சனி, 3 நவம்பர், 2018

காமியம் காமுகன் காமித்தல்

"கலகம் மூலம் காமினி மூலம் "

என் கின்றது ஒரு மலையாளச் செய்யுள். கலகங்கள் எல்லாம் காதலி மனைவி போன்றவர்களால்தாம் வருமாம்.  கணவர்களால் வரும் கலகங்கள் பற்றி மனைவிமார் யாதும்  செய்யுள் இயற்றவில்லை போலும்.

காம் காதல் என்ற சொற்கள் முன்னர் எம்மால் விளக்கப்பட்டன.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலங்களிலும் காடுகளில் திரிந்த காலங்களிலும் அவன் வேட்டையில் வென்றுவந்த ஊனையும் பழங்களையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  கடினப்பட்டுக் கொணர்ந்த இவைதம்மைப் பிறர் முயற்சி யாதுமின்றி எடுத்துச் செல்வதை விரும்பவில்லை. பொருட்களைக் காத்தல் தொடங்கவே  தனியுடைமை தொடங்கிற்று.  அவன் கொணர்ந்தவற்றை அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் உண்டனர். மிச்சம் மீதாரியைப் பக்கலில் வாழ்ந்தோர்க்குக் கொடுத்திருப்பான். வைத்திருக்க இயலாதவை பல. கெட்டழிந்திடுவன ஆம். இப்படிப் பொருட்பகிர்வு அடிகோலப்பட்டது.

வைத்துப் போற்றத்தக்க வைத்து > வத்து ஆனது.  பின் அது வஸ்து என்று உருமாறி வழங்கியது. பொருட்களை மட்டுமின்றித்  தம் பெண்டிரையும் காத்தனன். அடுத்தவன் அதே பெண்ணை விரும்பிய காலை அவனும் அவளுக்குக் காவலை வழங்கினான்.  காதல் என்ற சொல் அப்படிக் காப்பதையே குறித்தது.  கா என்ற அடிச்சொல்லில் அமைந்த காம், காமம் (காம்+அம்) என்பவும் அதே காத்தலடியாக அமைந்த சொற்களே. தம் குகையினரோ வீட்டினரோ வழங்கிய காத்தல் ஆகிய காவல் விரிவுற்றுப் பிறனும் விரும்பி வந்து காக்கத் தொடங்கிய ஞான்று  அதுவே பிற ஏம் >  பிறஏமை > பிறேமை > பிரேமை ஆனது. பிற என்பது அடுத்துவந்தவனையும் ஏம் என்பது காவலையும் குறித்தது. இவன் தான் இன்று காதலன் கணவன் என்று அறியப்படுகின்றான்.   அகர வருக்கச் சொற்கள் ( அதாவது அ, ஆ, இ , ஈ என்று தொடர்வனவாகிய எழுத்துகள் அல்லது ஒலிகளை யுடைய சொற்கள் ) பின்னர் சகர வருக்கமாகின என்பதைப் பலமுறை கூறியும் கூவியும் உள்ளோம் என்பதை மறவாதீர்.  அதன்படியே  ஏ என்று  தொடங்கியவை சே என்று திரியும். திரியவே,  ஏமம் என்ற காவற் பொருட் சொல்  சேமம் என்று திரியலாயிற்று. இதுவே பிற்காலத்து  க்ஷேம என்று மெருகு பூசிக்கொண்டதென்பதை அறிவீர்.

காமினி என்றது காம் என்ற அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.  காம்+இன்+இ என்பதே இதிற் புனைவு.  ஒரு பொருள்மேல் ஆசை யுறுதல்  காமியம் எனப்படும்.

நமது நூல்கள் :

யாமெனும் அகங்காரம்
காமியம் வெல்க

என்று பறைசாற்றும்.  காமம் இதில் அமையுமாயின் இதுவே காமியம்.

காம்:  விழைதல்.  (  அடி )
இ   - இங்கு. சுட்டு இடைநிலை.
அம் - அமைதல், அல்லது இறுதிநிலை (விகுதி).

ஒன்றை நோக்கி மனம் அசையுறுவதே  அசை > ஆசை என்று வருவது.  ஆசை என்பது மன அசைவு என்று பொருள்படும்.

காமுகன் என்போன் காமத்தை உகந்து நிற்போன்.  உகத்தல் விரும்புதல்.
காம் + உக + அன் என்று புணர்க்க.    காமத்தையே முகமாய்க் கொண்டவன் என்று அணியியல் முறையிலும் சொல்ல இப்பதம் வழிவைத்துள்ளது.

நம் சைவ நூல்கள் காமியத்தைக் குற்றமாகக் கூறும். யாமெனலையும் காமியமும் வெல்வீர்.  வெல்லான் கீழ்த்தரத்து உள்ளான்.

காம் + ஈ என்பது காமீ என்று வந்து காமம் ஈதல் என்று பொருடரும்,  ஆயின் அது பிறப்புக்கணிப்புகளில் ஏழாமிடம் குறிக்கும்.

காம் > காமி > காமித்தல் என்பது வினைச்சொல். விரும்புதல்.

பின் சந்திப்போம். அளவளாவுவோம்.

திருத்தம் பின்.



கருத்துகள் இல்லை: