சனி, 29 அக்டோபர், 2022

கோயிற் பூசைகளில் உள்ள நடைமுறைகள்:

2018ல் நடந்த மகாசிவராத்திரி தொடர்பான விளக்கம்: 

சிவபெருமானுக்கு ஆண்டுக்கு ஓர் இராத்திரி வருகிறது. இதை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறோம். கடந்த காலத்தில் திருமதி வனஜா அம்மையார் பற்றர் சிலருடன் சேர்ந்துகொண்டு இக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி  முழுமையையும் எடுத்துச் சிறப்புகள் செய்ததுண்டு. இவர்தம் குழுவிற்குத் துர்க்கையம்மன் சுமங்கலிப் பெண்கள் என்று கோவில் அருச்சகர்கள் பெயர் தந்திருந்தனர். இக்குழு ஒரு நாற்பத்தைந்தாண்டுகள் பல இறைவணக்க விழாக்களிலும் பங்கு பற்றியுள்ளது. இதை இறையன்பர்கள் பலர் அறிவர்.

2218 ஆண்டு வாக்கில் இதற்கான கோயில் கட்டணம்  ( சிவராத்திரிப் பகுதிப் பூசை)   ஆயிர சிங்கப்பூர் வெள்ளிகளைத் தாண்டிற்று. இதைக் கீழ்க்கண்ட படத்திற்  காணலாம்.



20.3.2018 கோயில் கட்டணம் செலுத்தியது.

மலர்கள், மலர்மாலைகள், அம்மன் சிவன் அலங்காரங்கள்,  பிரசாதம், அன்னதானம். கோவிற் கட்டிட அலங்காரம், வரிசை எடுக்கும் பொருள்கள், எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும் நாம் செலவு செய்யவேண்டும். இவையும் இன்னபிறவும் கோவில் செய்வதில்லை. இது எல்லோருக்கும் தெரிவதில்லை.  நாமும் சொல்வதில்லை. நன்றி வணக்கம்.

ஐயர்கள் மந்திரம் சொல்ல மட்டும் $1450 போல் செலவு.  அன்றைத் தினம் கோயிலில் எப்போதும் வேலை செய்யும் ஐயர்கள் பற்றாமையால்,  வேறு கூடுதல் ஐயர்களும் தேவைப்படும்.  இதையும் கோயில் சமாளிக்கவேண்டும். சம்பளம் இல்லாமல் யாரும் வேலை செய்வதில்லை.  கோயில் சம்பளமே போதாமையால்,  ஐயர்களுக்குப் பூசைகள் முடிந்தபின்,  தட்சிணை ( $100 - 150), மேள தாளக்காரர்களுக்குத் தட்சிணை, சிப்பந்திகட்குத் தட்சிணை,  வேட்டி - துண்டுகள், பூசைப் பலகாரங்கள் என்று பலவுண்டு.

பூசைகள் செய்யப்போய் செலவுகள் தாங்காமல் ஓடிப்போனவர்களும் உண்டு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:

விமரிசை -  https://sivamaalaa.blogspot.com/2015/08/blog-post_11.html  ( விம்மி -  மிகுந்து;  இசைதல் -  இயைதல், பொருந்துதல்.   வீங்கிள வேனிலும் - (திருமுறைகளில் உள்ள பதப்பயன்பாடு). விம்முதல் - பெருகுதல்..

வெள்ளி, 28 அக்டோபர், 2022

நிர்வாணம் - நிலை, அமைப்பும் பொருளும்.

 இன்று நிர்வாணம் என்ற சொல்லைச் சிந்தித்து அறிவோம்.

இது மிகப் பழைய சொல்லாகும்.  புத்தர்பெருமான் நிர்வாணநிலை பற்றிப் பேசினார். ஆங்கிலத்தில் "நிர்வாணா" என்று இது சொல்லப்படும்.   இதை வரையறை செய்து மதநூல்கள் விளக்கும்.

இஃது விடுதலை பெற்ற நிலையைக் குறிக்கிறது.  மறுபிறவியும் இறப்பும் இல்லையாகிவிட்ட நிலை.  அதாவது கருமம் தீண்டாத தூயநிலை.  இங்குப் பற்று இல்லை.  ஆசை இல்லை.  அதனால் துன்பமுமில்லை.  இந்து வாழ்வியல் புத்த மதத்தையும் முந்தியதாதலின்,  இக்கருத்துகளைப் புத்தர் இந்து மதத்திலிருந்து பெற்றார் என்று ஆய்வாளர் கூறுவர்.

இதனைச் சாத்தனார் மணிமேகலையில்:

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்,

பிறவார் உறுவது பெரும்பே  ரின்பம்,

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றால் வருவது அறிக

என்று எடுத்துக் கூறுமாறு காண்க.   குறளில்:  பற்றுக பற்றற்றார் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  என்று அழகாகக் கூறுமாறும் காண்க.   மண்ணாசை,  பெண்ணாசை , பொருளாசை என்று மூன்று கூறுவர்.  பெண்ணாசை என்றது ஆண் பெண்மீது கொள்ளுமாசையும் பெண் ஆண்மீது கொள்ளுமாசையும் ஆகும். இதை இற்றையர்,  பாலியல் ஆசை என்று கூறுவர்.  ஆசை யாவது,  அசைவற்ற மனம் அசைந்து பற்றுதற் கான மூவாசை ஆகும்.  அசை-   ஆசை , இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயர்.  சுடு>  சூடு என்பது போலுமிதாம்.

பொருள் சொல்லப் புகுந்து நீண்டு விட்டது. என்றாலும் நிர்வாணம் என்பது அறிந்துகொண்டோம்.

நிர்வாணம் எனற்பாலது நிர்மாணம் என்றும் வழங்கும்.  இவ்வடிவமும் அகரவரிசைகள் இயற்றினார்க்கு அகப்பட்டுள்ளது. புத்தகராதிகளில் கிடைக்காமற் போகலாம்.  ஒரு 200 ஆண்டுகட்கு முன் வந்த பதிப்புகளிற் காண்க.

வகரமும் மகரமும்  மோனைத் திரிபுகள் எனப்படும். " மானம் பார்த்த பூமி" என்ற சிற்றூர் வழக்கில் வானம் என்பது மானம் என்று திரிந்து நின்றதும் காண்க. இத்தகைய திரிபுதான் நிர்மாணம் என்ற சொல்லில் நிகழ்ந்துள்ளது என்று அறிக.

மாட்சி அல்லது மாண்பு நின்ற நிலையே நிறுமாண்+அம்  ஆகும். இதுவே மூலம் ஆகும்.  இது திரிந்து  நிறுவாணம்> நிர்வாணம் ஆயிற்று.

முற்றத் துறந்த முனிவர்கள் எதையும் அணிவதில்லை.  இதைப் பின்பற்றியே சமணமதமும் அம்மணம் போற்றிக்கொண்டனர்.  அம்மணம். இச்சொல் இடைக்குறைந்து,   அமணம், பின் வழக்கம்போல அகரம் சகரமாகி  அமணம் > சமணம் ஆயிற்று.  அடு:( அடுதல் ) > சடு> சட்டி என்றாற்போல.  (  சடு+ இ ). டகரம் இரட்டிப்பு.

நிறுமாணம் -  நிறுவாணம் > நிர்வாணம்.

நிர்வாணம் எனின் மாட்சி நின்ற உயர்நிலை.

நின்று மாணுதல் : நிறு மாண் > நிறுமாணம் > நிர்வாணம்.

நிர்வாணா > நிப்பானா  ( பாலிமொழி)

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

மேலும் வாசிக்க:

சமணர்,  ஜெயின்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_3.html

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வெற்றிலை - புக இலை : பெயர்கள்.( புக - தொடங்க)

 வெற்றிலை போடும் பழக்கம் நம் புதிய தலைமுறையினரிடைப் பரவா தொழிந்துவிட்டது.  இது ஒரு வகையில் நல்லதுதான்.  வெற்றிலை பாக்கினுடன் போயிலை என்னும் புகையிலையும் சேர்த்துச் சவைத்து,  வாய்ப்புண் முதலிய இன்னல்களை வரவழைத்துக்கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது. அதனால் சீர்ச்சைச் ( சிகிச்சைச்) செலவுகள் ஏற்பட்டு இழப்பினை உய்த்துவிடும் என்பதும் ஒரு காரணியாகும்.

போயிலை போடுவதால் புற்றுநோய் வருகிறதா என்று ஒரு சிறப்பு மருத்துவ (  ஆய்வாள)ரிடம் கேட்டு உரையாட ஒரு வாய்ப்புக் கிட்டிய காலை, யாம் அவரிடம் கேட்டேம்.   நோய் வந்துற்ற காலை அதற்கு மருந்துகொடுத்து மனிதரைக் காப்பாற்றுவதே வேண்டத்தக்கது,  இந்த ஆய்வெல்லாம் செய்யத்தக்கதாகாது என்று அவர் சொல்லிவிட்டார்.  வாழ்க்கை முழுமைக்கும் போயிலை போட்டு எந்த நோயுமின்றி இறந்தோரும் உண்டு.  சிலகாலமே போயிலை போட்டுப் புற்று நோயில் இறந்தோரும் உண்டு. ஆகவே முடிவாக எதையும் சொல்லமுடியாமையால், இம்மருத்துவர் கூறியதும் ஒருவகையில் சரிதான்.

இந்த இடுகையின் சொல்லாய்வுக்கு இது ஒரு முன்னுரையாகுமா?  ஆமென்றாலும் அன்றென்றாலும் இருக்கட்டும்.  வெற்றிலை என்பது வெற்றி இலை என்பதன் மரூஉ என்றோரும் உளர்.  இந்த வெற்றி என்பது  நீடித்த வாழ்வைத் தரும் வெற்றி என்று பொருள்சொல்ல எம்மிடம் சான்று எதுவுமில்லை.  ஆனால்  பெண்பார்த்து முடிவாகி மணவுறுதி ஏற்பட்ட ஞான்று,  குழுமியிருக்கும் பெரியோர் வெற்றியின் அடையாளமாக வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும் பழக்கம், மலாய்க்காரர்களிடமும் உள்ளதாகும். மலாக்காரர் வழிசார் சீனரிடமு இவ்வழக்கம் உள்ளது. புகையிலைக்கு இப்படி ஒரு சிறப்பு இல்லை என்று தெரிகிறது. வெற்றிலை பாக்குப் போடுவதில், போயிலை போடுதல் ஒரு பிற்சேர்க்கைப் பழக்கம் என்று தோன்றுகிறது.  ஆகவே புகையிலை என்பது புக இலை  ( தொடக்கத்தில் போடும் இலை) அன்று.  புகையிலைதான். புகை என்பது போ என்று திரிந்தது.

வெற்றிலை,  பல பெயர்கள் உடைய ஒரு பொருள்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு எல்லாம் இயைத்து மென்று, வாயானது கனிவாகி விடுகிறது.   இந்தக் கனிவில், நோய்நுண்மிகள் இறந்துவிடுகின்றன.  வாயில் நல் மணம் உண்டாகிவிடுகிறது.  கத்தக்காம்பு உள்படப்  பலவும் இயைந்து கனிவதனால்,  இதற்கு "இயைகனி" என்ற பெயரிருந்தமை அறியலாம்.  இயைகனி என்பது நாளடைவில் இடையிலிருந்த  "யை" என்ற எழுத்தை இழந்து,  "இகனி" என்றாயிற்று.  பிறபாகங்களுடன் கலந்து கனியும் இலை யாதலின்,  " இகனி " என்பது வெற்றிலை என்னும் இலையைக் குறித்தது.

இந்தச் சொல் இன்னும் நம்மிடை உள்ளது.

வெற்றிலை தொடர்பான ஆய்வுகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_10.html

வெற்றிலைப் பெயர்கள்:

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7697.html

கவிதை: - வெற்றிலை:

https://sivamaalaa.blogspot.com/2018/02/blog-post_2.html

வெற்றிலை:  https://sivamaalaa.blogspot.com/2014/05/vetrilai.html

பாக்கு:  https://sivamaalaa.blogspot.com/2021/12/blog-post_21.html

குரங்கு இன்னும் பல https://sivamaalaa.blogspot.com/2021/05/blog-post_27.html

சருகு பிளகு: https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_16.html

தாம்பூலம் https://sivamaalaa.blogspot.com/2021/11/blog-post_11.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தீபாவளி வாழ்த்துகள் ( கவிதை மறுபதிவு)

கவிதை மறுபதிவு. 

உரைநடைக் கவிதை

எல்லா அன்பு நேயர்க'      ளுக்கும் 

யாம் சொல்வோம் இன்பத் தீபஒளி வாழ்த்துகள்.

 உலகப் போர்வரும் என்றுநாம் அஞ்சினுமே 

நிலையில் நின்றிட்ட அமைதிக்கு மகிழ்வோமே. 

தொற்றுகள் மிக்குவந்து தோழர்பலர் சென்றிடினும் 

பற்றுடனே பல்லோர் நல்வாழ்வு தாம்கண்டார். 

இசையொடு கூத்தியலும் இன்னுமுள பல்கலைகள் 

பசைபட்டு மக்களிடைப் பயின்றன ஓர்மகிழ்ச்சி. 

உடல்நலத் துறையிலும் ஊறிவளர் பல்துயர்கள் 

கடலென விரியினுமே காணாமல் தொலைந்தனவாம்.

 இன்னபல இன்னிகழ்வும் இனிதுநம்முன் இட்டுவைத்து 

கண்பலன் காட்டிய தீபஒளிக்  கே-மகிழ்ந்தோம். 

பலகாரம் பலரோடும் நல்லுணவு விளைவுகளால் 

நலம்தந்த தீபஒளி வரவேற்றோம் வரவேற்றோம்

 இறைவற்கு நன்றிசொலும்  இன்பத் தீபாவளியை 

கரைகடந்த மகிழ்வுடனே கால்மாற்றி ஆடிமகிழ். 

பெரியவர் பிள்ளையரும் பெருமகிழ்வு மேம்படவே

 அரிய இந்த நன்னாளில் ஆடியாடி நீமகிழ்வாய். 

வளம்தரும் தீப ஒளி வாடாத நன்மலராம் 

களம்வென்ற களிப்பினிலே களைப்பற்றோய் ஆடிமகிழ். 

நேயர் அனைவருக்கும் தீபஒளி வாழ்த்துகளே 

ஆயும்நற் றமிழால் ஆடியாடிப் பேருவகை. 

வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். 



இதைக் கவிதை வடிவில் (அப்போது) வெளியிட இயலவில்லை. ஆகவே இங்குச் சென்று காணவும். https://bishyamala.wordpress.com/2022/10/24/

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

தீபாவளி வாழ்த்துகள்.

எல்லா அன்பு நேயர்க'ளுக்கும் யாம் சொல்வோம் இன்பத் தீபஒளி வாழ்த்துகள். உலகப் போர்வரும் என்றுநாம் அஞ்சினுமே நிலையில் நின்றிட்ட அமைதிக்கு மகிழ்வோமே. தொற்றுகள் மிக்குவந்து தோழர்பலர் சென்றிடினும் பற்றுடனே பல்லோர் நல்வாழ்வு தாம்கண்டார். இசையொடு கூத்தியலும் இன்னுமுள பல்கலைகள் பசைபட்டு மக்களிடை பயின்றன ஓர்மகிழ்ச்சி. உடல்நலத் துறையிலும் ஊறிவளர் பல்துயர்கள் கடலென விரியினுமே காணாமல் தொலைந்தனவாம். இன்னபல இன்னிகழ்வும் இனிதுநம்முன் இட்டுவைத்து கண்ணில்பலன் காட்டிய தீபஒளிக்கே மகிழ்ந்தோம். பலகாரம் பலரோடும் நல்லுணவு விளைவுகளால் நலம்தந்த தீபஒளி வரவேற்றோம் வரவேற்றோம் இறைவற்கு நன்றிசொல்லி இன்பத் தீபாவளியை ககரைகடந்த மகிழ்வுடனே கால்மாற்றி ஆடிமகிழ். பெரியவர் பிள்ளையரும் பெருமகிழ்வு மேம்படவே அரிய இந்த நன்னாளில் ஆடியாடி நீமகிழ்வாய். வளம்தரும் தீப ஒளி வாடாத நன்மலராம் களம்வென்ற களிப்பினிலே களைப்பற்றோய் ஆடிமகிழ். நேயர் அனைவருக்கும் தீபஒளிhttps://bishyamala.wordpress.com/2022/10/24/ வாழ்த்துகளே ஆயும்நற் றமிழால் ஆடியாடிப் பேருவகை. வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன். இதைக் கவிதை வடிவில் வெளியிட இயலவில்லை. ஆகவே இங்குச் சென்று காணவும். https://bishyamala.wordpress.com/2022/10/24/

சனி, 22 அக்டோபர், 2022

சமுகம்

 சமுகம் என்ற சொல்,  அதன் அமைபு பற்றி , இருவேறு வகைகளில் விளக்கப்பட்ட சொல் ஆகும். நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பிற அமைபுகளும் எடுத்துக்காட்டப்படுதல் உண்டு. ( அமைபு என்ற சொல்லுக்குத் தானே அமைதல் என்று பொருள் கொள்ளவேண்டும்.   " தமிழ் அமைபு"  என்றால் தமிழ் தான் அமைந்த விதம் என்று பொருள். அமைப்பு என்பது வேறு சொல்,  வினைப்பகுதி ஒன்றாயினும்.)


சம் என்பது தம் என்பதன் திரிபு.  தனிச்சிறப்புகள் பல உள்ள சனி என்ற கோளின் பெயரும் இவ்வாறே தனி என்பதனின்று திரிந்ததே. கோள் அல்லது கிரகங்களிலே சனி மட்டுமே ஈசுவரப் பட்டம் பெற்றதென்று கூறப்படுதல் காண்க. இதற்கு இறைமைப் பண்புகள் உள என்று இதன் பொருள்.


சமுகம் என்பதே சொல்.  சமூகம் அன்று என்று ஆசிரியர்கள் சொல்வர்.


மனிதர்கள் பெரும்பாலும் தாம் பிறந்து வளர்ந்த  கூட்டத்தைத் தாம் விரும்பிச் சேர்ந்திருப்பர்.  சிறு கூட்டமாயினும் பல கூட்டங்கள் கொண்ட மாநிலம் ஆயினும்  ஒரு நாடாயினும் தம் கூட்டத்தையே தாம் உகப்பது மனித இயல்பு.  விலங்குகள் இயல்பும் இஃதே ஆகும். தம் + உகம் > சம் + உகம் > சமுகம்  ஆயிற்று.  இஃது ஒரு தமிழ்த் திரிபுச் சொல்.  இது தமிழ்ப் பேச்சு வழக்கிலிருந்து வேறு மொழிகட்கும் சென்றேறிய சொல்.


தமிழே மூலமொழி.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


ஞாயிறு, 16 அக்டோபர், 2022

யாப்பியல்: மூன்றசைகளா நான்கா?

 யாப்பியலில்:

கவிதையை எழுதும்போது   அசை, சீர், தளை, தொடை என்பவெல்லாம் பார்த்து எழுதுவது தமிழ்ப்பாவலர்களின் செயல்பாடு ஆகும்.  புதுக்கவிதைகளில் இவை எல்லாம் இல்லை ஆகையால், இத்தகைய கவிதைகளை எழுதுவோர்க்குத் தொல்லைகள் குறைவு.

" எந்த இடத்திலும் தேடுவானே தேடியது

கிட்டும் வரைக்கும்"

என்ற கவிதை வரியில், 

தேடுவானே என்பது  தேடு- வானே என்று சற்றுப் பிரிந்தொலிக்கிறது.  இதைத் தற்கால முறையில்,  தே- டுவா- னே  என்று (நாலசைகளாக இல்லாமல்) மூன்றே அசைகளாகப் பிரித்து அலகிடலாம். அது நன்றாக இல்லை; காரணம்,  டு-வா என்று ஈரசைகளாகக் கொள்வதே ஒலியமைப்புக்கு ஏற்றதாகும்.  இது இயல்பாகும்.  இந்த வரிகளின் ஓட்டத்துக்கு அஃதே பொருத்தமாகிறது.

தேடு-வானே  (  தே-டு வா-னே ) என்று நாலசைகளாயின, வெண்பாவுக்கு ஒக்குமோ வெனின்,  வெண்பாவில் நாசைச்சீர்களும் வரும் என்று பண்டித  வேங்கடசாமி நாட்டார் முதலிய யாப்பியலறிஞர்கள் கூறுகின்றனர்.  அஃது உண்மையுமாகும். 

ஆகவே தேடு-வானே என்று பிரிந்தொலிக்கும் நாலசைச் சீர் என்று முடித்து வெண்பாவில் நாலசைச் சீரும் வரும் என்று கொள்வது சரியென்று முடிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

சனி, 15 அக்டோபர், 2022

வந்த திருடன்

 வந்த திருடனோ தான்வேண்டும் எப்பொருளும்

எந்த இடுக்கிலும் தேடுவானே  தேடியது

கிட்டும் வரைக்கும் அலசிக் குவித்துவிட்டுக்

கொட்டுமழை   பார்ப்பதில்  லை.


வந்த திருடன் -  திருடும் பொருட்டு வீட்டுக்குள் நுழைந்த திருடன்.

இடுக்கிலும் -  விரிந்த இடமுதல் இடுக்குகள் வரை எங்கும்.

அலசிக் குவித்துவிட்டு -   கன்னா பின்னா என்று அங்குமிங்கும் எறியாமல்

அப்படியே போட்டுவிட்டுப் போய்விடுவான். உங்களுக்கு அடுக்கியா வைத்துவிட்டுப் போவான்?

அவன் வீட்டிலிருந்து ஓடும்போது பெருமழையாய் இருந்தாலும் நிற்கப்போவதில்லை. மீண்டும் வீட்டைத் தூய்மைப் படுத்த மூன்று நாட்கள் தேவைப்படலாம்.

[  நீங்கள் காணோம் என்று தேடிக்கொண்டிருந்த சில பொருட்கள் வெளிப்போந்து கிடக்கலாம்.  எடுத்துப் பத்திரமாக வைக்கவும் ]

திருடர்களும் பொய்யுரையாளர்களும் இவ்வுலகில் உள்ளனர்;  அவர்களுடன்

சமாளித்துத்தான் வாழவேண்டியுள்ளது.

என்ன போயிற்று என்று கேட்கிறீர்களா? ஒன்றும் இம்முறை போகவில்லை.  முன்பு என்னிடம் ஒரு  தங்கச் சங்கிலி இருந்தது. அதை முன்பே ஒரு திருடன்  ஜொகூர்பாரு நகரில் இழுத்துக்கொண்டு போய்விட்டான்.  ஆகையால் இவன் எதையும் அடையாமல் போகவேண்டியதாயிற்று.  தோசை வாங்க வைத்திருந்த வெள்ளி ஐந்து போய்விட்டது.  நல்ல காப்பி ஒன்று ( குளம்பிநீர்)  குடித்து மகிழ்வுடன் இருக்கட்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


 படம் - திருட்டு.


திங்கள், 10 அக்டோபர், 2022

யுகங்கள் காலக்கணக்கு. கிருதயுகம் சத்தியயுகம்.

 இது புதிய காலம் என்று பலர் நினைக்கின்றனர்.  பழங்காலத்தில் நாம் இருக்கவில்லை என்றாலும் அதைப் பற்றி பிறர் பேசக் கேள்விப் பட்டதாலும் சிலர் எழுதுவைத்துவிட்டுச் சென்றவற்றைப் படித்ததாலுமே இவ்வாறு நினைக்கத் தோன்றுகிறது. ஒப்பீடு செய்வதற்கு எந்தக் காலமும் நம் முன் இல்லையென்றால், புதிய காலம், புதிய யுகம் என்றெல்லாம் எண்ணுவதற்கு எந்தக் காரணமுமில்லை.

நம் முன்னோர் நான்கு யுகங்களை எண்ணி உள்ளனர். இவற்றில் முதலாவது யுகம் கிருதயுகம்.  இது 1728000 பகலோன் ஆண்டுகளைக்  ( sun years)  கொண்ட யுகம் என்றனர். இதைப் பற்றிய கதைகள் நம்மிடம் இருக்கின்றன. இதை எழுதியவர்கள் எப்படி இதனை அறிந்துகொண்டனர் என்பது நமக்குத் தெரியவில்லை யாதலால்,  சில அறிவாளிகள் இவை பற்றி அறிய எந்த அளவையும் இல்லை என்பதனால் நம்பவில்லை.  ஆனால் இதை நம்புவோர் உண்டு.  இந்த யுகத்தில் உண்மையே அதன் திறக்குறியாக இயங்கிற்று என்றனர்.  முன்னோர் எழுதிவைத்த -  எழுதிவைக்காத எல்லாமுமா நமக்குத் தெரிந்துவிட்டது?  கொஞ்சம் தெரிந்துகொண்டு எல்லாம் தெரிந்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் இருப்பது முதன்மை.

இவர்கள் சொல்லமுனைவது என்னவென்றால் பொய்யும் வழுவும் மனிதர்களிடைத் தோன்றாத காலமொன்று இருந்தது,  இவை பின்னர்தாம் தோன்றி மக்களைக் கெடுத்துவிட்டன என்பதுதான். இதை நம்புவதற்குக் காரணமுண்டு.  மனிதன் ஒழுங்கான வீடு கட்டிக்கொள்ளும் திறனுமின்றி, முறையான உணவுக்கு வழியின்றி அலைந்துகொண்டிருந்த அந்தப் பழங்காலத்தில்,  காட்டில் கிடந்த அந்த இருண்ட காலத்தில், இவன் பொய்யைப் பேச முனைந்தாலும் அதைக் கேட்பவர் இல்லையாதலால்,  ஏமாற்ற எண்ணினாலும் ஏமாறுவதற்கு ஆளில்லை யாதலால், எல்லோரும் உண்மையைத்தான் பேசியிருக்கக் கூடும்! வேட்டைத் திறமுடையவன் மானிறைச்சியைத் தின்றுகொண்டிருக்கையில், அந்தத் திறமில்லாதவன் எதுவும் எடுபிடி வேலைசெய்து இறைச்சி கிடைக்காவிட்டாலும் தோலை வாங்கிச் சப்பிக்கொண்டிருந்த நிலையில், பொய் பேசவும் வழுவின செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் குறைவுதாம்.  ஆகவே கிருதயுகம் என்பது உண்மைகளே பெரிதும் நிகழ்ந்த காலமென்பதை ஒப்புக்கொள்ளலாம். அதனால் இது சத்தியயுகம் எனவும் பெயர் பெற்றது. 

இத்தகைய ஓர் உண்மைக் காலநிலை, எல்லா மனித நாகரிகங்களிலும் நிலவிற்று என்பதில் புனைவில்லை.  இது அறிவுக்குப் பொருத்தமான சிந்தனையில் தோன்றிய தென்று நாம் முடிக்கலாம்.

இந்தக் காலக்கணக்கைத் தீர்மானித்தவர்கள்,  உண்மைநிலை, பொய்ம்மை புகுதல்,  கேடுகள் விளைதல் என்ற நிலைக்களன்களி லிருந்து காலங்களை வகுத்திருத்தலை நாம் உணரவேண்டும். உண்மை ததும்பிய யுகமென்றால் பெரும்பான்மை பற்றிய பகுப்பு இதுவாகும். ஓரிருவர் பொய்யுரைத்தமை பற்றிய பகுப்பன்று.

திரேதாயுகம் என்ற இரண்டாம் காலக்கட்டம், 1296000 ஆண்டுகள் என்றனர். மூன்றாம் யுகம் என்பது துவாபரயுகம், 864000 ஆண்டுகள்.  அடுத்த பூவம் என்ற நான்காம் யுகமென்பது 84 இலக்கம் ( இலட்சம்) ஆண்டுகள். இதைப் பணையுகம் என்றும் கூறுவர்.

பணையுகமே கலியுகம் . இது 3102-ல் ( common era, now )  தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது என்பர். இவ் யுகம், கடையூழி, கடையுகம் எனவும் வேறுபெயர்கள் உடையவை. இதற்குப் பொய்யுகமென்றே திருவிளையாடற் புராணம் பெயரிட்டுள்ளது.  ஆகவே  பலரும் நேர்மை இன்றியே நடந்துகொள்வதைக் காணலாம். (திருவிளை. இரச. 30). நன்று செய்தாலும் அதைப் பொய்க்காரணத்துக்காகவே செய்வதையும் அதைக் மறைத்துக்கொள்வதையும் காணலாம். இந்தக் கணிப்புரையும் உண்மையாகவே நாம் உணர்கிறோம்.  தொடக்ககாலத்தில் பொய்ம்மைக்குரிய திறனை மனிதன் பெற்றிருக்கவில்லை. போகப்போகத்தான் திருடனும் திறமுடையவன் ஆகிறான். எதற்கும் அறிவற்ற ஒரு தொடக்கமும் பட்டறிவு நிரம்பிய ஒரு வளர்நிலையும் உள்ளனவென்பதை உணர அதிக மூளை ஒன்றும் தேவையில்லையே!

காவல்துறையும் நீதித்துறையும் மனிதர்களை இறுக்கிக் கட்டுப்படுத்தும் பல்வேறு சட்டங்களும் விரிந்துள்ளமைக்கு மனிதர்களின் தீய நடத்தையும் அதனைக் கட்டுப்படுத்த அரசுகள் வெளிப்படுத்தும் நடவடிக்கைப் பட்டியல்களுமே சான்றாவன.

இதில் வந்துள்ள சில சொற்களைப் பின்னர் விளக்க முயல்வோம். எடுத்துக்காட்டு: ஆண்டு என்றால் என்ன, வருடம் என்றால் என்ன, அடிச்சொற்கள் என்னென்ன ......?

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

வெள்ளி, 7 அக்டோபர், 2022

பிரிந்தோர் சேர்ந்துவிட்டால்....

 தொன்மக் கதைகளில் ஓர் அரக்கன் வருவான்.  மிகப் பெரிய ஆற்றலுடையோன் ஒருவன் அந்த அரக்கனை இரு கூறாக்கிவிடுவான்.  அப்புறம் இரு கூறான அரக்கன் இரண்டு பக்கமும் வந்து இருகூறிணையாய்த் தோன்றித் தாக்குவார்கள்.  இத்தகைய கதைகள் என்ன கூறுகின்றனவோ, அவை இன்றும் நடந்துகொண்டுதாம் உள்ளன.  ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்துவிட்டாலும் பின்பு இரண்டும் இணைந்துகொண்டு பிரித்தவனை வந்து தாக்குவதும் நடைபெறக்  கூடியதுதான்.  பிரிந்தவர்கள் சேர்ந்துவிடாமல் இருக்கவும் ஓர் அரசதந்திரம் இருக்கவேண்டும்.  அது தொலைநோக்குடன் செயல்படுத்தப் படவேண்டும்.  முன் காலத்தில் அது சற்று எளிதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்றைய மக்களாட்சி நாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்வதால்,  நாம் எதிர்பார்க்கும் ஒற்றைத் தொலைநோக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது.  அதனால் பிரித்தவன் அடித்து நொறுக்கப்படுவதும் நடைபெறக்கூடும்.  உலக அரசியல்களைக் கவனித்து இதனை உணரவேண்டும்.


இருகூ றானோர் இணைந்தொன்  றாய்வந்தும்

ஒருசேர நின்றுபோர் நடத்தலும் கூடுவதே;

பிரிவூர நின்றோர் பிரிந்தவா றிருந்துவிட

அறிவார்ந்  தவைசெயல் அரசுதந்  திரமாமே.


இரு கூறு --  இரண்டு துண்டுகள்

ஒருசேர - ஒற்றுமைப் பட்டு

கூடுவதே - சாத்தியமே

பிரிவூர -  பிரிவு ஊர -  பிரிந்து நின்றிடும் வண்ணம்

அறிவார்ந்தவை ---  அறிவோடும் கூடிய உபாயங்கள்.

அறிவார்ந்தவை  =  ராசதந்திரங்கள்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.



திங்கள், 3 அக்டோபர், 2022

சேதாரம் என்பதென்ன?

 இன்று சேதாரம் என்பதென்ன என்று தெரிந்துகொள்வோம்..

கத்தி ஒன்று, கத்தரிக்காயை வெட்ட இயலாததாய் உள்ளது.  அக்கத்தியை ஒரு கல்லில் தேய்த்தால் அது கூராகிவிடும்.  ஆனால் தேய்க்கும்போது,  கத்தி கூராவதோடு, சிறிதளவு தேய்ந்தும்போகிறது.  கத்தியைத் தேய்க்காமல் அதைக் கூராக்க முடிவதில்லை.  இதைத்தான் கத்தியில் ஏற்படும் தேய்மானம் என்கின்றோம். இதைச் சேதாரம் என்றும் சொல்வதுண்டு.

நகை செய்யத் தட்டாரிடம் சென்று பேசும் காலை, செய்யும்போது ஏற்படும் தேய்மானத்தை வேறு சொற்களால் கூற முடியுமென்றாலும் பெரும்பாலும் சேதாரம் என்றுதான் சொல்வது வழக்கம்.  

இதன் அடிச்சொல் " செது" என்பது   இதிலிருந்து செதுக்கு என்ற சொல் ஏற்படுகிறது. ஒரு சிலையைச் செய்கையில், எல்லாக் கல்லையும் வீணின்றிச் செய்யமுடிவ தில்லை.  

இதே அடிச்சொல்லில்

செது + ஆர் + அம் >  சேதாரம் என்று அமைகிறது.

ஆர்தல் என்பது சூழநிகழ்தலையும் குறிக்கும்.  இது பரவற் கருத்து.  ஓரிடத்தில் மட்டுமின்றி இத்தேய்மானம் சுற்றிலும் ஏற்படுவதுண்டு. பொன்னோ இரும்போ உருக்கப்படுகையில் எந்த இடத்திலும் செய்பொருளில் தேய்மானம்  ஏற்படும்,

பரவலாக ஏற்படும் சேதம் ஆதலின், சேதாரம் என்பது நன்கு பொருளை விளக்கவல்ல சொல்.

செது + அம் =  சேதமென்றும் ஆகும்.

இவை இரண்டுமே முதனிலை திரிந்து விகுதி பெற்ற சொற்கள்.

சுடு> சூடு என்பது முதனிலை திரிந்து பெயரமைதற்கு எடுத்துக்காட்டு. வினைச்சொல் அல்லாதவையும் இவ்வாறு திரியும்.  இவற்றை பழைய இடுகைகளில் படித்துப் பட்டியலிட்டுக்கொள்க.

பது > பதி ( வினைச்சொல்).  ஆனால் பது என்பது வினையாக வழங்கவில்லை. பது +ஆம் > பாதம் ஆகும்.  இதைப் பதி+ அம் > -பாதம் எனினும் அதுவே.

அடிச்சொல்லிலிருந்து வினையும் தோன்றும். பெயரும் தோன்றும்.

செது என்பது அடிச்சொல்லாயினும் அது வினைச்சொல்லன்று.  உரிச்சொல் ஆகும்.  செது என்ற சொல் எவ்வாறு தோன்றியிருக்கு மென்பதை இன்னோர் இடுகையில் கவனிப்போம்.

செய்துதருதலில் வரும் தேய்மானம்,  ஆதலின் செய்தாரம் > சேதாரம் எனினுமாம்.  செய் > சே என்றும் திரியும் ஆதலின் இது ஓர் இருபிறப்பிச் சொல்.

எ-டு:  செய்தி >  சேதி. குறில்முதல் நெடில்முதலாதல்.

பருவதம் > பார்வதி.

அறிக மகிழ்க

மெய்பு பின்னர்.

சனி, 1 அக்டோபர், 2022

கிழவர்களுக்கே உரிமை இளைஞனுக்கோ இல்லை

 எந்தச் சொல் எதற்காகப் புனையப்பட்டதோ,  அந்தப் பொருளிலே அது காலமும் கடந்து தொடர்ந்து வழங்கிவிட்டால்,  கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வுகளில் அதுவும் ஒன்று என்று துணிந்து  எடுத்துக்கூறலாம். தேவதாசி என்ற சொல் இறைவனை வணங்கி வாழும் பெண்களுக்கு என்று உண்டாக்கப் பட்ட சொல் என்றாலும்,  பின்னாளில் அதன் அமைப்புக்கு ஒவ்வாத பொருளில்  அது பேசப்பட்டது.  

வேசி என்ற சொல்கூட,  வேய்ந்துகொண்டவள் என்ற பொருளில்தான் அமைந்தது. யகர சகரப் போலியில்,  வேயி என்றபாலது வேசி என்று திரிந்தது. தமிழன்று என்றும் தவறாக எண்ணப்பட்டது.  ஒப்பனைகள் பல செய்து, அரிய சேலை முதலிய துணிகளை அணிந்துகொண்டிருப்பவள் தான் வேசி. அவ்வாறு அணிந்துகொண்டிருந்த பெண்டிரை,  தவறாகக் கருதி,  விலைமாது என்று எண்ணி,  வேசி என்றனர் என்பது தெளிவு. இப்போது அந்தப் பொருளில்தான் வழங்கி வருகிறது. இவற்றை எல்லாம் கேட்டு கவலைப் பட்ட ஒரு தமிழன் விபசாரி என்ற சொல்லைப் படைத்தான்.  விரிந்தும் (வி ) பரந்து ம்  ( ப) ஒழுகி, ஆடவர்களைச் சார்ந்து வாழ்பவள் என்ற ( சார் + இ ) பொருளில் இச்சொல் வந்தாலும்.  இதை அறியாமல் இதையும் தமிழன்று என்று சொல்லிவிட்டனர்.

அதனால்தான் தொல்காப்பிய முனிவர் சொன்னார் :  "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா "  என்று;  அவர்  கவனமாகவே  நூற்பா இயற்றினார். சொல் நூலும் மொழிநூலும் அறியாமல் உனக்கு விளங்காது என்றுதான் இதற்குப் பொருள். விளக்கவேண்டாம்! ஒரு சொல்லின்பால் கொஞ்சமாவது விளக்கு வெளிச்சம் பட்டால்தான், அது விளங்கும் ( ஒளி வீசும்).

வாயி என்பது வாசி எனத் திரிந்தமை போலவே,  வேயி என்பதும் வேசி ஆனது.

வாய் என்றால் இடம்.  இடத்திலிருப்போன் வாயி.  அது வாசி ஆயிற்று.  ஆகவே, சென்னைவாசி என்றால்,  சென்னையாகிய இடத்தவன் என்பதுதான். தோன்றும் வாய் என்றால் அது தோற்றுவாய்.  தோன்றும் இடம்.  ஆரம்பம்.  தொடக்கம்.

தோய்த்த மாவில் சுடும் அப்பம் தோய் > தோயை > தோசை.  யகர சகரப் போலி.

இவ்வளவும்,  சொல்லும் பொருளும் திரிந்துவிடுதல் நடைபெறுவதுதான் என்று உணர்த்தவே கூறினோம்.

கிழ என்றால் உரிய என்று பொருள். கிழம் + அன் > கிழவன்.  இதற்குப் பொருள்:  உரியோன் என்பதுதான்.  கிழவி  என்றால் உரிமை உள்ளவள்.  இவை எல்லாம் முதுமை காட்டும் சொற்களாய்த் திரிந்துவிட்டன.  கிழார் : இது வேளிர் பட்டப்பெயர்.  ஆலங்கிழார்,  மூலங்கிழார்  என்பன எடுத்துக்காட்டுகள். பயிர்த்தொழில் முதலாளிகள் என்னலாமா?   சனிக்கிழமை என்பதில் கிழமை என்றால் ( சனிக்கு) உரிய நாள் என்பது.  கிழான் என்பது வடமாநிலங்களில். கிஸான் ( கிசான்) என்று திரியும். 

ஒரு செடிக்கு உரிய இடம் அது வேரைக் கீழிறக்கும் ( மண்ணிற் செலுத்தும்) தரைதான்.  கிழங்கு என்பதும் வேர்தான். கீழிருப்பது.  கீழ் > கிழங்கு.  உரிமைப் பொருள் தாவரங்களின் வளர்ச்சிகளால் ஏற்பட்டது. நிலத்தில் நிலைகொள்வதுதான் எல்லா உரிமைகளிலும் மூத்த உரிமை.  கிழவர்களை கிழவியரை  மூதுரிமையர் என்ற புதுத்தொடரால் புகழவேண்டும்.

இந்த உரிமைக் கருத்து இளையர், இளைஞர் என்ற சொற்களில் இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்