விதி அல்லது முறைப்படியானது என்று சொல்வது சரியானதே.

திரிபுமுறை சரி என்றாலும் அடிச்சொல்லாகத் தரப்பட்டது சரிதானா என்பது இன்னொரு கேள்வி.  அதற்குள் நாம் இப்போது செல்லவில்லை.

வே < வி;  வே > வி. இரண்டும் முறைப்படியானவை.

வேறு > வேற்று >  வேத்து > வித்து

வேறு என்பது சொல்லின் உரு வேற்று என்று இரட்டிக்கும்: அதை வேற்றுமை என்ற சொல்லில் கண்டறிவது ஒன்றும்  கடினமில்லை.

வேற்று என்பது வேத்து என்று ஊர்ப்பேச்சில் திரியும்.  வேற்று ஆள் என்னாமல் வேத்தாள் என்று பேச்சில் சொல்வதால் இது தெரியக்கூடியதுதான். இதை அறியவும் பெரிய மூளை வேண்டியதில்லை.

வேத்து என்பது வித்து என்று மாறுவது  மேற்சொன்ன விதிமுறைகளுக்குள் அடங்கிய ஒன்றுதான்.  அதிலும் நமக்கு  ஒரு கருத்துவேற்றுமை இல்லை.

வித்தியாசம் என்பதில்   இ - யாசம் என்பவற்றைக் கவனிப்போம்.

ஆயது = ஆனது.

ஆய+  அம் =  ஆயம்   ( ஆனது )

வித்தி  என்ற முதற்படிச் சொல்பகுதியில்  வித்து என்பது வித்தி என்று மாறியது.

வித்து ஆயம் என்றால் நன்றாக இல்லை.   எச்சச் சொற்களில் வருவதுபோல அதை வித்தி  ஆயம் என்பது நன்று.   விரும்பு என்ற சொல் எச்சமாகும்போது விரும்பி என்பதுபோலும்   சொல்லு என்பது சொல்லி என்று வருவது போலும் ஓர் அமைப்பு இது.   ஆய என்பது வினைச்சார்பான அமைப்பு ஆதலின் இகரம்
பொருந்துகிறது.  வித்தி  ஆய  என்பது மிக்க நன்று.

இனி  யகரம்  சகரமாகும்.  எடுத்துக்காட்டு:  நேயம் >   நேசம்;  வாயில் > வாசல்.

இங்கு  வித்தி ஆய என்பது வித்தி ஆச என்று மாறுகிறது. அப்புறம் இவற்றைப் புணர்த்தினால் வித்தியாச என்றாகிறது.   அம் விகுதி சேர்த்தால்  வித்தியாசம் ஆகிறது.



திரிபு விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டுள்ளன என்பதைக் கண்டு மகிழலாம். இதை முறையாக விளக்கியுள்ளோம்.


எழுத்துப்பிழைத் திருத்தம் பின். 

மற்றொரு விளக்கம்: பந்து பந்தி சிப்பந்தி.

சிப்பந்திகள் முற்காலத்தில் தனியாய்ச் செயல்படாமல் தம் வேலைத்தலைவரைப் பற்றியவாறே சென்றுள்ளனர் என்பது சொல்லாய்வின் மூலம் அறிந்ததாகும்.  எடுபிடி என்பார் போலவேதாம்.  எடுபிடிகள் ஏவுவாரை ஒட்டியவாறே நின்று உத்தரவுகளைப் பெற்றுச் செயலாற்றவேண்டும். சிப்பந்தியரும் அன்னவரே ஆவர்.

இதில் நாம் உணர்தற்கு முன்மையான சொல் பந்தி என்பதே.

பலர் இருந்து உண்பதே பந்தி.

பல் > பன் > பன் தி > பந்தி ஆம்.

முந்தி பிந்தி என்ற சொற்கள் போலவே இதுவும்.   முன் தி  : முந்தி;  பின் தி:  பிந்தி.

 மந்தி என்பதும்  அன்னதாம்.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொல்.
மன் தி  >  மந்தி.   மனிதன் போன்ற விலங்கு.

பல் என்பதில் இறுதி லகர ஒற்று   -னகர ஒற்றாக மாறும்.

பல் > பன்.    இவ்வாறு சொற்புணர்ச்சியிலன்றி  சொல்லும் தனியாய் மாறும்.

எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.

ஆகப் பல் என்ற பன்மைக் கருத்தினின்றே பந்தி வந்துள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பண்டை நாட்களில் பந்துகள் பல கயிற்றுப் பிடிப்புகளால் உருவானவை ஆம்.
பல் >  பன் > பந்து.  இப்போது தேய்வையால் பந்துகள் உருவாகின்றன.

பல் என்பது பிடித்துக்கொள்ளுதலையும் குறிக்கும்.

பல் > பன் > பன் து  அம் =  பந்தம்.  மணவுறவுகளால் பற்றுடையராதல்.  உறவால் பலராதல்.   ஒன்றை இன்னொன்று பற்றுவதானால் அது ஒருமையில் நடவாது;  பன்மை வேண்டுமாதலின்  பந்தம் போலும் சொற்களில் பன்மைக் கருத்து உள்ளிலங்குவதாகும்.

சிப்பந்தி என்பதில் சில் பல் இரண்டுமுண்டு.  சில் என்பது சி என்று கடைக்குறை   ஆனதென்றும் கொள்ளலாம்;  அன்றிச்  சில் + பந்தி > சிற்பந்தி > சிப்பந்தி என்று திரிபென்றும் கொள்ளலாம்.  இருவழிகளும் நன்றே.

இவை முன் சற்று வேறு விதமாக விளக்கப்படினும் ஒன்றென்றே அறிக.

எழுத்துப் பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

விகுதி இல்லாத சொல்லுருக்கள்.

சொற்களின் அமைப்பில் பகுதி விகுதி சந்தி இடைநிலை சாரியை என்று பல சொல்வர்.  இப்போது நாம் இவற்றில் எவையுமற்ற சொல்லமைப்புகள் சிலவற்றைக் கண்டு இன்புறலாமே.

எடுபிடி என்ற சொல்லைக் கவனியுங்கள்.   ஒரு சீமானுக்கு வேண்டியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிப்பந்தியைத் தான் எடுபிடி என்`கின்றோம்.  எடு என்பது ஒரு வினைச்சொல். பிடி என்பதும் ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டுச்சொல்லாகி இது அமைந்துள்ளது.

கெடுபிடி என்ற சொல்லும் அன்னது.  கெடுதல், பிடித்தல் என்பனவே  இணைந்து ஒரு சொல்லாகிவிட்டது.

வருமானம் என்பதற்கு ஈடாக வரும்படி என்ற சொல்லும் வழங்குகிறது.  இதில் படி என்பது சிறு வகையினவான வரத்துகளைக் குறித்ததுபோலும்.  வரும் என்பது எச்சவினையாகும்.

இரு தொழிற்பெயர்கள் இணைப்பில் அமைந்ததே பேச்சுவார்த்தை என்ற சொல் வழக்கு ஆகும்.  பேச்சு வார்த்தை என்பன ஒரு பொருளன போல் தோன்றிடினும் அவை குறிப்பது ஒரு அலுவலகப் பூர்வமான ஓர் உடையாடலையே  ஆகும்.

பேச்சு என்பதில் விகுதி இல்லை.  பேசு > பேச்சு;  இங்கு சகரம் இரட்டித்துச் சொல் அமைந்தது, வார்த்தை என்பதில் ஐ விகுதியாகும். தகர ஒற்று இடைநிலை என்று சொல்க.  இரும்பு ஈயம் போலவே வார்த்தைகளும் வார்த்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்துகொள்க.  வார் என்பது ஏவல் வினை. வார்த்தை :   இது வார்த்தல் என்பதன் சார்பில் அமைந்த சொல்லாகும்.

சனி, 26 ஜனவரி, 2019

அடிச்சொற்கள் மூலங்கள் வேறுபாடு.

சென்ற இடுகையில் பேதி,  பேதா என்ற சொற்களைப் பற்றி உரையாடினோம்.

இவற்றின் அடிச்சொல் பெய்தல் ( உடலிலிருந்து வெளியேற்றுதல்,  அல்லது வானிலிருந்து பொழிதல் ) எனற்பாலது உணர்விக்கப்பட்டது.

இதன் தொடர்பில் வேறு சில சொற்களையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

பேதம் (  அதாவது  வேறுபாடு ) குறிக்கும் சொல்லும் உள்ளது.  இதுவும் பே என்ற சொல்லினின்றுதான் வருகிறது என்றாலும்  இவற்றின் மூலச் சொற்கள் வேறுபட்டவை என்பதை இப்போது புரிந்துகொள்வோம்.

பெய்தல் (  அடிச்சொல் .)

இது பெய் > பே  என்று திரிந்து பேதி, பேதா முதலிய சொற்களைத் தோற்றுவித்தது.

பெய் > பே > பேதி:  உடலினின்றும் வெளியேற்றுகை.

பெய் > பே >  பேதா :   கண்டவுடன் கழிச்சலாகிய அச்சத்தைத் தருபவன்.

இவற்றுள் இரண்டாவது குறித்த சொல் போலும் இன்னொரு சொல் "வாய்தா" என்பதாகும்.

வருவாய் தா என்பதன் சுருக்கச் சொல்லே வாய்தா.  விளைச்சலிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி ஒதுக்கப்படும்.  அதைத் தருவதுதான் வாய்தா. தா என்பது ஓரெழுத்து ஒருசொல் ஆதலின் அதில் சுருக்கம் ஒன்றுமில்லை. வருவாய் என்பதில் வரு என்பது வெட்டுண்டு, வாய் என்று நின்று தாவுடன் புணர்ந்து சொல்லமைந்தது காண்க.

பேதா என்பதில் தாவென்பது தருவோன் என்று உயர்திணைப் பொருளையும் வாய்தா என்பதில் தரப்படுவது என்று அஃறிணைப் பொருளையும் குறித்ததனால் சொல்லில் இல்லாத பொருட்களைத் தழுவிய தாவென்னும் ஈற்றுச்சொல் இந்தச் சொல்லமைப்பில் இயற்சொல்லாகாது.  திரிசொல்லே.  தா என்பது ஏவல் வினையாகிக் கொடு என்பதற் கீடாய் வருமிடத்து அது இயற்சொல் ஆகும்.  இத் திரிசொற்களின் ஒரு பாதி அடிச்சொல் பெய் என்பதன் திரிபாதலின் இயற்சொல்லன்று என்பதற்கு அதுவும் ஒரு கூடுதற்  காரணமும் ஆகும்.  முடிபு இவை திரிசொற்கள் என்பதேயாகும்.

தமிழிற் திரிசொற்கள் பலவாதலின் திரிசொற்களெல்லாம் தமிழன்று   என்ற வாதம் மடமை ஆகும்.

ஆனால் பேதம் என்பதன் அடிச்சொல் வேறு.  அது பெயர்தல் என்பதன் அடிப் பிறந்ததாகும்.   பெயர் என்பது பே என்று திரியும்.   பெயர் என்பது பேர்  ( எத்தனை பேர்?  உன் பேர் என்ன? ) என்பதாய் மாற்றம் கொள்ளுதல்  பேச்சு வழக்காதலின் இப்போது:

பெய் >  பே;
பெயர் > பே;    என

இருவாறு வருதல் அறிந்து கொள்க.

அடுத்த பேபே என்ற அச்சக்குறிப்புக் கிளவியும் அடிச்சொல்லாகிப் பிற சொற்களைப் பிறப்பிக்கும்.  இப்படி அமைந்தது பே> பேய் என்ற என்ற சொல்.

பேபே என்பது மழுப்பல் கருத்திலும் வரும்:  " உனக்கும் பேபே, ங்கொப்பனுக்கும்  பேபே "  என்ற சிற்றூர்த் தொடர் காண்க.


அறிந்து மகிழ்வீர்.

பிழைகள் பின் திருத்தம்பெறும்.


கழிச்சலைத் தந்த பேதா.

தமிழ் நாட்டில் சிற்றூரில் வாழும் மக்கள்  பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சி நடுங்கினோர்தாம். சங்க இலக்கியங்களில் எந்தக் குழுவினரும் எங்கேயும் போராட்டங்கள் செய்ததனைக் குறிக்கும் பாடல் எவையும் யாம் படித்ததாக நினைவில் இல்லை.  இருந்தனவெனின் அவற்றைப் பின்னூட்டம் செய்து உதவவும்.  இல்லை என்றே நினைக்கின்றோம்.

கணவன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பிக்க மதுரைக்கு எழுந்த கண்ணகி ஒரு தனிப் போராளியே யன்றி  அவளுக்குப் பின் ஒரு பெரிய படை திரண்டு மன்னனை எதிர்த்தல் போன்ற செய்திகளை  யாமும் கேள்விப்படவில்லை.  அக்காலத் தமிழகத்தில் போராட்டங்கள் மிகக் குறைவு அல்லது இல என்றுதான் முடிக்கவேண்டும்.

போராட்டம் மறியல் கறுப்புக்கொடி காட்டுதல் எழுச்சிப் பேரணி எல்லாம் இற்றைத் தமிழில் ஏற்பட்டுள்ள தொடர்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் அச்சவுணர்ச்சி கூடுதலாக உள்ளவர்கள். சாதிச் சண்டைகளை வைத்து அவர்களில் எத்தரப்பினரும் வீறு உடையோர் என்று  கூறுதற்கில்லை.  இத்தகு அச்சவுணர்ச்சி உடையோர்க்குப் பயிற்சி அளித்துப் படைநடத்தி வெற்றிகள் பல பெற்ற இராச இராச சோழன் போன்றவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்.  ஒரு சிறந்த படைத்தளபதியின் கடமை திறமை என்பன வெல்லாம் கோழைகளை வீரர்களாக்கிப் படைநடத்துவதுதான். இப்படித் திறன்பல உள்ள மன்னர்கள் தமிழருள் ஏராளமாக இருந்துள்ளனர் என்பதைப் புறம்,  சிலம்பு முதலியவை மிக்க  நன்றாக எடுத்துக்காட்டுகின்றன.

உடல்நலத்துறையினர் ஊசிபோட வந்துவிட்டால் ஓடி ஒளிந்துகொள்வோர் இன்னும் நாட்டில் உள்ளனர் என்று தெரிகிறது.

ஒரு போலிஸ்கரன் அல்லது காவல்துறைஞன் ஊருக்குள் வந்துவிட்டால் ஓடி ஓளிந்துகொள்வது இவர்கள் இயல்பு. கொஞ்ச காலத்துக்கு முன் காவல்துறைஞனுக்குப் பேதா தாணாக்காரன் என்ற பெயர்களெல்லாம் இருந்தன.  இன்று கோவிலில் நடப்பது பேதாமார் உபயம்,  நேற்று தாணாக்காரன் வந்தான் என்பன போலும் உரையாடல்கள் அந்தக் காலத்தில் மிகுதி.

அவன் வந்தவுடன் சிலருக்குக் கழிச்சல் வந்துவிடும்.  அல்லது சிறுநீரை அடக்கிக்கொள்ள முடியாமல் போய்விடும்.  அப்படிப் பட்ட அவனுக்குத்தான் பேதா என்பது பெயர்.

பெய் + தா >  பெய்தா > பேதா.  (  பெய்தலை அல்லது பேதியைத் தருபவன் )

பெய் என்பதிலிருந்தே பேதி என்ற சொல்லும் அமைந்தது.  பெய்  தி >  பேதி.  இது முதனிலை நீண்ட தொழிற்பெயர்.  பேதியாவது கழிச்சல்.

செய்தி என்பது சேதி என்று திரிந்தன்ன மாற்றமே  பெய்தி எனற்பாலது பேதி என்று திரிந்தமையும் என்று உணர்க.

தட்டச்சுப்பிழைகள் காணின் பின் திருத்தம் பெறும்.




வெள்ளி, 25 ஜனவரி, 2019

நாளைத் தமிழ் மணம்

நித்தலும்  வளரும் கருத்துகளை
நிறுத்தம் இலவாய் எழுதிடுவேன்
மெத்தவும் மகிழ்வு தருமிதனை
உத்தமம் செய்பொழு தின்றிலதே;

நேற்றும் தருணம் வாய்த்திலது
நினைப்பு மட்டும் உறுத்தியது;
காற்று வாங்கும் படிநேர்ந்த
கரிசில் பயணம்  பொருத்தமுற.

இன்றும் ஓய்ந்த வாறிருந்து
நாளைக் கருத்துகள் தந்திடுவேன்;
பொன்றாப் புகழ்சேர் தமிழ்மலரும்
பூத்துப் பொலிந்து மணம்தருமே.



செவ்வாய், 22 ஜனவரி, 2019

இல்லமொழி தமிழ்


வீதம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.

தமிழ் அதன் தொடக்க காலத்தில் பல குழுக்களால்பேசப்பட்டு வந்த மொழி என்றே ஒரு வரலாற்றாசிரியன் முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவுக்கு அவன் வராமல் ஏதேனும் கூறுவானாகில் அவன் தேர்வில் பட்டங்கள் பெற்றிருக்கலாம்வேறுமொழிகளைக் கற்றிருக்கலாம், அவனுக்குத் தமிழ் வரலாறு  சரியாகத் தெரியவில்லை என்றுதான் பொருள்.

தமிழ் மொழியில் திரிபுச் சொற்கள் மிக்கிருந்தன என்பதே உண்மை. இதனாலன்றோ தொல்காப்பியனார் தம் சொல்லதிகாரத்தில் இயற்சொற்களுக்கு அடுத்தபடியாகத் திரிசொற்களைச் சொல்லுகிறார். அதற்கடுத்த நிலையையே வடசொல் என்று தமிழ் நாட்டு மரத்தடிகளில் வழங்கிய சொற்களைக் கூறுகிறார். வடம் என்பதற்கு உள்ள அர்த்தங்களைக் காணின் இது தெற்றெனப் புலப்படும். தொடார்பற்று வடக்குத் திசையில் வாழ்ந்த மக்களை அவர் குறிப்பிட்டார் என்று சொல்வதற்கில்லை.

தமிழ் என்பதற்குப் பற்பல சொல்மூலங்களை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒரு நூற்றுக்கு மேற்பட்டவை கிட்டலாம். தமிழ் என்பது தனித்து நிற்கும் மொழி என்று கூறுவதும் உண்டு. இதற்குக் காரணம் : தமி என்பது தனி என்ற பொருளுடையதாக இருப்பதுதான். தன் என்பதிற் பிறந்த தனி என்று சிந்திப்பதைவிட தம் என்ற பன்மை வடிவிற் பிறந்த தமி என்றுதான் சிந்திக்கவேண்டும். தமி என்று எடுத்துக்கொண்டால் பன்மை வடிவானமையால் பல குழுக்களால் பேசப்பட்டு வந்த மொழி என்று கொள்ளுதல் வேண்டும். அதுவும் இக்குழுக்கள் தங்கள் இல்லத்தில் பேசிய மொழியாதல் வேண்டும். இப்படிச் சிந்தித்த கமில் சுவலபெல்லும் தேவநேயப் பாவாணரும் இதைத் தம் இல் மொழி என்று கூறினார்கள். தமில் ( தம் + இல் ) என்பதே தமிழ் என்று திருத்தமுற்றது என்'கின்றனர். இது உண்மையானால் இல்ல மொழியுடன் இல்லத்துக்கு வெளியில் வேறு மொழியும் வழங்கி வந்ததென்று பெறப்படும். அது அல்லது அவை எந்த மொழி(கள் ) என்று தெரியவில்லை, தம் என்று பன்மை வடிவிலிருந்து சொல் தோன்றியிருப்பதால் பல குழுக்களின் மொழி என்பது தானே பெறப்படுவதுடன், அவற்றுள் திரிபுகள் இருந்தன என்பதும் பெறப்படும். ஆகவே தொல்காப்பியர் திரிசொற்களை அடுத்துக் கூறியது ஏனென்பதுவும் பெறப்படும். இல்ல மொழி என்றாலே வேறுமொழிகளும் நடமாடின என்று பொருள்கொள்ள வழிவந்துவிடும்.

இதனாற்றான் விழுக்காடு குறிக்கும் வீதம் என்ற சொல் பலவாறு திரிந்தும் ஓர்முடிபு கொள்கின்றது என்பது நம் சிந்தனைக்குள் வருவதை அகற்ற முடியவில்லை. இன்னும் எண்ணிறந்த சொற்களும் இப்படியே ஆகும்.


கெடார் நாத் நகரும் கோவிலும்

கெடார்நாத் என்பது இந்தியாவில் உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஒரு மலை நகரம் ஆகும்.  இங்குத்தான் கெடார்நாதன் கோவில் உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே.  இந்தக் கோவிலுக்கு யாம் சென்றதில்லை என்றாலும் சென்றுவந்த ஒரு பற்றரான நண்பரிடம் அக்கோவிலைப்பற்றிக் கேட்டறிந்திருக்கிறேன்.   தமிழ் நூல்கள்: "கற்றிலனாயினும்  கேட்க"  என்று சொல்கின்றபடியினால் போய் அறியாவிட்டாலும் இந்த சிவத்தலத்தை அறிந்துகொண்டதில்  மிக்க மகிழ்ச்சியே  ஆகும்.

கெடார் என்பது  பயிர்விளையும் நிலம் என்று பொருள்படும் என்று  கூறுகிறார்கள்.  ஆன்மிகப் பயிரை வளர்க்குமிடம் என்று இதற்குப் பொருள் கூறுவர்.  கெடார என்ற சங்கதச் சொல்லைச்  சுட்டிக்காட்டுவர்.  இச்சொல் சமத்கிருதத்துக்கு முந்திய பாகத ( பிராகிருத ) மொழிகளிலும் இருந்திருக்கவேண்டும்.  ஏனென்றால்  பாகதங்களிலிருந்தே சங்கதம்  திருத்தி அமைக்கப்பட்ட  மொழி ஆகும்.

2013ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த நகர் அழிந்து பல்லாயிரவர் மாண்டுவிட்டாலும்,  கோவில் மட்டும் அழிவின்றித் தப்பியது ஒரு வியப்பே ஆகும்.  இங்கு மந்தாகினி என்ற ஓர்   ஆறு ஓடுகிறது.  குளிர்காலத்தில் இங்கு வாழ்வோர் வேறிடங்களுக்கு  இடம்பெயர்ந்துவிடுவர்  என்று அறிகிறோம்.

கேட்டறிந்த செய்திகளைக் கொண்டு யாம் ஒரு கவிதை எழுதி வெளியிட்டோம்.  12 வரிகள் உள்ள அந்தக் கவிதையில் நான்'கு வரிகளே இப்போது நினைவில் உள்ளன.  பிற அழிந்தன.

இந்த சிவத்தலத்தைப் பற்றிய அந்த நான்'கு வரிகள் வருமாறு:

ஆதிசங்கரர் அமைகல் உடையது  கெடார்    நாத--நகர்;
ஓதி எங்கணும் பரந்தஒளிச்சிவம்   விடார்     மூத--றிஞர்
யாது வந்து  மந்தாகினி கரைப்புனல் அடாக்   கீழு---தலால்
மோதிச் சாயவும் முனைவர் அரன்'தனை    தொழார்  அமைந்திலரே

திங்கள், 21 ஜனவரி, 2019

இன்னொரு கணினியால் வரைந்த பாடல்.....

வழுக்கினுள்ளே  வைத்துவிட்டோம் வழக்கம் போலே
வண்டமிழில் இடுகைகளை எழுதும் கோலாய்
இழுக்கமிலாச் சேவைபுரி  கணினி  தானும்
எம்முன்னே  காட்டியதே வெண் தி   ரையே.
முழுக்கவதன் உள்சென்று  ஆய்ந்த போதும்
முயற்சியது பலிக்கவிலை மூளி யாமே.
இழுக்கவர மாட்டாத மாட்டைப் போலே
இன்னல்தந்த தாலிதுவே  இன்னொன் றம்மா.

சிலமணி நேரம் இணையத் தொடர்பும் கிட்டவில்லை. இனி
நல்ல நேரம்.....







ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வேடம்: டகரத்துக்கு ஷகரம்.

சில மொழிகளில் ட என்பதும் த என்பது ஷ என்றும் ஸ என்றும் ஒலிக்கும். இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இதை நீங்கள் சில அன்றாடச்  சொல்வழக்குகளி   லிருந்து  அறிந்துகொள்ளலாம்.

ஒத்நீல் என்ற பெயர் ஒஸ்நீல் என்று ஒலிக்கப்பெறுகிறது.
ஒத்மான் என்று  எழுதிவைத்து விட்டு ஒஸ்மான் என்று அழைக்கிறார்கள்.

சில மொழிகளில் ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்கின்றன.  ஆனால் தமிழில் ஓர் எழுத்துக்கு ஓர் ஒலியே உள்ளது.  இது மொழிமரபு..

டி ஐ ஓ என் என்ற எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பின்னொட்டுக்கு ஷன் என்ற ஒலித்தரவு உள்ளது.  சிட்டுவேஷன் என்பதை எழுதிப் பார்த்தால் டி என்ற எழுத்துக்கு ஷ என்ற ஒலி வரும்.

வேடம் என்ற சொல் பின்  வேஷம் என்று மெருகு பெற்றுள்ளது. டவுக்கு ஷ வந்தது.   சரிதானே? சிற்றூரார் இதனை வேசம் என்று சொல்வர்.  தமிழிலும் டகரத்துக்கு  மெலித்த சகரமும்  அயல் ஒலி ஷகரமும் பயன்பாடு கண்டுள்ளன.   இது தமிழின் ஒலிமரபுக்கு ஒத்ததன்று என்பது நீங்கள் அறிந்ததே.  பிராமணரான தொல்காப்பியனாரே அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பர்.  வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாவை நோக்குக.

வேஷம் என்பது வடசொல்.  வேடம் என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் நாட்டில் இருக்கும்போது வேட்டி கட்டிக்கொண்டால் இங்கிலாந்துக்குப் போனவுடன் கால்சட்டை போட்டுக்கொள்ளலாம். மனிதன் அவன் தான்.  வேடம் வேறுவேறு.

சமஸ்கிருதம்  மேலைத்தரவு என்று நினைத்தால் வேடம் என்பதன் மூலம் வே என்ற தமிழே.   அது உள்நாட்டு மொழி என்பதனால் வே என்பது இரண்டுக்கும் பொதுவான அடிச்சொல் என்னலாம். ஏனென்றால் அடுத்தடுத்து வாழ்ந்த குகை மாந்தர்கள் இந்த ஒரே வே என்ற அடிச்சொல்லைப் பகிர்ந்து பேசி இருக்கலாம்.

வேடு என்பது பானையின் வாயில் கட்டப்படும் மூடுதுணி ஆகும்.  தயிர்ப்பானைக்கு வேடு கட்டிப் பூச்சி புழுக்கள் உள்ளே போய்விடாதபடி காப்பது பண்டை வழக்கம். இப்போதெல்லாம் ஒரு மூடியைப் போட்டு வைக்கின்றனர். தயிர் வந்துவிடுகின்றது.  உறைமோர் ஊற்றித்தான் அது வரும்.

வே என்பது மேல் துணியால் போர்த்துவதைக் குறிக்கும்.  அதுபின் வேய் என்று நீண்டு  வேய்தல் என்று வினைச்சொல் ஆகும்.   முடியை வேய்ந்து கொண்டவனே  வேய்ந்தன் >  வேந்தன் ஆனான். யகர ஒற்று விடப்பட்டதற்குக் காரணம் மூலச் சொல் வே என்பதுதான்.  வே என்ற அடி, சொற்களில் பதிவு பெற்றிருந்தாலும் தனிச்சொல்லாக இன்று வழங்கவில்லை. இறந்துவிட்ட பாட்டி மாதிரி ஆகிவிட்டது.

வே > வேள் என்பதும் அன்னது.  அவனுக்கு முடி இல்லை என்றாலும் ஒரு துணியைத் தலையில் கட்டிக்கொண்டுதான் அவையில் அமர்ந்தான். அதனால் வேள் ஆனான்.  வே என்ற அடிச்சொல் பல்பொருள் ஓரடிச் சொல் ஆகும்.  அதற்கு வெம்மை என்ற பொருளும் உள்ளதன்றோ?  வேளான்மை  வேட்டல் வேள்வி  வேட்பு என்பன பிற.

சீனமொழியில் ஓரெழுத்துக்கு ஒரு சொல் ஒரு பொருள். ஒரு சொல்லொலி எடுப்பிலும் படுப்பிலும் பொருள் வேறுபடும்.  ஆரோகணம் அவரோகணம் மாதிரி.   சில கூட்டுச் சொற்களும் உள.  அவ்யோங்க்  என்பது போல.  தமிழில் சொற்கள் விகுதி பெற்றுச் சமத்கிருதம்  ( குறிப்பு:   த் <> ஸ் )  போல் மிகும். இம்மிகுதியே விகுதி எனப்பட்டது.  மிஞ்சு >  விஞ்சு என்பதுபோலும் திரிபு.

வே > வேய்
வே >  வேள்
வே > வேள் > வேடு >

வேடு > வேடம்.

இன்னும் பல.  பிற பின். நன்றி.

பிழைகள் இருப்பினும் புகுத்தப்படினும் பின் திருத்தம் பெறும்.

கூஜா சொல்லமைப்பு

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அண்மிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

மறுபார்வை:   21.11.2019ல் செய்யப்பட்டது.




சனி, 19 ஜனவரி, 2019

எமன் அமைப்பில் ( ஜனநாயகம்) மக்களாட்சிமை இல்லை!

ஒரு நாட்டில் எதிர்கட்சிகள் கூடி மக்களாட்சித் தன்மை அழிந்துவருகிறது என்று ஓலமிட்டனர்.

நாட்டில் ஒரே எமன்  இருந்தால்  அது சரியில்லை.  ஒரே எமன் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல இருப்பதால் மக்களாட்சி முறைக்கு அது எதிர்த்தன்மை உடையது என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.

எதற்கும் ஒரு மாற்று மருந்து இருக்கவேண்டுமே!

சரி, ஒரு குழுவை அமைத்து நாட்டை நடத்துவோம்.  ஒரே எமன் போய் ஒரு நாட்டை ஆளுவது போல் இல்லாமல்  எமக்குழு ஒன்று  ஆட்சியில் இருப்பதுபோல் இருந்தால் எந்த உயிரை எப்போது வாங்குவது என்று எளிதாகவே  முடிவு செய்து விடலாம்.  எல்லா உயிர்களும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.

செய்தியாளர்களுக்கு இது மாறுபாடாகத் தோன்றியது.  ஒரே எமன் நடமாடுவதையே இப்போது  செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஒரு குழு நடமாடினால்  எம நடமாட்டம் பல மடங்காக அல்லவோ கூடிப்போகும்?

இப்படி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குழு எமன்`களா  அல்லது ஒற்றை எமனா என்று பரிந்துரை செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள்.

எமன் அமைப்பில் மக்களாட்சித் தன்மை இல்லைதான்.  என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை.  பல எமன்`கள் முறைக்கு  எப்படி வாக்களிப்பது என்று மக்களுக்கும் மருட்சியாகவே இருந்தது.

வெள்ளி, 18 ஜனவரி, 2019

சக்தி சத்தி என்பவை

இன்று   சக்தி  என்ற சொல்லின் அமைப்பை அறிந்துகொள்வோம்.

இச்சொல் தமிழில் பண்டைக் காலம் தொட்டு வழங்கி வந்தாலும்  சக்தி என்ற சொல்வடிவம்  சங்க இலக்கியங்களில் காணக் கிட்டுவதில்லை. பழந்தமிழில் சக்தி என்பது சத்தி என்றும் பக்தி என்பது பத்தி என்றும் முக்தி என்பது முத்தி என்றுமே வழங்கின.

பக்தி என்பது முன் பற்றி > பத்தி என்பதுதான்.

பற்று :  தெய்வப்பற்று.  பற்றி :  பற்றுடன் இருத்தல்.  இது பத்தி என்று திரிந்து
வழக்குப்பெற்ற போது பற்றி என்பது வழக்கிறந்தது.

பத்து  ( பற்று)  எனவே வழங்கியிருக்கலாம்  ஆனால் பத்து என்பது ஒருவிதச்
 சொறியையும் குறித்த காரணத்தால் வேறுபடுத்தப் பத்தி என்று திரியவேண்டியதாயிற்று.

முக்தி என்பது முற்று > முத்து > முத்தி > முக்தி என்பதே.
இது முது > முத்து >  முத்தி >  முக்தி  எனினுமாம்.

முத்தி என்பது  சிறுபிள்ளைகட்குப் பெரியோர் கொடுக்கும் முத்தத்தையும் குறித்ததால் முக்தி என்பது பின்னாளில் திரிந்து  இறைப்பற்று முதிர்வில் அடையும் வெற்றிநிலையைக் குறித்தது.

ஆனால் சக்தி என்பது சற்று வேறு விதமாக அமைந்தது.  எப்படி என்று பார்ப்போம்.

சக்தி என்பதன் முந்து வடிவு சத்தி என்பது.

முருகப் பெருமானுக்குச் சத்திவேல் என்றும் பெயருண்டு.

சத்தி என்பது முந்துவடிவில்  சத்து என்பது,

சத்து என்பதோ முன்வடிவில்  தத்து என்பதாம்.

தத்து என்பது தன்னுடையது என்று பொருள்படும்.

தன் து  >  தத் து > சத்து >  சத்தி >  சக்தி  ஆகும்.

தான் >  தன் :    தன் து.   அதாவது தன்னது, தன்னிலிருந்து வெளிப்படுவது.

து என்பது உடையதாதல் என்பதை உணர்த்துவது,

குழாம் > குழாத்து:   குழாமினுடையது.
உடை > உடைத்து :  உடையது.
முதல் >  முதற்று  முதலாக உடையது.   முதல் து என்பதே இது.

ஆகவே  தத் து என்பது தன்னில் இருப்பது;  ஒரு பொருளில் அல்லது உயிரியில் இருந்து வெளிப்படுவது.   உயிரி -  பிராணி.

தன் >  த  என்பது கடைக்குறை.

த + து =  தத்து > சத்து .

தகரம் சகராமாய்த் திரியும்.

தனி > சனி  (  தனித்தன்மை வாய்ந்த கிரகம்)
தம் >  சம்.    தம் என்பது பன்மை;  தம் என்பது இரண்டு அல்லது  அதற்கு மேற்பட்ட தன்-கள் சேர்ந்தது   ஆகும்.
தங்கு  >  சங்கு    (  ஓர் உயிரி தங்கி இருக்கும் கூடு)
இவ்வாறு பல உள.

தத்து சத்து என்பவற்றில் இடை வந்த தகர ஒற்று புணர்ச்சியினால் வந்தது.

அம்மனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் சத்தி  அல்லது சக்தி.
அதாவது அம்மன் தன்னிலிருந்து வெளிப்படுவது தன்னதாய்க் காட்டுவதும் ஆகும்.

இவ்வாறு  உணர்ந்துகொள்க.





வியாழன், 17 ஜனவரி, 2019

வன்மை பயில்வார்

நாயினைப் பூனையை வீட்டுள் பழக்கியவன்
பாய்புலி சிங்கம்பால் தோற்றானே-----சாய்வறிந்தான்
வாய்க்குச்சோ றிட்டாலும் வன்மை பயில்வாரைத்
தோய்க்குநட் பில்லை துணி. 

பாய்புலி -  வினைத்தொகை:  பாயும்புலி
சாய்வு - எப்பக்கம் எது என்னும் தன்மை
வன்மை -  வலக்காரம்  (பலத்தகாரம் )
தோய்க்கு -  தோய்க்கும். ஈடுபடுத்தும்.
அன்புத் தொடர்பில் ஈடுபடுத்தும்.
துணி -  துணிவுகொள்;  அல்லது வெட்டிவிடு
( இருவாறு பொருள் கொள்ளலாம்).
துணித்தல் :  வெட்டுதல்.

சிங்கம் :  அரிமா.
சிங்கம் பற்றிய சொல்லமைப்பு அறிய:
 https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_88.html


புதன், 16 ஜனவரி, 2019

ழகர ளகர லகரப் போலிச் சொல்

சில சொற்களில் எழுத்து மாறினாலும் பொருள் மாறுவதில்லை. இவற்றை இலக்கணியர் போலி என்று குறித்தனர். போலி எனின் போல இருப்பது என்பதே நாமறிவதாகும்.  தமிழில் போலிச் சொற்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.

பழம் என்ற சொல் போலியாகப் பலம் என்று வரும்.  சென்னை நகரில் மாம்பழங்கள் மிகுதியாகக் கிடைத்த இடத்திற்கு  மாம்பழம் என்ற பெயரையே வைத்தனர்.  மாம்பழம் என்பது பழத்தைக் குறித்துப் பொருள்மாறாட்டம் ஏற்படுத்தியதால் அதை மாம்பலம் என்று மாற்றிச்சொல்லிப் பொருளில் ஏற்பட்ட குழப்படியைத் தவிர்த்தது ஒரு திறனே  ஆகும்.

பழம் என்பது பயம் என்று ஒலிக்கப்படுவதும் உண்டு.  இலந்தைப் பயம் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

மரத்தின் பயனே பழம் என்பதை உணர அதிகம் தெரியவேண்டியதில்லை. பயனாவது மரம் பயப்பது.  மரம் வெளிக்கொணரும் பொருள்.

பழம் பயம் பலம் பழன் பயன் பலன் என்று பல வடிவங்களில் இச்சொல் போதரும் என்றாலும் எழுத்தில் இப்போது பழம் என்பதே திருத்தமான வடிவம் என்று எழுதுவோரும் படிப்போரும் நினைத்துக்கொள்கிறார்கள்.  திருத்தமான வடிவம் என்று ஒன்று உலகில் இல்லை. பலராலும் இது சரி என்று ஒப்புக்கொள்ளப்படுவதே திருந்திய வடிவம்.  ஒரு சொல்லில் இருப்பதெல்லாம் வாயொலிதான்.  வாயினால் ஒன்றை உச்சரிப்பதன் தேவை பொருளைக் கேட்போனுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை. சொல்வதைச் சரியாக உணர்த்துவதே சொல்லின்  வேலை; அதையது செய்து வெற்றிபெறுமாயின் அது ஏற்றுக் கொள்வதற்  குரிய   தாகிவிடும்.

ழகர ஒலி இல்லாத மொழிக்குப் பழம் என்ற சொல் தாவிச் செல்லுமாயின் அது பலம் என்ற வடிவைத்தான் மேற்கொள்ளவேண்டும்.  சங்கத மொழியில் ( சமஸ்கிருதத்தில் )  ழகரம் இல்லை.  ஆகவே அங்குப் பலம் என்ற சொல்லே ஏற்றுக்கொள்ளப்படுவ தாயிற்று.  பலம் பின்னர் இந்திக்கும் அங்கிருந்து உருதுவிற்கும் சென்றது.  பலத்தின் பொருள் பழமே.

ஞானத்தை வழங்குபவன் முருகப்பெருமான்.

ஞானத்தைப் பயப்போன். 

ஞானத்தைப் பயனாகத் தருவோன்,  எனவே அவன்  ஞானப்பழம் எனப்பட்டான்.  அவனை வணங்கினால் ஞானமுண்டாம்.

அரக்கு என்பது முத்திரை இடுவதற்குப் பயன்படும் உருகுபொருள்.   அது  வெம்மையில் உருகிப் பின் குளிரில் கட்டியாகிவிடும்.  கட்டியான பின்   அது சற்றுக் கடினமான மேல்தோல்போல் காகிதம்  முதலியவற்றில் ஒட்டிக்கொள்வது.  அதனால் அது தோலி எனப்பட்டது. ----   அதன் தோலாம் தன்மையினால்.

தோலி என்பது பின் தோழி என்றும் திரிந்தது.  இந்தத் தோழி என்பது திரிபுச் சொல்.  தோழன் என்பதன் பெண்பால் அன்று,  வேறு சொல்.  இந்தத் தோலின் திரிபாகிய தோழி பின் தோளி என்றும் திரிந்தது.  ஆகவே இச்சொல்லும் முந்நிலையிலும்  தோலி -  தோழி - தோலி என்று வந்துள்ளது.  இவற்றில் எதுவும் இப்போது வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணின் அறிந்து மகிழ்வீர்.

காவியம் சொல்

கவி என்ற சொல்லை முன் விளக்கியிருக்கிறோம்.

ஒரு பொருள்மேல் கருத்துகளையும் கற்பனைகளையும் கவித்துப் பாடப்படுவதே கவிதை.

-----------------------
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை எல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்பது  கவிதை  ;  நூல்:  அழகின் சிரிப்பு.

அப்படியானால் செய்யுள் என்பதென்ன?   இதற்கு,  பவணந்தியார் கூறிய வரையறவு :  " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"  என்பது.  ஒளவையாரின் இந்தப் பாட்டு ஒரு செய்யுள்:

ஈதல்  அறன்;   தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காத லிருவர் கருத்தொருமித்து  -----  ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந்  திம்மூன்றும்  
விட்டதே பேரின்ப வீடு.

கவிதைகளால் ஆக்கப்பட்ட பெருநூல்  காவியம்.

கவி + இயம் =  காவியம்.   

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  முதனிலை நீண்டது காண்க.

பாடம் என்பதும் முதனிலை நீண்ட சொல்:

படி + அம் =  பாடம்.  படி என்பது பாடி என்று திரிந்து,  இகரமிழந்து பாட் ஆகி, அம் சேர்ந்து பாடம் ஆனது.

முன் காலத்தில் பாடங்களெல்லாம் பெரும்பாலும் பாடல்களாக இருந்தன.  அவற்றை அவர்கள் இராகம் போட்டுப் பாடி ஒப்புவித்தார்கள்.  ஆசிரியர்களும் பாடியே சொல்லிக்கொடுத்தார்கள்.  திரு வி க அவர்களின் காலத்தில் இவ்வழக்கம் குறைந்தது,  தம் நூலில் அவர் பாடியே படிக்கவேண்டும் என்றார்.

படித்தல் என்றாலே பாடுதல் என்ற பொருளும் உண்டு.

உன்ன நெனச்சேன்
ஒரு பாட்டுப் படிச்சேன்

என்ற திரைப்பாடலில் படிச்சேன் என்ற சொற்பயன்பாடு காண்க.

பாடு+ அம் = பாடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆகவே காவியம் என்ற சொல் முதனிலைத் திரிபு ஏற்ற சொல் என்பதுணர்க.






செவ்வாய், 15 ஜனவரி, 2019

சங்கத வரலாறும் சில சொற்களும்.

நீங்கள் தட்சிணாயனம் உத்தராயனம்  என்ற இருசொற்களையும் பற்றி  அறிந்திருப்பீர்கள். இவை செந்தமிழ்ச் சொற்கள் என்று எவரும் கூறார்.  சங்கதச் சொற்களே.  ஆனால் சங்கதத்தில் உள்ள சொற்றொகுதியை ஆய்வுசெய்த பிரஞ்சு ஆய்வாளர்களும் குழுவினரும் (டாக்டர் லகோவரி குழுவினர் )  மூன்றில் ஒருபகுதி திராவிடச் சொற்களை உடையது சங்கதம் ( சமஸ்கிருதம் ) என்றனர்.  இன்னொரு மூன்றிலொன்று வெளிநாட்டுச் சொற்கள்.  மீதமுள்ள மூன்றிலொன்று  அறிதற்கியலாத பிறப்புடையவை என்றனர். இந்த முடிபு மனத்துள் நிற்க, மேல் நாம் கண்ட சொற்களை அல்லது கிளவிகளை நுணுக்கி நோக்கினால் இவை தமிழ் மூலமுடையன என்பது தெற்றெனப் புலப்படும். சங்கதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வகைப்படுத்தப்பட்டிருப்பினும் வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் கூற்றுப்படி அதிலுள்ள வெளிச்சொற்கள் இந்தியாவில் வழங்கிச் சங்கதத்தினால் மேற்கொள்ளப்பட்டவை என்று முடிக்கின்றார்.  இவை அதனுள் இருத்தலினால் ஆரியர் என்போர் வந்தனரென்றோ சங்கதம் வெளிநாட்டினின்றும் கொணரப்பட்டதென்றோ கூறுதற்கில்லை என்று முடிவு செய்கின்றார்.இவை சரியான முடிவுகள் என்று யாம் உடன்படுவோம்.  ஆரியர் திராவிடர் என்ற சொற்களும் இனங்களைக் குறிப்பவை அல்ல. பல வெளிநாட்டினர் இந்தியாவிற்குப் பல காரணங்களால் வந்திருக்கலாம் எனினும் அவர்கள் ஆரியர் அல்லர்; மற்றும் ஆரியர் என்பதும் ஓர் இனப்பெயர் அன்று. ஆரியம் என்பது மொழிக்குடும்பத்தின் பெயர்; திராவிடம் என்பதும் ஒரு மொழிக்குடும்பத்தின் பெயரே.  சமஸ்கிருதம் என்னும் சங்கதத்தின் முன்னோடி மொழிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கின.  அவை பரவலாக மக்கள் பேசிய மொழிகள்.  அவற்றுக்குப் பாகதங்கள் ( பிராகிருதங்கள் )  என்று பெயர்.  சங்கத்தின் பிற்பட்ட மொழிகளும் பாகதங்கள் என்றே சொல்லப்படுகின்றன.  பிற்பட்ட பாகதங்கள் பல சங்கதச் சொற்களை உள்வாங்கியவை.

சங்கதம் வெளிநாட்டு மொழி என்பதற்கான ஆதாரங்கள் எவை?  ஒன்றிரண்டு கூறுவோம். யானைக்குப் பெயர் சங்கதத்தில் இல்லை.   கடைந்ததுபோன்ற முகமுடையது என்று அதற்கு ஒரு காரணப் பெயரைச் சங்கதம் கையாளுகிறது.  கடைதல் வினைச்சொல்.  கடை >  கட + அம் = கஜ + அம் = கஜ என்று சொல்லமைகிறது.  மயிலுக்குப் பெயர் சங்கத்தில் இல்லை:  அதற்கும் ஒரு காரணப் பெயர் அங்கு வழங்குகிறது   :   மயில் :  மயூர.    இதை மை போன்ற புள்ளிகள் ஊர்கின்ற இறகுகளை உடைய பறவை என்று தமிழில் சொல்லி,  மை ஊர என்று ஒலித்து,  மயூரம் என்று முடித்தால் அது எந்த மொழியின் மூலங்களை உடையது என்று தெரியாதவனுக்கும் தெரிந்துவிடும்.
ஆரியர் தோன்றிய இடம் என்று கருத்துரைக்கப் பட்ட உருசியப் பகுதிகளில் இந்த விலங்குகள் பறவைகள் இல்லை; ஆகவேதான்  சங்கதம் வெளிமொழி என்று ஐரோப்பிய அறிஞர்கள் முடிவுசெய்து அது வெளிநாட்டது என்றனர்.
சங்கதம் உள் நாட்டு மொழியாய் இருந்தாலும்   மயிலும் யானையும் பற்றிய கிளவிகளுக்குத்  தமிழ் போன்ற மொழியிலிருந்து சொற்களைப் பெற்றிருக்க முடியும்.  அல்லது தமிழுக்கு இவற்றைத் தந்திருக்க முடியும்.  ஆகையால் இதுபோலும் காரணங்கள் முடிவானவை அல்ல என்பதை உணர முடியும்.  சொற்றொகுதிப் பரிமாற்றம் என்பது உள்நாட்டு மொழிகளிலும் நடைபெறும்; வெளிநாட்டு மொழிகளிடையிலும் நடைபெறும்;  உள்ளிருக்கும் மொழிக்கும் வெளிமொழிக்கும் இடையிலும் நடைபெறும்.  இவற்றை வைத்து ஒரு தெரிவியலை ( தியரி )  உண்டுபண்ணுதல் பொருந்தாதது காண்க.

இனிச் சொற்களுக்கு வருவோம்:

உ :  முன் அல்லது மேல்.  தரம் :   தரு+ அம்.  அ:   அங்கு;   அன்: இடைநிலை; அம் :  விகுதி.  இவற்றைப் புணர்த்த,  உ + தர + அ + அன் + அம் = உத்தராயனம் ஆகிறது.  உத்தரம்:  காரணப்பெயர்.  உயர்ந்த திசையென்பது பொருள். காரணப் பெயர்.   ஒன்றிலிருந்து பெறப்படுவதே தரம்:  அது தரும் மதிப்பு நிலை: தரம்.
உத்தரமாவது உயர்ந்த திசை தருவது ஆகும்.  வடக்கு.

தெற்கணம் :  தெக்கணம் > தெட்சிணம்.>  தட்சிணம்.

தட்சிண +  அ + அன் + அம் =  தட்சிணாயனம்.

உத்தரம் தட்சிணம் என்பவை தமிழ் மூலங்கள்.

கண் என்பது இடம் என்றும் பொருள்படும்.  இதன் `கண்,  அதன்,கண் என்பவை இங்கு அங்கு என  இடப்பொருள் தருபவை.   கண் > கணம்:  இடம்.  தெற்கணம் : தென்திசை.  கண் என்பது ஓர் உருபுமாகும்.

மற்றவை பின்.  அறிக மகிழ்க.

திருத்தங்கள்;  பின்னர்.


Hackers

Dear Readers  Please note that hackers have entered the website and made changes to text in various posts.  This is being corrected but will take time.   Inconvenience caused is regretted.

வசதிக் குறைவுகள் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம்.
கள்ளப் புகவர்கள் புகுந்து பல மாற்றங்களைச் செய்துள்ளனர் என்று அறிகிறோம்.

இவற்றை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துத் திருத்தவேண்டும்.

காலம் தேவை.

பிழை கண்டவிடத்துத் திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள்.

சனி, 12 ஜனவரி, 2019

உத்தரவும் உதையமும்.

உதயம் என்ற சொல் தமிழ் மூலமுடைத்து. எங்ஙனம் என்பது காண்குவம்.

உ  -  முன்பக்கத்தில் எழுதல்.  மேலெழுகை. இன்னும்   இதற்குப் பல பொருள்கள் உள என்பதை மறத்தலாகாது.

து  .  உடைமைப் பொருள் அல்லது உடையது என்று பொருள்படும் விகுதி.

தமிழ் இதனை உலகினுக்கே தந்துள்ளது. தமிழ் முன் தோன்றிய மூத்த குடியினர் மொழி.  அதனால்தான் உலகிற்கு அளிக்க முடிந்தது.  இது நம் பெருமைக்குரியது ஆகும்.

" இட் "  என்ற ஆங்கிலச்சொல்.  இட் என்ற இலத்தீன்,

It is    என்பது      id est   என்று இலத்தீனில் வரும்.  இதுதான் சுருங்கி  i.e.,  அதாவது என்பதற்கு ஈடாகப் பயன்பாடு காண்கிறது.

து >< த்.    து என்பதில் உகரம் சாரியை.  உண்மையில் சாரியை விலக்கி நோக்குவோமாயின் இது என்பது இத் என்பதே.    ஒரு சொல்லினைச் சார்ந்து இயைந்து வருமொலியே சாரியை.

இப்போது து என்னாமல் த் இட்டுக்கொள்வோம்.

உ + த் + அ +  அம். இதன் விளக்கம்:     முன்னிலையில் ( உ)    ;  த்   =  அது;     அ =  அங்கே;   அம் ( எழுகிறது )   என்று வாக்கியமாக்கி இன்புறுக.  அதுவே உதயம்.

பெரும்பாலும் ஒன்றை உதைக்கும் போது கால் முன் சென்று தொடும்.
உது > உதை:  தெரிகிறதன்றோ.    உ + த் + ஐ  என்றும் விளக்கலாம். ஐ:  கீழே காண்க.

ஊருதல் என்பதும் நகர்தலும் ஏறுதலும் குறிக்கும்.   ஊ என்பதும் அதன் குறுக்கமான முன்னிலைச் சுட்டு உ என்பதும்  முன் பக்கல் எனற்பொருட்டு.
பக்கல் = பக்கம்.   ஊ உறுதல்: ( இக்கால வழக்கில் சொல்கிறோம் ).   ஊ உறு > ஊரு(தல்).

சுட்டுக் கருத்துகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.

உதையம் என்பது சுருங்க,   உது + ஐ + அம் என்றும் விளக்கலாம்.  ஐ என்பது மேல் .  இது குறுகும் என்று தொல்காப்பியம்  உரைக்கிறது.  ஆகவே  ஐ > அ.
ஆகவே உதையம் உதயம் ஆகிறது.

இதில் ஐயமொன்றும் காணேன் ஐயனே.

இந்திய மொழியாகிய சங்கதத்தை இந்தோ ஐரோப்பியம் என்று கூறும் ஐரோப்பிய  ஆய்வாளர்கள் ஒருபுறம் நிற்க.   அதன் பல சொற்கள் ஐரோப்பியத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டன.  கடன் ஒன்றுமில்லை. திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்.

உ என்பது பலமுறை விளக்கப்பட்டுள்ளது.  உ = முன் (உள்ளவர்).  தரவு > தருவது.  படை நடத்துபவர் பெரும்பாலும் முன் செல்வர்.  அவர்கள் தருவது உத்தரவு.   சில வேளைகளில் பின்னிருந்து ஆணைகளைப் பிறப்பிக்கலாம் எனினும் முன்னின்று கட்டளை வழங்குவதே பெரும்பான்மை.  இந்தப் படைச் சொல் பின் பொதுவழக்கில் வந்துவிட்டது. என்றாலும் அதிகாரத் தரவையே குறிக்கிறது.

மேலிருப்பதற்குத் தாங்குதல் தருவது உத்தரம்.   தரு > தரம்.  உ என்பது மேல் என்றும் பொருள்படும்.

நீ  உன் என்பவற்றில் உ என்பதிலிருந்தே உன் வருகிறது.   இப்போது இது
தெளிவுபட்டிருக்கும்.

திருத்தம் பின். தட்டச்சுப் பிழைகள்:  தன் திருத்தப் பிழைகள்.
திருத்தம் செய்யும்வரை திருத்திக்கொண்டு வாசித்தல் -  நன்றி.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

இராவுத்தர் பட்டப்பெயர்.

தமிழகத்தில் பல  சமயத்தினரும் வாழ்கின்றனர்.  இவர்களிலும் முஸ்லீம்களும் உளரென்பதும் அவர்களில் பலருக்கும்  பட்டப்பெயர்கள் உள்ளன வென்பதும் நீங்கள் அறிந்ததனவே  ஆகும்.  இப்பெயர்களில் இராவுத்தர் என்பதுமொன்று.

இவர்கள் தமிழகத்துட் புகுங்காலை குதிரைகளில் வந்தனரென்று இவர்களில் பலரும் கூறியபடியால் இராவுத்தர் என்ற சொல்லுக்குக் குதிரைவீரன் என்ற பொருளை அகரவரிசை அறிஞர்கள் தரலாயினர்.

ஆனால் இச்சொல்லை ஆய்ந்த வேறு சில அறிஞர்கள் இராவில் வந்து யுத்தம் செய்தபடியினால் இவர்கள் இராயுத்தர் என்று குறிக்கப்பெற்றனர் என்று கூறினர்.  பகலிலும் போரிட்டிருக்கலாம் எனினும் இரவு வேளையில் வந்து போரிடுவதை ஓர் உத்தியாகக் கொண்டிருந்தனர் என்று இவர்கள் கருதினர்; பெரும்பான்மை கருதிய வழக்காகவும்  இது இருக்கலாம்.

இவற்றுள் எது உண்மை ஆயினும்,  நாம் இங்குக் கருதியது  யாதெனின் முருகப் பெருமான்மேல் திருப்புகழ் பாடிய நம் அருணகிரிநாதர் முருகனையே இராவுத்தர் என்றொரு பாட்டினில் வைத்துப் பாடுகிறார்  என்பதுதான்.  இதை யாம் முன் எழுதியதுண்டு:  அந்த இடுகை இங்கு கிட்டவில்லை.

இனி இராவுத்தர் என்ற சொல்லை ஒரு முருகப்பெருமானின் பெயராய்க் கொண்டு இங்கு அதனை நுணுகி ஆராய்வோம்.

இரா  =  இல்லாத.   முருகன்போலும் இறைவன் கண்முன் நிற்பதில்லை.  ஆகவே அவர் கண்முன் இராத ( இல்லாத) வர்.

உது > உத்து:    இல்லாவிடினும் அவர் பற்றனின் முன்னிலையை உடையவர்:  அதாவது முன்னிருப்பவர்.

து என்பது உடைமைப் பொருளில் வருவதை:

விழுப்பத்து :   விழுப்பத்தை உடையது.
அறத்து  :    அறத்தினுடைய
புறத்து :   வெளியிடத்தினது.

என்பவற்றுள் காண்க.

எனவே துவ்விகுதியின் பொருளை இவற்றிலிருந்து கண்டுகொள்ளலாம்.

உ என்பது முன் என்று பொருள் தருவதனால் உத்து என்பது  முன்னது என்று பொருள் படும்.

அர் என்பது பலர்பால் விகுதி.  இங்கு பற்றும் பணிவும் கொண்டு வரும் விகுதி.

இல்லாமலே முன்னிருப்பவர் முருகன் (அல்லது கடவுள்.)  முன் இல்லை என்றால் இல்லை என்று பொருள்படாது.  அவர் இல்லாமலே (கண்ணுக்குப்  புலப்படாமலே)  இருக்கின்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல்,  அருளல் என்பன அவர்தம் பண்புகளாகக் கூறப்படும்.

இவற்றுள் மறைத்தல் என்பது இங்கு முன்மொழிவு   ( பிரஸ்தாபம் ) பெறுகிறது.

எனவே அருணகிரியாரின் பாடலில் இப்பண்புகளில் ஒன்றைச் சுட்டுகிறது இப்பெயர் என்று அறிக.  இது நம் முஸ்லீம் நண்பர்களைக் குறிக்கவில்லை.

இராவுத்தர் என்ற இச்சொல் வகர உடம்படுமெய் பெற்றது.


வியாழன், 10 ஜனவரி, 2019

சிங்காரமும் சிருங்காரமும்.

சிருங்காரம் என்ற சொல்லை யாம் முன் விளக்கியிருந்தோம்.

சிருங்காரம் என்ற சொல்லும் இடைக்குறைந்து  "சிங்காரம்"  என்று வரும்.  தொடர்களில் இது:   " சிங்காரச் சென்னை"  " சிங்காரப் புன்னகை"  என வரும்.  சிங்காரம் என்பதும் ஒரு வித மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பண்டை மக்கள் எண்ணினர்.   "சிங்கார லகரி " என்ற தொடர் காண்க.   லகரி என்பது முன்னர் விளக்கப்பட்ட சொல்லே:

https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_8.html


ஒரு பொருள் பேரளவில் இருந்தால் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து நோக்கினாலே அது முழுமையும் பார்வைக்குள் அடங்கும்.  அடங்கிய ஞான்று அதன் முழு அழகும் வெளிப்பட்டு மகிழ்வுறுத்தும். அதாவது எக்காட்சியும் ஒரு திரையடக்கத் தன்மை உடைத்தாய் இருத்தல் வேண்டும்.

ஒரு சாமிசிலை மிகப்பெரிதாய்  வடிக்கப்படலாம். கண்ணுக்குத் திரையடக்கமான மாதிரியானால் அழகு வெளிப்பட்டு சிங்காரமாகிவிடும். இதுவே இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் பிற்காலத்தில் இது தன் சிறப்புப்பொருளை இழந்து  பொதுப்பொருள் எய்தி  " அழகு"  என்ற  பொருள்தெரிவிக்கும் சொல்லாகிவிட்டது என்பதுணர்க.

சிறுகுதல் :   குறைதல். சுருங்குதல்.

சிறுகிவிட்ட பொருள் பெரிய பொருளின் மாதிரியே.   மா = அளவு.  திரி : திரிக்கப்பட்டது, செய்யப்பட்டது.  திரியென்பது முதனிலைத் தொழிற்பெயர்.

மா என்பது பல பொருளுடைய சொல்.  அது மாவு என்றும் பொருள்படும்.

சிறுகு + ஆர் + அம் >  சிறுங்காரம்

இதுபோல் அமையும் சொற்களில் ஒரு ஙகர ஒற்றுத் தோன்றும்.  எடுத்துக்காட்டுகள்:

வில >  விலகு > விலக்கு > விலங்கு.  (வில + கு )

மனிதரிலிருந்து விலக்கிய அல்லது வேறான உயிர்வகை.  பிற அணி : பிற வகை:  பிற அணி > பிறாணி > பிராணி என்பதும்  அதுவாகும்.

பிறாணியின் உள்ளிருப்பது பிராணன்.  அது தம்மிலும் உள்ள துணர்ந்தக்கால் பொதுப்பொருளில் விரிந்தது.

அன்றிப் பிறந்தன அனைத்தும் உடையது பிற > பிராணன் எனினும்  அஃதே. இவை விளக்கவேற்றுமைகள் அன்றி அடிப்படை வேற்றுமை அல்ல.

பிற (பிறத்தல் ) > பிற + அணன் =  பிறாணன் > பிராணன்

அணவுதல் :  அணம்  -  அணன்

பிறத்தலை அணவி நிற்பதாகிய உயிர் என்று விரிக்க.

பிற என்பதனுடன் ஆகாரத் தொழிற்பெயர் விகுதி சேர்ந்தால் பிறா என்று வந்து பின் அணன் என்பதனுடன் இணையப் பிறாணன் ஆகி, பின்னர் றகரம் ரகரமாகிப் பிராணன் என்றாகும்.

ஆகார விகுதி பல சொற்களில் வரும்.

நில் > நிலா
பல > பலா  பல சுளைகளை உடைய பழம்.
விழை > விழா

அழ =  அல.
அழ > அல  > அலங்கு + ஆர் + அம் = அலங்காரம்.

பழ என்பது பல என்றும் வரும்.  அதுபோலவே அழ என்பது அல ஆனது,

அலங்காரம் என்பது போலவே சிறுங்காரம் என்பதிலும் ஙகர ஒற்று தோன்றியது.

இ+ கு : இங்கு;   அ+ கு = அங்கு;  எ+ கு =  எங்கு.      -க்கு என்று வலிக்காமல்   - ங்கு என்று மெலித்தனவால் உணர்க.

சிறுங்காரம் :  இதுபின் சிருங்காரம் என்று மாற்றப்பட்டது.   று > ரு.

மொழிவரலாற்றில்  ரகரம் முந்தியது.   றகரம் பிற்பட்டதாகும்.  றகரம் என்பது இரு ரகரங்கள் கொண்ட ஓர் எழுத்து.. நம் முன்னோர் ரகரத்தையும் றகரத்தையும் ஒலிப்பதில் வேறுபாடு தெரிவிக்கும் திறமுடையவர்களாய் இருந்தனர் என்று தெரிகிறது. இன்று இது எழுத்தளவிலான வேறுபாடே ஆகும். ஒலிப்பதில் யாரும் வேறுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. திரம் என்று எழுதினாலும் திறம் என்று எழுதினாலும் வாசிப்போர் 1 ஒரே மாதிரியாகவே ஒலிக்கின்றனர்.  அறம் என்பதை ஓரிருவர் அழுத்தி ஒலித்து  அது வல்லின றகரம் என்று தெரிவிக்க முயன்றதுண்டு.  தமிழைப் படிப்பதே ஒரு சுமையாகி, அது வீட்டுமொழியாக  ஆகிவிட்ட இக்காலத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.  ரகர றகர வேறுபாடின்றி வழங்கும் பல தமிழ்ச்சொற்கள் பல உள்ளன.  ஒருகாலத்தில் இவை ஒருதன்மையவாய் இருந்தமையையே இது நமக்குத் தெரிவிக்கின்றது.  இரு ரகரங்களை இணைத்து எழுத்தமைத்து  வேறுபடுத்தற்குக் கீழே ஒரு கோடிழுத்துள்ளனர் (ற)  என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

புணர்ச்சி என்பது சிற்றின்பம் எனவும் குறிக்கப்படுவதால்  சிறு என்பதிலிருந்து அமைந்த சிருங்காரமென்பதும் புணர்ச்சி குறிக்கும்.  அல்லால் இன்பச்சுவை, அழகு  அன்பு , சிறிதாகிய பொட்டு எனவும் பொருள்தரும்.

சிராய் என்பது சிறு விறகுத் துண்டு.   இதுவும்  சிறு என்பதனடிப் பிறந்ததே எனினும் றகரம் ரகரமாய் மாறியிருத்தல் காண்க.  சிறு >  சிராந்தி  (  இளைத்தல் )  சிறிதாதல்:   சிறுமைக் கருத்தே  உணர்க. சிராய்தல் :  சிறுகாயம் உண்டாகுதல்.

சிறு என்பதன் முன் அடிச்சொல் சில் என்பதே.  சில் >  சிறு.  எனவே இதைச் சிறு என்பதிலிருந்து காட்டாமல் சில் > சிலுங்காரம் > சிருங்காரம் என்று காட்டின் லகர ரகரத் திரிபாக இதனை உணர்விக்குமாறு காண்க.  அதுவுமிதே.  கல்லினின்று  பெயர்ந்த அல்லது தெரித்த சிறு துண்டும் சில்லு எனப்படும்.

ஓர் இலை மரத்திலிருந்து விழுந்தது எனினும் கொம்பிலிருந்து விழுந்தது எனினும் கிளையிலிருந்து விழுந்தது எனினும்  காம்பிலிருந்து விழுந்தது எனினும் இணுக்கினின்று விழுந்தது எனினும் அதே.

அறிதலே மகிழ்தல். 



அடிக்குறிப்புகள்:

வாய் > வாயித்தல் (  வாய்கொண்டு  ஒலியினால் வெளிக்கொணர்தல் ).  யகர சகரம் போலியால்  வாசித்தல் ஆயிற்று.  இப்படி இன்னொரு சொல்:  நேயம் . > நேசம்.   பாய்> பாயம் > பாசம்.  உணர்வு ஒருவர்பாலிருந்து இன்னொருவர்பால் பாய்வது.  பாயம் வழக்கிறந்தது.  பாய்ச்சல் ( எழுச்சி என்றுமாம்).  உணர்வெழுகை. பசு(மை)+ அம் = பாசம், முதனிலை நீட்சி  எனினுமாம். இருபிறப்பி.  பாய  = பரவ.  ஆதலின் உணர்வின் பரவுதல் எனினுமாம்.  பாய்> பாய்ம்பு > பாம்பு:  இதில் யகர ஒற்று களைவுண்டது.  பாய்தல் நகர்தலாம் அன்றித் தாவுதலெனினும் ஒப்பதே. இவை வெவ்வேறு மாதிரி அசைவுகள்.



இளமை  சிறுமை  அழகு என்பதை வலியுறுத்தும் ஒரு பாட்டு.  எழுதிய கவி யாரென்று தெரியவில்லை: இளமையில்  உருவிற் சிறிதாய் இருப்பதும் ஒரு காரணமாகும்.பொருள்களும் சிறுமையில் அழகு தருபவை.

குட்டியாய் இருக்கையிலே --- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு' --- ஏழு
எட்டுமாதம் ஆனபின்னே ---  முழங்கால்
முட்டுவிழுந்து மோசமாக விளங்கும்.

பாட்டில் பொருள் தொடர்பு அற்ற வரிகள் விடப்பட்டன ,


திருத்தம் பின்.













செவ்வாய், 8 ஜனவரி, 2019

பூசையின்போது கவனம்.



 ( பூசையில் திருப்புகழ் பாடும்போது
சிலர் சொந்தக் கதைகள் பேசிக்கொண்டிருந்தனர் ).

காணொளியைப் பதிவேற்ற இயலவில்லை.





பத்திசெய்து பரமன்புகழ் பாடுகின்ற  பேர்முன்
பலப்பலவும் பலத்தகுர லால்பேச  லாமோ?

புத்தியுடன்  புடையமர்ந்து  புன்மைஎண  மின்றிப்
பூசைதனைக் கவனமுடன் போற்றுமனப் பான்மை

எத்திசையில் வாழ்வோரும் ஏய்ந்திருந்து செய்தல்
ஏத்துபவர் யார்க்கெனினும் இயல்வதொரு கடனே

மத்தெனிலே பானையதன் மத்தியிலே இட்டு
மகளிர்கடை வார்வெளியில் மாறுவதும் இலதே.  


புடை:  பக்கத்தில்
புன்மை :  தாழ்ந்தவை
எணம்:   எண்ணம்'
ஏய்ந்து :  பொருந்தி'
ஏத்துபவர்:  சாமி கும்பிடுவோர்
இயல்வது:  முடிந்தது
மத்து:  கடைகட்டை
மத்தி  :   நடு

இலதே:  இல்லையே.





இந்தக் காணொளி திருவண்ணாமலைக் கோவிலுள் எடுக்கப்பட்டது. ஆனால் ஓடவில்லை; மாறாகப் படமாக மாறிவிட்டது,



போதையும் லாகிரியும்

போதை தரும் தேறல்களை இலாகிரி வஸ்து (பொருள்) என்பர்.  வஸ்து என்பது விளக்கப்பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_55.html

இதற்கு முன்னும் இதை விளக்கியதுண்டு.   அந்த இடுகைகள் இங்கு இல.

சுருங்கக் கூறின்,  வைத்திருப்பது வஸ்து.   வைத்து > வஸ்து.  வைத்துக்கொள்ளாதது குப்பை,  இங்கு வைத்துக்கொள்ளாதது எனின் வேண்டாதது.

இலாகிரிப் பொருளின் வேலை அல்லது பயன்பாடு என்ன?   மனிதனின் கடுமையான நிலையையும் போக்கையும் மாற்றி இலகுவாக இருக்கச்செய்வது.  இங்கு இலகு எனின் சற்று நெகிழ்வான நிலை.

இலகு + இரு + இ=   இலகிரி.  இதில் இரு என்பதிலுள்ள உகரம் கெட்டு இகரமேறி  இரி ஆனது.   இலக்கணத்தின் பொருட்டு இவ்வாறு கூறினும்  இரு என்பதும் ஏனைத் திராவிட மொழிகளில் இரி என்று திரிதலை உடையதே ஆகும்.   ஆகவே இலக்கண விளக்கங்கள் இல்லாமலே இரி என்பதை இரு என்பதின் மறுவடிவமாக ஏற்றுக்கொள்ளலாம்.

இலகிரி >  இலாகிரி >  லாகிரி.

லகரத்தின் முன்னுள்ள உயிரெழுத்து மறைதல் சொன்னூலில் இயல்பு ஆகும்.

உலகம் >  லோகம்   இங்கு உயிர் மறைவுடன் லகரம் லோகாரமாயிற்று.
இலக்குவன் >  லக்குமணன்.  ( இலக்கு அல்லது கோடு போட்டவன்;  ஆதலின் காரணப்பெயர்.

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_14.html

லகர ரகரப் போலியும் உளது.  லகரம் போலவே ரகரமும் இவ்வாறு தன்முன் நின்ற உயிரை இழக்கும்.


எ-டு:   அரங்கன்  >   ரங்கன் 
              அரத்தம் >  ரத்தம் >(  இரத்தம். )

அர் எனின் சிவப்பு.  அடிச்சொல்.

இலாகிரி கொண்டேன்   =  மயக்கம் கொண்டேன்.

இலகு   என்பது    இளகு என்பதன் போலியே.

இந்த மயக்கத் தேறல்களைக் கண்டுபிடித்த காலத்தில் அவற்றைக் குடித்து மயங்குவது வியப்பாகவே மக்களுக்குத் தென்பட்டது.  பிற்காலத்து இவ்வியப்பு ஒழிந்து  குடிப்போன் மேலான நிலையை அடைகிறான் என்று எண்ணப்பட்டது.  இந்த வியப்பு, மேன்மை என்ற பொருளெல்லாம் அடங்கியது  ஐ என்ற ஓரெழுத்துச் சொல்.  குடித்தபோது " ஐ" நிலை அடைவதால் போது + ஐ = போதை ஆகி, அச்சொல் அமைந்தது அறிக.

பிழைத்திருத்தம்  பின்.

பொழுது > போது > போதை.

குடித்த மாத்திரத்தில் ஐ தருவது எனினும் ஆம்.

மயங்குவது என்பது  ம~து என்று சுருங்கிற்று:   மது.

அறிந்து மகிழ்க.


       

திங்கள், 7 ஜனவரி, 2019

தூது

தூதன் என்ற சொல்லைக்  கவனிப்போம்.

தூ என்பது ஓரெழுத்துச் சொல்.

தூ என்றால்:

சீழ்.
பகை
பற்றுக்கோடு. SUPPORT
சிறகு
வெண்மை "தூவெண் மதி சூடி" (சைவத் திருமுறை)
சுத்தம். ( உத்தம் > சுத்தம்: தூய்மை முதன்மை என்று பண்டையர் கருதினர்).
தசை ( தசை> சதை. ச>த)
வலிமை.

இத்தனை பொருள்களும் உள்ள சொல்தான் இந்த ஓரெழுத்துச் சொல்.

தூதனாய் இருப்போன் மன்னன்பால் பற்றன்பு ( விசுவாசம்)   உடையவனாய் இருத்தல் முதன்மையாகும். ஐந்தாம்படைச்செயல்பாடுகள் உடையவன் தூதன் ஆதல் இயலாது.ஆகவே, தூய்மை குறிக்கும் தூ என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து   தூதன் என்ற சொல் பிறந்தது.  முன்செல்லுதலும் தூய்மையும் ஆகிய இரு கருத்துகளையும் அடக்கிய சொல்லாக இது முன்னைத் தமிழில் உருத்து எழுந்துள்ளது.   உருத்து =  தோன்றி.  இஃது ஓர் அரிய நற்சொல்.


மேலும் தூது செல்பவன் அரசுக்கு என்றும்பற்றுக்கோடு தருவோனாக , உடையவனாக செயல்படவேண்டும்  ஒற்றன் என்பவன் ஒன்றியிருந்து இரகசியங்களை    அறிந்துவருபவன்.

ஒன்று(தல்) > ஒன்று > ஒற்று (வலித்தல்) > ஒற்றன்.

தூதன், தூது : இத்தமிழ்ச்சொல் பலமொழிகளையும்
அளாவி நிற்பது பெருமைக்குரித்தேயாம்.

தூ ( அடிச்சொல்)

தூது ( து விகுதி) 
இவ்விகுதி பெற்ற பிற சொற்கள்
: மாது, கைது. விழுது தோது  வாது  சூது.
என்பன  காண்க)

தூது + அன்.

இது இருவகையாகவும் புணரும் சொல்.  தூதுவன் என்பதில் வகர உடம்படு மெய் வந்தது.   தூதன் என்பதில் துகரத்தில் நின்ற உகரம் கெட்டு , தூத்+ அன் என்ற இடைத்தோற்றம் அடைந்து விகுதி சேரத் தூதன் என்றானது.

பெரும்பாலும் ஆடவரே இத்தொழிலில் ஈடுபட்டமையால் பெண்பாற் சொல் வழக்கில் இல்லை.


தூதுவை, தூதினி எனலாம்!

தூ என்ற சொல்லின் மூலச்சொல் ஊ என்பது.  இது அ, இ. உ என்ற
முச்சுட்டுக்களில் ஒன்றான  உ என்பதன் நெடில் வடிவம்.  உ என்றால் முன்னிருப்பது, முன்செல்வது என்ற இவைபோலும் பல
முன்னிகழ்வுகளைக் குறிக்கும். தூதன் என்பவன் முன் செல்பவன்.
அரசன் ஒரு நாட்டிடம் தொடர்பு கொள்ள நினைக்கையில்
தூதனையே முன்  அனுப்புவான்.  எனவே தூது என்ற சொல்
முறையாக அமைந்துள்ளது.  ஒரு காதலி ஒரு தோழியைத் தூது
அனுப்புகிறாள்.  அதாவது உ > ஊ :  முன் சென்று அறிந்துவர
அனுப்புகிறாள் என்று பொருள்.

ஊ என்ற நெடிற்சுட்டில் தோன்றி முன்செலவைக் குறித்து, தூய்மை பற்றுக்கோடு ஆகிய நற்குண நற்செயல்களையும் குறித்து,
முன்னணியில் கருதற்குரிய இனிய அமைப்பை இது
வெளிப்படுத்துவதை பகுத்தறிந்துகொள்க.

ஒற்றன் என்பவன் ஒன்றி இருந்து உண்மை அறிந்து வந்து சொல்பவன். தூதன் ஒற்றன் என்ற இவ்விரண்டு சொற்களையும் ஒருபொருளன என்று எழுதுவோர் / பேசுவோர் கருதினும் இவற்றின் அமைப்புப் பொருள் வேறு என்பதுணர்க.  ஒற்றன் ஒன்றி இருந்து யாரையும் பார்க்காமலும் பேசாமலும்  ( அதாவது பேச்சுவார்த்தைகள் நடத்தாமலே ) திரும்பவந்து   கண்ட உண்மை சொல்பவன்.  ஆகவே அம்பாசடர் என்ற ஆங்கிலச் சொல்லை ஒற்றர் என்று மொழிபெயர்த்தல் பொருத்தமன்று.

தூதன் என்ற சொல்லும் பல மொழிகளில் பரவியுள்ளது.   பண்டைத் தமிழரசர் சீனா,  உரோமாபுரி வரை தம் தூதர்களை அனுப்பியுள்ளனர்.  ஆகவே பரவியதில் வியப்பு ஒன்றுமில்லை.  தமிழரின் உலகு அவாவிய   அரசியல் நட்புறவையே இது காட்டுகிறது.  நாம் பெருமிதம் கொள்வதற்குரிய சொல்.

ஊ ( முற்செலவு என்பது இதன் பொருள்களில் ஒன்று).
ஊ > ஊது > தூது > தூதன்.  தூதுவன்.

முன் சொன்னபடி,   தூது என்பதில் து  என்பது விகுதி.

இதுபோல் து விகுதி பெற்றவை   இன்னும் சில:  கை > கைது;  பழ > பழுது;  விழு > விழுது. மரு > மருந்து;   விரு > விருந்து. கழுத்து.

இது வினையிலும் பிறவகைச் சொற்களிலும் வரும்.

டுத்தா என்ற மலாய்ச் சொல் தூதர் என்பதுதான்.  (ஜாலான் டுத்தா).

அறிந்து இன்புறுவீர்.

திருத்தம் பின்.  உலாவியில் சிறிய கோளாறு உள்ளது.  பின் சரிசெய்யப்படும்.












ஞாயிறு, 6 ஜனவரி, 2019

குரங்கு விலங்குச் சொற்களும் பிறசொற்களும்( திரிபுகள்.)

குரங்கு என்ற சொல்லைப் பற்றி இன்று உரையாடுவோம். பிறவும் அறிவோம்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வின் என்னும் அறிஞரின் ஆய்வு முடிவு. பல்வேறு சமய நூல்களில்  எவையும் இம்முடிபினை ஒத்துக்கொள்ளவில்லை.  எனினும் அஃது அறிவியல்  தெரிவியற் கருத்தாகத் தொடர்கிறது.  தெரிவியல் எனின் இன்னும் மெய்ப்பிக்கப்படாத முடிபு.  மெய்ப்பிக்கப் பட்டுவிடுமாயின் அது புரிவியல் எனப்படும்.

குரங்கு என்பது   ஓர் ஒப்பொலிச் சொல் என்று சொன்னூல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.   குரங்கு குர் என்ற ஒலியை ஏற்படுத்துவது.  இந்த "குர்" என்ற ஒலியை ஒத்தபடி,   சொல்லமைந்துள்ள படியினால் அது ஒப்பொலிச் சொல்.

வேறு ஒப்பொலிச் சொற்கள் சில:

மா    -  மாடு.
காழ்காழ்  -  கழுதை.
கொக்கொக்  -   கோழி
கா  கா  -    காக்கை  காகம்

குரங்கு என்ற சொல்  குர் + அங்கு என்று பிரிக்க  அங்கு என்ற இறுதி பெற்றிருப்பதைக் காணலாம்.    அங்கு என்பதை  அங்கு என்னும் இடச்சுட்டு என்பதினும்   அம்  - இடைநிலை,  கு  - விகுதி என்பதே ஏய்வான கருத்துமுடிபு ஆகும்.  ஏய்தல் - பொருந்துதல்.  (  "ஏய உணர்விக்கும் என்னம்மை"  என்ற பாட்டுச் சொற்றொடரை நினைத்துக்கொள்க.  )

மந்தி என்ற இன்னொரு சொல்- பெரிய குரங்கு வகை.  மனிதன்போலப் பெரிதாக இருப்பதனால்  அதற்கு இடப்பட்ட பெயர் :  மன் என்ற அடிச்சொல்லைக் கொண்டே அமைந்துள்ளது.    மன் + தி :  மந்தி.   மன் என்ற அடிச்சொல்லே  மனிதன் என்பதிலும் உள்ளது.  மன்+ இது + அன்.  இது தகரச் சகரப் போலியினால்  மனுசன் என்று பேச்சில் வரும்.   மனிதன் >  மனுசன்.  இது மனுஷன்,  மனுஷ்ய என்று மெருகு பெறும்.  மலாய் மொழியில் மனுசியா என்று திரியும்.

மந்தி என்பது புணரியல் முறையில் மன்றி என்று வராமல் மன்-தி என்றே ஒலித்து மந்தி என்று எழுதப்பெறும்.   முந்தி  பிந்தி என்ற சொற்களில் போல இச்சொல்லிலும் அமையும்.

அன்று என்பது முடிந்த நாள் என்று பொருள்படும்.   அன்றுதல் என்பது முடிதல் என்னும் இதன் வினைச்சொல்.   அன்று என்பதிலிருந்தே  அந்து என்று துணிகட்கு முடிவு கட்டும் ஒரு சிறு பூச்சியும் குறிக்கப்பெறும்.  அதற்குப் போடும் ஓர் மருந்துருண்டை " அந்துருண்டை"  எனப்படும்.   ஒரு பகலின் முடிவு  அந்தி எனப்படும்.     அன்+து =  அன்று.   சுட்டடிச் சொல்.   அன்+தி = அந்தி.  பகலின் முடிதல்.  முந்தி என்பது முன்றி என்று அமையாததுபோலவே அன் தி என்பதும் அன்றி என்று அமைந்திலது.

அன்றை -  அற்றை.  இன்றை - இற்றை என்ற வடிவங்களும் நீங்கள் அறிந்தவையே.

அந்தி என்பது பகலின் இறுதி ஆகும்.  அப்போது   இருளும் ஒளியும் மயங்கும்.  மயங்குதலாவது கலத்தல்.

அந்தி மயங்குதடி  ஆசை பெருகுதடி
கந்தன் வரக்காணேனே

என்பதைப் பாடுங்கள்.

கந்தன் என்பதும்:

கன் > கனல்.
கன் >  கனலி ( சூரியன்)
கன் + து =  கந்து.
கன் > கனல்தல்  ( கனறல் ).  ல்+த=  ற.
கன்  >  கனற்பு  :  அடுப்பு.
கன்  > கனற்று.  கனற்றுதல்.
கன் >  கன்றல்..   கன்>  கன் து  > கன்று >  கன்றல்  ( கன்று அல்)
கன் >  கன்றுதல் :  கருகுதல்.

கன் > கன் து > கந்து அன் > கந்தன்.

இன்னொரு சொல்:  அன் > அன் து > அந்து  >  அந்தி.

அரியது கேட்கின் எரிதவழ் வேலோய் -   ஒளவையார்.

கந்தன் என்ற  முருகன் பெயரும் கனல் என்பதனுடன் தொடர்புடையது.  அடிச்சொல் கன்.

பல சொற்களை விளக்கவில்லை. பின்னொரு நாள் அதை நிறைவேற்றுவோம்.

திருத்தம் பின்

சனி, 5 ஜனவரி, 2019

மனத்தில் கொஞ்சிய முகில்

முன்னர் ஓர் ஏரியைப் பற்றிப் பாடிய போது:

வெள்ளி உருக்கித்  தெளித்த போர்வையோ ----  இங்கு
விரிந்த ஏரி காட்டும் நீரினில்,
துள்ளி எழுந்து விழும்  மீன்`களைக் ----- கண்டு
தூக்கம் கலைந்து வந்த(து)  ஊக்கமே.

என்ற வரிகளில் கருத்து வெளிப்பட்டது.


நேற்றுக் காலையில் சிங்கப்பூரில் கொஞ்சம் மழை. அது கண்டு ஒரு
கவிதை தோன்றியது.  அதுவே இது:

எங்கிருந்தோ எடுத்து நீரை 
இங்கு வந்து தெளித்திவ் வூரை
நுங்குட் கொண்ட  நாவுபோலச்
சிங்கலின்றிக் குளிர வைத்தாய்.

சிங்கலின்றி -  குறைவின்றி.

ஊர்கள் மேலே அலைந்தலைந்தே
ஒவ்வோர் துளியாய் விழுங்கிப்
பாரை வள    மிக்கதாக்கி
யாரைக்   காதல்கொண்ு  செய்தாய்.

உன்மனத்துள் மீட்டும் வீணை 
ஊர்க்குள் ஒருத்தி இருக்கிறாளே
என்மனத்துள் மேகம் நீயே
இணைந்துகொஞ்சி இருப்பதென்ன?

 

சிற்பி என்ற சொல்.

ஒரு பெரிய பொருள் மாதிரியிலே சிறியதாய்ச் செய்யப்படுவதே சின்னம்.

இங்கு இதில் உள்ள அடிச்சொல் சின்-  என்பதுதான்.   சின்னப் பையன், சின்னப்பா,  சின்னராசா, சின்னக்குட்டி எனப் பல கூட்டுக்கிளவிகள் உள்ளன காண்க.

எம் நெருங்கிய உறவினர் வளர்த்த நாய்க்குச் சின்னக்குட்டி என்ற பெயரைக் கொடுத்திருந்தேம்.   பெரியவகைப் பொன்மீட்பி நாய்   (  கோல்டன் ரிற்றீவர்) என்றாலும் ஒரு சின்ன உருவினதாய்த் தன்னைப் பாவித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் -  எம்மைக் கண்டவுடன்.  தாரா என்ற பெயர் இருந்தாலும் சின்னக்குட்டி என்றவுடன் நாலுகால் பாய்ச்சலில் வந்து மோதி நிற்கும்.  அண்மையில்தான் இறந்துபோயிற்று.

சின்ன என்ற சொல் அன்புகலந்த சொல் என்பது எம் நினைப்பு.  அது உண்மை என்பதையே மேலே யாம் தந்துள்ள வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

சின் என்பதன் அடிச்சொல் சில்  என்பதாகும்.

சில் > சில   ( பன்மை விகுதி  அ  )
சில் > சின்

புணரியல் அமைப்புகள்:

சில்+ நாள் =  சின்னாள்   (சின்னாட்கள் )    =  சில நாட்கள்.
(  எதிர்ச்சொல்:   பன்னாள்)

சில் + மயம்,  சில் + மையம்:   உலகாகிய பெரிய மயத்தில்  எது  உள் நிற்கிறதோ அதுவே சிறிய மயத்திலும் நிற்கின்றதென்பதால்,  சின்மயம் என்பது .  ஆன்மாவையும் அதன் சுற்றியக்கச் சார்புகளையும் உட்படுத்தும்.

௳யம்   - மையம்:   முன்னது ஐகாரக் குறுக்கம்.

சின்மதி,  சின்முத்திரை என்ற வழக்குகளும் உள.

சில் >  சிறு.
சில் > சின் > சின்னம். ( மாதிரி சிறியது)
சில் > சின் >  சின்ன
சில் < சின் >  சின்னம்  ( சிறுமை என்றும் பொருள்.)
சின் >  சின்னா   (  சிறிய குருவி).   சின்னா என்ற கோழிக்குஞ்சு -   கதை.

சின் > சின்னா பின்னம்.    இங்கு ஆ என்பது ஆகும் என்ற சொல்லின் தொகை.

இங்குள்ள மற்ற தொடர்புள்ள இடுகைகளையும் நோக்குக.

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_49.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

சிற்றம்பலம்.

சிற்பரை   :  சில் + பர + ஐ.    அம்மன்.  { பரன் > பரை ( ஐ) }   ஐ = கடவுள்.  இது
பெண்பால் விகுதியுமாகும்.

சில் என்பது ஏராளமான சொற்களில் கலந்துள்ளது.

முன் காலத்தில் சிலைகள் சிறிதாகவே செய்து வலவர்களான பின் பெரிய சிலைகளை அவர்கள் வடித்தனர்.   இது திறன் பெருக்கம் ஆகும்.

சில் >  சிற்பு > சிற்பம் > சிற்பி .
சிற்பன்,   சிற்பரன் என்பவும் காண்க,

சிற்பி என்ற சொல் பின் பெரிய உருவங்களை வடிப்போனையும் குறிக்க விரிந்தது.

ஒப்பீடு செய்து உணர்க.


திருத்தம் வேண்டின் பின்.

அடிக்குறி:

பொன்மீட்பி :  பொன்போலும் பொருட்களை மீட்கும் நாய்.  இவை பொன் நிறத்தினவாய் உள்ளன. பிற நிறத்தன உளவா என்பது தெரியவில்லை.
 

வெள்ளி, 4 ஜனவரி, 2019

நிவர்த்தி சொல்லமைப்பு.

நிவர்த்தி :  பெயர்ச்சொல்
நிவர்த்தித்தல்  -  பெயர்ச்சொல்.

நிவர்த்தி என்பதொரு புலவர் புனைவாகும்.  இது அமைந்த விதம் உரைப்போம்.

நில்  :  நிற்றல். இதில்  லகரம் போய்,  நி என்று கடைக்குறை ஆனது.

வரு :  வருதல்.   வருத்தி :  வரும்படி செய்தல்.

இது   வர்த்தி ஆனது.

வருந்துதல் குறித்த சொல்லின் வேற்றுமை

இது வருந்து என்ற சொல்லின் வேறானது,  வருந்து,  வருத்து என்பன இதனின்று போந்தவை.

நிவர்த்தி: 

ஒரு சாமி கும்பிடுமிடத்தில் பெண் போகக்கூடாது என்று  என்று விதி உள்ளது.  அங்கு ஒரு பெண் தெரியாமல் போய்விட்டதனால் சாமிக்குற்றம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அங்கு தொழுமிடம் மாசுற்றது என்று பூசாரி கூறுகிறான்.  அந்த மாசை அகற்றிப் பழைய நிலையை வரும்படியாக அவன் சில சடங்குகளை நடத்துகிறான்.

மாசுற்றது தொடராமல் நிற்கவும்   ( நி  )
பழைய தூய்நிலை வருமாறு செய்யவும் :   ( வரு > வருத்தி > வர்த்தி,   அல்லது வர் > வரத்தி >  வர்த்தி ,   அல்லது வரு>  வர் > வர்த்தி  )  ( வர் )

தி : தொழிற்பெயர் விகுதி.

இப்போது இணைக்க:   நி + வர் + தி :  நிவர்த்தி.

எப்படிச் சொன்னாலும் அதுவே.

இந்தத் திரிபுகளைக் கவனிக்கவும்:

வா   -   ஏவல் வினை
வரு -   வினைப்பகுதி     (  வரு > வருகிறான். வருவான் ).
வ  -   வரு> வ:    ( வ >  வந்தான் ).  ( இங்கு வா என்றபாலது வ என்று குறுகிற்று).
வ  >  வர்:   பேச்சுத் திரிபு..    வர்றான், வர்ரியா
வரு > வார்:   வாராய்,  (விளி )
வார்  :   வாரான், வாரார்  (எதிர்மறை ).
வா > வார் > வாரி :   நீர்வரத்து.  நீரலைகள் வரத்து உடைய இடம்:  கடல்.
வரு +  உடு + அம் =  வருடம்.  கணக்கில் மீண்டும் மீண்டும்  வருதலை உடுத்த அல்லது கொண்ட கால அளவு.   உடு என்ற சொற்பயன்பாடு இலக்கியத் தமிழினைக் கொணர்ந்து முற்படுத்தும் அழகினது ஆம்.  இரண்டு உயிர்கள் வரின் ஒன்று தொலையும்.  ஆக ஓர் உகரம் தொலைந்தது காண்க.
வரு > வர்ஷ:  குறித்த காலத்தில் வருவதாகிய மழை.
வரு >  வரத்து:   து தொழிற்பெயர் விகுதி.    (போக்குவரத்து ).(  நீர்வரத்து  ).

நில் நி:  இது நின்றுபோனதையும் நிலையானதையும் தனித்தனியாகவோ இணைத்தோ  குறிக்கும் கடைக்குறை. நிறுத்துதலையும் சுட்டவல்லது.

வர்த்தி :   வருவித்தல்.

அதுவே நிவர்த்தி என்றறிக.





அடிக்குறிப்பு


விதத்தல்,  விதந்துரைத்தல்  என்பன பண்டைத் தமிழில் நன் `கு  வழங்கிய சொல்.   விதம் என்பது அதனின்று அமைந்த சொல்லாகும்.

வித +  அம் =  விதம்.  வித என்ற  வினையில் இறுதி அகரம்.   அம் என்ற விகுதியில் துவக்கம் அகரம்.  இவற்றுள் அகரத்தின் இரு முளைப்பில் ஒன்று அகற்றப்படும்.    வித் + அம் =  விதம் ஆகு.    விதந்து கூறுதலாவது சிறப்பாக எடுத்துரைத்தல்.

விதம் என்பது சிறப்பான ஒரு அல்லது இன்னொரு தோற்றம்.

தட்டெழுத்துப் பிழைகள் இருப்பின் பின் திருத்தம் பெறும்.

வியாழன், 3 ஜனவரி, 2019

அவசரம் ஒரு விளக்கம்

இப்போது அவசரம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
இச்சொல்லில் அவம்  எனற்பால தொரு சொல்லும் சரம் எனற்பாலதொரு சொல்லும் இணைந்துள்ளன.  ஆகவே இதைக் கூட்டுச் சொல் என்று கூறலாம். அதாவது இருசொல்லொட்டுக் கிளவி ஆகும்.  ( ஆங்கிலம்:   compound word             ).

அவம் என்ற சொல்லை நுணித்துப்  பார்க்கின்  ( focus செய்யின்)  அதன் பகுதி  அவி என்பது புரியும்.

அவி + அம்   =   அவம்.

சில சமயங்களில் நெருப்பில் இடாமலே சில இலைகள், கீரைகள் காய்கறிகள் வெம்மையினால் அவிந்து விடுதல் காணலாம்.   அவிதலின் பின் பயன்பாட்டுக்கு ஒத்துவராதனவாகிவிடும்.   ஆகவே  நாம் வைத்திருந்தவை அவமாகிவிட்டன.

அவி அம் > அவம் என்பதில் அவி என்பதன் இகரம் கெட்டது அல்லது தொலைந்தது.    அதனால் அது அவ் என்ற தற்காலிக உருவைஅடைகிறது.  வ்+ அ =  வ ஆதலால் அ (வ் + அ ) ம் =  அவம்   ஆகிறது.

அவல் (  அவி + அல் ) என்பதும் இத்தகு அமைப்பினதே.   அவியல் என்ற சொல் இகரம் கெடாது நின்று இன்னொரு சொல்லைத் தந்தது அறிக.

மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு வெண்பாவில்:

" நாடகமே செய்தற் கிசைந்தாய்  அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம் "  என்பார்.

இதற்கு நாணம் கெடுதல் தரும்,   வேண்டா என்று பொருள்.

இனிச்  சரம் என்பதென்ன?

ஒரு மலையிலிருந்து நீர் சரிந்து விழுந்து அருவியாகிறது.  நீர் சரமாக ஒழுகுகின்றது.   சரம் என்பது சரி+ அம். இதுவும் ரிகரத்தில் நின்ற இகரம் கெட்டு அம் என்னும் விகுதி பெற்று அமைந்த சொல்லே ஆகும்.  திருமண வீட்டில் சரமாக அலங்கார விளக்குகள் ஒளிர்கின்றன.   வரிசையாக இருத்தலால்   சரம் என்று சொல்கிறோம்.  சரஞ்சரமாய்க் கோத்து வைத்தேன் என்று பேசுவதைக் கேட்டிருக்கலாம்.  நீர் போன்றவை சரமாகவே ஒழுகும் ( சரியும்). இதனாலே சரம் என்பது வரிசை என்ற பொருண்மை பெற்றது.

அவசரம் அல்லது விரைவில் சரம் கெட்டுப்போகிறது.  வரிசை ஒழுங்கு இல்லையாகிறது. இதன் காரணம் விரைதல் அல்லது வேகமாதல்தான்.

விரைவும் அதன் காரணமாகிய வரிசைக் கேட்டிலும்  இது வரிசைக்கேடு என்ற சொல்லமைப்புப் பொருளைக் கொண்டு, அதைக் குறிக்காமல் அதன் காரணத்தைக் குறித்துப்    பொருள்தாவல் மேவிய சொல்.

இதன் அமைப்புப் பொருளில் இது இல்லையாதலின் இது திரிசொல் ஆகும்.
தொடர்புடைய வேறுபொருள் மேய நிகழ்வினால் என்றுணர்க.

இப்படி அமைப்புப் பொருளில் விலகி நின்று தொடர்புடைய வேறுபொருள் சுட்டிய சொற்கள் மொழியில் மிகப்பல.  அவ்வப்போது வந்துழிக் காண்க.

மறுபார்வை பின்.