வெள்ளி, 12 அக்டோபர், 2018

தம் சம்; தம் தா:> சந்தா.

சந்தா என்ற சொல் நம் பழைய நூல்களில் இருந்து கண்டால் இங்கு பின்னூட்டம் செய்யுங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுவாக்கில் இச்சொல் வழக்கிலுண்மை உணரப்பட்டது போலும். பதினெட்டாம் நூற்றாண்டுக்குமுன் இச்சொல் வழங்கிய நூல்கள் கிடைக்கவில்லை,

சம் என்பது சேர்தல் குறிக்கும் சொல்.

தான் தன் தாம் தம் என்ற தமிழ்ச் சொற்களை நினைவு கூரவேண்டும்.

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள மனிதர்கள் தாம் தம் என்பவற்றைச் தற்சுட்டாகப் பயன்படுத்துவர்.  இரண்டு தான் ஒரு தாம்; இரண்டு தன் ஒரு தம். என்று சற்று நெகிழ்பாணியில் குறிக்கலாம்.

தம் என்பது பின் சொற்களைப் பிறப்பிக்க -  சம் என்று திரிந்தது,  பின் அது எச்1 என்1 காய்ச்சல்போல் அயலிடங்களையும் தாவிக் கால் பதித்தது.

ஆகவே தம் என்பது சேர்ந்திருத்தல் சேர்ந்த காலத்து உரிமையாய் இருத்தல் என்று பொருள்தரும்.  எடுத்துக்காட்டு:  தம் கொள்கைகள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒன்றாயிருக்கையில் உருவான கொள்கைகள் என்பது பொருள்.

ஒரு இயக்கித்திலோ கூட்டுறவு அமைப்பிலோ சேர்ந்துவிட்டால்  மாதம் தோறும் பணம் கேட்பர். இது உறுப்பினர் கட்டணம்.எனப்படும்.  தம் என்பது சம் என்று திரிந்தது,  தா வென்பது கொடு என்பது.  சம் தா -=  சேர்ந்ததும் தா என்பதே ஆகும். தம்மில் ஒருவர் ஆனதற்குத் தா என்பதும் சரிதான்.

தம் > சம் > சம் தா > சந்தா,

த என்பது பல சொற்களில் ச என்று மாறியுள்ளது:  எ-டு:  தங்கு > சங்கு,  மொழி இடையிலும் வரும்:  அத்தன் > அச்சன். மைத்துனன் > மைச்சுனன் > மச்சான்,

வைத்து -  வச்சு. ஐகாரம் அகரமாகவும் தகரங்கள் சகரங்களாயும் மாறின.

தம்மில் சேர்ந்தால் தா >  சம் தா > சந்தா.

தம் என்பதில் இருந்த தற்சுட்டுப் பொருண்மை  சம் என்பதில் மறைவெய்தியது சம்முக்கு நன்றாயிற்று. இம்மறைவினால் சம் முன்னிணைந்த பதங்கள் மூவிடங்களிலும் வழங்கும் விடுதலையை அடைந்தன. இஃது இவ்வாறாயினும் தமையன் தனையன் ( தனயன்) முதலிய சொற்கள் முதனிலைத் திரிபின்றியே காலவோட்டத்தில் தம் தற்சுட்டுப் பொருண்மையை இழப்பனவாயின. திரிபின்றி வழக்கில் விளைந்த பொருண்மை இதுவாகும். ஆனால் அவையும் ஐகாரக் குறுக்கத்திற்கு உட்படவேண்டியதாயின.

அடிக்குறிப்பு:

வாய்தா என்ற சொல்லும் சந்தா என்பதைப்போல் தா என்று முடிகிறது. இது அமைந்தது எப்படி?

வாய் என்பது வருவாய் அல்லது வருமானம்.  இது பணமாகவோ நெல்லாகவோ பிறவாகவோ இருக்கலாம்.   தா என்பது கட்டணமாகச் செலுத்தவேண்டியதைக் குறிக்கிறது.  இதை வாக்கியமாக்கினால் வருவாயில் ஒரு குறித்த பகுதியைத் தா என்று வந்து பொருளாகும்.  தமிழ்ப்பேராசிரியன் என்போனையும் தடுமாறச் செய்யும் இச்சொல் உணர்ந்தோர் சிலரே.  பிறமொழியாளர் இச்சொல்லை மேற்கொண்டிருப்பர்.  அதனால் அது பிறமொழிச் சொல் என்போன் "விளங்காத வெள்ளரி"  ஆவான்.  இதை உருவாக்கியவன் ஒரு சிற்றூர் ஆசிரியனாய் இருக்கவேண்டும்.  அவனுக்கு நல்ல மூளை இருந்தது தெரிகிறது.

வசந்தா என்பது பெண்பெயர்.  இது உன் மனத்தை என் வசம் தா என்று அணிவகையில் இரட்டுறலாகப் பொருள் தரலாம் எனினும் அது வசந்தம் - வசந்தி என்ற சொல்லின் விளிவடிவமே ஆகும்.  அது செலுத்தவேண்டிய கட்டணத்தைக் குறிக்கவில்லை.

அடிக்குறிப்பு:  15.10.2018ல்  சேர்க்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: