திங்கள், 12 நவம்பர், 2018

இன்று நல்ல மழை; இனிய குளிர்.

நிலம்குளிரப் பெய்மழையால்
  நெஞ்சும்  குளிர்ந்ததே-----  இங்கு
நேற்றுவரை மேய்ந்த குருவி
  எங்கு  மறைந்ததோ.

கலங்கள்கொண்டு வெளியில்இட்டால்
  நிறைந்து  வழிந்திடும் -----வீட்டுக்
குழாய்கள் நீரைத் தந்த தாலே
 கண்டு களிக்கிறோம்,

பனிபடர்ந்த  நாட்டில்போல
 இனிய குளிரிதே ---- குளிர்
ஊட்டு கருவி ஓட்டமின்றி
 உறங்க முயல்கிறோம்,

எண்ணம்ஓடித்  தண்மைதன்னில்
கரைந்து போனதோ --- கவி
பண்ண வேண்டும் என்னில் ஈண்டு
வரிகள் வேணுமே!

உறக்க தேவி பதுக்க வந்து
என்னை  அழைக்கிறாள்----நேரம்
இருக்கும் நாளைக் காலைவந்து
கவிதை விளைக்கிறேன்,

பதுக்க -   மெல்ல.

கருத்துகள் இல்லை: