சனி, 27 ஜூலை, 2019

வினியோகம் ஓர் அழகிய திரிபு.

இன்று வினியோகம் என்ற சொல்லைப் பற்றிய சிந்தனையில் சிறிது ஆழ்வோம். இதைப் பற்றி யாமெழுதியது உண்டெனினும் இது இப்போது ஈண்டில்லை யாதலின் மீண்டும் பதிவேற்றி மகிழ்வோம்.

வியன் என்பது ஒரு தமிழ்ச் சொல். இதைச் சுருங்க விளக்க முயல்வோம். இது விர் என்னும் அடிச்சொல்லிலிருந்து விய் என்று திரிந்து  அன் என்னும் விகுதி (மிகுதி) பெற்று  வியன் என்று வரும்.

விற்றல் ( வில்+ தல் ),   விற்பனை (  வில்+ பு + அன் + ஐ )  என்ற சொற்களில் வில் என்று வரும் அடிச்சொல்,  பின்னர் விர் என்றும் அதன்பின் விய் என்றும் திரியும்.   ஓர் இடத்திலுள்ள ஒரு பொருளைப் பிற இடங்களிலும் கொண்டுசெல்லும் செயலையே " வில் " என்பது குறிக்கிறது.  பணத்துக்காகவோ பண்டமாற்றுக்காகவோ அவ்வாறு கொண்டு செல்கையில் அது வில்> விலை ஆகி, ஒன்றுக்காக மற்றொன்றைப் பெறுதலைக் குறிக்கிறது. இதிலிருந்து "பொருட்பெறுமானம்" உண்டாகின்றது.

விர் என்பது விய் என்று திரிந்து பின் அன் என்ற விகுதி பெற்று " வியன் "  ஆகின்றது.

வில்,  விர், விய் எல்லா உருமாற்றுக்களுக்கும் கருப்பொருள்  விரிவு என்பதே.  வினியோகம் என்பது பொருள் விரிபாடு ஆகும்.  விலைப் பொருட்டாயினும் அன்றாயினும் விரிவே மையப்பொருள்.

இது விரிவு என்னும் பொருளில் தமிழ் நூல்களில் காணப்படுகின்றது.  எம் நினைவுக்கு வரும் எடுத்துக்காட்டு:

விரிநீர் வியனுலத் துள்நின் றுடற்றும் பசி என்ற வள்ளுவனார் வரியாகும். வியன் என்றால் இங்கு விரிந்த என்பது பொருள்.  வியாபித்தல் என்ற புனைவுச் சொல்லும் இதனடித் தோன்றியதுதான்.   வியன் +  ஆ + பி =  விய + ஆ + பி =  வியாபி என்றாகிறது.  0னகர ஒற்றும்  ஆகு என்ற வினையில் கு என்ற நீட்சி விகுதியும் களையப்பட்டுள்ளன.   வியன் ஆகுவித்தல் எனற்பாலதை மடக்கி,  விய ஆ பி (த்தல்)  என்று வேய்வித்துள்ளனர்.  (வேய்தல்:  வேய்> வேயம் > வேசம் > வேஷம்).

வியன் என்பது வினியோகம் ஆவது:

வியன் + ஓங்குதல்.

ஓங்குதல் என்பதை முன் எடுத்துக்கொள்வோம்.

ஓங்கு + அம் =  ஓங்கம்;  இடைக்குறைந்து:  ஓகம்.  ங் என்பது விடப்பட்டது.

வியன் + ஓகம் =  வியனோகம்

இங்கு எழுத்து முறைமாற்று புகுத்தப்படுகிறது.

வியனோகம்  >   வி -ன -  யோகம்.

இது விசிறி > சிவிறி என்பதுபோலும் எழுத்து முறைமாற்று.  இன்னோர் எ-டு:
மருதை > மதுரை.  ( மருத நிலங்களால் சூழப்பட்ட நகரம் ).

வியனோகம் > வினயோகம்.

நன்றாகவே உள்ளது.

இதை எளிதாக்க.  வினியோகம் என்று னகரத்தை  னிகரமாக்குக.  இது ஒலிப்பெளிமை புகுத்தல்.

விற்பனைக்குப் பகிர்தல் முறை என்பதைக் குறிக்க ஒரு சொல் கிடைத்துள்ளது.

வினியோகங்கள் தொடங்கிய காலத்து மனித குலத்துக்கு ஒரு யோகம் உண்டாகியிருக்கலாம்.  பொருட்பகிர்வு உண்டானதால்.  உடற்பயிற்சி மனப்பயிற்சி முதலிய குறிக்கும் யோகம் ஏதுமிருப்பதாய்க் காண இயல்வில்லை.

வியயோகம் என்று வந்திருந்தால் சொல்ல எளிமை இல்லையாகின்றது.  விசயோகம் எனினும் நேரன்று.  ய>ச.

பகிரோங்கம் என்றிருக்கலாம்.  குறுக்கிப் பகிரோக மாக்கலாம்.  ரோகம் வந்துவிடுகிறது.

பகிரோங்கம் என்பதைச் சீனமாக்கினால் " புவே லோங்"  வரை இழுக்கலாம்.
தொல்லை இன்றி. புரியாவிட்டால் விடுக.


வியனோகத்தைக் கொண்டாடுங்கள்.


பிழைபுகின் பின் திருத்தம்




   

வியாழன், 25 ஜூலை, 2019

கேழ்வரகும் கேவரும்.

செந்தமிழ்ச் சொற்களிலிருந்து  நம் பேச்சு மொழி எத்துணை திரிந்துள்ளது என்பதை, ஒப்பிடுங்கால் நாம் கண்டுகொள்ளலாம்.  பல இடைக்குறைச் சொற்களையும் பகவொட்டுச் சொற்களையும் நாம் சுட்டிக் காட்டியபோது இதை நீங்கள் உணர்ந்திருத்தல் கூடும்.

இன்று கேழ்வரகு என்ற பொருட்பெயரை  ஆய்ந்தறிவோம்.  இது  ஓர் உணவுப் பொருள்..  கேழ்வரகு என்பது ஒரு தானியம் அல்லது கூலம்.

விளைச்சலில் அரசுக்கு இறுத்தது போக குடியானவனுக்குத் தனக்கென்று தான் வைத்துக்கொள்வது " தானியம் ".  இஃது ஆங்கிலத்தில் வழங்கும் பெர்சனல் செட்டல்ஸ்,  பெர்சனால்டி முதலிய சொற்களைப் போன்று பொருளமைப்பு உடைய சொல்.  ஒன்றகக் கூட்டிச் சேர்த்து  எடுத்துச் \செல்லப்படும் காரணத்தினால் அதற்குக் கூலமென்றும்    பெயர்.   கு > கூ முதலிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் சில,  ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லப்படும் அல்லது பயன்பாடு காணும்  காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை.  கூ > கூலம்;  கூ> கூ ழ்  ( குழைந்து ஒன்று  சேர்வது ).  சேர்த்துவைத்தாலே கூலம் பொருளாகும்; இறைத்துவிட்டால் அல்லது  கொட்டிவிட்டு அள்ள முடியாவிட்டால் வீண்.   எறும்பு காக்கை குருவிகட்குப் பயன்படலாம்.

கூழ்வரகு என்பதுதான் கேழ்வரகு என்று திரிந்தது என்று அறிஞர் சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இவை நிற்க.

இடைக்குறை என்னுங்கால் கேழ்வரகு என்பது கேவர் என்று பேச்சு மொழியில் திரிதலை நீங்கள் கேள்வியில் உணர்ந்திருப்பீர்கள். இத்திரிபில் உள்ள இடைக்குறையைப் பாருங்கள்:

கேழ்வரகு >  கேவர்.
ழகர ஒற்று மறைந்தது.
வரகு என்பது வர் என்று மாறிவிட்டது.

இதுபோல் வகரத்தின் முன் ழகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்
பாழ் >  பாழ்வம் >  பாவம்.

வரகு என்பது இன்னொரு தானியம்.  அது மென்மையும் வழவழப்பும் இல்லாமல்  (உண்ண அல்லது தடவ )  வரவர என்று இருப்பதால் அது வரகு என்று சொல்லப்பட்டது.
வறுத்ததும் கொஞ்சம் வரவர என்றுதான் இருக்கும்.   வர -  வற  - வறு - வறட்டு என்ற சொற்களின் உறவினைக் கண்டுகொள்க.  வரகை அறிந்தபின் தமிழர் கேழ்வரகை அறிந்தனர் என்பது தெளிவு.

கேழ்வரகு என்ற சொல்லமைப்பில் கு என்னும் இறுதி விகுதியை நீக்கிய பேச்சுமொழி,  வர என்று எச்ச வடிவிலின்றி வர் என்று இறுதிசெய்துகொண்டது திறமையே ஆகும். சொல்லிறுதிக்கு எது ஏற்றது என்பதைப் பேசுவோரும் அறிந்துள்ளனர்.  புலவர்பெருமக்கள் மட்டும் அல்லர்.

தட்டச்சுப் பிழை - பின் திருத்தம்.



செவ்வாய், 23 ஜூலை, 2019

மா மை மயிர் மயில்

இன்று மை,   மா,   மயிர் என்ற  சொற்களைத் தெரிந்தின்புறுவோம்.

மை என்பது பல்பொரு ளொருசொல் ஆகும்.  இதன் பொருண்மையில் கருப்பு   என்பதும் ஒன்றாம்.

" மையிட்ட கண்மலர்ந்தாள்"  என்று கூறின்,  கருப்பு மையிட்ட என்பது பொருளாகக் கொள்ளின் சரியாகும்.  இப்போது வேறு நிற மைகளும் உண்டெனினும் இந்தச் சொற்றொடர் போந்த காலத்து இவை கவனத்துக்கு வராமை உணர்க.

மா என்பதற்கும் வேறு பொருள் உண்டெனினும்,   மா நிறம் என்பதுபோலும் தொடரில் கருமையையே குறிக்கும்.   ஆனாலும் பேச்சு வழக்கில் இஃது முழுக் கருமையைக் குறித்திலது என்பர்,  சற்று வெண்மையொடு  பெரிதும் கருமை கலந்த நிறத்தையே குறிக்குமென்பர்:  இதையும் மனத்தில் இருத்திக் கொள்வீர்.

மயிர் என்ற சொல்லில் இர் என்பதே விகுதி என்று கோடல் பொருத்தமாம். பகுதியாவது ம என்பதே.

இந்த ம என்பது மா என்ற சொல்லின் குறுக்கமாகும்.

மா என்பது சொல்;  ம என்பது தனித்து வாராமையின் சொல்லன்று என்றும் திரிபிற் போந்த வடிவம் என்றும் கூறுப.

இப்போது யாம் கூறவந்தது:

மா >  மா+ இர் >  மயிர்.   ஈண்டு மா என்பது ம என்று குறிலாய் நின்றமையின் முதனிலை குறுகி அமைந்த சொல்லென்று காண்க.

இதுபோலும்  எடுத்துக்காட்டு வேண்டின்:

சா +  அம் =  சவம் என்பதைக் கூறலாம்.  சாவு+ அம் =  சவமெனினுமாம்.
கூ + இல் =  குயில் என்ற ஒப்பொலிப் பெயரையும் காட்டலாம்.
மா + இல்=  மயில் எனினுமது.

வினைகளும் இவ்வாறு குறுகுதல்:  வா -  வந்தாள். வந்து.  வந்த.

இதுவே விதியாம். இது வாதத்தின் அப்பால்பட்டதாகும்.  பழைய இடுகைகளில் பரந்துபட்டு விளக்கமுற்றுள்ளது இது.

இனி,  மை + இர் =  மயிர் எனினுமாம்.

மயில் என்பது கரும்புள்ளிகள் உள்ள பறவை என்பதாம் சொல்லமைப்புப் பொருள்.

வினையினின்று விகுதியேற்று அமைதலும் பிறவகையினின்று விகுதிபெற்றமைதலும் கண்டுகொள்க.

 பிழை புகின் பின் திருத்தம்,

ஞாயிறு, 21 ஜூலை, 2019

சூது வாது

சூது,  வாது முதலிய சொற்களை முன்னர் விளக்கியதுண்டு எனினும்  அவை ஈண்டில்லை ஆதலின் மீள்பதிவு செய்வோம்.

சூது என்பது  ஓர் இடைக்குறைச் சொல்.  

சூழ்தல் என்பது ஆலோசித்தல்.  சூது விளையாடும்போது ஆலோசித்தே விளையாடவேண்டும்; இன்றேல் தோல்வியைத் தழுவ நேரிடும்.  ஆதலின் சூழ்தல் என்ற வினையடியாய்ப் பிறந்தது இச்சொல்.

சூழ் + து =  சூழ்து >  ( ழகர ஒற்று வீழ்ந்து )  சூது.

சூழ்ச்சி என்ற சொல்லமைப்பும் காண்க.  சூழ் -  திட்டமிடு.

இவ்வாறு ழகர ஒற்று இடைக்குறைந்த இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:

வாழ்த்தும் இயம் >  வாழ்த்து இயம் >  வாழ்த்தியம்.

வாழ்த்தியம் >  வாத்தியம்.

வாழ்த்துவது என்பதை முன்னர் படிப்பறியார் வாத்துவது என்பர்.

பிற்காலத்தில் இச்சொல் வாழ்த்தாத இயங்களையும் உட்படுத்தி விரிந்தது.

ஆனால் வாத்து என்ற பறவையின் பெயர்  வாய் என்பதனடிப் பிறந்தது.

வாய் >  வாய்த்து >  வாத்து.   இதில் யகர ஒற்று வீழ்ந்தது.

இதுபோலும் இன்னொன்று:   வாய் > வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.

வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பவர்.

உப அத்தியாயி > உபாத்தியாயி என்பது வேறு.  குழப்பலாகாது.

வாயினால் பரப்பப்படும் கெடுதல் :  வாய் >  வாய்து >  வாது.

வாயினால் செய்யப்படுவது  வாதம்   :  வாய் >  வா > வாதம்.

வாய்ப்பட்டியை வாப்பட்டி என்பர் சிற்றூரார்.  படிப்பறிவு மிக்க ஊர்களில் இப்போது திருத்திக்கொண்டிருப்பர்.

சூது வாது என்பன இடைக்குறைகள். அறிக.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

ரகமா இரகமா ( இரு அகமா)?

ஈண்டு ரகமென்னும் பதத்தை உன்னி உணருவோம்.

ரகமென்பது  ஆங்கிலத்தில் உள்ள "kind"  ( type )  என்ற பொருளில் பயன்பாடு காண்கிறது.

ஒரு பொருளின் தன்மை என்பது அதன் உள்ளுறைவைப் பொறுத்தது ஆகும். தேனில் உள்ளுறைந்திருப்பது அதன் இனிமை. ஒரு குறித்த கருமஞ்சள் நிறத்தில் குழம்புபோல் சற்று இறுக்கமாக இருக்கும் இளகுநிலை. அதிகம் உண்டால் தெவிட்டவும் செய்வது.

உந்து வண்டிக்கு இடும் உயர்தர உருளையெண்ணெய்   ( சிலிண்டர் எண்ணெய்) தேன்போன்ற நிறத்திலும் குழம்பு வடிவிலும் இருந்தாலும் சுவையாலும் நிறத்தாலும் பயன்பாட்டினாலும் வேறுபட்டதே.  அதன் ரகமே வேறு.

இத்தகைய பொருள் உள்ளுறைவினாலே இரகம் ஏற்படுகின்றது.

தன்மையானது பொருளுடன் இயைந்து நிற்பதால் இதனை ரகம் என்றனர்.  அகத்து இருப்பதாகிய தன்மை.

இங்கு அகமென்றது கண்ணால் அறியத்தக்க உள்ளியைபுகளும் கண்காண முடியாத, பிற பொறிகளால் அறியத் தக்கவுமான உள்ளியைபுகளும் ஆம்.

இதைக் குறிக்க எழுந்த இரகம் என்பது எளிமையுடனமைந்த சொல்லே.

இரு அகம் >  இரகம் என்று அமைத்தனர்.

நம்ம பையன் முருகன் ஒரு ரகம்;  அடுத்த ஆத்துக் கிருட்ணன் இன்னொரு ரகம்.

ஆக ரகம் என்பது வகை எனலும் ஆம்.

திராவிட மொழிகள் ஒரு ரகத்தவை;   சீனத் திபேத்திய மொழிகள் வேறு ரகத்தவை.

ரகத்தை உள்ளுறைவால் உள்ளியைபுகளால் அறிக.

அகத்தில் இருக்கும் தன்மை என்பதை மறுதலையாகப் போட்டு இரகம் என்ற சொல் அமைந்தது.

இப்படித் தலைமாற்றாக அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் விளக்க[ப் பட்டுள்ளன.   அவற்றைப் படித்துத் தமிழுணர்வு மேம்படுத்திக் கொள்வீர். 

7.3.2020 சில தட்டச்சுப்பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வியாழன், 18 ஜூலை, 2019

குணமென்னும் சொல்.

குணம் என்ற சொல்லின் அமைப்பையும் அது எவ்வாறு பண்பு என்னும் பொருளை அடைந்தது என்பதையும் தெரிந்துகொள்வோம்.

குணித்தல் என்பது இதற்குரிய மூல வினைச்சொல்.

குணித்தல் என்பது கணித்தல் என்பதன் வேறன்று.   கணி என்பது குணி என்றும் திரியும்.

ஒரு மனிதன் எவ்வாறான நடவடிக்கைகளை உடையவன் என்பதும் ஒவ்வொரு நிகழ்விலும் எப்படி நடந்துகொள்கிறான் என்பதும் பிறரால் கணிக்கப்படுகிறது அல்லது அளவிடப்பட்டு அறிந்துகொள்ளப்படுகிறது.

வாசலுக்கு வந்து உணவு கேட்டு இரந்து நிற்பவன் ஒருவனுக்கு வீட்டிலிருப்பவன் பரிந்து ஏதேனும் உண்ணக் கொடுக்கிறான். இதைப் பார்ப்பவர்கள் அவன் இரக்க குணம் உடையவன் என்று கணிக்கிறார்கள் அல்லது குணிக்கிறார்கள்.  (  கணி =  குணி முன்னர் கூறப்பட்டது.  )

குணி +  அம் =   குணம்.

அம் விகுதி சேர்க்க,  குணி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு,  குண் + அம் =  குணம்   ஆகின்றது.

குணி என்ற வினைச்சொல்லைத் தருவிக்காமல் குண் என்ற அடிச்சொல்லினின்றே குணம் என்னும் சொல் அமைதல் கூறினும் அதுவும்  ஏற்புடைத்ததே ஆகுமென்பதறிக.

எதையும் கணிப்பதோ குணிப்பதோ கண்களினால் அறிந்துகொள்வதே ஆகும். பின்னர்தான் மனம் அதை உருவப்படுத்துகிறது.  ( மனம் என்ற ஒன்று இல்லை என்பது அறிவியல் ).  உடல் முழுமைக்கும் இரத்தம் ( அரத்தம் )  என்னும் குருதியினை ஈர்த்து வெளிப்படுத்தி ஓடச்செய்யும் இருதயம் (  ஈர் + து + அ + அம் ) மனம் அன்று.   அது அரத்த ஓட்டம் ஏற்படுத்தும் ஓருறுப்பே ஆகும்.  இந்த இருதயம் என்ற சொல்லின் வினையடி ஈர்த்தல் என்பதே.  ஈர் என்பது இர் > இரு என்று குறுகிற்று.  தோண்டு >  தொண்டை,  சா > சவம் என்பன போலுமே ஆம்.

கண்களே  முதல் அறிகருவி ஆதலின்,   கண் > கணி > கணித்தல் என்று சொல் அமைந்தது.   கணித்தல்,  கணக்கு, கணிதம் என்னும் பல்வேறு  சொற்கள்  கண் என்பதனடிப் பிறந்தன அறிக.  கண் என்பதில் இகரமாகிய வினையாக்க விகுதி இணைந்து,  கணி என்பது அமைந்தது.   இகரம் இங்கனம் வினையை உண்டாக்குவது   அளைஇ,  நசைஇ  என்னும் பழஞ்சொற்களின் வாயிலாகவும் அறிந்தின்புறலாம்.

அகரத் தொடக்கத்தன இகர மாதலும்  பின்னது முன்னதாதலும் திரிபில் உளது  என்பதுணர்க.  எடுத்துக்காட்டு:  அண்ணாக்கு -  உண்ணாக்கு;   அம்மா> உ(ம்)மா.

குணம் என்பதுபோல் அமைந்ததே கணமென்னும் சொல்லும்.  கணம் என்பதற்குப் பல பொருளுண்டு.  எனினும் அடி கண் என்பதே.   அதைப் பின்னொரு நாளில் நுணுகி அறிவோம்.

குணமென்பது பல மொழிகளிலும் புகுந்து சேவை கண்ட சொல் ஆகும்.  இதுவும் தமிழர்க்குப் பெருமை தருவதே. 

தட்டச்சுப் பிழை தன்திருத்தப் பிழைகள் பின்னர் கவனிக்கப்படும்.


சனி, 13 ஜூலை, 2019

ஆரூடம் என்பதென்ன? சொல் அமைப்பும் உண்மையும்

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.


வெள்ளி, 12 ஜூலை, 2019

தவளையும் தவணையும்

உலக வழக்கில் தவளைக்கும் தவணைக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான்.

தவளை என்பது தாவித் தாவி நகர்கின்ற அல்லது செல்கின்ற ஓர் உயிரி ஆகும்.  இவ்வுயிரியின் தாவுகின்ற செயலாலே அதற்குப் பெயரும் ஏற்பட்டது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.  நாவு தொங்குவதனால் நா >  நாய் என்று பெயரமைந்தது போலவே தாவுதலால் தவளைக்குப் பெயர் வந்தது. இது ஒரு காரண இடுகுறிப் பெயரே.  தாவும் வேறு எதற்கும் இப்பெயர் பொருந்துமாறு இல்லை.  தாவிச் செல்லும்  பைம்மா என்னும் கங்கருவுக்கு இப்பெயர் வழக்கில் வருவதில்லை.

தாவு + அளை =  தவளை.

இங்கு தாவு  அ என்பன தவ என்று திரிந்தமையின் நெடில் குறிலாய்த் திரிந்தது. இதுபோலும் நெடில் குறிலான இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல நீண்டு செல்லும் உணவு மற்றும் மூச்சுக் குழல்.

அளைதல் என்பது கலத்தலும் தழுவுதலும் குறிக்கும் சொல்.  குதித்துப் பின் தரைதழுவி மீண்டும் குதித்து நகர்தலை உடையது தவளை.

இச்சொல் பின் பிறமொழியாளராலும் ஏற்கப்பட்டுப் புழங்கப்பட்டது.

தவணை என்பது ஒரு செயலை ஒரே அடியாய்ச் செய்துமுடிக்காமல் விட்டுவிட்டுத் தொடர்தல். இன்று ஒரு பகுதி பணம் செலுத்திவிட்டு, அப்புறம் தாவி அடுத்த மாதம் ஒரு தேதியில் அப்பணத்தைச் செலுத்தி மீண்டும் தாவி இன்னொரு மாதத்திற்குச் செல்வதாதல் தாவித் தாவிக் காலத்தை அணைத்துச் செல்லும் முறையாகும்.

தாவு + அணை = தவணை ஆயிற்று.

முன் தந்த சொல்லில் போலவே இங்கும் தாவு  என்ற சொல்லின் முதலெழுத்துக் குறுகிச் சொல் அமைந்தது.

இனித் தவம் என்ற சொல்லுடன் உறவு உண்டோ என்று சிந்தித்துத் தெரிவியுங்கள்.

தவளைக்கும் தவணைக்கும் தாவலில் தொடர்பு உண்டு அன்றோ?

பிழை புகின் பின் திருத்தம்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

பாசுரம்

பாசுரம் என்ற சொல்லை முன் யாம் விளக்கியதுண்டு எனினும் இது வேறு ஒரு வலைப்பூவிலிருந்து போந்தது என்பது நினைவில் உள்ளது. 

பாசுரம் என்னும் சொல் பற்றிய சிந்தனையை ஈண்டு பதிவு செய்வாம்.

பா என்பது பாட்டு என்று பொருள்படும் தமிழ்ச்சொல் தான்.

சுரத்தல் என்பது வெளிப்படுதல் என்று பொருள்படும்.  அதாவது ஒரு பெரும் பற்றாளரின் வாய்மொழி மூலமாகவோ அவர்தம் எழுத்துக்களின்  மூலமாகவே இறைப்பற்று மேலவாக எழுதரும் பாடல்களே பாசுரம் எனத்தக்கவை.

பா+  சுர +  அம் =  பாசுரம்.

இதில் ஓர் அகரம் வீழ்ந்தது  .  சுர என்பதன் ஈற்றில் அகரம்;  அம் என்பதன் தொடக்கத்தில்  ஓர் அகரம்.   ஓன்று மறைதல் வேண்டும்.  இல்லையேல் ஒரு வகர உடம்படு மெய் தோன்றும்.

மறம் > மற + அர் >  மறவர்.    மற + வ் + அர். 

--  என அறிக.

தாயுமானவர்,   அருட்பிரகாச வள்ளலார் ஆகியவர்கள் பாசுரங்களின் ஊற்றுக்கள் ஆயினர்.

எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.

பசுவுக்கும் பழைய புதிய சொற்கள்.

பஷ்த்தவ என்பது பசுவைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் தமிழில் பசு என்ற சொல் வழங்கிவருகிறது. இதற்கு நேரான நல்ல தமிழ் ஆ என்பது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
ஆவிற்கு நீரென இரப்பினும் நாவிற்கு  ........

தமிழிலக்கியத்தில் வரும் இவ்வரிகளைத் தமிழறிந்தோர் மறத்தலும் ஒண்ணுமோ?

ஆவிற்கு இன்னொரு பெயர் உண்டாக வேண்டுமானால் அதை மிக்க எளிதாகவே உண்டாக்கி விடலாம்.  இதோ ஒரு புதிய சொல்:

பால் + சுரப்பது :
பா + சு    =  ப + சு   =  பசு ஆகிறது.

இதற்குப் பா என்ற நெடிலைக் குறிலாக்கிவிடுதலும்,  சுரத்தலுக்கு   ஒரு சு என்ற குறியை மட்டும் இட்டுக்கொள்வதும் போதும். ஒரு புதிய சொல் கிட்டிவிடுகிறது.

சொல்லொன்று புதிது கிட்டினால் சோறு கொஞ்சம் குழம்புடன் கிட்டினது போலுமே யாம்.

ஒரு சொல் வேண்டுமானால் அதைப் படைக்க, ஒரு குறிலை நெடிலாக்கலாம்;  நெடிலைக் குறிலாக்கலாம். ஒரு முழுச்சொல்லை தலையையும் வாலையும் கிள்ளிவிட்டுக் கூடையில் போட்டுக்கொள்ளலாம்.
ஒன்றுமே இப்படி நிகழ்த்தக்கூடாதாயின் எதையும் உண்டாக்க முடியாது.

புதிய சொற்களைப் படைத்தளிக்க முயல்வோர் ஏனிந்தத் தந்திரத்தைக் கையாளவில்லை?   அறியாமைதான்.

பால் தருவது பசு /  ஆ.

பால்த் தருவ    ல் >ஶ்;    தருவ > தவ    ரு > 0
= பாஷ்த்தவ

=  பஷ்த்தவ.

ஆக, இவ்வாறு சொற்களைப் படைக்க அறிவது திறமை ஆகும். 

எழுத்துப்பிழைகள் இருப்பின் பின் திருத்துவோம்.

புதன், 3 ஜூலை, 2019

ஈனம் ( இழிவு) சொல் தொடர்புகள்.

தமிழில் இகரமும் ஈகாரமும் இழிவு காட்டும் பொருளிலும் வழங்கிவந்துள்ளன.   இழிவு என்பது இளிவு என்றும் எழுதப்படுதல் உண்டு.

இழிவு என்பதன் அடிக்சொல் இள் என்பதுதான்.  இள் என்பது பிற்காலத்து  இழ் என்று மாறிற்று. இதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால்:

பா + தாள் + அம் =   பாதாளம்,  இதில் தாள் என்பது தாழ் என்ற சொல்லின் முந்து வடிவம் ஆகும்.   மேலும் தாள் என்பது கீழிருக்கும் கால்பகுதியையும் குறிப்பதை உணர்க.   பா-   பரந்து ,   தாள் = தாழ்வாக அமைந்துள்ள நிலப்பகுதியையே பாதாளம் என்று சொல்கின்றோம்.  கொள்நன் எனற்பாலது கொழுநன் என்று மாறினமையையும் கண்டு தெளிதல் வேண்டும். ழகர ளகர வேறுபாடின்றி வழங்குவனவாய சொற்களின் பட்டியலும் வரைந்துகொள்க.

இர (  இரத்தல் )  என்ற சொல்லும் ஈ  (  இரத்தற்கு ஈதல் ) என்ற சொல்லும் தொடர்புடையன.  இவை இங்கனம் மாறி ஈவோனின் செயலையும் இரப்போனின் செயலையும் முறையே குறித்தன.   இதன் திரிபு செல்நெறியை  இர >  ஈர் >  ஈ என்று அறிக.  ஈர் என்பது இழுத்தல்;  ஈ என்பது மனம் இரங்கித் தருமாறு ஒருவனை இழுத்தல் என்று உணரவே,  இவற்றின் தொடர்பு புலப்படுவதாகிறது.

உயரத்திலிருந்து நீர்போலும் போலும் பொருள்  இறங்குதல் அல்லது கீழிறங்குதல்  இழிதல் ஆகும்.  தாயின் கருப்பையிலிருந்து அவள் ஈனும் குழந்தையும்  அவணிருந்து கீழிறங்குவதே என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும்.  ஈ > ஈன்:   கீழிறக்கம் உணர்த்தின.   இதை உணரவே ஈனம் என்னும் இழிவு குறிக்கும் சொல்லும்  கீழிறக்கமே.  இப்போது ஈன் > ஈனு(தல்) ;  ஈன் > ஈனம் (  இழிவு )  - கீழிறங்கிய தரம் குறிப்பது,  என்ற பொருண்மைச் சாயல்களை உணர்ந்துகொள்க.

சிந்திக்காதவன் இதை உணர வழியில்லை.   ஆதலின் தொடர்புகளை நன்`கு சிந்தித்து ஈனம்  என்பது தமிழிற் போந்த சொல் என்பதை உணர்ந்துகொள்க.
இதை ஹீனம் எனல் மெருகுசேர்த்தலே  அன்றிப் பிறிதில்லை.

பிழைகள் பின்விளை திரிபுகள் பின்  சரிசெய்யப்படும்.