புதன், 24 அக்டோபர், 2018

மசகு என்ற சொல். மசாலாவும்

மசகு என்ற சொல்லை மஷ்கு என்று எழுதுவதால்மட்டும் அது சங்கதச் சொல் ஆகிவிடாது.  அயல் ஒலி புகுத்தினாலும்  அது தவறான எழுத்து புணர்க்கப்பட்ட தமிழ்ச்சொல்லே ஆகும்.  இதற்குச் சில காரணங்கள் உள. அதிலொன்று அது எந்தப் பழைய சங்கத நூலிலும் காணப்படவில்லை என்பதுதான்.  பேச்சு மொழியில் காணப்பட்டால் அப்போது ஒருவேளை அம்மொழியாய் இருக்கலாம் என்று சொல்லக் காரணம் உண்டு. அதுவும் முடிந்த காரணமாய் இல்லாமல் ஆய்வுக்குரிய ஒன்றாகக் கருதலாம். இதுபோலவே பிறமொழிகட்கும் தமிழுக்கும் அமையும்.

மசித்தல் என்பது ஒரு வினைச்சொல்.

மசி என்ற பகுதியுடன் கு என்ற தொழிற்பெயர் விகுதியைச் சேர்ப்போம். இங்கு இது தொழிற்பெயர் விகுதி;  பிறவிடங்களில் அது வேறு வேலையைச் செய்வதால் வேறு பெயர்பெறும்.  இதையும் மறக்கலாகாது.

மசி + கு.

இஃது புணர்க்கப்பட்டால்   :

மசிகு  என்றாகி சிகரத்தில் நின்ற இகரம் நீங்கி அகரம் ஏறி

மசகு என்று ஆகும்.

மசித்தலாவது இடித்துக் குழப்பப் பட்டது என்று பொருள்.

மசிகு என்று ஒலிபெறுதல் தமிழியல்பு அன்று.

மசித்தலால் ஆக்கப்படுவது மாசாலை.  இது மசாலா என்று வழங்குவதும் உண்டு.

மசி +  ஆல் + ஐ   = மசாலை.

சற்றே மசிக்கப்பட்ட பருப்பினால் பிடிக்கப்பட்ட வடை:

மாசால் வடை.  மசி+ அல் = மசால்.   இகரம் கெட்டு  அகரம் நீண்டது காணலாம்.

மசி + ஆல் என்பதே மாசால் எனினும் ஆகும்.

மசி என்பதன் அடிச்சொல் மய என்பதே.  மயக்கம் என்ற சொல்லிலும் அது
உள்ளது.   உணர்வும் உணர்விழப்பும் கலந்த  ஒரு நிலையே மயக்கம். முழுவதும் உணர்விழந்தான் இறந்தவனாகிவிடுவான்.  இது  பாதி நிலை ஆகும்,

பருப்பு மிளகு முதலியன நைபடும் பொழுது ஏற்படும் கலப்பையே மசி என்ற வினைச்சொல் காட்டுகிறது.    மய > மயி > மசி எனக்காண்க.

மயக்கு > மசக்கு > மசக்கை என்பதும் காண்க.

நிலம் தீ விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

என்பது தொல்காப்பிய நூற்பாவாகும்.

இதையும் அறியுங்கள்:  https://sivamaalaa.blogspot.com/2012/07/blog-post_23.html
பாசாணம்   என்ற சொல்.


திருத்தம்பின்

கருத்துகள் இல்லை: