வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

ஆசிரமம் சொல்லில் இரட்டை விகுதி

ஆசு என்னும் சொல் பயின்று அமைந்த பல சொற்களை அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளோம்.  இந்தச் சொல் ஆதல் (ஆகுதல் ) என்ற வினையின் அடிப்படையில் அமைந்ததாகும்.

சு விகுதி வந்த சில சொற்களை இப்போது நினைவுகூர்தல் நலமாகும்.  பரிதல் என்பது அன்பு காட்டுதல் என்றும் பொருள்தரும். பரிவு, பரிந்துரை முதலிய சொற்களில் வரும் பரி என்னும் சொல்லை நீங்கள் மறந்திருத்தல் எவ்வாறு?
பரிசு என்ற சு விகுதி பெற்ற சொல்லும் பரிதல் வினையடிப்படையில் உண்டானதே.

சிசு என்ற சொல் தமிழ்ப் பேச்சு வழக்கில் உள்ள சிறுசு என்பதன் றுகரம் வீழ்ந்த இடைக்குறைச்சொல். சிலர் சிறிசு என்றும் சொல்வதுண்டு.


விகுதி என்பதற்கு இறுதிநிலை என்றும் சொல்வர்.  சொல்லை மிகுத்துப் பொருளைப் பெருக்கிக் காட்டுவதே  விகுதி.   மிகுதி - விகுதி : இதில் மி - வி போலி இருத்தலை உணரலாம்.  மிஞ்சு - விஞ்சு : போலியே இதுவும். மிகுதி என்ற சொல் பொதுப்பொருளில் வர, விகுதி என்பது சொல்லின் நீட்டத்துக்கு மட்டும் வழங்குவதாயிற்று.

இன்னொரு சு விகுதிச் சொல்:  காசு என்பது.   மனிதன் காத்துப் போற்றிப் பயன்பெறுவதனால்  கா(த்தல்) >  காசு ஆயிற்று.  சற்றுக் கரிய நிறம் குறிக்கும் மா என்ற சொல்லினின்று மா+சு  ( மாசு) என்ற சொல்லும் அமைந்தது காணலாம்.  " ு " வினையாக்க விகுதியாகவும் வரும்,  எடுத்துக்காட்டு:  கூசு (கூசுதல்),  பேசு  ( பேசுதல் ).

ஆசு  என்ற சொல் உள்ளமைந்த சொற்கள் பல. இதற்குப் பற்றுக்கோடு என்றும் பொருள். ஆசு எனின் பற்றிக்கொள்ளுதல் ஆகும்.

ஆசு + இரு + அம் + அம்.  =  ஆசிரமம்.

ஆசு -  இரு என்பவற்றின் ஈற்று உகரங்கள் கெட்டன.

இச்சொல் இரண்டு அம்  ஈற்றில் வந்து முற்றிற்று..  இடையில் உள்ள அம்  என்பதைச சொல்லாக்க இடைநிலை என்றும் சொல்லலாம். அன்றி, இரட்டை விகுதி எனினும் பேதமில்லை.

யாரும் பற்றி(க்கொண்டு)  இருக்கும் இடமே ஆசிரமம்.   அனாதை ஆசிரமம் என்பது காண்க.

இவ்வழக்குச் சொல் பிறமொழிகளிலும் வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.

சொல்லவும் எழுதவும் பல உண்டு எனினும் சுருங்கச் சொல்லி முடித்தல் கருதி நிறுத்துவோம். அறிக மகிழ்க.

தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

மகுடமுகித் தொற்று (கொரனாவைரஸ்)

2003 வாக்கில் saars என்னும் பெயரிய சளி மூச்சுத்திணறல்
நோய்நுண்மம் பரவியது.  ஏறத்தாழ் 8000
மக்கள் பாதிப்பு உற்றனர்.  பாவம் 774 பேர் இறந்தனர். அதனினும்
மிக்க பாதிப்பே மீண்டும் மகுடமுகி 1 நோய்நுண்மிகளால் இன்றும்
வந்துள்ளது. பாதிப்பு இப்போது கடுமையானது: 78000+  பேர்
நோய்வாய்ப் பட்டுள்ளனர்.

வரலாற்றில் வந்ததுவே மீண்டும் வந்தது. அந்த உண்மையை
இந்தச் சில வரிகள் தெரிவிக்கின்றன.



வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;
வாழ்க்கையிலே தோன்றியதே தோன்றும் யாண்டும்;


உரலுற்ற நெல்லதுவே பொருளாம் பின்னும்
உலகியலில் உண்மையிதே உணர்வீர் உள்ளீர்
 

விரலுற்ற புண்ணிடமே புண்ணாம் இன்னும்:
வேறுபடல் அrரிதென்பார்   விரிவ றிந்தோர். 


குறிப்புகள் History repeats itself

( a saying in English )


1  மற்ற பெயர்கள்:  முடியுருவினி,  மகுடத்தோற்றினி

2 சிங்கப்பூரிலும் தொற்றியுள்ளது.  ஆனால் பெரும்பாலும்
வெளியார் ஆவர்.

அரும்பொருள்

யாண்டும் -  எப்போதும்.
உரலுற்ற - உரலில் குத்துவதற்கு இட்ட
பொருளாம் மீண்டும் -  குத்துதலுக்குப் பொருளாகும் இன்னொரு
முறையும்.
உலகியலில் - உலக நடப்பில்
உள்ளீர் - மக்களே
விரலுற்ற - விரலில் பட்ட
புண்ணிடமே - புண் பட்ட இடமே
புண்ணாம் இன்னும் - மீண்டும் காயப்பட்டுப் புண்ணாகும்
வேறுபடல் -  மாறிவருதல்
அரிது - மிகக் குறைவு
விரிவு - விளக்கம்.

மாற்றி வாசிப்பு:

வரலாற்றில் வந்ததுவே வருமே மீண்டும்;  என்பதை
வருமே மீண்டும்  வரலாற்றில் வந்ததுவே  என்று மாற்றியும்
இப்படியே ஆறு வரிகளையும் மாற்றி வாசித்தாலும்
பொருள்மாறாமல் வேறு சந்தம் தரும் வரிகள் இவை.






வியாழன், 20 பிப்ரவரி, 2020

முடியுருவினி ( கொரனா வைரஸ்)

கொரனா வைரஸ் பற்றி எழுதவேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில கவிதை வரிகள் தலைக்குள்ளும் இதழ்களிலும் தவழ்ந்து வெளிவரும்.  வசதியான சமயங்களில் எழுதிவைப்பேம். நள்ளிரவின்பின் உறக்கத்தின்போது வரிகள் சொரிவுறுமாயின் அவை விழித்தபின் பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை.  அப்படி வந்து உறுத்திய வரிகளில் ஒரு பா இங்கு இடம்பெறுகிறது.

கொரனா  வைரஸ் என்பதைத் தமிழாக்கவேண்டும்,  காரணம் அது கவிதைக்குள் வருகிறபடியினால்.  தமிழ்க் கவியில் பிற மொழிச்சொற்களைப் பெய்து வரைதல் மரபு அன்று,  ஆதலினால்.

அதற்காக யாம் ஆக்கிக்கொண்ட சொல்தான் முடியுருவினி என்பது. முடி அல்லது மணிமுடி போலும் உருவினதாதலின்  "முடியுருவினி" என்றே இவண் வருகிறது.  மகுடமுகி என்றும் சுட்டியிருக்கலாம். மகுடத்தோற்றினி என்றும் இருக்கலாம். இவை பாடலுக்குள் பொருந்தாமை சொல்லாமற் புரிவது.

கவிதை:

முடியுருவினி நோய்நுண்மி அடியெடுத்து வைத்து
கடிநகரிது சிங்கைக்குள் வருதலுக்கென் துணிவே?

உலகிதனிலே தூய்மைக்குப் பெயர்பெறும்அம் மட்டோ?
உடல்நலத் துறை  ஓங்கிற்றே ஒருநகரும் நிகரோ?

பலசாதனைகள் பெற்றிட்டும் ஒருசோதனைமுகர் வைக்க
நிலமகள்தான் இசைவுறுதல்  நிகழாதென்(று) இனி உழைப்பீர். 

அருஞ்சொல்லுரை:

முடியுருவினி = கொரனாவைரஸ்
நோய்நுண்மி  -  வைரஸ்
கடிநகர் -  காவல்மிக்க நகரம்
வருதலுக்கென் -  வருவதற்கென்ன
அம்மட்டோ -  அதுமட்டுமோ
உடல் நலத்துறை =  சுகாதாரத் துறை
முகர்+ =  ( தோல்வி என்று ) முத்திரையிட
முகர ( தோல்வியின் வீச்சினை முகர்ந்து (மோந்துபார்க்க)
என்பதும் பொருந்துமாயினும் சிறப்பில்லை என்று தோன்றுகிறது.

தாழிசை
நிகழாதுழைப் பாயே என்று முடித்தலுமாம். 
 



திங்கள், 17 பிப்ரவரி, 2020

அலாதி

அலாதி என்று நாம் பேச்சில் எதிர்கொள்ளும் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

அல்லாதன,  அல்லாதவை என்பன அலாதன  அலாதவை என்று கவிதைகளில் தொகுந்து வருதலை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இடையில் லகர ஒற்று மறைவு.

அல் :  அன்மை குறிக்கும் அடிச்சொல்.    அல்+ மை =  அன்மை.
ஆதி :  முன் அல்லது ஆக்க நாட்களில் உள்ளது. தொடக்ககாலத்தது.

ஆதல் : உண்டாகுதல்.  ஆதல் என்பது   ஆ >  ஆகு > ஆகுதல் என்றும் வரும்.  வே > வேகு > வேகுதல் போல.  வே > வேக்காளம்.  வே> வேது > வேதுபிடித்தல்.   வே> வெயில் ( முதனிலைக் குறுக்கம்).

அல் ஆதி > அலாதி என்றால் முன்னில்லாதது. முன் காலத்தில் இல்லாதது. முன்னது அல்லாத ஒன்று.

முன் அதுபோல் இல்லாததென்றால்  அது தனித்தது என்று பொருள்.

அலாதி மகிழ்ச்சி என்றால்  முன் அறிந்திராத மகிழ்ச்சி.

அலாதி என்பதில்  லகர ஒற்று இரட்டிக்கவில்லை.  அல்லாதி என்று சொல்லக்கூடாது.   அலாதி  தான்.

அனாதை என்ற சொல்லில்  அல் என்பது அன் என்று திரிந்தது.  ஆதி + ஐ என்பது  ஈற்று இகரமிழந்து     ஆத் + ஐ  என நின்று ஆதை ஆனது.  ஆகவே அனாதை முன்வரலாறு அல்லது முன்னோர் யாரும் அறியப்படாதவன். இது பெண்பாலுக்கும் ஆகும்.

அன் + ஆதி=  அனாதி.   ஆதியற்றோன். கடவுள்.  நாதி என்பது   அகரமிழந்து நாதி என்றொரு சொல் அமைந்தது. இது பிறழ்பிரிப்புச் சொல்.

அறிவோம் மகிழ்வோம்,

பிழைத்திருத்தம் பின்.

சனி, 15 பிப்ரவரி, 2020

மகுடியும் அதை ஊதுதலும்.

இன்று மகுடி என்ற சொல்லை அறிவோம்.

பாம்புக்கு மகுடி ஊதியவுடன் அது இசைக்கேற்ப ஆடத் தொடங்கிவிடுகிறது என்று சொல்வர்.  ஓசையின் எழுச்சியைப் பாம்பு உணர்ந்தாலும் இசையை நுகர அதற்குச் செவி தனியாக அமையவில்லை என்பர்.  கண்ணும் செவியும் ஒன்றாக உள்ளமையின் பாம்புக்குக் " கட்செவி" என்ற பெயரும் உள்ளது.

எனினும் நம் கவிஞர் பெருமக்கள் இசை கேட்டு நாகம் ஆடுவதாகச் சொல்வர். உடுமலை நாராயணக் கவிராயரின் " இசைக்கலையே இனிதாமே" என்ற பாடலில் இசைகேட்டு பொல்லாத நாகமும்  ஆடுமென்பார்.  இசையின் மேன்மையை உணர்விக்க இவ்வாறு கூறுவர்.

மகுடி என்ற சொல் மகுடம் என்ற சொல்லினின்று திரித்து எடுக்கப்பெற்றது ஆகும்.  மகுடியிலும் ஒரு சிறு குடம்போன்ற உறுப்பு குழாயில் உள்ளது காணலாம்.

மகுடம் என்ற சொல்லின் அமைப்பு ஈண்டு காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_11.html

மகுடி என்றால் மகுடத்தை உடைய ஊதுகுழாய் என்று பொருள்.

மகுடி என்ற சொல் மோடி என்றும் திரியும்.

தேடி வந்தேனே புள்ளி மானே
மோடி செய்யலாமோ என் தேனே தானே

என்பது பழைய நாடகப் பாட்டு.

மகுடாதிபதி என்ற கூட்டுச்சொல்லும் உள்ளது.

அறிந்தின்புறுக.

எழுத்துத் திரிபுகள் ( பிழைகள் ) புகின் திருத்தம் பின்.

 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மகுடம் வந்தது சிற்றூர்ப் பேச்சிலிருந்து.


மகுடம் காத்தவர் என் மணாளர் என்றால் கொஞ்சம் ோனைகள் வந்து வாக்கியம் அழகுடன் தொனிக்கிறது. மகுடம் என்ற சொல் எவ்வாறு விளைந்தது என்பதை நாம் அறிவோம்.

ஒரு குடம் போல் இல்லாமல் சற்றே வேலைப்பாடுகளுடன் பொன்னும் மணியும் பதித்துத் தலையில் வைத்துக்கொண்டாலே அரசன் மணிமுடி தரித்திருக்கிறான் என்று மக்கள் உயர்த்திப் போற்றுவர். இப்படிப் போற்றாமல் திமிருடன் : என்ன தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வருகிறான் என்று எவனாவது வாயில் காப்பவன் பேசினால் அவன் தலைபோய்விடும். மகுடத்துக்குப் போட்டி போடுகிறவன், “ முடியா சூடிவிட்டான் இவன்? இவன் தலையில் வைத்திருக்கும் குடத்தை இறக்கி அதை உடைத்துக்காட்டுகிறேன்" என்று கொக்கரித்தால் அதைக் கேட்போர் அரச பதவிக்குப் போட்டி உள்ளது என்று பேசிக்கொள்வார்கள். அரச முடிசூட்டுக்களின் போது இவ்வாறெல்லாம் உரையாட்டுகள் பண்டைக் காலங்களில் நடந்திருக்கலாம்; ஆனால் அப்போது நாம் அங்கில்லை ஆதலால் நாம் அதை இப்போது கற்பனைக் கண்கொண்டே பார்க்கவியலும்.

ஆனால் மகுடம் என்பது மண்டைக்குடம் என்பதன் குறுக்கம்தான். இதைப் புனைந்து அல்லது  பொறுக்கி எடுத்துச் சுருக்கித் தந்தவன் அறிவாளி.

மண்டைக்குடம் > (ண்டைக்)குடம் > மகுடம். இடைக்குறை.

இரண்டு மூன்று எழுத்துக்களை மாற்றியவுடன் சொல்லுக்கு மவுசு வந்துவிட்டாது. மா + பூசு > மா +( ப் )> ஊசு> மாவூசு > மவுசு. ( அழகுறுத்தல் ). மா என்பது ம என்று குறுகிற்று. ப் என்ற எழுத்தை எடுத்துவிட்டபின் நெடில்கள் குறுக்கம் பெற்றன.
 

அல்லது 

மாவு பூசு >  மாவுசு  > மவுசு.  
மா என்பது குறுகிற்று.
பூ என்பது வெட்டுண்டது.

மகுடம்:

தலையில் குடத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் என்ற சிற்றூர் நையாண்டிப் பேச்சிலிருந்து வந்தது.

மாவுபூசிய சொற்கள் பற்பல.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனமுறும்.

குறிப்பு
மோனைகள் - முழு  வாக்கிய த் தில் எதுகைகள் உள்ளன. அவை விடப்பட்டன.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

நானே பேரரசி.....ஊர்பார்க்க...

 








உந்துவண்டி ஏறியே ஒய்யார மாயமர்ந்து

தந்தையுடன் சுற்றுவேன் பந்துபோல் ---- வந்த

சிறுநகைச் சீரால் மயக்கிவிரல் சுட்ட

ஒருநகர் முற்றும் வசம்'


தொங்கிருக்கை ஊஞ்சலில் தோய்ந்துநான் பேரரசி

இங்கிருக்க ஏற்றிலார் யாவருண்டு ---- நன்குநோக்காச்

செல்வார் திரும்ப வருவார்தம் கையசைக்கக்

கொள்வார்மெல் வாஞ்சையென் பால்.

உந்துவண்டி  -   ( கார்).

சிறுநகை -  புன்னகை

சுட்ட - காட்ட  (சுட்டிக்காட்ட)

நன்கு நோக்கா  -  நல்லபடி பார்க்காத

செல்வார் -  கடந்து போகிறவர்

வருவார் -  (குழந்தை இருக்குமிடம் தாண்டிச் செல்ல)

வருபவர்

கையசைக்க - (குழந்தையைக் கண்டு)  தம் 

கரங்களை  ஆட்ட 

மெல் - மென்மையான

என் பால்  -  என் மேல்

வாஞ்சை -  அன்பு


எங்கள் பதிவில் தலைப்பில்  ஊர்பார்க்க என்பது  மேலேற்றுத்

திரையில் உர் பார்க்க என்று தெரிகிறது. இதைச் 

சரிசெய்ய முடியவில்லை.





வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தொற்றுநோய்ப் பேரிடர்

தொற்றுநோய் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.  அது பற்றி இம்மாதத் தொடக்கத்தில் யாமெழுதிய ஒரு கவிதை.

வீட்டி லடங்கிக் கிடமகனே மீ'றிடிலோ
மாட்டிக் கொளநேரும் நோய்த்தொற்றில் ---- மூட்டெளிதே
ஊகான் குறுங்குறுமி ஓங்கிற் றுலகெல்லாம்
வாகாரும் வாழ்வை உக.

மூட்டு எளிதே --  நோயணுக்கள் காய்ச்சல் முதலியவற்றை
மூட்டுதல் எளிதாகும்.
குறுங்குறுமி    --சிறிதான கிருமி.

ஊகான் - சீனாவில் நோய் தொடங்கிய இடம்.
வாகாரும் -  அழகான.
உக - விரும்பு.

புதன், 5 பிப்ரவரி, 2020

எமனாவது எருமைக் கடாவாவது?

எமன் என்ற கருத்தை  ஏளனத்துடன் எடு த்தெறிவோர்  உள்ளனர்.  மக்கள் அனைவரும்  எதையும் ஒருவரேபோல் கருதுவாரில்லை.  ஆகையால் வேறுபடச் சிந்திப்பார்  வாழ்க -, இனி தாக.

ஆனால் எமன் என்ற சொல்  தமிழ்ச் சொல்லே ஆகும். எகர த் தொடக்கத்துச் சொற்கள் யகர வருக்கத்துச் சொற்களாகத் திரிபு அடைதல் ஐயமின்றி நிறுவ ப்படும். எடுததுக் காட்டாக எவர் என்பது யார் என்பதனுடன்
தொடர்புற்ற சொல்லே ஆகும்.  ஆர் > யார் நேரடித் திரிபாகும்.  எமன் >. யமன்  > இயமன் என்று அவை வந்தன.

எமன் எனற சொல் எம்+ அன் என்று பிரியும். நோய் என்பது  உடலிற் பிறப்பது ஆகும். "உடன் பிறந்தே கொல்லும் வியாதி " என்றார் ஒளவைப் பாட்டி.  எப்போது மனிதன் பிறந்தானோ அப்போதே நோயும் கூடப்பிறந்துவிட்டது.  அது முற்றி வெளிப்படக் காலம் எடுத்துக் கொள்ளும்.  அவ்வளவு தான். அது உம்முடைய உரிமைகளில் ஒன்றாவது நிலையினதாகும். கிருமி யென்னும் குறுமியினால் வெளிப்பிணிப்பு ஆயினும் அது உம்முடையதே.  இதை உணர்ந்த பண்டை த் தமிழன் அதை "எமன்"எ‌ன்று ஒத்துக்கொண்டான்.  உருவகம் செய்து " எம்மவன்"  என்றான்.

எருமை,   தூய்மை அற்ற  -  பிற அணியிலுள்ள புற அணியினதான   -  'பிராணி". பல நோய்கள்  தூய்மை இன்மையால் வருதலின் எருமை வாகனம் என்றது மிக்கப் பொருத்தம்.

எத்தகைய வலிமையோனும் சுருண்டு விழுந்து இறந்தால் எமனுக்குக் கடவுள் தன்மை உண்டாகிவிடும். இது மாந்த வரலாற்றுக்குப் பொருந்துவதே.

ஆதலின் எமன் என்றது இந்தக் கொலைவழிகட்கு ஆன மொத்தக் குறிப்பையே ஆமென்று கொள்க.

எமன் என்று எம் என்னும் சொல்லுடன் ஒன்றித்தபடியால் மரணம் விளைவித்த எதையும் அவர்கள் தம்மின் வேறாகக் கருதவில்லை என்று உணர்வீர், மகிழ்வீர். எமன் என்பது உடனுறைவு குறித்து வாழ்வியலை விளக்கவல்ல சொல். இறைவன் தன்னுள் என்னும் கருத்தினுக்கும் இது புறம்பானதன்று என்க.

தட்டச்சு எழுத்துப் பிறழ்வுகள் சரிசெய்யப்படும்.



செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கிருமியும் குறுமியும்.

கிருமி என்னும் சொல்லுக்கு  ஆங்கிலத்தில்  உள்ள "ஜெர்ம்ஸ்" என்ற சொல்லின் பொருள் அகரவரிசைகளில் காண்பதற்கில்லை. பூச்சி புழு  என்ற பொருள்தான் காணக்கிடைக்கும். வேறு வழக்குச் சொல் இன்மையால் மக்கள் கிருமி என்றும் சொல்வர். ( பாக்டீரியா, வைரஸ் என்பார் ஆங்கில அறிவுடையார்).

கிருமி என்பது உண்மையில் "கருப்பான து " என்னும் பொருளது ஆகும்.   எப்படி என்றால்  கரிய   பக்கம் என்று பொருள்படும் "கிருஷ்ண பட்சம்" என்ற அயல் திரிபினில் கரு எனற்பாலது  கிரு என்று வந்திருப்பதுதான்.  கிருட்ணனும் கரி‌யோனே ஆவான்.  வானும் கருமையே ஆகும்.

கிருமி என்ற சொல் பழைய சங்கத அகராதிகளிற் காணப்படவில்லை. புதியவெளியீடுகளை யாம் ஆய்வு செய்யவில்லை. நீங்கள் தேடிப்பாருங்கள்.

கிருமி என்பது கரும்புழு என்று பொருளறியக் கூடியதாய் இருப்பதால்,  கருமைக்குத் தீமை என்னும் பொருள் பெறப்படுதல் ஏற்புடைத்தாகும்.
{" He is the black sheep in the family "என்ற வாக்கியத்தை நோக்குக.  English  idiomatic phrase. )

ஆனால் நோயணுக்கள் அல்லது நோய்நுண்மங்கள்  மிக்கச் சிறியனவாதலின், இச்சிறுமைக்கருத்து இச்சொல்லினில் இல்லாமை வேறு ஏற்புடைய பதங்களை தேடுதற்கு உந்தக் கூடும்.  நோயணு என்பதும் நோய்நுண்மம் என்பதும் உதவக்கூடும்.

கிருமி என்பதினும்  "குறுமை"க் கருத்து வெளிவருமாறு குறுமி என்று கூறுதல் பொருத்தமாகும்.  இனிக் குறுமையிலும் குறுமை உடைய சிற்றுயிராதலின் அல்லது நுண்மம் ஆதலின்,   குறுக்குறுமி என்று விரித்தல் இன்னும் நன்று. (கு
றுங்குறுமி எனினுமது).  இனிக் குறுக்குறுமியைக் குறுக்குவோம்.  றுகரத்தைக் களைந்துவிடில் குக்குறுமி ஆகிவிடும்.    கிருமி அல்லது "ஜெர்ம்ஸ்" என்பதற்கு குக்குறுமி என்பது நன்றாகவுள்ளதா?

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல் "குக்கிராமம்" என்பது. இது:

" குறுக்கு+ இரு+ ஆகும்+ அம்"
=  குறுக்கிராமம்". இதில் று விலக்க,
= குக்கிராமம்.

ஆகிவிடுகிறது

குறுக்கமாக அமைந்து குடியிருப்பதற்கான இடம் என்பதுதான் குக்கிராமம் என்பதன் அமைப்புப்பொருள். அமைப்பைக் குறிக்க எழுங்கால் " அம்" விகுதி பொருத்தமானது.  அம் > அமை.

. மிக்கச் சிறிய ஊர் என்பது பொருள்.

குறுக்குதல் என்பது குறுகக் கட்டப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட  ( சிற்றூர்) என்பது.

இடையில் றுகரம் வீழ்தல் சில சொற்களில் நிகழ்ந்துள்ளது.

எ-டு:

சக்கரம் - இது சறுக்கரம் என்பதன் இடைக்குறை.  உருளும் சக்கரம் அமையுமுன் பெரும்பாலும் சறுக்கிச் சென்றவை ஊர்திகள். ஆகவே சறுக்கி இலக்கை அடைந்தன. அல்லது தூக்கிச் செல்லப்பட்டன.   ஆள் இல்லாவிட்டால் சறுக்கலில் விடுதலே சேரிடத்தை அடைய உதவும்.  இதற்கு நிலம் தாழ்ந்துசெல்லவேண்டும். (  இறக்கம்).

இரு அமுக்குருளைகட்கு இடையில் கரும்பை அல்லது வேறு இனிப்பு விளைபொருளை சறுக்கிச் செல்ல விட்டுச் சாறு பிழிந்து அதனைக் காய்ச்சிச் செய்வது  சறுக்கரை.  ( சறுக்கி அரைத்து எடுக்கப்பட்டது ).  சறுக்கரை > சக்கரை  < > சர்க்கரை. இதிலும் றுகர ருகரங்கள் கெடும்.

சறுக்குமரம், சறுக்குக்கட்டை முதலிய வழக்குச்சொற்களும் உள.


மலைகள் குன்றுகளில் சறுக்கி இறங்குதல் நிகழும். மேலேறுகையில் தூக்குவது கடினம். ஆகவே உருளுறுப்பு தேவையாயிற்று.  இதுபின் ஏற இறங்க உதவிற்று.

உருள்+ ஓடு + ஐ = உருளோடை > ரோடை > ரோடா என்பதும் காண்க..

உருள் >  ரு.
ஓடு > ஓடு
ஆ >  ஆ.

ரோடை > ரோதை.

எனவே கிருமிக்குக் குறுமி, குக்குறுமி என்பனவும் கருதத்தக்கவை ஆகும்.

அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் பார்வைக்கு.

சனி, 1 பிப்ரவரி, 2020

அறிவியல் வளர்ச்சியும் நோய்களும்

அறிவியல் முன்னேற நோய்கள் அனை த்தும்
முறிவுறும்  என்றே  முகில்மேல்  ---  பறலானேன்;
கண்டதோ நோயாற் கவிழ்வதாய்;  கார்மழையோ
அண்டுமோ நம்மை நலம் ?

முறிவுறும் -  தீர்ந்துவிடும்
முகில்மேல் -  மேகத்தில்
பறல் -  பறவை;  பற + அல் =  பறல். (அகரம் கெட்டது.)
(பறந்தேன்)
கார்மழையோ -  துன்பகாலமோ
நலம் அண்டுமோ  - நோய்கள் நீங்குமோ நலம் வருமோ என்றபடி.