புதன், 31 அக்டோபர், 2018

கடை வடையை நிறுத்து.

கடை தினம்தந்த வடை
காசுச் செலவினை உடை;
வடை தினம்வாங்கி நானும்
வாழ்வில் நொடித்தது காணும்

இனியேது செய்வேன் என்று
நான் ஏக்கம்கொண்டது முண்டு.
தனியாக நான்படு துயரைத்
தடுத்திட வேண்டேன் வடையை.

என்னினும் அவனுழைப் பாளி
எடுத்த வேலையில்பப் பாளி;
தன்னுள் பலவிதை வைத்தான்
தன்னையே மேல்வர உய்த்தான்.

மாலைதொறும் இனிப் பிசைவேன்
மாவொடு வடைசெய இசைவேன்;
காலையும் மாலையும் உழைத்தே
காசுச்செலவினைப் பிழைப்பேன்.

கடை என்பது  சீனா.  நான் என்பது அமெரிக்கா.
சீனாவின் பொருள்களை மிகுதியாக வரவழைத்து
அமெரிக்கா கடனாளி யாகிப் பலர் வேலையில்லாது
துன்புறுகின்றனர்.  அதைமாற்ற இப்போது வணிகப் போர்
நடைபெற்றுக்கொண்டு உள்ளது. கடனை அல்லது
கட்டவேண்டியதை எப்படிச் சமன்செய்வது. அந்தக் கேள்விக்கு
இந்தக் கவி பதில்தருகிறதா என்று பாருங்கள்.

இல்லையென்றால் உங்கள் பதிலைத் தாருங்கள்.

பிழைத்தல்:  இதன் பொருள் வேறுபடுதல் என்பதே.
அறிஞர் க.ப, மகிழ்நன் இதை விளக்கியுள்ளார்.
நூல்: தமிழ்களஞ்சியம் (1945 வெளியீடு). இங்கு மாற்றுவேன்
என்பது பொருள்.

உலகில் பிழைப்பதென்பதும் வறுமையை மாற்றிக்கொள்வதுதான்.

செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வாழ்த்துக் கவி

வருக வருக  தீ(பா)  வளியே
வருகவந்  தேற்றுக ஒளியே
மெருகு தரும் மனக் களியே----அருள்
மேனிலை வாழ்வெமக் களியே.

அன்புடன் யாவரும் இணைவோம்
அடுத்தவர் பண்பொடும் பிணைவோம்
அன்பு  மழைதனில் நனைவோம்
ஆழ்நண் புக்கலம் வனைவோம்,

பிரித்தியங்  கறாத தேவி----எமைப்
பேணி வளர்த்திடும்  துர்க்கை
உரித்தாம் நலமிகத் தருவாள்  ----- நாம்
ஓமெனக் காத்திட வருவாள்.

இனிப்புறு நற்பல காரம் ---- பல
ஏந்திப் பிறர்க்களித் திடுவோம்
கனிச்சுவை தன்னொடு தேறல்----மரக்
கறியுண வேமிசைந்   திடுவோம்.

ஆடைகள் பட்டென யாவும் --- நாம்
அணிந்து மகிழ்ந்திடு வோமே.
வீடெங்கிலும் ஒளி விளக்கு --- வைத்து
விழைந்து வணங்கிடு வோமே.

மக்கள் அனைவரும் தீமை --- அண்டா
மாகலைச் சீர்தனை மேவித்
தக்க பொருள்புக ழோடு ---தம்
தாய்மனை ஓங்கிட,   வாழ்வோம்

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் உரியவாகுக.




சனி, 27 அக்டோபர், 2018

நித்தியமும் பத்தியமும்

இற்று என்ற ஒலியுடன் உலவிய சொற்கள் பல இத்து என்று மாறிவிட்டனவென்பது இட்டுக்கட்டு  அன்று:   சொல்லாய்வில் ஓர் உண்மையாகுமென்றறிக.

சிற்றம்பலம் என்ற சொல் சித்தம்பரம் என்று திரிந்தது.   இற்று என்பது இத்து என்றானது மட்டுமின்றி  லகரமும் ரகரமாய்  அழகாக வேறு சொற்களில்போலவே திரிந்தமையைப்  பலரும் உணர்ந்துள்ளனர்.  பின் அது ஒரு தகர ஒற்றினையும் இழந்து சிதம்பரம் என்றானது.  இற்றை நிலையில் சிற்றம்பலம் வேறு, சிதம்பரம் வேறு என்று நினைக்கின்ற அளவிற்கு மக்கள் முந்து வடிவினை மறந்தனர்.  வேறு சிலர் மாற்றமான சொல்லமைப்புகளையும் உரைத்தனர்.

மொழிகளில் புதிய சொற்கள் தோன்றுதற்குத் திரிபுகளே உதவியாய் உள்ளன. இல்லையென்றால் ஆதிமனிதன்  பிள்ளை  நாலு சொற்களுடனே தாம் நானிலத்தை வலம்வந்திருப்பான். இதை உணர்ந்த தொல்காப்பிய முனிவர் இயற்சொற்களுக்கு அடுத்துத் திரிசொற்களைச் செய்யுளீட்டச் சொற்களாய் அறிவித்துச் சூத்திரம் செய்தார்

நித்தியம்:

நித்தியமென்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.  உலகில் நிற்பதும் நில்லாததுமென இருவகை உண்டு. நில்லாமல் ஓடிவிடுவதில் நித்தியம் எதுவுமில்லை.  காலம் கடந்தவுடன் உயிர் ஓடிப்போகிறது.   எங்கே போயிருக்கிறது என்பதுகூட நாமறியாததாய் உள்ளது.  "குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே"  என்று வள்ளுவனார் கூறுகிறபடி உயிர் பறந்தோடிவிடுகிறது. நிலை நில்லாதது இவ்வுலக வாழ்வு.    நித்தியம் இல்லை.

நில்+ து >  நிற்று + இ + அம் = நிற்றியம்  >  நித்தியம்.

நித்திய ஜீவன் என்ற தொடரில்  ஜீவனென்பது  யிர் > ஜிர் > ஜீ;     ஜீ + அன்= ஜீவன் என்று இலங்கை ஞானப்பிரகாச அடிகளார் விளக்கியுள்ளார்.  யிர் என்பது உயிர் என்பதில் உகரம் நீங்கிய தலைக்குறை ஆகும்.

உயிர் என்பதே மிக்க அழகுற அமைந்த சொல்லாகுமே!   உ =  உள்ளே;  இர் = இருப்பது,  உடலுக்குள் இருப்பது உயிர்.  ஆகவே,  யிர்> ஜிர் என்று எடுக்காமல் இர் > ஜிர் என்றே விளக்கலாம்.   இரு என்பதன் அடியே இர் என்பது.  ய  -  ச  - ஜ என்பதோ வழக்கமான திரிபுவகை.  பல உலகமொழிகளில் காணப்படுவது ஆகும்.   யூலியுஸ்  சீசர்  > ஜூலியஸ் சீசர்.    யேசுதாஸ் > ஜேசுதாஸ்.  யமுனா - ஜமூனா.  ஜாஸ்மின் - யாஸ்மின்.  இதைப் பல்கலையிற் சென்று படிக்கவேண்டுமோ!  காய்கறி வெட்டும்போதே கற்றறியலாம்.  எத்தனை வேண்டும் இப்படி?  யி என்பதில் இ என்பதையும் இணைக்கலாம்.

பத்தியம்.

தமிழ் உலக முதல்மொழி என்று வாதாடவரவில்லை. முதல்மொழியாகவும் இருக்கலாம். நேற்றைய மொழியாகவும் இருக்கட்டும். நேற்றுவந்தவனிடமிருந்து எடுத்துக்கொள்வதும் ஓர் எடுத்தலே ஆகும்.

நோய் தீரவேண்டுமென்றால் பத்தியம் பிடிக்கவேண்டும்.  பிடிப்பது என்று ஏன் கூறுகிறோம் என்றால் அது பற்றி ஒழுகுதற்குரிய ஒன்றாக இருப்பதனால்.

பற்று > பத்து > பத்து+ இ + அம் =  பத்தியம்.

பற்றுதற்குரிய ஒழுகலாறு என்பதே சொல்லமைப்புப் பொருள்.  வாத்துமுட்டை, கோழிக்கறி, கருவாடு, பச்சைமிளகாய், பாகல்  இவையெல்லாம் விலக்கவேண்டும் என்பதைப் பத்தியமென்ற சொல்லில் எதிர்பார்த்தல் கூடாது.  எத்தனை விடையங்களைத்தாம் ஒரு சொல்லுக்குள் அடைத்துவிட முடியும்? 

வெள்ளி, 26 அக்டோபர், 2018

துரு ஓங்கிய நிலை துரோகம்.

இரும்பில் பிடிப்பது துரு.

இரும்பு என்பதைத் தமிழர் பிற்காலத்து அறிந்துகொண்டனர்.  உந்துவண்டிகள் வந்தபின்பு,  சிலர் ஒட்டுநர்களாகப் பயிற்சி பெற்று  ஓட்டி ஊதியம் பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர்.  அதுபோல இரும்பு வந்தபின்பு அதை உருக்கவும் அதனால் ஆயுதங்கள் செய்யவும் தமிழர் அறிந்துகொண்டனர்.

இரும்பு பொன் என்ற இரண்டிலும்  பொன்னையே அவர்கள் முதலில் அறிந்திருந்தனர்.  இரும்பு பின் வந்தது,   ஆகவே அதை இரும்பொன் என்றனர். இரும்பொன் என்றால் பொன்னை விடப் பெரியது என்று பொருள்.  இப்படி ஒப்பாய்ந்து பெயரிடுவதென்றால் பொன் முன் வந்தது என்ற பொருள்  சொல்லாமல்  விளங்கும்.

இரும்பொன் என்பது பின் இரும்பு என்று திரிந்தது   - நல்லபடி சொல்லானது.

துரு என்பது இரும்பைத் துருவிச் செல்வது. முதனிலைத் தொழிற்பெயர்.  எண்ணெய் சாயம்  போலும் பொருள்களால் தடையேதும்  ஏற்படாவிட்டால் துரு இரும்பைத் தின்றுவிடும்.  ஆனால் நாளாகலாம்.

இரும்பு நல்லது;  துரு கெட்டது என்று மக்கள் அறிந்துகொண்டனர்.  எளிதில் அப்போது கிட்டாத இரும்பை  அருந்துபொருள் துருவும் துருவாகும். இதிலிருந்து  துரு துர் என்று குறுகிக் கெடுதலை அறிவித்தது.

எடுத்துக்காட்டு:  துரு > துர்.     பலன் -   துர்ப்பலன்.
அதிருட்டம்  -   துரதிருட்டம்.

துரோகம் என்பதென்ன?  துரு ஓங்கிய நிலையே துரோகம் ஆகும்.

துரு =  கெடுதல். (பெறப்பட்ட பொருள்)
ஓகம் =  ஓங்கிய நிலை.

ஓ > ஓங்கு
இடைக்குறைந்து :  ஓகு.     பின்:  ஓகு+ அம் -  ஓகம்.

துரு+ ஓகம் =  துரோகம்:  கெடுதல் ஓங்கிய செயல்.

சொல்லமைப்பை ஆய்ந்து பெறப்படும் பொருள் இன்றைய வரையறவுக்கு ஏற்றதாய் முழுமையானதாய் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனைப் புரிந்துகொள்ளாத கற்போன் எவனும் ஓர் அறிந்த ஆசிரியனிடம் மேலும் விளக்கம் பெற்றாலே முடியும். இங்கு சொல்லமைப்புப் பொருள் சொற்பொருளினை நோக்கச் சற்றுப் பொதுமை வாய்ந்ததாய் உள்ளது. சரி, ஸ்பீக்கர் (  நாடாளுமன்றத் தலைவர் )  என்ற சொல் பேசுவோன் என்றுதானே  பொருள்படுகிறது.  அதன் சொற்பொருளுடன் அது ஒத்து நிற்கவில்லை அன்றோ?  அதனை நன்கு அறிந்துகொள்ளச் சொல்லியல் அறிவுடன் வரலாற்றறிவும் தேவைப்படுகிறதே!

இங்கிலாந்தில் மக்கள் பதிலாளர்கள்  வைத்த கோரிக்கைகளை, தெரிவித்த கருத்துக்களை அரசரிடம் அல்லது அரசியிடம் சென்று தெரிவித்தவரே  பேசுவோனாகிய ஸ்பீக்கர். மற்ற பொதுவர்கள் (காமன்ஸ்)  அரச அரசிகளைக் காணற்கு "அருகதை" அற்றவர்கள். இப்படியே ஸ்பீக்கர் என்ற சொற்பொருள் உருப்பெற்றது.  சில சொற்கள் கால ஓட்டத்தாலும் வரலாற்றுப் பின்னணியாலும் தம் பொருளைப் பெறுகின்றன.  இத்தகைய பொருளைப் பெறுபொருள் என்று குறித்துள்ளேம்.  புகார்மனு, புகார் என்ற சொற்களின் பொருளை விளக்கியுள்ளேம்.  உருது கிருது ஒன்றுமில்லை. இப்போது புகார் என்ற சொல்லை எந்த மொழியினரும் பயன்படுத்தலாம்.

அறிந்து மகிழ்க.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன.
பிற தோன்றின் (  மென்பொருள் தன்- திருத்தத்தால் ) உரிய நேரத்தில்
செம்மையுறும்.
 

சிறுமி கொலை - குற்றவாளி பிடிபடுவானா?

நோக்குங்கால் யாவரும்  கால்களுடன் கைகளுடன்
பார்க்கவிரு கண்களுடன் பண்பமை  ----  நீக்கமுடன்
ஞாலமேல்  உள்ளார்   ஞயமுடையார்  யார்யாரோ
காலமும் சொல்லா விடை.


விராலிமலை புதுக்கோட்டை வீட்டின்  முன்னே
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்னை
வராதவொரு வன்னெஞ்சன் வந்து கண்டு
வளைத்தாழ்த்திப் பிடித்திட்டான்  கொண்டு சென்றான்
உறாததுயர் உறப்போவ தறிந்தி   டாத
ஒண்சிறுமி கண்டமதை அறுத்து க் கொன்றான்
இராதுவெளித் துணையுமிலர் சிறார்கள் சற்றும்
ஏற்பிலாத  தெருக்களியில் தவிர்ப்பீர் ஆட்டம்!


( இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளியைப்
பிடித்துவிட முடியுமா --  என்பது தெரியவில்லை. )


இராது - வீட்டுக்குள் இருக்க மாட்டாமல்.

வியாழன், 25 அக்டோபர், 2018

விகுதி விகாரம்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.


இதன்  முந்துவடிவம் மிகாரம் என்பது.


இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)


இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.


மிகுதல் என்பதன் பொருளாவன:


அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.


ஆர்தல் என்பதன் பொருளாவன:


நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.


மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.


எடுத்துக்காட்டுமிஞ்சுதல் விஞ்சுதல்மினவுதல் வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   >< .
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்
( இகரம் ஏறிய மகர(ஓற்று)த் தொடக்கத்துச் சொல் உகரமேறிய மகர(ஓற்று)த் தொடக்கமாக வருவது   மிண்டுதல்  - முண்டுதல் என்பதிற் காண்க ). 
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.


மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்விரட்டு என்றும் திரியும்.


மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சிஎழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொல். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்-டுமயங்குவது (யங்குவ)து = மதுஇதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன
சிறப்படைந்த நிலைதப்பு + அம் தபு அம் தபம் > தவம்உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனதுபின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.


இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படும். பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.


வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.


வி + கு + ஆரம் என்றாலும்வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.


மிகுதி > விகுதி என்றாலும்வி + (கு) + தி விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.


மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.


வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியதுஅது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.


வேறு  வேற்று வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.


வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்வி >வே.


எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?


விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.


பதி + அம் = பதம்பொருள் பதிந்தது; பொதிந்தது.


அறிவோம்; மகிழ்வோம்.

திருத்தம் பின்.







விகாரம் என்ற பதம் தமிழ்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.

இதன்  முந்துவடிவம் :  மிகாரம் என்பது.

இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)

இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.

மிகுதல் என்பதன் பொருளாவன:

அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.

ஆர்தல் என்பதன் பொருளாவன:

நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.

மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.

எடுத்துக்காட்டு:  மிஞ்சுதல் -  விஞ்சுதல்.  மினவுதல் -  வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   வ>< ம.
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்;
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.

மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்.  விரட்டு என்றும் திரியும்.

மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்.  மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சி:  எழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொற்கள். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்.  எ-டு:  மயங்குவது >  ம(யங்குவ)து = மது.  இதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன. 
சிறப்படைந்த நிலை:  தப்பு + அம் >  தபு அம் >  தபம் > தவம்.  உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்.  தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனது,  பின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.

விபுலானந்தம் :  விழு புலம் ஆனந்தம்:   வி + புல + ஆனந்தம்;  இது விழுமிய அதாவது சிறப்பான;  புலம் -  புல.  மகர ஒற்று கெட்டது. நிலப்பகுதி அல்லது பாங்கு என்பது பொருள்.  சிறப்பான இடத்து ஆனந்தமாய் இருத்தல்.  இதில் விழுபுலம் என்பது விபுல என்று இரு கடைக்குறைகள் வர,  வருமொழியாகிய ஆனந்தம் இயல்பாய் நின்றது.

ஓரிரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டாலே படிப்போன் அல்லது கேட்போன் தடுமாறிவிடுவான்.

இந்தோனேசிய மொழியில் அபாங்  சொகர்னோ என்ற பெயர் புங் கர்னோ என்று சிறப்பெய்தியது காண்க.  முகம்மது சாலே என்ற பெயர் மாட்சாலே என வருதலும் கொள்க.  பிறகு வெள்ளைக்காரர்களுக்குப் பொதுப்பெயர் ஆனது.

இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்;  ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படலாயிற்று. பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.

வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.

வி + கு + ஆரம் என்றாலும்.  வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.

மிகுதி > விகுதி என்றாலும்,  வி + (கு) + தி =  விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.

மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் ,  மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்;  வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.

வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியது;  அது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.

cf MEng variance, variaunce, fr OFr  variance  Anglo-Latin variaunce, veriaunce, wariaunce; Latin variantia.

வேறு  >  வேற்று >  வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே >  வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.

வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்,  வி >வே.

எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?

விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.

பதி + அம் = பதம்:  பொருள் பதிந்தது; பொதிந்தது.

அறிவோம்; மகிழ்வோம்.

------------------------------------------------------------

Notes:

1.   Latin discordes  Eng.  discord.   cf   Tam.  kOduthal -  (bending.)


திருத்தம் பின்.



புதன், 24 அக்டோபர், 2018

A COMMENT BY SIVAMALA ON INDIAN GOVT PROCEDURE:


Your comment on the article 'Top CBI officers sent on leave to maintain agency's integrity: Arun Jaitley' is now displayed on timesofindia.com.

'Since this matter occurred in the Home Ministry and both officers are known to the HM, it is good governance for another responsible minister to deal with the matter. Arun Jaitley did right. HM should not deal. One should not be judge of his own cause. Here HM has rightly referred it to Jaitley. Correct procedure.'

மசகு என்ற சொல். மசாலாவும்

மசகு என்ற சொல்லை மஷ்கு என்று எழுதுவதால்மட்டும் அது சங்கதச் சொல் ஆகிவிடாது.  அயல் ஒலி புகுத்தினாலும்  அது தவறான எழுத்து புணர்க்கப்பட்ட தமிழ்ச்சொல்லே ஆகும்.  இதற்குச் சில காரணங்கள் உள. அதிலொன்று அது எந்தப் பழைய சங்கத நூலிலும் காணப்படவில்லை என்பதுதான்.  பேச்சு மொழியில் காணப்பட்டால் அப்போது ஒருவேளை அம்மொழியாய் இருக்கலாம் என்று சொல்லக் காரணம் உண்டு. அதுவும் முடிந்த காரணமாய் இல்லாமல் ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதலாம். இதுபோலவே பிறமொழிகட்கும் தமிழுக்கும் அமையும்.

மசித்தல் என்பது ஒரு வினைச்சொல்.

மசி என்ற பகுதியுடன் கு என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்போம். இங்கு இது தொழிற்பெயர் விகுதி;  பிறவிடங்களில் அது வேறு வேலையைச் செய்வதால் வேறு பெயர்பெறும்.  இதையும் மறக்கலாகாது.

மசி + கு.

இஃது புணர்க்கப்பட்டால்   :

மசிகு  என்றாகி சிகரத்தில் நின்ற இகரம் நீங்கி அகரம் ஏறி

மசகு என்று ஆகும்.

மசித்தலாவது இடித்துக் குழப்பப் பட்டது என்று பொருள்.

மசிகு என்று ஒலிபெறுதல் தமிழியல்பு அன்று.

மசித்தலால் ஆக்கப்படுவது மாசாலை.  இது மசாலா என்று வழங்குவதும் உண்டு.

மசி +  ஆல் + ஐ   = மசாலை.

சற்றே மசிக்கப்பட்ட பருப்பினால் பிடிக்கப்பட்ட வடை:

மாசால் வடை.  மசி+ அல் = மசால்.   இகரம் கெட்டு  அகரம் நீண்டது காணலாம்.

மசி + ஆல் என்பதே மாசால் எனினும் ஆகும்.

மசி என்பதன் அடிச்சொல் மய என்பதே.  மயக்கம் என்ற சொல்லிலும் அது
உள்ளது.   உணர்வும் உணர்விழப்பும் கலந்த  ஒரு நிலையே மயக்கம். முழுவதும் உணர்விழந்தான் இறந்தவனாகிவிடுவான்.  இது  பாதி நிலை ஆகும்,

பருப்பு மிளகு முதலியன நைபடும் பொழுது ஏற்படும் கலப்பையே மசி என்ற வினைச்சொல் காட்டுகிறது.    மய > மயி > மசி எனக்காண்க.

மயக்கு > மசக்கு > மசக்கை என்பதும் காண்க.

நிலம் தீ விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

என்பது தொல்காப்பிய நூற்பாவாகும்.

இதையும் அறியுங்கள்:  https://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post_23.html
பாசாணம்   என்ற சொல்.


திருத்தம்பின்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

அதரம் என்ற சொல் இதழில் தொடங்கி,.....

பெரும்பாலும் கவிதை எழுதும் கவிகள் தம் சொந்த உணர்வுகளையே எழுதி  மகிழ்கின்றனர்.   திரைப்படத்துக்கோ நாடகத்துக்கோ எழுதுகிற கவிஞரானால் நாயகன் நாயகியை மனத்துள் வைத்துக்கொண்டு கற்பனை மேடையில் நின்றுகொண்டு எழுதவேண்டும்.  தாம் நுகர்ந்து உணர இயலாத, பிறர் நுகர்வு பற்றிய கற்பனைக்குள் தம்மை வீழ்த்திக்கொண்டு பாடலை எழுதவேண்டும்.

என் அதர மீது வைப்பேன் ---  ஒரு
அன்பு முத்தம் கொடுப்பேன்
இன்பம் இன்பம் 

என்று ஒரு கவி எழுதினார்.  இது உடல் தொடர்பைக் குறித்து எழுகின்றது. பணத்துக்காகப் பாடவரும் பின்னணிப்பாடகியைத் திடீரென்று கட்டிப் பிடித்துவிட்டால் இன்பத்துக்குப் பதில் துன்பமே விளையும்.


உன்னை நயந்துநான் வேண்டியும் ஓர் முத்தம்
தந்தால் குறைந்     திடுமோ
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை
பாய்ந்துஅல்லல்    படுமோ

பாபநாசம் சிவன் என்ற பெருங்கவிஞரின் பாடலில் வரும் இவ்வரிகளும்
நன்றாகவே அமைந்துள்ளன.  முத்தம்  என்பதையும் இதில் புகுத்த 
இவரும் தயங்கவில்லை.  ஆண்மகன் நயந்து வேண்டுவது இம்முத்தம்.  இத்தகைய வேண்டுதலுக்கு உடன்பாடு உண்டாகிவிட்டால் வழக்குமன்றம் செல்லாமல் இருக்கலாம்.  இல்லையேல் அதுவும் துன்பம்தான்.

இந்திர லோகமும் சொர்க்கமும் நாம் பெறும்
இன்பத்தின்முன் நிற்குமோ?
மலரும் மணமும் போல்
நகமும் சதையும் போல்
இணைபிரியோம் நம் காதல் வானில் 
வானம் பாடி போல
பிரேம கீதம் பாடி மகிழ்ந்திடுவோம்

முத்துடன் ரத்தினம் வைத்துப்ப   தித்தவி
சித்திர சப்பிர மஞ்சம் ----  அதில்
நித்தமு மெத்தத  னத்தில்தி   ளைத்தொரு
மித்தம  னத்துடன் வாழ்ந்திடுவோம் 



என்ற கே.டி. சந்தானம் என்னும் கவியின் வரிகளும் காதலையே சொன்னாலும்  வானம் இந்திரலோகம் மலர் மணம் நகம் சதை என எல்லாவிடத்திலும் உலாவுவதாலும் இறுதியில் பிரேம கீதத்தில் திளைப்பதாலும் உடலைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  கவிதை திரைப்  பாடலாயினும் எதுகைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.  கவியில் வலிபு வண்ணம் பயில்கிறது. உடல்பற்றிய எதுவும் புகுத்தப்படவில்லை.

அதரம் என்ற சொல்லைப் பற்றியே விளக்க முற்பட்டோம்.  அதரம் என்றால்
உதடுகள்.  உதடுகள் என்பவை மந்திரித்த தகடுகள் என்று இன்னொரு கவி எழுதியிருந்தாலும் அவை உடலின்  பகுதிகளே.  அவற்றில் ஒன்றும் இல்லை. மயக்குறுவதும் மலைவீழ்வதும் மனமே அன்றிப் பிறிதில்லை. மனத்தையே கட்டுப்படுத்த வேண்டும்.

சொல்லமைப்பின்படி  இதழ் என்ற உதடு குறிக்கும் சொல் பூவிதழ்களையும் குறிக்கும்,   பூவிதழ் என்பதே அதன் ஆதிப் பொருள். மனித இதழ்களைப் பூவுடன் ஒப்பிட்டு இதழ் என்பது மனித உதட்டையும் குறிக்கவேண்டிய நிலை உண்டாயிற்று.  முத்தமிடுவதால் பல நோய்கள் பரவுதலால் கவனமாகவே இருக்கவேண்டும்.  தூய்மை முன்மை வாய்ந்ததாகும்.

இதழ் என்பது பின் அதழ் என்று திரிந்தது.  இகரத்தில் வரும் சொற்களில் பல அகரத்திலும் வருதல் காணலாம்.  அதழ் என்று திரிந்தபின்

அதழ் >  அதழம் > அதரம் என்று திரிந்தது.

ழகரம்  டகரமாகத் திரியும்:  வாழகை : வாடகை;  பாழை > பாடை.
டகரம் ரகரமாகும்:    மடி ( மடிதல் =  மரித்தல் )  விடு> விடதம் > விரதம் (சில உணவுகளை விடுதல் ).

திராவிட மொழிகள் சங்கதம் என்று பல மொழிகள் நாட்டில் உலவுதலுக்குக் காரணமே திரிபுகள் தாம்.  இவற்றைத் தொல்காப்பியனாரே உணர்ந்திருந்ததால்,  பொருள் ஒன்றாகச் சொல் ஒன்றாகவும் மற்றும் சொல் ஒன்றாகப் பொருள் ஒன்றாகவும் இருந்த பல சொற்களை அவர் கண்டு அவற்றைப் பற்றியும் சூத்திரம் செய்தார்.  இப்படி உலகின் முதல் சொல்லாய்வையும் மொழியாய்வையும் அவரே தொடக்கிவைத்தார்.  77 திராவிட மொழிகள் இருப்பதாக 50 ஆண்டுகட்கு முன்பே ஓர் ஆய்வுக்குழு சொல்லியது. இசின் என்ற தொல்காப்பியச் சொல்லைக் கங்கையாற்றுப் பகுதியில் வழங்கக் கண்டதாகவும் குழு சொல்லியது. இற்றைக்கு அவற்றுள் பல மறைந்திருக்கக் கூடும். பல எழுத்தில்லாதவை. எழுத்து உள்ளவை ஐந்துதான்.  இவையும் திரிபுகளால் தோன்றியவை.  தமிழினுள்ளும் எத்துணை திரிபுகள்.  ஒரே மாவைப் பல்வேறு பலகாரங்களாகப் பண்ணிவிட்ட நாடகமே இம்மொழிகள் எல்லாம்!!  ஒன்றுக்கொன்று தொடர்பின்றி  மக்கள் கூட்டம் வாழ்ந்தமையே மூலகாரணமானது. வானொலி தொலைக்காட்சி ஏதுமில்லை.

இவ்வாறு திரிபுகள் பல.

எ-டு:  ஆ+ இடை :  ஆயிடை;   அ+ இடை: அவ்விடை.    
அவ்விடை > அவிடை > அவிடா. இதை விரிக்கவில்லை.

இழு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடையவை.  இவ்விரு வினைகளில் இகரம் நீண்டு ழுகரம் ரகர ஒற்றானது.  இ என்பதும் ஈ என்பதும் ஒன்றுக்கு ஒன்று நிற்பதுண்டு:  எடுத்துக்காட்டு:  இங்கு > ஈங்கு;    அங்கு என்பதும் ஆங்கு என்று திரியும்.  இ > இர் > இருதயம்;  இரத்தத்தை ஈர்த்துக்கொள்ளும் உறுப்பு.   இழு> இர் > இரு;   இரு> ஈர். ( எண்ணிக்கைச் சொல்லாகிய இன்னோர் இரு என்பதும் ஈர் என்றே திரியும்.  ஈராறு கரங்கள் என்பது காண்க.  இர் > ஈர் > ஈரல்: மூச்சு இழுத்தல். ( நுரை ஈரல் ). பிற உடல் ஊறுசாறுகளை இழுத்தல்  (கல்லீரல் ).. ஆதலின்  ஈரல் எனப்பட்டது


ஈர்த்தல் :  ஈர் > ஈர் + து +  அயம்  (அ + அம்).  அங்கு அல்லது அயலில் இயங்கி  ஈர்த்துக்கொள்வது ).  அயம்:   ஏனை உறுப்புகட்குப் பக்கலில் இருப்பது என்பதாம்.   ஈர்தயம் > இருதயம் எனினும் பொருள் போதரும். காண்க.

தமிழ் விரிந்த பரவுதலை உணர்ந்து மகிழ்க..

குறிப்பு: 

 சில சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறலாம். இதை முன்பே சொல்லியிருக்கிறோம்.  
அதரம் :  அ = அங்கிருக்கும்;  து = பொருள் /   அது;   அரு =  அருகிலே;  அம் = அமைந்துவிட்டது.    உதடுகள் ஒன்றுக்கு ஒன்று வேறாக நின்றாலும் வேண்டியபோது ஒன்றுபட்டு மூடிக்கொள்பவை.  இது இதையே காட்டுகிறது. இச்சொல்லமைப்பு.  உதடுகள் இறுதிகள் இணைந்து இடைவெளிகொண்டு இருப்பவை. ஒன்றினருகில் இன்னொன்று  இணைப்பில் இருத்தல். பூவிதழ்களும் இத்தகையவே.

ழகரம் -  ரகரம்:   அழ் = அர் = அரு ( இடநெருக்கம்; அடுத்திருத்தல் .) 
அதழ்  ( அழ் );  அதர் (அர் - அரு ).> அதரம்.

 திருத்தம் பின்.

மீண்டும் பார்த்த திகதி:  21.4.2020.


கொரனா என்னும் மகுடமுகி நோய்நுண்மி உலவும் இந்நாளில் யாரிடமிருந்தும் தொலைவிலேயே இருக்கவும்.  வந்துவிட்டால்  யார் பிழைப்பார், யார் இறப்பார் என்று முன் கூட்டியே அறியும் வழி ஒன்றுமில்லை.  "பத்திரமாக இருங்கள்".

திங்கள், 22 அக்டோபர், 2018

தீனர் என்ற சொல். (திரிசொல்)

தின்,   தீன் என்ற சொற்களை இன்று அறிந்துகொள்வோம்.

மக்கள் சாப்பிடுவது, " உண்பது"  என்று  சொல்லப் படும்.  பெரும்பாலும் விலங்குகளின் உட்கொள்ளுதலே தின்பது என்ற சொல்லால் குறிக்கப்பெறும்.என்றாலும்  சில வேளைகளில் மனிதனையும் "தின்னு" என்று ஏவுதல் உண்டு  .

ஏழைகளின் உணவு இரங்கத் தக்க தரத்தினதாய் உலகெங்கும் இருப்பதனால் அதற்கு ஏழ்மை என்ற பொருள் ஏற்பட்டது.

தின் + அம் =  தீனம்.  எளிமை, வறுமை இன்ன பிற.

இது முதனிலை திரிந்து அம் என்னும் விகுதி பெற்ற பெயர்ச்சொல் ஆகும்.  இது தின்னுதல் (  விலங்குபோல் உட்கொள்ளுதல் )  என்னும் கருத்தினின்று  அமைந்ததே ஆம். இதைப் போல முதனிலை நீண்டு அமைந்த இன்னொரு சொல்:

படு >  பாடு. (  இது விகுதி பெறவில்லை.)

விகுதி பெற்றது:

நடி  +  அகம் =  நாடகம்.  ( இங்கு ந  என்பது  நா என்று நீண்டது.   அகம் என்ற
விகுதி பெற்றது.   நடி என்பதன் இறுதி    இகரம் கெட்டது , அல்லது வீழ்ந்தது ).

இவை போல்வன பழைய இடுகைகளில் ஆங்காங்கு காட்டப்பெற்றுள்ளன.

இவற்றையும் அறிக:

தின் + இ =  தீனி.   (முதனிலைத் திரிபு;  இகரம் விகுதி ).
தின் + இ  =  தின்னி.   ( ஒருனகர ஒற்று தோன்றல்;  இகரம் விகுதி. முதனிலை  இயல்பு ஆனது ).   "இவன் ஒரு பலகாரம் தின்னி." (  வாக்கியம் )
தின் + அர் =  தீனர்.  ( முதனிலை நீட்சித் திரிபு;  அர் விகுதி).  ஏழைகள்.
தின் > தீன்:   உட்கொள்பொருள்.

தின் > தீனன்:  விலங்குட்கொள்வது போன்றவை  உட்கொள்ளும் ஏழை,
பின் பொதுப்பொருள்:  ஏழை, வறியோன்.

தீனி

மக்கள் என்பது உயர்திணையாகவும் மாக்கள் அஃறிணையாகவும் கொள்ளப்படும்.  மாக்களாவர்,  மக்கள் போல் உருவில் மக்கள் அல்லாதவர்.   தீனி என்பது மாக்கள் உட்கொள்வதும் விலங்குகள் உட்கொள்வதும் ஆகிய தாழ்ந்த பொருள்.  இம்மாக்கள் பலர் ஏழைகளும் ஆவர். இவர்களே தீனரும் ஆவார்கள்.
.

இறைவன்முன் தன்னைத்  " தீனன்" என்று பற்றன் சொல்லிக்கொள்வது  ஓர்
அடக்கமாகும்

அடிக்குறிப்புகள்:

1.   தீனரைத் தியக்கறுத்த திருவுடையார்:  தேவாரம், 477.
2.    தீனன் : மிகுதியாய் உண்போன் என்பதுமாம்.
3.   தீனம்:  நோய்.( என்பதுமாகும்)
4     தீனவத்சல, எளியோர்க்கிரங்குதல்;  தீனநுகம்பன.
5.   தின்பண்டம் - தீன்பண்டம் என்பதும் ஆகும்.
6     உணவு என்ற அடிப்படையில் எழுந்து பின்னர் பொருள்மாற்றமடைந்து  ஏழை என்று பொருள்கொண்டதனால் இது திரிசொல் ஆகிறது.  (  இயற்சொல் அன்று ).

7. "ஞானகுருபரன் தீனர்க்கருள் குகன்"   ( இசைப்பாடல்)

8 தீன தயா பரனே தேவனே (பாட்டு ) :  விலங்குணவுபோலும் உட்கொள்ளும் ஏழையர்க்கு அருள் தந்து  காப்பாற்றும் தீபோலும் தூயவனே - இறைவனே என்று விரிந்த பொருளைச் சொல்லாய்வின் மூலமே கூறலாம்.  பிறவழிகளிட் பொருள் குறுக்கம் பெறும்.

தீ > தே > தேவன்:   தீ என்ற சொல்லினின்று தே என்று திரிபு ஏற்பட்டதால் தேவன் என்பதற்கு இவ்வாறு விரித்துப் பொருள் கூற இயல்கின்றது. தே எனற்பாலதற்கு தீ போலும் தூயவன் என்றே பிறரும் கோடி காட்டுவர்.





   

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல் (பாட்டு)

இது ஓர் அழகிய கர்நாடக சங்கீதப் பாடல்:

பாடலை முழுமையாகத் தருகிறேன். இசைவட்டில் உள்ள பாடல்தான்:


ஆறுமோ  ஆவல்
ஆறுமுகனை நேரில் ----  காணாமல்   (ஆறு)

ஏறுமயில் ஏறிக் குன்று
தோறும் நின்றாடியவன்
பேரும் புகழும் தெரிந்தும் அவன்
பேரழகைப் பருகாமல்                               (ஆறு)

ஞான குருபரன்
தீனர்க் கருள் குகன்
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்

காணக் கிடைக்குமோ
கூறுதற் கில்லாத
அற்புத தரிசனம்
கற்பனை செய்தால் மட்டும்                   (ஆறு )

இதை  அமரர் எம். எல். வசந்தகுமாரி கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
கேட்டு மகிழவும்.

இயற்கை எல்லாம் அழகுதான்.  அதுவே அழகு.  அதுவே முருகு என்பார்
திரு வி.க.    "பேரழகைப் பருகாமல்"  என்ற வரியை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இயற்கை அழகெல்லாம் காணுங்கள்.  முருகு என்றால் அழகு,    பின்  முருகு நிலைகொள்ளும் முருகனையும் காணுங்கள்.  அதுவே "ஆனந்தம்" என்பது.  அவன் ஆனந்த வைபோகன்.  மகிழ்வனைத்தையும் ஒருசேர ஆங்குக் காணலாம்.  நுகரலாம்.   அற்புத தெரிசனமே அது. வானின் அனைத்தும் அவ்வழகைத் தொழுகின்றது.  அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால்மட்டும் காணுதற் கியலாது.  சென்று வணங்க வேண்டும்.

அழகைப் பெண்ணாக உருவகம் செய்கிறார் பாரதிதாசன். 

காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலங்கு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்  ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

எங்கெங்கு காணினும் சக்தியடா -- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!

பின் சொந்தமாகப் பாடி  உவகை கொள்ளுங்கள்.

அம்மையும் ஆறுமுகனும் ஒன்றே,  எல்லாம் அழகுதான். தூணிலும்
துரும்பிலும் இருப்பது இறைமை ஆகும்.  சிவம் வேறு முருகன் வேறன்று என்பார் அருணகிரிநாதர்.

சனி, 20 அக்டோபர், 2018

சற்றிருப்பதும் வைத்திருப்பதும்.

இக்காலத்தவர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்தமகிழ்வுடன் பயணச்சீட்டையும் வாங்கிக்கொண்டு தாம் எங்கு சென்று ஓய்வெடுக்க முடியுமோ அங்கு பறந்து சென்றுவிடுகின்றனர். வானூர்திகள் இல்லாத பழங்காலத்தில் எங்காவது போகவேண்டுமென்றால் இவ்வளவு வசதிகள் இல்லை. யாரிடமும் பயணச்சீட்டுகள் வேண்டிப் பெறவேண்டியதுமில்லை; அவர்கள் இல்லையென்று சொல்லி அதனால் மனம் தொல்லைப் பட வேண்டியதும் இல்லை. இப்போது கிடைப்பவைபோல் தூக்குப் பெட்டிகளும் அப்போது இல்லை.  மாட்டு வண்டிகள் மட்டும் இருந்தன. அவற்றுள்ளும் பல சொந்தப் பயன்பாட்டுக்கே கிட்டின.

ஔவையார் போன்ற புலவர்கள் பாவம். பயணம் செல்கையில் தங்குவதற்கு இடமின்றி, கேட்டறிந்துகொண்டு, ஒரு பாழடைந்த வீட்டில் சென்று தங்கினார்.  இரவில் முதல் யாமம்,  இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம் என்று ஒவ்வொரு யாமத்துக்கும் பேய் வந்து தொல்லைகொடுக்க,  "எற்றோமற் றெற்றோமற் றெற்று" என்று முடியும் சில அழகிய வெண்பாக்களைக் கொண்டு பேயினிடத்தும் பேசினார்.   அந்த வெண்பாக்கள் இன்னும் நம்மிடை உள்ளன. இவை சுவையான வெண்பாக்கள். 

யாமம் என்ற சொல் யாத்தல் என்ற சொல்லினின்று வருகிறது.  யாத்தலாவது கட்டுதல்; பிணித்தல்; இறுக்கித் தொடர்புறுத்தல் ஆகும்.  இந்த யாமங்களில் உயிர்கள் உறக்கத்தில் இறுகப் பிணிக்கப்பட்டுக் கிடக்குமாதலால் , யாமம் என்ற சொல் அதைக் காட்டப் பிறப்பிக்கப்பட்டது.   யா (பகுதி) + ம்+ அம் =  யாமம் ஆனது.   அது பின்னர் அயல்திரிபுகளும் அடைந்தது.  உங்கள் வீட்டு ஆட்டுக்குட்டி அடுத்தவீட்டில் கட்டிக் கிடந்தால் -  அவ்வீட்டானும் கொடுக்க மறுத்தால் -  நீங்களும் காவல்துறையிற் புகார் கொடுத்தால் -  அவர்கள் எப்படி முடிவு செய்வார்கள்.  இருவருக்கும் பொதுவான ஒரு நடு இடத்தில் ஆட்டுக் குட்டியை விட்டு அது எங்கு போகிறது என்று பார்த்து அப்புறம் அந்த வீட்டில் ஒப்படைத்தார்களாம்!!  அதுவே சொல்லாக இருந்தால்....?

யாமம் என்பதில் ம் ஒற்று ஓர் உடம்படு மெய் என்றே சொல்லவேண்டும், இது எப்படித் தோன்றி   உள்வந்தது?   யாக்கும் + அம் =  யா(பகுதி மட்டும் எடுக்கப்பட்டது ) + ( உ ) ம் + அம் =  யா+ ம் + அம் = யாமம்.  மகர ஒற்று இப்படிச் சிந்தித்துத்தான் பெறப்பட்டது.   உம்மையில் (  உம் இடைச்சொல்லில்) பெற்றதே இந்த மகர உடம்படு மெய் ஆகும்.  அம் என்பது அமைப்பு என்பதன் தரவு,   அல்  அன் என்பனவும் அம் என்று திரியும். எல்லாம் தமிழில் உள்ளனவே.

 புகார் என்ற சொல்:  https://sivamaalaa.blogspot.com/2018/08/blog-post_31.html
அரண்மனைக்குள் புகுவார் அனுமதி உடையவர்.  அரசன் வீற்றிருக்கும்போது உள்ளுக்குப் போகலாம்.  புகார் -  அனுமதி கிட்டினன்றிப் போக முடியாதவர்கள்.  அவர்கள் கொடுக்கும் மனு புகார்மனு.  நாளடைவில் புகார் என்பதற்கு நடவடிக்கை கோரும் மனு என்ற பொருள் ஏற்பட்டுவிட்டது.

இவை நிற்க.

பயணம் போகும் போது  ஓர் இரவு அல்லது கொஞ்ச காலம் தங்கிச் செல்லுமிடமே சத்திரம்.  இது சற்று இரம் என்பதன் திரிபு.  சற்று :  சத்து. இரு என்பது அம் விகுதி பெற்று  இரம் ஆகிற்று.   சத்து இரம் --  சத்திரம்.

இவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மூட்டை துணியுடன் சென்றனர்.  அவர்கள் வைத்திருந்தது அந்தத் துணிமூட்டைதான்.  அதையே தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினர்.  அதுவே வைத்திரம் எனப்பட்டது.   வைத்து இருப்பது வைத்திரம்.  வைத்திரம் >  வத்திரம் > வஸ்திரம்.

இந்த வத்திரம் என்பது இப்போது இலத்தீன் மொழிமுதல் பல மொழிகளிலும் பரவி மருட்டுகிறது.    vest. invest. investiture. divest.  இன்னும் பல.  பெரும்பாலும் இந்தப் பயணிகள் சிறிய துணிமூட்டையே வைத்திருந்ததால் உலக மொழிகள் அடைந்த ஊதியம் பெரிதே.

உலகம் வாழ்க!




வெள்ளி, 19 அக்டோபர், 2018

தானியம் அல்லது பயிர்விளைச்சல்கள்

தானியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

இச்சொல்லுக்கு நேரான தனித்தமிழ்ச் சொல்:  கூலம் என்பது.

கூலம் என்பது சேர்த்து வைத்தல், குவித்து வைத்தல் என்ற சொற்பொருளடியாகத் தோன்றும் சொல். இவற்றை நோக்குக:

குல் -    குலை  ( பழங்கள் சேர்ந்திருப்பது.  )  வாழைக்குலை.
குல் -    குலம்  (  மக்கள் ஒன்றாக வாழ்வது ).
குல் -     குலக்கு  ( குலையாய் இருப்பது )
குல் -     குலரி  (குலை)
குல் -     குலவு  ( சேர்ந்து உறவு அல்லது நட்புக் கொண்டாடுவது )
குல் -     குலவை> குரவை:  சேர்ந்தாடிப் பாடுவது.   லகர ரகரப் போலி
குல் -     குலாயம் : பறவைகள் கூடியிருக்குமிடம்.
குல் -     குலா -  குலாட்டு:  சேர்ந்து மகிழ்வு கொள்ளுதல்.
குல் -     குலி:  கணவனுடன் சேர்ந்திருப்பவளாகிய மனைவி
குல் -     குலுக்குதல்:  பெரும்பாலும் ஒன்றாகச் சேர்த்து ஆட்டுதல்.
குல் -     குலுங்குதல்:   சேர்ந்து ஆடுதல்.
குல் -     குலைக்கல்  (ஆட்டுக்கல் )
குல் -     குலைத்தல்.  (கலைத்தலுமாம் )
குல்-      குலைதல். (பல்வேறு பகுதிகளும் வீழ்தல் )
குல் -     கூல்  -  கூலம்.  நெல் முதலியவை சேர்த்துவைத்தல்  
(முதனிலை நீண்டு விகுதி பெறல் )

தானியமென்பது இருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் உள்ள வழக்கு என்று தெரிகிறது.  ஆகவே சங்கதத்திலும் இது தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும். இச்சொல்தவிர தானியம் என்பதனுடன் தொடர்புபட்ட சொற்கள்மட்டும் அறுபதிற்கு மேற்பட்டவை உள்ளன.  ஐயத்திற்கு இடமின்றி சங்கதம் மிக்கச் சொல்வளமுடன் உருவாக்கப்பட்டு வழக்கிற்குக் கொணரப்பட்டது என்பது சொல்லாமலே விளங்கும்.

சங்கதம் இறைவணக்க மொழியாக நாவலந்தீவு முழுமையும் வலம்வந்தது ஆதலின்,  அதன்சொற்கள் தமிழிலிருந்து மட்டுமின்றி ஏனைப் பாகதங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பாகதங்கள் என்பவை சங்கதத்துக்கு முன்வழங்கிய முன்னோடி மொழிகள். சங்கதத்தின் பின்னும் பரவலாக வழங்கிய மக்கள் மொழிகளும் பாகதங்கள் என்றே குறிக்கப்பட்டமையின், பாகதம் என்ற சொல் சற்றுப் பொருள்மாறாட்டத்தைத் தரக்கூடியதாகும்.  நாம் இதைத் தெளிவிக்க முன்னைப் பாகதங்கள், பின்னைப் பாகதங்கள் என்று குறிக்கலாம்.

பர> பார் > பா:  (பரவலாக).  கதங்கள்:  (வழங்கிய)  ஒலிப்பொதிவுகள்.   கத்து > கது : (   இடைக்குறை;  பொருள் ஒலி ). கது > கதம்.   கத்து > கது என்பதுபற்றி ஒரு தனி இடுகையுமுளது.  காண்க.  ஒலிகளாவது : மொழிகள்.  இவை பரவலாக வழங்கிய மொழிகளாம்.  சங்கதம் = சமஸ்கிருதம்.  சம்: ஒன்றாகக் கூட்டப்பட்டவை; கதம்: ஒலிகள் அல்லது மொழிகள்.   கதம் > கிருதம்.  கிருதம் என்பது அயல்திரிபு. ப என்பது ப்ர என்றும் க என்பது க்ர என்றும் திரிவது சங்கத இயல்பு.   தமிழ் க -- சங்கதத்தில் கிரு என்றும் திரியும்.

உருக்கு வேதப்   (Rig Veda )  பாடல்களைப் பாடிய பாடகர்கள் எல்லோரும் பிராமணர்கள் அல்லர். பலதரப்பட்டவர்களும் இருந்தனர்.  வீட்டுக்கு  வீடு போய்ப் பாடித் தக்கிணை (  தக்க இணை அல்லது தட்சிணை)1  பெற்ற பாணர்கள் அல்லது பாடலர்களும் இருந்தனர். பலர் ஏழைகளே. கடவுட் சிந்தனை என்பது ஏழ்மையில்தான் நல்லபடி வெளிப்படுவது.

சங்கத வேதங்களில் ஏறத்தாழ ஆயிரம் சொற்கள் தமிழ் ஆகும்.  எண்ணூறு உள்ளன என்று அடையாளம் கண்டிருக்கிறார் கமில் சுவலபல்.

மூன்றிலொருபகுதி திராவிட மூலத்தன என்கிறார் பிரஞ்சு மொழி ஆய்வாளர் டாக்டர் லகோவரி.

இனி தானியத்துக்கு வருவோம்.

தானே பாடுபட்டு அல்லது வேலையாட்களை வைத்து விளைச்சலை உண்டாக்கித் தான் பெற்ற கூலங்களே "தானியங்கள்"  என்பவை. விளைந்தது பூமியில்தான் என்றாலும், தன் நிலத்தில் தான் பாடுபட்டு விளவித்ததனால் தானியம் ஆயிற்று..   தான்+ இ + அம்:  தான் இங்கு விளவித்தது அல்லது விளைத்தபின் வைத்திருப்பது.

நிலத்துக்கு உறழ்வாகத்( contrast ) தானியம் உணரப்பட்டது. இதை ஆங்கிலச் சட்டங்கள் நன் கு வெளிக்கொணருகின்றன.  நிலம் "ரியல்டி" ( ரிய :  நிலம் ) என்றும்  தானியங்கள் "பெர்சனால்டி"  ( பெர்சன்:  தான் எனற்பொருட்டு )  என்றும் பெயர் பெறும்.   பெர்சனாலிட்டி என்பது வேறுசொல்.  பெர்சனல் சட்டல்ஸ் என்றும் கூறுவர். இதுபின் "மூவபல் ப்ராப்பர்டி"  என்று மெக்காலேயினால் விளக்கப்பட்டது.  ஆங்கிலத்தில் பெர்சனால்டி என்பது தானியம் என்பதினும் விரிந்தது எனினும், தானியம் என்பது தனக்குரியது என்ற பொருளில் அமைந்தது என்பதே நாம் இங்கு சொல்வதாகும்.  நிலம் என்பது உரிபொருள் ஆயதுபோல தானியமும் உரிபொருள் ஆனது என்பதே இங்கு போதரும் உடமைக்கருத்து ஆகும்.

தானியம் என்ற சொல் தன்னவை, தன்னது என்று பொருள்படும் சொல் ஆகும். இது வேதங்களில் சென்று வழங்குவது நம் மொழிப்பெருமையே. நாம் மகிழ்வோம்.  தான் இ அம் > தானியம்:  தான் இங்கு உரிமைப்பொருளாய் வைத்திருப்பது.   வஸ்து என்பது வைத்து என்பதன் திரிபே.  வைத்து > வத்து > வஸ்து.  எச்சங்களிலிருந்து பல சொல்லாக்கங்கள் சமஸ்கிருதத்திலும் பாலியிலும் காட்டப்பெறுகின்றன  அறிக.

சம்+ கதம் =  சங்கதம்
சம் + கதம் =  சம் கதம் > சம் க்ருதம் >  சம்ஸ் கிருதம்  > சமஸ்கிருதம்.  ( இங்கு வந்த ஸ் என்பது ஒரு புகுத்தொலி அல்லது தோன்றல்).  மேல்கூறியவாறு,  கிருதம் என்பது கதம் என்பதன் அயல்திரிபு.

சிற்றூர்ச் சொல்லாகிய தானியம்  எங்கும் பரவியது  சிற்றூரைப் பெருமிதப் படுத்துமென்ப தறிக. பல சிற்றூர்ச் சொற்கள்  பண்டைத் தமிழிலக்கியங்களில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் பிறமொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது சிற்றூரார் சொல்லமைப்புத் திறத்தையும் வெளிக்கொணர்வது ஆகும். இறப்புத் தொழுகைகளில்போது தானியமிடுவது சிற்றூரில் இன்னும் நடைபெறுகிறது.   தொண்கூலங்களையும் நவதானிய மென்பர்.  தொண்கூலம் -  ஒன்பது கூலம்.

இதை அறிஞர் முன்னரே விளக்கியுள்ளனர்.  வேலைமுடிவில் கூலமாகக் கொடுத்த ஊதியம் =  கூலி ஆனது. சம்பா நெல்லும் உப்புமாகக் கொடுத்தது:
சம்பளம் ஆனது.  சம்பு:  நெல், சம்பா.  அளம்:  உப்பு,


Realty:  from rea meaning land.
Personalty:
Lord Macaulay a framer of Penal laws of India.
Dr Lahovary
Kamil Svellabel. of Czek

1.  பக்கம் > பட்சம்;  பிக்குணி > பிக்ஷு அல்லது பிட்சு. பட்சி -  பக்கி.

பிழைகள் மாற்றங்கள் தோன்றின் பின் திருத்தப்பெறும்

வியாழன், 18 அக்டோபர், 2018

போலிகளின் பட்டியலில் கவிஞன்

நாமிணைவோம் வருவாயா என்றான் போலிச்
சாமியார்கள் பட்டியலில் கவிஞன் சேர்ந்தான்!

தேமதுரம் தமிழாமே  என்றான்  ஆர்ந்த
தெருக்கூட்டம் தமைஈர்க்கும் திறமே தேர்ந்தான்.


புதன், 17 அக்டோபர், 2018

சில வினைமுற்றுக்களின் சிறப்புகள் ( ஒரு வினா)

இன்று சில வினைமுற்றுக்களை ஆய்ந்தறிவோம்.

தமிழில் நிகழ்கால வினைமுற்றுக்களில் இன்று என்ற சொல் பயன்பட்டுள்ளது இப்போது காண்போம்.

வருகின்றான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

வரு+ கு + இன்று + ஆன்  = வருகின்றான்.
செய் + கு + இன்று + ஆன் =  செய்கின்றான்.

இப்போது  இவ்வினை வினைமுற்று வடிவங்களில் இன்று என்ற சொல்
பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதை வேறு விதமாகச் சொல்வோம்.

வருகின்றனன்    -  இதில் அன் என்று ஓர் இடைநிலையும் அன் என்ற
ஓர் ஆண்பால் விகுதியும் இணைந்துள்ளன காண்பீர்.

வரு + கு+ இன்று + அன் + அன்
செய் + கு + இன்று + அன் + அன்.

இன்று என்பதே இப்போது செயல் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது.
காலம்  நிகழ்காலம் எனப்படும்.

இனி,  இறந்த காலத்தில் இதைக் கூறுவதானால் இன்றுக்குப் பதிலாக
அன்று என்பதை இடவேண்டும்.

வ  +  து +  அன்று.
செய் + து + அன்று.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இன்றுக்கு எதிர்மறையான அன்று என்பதே இறந்தகாலம் காட்டுவது.  நாளடைவில் அன்று என்ற விகுதி களைவுற்றது.  பயன்பாட்டு வழக்கின் காரணமாக வந்து என்பதே இறந்தகாலத்தைக் காட்டத் தொடங்கியது. இற்றைக்கு வந்து என்பதே இறந்தகால எச்சமாகவும் வந்தான் என்ற ஆன் விகுதி இணைப்பு உள்ள முற்று  இறந்தகால வினைமுற்றாகவும் இயல்கின்றது.

ஆகவே பழம்பாடல்களில் வந்தன்று எனின் இன்றைய வழக்கில் வந்தது என்பதாகும்.

அன்று என்பது  அன்+து என்று அமைந்த சொல்.   அன் என்பது இறந்தகாலச் சுட்டுச்சொல்.  அ என்பது அதனடி. ஆகும்.

எனவே வந்தன்று என்பதைப் பிரித்தால்:

வ+ து + அன் + து  என்று பிரியும்.   இதில் து இருமுறை வந்துள்ளது.

இதில் புலவர்கள் புகுந்து,  வந்து என்பதில் வ+த் +உ என்று  உறுப்புகள் சேர்ந்து  த் என்பதே இறந்தகாலம் காட்டிற்று என்றனர்.  அன்று என்பது விகுதியாக இல்லாதுபோயின் த் என்பதுதான் இறந்தகாலம் காட்டவேண்டிவரும். வந்~ என்பதில் நகர ஒற்று புணர்ச்சியினால் உண்டானது எனக்கொள்க. கால உணர்வு ஏதாவதொன்றில் தொற்றிக்கொள்வதே உண்மையாகும்.

பொழிப்பாக:

வருகின்று என்பது  நிகழ்காலம்.
வந்தன்று என்பது இறந்தகாலம்.

வருகின்று  என்பது  வருன்னு என்று  நிகழ்விலும்  வந்தது என்பது வன்னு என்று இறப்பிலும் மலையாளத்தில் திரிதல் காண்க.

 இன்று என்பது இன்னு என்று திரிய,  அன்று என்பது அன்னு என்று திரியும்.

வருன்னு என்பது வரு என்ற பகுதியில் காலம் இல்லை.
வன்னு என்பதில் 0ன்  எனற்பாலதில் காலம் இல்லை.
ஈரிடத்தும் உகர இறுதி சாரியை.

இதற்கு மாறாகக் காலம் வரு என்பதில் நிகழ்வு;  வன் என்பதில் இறப்பு எனலாமோ?
அல்லது  வருகின்று என்பதில் இன்று எனல் காலம்;  ஆயின் வந்தன்று என்பதில் அன்று என்பது காலப் பொருள் பொதிந்திருக்கவில்லை என்னலாமோ?

மறுதலித்துப் பின்னூட்டம் செய்க.

வந்தன்று, மகிழ்ந்தன்று என்பன சங்ககால வடிவங்கள்.

நினைவிலிருந்து:

"இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே"

யாதுமூரே என்ற கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாட்டு,

காலச்சுவடுகள் யாங்குள கூறுக.

-----------------------------------------------

அடிக்குறிப்புகள்:




நன்னூல்: எழுத்ததிகாரம்: பதவியல்.

143. ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை


கு+ இன்று என்பதை கின்று என்று பிரித்து வகைப்படுத்தும் நன்னூல்.
இன்று என்பதும் முன் நிற்கும் கு அல்லது க் என்னும் ஒற்றும் தனித்தியங்காமல் இடைநின்றமையின் அவற்றுக்குத் தனிப்பொருள்
நன்னூலார் கூறிற்றிலர். இது பிறழ்பிரிப்பென்பார் அறிஞர் மு.வரதராசனார்.

கிறு என்பது கின்று என்பதன் இடைக்குறை.

ஆநின்று:   செய்யாநின்றான் =  செய்துநின்றான்.
இது செய்யாமல் நின்றான் என்று பொருடருதலும் உண்டு. கவனமுடன்
காண்க.

142. த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை   ( நன்.)






செவ்வாய், 16 அக்டோபர், 2018

ஒரு கவிஞனின் வீழ்ச்சி.

திரைத்துறையில் பாட்டெழுதத் தேடினான் வாய்ப்பதனை;
மறைத்தனனே ஆட்டிவைத்த மாயிருள் ஆசைகளை!
குரைத்ததுபோல் சத்தமிடும் கோத்தளி பாடல்களால்
நிறைத்தபல நீள்படங்கள் அன்னாற்   கறிமுகமே.

இசையறிஞர்  நெஞ்சிரக்கம்  ஏற்பதனால்  ஊதியமாய்ப்
பசைவரவும்  கேட்டவர்கள்  தந்தபுகழ் உந்திடவும்
மிசையுறுகா மப்பசியால் மெல்லியலார் பாடுநரின்
தசையுறவும் வன்புணர்வும்  கொண்டுவிழ லாயினனே.

தகுதிதன தெத்தகைத்தோ தானறியாக் காரணத்தால்
மிகுதியுறச் சிந்தித்தான் மேலுலகோர்  தாம்பழித்தான்;
அகதியெனச் சாய்ந்திடுவன் தண்டனையன் னாற்கினியே
தொகுதியிழந்  தான்புரையத் தோல்வியிலே வீழ்படுமே.


அரும்பொருள்:

மாயிருள்:  பேரிருளில் அல்லது இடர்களில் புகுத்தும்.
கோத்தளி :  கோத்து அளி -  பழம்பாடல்களில் வரும் சொற்களைப்
பொறுக்கிக் கோத்துத் தந்த.
அறிமுகம்:  மக்களிடையே அறியத்தக்கவன் ஆன நிலை.
ஏற்பதனால்:  ஏற்பட்ட இரக்க உணர்வை முன்னிறுத்தி முனைந்ததனால்.
பசை வரவு :  ஊதியம் செலவு போக அதிக மிருத்தல். ஒட்டாதது -
செலவிடப்பட்டது;  ஒட்டியது: பசை; மீதப்பட்டது,
கேட்டவர்கள்:  பாடல்களைக் கேட்டவர்கள்,
மிசை:  மேலாகிய;  ( அதிகமான )
மேலுலகோர்:  முன் காலத்து வாழ்ந்து மக்களிடை வணக்கத்திற்கு
உரியோர் ஆனவர்கள்.
அகதி:  கதியற்றோன்.
தொகுதி :  தேர்தலில் வெற்றி பெற்ற இடம்.
இழந்தான்:  மறு தேர்தலில் அடைந்த தோல்வியாளன்.
புரைய  -  ஒத்த.
வீழ்படும் :  வீழ்ச்சி அடைவான் . 

யாப்பியற் குறிப்பு:

தொடக்கச் சீர்கள் ஒவ்வோர் அடியிலும் கருவிளங்காய்ச் சீர்களாய்
வருமாறு தொடுக்கப்பட்டுள்ளன.

முதல்பா தவிர பிற எல்லாச் சீர்களும் நிரைநடுவாகிய சீர்களான் இயன்றுள்ளன.

ஒவ்வொரு பாவும்  ஏகாரத்தில் இறுகின்றது.

முதல்பா தவிர அடிதோறும் தளை வெண்சீர் வெண்டளையாய் யாவுமியன்றன.பின்வருமடி கலித்தளை.

ஆகவே முதல்பா தவிர  ,  சந்தம்:  தனதனதாம்  தாந்தனதாம் தாந்தனதாம் தாந்தனதாம் என்பதாகும்.

படித்து மகிழ்க.




ஞாயிறு, 14 அக்டோபர், 2018

tamil for word: battery.

பேட்டரி, பாட்டரி என்னும் மின்சேமி

பாட்டியுடன் ஒரு பேரன் கைப்பேசி வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்  . திடீரென்று கைப்பேசி நின்று உரையாடல் அறுந்துபோயிற்று.  என்ன என்று பார்க்கும்போது  கைப்பேசியில் "பேட்டரி" என்னும் மின்சேமிப்பு (மின்சேமி ) தீர்ந்துவிட்டது.  அதில் மீண்டும் மின்னாற்றலை ஏற்ற வேண்டியதாயிற்று.

என்னைத் தொடர்பு கொண்டு, அந்தப் பாட்டியின் பேரன் கேட்டார்.(இது இலக்கணப்படி தவறு:  ஒருமை பன்மை மயக்கம்)  இந்தப் பாட்டி என் அறைக்குப் பக்கத்தில் இருந்ததால், நான் இதை அறிந்து பேரனிடம் தெரிவித்தேன்  -  ஒரு குறுஞ்செய்தி மூலமாக.

மின்சேர்வி:

என் உரையாடல் தமிழில் இருந்தது, ஆனால் நான் மின் கலம் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்தியது மின்சேர்வி என்ற சொல்.

நான் கொடுத்த தகவல்:   " பாட்டி கைப்பேசியில் மின்சேர்வி தீர்ந்துவிட்டது" என்பதுதான்.

சேர் என்ற சொல் ரகர ஒற்றை இழந்து  சிலவிடத்து சே என்று வரும்.

சேர் > சேர்மித்தல் > சேமித்தல் :  சேமிப்பு.

சேர்கரித்தல் -  சேகரித்தல்:  இதில் ரகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: நேர்மித்தல் ஆகும்.  நேர்மித்தல் என்றால் ஒரு பட்டியல் பெயர்களில் ஒவ்வொன்றுக்கும்
 நேர் எதிரே குறிப்பு எழுதிவைத்து நிறுவுதலைக் குறிக்கும்.

கருணாகரன் ............  தளபதி.

அதாவது கருணாகரன் தளபதியாய் நேர்மிக்கப்படுகிறார்.   இது பின்னாளில் நேமித்தல் என்று தன் ரகர ஒற்றை இழந்தது.

ஓர்மித்தல் என்ற சொல் மலையாளத்தில் வழங்குகிறது. இதன் பொருள்: நினைவுக்குக் கொண்டுவருதல் என்பது.  ஆனால் இச்சொல் ஓமித்தல் என்று திரியவில்லை.  ரகரம் நன்றாகவே ஒலிக்கப்படுகிறது.  சொற்களைக் கவனமாக உச்சரிப்பவர்கள் மலையாளமக்கள் ஆவர்.

மின்னடை

இவை ஒரு புறம் கிடக்கட்டும்.  மின்சேர்வி என்பதையே நான் பயன்படுத்தினேன்.  ஒரு சமயம் : மின் அடை அல்லது மின்னடை என்பதைப் பயன்படுத்தினேன்,   ஒரு பாட்டரியில் மின் ஆற்றல் அடைந்து வைக்கப்படுகின்றது.  ஆகவே இதுவும் நல்ல மொழிபெயர்ப்பே.

மின் கலம்

ஒரு மின்சேர்வி ஒரு சட்டிபோல; அதற்குள் மின் ஆற்றல் பெய்து வைக்கப்படுகிறது.  ஆகவே கலம் ஆகலாம்.

ஆற்றலடை:

ஆற்றலடை என்றும் சொல்லலாம்.  மின் ஆற்றலை அடைந்து வைத்துள்ளதே பாட்டரி-- ஆற்றலடை.  தேனீக்கள் தேன்சேகரித்து வைத்துள்ள அடைவு  தேனடை எனப்படுகிறது.  அதேபோல ஆற்றல் அடைந்து  வைத்துள்ள அடைவு ஆற்றலடை ஆகிறது.   நன்றாகவே உள்ளது.

இருதா:

இனி சந்தா,  வாய்தா முதலிய சொற்களின் அமைப்பைக் காண்பீர்களாக.  சம் - சேர்தலைக் குறிப்பது; தா = சேர்தலுக்குத் தரவேண்டிய கட்டணம்.  ஆகவே சந்தா ஆயிற்று.  சம் என்பது தம் என்பதன் திரிபு.  முன் இடுகைகள் காண்க.

இதே பாணியில் அமைந்த இன்னொரு சொல்:   நிலம் முதலியவற்றின் விளைச்சல்களிலிருந்து ஒரு பகுதியை வரியாகக் கொடுக்கவேண்டியுள்ளதைக் குறிக்கும். .  அப்படிக் கொடுக்கப்படுவது வாய்தா எனப்பட்டது   :   அதாவது வருவாயில் தா என்பது வாய்+தா = வாய்தா.
படுதா என்ற சொல்லைப் பாருங்கள்.  போர்வைபோலப் படர்வாக பிற பொருள்கள் மேல் போட்டு மூடத் தருவது படுதா.   படு= படர்வாக. அல்லது மேலே படுமாறு;   தா= போட வழி தரும் விரிப்பு.   படுதா என்பது நல்ல அமைப்பான சொல்லே.இவை எல்லாம்  மிக்க எளிமையான சொற்புனைவுகள். இவற்றைப் பின்பற்றி பாட்டரி என்பதை  இருதா என்று கூறலாம்.  இருப்பில் இருப்பதாகிய மின்னாற்றலைத் தருவது இருதா.  மின்னடைக்கு இருதா என்பதும் பொருத்தமாகத்தான் தெரிகிறது.  முன் அமைந்தவற்றை ஆராய்ந்து அதேபாணியில் அமைக்க என்ன கட்ட(கஷ்ட) மென்று கேட்கிறோம்?   ஒவ்வொரு கைப்பேசியிலும் ஓர் இருதாவாவது  தேவை.

இப்போது இங்கு தரப்பட்ட மொழிபெயர்ப்புகள்:

மின்சேமி
மின்சேர்வி
மின்னடை
ஆற்றலடை
இருதா
மின் கலம்.

ஆங்கிலத்தில் பாட்டரி என்பது அடிப்பு என்று பொருள்படும் சொல்.  மின் ஆற்றலை அது அடிக்கிறது.   அதாவது செலுத்துகிறது.   அடிக்கும் மட்டை பேட் எனப்படுகிறது.  இங்கிலாந்துச் சட்டத்தில் ஒருவனை அடித்தால் அது பேட்டரி என்னும் குற்றம்.  இது ஆங்கில ஒருமைச்சட்டத்தின்படியான குற்றவியற் குற்றம் . English common law,   criminal law.  சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில் இதை voluntarily causing hurt  என்று  சொல்கிறோம்.  பாட்டரி என்ற ஆங்கிலப் பதத்தில் மின்சார்ந்த சொல் அல்லது பொருண்மை எதுவும் இல்லை.  இதற்குச் சொல்வழக்குத் தான் காரணமாகிறது.

வேறுபட்ட வகையாக மொழிபெயர்ப்புகளை நீங்கள்  கண்டிருந்தால் இங்குப் பின்னூட்டமிட்டுத் தெரிவியுங்கள்.

திருத்தம் பின்.
( சில மாற்றங்கள் காணப்பட்டன.  கவனிக்கின்றோம்).

இலக்குவன் கோடிழுத்த தகையோன்.

நம் தொன்மங்களில் வரும் அழகிய பல பெயர்களில் சிலவற்றைத் தமிழின் மூலமாகப் பொருள் கூறிய இடுகைகளை முன்பு வாசித்திருப்பீர்கள்.

இர்  >  இர் +ஆம் + அன் =  இராமன்.  ( தமிழின்படி பொருள்: கருநிறமுடையோன்.  உலகில் மிகப் பெரியது விண்.  அந்த விண்ணின் நிறம் கருமை.  அங்கு சூரியன் (< சூடியன் ) ஒளிவீசுவதால் அது (கருமை) அவ்வளவாகத் தோன்றுவதில்லை. இரவில் பார்த்தாலே ஓரளவு புரியும்.  அந்தக் கருமையை நிலவு நட்சத்திரங்கள் முதலியவை கொஞ்சம் கலைத்துவிடக்கூடும்.  இராமர் விண்ணின் நிறத்தவர். கண்ணனும்தான். )

இர் > இரா > இரா+வண்ணன் > இராவணன் ( ஓர் ஒற்றுக் குறைந்த இடைக்குறை).  எல்லாம் என்பது எலாம் என்று கவிதையில் வருகையில் அழகாக உள்ளதன்றோ?

அனுமன்:   மனிதனுக்கு அண்மையானவன்.   அண் = அன் =அனு.   மன் - மனிதன் என்பதன் அடிச்சொல்.
கைகேயி -  கை நீட்ட முடியுடையவள். (முன் இடுகைகள் காண்க).

பீமன் = பீடுடைய மன்னன்.  பீடு+ மன் = பீடுமன் > பீஷ்மன்.

தமிழ்ச்சொற்களைக் கவினுறுத்த ஜ, ஷ, ஹ  இன்ன பிற தோன்றி இன்புறுத்தும்.  வேறு சில சொற்களும் விளக்கியுள்ளோம்.  அவற்றைப் பழைய இடுகைகளில் காண்பீராக.

இன்று இலக்குவன் அல்லது லட்சுமணன் என்ற பெயரைப் பார்ப்போம். இதுவும் இராமகாதையில் உள்ள பெயரே.  காதை = கதை.

சீதையைக் கட்டுப்படுத்தத் தரையில் ஒரு கோடு வரைந்து இதைத் தாண்டிச் செல்லாதே என்று கட்டளை இட்டவன் இலட்சுமணன்.  "இலட்சு" என்பது இலக்கு என்பதும் ஒருபொருள் குறிக்கும் திரிபுகள்.

ஒ.நோ: பட்சி >< பக்கி ;  நக்கத்திரம் > நட்சத்திரம்.  பக்கம் > பட்சம்

கோடும் இலக்கும் தொடர்புடைய கருத்துகள். கோடிழுத்த இடமே இலக்கு ஆகும்.

இழு> இலு என்றாகும். இன்னொரு எடுத்துக்காட்டு:  பழம் > பலம்.   மாம்பலம் என்ற ஊர்ப்பெயர் காண்க.  பழ ஆகாரமே பல ஆகாரமாகி, பலகாரம் என்று தோன்றி பழத்துடன் பிற ஆகாரங்களையும் குறித்ததாகத் தமிழறிஞர் கூறியுள்ளனர். 

அலங்காரம் என்பது அழகு அல்லது அழகுபடுத்துதல் என்பதே.   அடிச்சொல்: அழ.  அழ என்பதன் திரிபு  அல.   அலங்காரம் என்பதை அலம்+காரம் என்று சிலர் பிரிப்பர்.  உண்மையில் இது :  அல+ கு + ஆர் + அம் ஆகும்.   அழகுக்கு நிறைவு அல்லது அழகுசேர் நிறைவு என்பதாகும்.  ஆர்:  நிறைதல்.  அம் விகுதி.
கு என்பது சேர்விடம் குறிக்கும் ஓர் இடைநிலை. இது வேற்றுமை உருபாய் பிறவிடத்து வரும்.  அல+ கு என்பது அலங்கு என்று மெலிந்து நின்றது,  அலக்கு என்று வலிக்கவில்லை . அதாவது வல்லெழுத்து மிகவில்லை.  அலங்கு ஆர் அம் - அலங்காரம் :  அழகின் நிறைவு எனினுமாம்.  இதை இங்கு சொல்லக் காரணம்:  இழு> இலு போலத் திரிந்தது அழ>அல என்பது;  பழ > பல என்பதுமது.

இனி இலக்குவனுக்குத் திரும்புவோம்.  இலு> இலக்கு > இலக்குவன், இலக்குமணன் என்பது இன்னொரு வடிவம்.  அதைப் பின் விளக்குவோம்.

இலக்குவன் என்பது காரணப்பெயர். இயற்பெயரன்று.  தசரதன் என்பதும் காரணப்பெயரே. இயற்பெயர்களைக் காண்டல் அரிதே.  கோடிழுத்ததால் இப்பெயர் வந்தது என்பதறிக.   வால்மிகி தமிழறிந்தவர் என்பது தெளிவு. மற்றும் சங்கப்புலவருமாவார்.


இலு + கு = இலக்கு.  கோடிழுத்த இடம்.


























அடிக்குறிப்புகள்:

இந்தக் கேள்விகளுக்கு உங்களுக்கு விடைதெரியுமா?

வாசித்தல்: இச்சொல் எப்படி அமைந்தது?

வாசித்தல் என்ற சொல் எப்படி அமைந்தது?

சனி, 13 அக்டோபர், 2018

அகலியை ( அகலிகை )

அகலியையின்  வரலாறு நம்மைச் சிந்திக்க வைப்பதாகிறது,

இதைப்பற்றிச்  சில எழுதியுள்ளோம்.

கீழ்க்கண்ட இடுகையையும் படித்து இன்புறுவீராக.

https://bishyamala.wordpress.com/2018/10/13/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/

வெள்ளி, 12 அக்டோபர், 2018

தம் சம்; தம் தா:> சந்தா.

சந்தா என்ற சொல் நம் பழைய நூல்களில் இருந்து கண்டால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இச்சொல் வழக்கிலுண்மை உணரப்பட்டது போலும். பதினெட்டாம் நூற்றாண்டுக்குமுன் இச்சொல் வழங்கிய நூல்கள் கிடைக்கவில்லை,

சம் என்பது சேர்தல் குறிக்கும் சொல்.

தான் தன் தாம் தம் என்ற தமிழ்ச் சொற்களை நினைவு கூரவேண்டும்.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் தாம் தம் என்பவற்றைச் தற்சுட்டாகப் பயன்படுத்துவர்.  இரண்டு தான் ஒரு தாம்; இரண்டு தன் ஒரு தம். என்று சற்று நெகிழ்பாணியில் குறிக்கலாம்.

தம் என்பது பின் சொற்களைப் பிறப்பிக்க -  சம் என்று திரிந்தது,  பின் அது எச்1 என்1 காய்ச்சல்போல் அயலிடங்களையும் தாவிக் கால் பதித்தது.

ஆகவே தம் என்பது சேர்ந்திருத்தல் சேர்ந்த காலத்து உரிமையாய் இருத்தல் என்று பொருள்தரும்.  எடுத்துக்காட்டு:  தம் கொள்கைகள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாயிருக்கையில் உருவான கொள்கைகள் என்பது பொருள்.

ஒரு இயக்கித்திலோ கூட்டுறவு அமைப்பிலோ சேர்ந்துவிட்டால்  மாதம் தோறும் பணம் கேட்பர். இது உறுப்பினர் கட்டணம்.எனப்படும்.  தம் என்பது சம் என்று திரிந்தது,  தா வென்பது கொடு என்பது.  சம் தா -=  சேர்ந்ததும் தா என்பதே ஆகும். தம்மில் ஒருவர் ஆனதற்குத் தா என்பதும் சரிதான்.

தம் > சம் > சம் தா > சந்தா,

த என்பது பல சொற்களில் ச என்று மாறியுள்ளது:  எ-டு:  தங்கு > சங்கு,  மொழி இடையிலும் வரும்:  அத்தன் > அச்சன். மைத்துனன் > மைச்சுனன் > மச்சான்,

வைத்து -  வச்சு. ஐகாரம் அகரமாகவும் தகரங்கள் சகரங்களாயும் மாறின.

தம்மில் சேர்ந்தால் தா >  சம் தா > சந்தா.

தம் என்பதில் இருந்த தற்சுட்டுப் பொருண்மை  சம் என்பதில் மறைவெய்தியது சம்முக்கு நன்றாயிற்று. இம்மறைவினால் சம் முன்னிணைந்த பதங்கள் மூவிடங்களிலும் வழங்கும் விடுதலையை அடைந்தன. இஃது இவ்வாறாயினும் தமையன் தனையன் ( தனயன்) முதலிய சொற்கள் முதனிலைத் திரிபின்றியே காலவோட்டத்தில் தம் தற்சுட்டுப் பொருண்மையை இழப்பனவாயின. திரிபின்றி வழக்கில் விளைந்த பொருண்மை இதுவாகும். ஆனால் அவையும் ஐகாரக் குறுக்கத்திற்கு உட்படவேண்டியதாயின.

அடிக்குறிப்பு:

வாய்தா என்ற சொல்லும் சந்தா என்பதைப்போல் தா என்று முடிகிறது. இது அமைந்தது எப்படி?

வாய் என்பது வருவாய் அல்லது வருமானம்.  இது பணமாகவோ நெல்லாகவோ பிறவாகவோ இருக்கலாம்.   தா என்பது கட்டணமாகச் செலுத்தவேண்டியதைக் குறிக்கிறது.  இதை வாக்கியமாக்கினால் வருவாயில் ஒரு குறித்த பகுதியைத் தா என்று வந்து பொருளாகும்.  தமிழ்ப்பேராசிரியன் என்போனையும் தடுமாறச் செய்யும் இச்சொல் உணர்ந்தோர் சிலரே.  பிறமொழியாளர் இச்சொல்லை மேற்கொண்டிருப்பர்.  அதனால் அது பிறமொழிச் சொல் என்போன் "விளங்காத வெள்ளரி"  ஆவான்.  இதை உருவாக்கியவன் ஒரு சிற்றூர் ஆசிரியனாய் இருக்கவேண்டும்.  அவனுக்கு நல்ல மூளை இருந்தது தெரிகிறது.

வசந்தா என்பது பெண்பெயர்.  இது உன் மனத்தை என் வசம் தா என்று அணிவகையில் இரட்டுறலாகப் பொருள் தரலாம் எனினும் அது வசந்தம் - வசந்தி என்ற சொல்லின் விளிவடிவமே ஆகும்.  அது செலுத்தவேண்டிய கட்டணத்தைக் குறிக்கவில்லை.

அடிக்குறிப்பு:  15.10.2018ல்  சேர்க்கப்பட்டது.

புதன், 10 அக்டோபர், 2018

bhajan: பஜனை இறுதியில் அனைவரும் ட - ஜ


பஜனை என்ற சொல் மிக்க   உயர்வாக மதிக்கப்படும் சொல்லாகும்.
பக்தி மார்க்கம் எனப்படும் பற்றர்கள் நெறியில் இது ஒவ்வொரு நாளும் புழங்கும் சொல்லாகும். இறைவனின் புகழைப் பாடாத நாளில்லை என்னுமளவிற்குப் பஜன் என்ற சொல் ஓர் அன்றாடச் சொல்லாகிறது.


பஜன் என்றால் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பற்றுடையார் கூட்டம் சேர்ந்து பாடுவதே பஜன் ஆகும்.
சொல்லமைப்பில் பல சொற்கள் முதனிலை குறுகி அமைந்துள்ளன என்பதை முன்னர் இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம். இப்போது சில காண்போம்.


தோண்டு >  தொண்டை
காண்  >  கண்.
சா  >  சவம்.
கூடு > குடும்பு >  குடும்பம். (கூடிவாழ்தல்)
கூம்பு :>  கும்பம். ( அடிபருத்து நுனி சிறுத்தல் )


இப்படி அமைவது ஒரு வகை என்றால் இன்னொரு வகை இதற்கு எதிர்மாறாய் இருக்கும்:   எடுத்துக்காட்டு:

குழை >  கூழ்.
படு >  பாடு. ( படுதல் வினை)
சுடு >  சூடம்,  சூடன்.
படு > பாடை.
விடு > வீடு.  (பரனை நினைந்து மூன்றும் விடல்)



பஜன் என்பது பாடுதலே. பாடு என்பதிலிருந்தே சொல் வருகிறது. நெடில் முதலானது குறில் முதலாய் மாறுகிறது. அனைவரும் பாடுவதே பஜன்; ஆதலின் அனைவரும் என்பதிலுள்ள “அனை” இங்கு விகுதியாகியுள்ளது ஓர் அழகிய அமைவே ஆகும். வேண்டுமிடத்து  அனை என்பது அன் என்று மேலும் குறுக்கம் பெற்றுள்ளது.

அன்+ ஐ என்ற இரு விகுதிகள் கூடி அனை என்று சொல்லிறுதியாகப் பல சொற்களில் தோன்றும். எடுத்துக்காட்டு:  கண்டி + அனை = கண்டனை, இப்பதத்தில் அனை என்ற இறுதிக்குத் தனிப்பொருள் கூறுதற்கில்லை  இதுவெறும் சொல்மிகுதியே.  மிகுதி  > விகுதி.  ஆனால் பஜனை என்ற சொல்லில் அனை என்பது ஒரே காலத்தில் விகுதியாகவும் அனைவரும் என்ற பொருளீவதாகவும் உள்ளது: இஃதோர் உள்ளமைந்த சிறப்பு ஆகும்,
விழுமிது இதுவாம்.


பாடு >பாடு+அன் > படன் > பஜன்.
பாடே > பஜே.
பாடு அனைவரும் >பாடு+அனை >  பாடனை > படனை - பஜனை.


பற்றர்களுக்கு (பக்தர்களுக்கு)ப் பயன்படுத்த  அமைந்த இச்சொல் மிக்க நேரிதாய் அருமையாய் அமைந்துள்ளமை காண்க.  ஒரு சொற்றொடரிலிருந்து ஒரு சொல்லைப் படைப்பதென்பது ஒரு  நல்ல தந்திரம்..  இன்று சொற்களை உருவாக்க முனைவோரும்  இது போன்ற தந்திரத்தை மேற்கொள்வார்களாக,


பாடனை படனை படன் முதலிய சொல்வடிவங்கள் பேச்சிலும் எழுத்திலும் இல்லாமலிருத்தல் பஜன் என்னும் சொல்லிற்கு நல்லது.  அவை தாத்தா பாட்டன் பூட்டன் முப்பாட்டன் போன்றவை.  எல்லாத் தாத்தாக்களும் வேலையிலிருந்திருந்தாலும் பேரன்மாருக்கெல்லாம் வேலை ஏது?


ஜான் கே என்பவர் எழுதிய இந்திய வரலாற்றில் யானை என்று பொருள்படும் கஜம் என்ற சொல் முகம் கடையப்பட்டது போன்றது என்னும் பொருளதென்று கூறுகிறார்.   அதாவது கடை > கட > கஜ, > கஜம், பொருள்: யானை.


ஆகவே பாடு > பட > பஜ என்பதைக்,   கடை > கட > கஜ என்பதோடு ஒப்பிட்டு உணரலாம். வெவ்வேறாய் ஒலிக்கும் சொற்களை  ஒருப்பட்ட வடிவங்களாக்கி ஜ முதலிய எழுத்துக்களைப் புகுத்தி அழகுபடுத்துவதே கலைத்திறனாகும்.


தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் இரு கண்கள் என்று முன்னையத் தமிழ் நூல்கள் கூறி மகிழ்வெய்தும்.  வெள்ளைக்காரன் வந்து இந்தோ ஐரோப்பிய மொழி சமஸ்கிருதம் என்றும் அது அயல்மொழி என்றும் ஆரியர் வந்தனர் என்றும் தெரிவியல்களை(  theories ) உருவாக்கியபின்,  இருகண்களில் ஒன்று ஐரோப்பியக் கண்ணாகவும் ஒன்று தெற்காசியக் கண்ணாகவும் மாற்றுருக்களைக் கொண்டு மகிழ்வுறுத்துகின்றன.  பானை சட்டிகளை உண்டாக்குவதுபோல தெரிவியல்கள் பலவற்றைப் படைத்து வெளியிட்டுக் கொண்டிருப்பது மேலையர் வேலையாகிவிட்டது.