வெள்ளி, 12 ஜூலை, 2019

தவளையும் தவணையும்

உலக வழக்கில் தவளைக்கும் தவணைக்கும் ஒரு தொடர்பும் இல்லைதான்.

தவளை என்பது தாவித் தாவி நகர்கின்ற அல்லது செல்கின்ற ஓர் உயிரி ஆகும்.  இவ்வுயிரியின் தாவுகின்ற செயலாலே அதற்குப் பெயரும் ஏற்பட்டது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.  நாவு தொங்குவதனால் நா >  நாய் என்று பெயரமைந்தது போலவே தாவுதலால் தவளைக்குப் பெயர் வந்தது. இது ஒரு காரண இடுகுறிப் பெயரே.  தாவும் வேறு எதற்கும் இப்பெயர் பொருந்துமாறு இல்லை.  தாவிச் செல்லும்  பைம்மா என்னும் கங்கருவுக்கு இப்பெயர் வழக்கில் வருவதில்லை.

தாவு + அளை =  தவளை.

இங்கு தாவு  அ என்பன தவ என்று திரிந்தமையின் நெடில் குறிலாய்த் திரிந்தது. இதுபோலும் நெடில் குறிலான இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை.  தோண்டியதுபோல நீண்டு செல்லும் உணவு மற்றும் மூச்சுக் குழல்.

அளைதல் என்பது கலத்தலும் தழுவுதலும் குறிக்கும் சொல்.  குதித்துப் பின் தரைதழுவி மீண்டும் குதித்து நகர்தலை உடையது தவளை.

இச்சொல் பின் பிறமொழியாளராலும் ஏற்கப்பட்டுப் புழங்கப்பட்டது.

தவணை என்பது ஒரு செயலை ஒரே அடியாய்ச் செய்துமுடிக்காமல் விட்டுவிட்டுத் தொடர்தல். இன்று ஒரு பகுதி பணம் செலுத்திவிட்டு, அப்புறம் தாவி அடுத்த மாதம் ஒரு தேதியில் அப்பணத்தைச் செலுத்தி மீண்டும் தாவி இன்னொரு மாதத்திற்குச் செல்வதாதல் தாவித் தாவிக் காலத்தை அணைத்துச் செல்லும் முறையாகும்.

தாவு + அணை = தவணை ஆயிற்று.

முன் தந்த சொல்லில் போலவே இங்கும் தாவு  என்ற சொல்லின் முதலெழுத்துக் குறுகிச் சொல் அமைந்தது.

இனித் தவம் என்ற சொல்லுடன் உறவு உண்டோ என்று சிந்தித்துத் தெரிவியுங்கள்.

தவளைக்கும் தவணைக்கும் தாவலில் தொடர்பு உண்டு அன்றோ?

பிழை புகின் பின் திருத்தம்.

கருத்துகள் இல்லை: