வியாழன், 20 பிப்ரவரி, 2020

முடியுருவினி ( கொரனா வைரஸ்)

கொரனா வைரஸ் பற்றி எழுதவேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில கவிதை வரிகள் தலைக்குள்ளும் இதழ்களிலும் தவழ்ந்து வெளிவரும்.  வசதியான சமயங்களில் எழுதிவைப்பேம். நள்ளிரவின்பின் உறக்கத்தின்போது வரிகள் சொரிவுறுமாயின் அவை விழித்தபின் பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை.  அப்படி வந்து உறுத்திய வரிகளில் ஒரு பா இங்கு இடம்பெறுகிறது.

கொரனா  வைரஸ் என்பதைத் தமிழாக்கவேண்டும்,  காரணம் அது கவிதைக்குள் வருகிறபடியினால்.  தமிழ்க் கவியில் பிற மொழிச்சொற்களைப் பெய்து வரைதல் மரபு அன்று,  ஆதலினால்.

அதற்காக யாம் ஆக்கிக்கொண்ட சொல்தான் முடியுருவினி என்பது. முடி அல்லது மணிமுடி போலும் உருவினதாதலின்  "முடியுருவினி" என்றே இவண் வருகிறது.  மகுடமுகி என்றும் சுட்டியிருக்கலாம். மகுடத்தோற்றினி என்றும் இருக்கலாம். இவை பாடலுக்குள் பொருந்தாமை சொல்லாமற் புரிவது.

கவிதை:

முடியுருவினி நோய்நுண்மி அடியெடுத்து வைத்து
கடிநகரிது சிங்கைக்குள் வருதலுக்கென் துணிவே?

உலகிதனிலே தூய்மைக்குப் பெயர்பெறும்அம் மட்டோ?
உடல்நலத் துறை  ஓங்கிற்றே ஒருநகரும் நிகரோ?

பலசாதனைகள் பெற்றிட்டும் ஒருசோதனைமுகர் வைக்க
நிலமகள்தான் இசைவுறுதல்  நிகழாதென்(று) இனி உழைப்பீர். 

அருஞ்சொல்லுரை:

முடியுருவினி = கொரனாவைரஸ்
நோய்நுண்மி  -  வைரஸ்
கடிநகர் -  காவல்மிக்க நகரம்
வருதலுக்கென் -  வருவதற்கென்ன
அம்மட்டோ -  அதுமட்டுமோ
உடல் நலத்துறை =  சுகாதாரத் துறை
முகர்+ =  ( தோல்வி என்று ) முத்திரையிட
முகர ( தோல்வியின் வீச்சினை முகர்ந்து (மோந்துபார்க்க)
என்பதும் பொருந்துமாயினும் சிறப்பில்லை என்று தோன்றுகிறது.

தாழிசை
நிகழாதுழைப் பாயே என்று முடித்தலுமாம். 
 



கருத்துகள் இல்லை: