வெள்ளி, 30 ஏப்ரல், 2021

பிரபலம் - சொல் பிரபலமானது

[IF you are a visitor and by an error get into an  edit or compose page,   please leave the page without intentionally or accidentally (on touch screen devices)  making any changes to the text.  Thank you] 


பிரபலம் என்ற சொல்லைப்பற்றிச் சிறிது சிந்தனை செய்வோம். 

ஒருவன் தான் வாழும் வீட்டுக்குள் என்னதான் அதிகாரம் அல்லது மேலாண்மை செலுத்தினாலும் அவன் பிரபலம் அடைந்துவிட்டான் என்று யாரும் சொல்வதில்லை. ஒரு வீட்டுக்குள் ஐந்து பேர் இருக்கிறார்கள் என்றால், அந்த ஐந்துபேருக்கும் அவன் தெரியாதவனாக இருக்கமுடியாது.   வதியும் அனைவருக்கும் அவன்  தெரிந்தவனானாலும் அவனை யாரும் பிரபலம் என்று கூறும் தகுதியை அவன் அடைந்துவிடமாட்டான்.

பிரபலமாவது வீட்டுக்கு வெளியில்தான்.  வீட்டுக்கு வெளியில்  அவனைப் பலரும் அறிந்து வைத்திருந்தனர் என்றால் அவன் சற்று பிரபலமானவன் எனலாம்.

புறத்தே பலரும் அறிந்தவன் அவன்.

இதே வாக்கியத்தைச் செயப்பாட்டு வினைகொண்டு முடிப்பதானால் -  புறத்தே பலராலும் அறியப்பட்டவன் அவன்.

எப்படிச் சொன்னாலும் அதுவே ஆகும்.

புற  -   புறத்தே -   வெளியில்;

பல  -   பலராலும்;  அல்லது பலரும்;

அம்  - இது அமைவு அல்லது அமைப்பு என்பதைக் காட்டும் ஒரு சொல்லீறு அல்லது விகுதி.

விகுதி என்பது சொல்லின் மிகுதி.   விகுதி <>மிகுதி.  வகர மகரப் போலி. இதற்கு மற்றோர் உதாரணம்:  விஞ்சு  -மிஞ்சு. இதுபற்றிய மேலும் சில தெரிப்புகட்கு  முன்வந்த இடுகைகளைப்   பார்க்கலாம்.

[ தெரிப்பு -  explanation ]

அமையும் சொல்லை   நீட்டி  அமைப்பது  விகுதி. ( suffix)

பிரபலம் என்பது  "புறப்பலம்"தான்   என்பது பொருளமைப்பால் தெளிவாகுகிறது. புற என்பதைப் பிர என மாற்றி,  வல்லெழுத்து  "(ப்)"  மிக்கு நிற்றலைக் களைந்து,  இச்சொல்  அமைந்துள்ளது.

இதேபோலும்  "பிறர் அறிமுகம்" என்பதைப்   பொருளாகக் கொண்ட வேறு சில சொற்களும் உள்ளன.   புகழ் என்பதொன்றாம். பலராலும் பாராட்டப்  பெறுவதே  புகழ்.   இசை என்ற சொல்லுக்குப்  பாட்டு,  வாத்தியம், இவற்றின் கலப்பு என்ற பொருளினும் மேம்பட்ட உள்ளுறைவு  உள்ளது.  அது யாதெனின்,  கவிகளால்  பாட்டில்  புகழப்படும் தன்மை.  அதுவும் வெறுமனே யன்றி,   ஈதலால் (  பொருள் வழங்கும்  தன்மையால்,  தரும காரியங்களால் )  வருவது ஆகும். இதை நாயனார்:

"ஈதல் இசைபட வாழ்தல்,  அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று வரையறவு செய்தார்.  இசை என்பது தகுந்த   பிறர்க்கு வழங்கி அதனால் கவிகளால் பாடப்பெற்றுப்  பலராலும் போற்றப்பட்ட நிலை. 

பிறவிப்  பயன்  என்று  வேறொன்றும் தேடவேண்டாம்.   அறச்செயல்களில் ஈடுபட்டுப்   பாட்டுப் பெற்றுப்   பிறரால்  அறியப்படுதல்  என்பதே  ஒருவற்கு  அடையத் தக்கது  ஆகும்.

பிரபலம் என்ற சொற்கோவையில் இவ்வளவு நுட்பம் இல்லை என்றாலும் அது  ஏதோ ஒரு காரணத்துக்காக "வீட்டுக்கு வெளியில் பலராலும் அறியப்படுதல்" என்ற இயல்பான பொருளைத் தருகிறது.  இக்காரணம் பெரிதும் நன்மை சார்ந்ததே என்பது சொல்லாமலே தெள்கும்  என்பது திண்ணிதாம்.

தெள்கும் -  தெளிவாகும்.

புற என்பது பிற என்றானதில் வியப்பில்லை.  புறக்கட்டு என்பதை பிறக்கட்டு என்பது பேச்சுமொழி.  " வீட்டுக்குப் பிறக்கட்டு"  என்பர். பிற என்பது பிர என்றானது என்று கோடலும் கூடுமாயினும் அஃது  " வேறு பல"  என்று பொருள்தருவதால் யாம் அதை உகக்கவில்லை. அப்பொருள்தான் பொருத்தம் என்று நீங்கள் கருதினால்  அவ்வாறே  கொள்வதில் பெரிய முரண்பாடு ஒன்றுமில்லை என்று முடிப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்புபின்.

இந்த இடுகையில் இட்டபின் சில மாற்றங்கள்

காணப்பட்டன. அவை இப்போது திருத்தம் பெற்றுள்ளன.

மீண்டும்  இது  கண்காணிக்கப்படும்.

Editor's note:  Original restored.





வியாழன், 29 ஏப்ரல், 2021

ட - ர போலி: கடைதலைப்பாடம்

 பாடம் பண்ணிக்கொள்வதில் சில வகைகள் உள்ளன. ஆனால் இப்புதிய ஊழியில் எதையும் மனப்பாடம் அல்லது மனனம் செய்துகொள்வதை மாணவர்கள் விரும்புவதில்லை. ஒன்றைப் படித்து நல்லபடியாக அதை  உணர்ந்துகொண்டால் மனப்பாடம் செய்யவேண்டியதில்லை என்று ஆசிரியர்கள் சிலர் வழிகாட்டுவதுண்டு. யார் எதைச் சொன்னபோதிலும் எமக்கு மனப்பாடம் செய்து ஒன்றைக் கற்றறிவதில் எந்த மறுப்பும் இருப்பதில்லை.

எமக்குத் தெரிந்த  சீன மாணவர் ஒருவர்,  சட்டத் தேர்வுக்குத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார். கடைசி ஆண்டுத் தேர்வில் உள்ள நான்கு பாடத்துறைகளுக்கும் ஒரு துறைக்கு  20  கேள்விகளுக்கான பதில்களை மனப்பாடம் செய்து  இவற்றுள் எந்தக் கேள்விகள் வந்தாலும் பதில் எழுதுவதற்கு அணியமானார்.  எனவே 4 (20)  -  80  கேள்விக்கான பதில்கள் மனப்பாடம்..  மூன்றாண்டுகள் தேர்வுகளுக்கும்  3(80) :  240 கேள்விகளுக்கான பதில்கள் மனனம் ஆனது.  ஏனென்றால்  கல்விக்கு எதிரி மறதிதான். எதையும் படித்து அப்புறம் மறந்துவிட்டால்  அந்த மறப்பானது உங்களை வாசிக்காதவருக்குச் சமமாக்கிவிடும்.  இவ்வாறு கற்பதில் மிகுந்த உழைப்பு தேவைப்படும்.

சில அடிப்படைகளை மனனம் செய்யவே வேண்டும். எடுத்ததற்கெல்லாம் புத்தகதைப் பார்க்க இயலாமை ஏற்படலாம். இவ்வாறு கூறவே, சொல்லாய்வுகளில் எந்த எழுத்து எதுவாகத் திரியும் என்பதை மனப்பாடமாக்கிக் கொள்வது இன்றியமையாதது.  அப்போதுதான் ஒரு புலமையின் அடித்தளம் ஏற்படும்.  தனித்தமிழாய்ந்த மறைமலையடிகளார்க்கு தொல்காப்பியம் முழுதும் மனப்பாடமென்றும் ஒவ்வொரு நூற்பாவிலும் அடிக்கு எத்தனை எழுத்துக்கள் என்பதும் அவர் கூறுவார் என்றும் பிற  புலவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம்.  திரு.வி.க அவர்கள் பெரியபுராணம் மனப்பாடம் என்பது மட்டுமன்று,   அதற்கே  அவர் உரையாசிரியரும்  ஆவார்.  சுவாமி கிருபானந்த  வாரியாருக்கு  எண்ணிறந்த பாடல்கள் மனப்பாடம். மேடையில் பாடிப்  பொருள் கூறும் புலமை உடையவர். ஒரு மேடையில் பாரதிதாசன் தலைமையில்  தமிழ் என்பதற்கு  நூறு பொருள் கூறி  அசத்தினார்.  இசையறிஞர்களும் பல அடிப்படைகளை மனனம் செய்யவேண்டி யுள்ளது.

இன்று கடைதலைப்பாடம் என்ற சொற்றொடரை அறிந்துகொள்வோம். ஒன்றைக் கடைசிவரியில் தொடங்கி  முதல்வரிவரைப்  பிறழாமல் சொல்ல இயல்வதே   "கடைதலைப்பாடமாகும்".   இதைத் தலைகீழ்ப்பாடமென்றும் சொல்வார்கள். இப்படிச் சிலவற்றையாவது மனனம் செய்துகொள்வது நல்லது.

கடைதலைப்பாடம்  என்பது   "கரைதலைப்பாடம்"  என்றும் திரியும்.   கடை என்றால் கடைசி.   நிலத்தின்  கடைப்பாகத்தில்  கடலை அல்லது ஏரியை ஒட்டிய பகுதியே கரை என்று சொல்கிறோம். கடை > கரை  ஆனது.

இனி,  கரை என்பதன் ஐகாரமும்   தலை என்பதன்  ஐகாரமும் வீழ்ந்து,   கரைதலை என்பது கரதல என்றும் வரும்.  இந்நிலையில் தல என்பது அம் விகுதி பெற்று  தலம் என்றுமாகும்.  தலம் என்பதற்கு மூலம் தலை என்ற சொல்லே ஆகும்.  ஐகாரம் வீழ்வது  ஐகாரக் குறுக்கம் என்று தொல்காப்பியம் சொல்லும்.  பல இலக்கண  நூல்களும் இது கூறும்.    " கரதல" என்பதில் இரு ஐகாரங்கள் வீழ்ந்தன.( நிற்க,   உயிர்முன்  இரு என்பது ஈர் என்று திரிதலை யாம் எளிதாக்கும் பொருட்டுப்  பின்பற்றவில்லை).

கடை என்பதன் டைகாரம் ரைகாரமானதன்றோ.  இது டகர ரகரப் பரிமாற்று. மடி என்பது மரி என்று திரிந்ததும் காண்க.

அடு  (  அடுத்தல் )  என்பது  அரு என்றுமாம்.  என்றாலும்  அரு என்பது வினையாம் பொழுது   ஒரு குகரச் சாரியை பெற்று  அருகு  >  அருகுதல் என்று வரும்.  உண்மையில்  அரு > அருமை என்றால்  அது சிறப்புநிலையை அடுத்துவிட்டது என்றே பொருளாகும்.

நம் உருவம்,பல உள்ளுறுப்புகளைக் கொண்டுள்ளது,  அல்லது உடுத்தி உள்ளது.  எனவே,   உடு>  உரு என்பதன் தொடர்பினைக் கண்டுகொள்க.

மடுத்தல் என்பதற்கு  இணைதல் என்ற   பொருளும் உளது.   மருவுதல் என்பதற்கும் இப்பொருள்  இருக்கிறது.  எனவே,   மடு >  மரு என்பதன் தொடர்பு கண்டுகொள்க.  இதில் வேறுபட்டது  என்னவென்றால்   மருவு  என்பதில் வரும் வுகர வினையாக்க விகுதி மடுத்தல் என்பதில்  வரவில்லை.   இது ஒரு விகுதி பற்றிய வேறுபாடுதான்.   அடிச்சொல்லில் ஒன்றும்   குழப்பமில்லை.

[வேறுபாட்டுக்கு வித்தியாசம் என்று சொல்வதுமுண்டு.   உண்மையில் வித்தியாசம் என்பது விரிந்து சென்று  பேதமாவது என்ற பொருளதே.  விரி> விரித்தியாயம்>  வித்தியாயம்>  வித்தியாசம் என்றானதே   ஆகும்.    யகர சகரப்   போலியைக் கண்டுகொள்க.  விரித்தி  என்பது வித்தி ஆனது  இடைக்குறை.]

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.


புதன், 28 ஏப்ரல், 2021

கடை என்ற சொல்

 இன்று கடை என்னும் சொல்லைஅறிவோம்.   கடை  என்பது சாமான்கள் விற்கும் கடையையும்  குறிக்கும்.  இறுதி என்றபொருளும் அதற்கு உள்ளது."கடைக் குட்டிப்பையன் "  என்ற வழக்கு, இறுதியாய்ப்  பிறந்தவனைக் குறிக்கிறது.

கடை என்பது தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் காணக்கிடைக்கும். "  மூன்றலங்கடையே"  -மூன்றும் அல்லாத  விடத்து  என்று வரும்.  கடை என்பதற்கு இங்கு இடம் என்பதே  பொருள்.

இடம் என்பது இடு+ அம் என்ற வினைப்பகுதியும் அம் விகுதியும் பெற்றமைந்தது.  ஒன்றை ஓரிடத்து இடுகிறோமென்றால் அதுதான் அதற்கு இடம்.

கடை என்பது கடந்து செல்லுதல் என்ற பொருளுடைய கட (கடத்தல்) என்பதில் அமைந்தது.  ஓரிடத்தைக் கடக்க அங்கு இடம் இருக்கவேண்டும் ஆதலால்  அது  இடப்பொருளை அடைகின்றது.  இருத்தலானாலும் இடுவதானாலும் கடப்பதானாலும் எல்லாம் இடமே.  அதற்கடுத்து, ஓரிடத்தைக் கடந்தபின் கடந்த இடம்போல் பிறிதில்லையானால் அதுவே கடைசி ஆகிறது.   ஆகவே  கடை ஆனது கடைசியும் ஆகும்.

கட  - கடத்தல்.

கட + ஐ= கடை.   இங்கு ஐ என்பது விகுதி.

கடை +  சி =கடைசி.   இங்கு சி என்பது விகுதிமேல்விகுதி.இடையில் இருக்கும் விகுதியை இடைநிலை எனினும் ஒக்கும்.

கடையேழுவள்ளல்கள்-  இதில் கடைசியாக எண்ணப்பட்ட ஏழு வள்ளன்மார் என்பது பொருள்.

கடை  என்பது  தெலுங்கில் மிகுதியாய் வழங்கும்.

தலை என்பதும் இடப்பொருளதே.   இது தலம் என்று அம் விகுதி பெற்றும் வரும்.ஸ்தலம் என்று மெருகும் பெறும்.  தலை என ஐ விகுதியும் இதற்குண்டு.  அடிச்சொல் தல்  என்பது.

அறிக  மகிழ்க

கவசம் அணிக.

மனித இடைவெளியும் காத்தல் வேண்டும்.

மெய்ப்பு பின்னர்


செவ்வாய், 27 ஏப்ரல், 2021

அட்டை சேகரித்து வாழும் ஏழை

 ஒரு மூதாட்டி அட்டைகள் சேகரித்து அவற்றைப் பழைய சாமான்கள் கடையில் கொண்டுபோய்க் கொடுத்து,  அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தம் குடும்பத்தை நடத்திவருபவர்.   தம் அடுக்கு மாடி வீட்டின் முன் அட்டைகளைச் சேர்த்துவைத்திருப்பார்.  பாவம் இவர்மேல்  பக்கத்து வீட்டுக்காரர்கள் அனுப்பிய புகார்கள் பலவாம்.  அண்டை வீட்டினர் எதாவது கொடுத்து உதவி இருக்கலாம். அல்லது   அட்டைகளை அடுக்கி வைக்க உதவி இருக்கலாம். சமுதாயத்தில் கருணையும் வசதி இல்லார்பால் உதவும் நோக்கும் குறைந்து வருவதையே இது காட்டுகிறது. இதை அறிந்த அமைச்சர் கிரேஸ் ஃபூ  " கொஞ்சம் கருணையுடன் கவனியுங்கள்" என்று இவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இவர்போலும் ஏழைகள் மேல் சட்டத்தை எடுத்துவீசியா பரிகாரம் தேடிக்கொள்வது?

இதைப்  பற்றிய இரண்டு பாடல்கள் இங்கு:-

இன்றுநம்  பாங்கில் இருப்பது செல்வநிலை

என்றிறு  மாந்தெளி யோருக்கோர் -----  நன்றுசெய

என்றும் மறவாதீர் ஒன்றுபெரி  தாமிரக்கம்

என்றுமதே வாழ்வின் ஒளி.


அட்டை பொறுக்கி  அதுகொண்டு வாழ்கின்றாள் 

மொட்டைக் கடிதங்கள் மொட்டித்துக் ---  கெட்டிமனம்

காட்டலும்  நன்றன்று கண்ணில் துளியின்றித்

தீட்டற்க திட்டும் மடல். 


பாங்கு   -   பக்கம்

எளியோருக்கோர் :  இங்கு ஒரு என்பது ஓர் என்று வராவிடில்

யாப்பில் வழு.

ஒளி - சிறப்புக்குரியது.

மொட்டித்து  -( அனுப்பிக்)  குவித்து.

கெட்டி மனம் :   கடுமையான மனம்

துளி -துளி கருணை,  கண்ணீர் எனினுமாம்.

தீட்டற்க -  எழுதவேண்டாம்

திட்டும் -   வசைபாடும்

Click to read:

News on the above:    https://theindependent.sg/grace-fu-calls-for-tolerance-compassion-for-elderly-woman-after-jurong-residents-complain-about-cardboard-boxes/

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

கேலி -- கிண்டல்

 கேலி என்ற சொல்லைப்  புரிந்துகொள்ளுமுன்,   முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்ற பெயர்சொற்களைத் தெரிந்துகொள்வோம்.

இதற்கு நாம் "பாடு" என்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம்.: "ஏழை படும் பாடு" என்ற சொற்றொடரைப் பார்த்து, இச்சொல் அமைந்த விதத்தை அறிந்துகொள்ளலாம்.  படுவதுதான் பாடு.  ஆனால் பாடுதல் என்ற வினையில் உள்ளுறையும்  "பாடு" வேறு. இந்தப்  நாம் எடுத்துக்கொண்ட "பாடு"  பெரும்பாலும் பாட்டைக் குறிக்கும் பெயராக வருதல் காண்பதரிது.   ஒரு பாடு பாடினான் என்று பெரும்பாலும் பேச்சில்கூட வருவதில்லை.  ஆனால் சுடு> சூடு என்பவற்றில்,   ஒரு சூடு சுட்டான் என்று வருவதுண்டு.  இலக்கணியர்  "முதனிலை"  என்றனர் எனின், அது முதலெழுத்து என்று பொருள்படும்.    சூடு என்ற சொல்லில்,"  சூ " என்பது  சு என்ற முன் எழுத்து  நீண்டு திரிந்ததனால்  ஆனது.   அதாவது.   சுடு > சூடு ஆனது. திரிபு என்பது எழுத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பதாகும்.

இப்போது கேலி என்ற சொல்லுக்கு வருவோம்.  கெல்லுதல் என்பது ஒரு தமிழ் வினைச்சொல்.   இதற்குப்  பொருள்  அல்லது அர்த்தம்:1. கிண்டுதல்  2.  தோண்டுதல்  3.கல்லுதல் என்பன.  இதை வைத்துக்கொண்டு, பழைய தமிழ் நூல்களை நீங்கள் வாசிக்கும் போது  எந்தெந்த இடங்களில் இந்தக் கெல்லுதற் சொல் வந்துள்ளது என்று குறித்துக்கொண்டு,  செய்யுளில்வந்த இடங்களை  மேற்கோளாகக் காட்டலாம்.  இப்படிக் காட்டினால் உங்கள் எழுத்தை வாசிப்பவர்,  இவ்வளவையும் அறிந்து வைத்துள்ளீர் என்று பாராட்டுவர். நான் பெரும்பாலும் இதை மேற்கொள்வதில்லை.  எழுதுவதைப்  பகர்ப்புச் செய்து (காப்பி)  வெளியிடுவோர் அதிகம் உலவுவதால்.  வேண்டிய வேண்டியாங்கு நீங்கள் இதை மேற்கொள்ளுங்கள். இதைவிடக் கெல்லுதல் என்ற சொல்லின் பொருளை நீங்கள் அறிந்து இன்புறுதல் தமிழினிமையை உணர வழிகோலும் என்பதே விரும்பத் தக்கதாம்.

கெல்லுதல் அல்லது கெல்லு என்ற வினையில்,   இறுதி உகரம்  (லு < ல் + உ)   ஒரு சாரியை ஆகும்.  வினையாவது  கெல் என்பது.   பல் என்பதைப்   பல்லு என்றால் லு என்பது (வினையின்/ பெயரின்)  பகுதியன்று.  அது நாம் சொல்லை உச்சரிக்க உதவும் ஒரு சாரியைதான்.  அதை விடுக்க.   கெல் வினைப்பகுதி.   இது ஏவல் வினையும் ஆகும்.   இதில்  இ என்னும் விகுதி சேர்த்தால்,    கெல் + இ  = கேலி ஆகிறது.  கெ என்பது  கே என்று முதனிலை திரிந்தது.

கேலி என்ற சொல்லை  "gEli"  என்று  எடுத்தொலிப்பதும் தவறு.  அந்தத் தவற்றைச்  செய்துகொண்டு,  அது தமிழ்ச்சொல் அன்று என்று சொல்லுவது ஒரு   தமிழறியாமையே ஆகும்.

கெல்லுதல் என்பதற்குக் கிண்டுதல் என்று   பொருளிருப்பதால்,  கேலி என்பது கிண்டல் என்பதே   எனற்பாலது ஐயமற மெய்ப்பிக்கப் படுகிறது.

இனிக் களித்தல் என்பதிலிருந்து  தோன்றும்  களிக்கை என்ற  கை தொழிற்பெயர் விகுதி பெற்ற சொல், கேளிக்கை என்று திரியும். களிக்கை எனல்  இயற்சொல்.  கேளிக்கை என்பது திரிசொல்.  செய்யுளில்  இரண்டும் ஏற்கப்படுவன.

அறிக  மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

குறிப்புகள்:

கைப்பேசி ஆங்கில மொழிபெயர்ப்பில், இறுதிப் பாகியில் உள்ள

"இயற்சொல்"  என்ற சொல்  "  இயற்றொல்" என்று தெரிகிறது.

அதைத் திருத்த இயலவில்லை.  அது கூகிள் மொழிபெயர்ப்பு.  




 

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எங்கும் நோய்ப்பரவல்.

 எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் 13-2.5

இருமினால் தும்மினால் அச்ச மச்சம் 13-2.5

செங்கண்ணார் செல்வர்கள் உற்ற   தென்னே 12-3.5

சீர்கெட்ட நோய்நுண்மி பட்ட   தாலோ 14-2.5

பங்குற்றார்  கொல்லியுறு  பலிவட்   டுக்குள்   13-4.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்    கொள்க   13 -3

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று  13-4

தானுய்க  இஞ்ஞாலம் தேர்ந்து    தானே  14-2.5


மாத்திரை எண்ணிக்கையும் குறிக்கப்பட்டுள்ளது.  எ-டு:  14-2.5 14 என்பது உயிர்,உயிர் மெய்களின் மாத்திரை.   மற்றவை குற்றெழுத்துக்களின் மாத்திரை. கவிதை எழுதுவோரின் கணிப்புக்கு இது.

உரை:-

எங்கெங்கு நோக்கினும் நோயுட் பட்டோர் ---  பல இடங்களிலும் நோய்வாய்ப்பட்டோர் மிகுந்துவிட்டனர்;

இருமினால் தும்மினால் அச்ச மச்சம்  -  - யாரும் எங்கு இருமினாலும் தும்மினாலும்  அடுத்து உள்ளோர்   நோய்த்தொற்று அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்;  

செங்கண்ணார் செல்வர்கள் உற்றதென்னே ---- ஒளியுடைய  கண்களை உடைய சிறந்தோருக்கு இப்போது இந்தத் தொற்று இன்னல்  வந்தது எப்படி? 

சீர்கெட்ட நோய்நுண்மி பட்டதாலோ ---   தள்ளிப்போன கொரனா என்னும் கிருமியினால் தானோ

 கொல்லியுறு  பலிவட்டுக்குள் பங்கு உற்றார் -  உயிர்க்கொல்லிகள் மிகுந்து பலி வாங்கும் வட்டத்துக்குள் மக்கள் சென்று தொடர்பு மிகக் கொண்டுவிட்டனர்.

பள்ளத்தை விட்டேற வேண்டிக்கொள்க   ---  அவர்கள் வீழ்ந்துவிட்ட படுகுழிகளிலிருந்து அவர்கள் வெளியேறப்பிரார்த்தனை செய்க;

தங்குற்றுப்  போர்க்குள்ளே செல்லா    நின்று ---   நல்ல நிலையைத் தக்கவைத்துக்கொண்டு,  இந்த உயிரியல் போர்க்குள் செல்லாமல் நிலைபெற்று;

  இஞ்ஞாலம் தேர்ந்துதானே  தானுய்க   --- இவ்வுலகம் தேர்ச்சி பெற்று முன்னேற வேண்டும் என்றவாறு.




நோயாளிகளை மருத்துவமனைக்குக்  கொண்டுசெல்லும் இதுபோலும்
வண்டிகள் செய்யும் சேவைகள் மிகப் பாராட்டத்தக்கது ஆகும்.


மீள்பார்வை - பின்



புதன், 21 ஏப்ரல், 2021

மது - சுருங்கிய விளக்கம்

ஓர் ஐம்பது மாடிக் கட்டிடத்தின் பலகணி1யிலிருந்து வெளியில் எட்டிப்பார்த்தால் சிலர் மயக்கம் அடைந்துவிடுதல் அறிந்துள்ளோம்.  வான்படைஞர்க்கு இத்தகு காட்சிகள் இயல்பினும் இயல்பாகும்.  இவர்கள் பறந்துகொண்டே விளையாடும் திறம்  பெற்றவர்கள்  ஆவர். முதல்முறை போயிலை2 போட்டால் மயக்கம்  வருகிறது.பழகிப் போய்விட்டால் அதிகப்  போயிலை கேட்கும்.  பண்டு சிங்கப்பூரில் போயிலை வணிகம் செய்தவர்கள் தேவர் அண்ட் கம்பெனி ( தேவர்கள் குழும)க்காரர்கள். போயிலை கொண்டுபோய்ப்  பகிர்மானம் செய்தவர்க்குப் "போயிலைக்காரர்"  என்று அவருடைய வாடிக்கையாளர்கள் பெயர் கொடுத்திருந்தனராம். அக்காலங்களில்  மயக்கப் பொருட்களைப்   புழங்குவதில் தமிழர்  பெயர்பெற்றோர் ஆவர்.  இது  1940 - 50 வாக்கில் என்பர்.  அப்போது கள்ளுக் கடைகளும் சிங்கப்பூரில் இயங்கிவந்தன.  சிங்கப்பூரில் இக்கடைகளை ஒழித்த பெருமை கலைச்சார்புத்துறை அமைச்சர்  மறைந்த உயர்திரு இராச ரத்தினத்தி னுடையது ஆகும்.

மயக்கப் பொருள்களைப் பற்றி முன்னர் எழுதியுள்ளோம்.இங்கு ஓர் இடுகை உள்ளது. சொடுக்கி வாசிக்கவும்.3

மயக்குவது  >  மது ( இடைக்குறை).https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_19.html  [ சுருக்கச்சொல்]

இச்சொல்லை அடிச்சொல்லிலிருந்து அணுகி ஆய்வு செய்யலாம்.

சுருக்கமாக:

அடிச்சொல்:  மர்.

மர் > மய் > மய > மயங்கு  (மய்+ அம்+ கு)  >  மயங்குவது,   இடைக்குறைந்து:  மது.

மர் > மய் >மயக்கை >  மசக்கை.

மர் >  மரல் }

மர் > மருள்}  -  மயங்கி அல்லது சிந்தனையற்று  மனிதன் இயங்கும் நிலை.

மர்>   மரம்:   மண்ணில் முளைத்து வளரும் உணர்ச்சியற்ற  அறிவுக் குறை  உயிர்.

மர் >  மரி> மரித்தல்.  உணர்ச்சியற்ற, உயிர்விட்ட நிலை அடைதல்.

மர் > மரவை:  மரத்தாலான கோப்பை வைக்கும் தட்டு. வை என்ற விகுதி பொருத்தமானது.

ஒப்பீட்டுக்குப்  பல உள.  ஒன்று இங்கு:

விர்> விய் > வியன்( விரிவு).  "வியனுலகு"

விர்> விரி> விசி:   விசிப்பலகை.

விர் >விரு > விசு > விசும்பு:   வான்.

விர் >விய் >விய் +ஆல் + அம் > வியாலம்> விசாலம். ( ய - ச திரிபு)

விர்>விய்>  வியா > வியா+பர+ அம் =  வியாபாரம்:   விலைப்பொருட்டுப் பொருள்களை விரிந்து  பரவச் செய்தல்.

விர்> விரு > விருத்தம் :  விரிவுடைய பாவகை.

விர்> விரு> விருத்தி.( சரிசெய்து விரிவாக்குவது) .

இது மது என்ற சொல்லுக்கு விரிவான ஆய்வுக்கு வழிகோலும்.

மர் > ம > மது. (கடைக்குறை,பின் து விகுதி பெற்ற சொல்) என்பது மிக்கச் சுருக்கமான விளக்கம். 

மருதம் அடிச்சொல்: மர்

மக்கள் மயங்கும் ( தங்கிக் கலக்கும்) நிலம்

எத்தொழிலோரும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்ள முனையுங்கால் வந்து கலந்தமரும் நிலப்பகுதி.  ஆடு மாடு வளர்த்தாலும் உணவு தடையின்றி வேண்டுமாயின் விவசாயத்தில்  ஈடுபடுதல் செய்வர். மீன்பிடித் தொழிலரும் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயத்தில் புகுந்தால் உணவுக்குக் குறையிருக்காது. இவ்வாறு  ஒவ்வொரு நில வாழ்நரையும் பொருத்தி அறிந்துகொள்க.

விவசாயம் :   இங்கு விளக்கப்பட்டுள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

வேற்று  நிலத்தொழிலரை ஈர்க்கக் காரணம் தொழிலின் உள்ளமை சிறப்பே.

யாரும் மருவும் தொழில்.  யாரும் வந்து மயங்குறு தொழில்.மயங்குதல்  - கலத்தல்.  தலைசுற்றுதல் என்று பொருட்சாயல்கள்  பல.

ஆடு மாடு நாய்  பூனை என யாவற்றுக்கும் உணவு துவன்று  உயிர்களைப் பேணும் தொழிலும் விவசாயம் என்னும் உழவுதான். சொல்லுக்கும் அதன் அமைப்புக்கும் காரணம் அறிகிறோமேஅன்றி,  இது விளம்பரமன்று.

இது சொல்லமை காலத்துச் சிறப்புக் கூறியது.

உழவை வள்ளுவன் புகழ்ந்ததும்  உணவு விளச்சலுக்கு அது  ஆதியானதால்தான்.  ஆதி -  ஆக்க  மூலம்.   கள் முதலியவை உண்டாக்குதல் துணைத் தொழில்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

தொடர்பு காட்டும் மற்ற இடுகைகள்:

1. ராஜஸ்தான் விவசாயிகள் : https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_15.html

 2. விவசாயம்   https://sivamaalaa.blogspot.com/2017/04/blog-post_54.html

3. பலவகைச் சொல்லாக்கம்: https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_99.html

4. நஞ்சை புஞ்சை முதலியன https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_27.html

தொல்காப்பியத்தில் : " வேளாண் மாந்தர்க்குப் பிறவகை நிகழ்ச்சி இல்" என்பது:  படைக்கு இவர்களை எடுப்பதில்லை.  படைக்கு வேண்டிய உணவும் இவர்களிட மிருந்தே வருவதால். இவர்களும் சண்டைக்குப்போனால் படையினர் எதைச் சாப்பிடுவது?.   அதுதான் காரணம்.   An army moves on its stomach,  said Napoleon.

படைக்கு ஆக்கிச் சோறுபோட்டவர்கள் படையாக்கிகள்.

அடிக்குறிப்புகள்:

1  பண்டைக்காலத்தில் காற்றதர்கள் ( சன்னல்கள்)  பல துளைகளை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு துளையும் ஒரு கண். பலகண் உடைமையால்  பலகணி என்றுபெயர்.

2  போயிலை - புகையிலை.  போயிலை என்பது பேச்சுவழக்குச் சொல்.

3  வாய் > வாயித்தல் > வாசித்தல்.  ( ய - ச திரிபு).


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

தவனம் ஆசை.

 இன்று தவனம் என்னும் சொல்லிலிருந்து சில அறிந்துகொள்வோம்.

முன்னுரை:  அயலோசையோ?

இச்சொல்லைப் பார்த்துவிட்டு அல்லது கேட்டுவிட்டு ஒலியின் காரணமாகத்  தமிழன்று என்பர் அறியார்.  ஆய்,  மாய் என்று வருவன சீனமொழிச் சொற்கள் போல் ஒலிக்கும்.   எல்லா வித ஒலிகளும் தமிழில் உள்ளன. ஒலிகளை மட்டும் மாற்றித் தமிழை இன்னொரு மொழிபோல் மாற்றிவிடலாம்.  இவ்வாறு வசதிகள் பல உடையது தமிழ்மொழி. பெரியசாமியை மிஸ்டர் பெரியாக்கி ( Mr Perry ) வெள்ளைக்காரனாக்கிவிடலாம். அப்புறம் அவர் பெரி சாம் தான். பார்லிமென்ட் என்பதைப் பாராளுமன்று என்று ஈடாகத் தந்து,  சொல்லாக்க நடிப்பினைக் காட்டலாம்.   பின்,  பார் -  நாட்டினை,  ஆளு -  ஆள்கின்ற,  மன்று -மன்றம் என்று பொருள்விரிக்கலாம்.  பார் என்பது உலகம் என்று பெரிதும் உணரப்பட்டாலும், நாடு என்ற பொருளும் உள்ளது.  ஆனாலும் இக்காலத்து உணர்பொருளைப் பின்பற்றி நாடாளுமன்றம் என்றும் கூறி மகிழலாம்.

ஒலியைக் கொண்டுமட்டும் மொழி எது ஏன்று தீர்மானிப்பது தவறாக முடிதலும் உண்டு.

தாவு என்னும் வினையிலிருந்து:

ஆசை மனத்து அசைவு.  மன உணர்ச்சி அசைவுற்று ஒரு பொருளின்பால் செல்கிறது.  சலனம் என்பதும் காண்க.   அசைதல் வினை.   அசை> ஆசை என முதனிலை நீண்ட தொழிற்பெயராகும்.

ஆசை அசைவு மட்டுமோ?  சும்மா வெறுமனே அசைதல் மட்டுமின்றி இன்னும் விரைவுற்றுத் தாவிச் செல்லுதலும் உண்டு.  இவையெல்லாம் அணியியல் முறையில் எழும் சொற்கள்.   தாவு >  தாவு+ அன் + அம் என்று கோவைப்பட்டு, தவனம் ஆகிவிடும். பற்றுதல் என்பது விரல்கள் கைகளால் பிடித்துக்கொள்வது போலும் ஆசை பற்றிக்கொள்கிறது.  அல்லது தீப்பற்றுதல் போலும் பற்றிக்கொள்கிறது.

இளிவே யிழவே யசைவே (தொல். பொ. 253).  அசைவு பல வகையன. தாவுதலு ஓர் அசைவே.

தாவு >  தாவு அன் அம் > தவனம் என்பதில் நெடில் முதல் எனத் தோன்றிக்  குறிலானது.   காண் என்ற வினை,  கா  என்பது குறுகிக் கண் என்று காணுறுப்பினைக் காட்டியது.    தோண்டியது போலும்  வாய்த்தொடர் குழாயை, தோண்டு + ஐ >  தொண்டை என்று முதனிலை நீட்சி குறுக்கி உறுப்பின் பெயராக்கியது. சா என்பது ச என்று குறுகி,  சா > சா+ வ் + அம்= சவம் ஆனது.  வ் இடைநிலை.  சாவு> சவம் எனக்காட்டினும் அதேயாம்.

உன் மனம் எனைக் கண்டு தவனம் செய்வதோ?  என்றால்,  என்பால்  ஆசை கொள்வதோ என்பதே பொருள்.

தவனங்கள் மூன்று:  மண்ணாசை, பொன்னாசை,  பெண்ணாசை.

தாவுவதால் மனமும் ஒரு குரங்கு  ஆனது.

எரியும் நெருப்பின் அனலும் தாவுவதாகச் சொல்வர்.  அனல் தாவி நெருப்பு பற்றிக்கொண்டது என்பதுண்டு. வெப்பமே இது.  இதிலும் தவனம் : தாவு+ அன் + அம் என்பதும் இன்னும் பொருள்தெரிய நிற்கின்றது.மருக்கொழுந்து மணமும் தாவுவதுதான். அதற்கும் இது பெயராகிறது.

திருப்புகழில் அருணகிரிநாதர்:   "அனலூடே தவனப்பட்டு " என்பதும் கவனிக்கவும்.  (308.50 )

வருத்தமும் இவ்வாறு தாவக்கூடியதே.  ஒரு துன்பத்தைக் கேள்விப்படுவோரெல்லாம்  வருத்தமடையக் கூடுமாதலால் அதுவும் தவனம் ஆகிறது.  எடின்பரோ கோமகனாரின் மறைவு கேட்டுப் பலர் தவனமடைந்தனர்.

உணவில் ஒன்றன் சுவை மற்றதில் தாவிக் கலக்கும்.  உப்பு, புளி, மிளகாய் இடித்து அதனால் தாவிக் கலந்தது தவனப்புளி ஆகிறது.

இங்கு ஆயுங்கால் ஓரிடத்திலிருந்து இன்னோரிடம் செல்லுதல் என்பதே தாவுதலென்பதன் அடிப்படைப் பண்டைப் பொருள் எனல் தெளிவு.

தவி - வினையிலிருந்து:

தண்ணீர் தவிக்கிறது என்பதுண்டு.   தவி+அன் + அம் =  தவனம் ஆகும்.  இது இன்னொரு வினைச்சொல்லிலிருந்து போந்து மேற்சொன்ன முடிபையே அடைவதான சொல்.  சில சொற்களில் வகரம் ககரமாகும்.  ஆகவே தவி > தகி ஆகும். தகிக்கிறது என்பர்.  தகி+ அம் = தாகம், முதனிலை நீண்ட திரிபுத் தொழிற்பெயர் ஆகுமிது.

கவனத்துக்குரிய திரிபுகள்:  

தாவு > தாவம் > தாபம்.  தாவம்> தாகம்:  (வ- க).

தவி > தகி > தாகம்.  (வ- க).

ஆகும் என்பதை ஆவும் என்பது பேச்சில்.  (வ-க).

அறிக மகிழ்க.

குறிப்புகள்:

தொடர்புடைய  இடுகைகள்:-

ஆசை https://sivamaalaa.blogspot.com/2014/06/blog-post_2465.html

காமினி https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_3.html

ஆகமங்கள் https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post82.html

மெய்ப்பு  பின்னர்.


தடு என்ற சொல்லடித் தோன்றிய வடிவங்கள்.

 இன்று  தரம், தடம், தடவை முதலிய சொல்வடிவங்களைக் காண்போம்.

தடைபட்டுத் தடைபட்டுத் தொடங்கும் நிகழ்வில் ஒவ்வொரு தடைபாட்டினையும் ஒரு தடவை என்று சொல்வோம்.   தடு+ வை > தடவை ஆகும்.  டுகரத்தில் உள்ள உகரம் கெட்டு, அகரம் ஏறி வை என்ற இறுதிநிலையுடன் இணைகின்ற  செயல்   இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:  அறம் என்ற சொல்.   அறு +  அம் =  அறம் ஆவது போல. இங்கும் உகரம் கெட்டது காணலாம். இவ்விரண்டு துண்டுகளும் சேர்ந்து அற்றம் என்றும் இன்னொரு சொல்லுமாகும்.

தடம் என்ற சொல்லும்  டுகரத்தின் இறுதி உகரம் கெட்டது.  இதுவும் பின் அம் விகுதி பெற்று தடம் என்றாகும்.  தடம் என்பதற்கு வாட்டி அல்லது தடவை என்று பொருளில்லை.  வாட்டி: ஒரு வாட்டி, இரண்டு வாட்டி எனவரும்.

தடம் என்பதிலிருந்து திரிந்த தரம் என்ற சொல்லுக்கும் மேற்  சொன்ன பொருள் உள்ளது.  அது தடவை என்றும் பொருள் தரும்.  ஒரு தரம், இரண்டு தரம் என்று ஏலத்தில் கூவப்படுதல் கேட்டிருக்கலாம்.

தடம் > தரம் என்னும் திரிபு  மடி > மரி என்னும் திரிபு போன்றது ஆகும்.  சில உணவு வகைகளை விட்டு நோன்பு கடைப்பிடித்தலை  விடு>( விடதம்) > விரதம் என்று கூறுதல் காண்க.  இதுவும் ட - ர திரிபுவகைதான். அவனொடு, அதனொடு என்று வரும் ஒடு என்னும் வேற்றுமை உருபு,  ஒரு> ஒருங்கு என்பதனோடு பொருளொற்றுமை உடைத்தாதல் கவனித்தல் வேண்டும். இடு என்பதும் இரு என்பதும் அணுக்கப்பொருள் உடையன.  இட்ட பொருள் இட்ட இடத்தில் இருக்கும் என்பதை கூர்த்துணர்க.  இடு> <இரு.   தரம் என்பது தடம் என்பதனோடு பிறப்பியல் உறவுடைய சொல்.  இதனுடன் தடவை என்பதில் வரும் தடத்தையும் ஆழ்ந்து சிந்தித்துணர்க.

விடி என்பது ஒளிப்பகுதிகளின் விரிவேயன்றி வேறில்லை.  விடி> விரி என்பதறிக.  நுண்பொருள் வேறுபாட்டுச் சொல்லமைப்பு இதுவாகும்.  கடி> கொறி என்பதும் அன்னது.

தரமென்பதை தரு என்பதிலிருந்து கொள்ளுதல் கூடுமாதலின்,  இஃது ஓர் இருபிறப்பிச் சொல் என்னலாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





சனி, 17 ஏப்ரல், 2021

விவேக் மறைவுக்கு இரங்கல்

 மரங்கள்பல நட்டவராம் நடிப்பு தன்னில்

தரங்களுயர் தக்கவராம் விவேக்கன் புள்ளார்,

உறங்கலிலா ஓய்வறியா உழைப்பு மிக்கார்

அறங்களிவை அல்லாத இவையென் றுண்மைத்

திறம்கண்டார் மன்பதையைத் திருத்தத் தேரும்

உரங்கொண்டார் மேதினியில் உரையில் ஒக்கும்

கருங்கழலார் பின்பல்லோர் பிறங்கும் பண்பார்

பரம்புகவே பாய்துயரால் பதைக்கும் நெஞ்சே.




அல்லாத இவை -  அறமல்லாதவை இவை

மன்பதை - சமுதாயம்

உரையில் - பேச்சில். வாதத்தில்

தேரும் திறம் -  வெல்லும் திறமை

மேதினியில் - உலகத்தில்

ஒக்கும் கருங்கழலார் -  (அறிஞர்) ஏற்கும் வீரமுடையவர்

பின் பல்லோர் -  அவரைப் பின்பற்றுவோர் பலர்

பிறங்கும் -  ஒளிசெய்யும்

பரம் புகவே - இவ்வுலகை விட்டு வானில் செல்லவே

பாய் துயரால் -  பாய்ந்த சோகத்தால்

பண்பார் - பண்புள்ளவர்

பதைக்கும் -  படபடக்கும்



வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பழத்தால் மனத்தால் அலங்காரம்

மனத்தால் அலங்கரிக்கும் நானே - பல

பழத்தால் அலங்கரிப்பேனே -  என் இறைவனை

படம் : உதவியவர் சி. லீலா.


 

வியாழன், 15 ஏப்ரல், 2021

தடாகம்

 தாமரை பூத்த தடாகமடி 

 தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுடதடி

 -- என்பது ஓர் அழகிய பாடல்.


தடாகம் என்பதொரு கவினிய இன்சொல்.   இச்சொல்லில் தடு என்ற வினைச்சொல்லும்  அகம் என்ற பெயர்ச்சொல்லும் உள்ளன.

இதன் உள்ளுறைவை எவ்வாறு வெளிக்கொணர்வது?  இப்படி விளக்கலாம்.

அகம் --   தன் உள்ளில் அல்லது குழிவான உட்பகுதியில்,

தடு -  நீரைத் தடுத்து வைப்பதாகிய ஒரு நீர்நிலை.

சொல்லமைப்பில் எல்லாப் பொருட் பரிமாணங்களையும் பற்றி உள்ளமைத்துப் புனைய முடிவதில்லை.  எடுத்துக்காட்டாக,   நாற்காலி என்ற சொல்,  நாலு கால் என்ற இரு  உட்கட்டுகளை  முன்வைக்கின்றதே தவிர, அது உயிர் உள்ளதா, இல்லாததா,  நாயையும் குறிக்குமா,  நாயும்  நாலு கால்கள் உள்ளதுதானே என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதருவதில்லை.  ஒரு சொல்லமைவுக்குள் இத்தனையும் வைக்கவேண்டுமென்றால்   மொழிப்பயணம் தடைப்பட்டுவிடும்.

தாடாகம் என்பதில் இவ்வளவும் வேண்டுமா?  அப்படியானல் இனிமேல் நான் டொங்க்டெங்க் என்று சொல்லும் போதெல்லாம் வண்டி என்றுதான் பொருள்கொள்ளவேண்டும்  என்று அம்மா அடித்தால், நானும் வேறுவழியின்றி அப்படியே கொள்ளுவேன்.  மொழியில் இப்படி யாரும் அடிக்காவிட்டாலும், இடுகுறிப் பெயர் என்பது  இதைத்தான் நம்  முன் நிறுத்துகிறது.  அமைபொருள் ஒன்றும் தெரியவில்லை, இருந்தாலும் அப்பெயர் இதைத்தான் குறிக்கின்றது என்பது தான் ஏற்பாடு.  வேறு பொருளுக்கு இப்பெயரை இட்டழைக்க நமக்கு அதிகாரம் எதுவும் இல்லை.  ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வாதத்துக்கும் இடமில்லை.

தடாகம் என்பதன் உள்ளுறைகளைப் பெயர்த்து எடுத்துக் கவனித்தால் அது ஒரு சிறைக்கூடத்தையும்கூடக் குறிக்கலாம். இப்போது அது நீர்நிலையை மட்டுமே குறிக்கும் என்று வைத்துமுடிக்கவும்.

 புரிந்துகொள்ளும் முயற்சியில் நாம் இப்படிப் புகன்றுகொண்டாலும் தடாகம் என்ற சொல்லுக்குக்  கோட்டம் என்ற ஒரு  பொருளும் உள்ளது.  கோட்டம் என்பது சுற்றுச்சுவர் அல்லது அடைப்பு உள்ள ஓர் இடக்கட்டினையும் குறிக்கும். எடுத்துக்காட்டு:  அரண், கோயில், சிறை முதலியன.  இவ்விடங்களிலெல்லாம் மனிதர்களைத் தடுத்து அகத்தில் இருத்துதலாகு மன்றோ - அதனால்தான். இவ்வாறு தடுத்துவைத்தலில் ஒரு நேரவரையுடன் கூடிய தடுத்தலுக்கும் அவ்வரையற்ற தடுத்தலுக்கும் வேறுபாடு ஒன்றுமிலது.  தடுப்பு என்பது தடுப்புக் கட்டுமானத்தையோ,  வெளிச்சென்றுவிடாமல் வன்மையுடன் தடுத்தலையோ,  பிறர் உள்ளே நுழைந்துவிடாதபடி அவர்களிடமிருந்து உள்ளிருப்போரைத் தடுத்துக்  காத்தலையோ இன்னும் ஏனை முறைகளில் ஏற்படக்கூடிய தடுப்புகளையோ குறிக்கலாம்.  பொருந்தியதை ஏற்றல் கூடும்.

இது ஒரு வாவியையும் குறிக்கவல்லது.  வாவியாவது,  வாய்விரி நீரோடை.  வாய்வி > வாவி.  வாய் என்பது கடைக்குறைந்த பின், வி என்னும் விகுதி பெற்று வாவி என்பது சொல்லாயிற்று என்பதும் அதுவே. இச்சொல் (வாவி) வருதல் என்ற சொல்லடிப்படையிலும் எழுதல் கூடும்.   வரு >  வா > வாவி எனல்.  வாரி என்ற சொல்லும் "வரு" அடிச்சொல்லினடிப் பிறப்பதே.  வரு> வார்> வாரி.  இப் பிறப்பியல் ஒற்றுமை கருதத்தக்கது.

தடாகம் என்பதில்  தடு என்பதன் உகர கெட்டது.  மீதமிருப்பது தட் என்பதே. இது சொல்லன்று.  சொற்புனைவு எதிர்நோக்கிய இடைவடிவம். இது தட என நின்று அகம் என்பது வர, தட+அகம் > தடாகம் என்றாயது. இரு அகரங்கள் ஆகாரமாயின. தடம் என்ற சொல்லுக்கும் இது புனைவுப்பொருத்தம் உடையதே.  அது அம் (ம்) நீத்து,  தட் என்றாகி, அகரம் பெற்றுத் தட என்று வந்தே அகம் என்பதனோடு கூடுவது.  மட ஆலயம் > மடாலயம் போலுமே. அடி அடி> அடாவடி எவ்வாறு?  அடாத அடி - அடாவடி எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பீதாம்பரம்

 பொன்னாடையைப் பீதாம்பரம் என்றனர் என  நூல்கள் உரைக்கின்றன. துணிக்கப் படுவது துணி என்றும் வெட்டப்பட்டுக் கட்டிக்கொள்ளப்படுவது வேட்டி என்றும், சிறிய அளவினதான துணி துண்டு  என்றும்,  இவ்வாறு சொற்கள் அணியும் ஆடைகளைப் பற்றி ஏற்பட்டிருப்பதால் பீதாம்பரம் என்ற சொல்லும் இவ்வாறு எளிதான முறையில் அமைந்த சொல்லென்று நாம் முடிக்கலாம்.  உடம்பின் தாழ் பகுதியில் அணியப்படுவது தாவணி ஆனது.    தாழ்வு+ அணி = தாழ்வணி > தாவணி என்று,   ழகர ஒற்று வீழ்ந்தது.  வாழ்த்திசைக் குழுவினர், வாத்தியம் வாசிப்போராயினர் என்பதை நோக்க, ழகர ஒற்று வீழ்ந்ததில் ஒரு வியப்பில்லை.

சிவபெருமானுக்கும் பீதாம்பர ஆடை சொல்லப்படவில்லை.  ஆனால் மேகவண்ணன் உயர்பொன்னாடை அணி பெற்றார். ஆதலின் விண்ணுளான் பின்னாளினன் என்று அறிகின்றோம்.  கடவுளென்ற முறையில் இவர்கள் காலம் கடந்தவர்கள்.  ஆனால் மனிதர் துதிக்கத் தொடங்கிய காலம்  முன்பின்னாக இருக்கக்கூடும்.

தாமரையில் கவர்ந்தது செந்தாமரை. இதன் நிறத்தினோடு அணுக்கமுடைமையால் தாமிரம் என்ற கனிமம்  தாமரை என்ற சொல்லை முன்னமைவாகக் கொண்டு பெறப்பட்ட சொல் என்பது தெளிவாகிறது. தாமரையின் செம்மைக்கும் தாமிரத்தின் செம்மைக்கும் வேற்றுமை சிறிது உண்டென்றாலும் பழங்காலத்தில் நிறங்கள் பற்றிய வரையறவு அத்துணை தெளிவை ஒன்றும் அடைந்துவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடலாகாது.  எடுத்துக்காட்டாக,  கண்ணன் நீலவண்ணன் என்றும் கருமை நிறத்தோன் என்றும் இவ்விரண்டுக்கும் இன்றுள்ள இடைவெளித் தெளிவு தோன்றாவண்ணமே வருணனை செய்யப்படுவது நம் இலக்கிய வழக்காகும் என்பதறிக.   இவ்வண்ணமே தாமிரத்துக்கும் தாமரைக்கும் இடைநின்ற நிற இடைவெளி அன்று கருதப்படவில்லை என்பதே உண்மை.   தாமிரத்துக்குச் செம்பு என்ற சொல் செம்மை நிற அடிப்படையில் ஏற்பட்டிருப்பதும் கருதத் தக்கதாகும்.

தாமிரம் என்பது தாம்பரம் என்ற சொல்வடிவாலும் குறிக்கப்படுதல் உண்மையால்,  பீ தாம்பாரம் என்பதன் கண் உள்ள தாம்பரம் நிறத்தைக் குறித்த சொல்லே என்று தீர்மானித்தல் சரியாகும்.   நிறம் தாம்பரமாக, அந்நிறத்துத் துணியும் அதே பெயரைப் பெற்றது,  ஒருவகை ஆகுபெயரே என்று முடிவுகொள்ளலும் சரியானதே.

இப்பீதாம்பரம் போர்த்திக்கொள்ளப்பட்டது   முன் நடுவில் விலகி நிற்கும்படியாக நிகழ்ந்தது என்பதும் தெளிவு.  பிய்தல் அல்லது விலகிநிற்றல் குறித்த சொல் "பீ" என்பதாகும்.   பிய் > பீ .  பிய்வு எனின் பிரிந்துநிற்றல்.  இவ்வாறு துணிநிற்றல் ஓர் அழகுமாகும்.  இது செய்> சே என்பதுபோலும் திரிபு. செய்ய தாமரை, சேவடி என்பவற்றில் செம்மைப் பொருள் கண்டுகொள்க.  அன்றேல், ஒரு பெருந்துணியில் பிய்த்துக் கட்டிக்கொண்ட அணி என்று பொருள் கொள்ளலாகும்.

இனி இன்னொரு வகையில் சொல்லமைப்புக் கண்டு, உணர்த்துதல் கூடும்.

பின் + தாழும் + பர + அம் >  பீதாம்பரம் ஆகும்.  தாழும் என்பது தாம் என்றாயது இடைக்குறை.  பர அம் என்பது துணி உடலிற் பரவப் போர்த்தியிருப்பதைக் குறிக்கும். பர என்பதில் அகரம் கெட்டது.  பின் என்பது னகர ஒற்றுத் தொலைந்து பீ என்று நீட்சி பெற்றது.   0ன் எழுத்து வீழ்வது தன்பின் > தம்பி என்பதிலும் நிகழ்ந்துள்ளது.  பிம்பம் என்பதில் பின்+பு+அம் எனற்பாலது ஒன்றித் திரிந்தது.

நெஞ்சிடைப் பிரிந்து தாழ்ந்து பரவ நிற்கும் ஆடை.  பிய் என்பதும்  பீ  என்று திரியும்.  மரி என்பது மா என்று திரிந்து மாரகம் என்ற சொல் அமைந்தது. கோபீனம் என்ற சொல்லில் ஏற்பட்டுள்ள திரிபும் பின் என்ற சொல் நீட்சி காட்டவல்லது.

ஆகவே பீதாம்பரம் என்பது இருபிறப்பிச் சொல் ஆகும்.

இது எவ்வாறு அணிந்துகொள்ளப்பட்ட துணியைக் குறித்தது என்பதைச் சொல் காட்டுகின்றது. தாமிர நிறத்துத் துணி என்பதும் தெளிவாய் உள்ளது.  இடுப்பிலே பீதாம்பரம் என்ற வரணனையும் உண்டாதலின், இது பொன்னாடை போலன்றி வேறுவகைகளிலும் அணியய்பட்டிருத்தல் கூடும்.

முன் காலத்தில் இந்தத் தாம்பர வண்ணத் துணிகள் பெரிதாக நெசவு செய்யப்பட்டு, பின் அணியுங்கால் அவற்றிலிருந்து பிய்த்து ( துண்டு அகற்றி) அணியப்பட்டமையே  பீ (பிய்வு)  என்ற முன்னடைவு வந்தமைக்குக் காரணமாதலும் பொருந்துவதே. பிய்தாம்பரம் > பீதாம்பரம்.  அல்லது முன் குறித்தபடி,  பின் தாழ் பர அம் >  பின் தாபரம் > பீதாம்பரம் எனினுமாம்.

தொய் + பு > தொய்ம்பு > தோம்பு என்பதில் மகர ஒற்று புணர்ச்சித் தோன்றல். அதுபோலுமே ஆகும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.


  

திங்கள், 12 ஏப்ரல், 2021

தசை என்ற சொல்

 தசை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

இது தை என்ற அடிச்சொல்லிலிருந்து வருகிறது.  இச்சொல்லின் இறுதியில் உள்ள சை என்பது விகுதி.  இதனை மேலும் பிரித்து இரண்டு சிறு விகுதிகளைக் கண்டுபிடிக்கலாம்  அவை சு+ ஐ என்பன,  இரண்டையும் இணைத்து ஒரு விகுதியாகக் கூறினாலும்  சு என்பது இடைநிலை, ஐ தான் விகுதி என்றாலும் ஆவதொரு தெற்றில்லை என்றறிக.

தை > தைவருதல் :  தடவுதல்.

தை > தைலம் :  தடவும் எண்ணெய் அல்லது நீர்ப்பொருளான மருந்து அல்லது நெகிழ்களிம்பு.

தைத்தல் -  இணைத்தல்.

தை -  தையல்:  துணிகளை நூலால் இணைத்தல்.

தையல் -  வீட்டுடன் இணைந்திருப்பவள்,  என்பதே அடிப்படையான பொருள். இன்னொரு வீட்டிலிருந்து பெண்வீட்டில் வந்து இணைபவனே மாப்பிள்ளை. அதனால்தான் திருமணத்தின் முன் பெண்பார்க்கப் போவது வழக்கில் வந்தது. பெண்வழி வாழ்வுமுறை மாறிவிட்டாலும் இந்த எச்சங்கள் தொக்கி நிற்கின்றன.

இணைத்தல் தடவுதல் எல்லாம் தொடுதல் வகைகள்.

தைமாதம் என்பது இணைக்கும் மாதம்.  மக்களையும் அவர்கள் நடாத்தும் நிகழ்வுகளையும் இயற்கை நலங்களையும் ஒருங்கிணைக்கும் மாதம்.

தடவுதல், இணைத்தல், பொருந்துதல் என்று தை என்பதன் அடிப்படைக் கருத்தை அறிந்தோம். இனித் தசை எனற்பால சொல்லைக் காண்போம்.

தை > தை+ சை  ( சொல்+ விகுதி)  >  தசை.  ( இது ஐகாரக் குறுக்கச் சொல்லமைப்பு).

இன்னொரு வழியில்:

தை >  தய் >  தசு > தசை.    ( தசு+ ஐ).

இது பை > பய் > பயன் (பையன்) > பசன்  ( பசு+ அன் )  > பசங்க (பேச்சு) போல்வது ஆகும்.

பசன் என்பதை பசுமை + அன் = பசன் என்று காட்டினாலும் அதே.   பசுமை, இளமைக் கருத்தில் அங்கே ஒளிந்துகொண்ண்டுள்ளது.  உணரும்படியாக இவண் வெளிக்காட்டப்படுகிறது.

தை > தைச்சு > தச்சு.  தச்சுவேலை என்பது மரங்களை அறுத்து இணைக்கும் வேலை.  இணைப்பதே அடிப்படைப் பொருள்.  தச்சு என்பதும் ஐகாரக் குறுக்கம்.

தை > தய் > தயிர்.   இர் விகுதி.  பாலில் ஏற்படும் இணைப்பு.

இவ்விதிப்படி திரிந்த இன்னொரு சொல்:  மை >  மய் >  மயிர்.  இர் விகுதி. இன்னொன்று:  பை > பய் > பயிர்.  

சொல்லை ஆய்வு செய்யும் ஆர்வமுள்ளவர்கள் இதனைப் பட்டியலிட்டு மனனம் செய்துகொள்க.

உடலில் ஏனை உள்ளுறுப்புகளுடன் இணைந்திருப்பதே தசை.


அறிக மகிழ்க.

செப்பமிடு மீள்பார்வை பின்னர்.


பிற்குறிப்பு:

தயங்கு என்பது தங்கு அங்கு என்ற கருத்துக்களின் ஒன்றுபாடாக வந்த சொல்லே ஆமென்க.  த என்பது தன்மை. தன்மை இடத்தில் கு : சேர்ந்திருத்தல். கு என்பதை விரிவாக முன் ஆய்ந்துள்ளோம். தம் என்பதும் வேறன்று. அவற்றை மறுநோக்கு மேற்கொள்க.  தன் + கு = தங்கு.  தன் இடத்தில் இருப்பதே மேலானது என்று கருதிவிட்டால்  அதுவும் த+ ஐ,   அல்லது த+ இயை = தயை ஆகும். [ ஐ என்பது மேன்மைக் கருத்து. ] மேற்சென்று போரிடுதல் துரத்துதல் என இல்லாமல் இருக்குமிடத்தில் இயைந்துவிடுதல்.  ஒரு வீரன் சீறிப் பாயாமல் இரங்கித் தன் நிலையிலே நின்றுவிட,  அது  தய , தயை என்று வந்துவிடுகிறது. அப்போது அது இரக்கம் என்று கூறப்படும். இவ்வாறு தயவு, தயை, தங்கு,  தயங்கு என்ற சொற்பின்னல்கள் எழுதலை கூர்ந்துணர்ந்து  மகிழ்க.

த -  தன்மை அல்லது தன்னிலையில்,

அ - அங்கே நின்றுவிடுதல்.

த + அ =  தய. இவ்விடத்து யகர ஒற்று (ய்) உடம்படு மெய்.

தயங்கு, தயவு, தயை எனச் சொற்கள் அமைதல் காண்க.

பண்டை மொழிமாந்தனுக்கு ஒருவன் தன்னிலை நீங்கி எதிர்நிற்பவனிடம் நெருங்கினால்  அவனை அடிப்பதற்கோ, வெட்டுவதற்கோ முற்படு செயல்;  இவ்வாறு தன்னிலை கொள்பவன் அரசனோ அதிகாரியாகவோ இருப்பான். தன்னிலை நீங்காமல் நிற்றல் என்பதே தயை,  அதுவே தயங்குதலுமாம்.  தண்டிக்கத் தயங்குதல்.  அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ்நாட்டுப் பழமொழியையும் காண்க.  நின்று கொல்லும் - நின்று என்பதுதான் தயை, தயங்கு என்பவெல்லாம்.  நில் > நிலை.  தான் நிற்றல் - தன் நிலை - தன்னிலை. இலக்கணத்தில் தன்மை என்பர்.  தன்மை உடைய மனிதன் என்பர் சிலர். இதன் கருத்து என்னவென்றால், தன்னிலை நீங்காமல் " தயை" யுடனும் "தயக்கத் "துடனும்  ( இரங்கி ) நடந்துகொள்வோன் என்பது. தெய்வம் நின்று கொல்லக் காரணம், இடையில் மனிதனுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு அளிப்பதற்காகவே என்பர். அன்றை மாந்தனின் கருத்துகளின் ---நிலைமைகளின் அடிப்படையில் சொற்கள் உருக்கொண்டன.

தயாநிதே -  தயங்கி நின்றோனே ;  நி தே -  நில் + து + ஏ >  நி து ஏ. தயை செய்தோனே.  நில் > நி  ஆனது கடைக்குறை.

நிதி என்ற சொல் மாந்தனை அல்லது கடவுளைக் குறிக்கையில் அது திணைப் பிறழ்ச்சி ஆகிறது.  து என்பது அஃறிணை விகுதி.  மூலத்தில் தமிழிலிருந்து புறப்பட்டதாகக் காட்டினாலும், இலக்கணம் பிறழ்ந்ததால் அது தமிழென்று ஒப்பார் தமிழ்ப்புலவர் சிலர்.  இது இங்கு திணை விகுதி அன்று, சொல்லாக்க இடைநிலையே என்று கொள்ளின்,  இத்தடை இருக்காது. வேறு விளக்கங்களும் உள்ளன. எ-டு:   து  என்பதன்று,  த்  என்ற இடைநிலை என்பதுமொன்று. இத்துடன் நிறுத்துவோம்.

Classification should be based on a word's functionality and not form. 

---- என்பவை அறிக.

தமிழில் தெரிந்துகொள்ளவேண்டியது அனந்தம்.  ( எல்லை இல்லை). இயன்ற மட்டும் எழுதுவேம்.  மேலும் அறிவோம் பின்.

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டம் செய்யலாம்.

மெய்ப்பு பின்பு



தமிழ்நாட்டுத் தேர்தலில் யார் வெல்வார்?

 உலைபற் றியிலா  அரியும்  நீரும்

நிலையிற் சமைந்து வருமோ சோறும்?

அலைகள் இலவாய் அடங்கிய தேர்தல்

விலைகொள் வாக்கால் கடந்திடு வாரோ?


இது தமிழ்நாட்டுத்  தேர்தல்  (2021) பற்றிப் பேசப்பட்ட ஒரு கருத்தை மேற்கொண்ட ஒரு பாடல்.  பார்க்கப் போனால் அப்படித்தான் தோன்றுகிறது.

உரை பற்றி இலா -  உலையில் நெருப்பிடாமல்,

அரியும் நீரும் -  கிளைந்து வைத்த அரிசியும் நீரும்,

நிலையில் - அப்படியே விட்டுவிட்டால்,

சமைந்து வருமோ சோறும் -   (சாதம்) தானே வெந்து சோறு ஏற்படுமோ?

அலைகள் இலவாய் -  அரசியல் அலைகள் ( எதிர்ப்பு, வாதங்கள் முதலியவை)

இல்லாதனவாக,

அடங்கிய தேர்தல் -   அமைதியாக (கிளர்ச்சிகள் போல் இல்லாமல் ) நடந்து முடிந்த இந்தத் தேர்தல்,

விலைகொள் வாக்கால் -   பணம் புழங்கி  இய ந்திரத்தினுள் சென்ற வாக்குகளால்,

கடந்திடுவாரோ -  வெல்ல முயல்வோர் வென்றிடுவார்களோ?


 உங்கள் கருத்துகளைப் பதிவிடலாம். நன்றி.


ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அம்பலம் - உட்பொருண்மை அழகு.

 அழகாகப் பலரும் அமைதியாகக் கூடி யிருக்கும் இடந்தான் அம்பலம்.  இறை நம்பும் ஒருவனுக்கு அவ்விறைவன் மறைதிருப்பதுபோன்ற மாய்தன்மை மேலிட்டு நெஞ்சில் நின்றாலும் அவன் எழுந்தருளியிருக்கின்றான் என்றே எண்ணிக் கும்பிடுதல் நோக்கி இச்சொல்லை வேறுவிதமாக அமைத்திருக்கலாம். அப்படி அமைக்கவில்லை. அதற்குக் காரணம், அவன் அங்கு உள்ளானா இல்லையா என்ற ஐயுறவு சொல் அமைத்தவன் உள்ளத்தில் தோன்றவில்லை என்றே நாம் கருதுதல் பொருந்தும். அன்றியும் இறைவனோ எங்கும் நிறைந்தவன். எனவே அவ்வாறு அமைத்தல் தேவையற்றதுமாகும்.  அம்பலம் என்பது இறைவனை உள்ளத்திருத்திப் பலரும் கூடுமிடம் என்ற கருத்தில்,  " பலரும் அழகுடன் கூடுமிடும்: " என்பதை மட்டுமே முன்வைத்து அம்பலம் என்ற சொல்லை அவன் உருவாக்கினான்.     "அம்பலத்தே ஆடுகின்றஆனந்தத்  தெய்வம் :  ஆடுதலாவது பற்றுநர் உள்ளத்து ஆடுதல்.

அம் -  அழகு.

பல் -   பலர்.

அம் - அமைப்பு குறிக்கும் ஒரு பழங்கால விகுதி.  அறம் பொருள் இன்பம் என்ற மூன்று அழகிய சொற்களிலும்  அறம்  (அறு + அம்), இன்பம் ( இன் +பு+ அம் ) என்ற இரண்டிலும் அம் விகுதி வந்துள்ளது காண்க.   அமைப்பு என்பதின் அடிச்சொல்லான அம் என்பது தமிழில் மிக்கப் பழைமையான விகுதி என்று அறிவான் ஆய்வறிஞன்.  வீட்டில் பயன்படுத்தும் முறம் என்பதிலும் அம் விகுதி உள்ளது. சொளகு என்ற சொல்லில் கு விகுதி உள்ளது.  இவை பழங்கால விகுதிகள்.  திறம் என்பதிலும் அம் விகுதி.  இவற்றுள் சில வினைப்பகுதிகள். சில பிறவாகும்.

ஆகவே,  அம் பல் அம் -  அழகாகப் பலர் கூடுமிடம்.   "அம்பலம்"   ஆகிறது.

தொல்காப்பியனார் ,  செய்யுளழகு கூறுவார், "'அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபு"   எனப் பொருந்தக் கூறியவை எட்டென்பர்.   எட்டும் ஒவ்வொரு வகை அழகு ஆயினும் அவை யாவும் செய்யுட்குள்  அழகே ஆகும். அழகு என்ற சொல்லும்  அழகுகளில் ஒரு வகையையும்,  பொதுவாக அழகையும் குறிக்கும் சொல்.  அதை நுண்பொருள் நோக்கி எடுத்துக்கொள்வதா அல்லது பொதுப்பொருள் நோக்கி மேற்கொள்வதா என்பதை வாக்கியத்தில் வரும் இடமும்  எந்தத் தலைப்பில் வருகிறது என்ற நிலையும் உணர்ந்து போற்றிக்கொள்க.  இச்சொற்கள் இலக்கணத்தில் இலக்கணக் குறியீடுகள். அல்லாதவிடத்து மொழியில் பொதுச்சொற்கள்.

பொதுச்சொல்லாகச் சொல்லமைப்பில் வருங்கால்  அது (அம்மை)  கவர்தன்மை உடைத்து என்றே பொருள்படும்.  அம்மை என்பது தோன்றும்போதே உள்ள அழகு.  மூல அழகு அதுவாம். மூலமாவது மூளும் நிலை. முன்மை, முதன்மை.

அம் பல் அம் என்பதில் பல் என்பது ஆன்மா பலவாதல்.

அம்பலம் என்பது சொல்லமைப்பால் தமிழினழகும் காட்டும் சொல்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



சாங்கி என்ற பெயர்.

 சிங்கப்பூரில் சாங்கி ( சாங்ங்ி)   என்பது ஒரு வட்டாரத்தின் பெயராக உள்ளது. இதே பெயருள்ள ஒரு வீதி சீனாவின் ஷாங்காய் நகரத்திலும் உள்ளது. இது ஹுவாங்க்பூ மாவட்டத்தில் இருக்கிறது..  (ஷாங்காய்,200025).

சிங்கப்பூர் வானூர்தி (விமான)  நிலையத்தின் பெயரும் சாங்கி என்ற சொல்லைக் கொண்டுள்ளது.

செங்காய் மரத்தின் பெயரிலிருந்து இப்பெயர் பெறப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதியுள்ளனர்.   https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D. இதனை விக்கிப்பீடியாவில் காணலாம்.

சிங்கப்பூரின் சாங்கிப்பகுதி,  முன்னர் மலாய் மொழியில் தஞ்சோங் ரூசா என்று அழைக்கப்பட்டதாம்.

சீனாவின் வீதிக்கு எப்படி இப்பெயர் உள்ளது என்பது ஆய்வுக்குரியது.

சனி, 10 ஏப்ரல், 2021

சிதம்பரும் சிதம்பரமும் தொடர்பின்மை

 பூவம்பர் என்றால் அது ஒரு வாசனைத் திரவியத்தைக்1 குறிக்கும். இச்சொல்லைத் திருக்காளத்தி புராணத்தில் (7.55)  அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூ என்ற மலரைக் குறிக்கும் சொல்லுடன் அம்பர் என்ற சொல் சேர்ந்து இப்பெயர் அமைந்துள்ளது.  அம்பர் என்பதும் ஒரு வாசனைத் திரவியமே.  அம்பர் என்ற சொல் அம் விகுதிபெற்றுக் கோயில் என்றும் பொருள்தரும். கோவில் எப்போதும் தூய்மையாகவும் மணமுடனும் திகழ்வது இதன் காரணமென்று அறிவதில் ஏதும் இடரிருக்காது.  அம்பலம் >  அம்பரம் என்று திரியும்.   எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் >  (  இடைக்குறைந்து )  சிதம்பரம் ஆகும்.

இறைவன் உலகமுழுதும் நிறைந்துள்ளான்.  " எங்கும் நிறைந்தவன், எங்கோ மறைந்தவன்" என்றும் பாராட்டிப் பாடுவதுண்டு. " எங்கும் உனைநான் தேடி அலைந்தேனே" என்று மனம் கவல்வதுண்டு.  (கவலை கொள்வதுண்டு).  மறைவாய் இருத்தலாவது இறைவனின் ஐந்தொழில்களில் ஒன்று.  ஐந்தொழில்களாவன:  படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தலாம்.

இனி, அம்பரம் என்பது கோவிலையே யன்றி எப்பொதுமன்றத்தையும் குறிப்பதும் உண்டு.

அம்பர் என்ற சொல்லில்  இரு துண்டுச் சொற்கள் உள்ளன.  அம் என்றால் அழகு.  அம்மை அழகு.  பர் என்பது  பர (பரத்தல், பரவுதல் ) என்பதன் கடைக்குறை. பரம்  பர் ஆனது.   இறுதி அம் கெட்டது (௳றைவுற்றது).  இவ்வாறு நோக்குங்கால்  அழகிய பரந்த இடமென்றும் பொருள்படும்.    கோவில், மன்றம் முதலியன இதற்குத் தகுதிபெற்று நிற்பனவாகும்.   வாசனை என்னும் மணப்பொருளும் பரவுதற்குரியது.    ஆகவே வாசனை என்ற பொருளும் சொல்லினின்று புறப்பட்டது ஏற்புடையதே ஆகும்.

பாவச் செயல்களும் பரவக் கூடியவையே.  காரணம் அவற்றைச் செய்யும் தீயவர்கள் சிந்தித்துச் செய்பவர்கள் அல்லர். ஒருவன் செய்த பாவச் செயலில் இன்னொருவன் கேட்காமலே கலந்து மகிழ்வதைக் காணலாம்.  பாவுதல் என்றாலே பரவுதல் என்பதே பொருள்,.  நெசவில் நெட்டாக விடும் நூலைப் பாவுநூல் என்பர்.  நடவு நடுதலில் பாவுதல் என்ற சொல் பயன்படுவதுண்டு.  பரவு >  பாவு > பாவம் என்பது காண்க. நல்லனவற்றை அவ்வளவு விரைவாக யாரும் கைக்கொள்வதில்லை.  ஆன்மாவிற்குக் கெடுதல் பரவுவதாலும் அது பாவம் எனப்படும்.  தீமை, கருமம் முதலியவை செயல்  இன்று ஆவியையும் பற்றி  அதன் துய்மையில் பரவித் தீய்த்துக் கெடுக்கிறது.   இக்கருத்துண்மையாலும் பரவுதற் கருத்து வருதலை அறிக.

வாசனை பரவும் பொருளாவதை,   புனுகு,  பொன்னம்பர்,  பூவம்பர் பொங்கவே என்ற தொடர்வாயிலாக உணர்க.    புழுகு >  புனுகு.  பொங்குதல் -  பரவுதல் வகை.

ஓர்க்கோலை என்ற கடல்படு திரவியமும் அம்பர் எனப் பெயர் பெறும்.  பிசின் நெகிழ்ந்து  இழைந்து பரவுதல் உடைத்தாதலின் அம்பராகும்.

ஆனால் சிதம்பர் என்ற சொல் உயர்வற்ற தீயோரைக் குறித்தற்குரிய சொல். இது சிதம்பரம் என்ற சொல்லின் கடைக்குறையன்று.  ஆதலின் சிதம்பரம் என்ற சொல்லைச் சிதம்பர் என்று குறுக்குதல் தவறு.  சிதம்பர் என்பது சிதை+வம்பர் என்ற இருசொற்களின் மரூஉ  ஆகும்.

மனிதனுக்குரிய நலங்கள் சிதையப்பெற்றோராய்  வம்பராய் உலவுவோருக்கு அது பெயராகிறது.

சிதை வம்பர் >  சிதவம்பர் > சிதம்பர் என்றாகும்.  சிதை என்பதில் ஐகாரம் குறுகி, வகரமும் கெட்டு அமைந்த சொல். ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியர் காலத்தின் முன்பிருந்தே உள்ளது.  வேலவன் > வேலன் என்பதில் வகரம் இயல்பாகவே மறைந்தது.  [ வேல்+ அ + அன் ;  வேல் + அன்]  இது ஒரு முயற்சிச்சிக்கனம் ஆகும்.  இதைப் பகவொட்டு என்பதும் சரியாகும்.

அறிக மகிழ்க.'

மெய்ப்பு பின்

உலகின் சில நாடுகளில் இப்போது மீண்டும் மகுடமுகித் தொற்று மிகுதல் கவலையை அளிக்கிறது,

முகக் கவசம் அணிந்து

நோய்க்கு இடம் கொடுக்காமல் இருங்கள்.


குறிப்புகள்:

1.  திர+ இ+ அம் = திரவியம். திரண்டுவந்த போற்றத்தக்க பொருள்.  இ இடைநிலை. அம் விகுதி.   இயம் ஈறு என்றும் கூறலாம்.  எடுத்துக்காட்டு:  நாகமணி.  திரு இயம் > திரவியம் என்பாரும் உளர்.




 






வெள்ளி, 9 ஏப்ரல், 2021

ஒரு தனிவண்டி பொது இடமாகிவிடும்

 தனி ஒருவராகவே நீங்கள் உங்கள் உந்துவண்டியை பொது வீதியில் ஓட்டிச் சென்றாலும்,  உங்கள் வண்டியும் பொது இடமாகிவிடும். இது எப்படி முடியும் என்பதைத்  தில்லியில் உள்ள ஒரு நீதி மன்றம் விளக்கி உள்ளது.  வேறு முறை மன்றங்களும் இவ்வாறான முடிவிற்கே வந்துவிடவும் கூடுமன்றோ? ஆகையால் இதைப் படித்து எவ்வாறு என்று தெரிந்துகொள்ளுங்கள்:


https:// www.google.com./amp/s/www.hindustantimes.com/cities/delhi-news/private-car-is-a-public-place-masks-mandatory-even-when-driving-alone-delhi-hc-101617775284405-amp-html

 

புதன், 7 ஏப்ரல், 2021

Stroke patient recovered பங்குனியின் பரமன் நம்பிக்கை பரவியது.

இல்லை என்பாரை ஏன் நம்ப முடியவில்லை தெரியுமா?  
(எண்சீர் ஆசிரிய விருத்தம்ப்

பங்குனியில் பரன்நம்பிப் பணிந்து பாடி

பரவினரே பல்லோராம் தெரிந்தின் புற்றோம்,

தங்கினவர் எங்கணுமே சிவனே ஆவார்

தக்கபெயர் அன்னார்க்கு முருகன் அம்மன்

எங்குநின்ற எத்தெய்வம் எதுபேர் என்றால்

எப்பெயரும் அவராவார் பெயரும் இல்லை!

பொங்குபெயர் பலப்பலவே புகல்வர் எல்லாம்

பூதலத்தில் ஒருபேதம் இலதே கண்டோம்.


உத்திரத்தில் உள்ளபெயர் சொல்லி வேண்டி

ஓரிரவில் உயர்நன்மை ஒன்று கண்டோம்

இத்தலத்துச் சிவன்செய்த விந்தை: மண்டை

இழைரத்தக் குழைதெரித்து மயங்கி வீழ்ந்தார்

மெத்தைவிட்டு மேலழுந்தார் மெல்லத் தேர்ந்தார்

மெல்லமெல்ல நலப்பயிற்சி மேற்கொண் டாரே

இத்தகுமோர் நன்மைபல நிகழ்வ தாலே

இல்லையென்று சொல்லிடுதல் கொள்ளோம் நாமே.


We are not asking you to believe this God. You just pray to your own god to which you have been praying. 




This below is a copy only. For the time being you can view either.


 Same video. The best will be retained and the other later removed.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

இலட்சியம் - சொல் பொருள்

ஒரு மனிதன் எங்குச் சென்றாலும், சில மணிநேரங்கள் இருந்து அங்கு ஏதேனும் கவனிக்க வேண்டியிருந்தால் கவனிப்பான். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அப்பால் அவன் அங்கிருக்க முடிவதில்லை.  அப்புறம் தன் வீட்டு நினைப்பு வந்துவிடும். வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிடுவான். அவன் இந்தியனாயிருந்தாலும் சீனனாய் இருந்தாலும் வெள்ளைக்காரனாய் இருந்தாலும் இதுவே ஒரு பொதுவிதியாய் அமைந்துவிடுகிறது.  வெளியில் எதைச் செய்தாலும் விட்டுத் திரும்பிவிடுவதால் விடு என்ற சொல்லிலிருந்து முதனிலை நீண்டு வீடு என்ற சொல் அமைந்துவிடுகிறது. ஒரு கோழி எங்கெங்கு இரைதேடி அலைந்தாலும், பொழுதுபோன நிலையில் கோகோ என்று கத்தியபடி தன் குடாப்பை நோக்கித் திரும்பிவிடுகிறது.  பழங்காலத்தில் இந்தக் குடாப்புகள் குடலை வடிவத்தில் இருந்தனபோலும்.  இப்போது கோழி வளர்ப்பவர்கள் அதற்கு வசதியாக ஒரு புறம் கதவுள்ள ஒரு பெட்டி வடிவில் செய்து கோழிகளுடன் குலவும் அன்பைக் காட்டுகின்றனர்.  "உயிர்களிடத்தில் அன்பு வேணும்" என்பது பாரதியின் கருத்து.

மனிதனுக்குக் குறிக்கோள் உண்டா? இலட்சியம் உண்டா?  வீட்டுக்கு வெளியில் தாம் அடைவதற்குரியவை இவை.  வீட்டுக்குள் தங்கித் தன் ஓய்வினைப் பெறுவதுதான் உண்மையான இலட்சியம் என்று சொல்லவேண்டும்.  

இதனால் அலுவகங்களில் "Home , sweet home"  என்று சொல்லிக்கொண்டு புறப்படும் ஒரு "பண்பாடு" நிலவுகிறது. நம் திரைக்கவிகளும்:

"சண்டை முடிஞ்சி போச்சி நம்ம நாட்டிலே,

சல்தி போய்ச் சேர்வம் நம்ம வீட்டிலே "  என்றும்,

"வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே,

நாடி நிற்குதே அனேக நன்மையே"  என்றும்

எழுதியுள்ளனர்.  நன்மையெல்லாம் தருவது வீடு போலும்.

நரிகளுக்காவது இருப்பதற்கு ஒரு வளையிருக்கிறது என்றாராம் ஏசுபிரான். எங்கு சென்றாலும் அந்த வளைக்குள் வந்து ஓய்வு பெறும் நரி!!

கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என்ற பழமொழியானது ஒரு மனிதனின் வாழ்வில் இரு முன்மை வாய்ந்த இலட்சியங்களைக் குறிக்கிறது.

கல்யாணம் பண்ணுதல் தன் மனைவியோடு நீங்காமையையும்  வீடுகட்டுதல் தன் வீட்டுடன் நீங்காமையையும் அடிப்படையாக உடையன.

இங்கு ஆய்வு செய்யப்படுவன,  நெருக்கம், நீங்காமை, மாறாத் தொடர்பு ஆகியவற்றை அடிநிலையாகக் கொண்ட சொற்களை முன்வைப்பன ஆகும்.

நெரு நரு என்ற அடிச்சொற்களை நன் கு அறிந்துகொள்ளுங்கள்.

தீப்பற்றியபின் நெருப்பு எரிகிறது.  எரிதலாவது,  பொருளழிவில் தீவளர்தல். எடுத்துக்காட்டு:  பஞ்சு அழிந்து எரிகிறது. பஞ்சு தீக்கு உணவு.  எரிகையில் இடையீடின்றி எரிதலை ( அதாவது எரிநெருக்கத்தை )  நெருப்பு என்பது குறிக்கிறது. எரியுணவு தீர்ந்துவிடில் இடையீடு ஏற்பட்டு நெருப்பு அணைகிறது.

நெருங்குதற் கருத்தை உணர்த்தவே இதை விரித்து எழுதுகிறோம்.  நெரு > நெருப்பு.  நெரு> நெருங்கு.  அடுத்தடுத்து இல்லாவிடில் நெருப்பு, பற்றும் இயல்பு குறைந்துவிடும்.

ஆதிகால மனிதன், அடுத்துள்ளதையே தனது குறியாகக் கொண்டான்.  அடுத்திருந்த மரத்தின் கொய்யாவை அடைய விரும்பினான்.  அவன் குறி, இலட்சியம் அதுதான். மனம்மட்டும் அறிந்த திடப்பொருண்மை அற்ற இலட்சியங்கள் அவன் காலம் செல்லச்செல்ல உணர்ந்துகொண்டான்.  எல்லாம் படிவளர்ச்சி தான். அதாவது படிகள் பல.

இல் = வீடு. அல்லது அடைய முன் நிற்கும் குறி.

அடு  -   நெருங்குதல்.

து > சு: -  இடைநிலை.

இ :  இடைநிலை. இங்கு என்றும் பொருள்.

அம்:  அமைவு குறிக்கும் விகுதி.

இலடுத்தியம் > இலடுச்சியம்.   தகர சகரப் போலி.

எதைக் குறித்துப் பேசினார் பேச்சு வழக்கில் எதக் குறிச்சுப் பேசினார் என்று தகரம் சகரமாகும்.  தகரம் சகரமான சொற்கள் பலவுள. பழைய இடுகைகளிற் காண்க.

இலடுச்சியம் > இலட்சியம் :   குறியை அல்லது வீட்டை அடுத்துச் செல்லுதல்..

கோட்டுக்குறி அமைத்தவன் இலக்குவன்.

இழு என்ற சொல்லுக்கு முன்னோடி  இல்.  இல் > இலு > இழு.  ஒ.நோ: பலம் > பழம். 

இல் என்பது இடன் குறிக்கும் உருபு.    கண்ணில் வழியும் நீர். (ஏழாம் உருபு).

நன்னூல் 302.

இலடுச்சியம் என்பதில்  டுகரம் டகர ஒற்றானதே திரிபு.

அமைப்புப் பொருள்:  ஓர் இடத்தை அடுத்துச் செல்லுதல்,

அல்லது அவ்விடத்தை அடைதல்.

அடு > அடுத்தல். (வினையாக்கம்)

அடு > அடை > அடைதல் ( வினையாக்கம்).

அடு> அட் ( சொல்லாக்கப் புணர்வின் குறுக்கம் அல்லது அடிச்சொற்குறுக்கம்)


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்

இவற்றையும் ஒப்பிட்டுக் கண்டுகொள்க:

விழு + பீடு + அணன் =   விழுமிய பீடு  அணவிநிற்பவன்.  அதாவது சிறந்து உயர்வினை உடையவனாய் இருந்தவன்.

விழு = சிறந்த.

பீடு+  மன் > பீடுமன் >  பீமன்  (  இடைக்குறை - டு).  பெருமை உடைய மன்னன்.

கேடு  + து >  கே(டு) + து >  கேது.   கிரகப் பெயர். (கோள்.  ஆனால் கிரகம் என்பது வீடு என்று பொருள்தரும் சொல்).






வெள்ளி, 2 ஏப்ரல், 2021

நரி - பெயர் அமைவு. அடிச்சொல்: நரு இன்னும்...

 நரி என்னும் சொல் நாய் போலும் ஒரு விலங்கைக் குறிப்பது. இது காட்டுவிலங்காகும்.  இதை விலங்கு காட்சி சாலைகளிலும் வைத்திருக்கிறார்கள். அன்றி வீடுகளில் யாராலும் வளர்க்கப்படுவதில்லை என்று தெரிகிறது.

நரிகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. இதற்குத் தமிழில் ஏற்பட்ட பெயரும் இதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. இது தந்திரமுள்ள விலங்கு என்பர். கதைகள் பலவற்றில் நரி தவறாமல் வந்து சிறு பிள்ளைகளை மகிழ்விக்கிறது.

நரி என்ற சொல்லின் அடிச்சொல் நரு என்பது.   நெருங்கு என்ற சொல்லில் உள்ள நெரு என்ற அடிச்சொல்லும் நரு என்பதும் தொடர்புள்ளவை.

நரு >< நெரு.

நருள்  -  மக்கள்நெருக்கம் .  " நருள் பெருத்த ஊர்".

நரு >  நரி :  அதுபோலும் விலங்குடன் நெருக்கமாக (கூட்டமாக) வாழும் விலங்கு.

நரு >  நரன்:  மனிதன்.  ( மனிதனும் தன் போலும் பிறருடன் நெருங்கி வாழ்பவன் தான். அதனால்தான் நரன் என்னும் இப்பெயரைப் பெற்றான்)

gregarious  என்னும் ஆங்கிலச் சொல் இதை விளக்கவல்லது.

Man is a gregarious animal. 

நரு + இ =  நாரி.  ( பெண் மனிதர்).  முதனிலை (முதலெழுத்து நீண்டு அமைந்த சொல்..  இவ்வாறு நீண்ட சொற்களைப் பழைய இடுகைகளில் காண்க).இங்கு நரு என்னும் அடிச்சொல் மாற்றுப்பாலானுடன் நெருங்கி வாழ்தலைக் குறிக்கும்.  

பரு + இய > பாரிய  என்ற சொல்லிலும் இங்ஙனம் சொல் நீண்டது.

பரு > பார் ( உலகம் )  இதுவும் நீண்டமைந்த சொல்லே.  பர > பார் எனினுமாம்.

பரு > பருவதம் > பார்வதி  -  நல்ல எடுத்துக்காட்டு.

---  என்று சில காண்க.

ஒன்றை நெருங்கி இன்னொன்று நிற்றல் " நிர >  நிரை" எனப்படும்.

நிர >  நிரை:  ( நிரையசை -  யாப்பிலக்கணம்).

நிர >  நீர்  ( இதன் அடிப்படைப்பொருள் இடையில் விலகல் எதுவுமின்றி ஒன்றாகி நிற்கும் பொருள் என்பதுதான். அதனாலேதான் இப்பெயர் இதற்கு.

இக்குறளை நினைவிலிருந்து சொல்கிறேன். சரியாகச் சொல்கிறேனா என்று நீங்கள்

பார்த்தறிக.  

நிரைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின் நீர பேதையார் நட்பு.

இது இணையத்தில் கிடைத்த மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மை போல ஒருநாளைக்கொருநாள் தேயும், பேதையார் கொண்ட நட்பு என்றவாறு.

இஃது அறிவுடையார் நட்பு வளரும் என்றும் அறிவில்லாதார் நட்புத் தேயும் என்றும் கூறிற்று.

நான் எழுதிய குறள் சரி என்று பார்த்துக்கொண்டேன். நன்றி.

அழகான குறள். பொருளும் மலைபோல் சிறந்தது.

நிரத்தல் என்ற வினையின் பொருளும் அறிந்துகொள்ளுக.

உணவை நிரந்து பரிமாறு,  நிகழ்ச்சி நிரல் என்ற வழக்குகளை நோக்குக.

நுல் அடிச்சொல்.  நுல் > நில்.  இடம் நீங்காமை குறிக்கும்.  நுல் > நூல். ( நீங்காமல் செறிவுமாறு திரிக்கப்பட்டது ).

நுல் > நுர் > நுரை:  நீங்காமல் (ஓட்டி)  காற்றுப்புகுந்து அடைவுடன் தோன்றி நெருங்கி நிற்பது.

நரு > நரல்: இது வினைச்சொல்லாக "நரலுதல் "  என்று வரும்,  இது ஒலித்தல் என்று பொருள்பட்டாலும்,  பல ஒலிகளின் கலப்பையே சிறப்பாகக் குறிப்பது. இதற்கு எடுத்துக்காட்டு  தேனீக்கள் என்பர். நரிகள் ஒன்றாகக் கூட்டமாகச் செல்பவை என்றாலும் ஒலியும் ஒன்றாகச் சேர்ந்து எழுப்புவனவே ஆகும். இக்காரணமும் இதற்குப் பெயர் உண்டாகப் பொருந்தும் காரணமே ஆகும்.

நரல்வு என்ற சொல்லும் உள்ளோசை எழுதல் குறிக்கும். ( இசைக்கருவி) 

மனிதனும் ஒலிசெய்யும் திறனுள்ளோனே யானாலும், கூடிவாழ்வோன் என்ற பொருள்கூட்டுதலே சிறப்பு என்று கருதலாம். ஆயினும் இங்கு தரப்பட்ட சொற்பொருள் ஆய்ந்து நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். எனக்கு இரண்டும் ஏற்கத்தக்கனவாகவே தோன்றுகிறது.  எதை ஏற்றாலும் இனிமையே.

மனிதனைப் பலியிட்டுச் செய்யும் யாகம் முன் காலங்களில் நடைபெற்றன. இன்றும் சொந்தப் பிள்ளைகளை நரபலி கொடுத்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.  இது நரமேதம் எனப்படும்.

கடல் எப்போதும் அலைகளால் ஒலிசெய்வதால் அதற்கு " நரலை " என்ற பெயரும் உண்டு.

நரவரி என்பது நரசிங்கம் என்று பொருள்தரும்.   நர + அரி.  இதுபின் நரகரி என்று திரிந்தது.  வ> க திரிபு,

இவண் அதிகமிருப்பதால் தளர்ச்சி உண்டாக்காமல் இத்துடன் நிறுத்திப் பின்னொருநாள் தொடர்வோம். (பின்னூட்டம் மூலம் கேட்டுக்கொண்டாலன்றி,  ஒரே தொடர் சலிப்பை ஏற்படுத்தக்கூடுமாதலால் சில காலம் சென்றபின்பே அதை மீண்டும் மேற்கொள்வோம் ).

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்



 






Devotion is very much alive as you see (Panguni Uthiram festival)