வியாழன், 30 ஜனவரி, 2020

நித்தம் > நித்தல் > நிச்சம்.

நித்தம்நித்தம்  என் சிங்காரச் செல்வத்துக்கு
முத்தமொன்று தந்துமகிழ்வேன்---- உன்
அத்தை வருவாள் மெத்தையி லிருந்துனை
மெல்லவே அள்ளியணைப்பாள்


என்று ஒரு கவிதையன்று,   ஒரு கவிதைபோலும் வாக்கியத்தைப் படைப்போமானால் அதில் நித்தம் என்ற சொல் கேட்க நன்றாகவே இருக்கும். நித்தம் என்பது எப்படி அமைந்த சொல்?


மாற்றம் ஏதுமின்றி ஒவ்வொரு நாளும் இருக்குமானால் அதை நித்தம் உள்ளதெனலாம்.. அது ஓடிவிடவில்லை. என்றும் நின்று நிலவுகிறது. நிலவுதல் என்ற சொல்லிலும் நில் என்பதே அடி.  நிறுத்து என்பதிலும் அதுவே ஆகும் அடிச்சொல்.  நில்> நிறு > நிறுத்து.  நில்> நிலை (  நில் + ஐ = நிலை.)..நில்+ ஐ + அம் = நிலையம்.

நில் என்ற அடியிற் பிறந்த சொற்கள் பற்பல. வேறுவகையில் சொல்வதானால் அனந்தம்.  என்ன அனந்தம்?   அன் + அந்தம்:  அதாவது அந்தம் / முடிவு இல்லாதவை.  அல்> அன்.  முடிவு இருந்தாலும் கற்பனையிற் பறந்து முடிவற்றதாக மிகுத்துச் சொல்வதுண்டு.   நிற்க.

நில் + தல் - நிற்றல்.  நில் + தம் > நிற்றம்.   நித்தம்.  ற்று > த்து என்று பேச்சு மொழியில் மாறும்.         நில் > நிற்று > நித்து > நித்து + இ + அம் = நித்தியம். ( நிற்பது,  மாறாதது. ) இவ்வாறே நில் என்ற இயல்புவழக்குச் சொல் பல சொற்களுக்குத் தாயாக இருந்துள்ளது காணலாம்.

இவற்றை அறிஞர் பிறரும் முன் விளக்கி யதுண்டு.

நித்தம் > நித்தல் ( அம் விகுதிக்குப் பதிலாகவோ மாற்றமாகவோ அல் வந்துள்ளது. ) ;  நித்தம் > நிச்சம்  ( த > ச திரிபு).

இதேபோல் திரிந்த இன்னொரு சொல்:  அத்தன் >  (அப்பன்) > அச்சன் எனக்காண்க.  மாறாமை உடைய அல்லது பெயரில்லாத எந்தப் பொருளுக்கும் பெயர் வைக்கவேண்டுமானால்  நிப்பம் என்று பெயர் வைத்துவிடுங்கள்.

இத்துடன் நிறுத்தி இளைப்பாறுவோம்.  மகிழ்க.




தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்








புதன், 29 ஜனவரி, 2020

எலிப்புத்தாண்டும் வியாதிகளும்.

எலிதரு புத்தாண் டியற்றிற்று  யாதோ
நலிதரு கொள்ளைமுன்  நாளில் ------ பலியுறு
மூச்சுத் திணறுசளி மூண்டதுவே இந்நாளில் 
பேச்சிலுமே அச்சம் தரும்.


எலிதரு புத்தாண்டு -  சீனப் புத்தாண்டு எலியாண்டு.
இயற்றிற்று யாதோ -  முடித்தது எதுவோ? ( தந்த பலன் என்ன?)
நலிதரு கொள்ளை  =  கொள்ளை நோய்.(  நலி - நோய்.) நலிவு.
பலியுறு  -  உயிர்ப்பலி மிகுந்த.
மூச்சுத் திணறுசளி -  நிமோனியா.
மூண்டதுவே - தொடங்கியதே.
பேச்சிலுமே -  அதைப் பேசினாலும்.

விய என்பதினின்று வரும் சொல் வியாதி.  விய  +  ஆ (  ஆதல் ) + தி (விகுதி).
வியாதி என்பது பரவுகிற நோய் அல்லது தொற்று. நாளடைவில் அது
தன் நுண்பொருள் இழந்தது,   பொதுவாக நோய் என்ற பொருள்பெற்றது.

விர் > விரி.  விர் > விய்-  விய.  வியன் உலகு - விரிந்த உலகம்..

இந்த எலியாண்டில் நிமோனியா வந்துள்ளது.   முன்னாளில் எலிகடிக் கொள்ளை நோய் எலியாண்டில் வந்ததோ?  (தெரியவில்லை). இது எலியாண்டின் பலனோ?  எ-று.

மறுபார்வை:  தட்டச்சுப் பிறழ்வுகள்.

திங்கள், 27 ஜனவரி, 2020

சவுத்துப்போதல் ஒரு சிந்தனை

முதலில் நாம் சிந்தனையைச் சிந்தனையிலிருந்தே தொடங்குவோம். எண்ணுவதென்பது மனத்துள் நிகழ்வதாகும்.  அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக இல்லாமல் ஒரு சிறு தொடராக எண்ணி அதை வெளிப்படுத்துவதே சிந்தனை ஆகும். வெளிவரும்போதே அதை அடுத்த மனிதன்" சிந்திப்பா"க உணர்ந்துகொள்கிறான்.  சிறு என்பது "சின்" என்பதிலிருந்தும், அது உருக்கொள்வது  "து" விகுதியாலும், வெளிவருவது இ என்னும் வினையாக்க விகுதியாலும் அறிகிறோம். எனவே சின் து இ > சிந்தி ஆகி  சிந்தித்தல் ஆகிற்று. சிந்துதல் என்பது நீர் போன்றவற்றையும் தூள் போன்றவற்றையும்
அதன் இருப்பு நிலையினின்றும் வெளிக்கொணர்தல். நீரைச் சிந்திவிட்டான், மூக்குப்பொடியைச் சிந்திவிட்டான் என்ற சொல்லாட்சிகளைக் காண்க. இ என்பது இங்கு என்ற சுட்டுச்சொல்  ; அஃது இன்னொரு பொருட்பெயருடனோ வினைப்பெயருடனோ இணைகையில் இடமாற்று ஏற்படுவதையும் குறிக்கும்,
அள் > அள்ளு.  அள் > அளி > அளித்தல் என்பது காண்க. அள்ளுதல் என்பது ஒருசேர்ப்பாக எடுத்தல்;  அளித்தல் என்பது அவ்வாறு எடுத்ததை "இங்கு"  (இ) இடமாற்றிவிடுதல். கொடுத்தலுக்கும் மனவிரிவும் அன்பும் தனதே என்று கவர்ந்துகொள்ளாமையும் வேண்டும்,  ஆதலின் வேறு பொருண்மைக் கருத்துகளும் அதில் ஒட்டிக்கொண்டன. சிந்து என்பது பொருட்பெயராய்ச்  சிறுகவியைக் குறித்தது.  அளவடியின் குறுகிய முச்சீரடி அதுவாகும்.  அது சிறு நெய்யுமநூல்வகையையும் குறித்ததென்பர் வரலாற்றாசிரியர். அந்நூல் வணிகப்பொருளாய் நிலவிய காலத்தில் அவ்வணிகம் நிகழ்ந்த இடமாகிய ஆற்றங்கரையும் சிந்து என்று பெயர் பெற்றதென்பர்.  அங்கு வழங்கிய மொழியும் சிந்தி எனப்பட்டு அது பேசியோரும் சிந்திகள் எனப்பட்டனர். இ என்பது உடைமைக் கருத்துமாம்.  சிந்து + இ : " சிந்து "வை உடையது சிந்தி.

( சளித்துன்பம் உடையோன் ஒருவன் )  மூக்கிலிருக்கும் சளியை வெளியிலெடுக்கையும் மொத்தமாக ஒரே வேளையில் எடுத்துவிடல் இயலாமை காரணமாக ஊற ஊற எடுக்கவே " சிந்துதல். "  மற்றும் "மூக்குச் சிந்துதல் "  என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. எண்ணங்கள் மனத்துள் ஊற ஊற வெளிப்பட்டு அறியப்படுதலின் அது சிந்து சிந்தி சிந்தித்தல் ஆனது. இவை கூறும் அடிப்படைக் கருத்து சிறுமைதான்.
சேர்த்துவைத்து வெளிவந்த மொத்தமன்று என்பதை உணரவேண்டும். எதிலும் இடக்கரைக் ( vulgarity )  கருதுவதன்றி  அடிப்படை கருதவேண்டும்.

மேலே காட்டியதுபோல ஒவ்வொன்றையும் நுணுக்கி எடுத்து ஆய்வு செய்தாலன்றி எதையும் அறிதற்கியலாது.

இப்போது சவுத்துப்போதல் என்பதுபற்றிச் சிந்திப்போம். சவுத்தலாவது இளகுதல், பொருளின் கட்டித்தன்மை குறைந்து குழைவு அடைதல் என்பவாகும். செத்த உடல் முதலில் சவுத்துப்போகிறது.  இந்நிலையில் அதைச் சற்றே வளைக்கலாம். பின்னர் அது கெட்டிப்படுகிறது.  அப்போது அவ்வுடல் விறைத்துவிட்டதென்பர்.  அதன் கால் கைகளை நகர்த்துவது கூடக் கடினம். நகர்த்தினால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி முன்னிருந்ததுபோல் இருக்கும்.  சா> சாதல்.  சா> சாவு.  இது வு என்னும் விகுதி பெற்ற சொல்.  இது அம் விகுதி பெற்று சா > சா+ அம் > சவம் என்றானது.  இதில் சாகாரம் தன் ஒலிநீட்சி குன்றிச் சகரமானது. சா அம் > சவம் ஆனதில் வகர உடம்படு மெய் தோன்றிச் சொல் அமைந்தது.   இதை இவ்வாறன்றி மாற்றுவிளக்காக சா> சாவு ( விகுதி: வு ) > சாவு+ அம் > சாவம் >  ( நீட்சிகுன்றி ) சவம் ஆயிற்றென்று முடிப்பினும் அஃதேயாம்.

இவ்வாறே சா> சாவுறு > சாவுற்றுப்போதல் > சாவுத்துப்போதல் என்ற அடைவு காண்க. சிற்றம்பலம் என்பது சித்தம்பலம் > சிதம்பரம் ( ற்ற > த்த.  இனி ல - ர திரிபு மொழிகள் பலவினுக்கும் பொதுத்திரிபு )  என்றாம்போல சவுத்துப்போனது என்பதும் ஆனது. அதாவது பொருள் இளக்கநிலை எய்தியது, தன் இறுக்கம் குன்றியது என்பதே.

இனிச் சவாரி என்ற சொல் காண்போம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பொருள் பல. அதற்கு ஒத்திருத்தல் என்பதுமொன்று.  பொருந்துதல் தங்குதல் என்றும் உள.  சவம்போல ஒன்றும் இயக்காமல் ( குந்திக்கொண்டு)  செயலின்றி உடன்போவதே சவாரி ஆகும்.

சவ(ம்) >  சவ+ ஆர் + இ = சவாரி,

சவம்போலப் பொருந்திச் செல்லுதல். ஒத்துப்போதல். ஓடுமெதிலும் தங்கிக்கொள்ளுதல் என்பன பொருள்விரியாகும். இஃது ஒரு இனிய செலவொப்பீடு ஆகுதல் காண்க.

நளடைவில் சவ ஒப்பீடு மறைந்து   சவாரி என்ற சொல் தனித்துவம் ( தனி+து+ அம்)  பெற்றதும் நல்லதொரு நிகழ்வே ஆகும்.  இது தமிழர்தம் வணிக அலைவுகளால் பிறவிடங்கட்கும் பரவிற்று. சாலமோன் (  " நல்ல மகன் "  என்ற சொல்லும் இவ்வாறு பரவிய சொல்லே.  மகன் > மோன்.   தோகை  என்ற சொல் எபிரேயமொழியில் காணப்படுவதும் அதைக் கால்டுவெல் சுட்டிக்காட்டியதும் அறிக.  சவுத்த(ல்) என்பது soft  என்பதனுடன் கொண்ட ஒலியொற்றும் காண்க. மற்ற எல்லை தாண்டி உலவும் சொற்களை அவ்வப்போது ஆய்ந்து வெளியிட்டிருக்கிறோம். அவற்றையும் அறிவீராக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்னர் சரிசெய்யப்படும்.





வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஒருமை பன்மைக்குள் வந்தது.

ஒரு என்ற எண்ணுப் பெயரினுக்கு  ஒல் எனற்பாலதே  அடிச்சொல் ஆகும்.

ஒல் > ஒர் > ஒரு என்பனவே அடியினின்று வந்த உருவாக்க
 ஓட்டம். ஒல்+  து என்பதே ஒன்று என்று விளைந்தது. ஒன்று என்பதில் ஈற்றில் நின்ற துகரமே ஒருமை உணர்த்தும் விகுதியாகும்.  இதில் எழும் வினா என்னவென்றால்  ஒல் அல்லது ஒன் என்பதே பொருண்மையால் ஒருமையாக, இன்னும் ஓர் ஒருமை காட்டும்  விகுதி எதற்கு  என்பது தான்.

ஒன்று இரண்டு என்பவற்றை அப்போதுதான் உருவாக்கி அல்லது உணரத்  தலைப் பட்டிருந்த அந்த உதய காலத்தில் ஏன் இந்த ஒருமை பன்மை என்ற கருத்தமைப்பினைச் சொல்லமைப்பில் புகுத்தும் போராட்டத்தில் மொழியாக்க முனைப்பினர் ஈடுபட்டனர்     என்பதை அறிந்து கொள்ளும் வழி ஒன்றும் இல்லை. து என்பது அஃறிணை ஒருமை விகுதி என்பதனை எப்போது  வகுத்தனர்
என்பதும் அறியக்கூடியதாய் இல்லை.

இவ்வாறிருக்க இரண்டு  என்பது பொருளிற் பன்மையாய் நிலவ, ஏன் அதனுள் அஃறிணை ஒருமை விகுதி புகுத்தினர் என்பதும் புதிரே ஆகும். இவ்வாறே  மூன்று  (மூல்+து) ,  ஐந்து (ஐ+து ) ,  எட்டு ( எள்+ து),  ஒன்பது ( ஒன்று கழி த் த  பத் து) இன்னும் தொண்டு என்பவற்றிலும் ஏன் அஃறிணை ஒருமைத் து விகுதி ஏற்றினர் என்பதும் கேள்வியாகும்.

நீர் மொழிகளை ஒருவாறு அறிந்தவர்  எனின் உலகில் சில மொழிகளில் ஒருமை பன்மை இல்லை என்பதை அறிந்திருப்பீர்.  இதற்கும் ஒரு வினாவை எழுப்பாமல் விடுப்போம்.  சில மொழிகளில் ஒருமை பன்மை பொருளுக்கு இல்லை.  சொல்லுக்கே உண்டு.  சிலவற்றுக்கு ஒருமை இருமை பன்மை என்று மூவிதம் கண்டுள்ளனர். அதனால் கூடுதல் சாதனை யாதென்பீர்?
மும்மை நான்மை ஐம்மைக்கும் போயிருப்பர். களைப்பினால் ஒதுங்கிவிட் டனர். உலகுக்கு நன்மையே.

தமிழில் வல்லுநர் என்பார்  இதை அறிந் து உலகுக்கு விளக்குபவராகவும் இருக்க வேண்டுமே.  நீரே ஆய்வீர்.

அறிவோம் மகிழ்வோம்.

தட்டச்சுப் பதிவு பின்னர் சரி பார்க்கப் படும்.

வியாழன், 23 ஜனவரி, 2020

எதிர்க்கட்சிகள் பற்றி.

பழைய கவிதை கண்டெடுத்தது இன்னொன்று.
முன் இட்டது இங்கு உள்ளது:   https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_22.html



தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்;

மாணாத செயல்களிலே மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரும் ஆதரவை மாயுறுத்தும் காலை

ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க
ஒல்லுவதோ அரசினர்க்கு கொள்ளாமை கண்டு

நாணாமல் அவர்களையே நன்மன்றில் நிறுத்தல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி அன்றோ.


==============================================================

மாணாத  -  சிறப்பில்லாத, பொருந்தாத.
மாயுறுத்தும் -  அழிக்கும்; குழப்படி செய்யும்.

ஓணான் - பல்லிபோன்ற ஓர் சிற்றுயிரி ( சிறுபிராணி)
ஓல்லுவதோ - முடியக் கூடியதோ

கொள்ளமை = நன்மையாய் இல்லாமை.; கொள்ளத்தக்கதாய் இல்லாமை.
நன்மன்றில் -  தீர்ப்புத் தரும் மன்றத்தில்.அல்லது மக்களின்முன்.
செல்லு(ம்)வழி -  செல்லுவழி

அல்லவோ?.  அன்றோ என்றும் வழங்கும்  .  பழைய  வெளியீட்டில் இது  "ஆமே"  என்று முடிந்தது.  ஆமே =  ஆகுமே.  குகரம் தொக்கது.

ஓர் தூயகருத்து என்று கவிதையில் வரலாம். உரைநடையில் ஒரு தூயகருத்து  என்றே வரும்.- இதற்கான உரிமத்தை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

இது 2015ல் எழுதியது.  இன்னொரு நாட்டின் நடப்பு பற்றியது.
இது இங்கு உள்ளதா என்று தேடிப்பார்க்கவில்லை.

படித்து மகிழ்வீர்.

புதன், 22 ஜனவரி, 2020

கண்டெடுத்தது (கவிதை)

 சேர்த்துவைத்த பழவரைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருக்கும்போது முன்னர் எழுதிவைத்திருந்த இரண்டு   கவிதைகள் கிட்டின. அவற்றுள் ஒன்று
உங்களை இப்போது வந்தடைகிறது.

கண்டெடுத்த அக்கவி இதுவே

ஆம் ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில் ஆதவன் என்றிட
ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற தூழலில் சிக்கி.



ஒரு நாட்டின் கட்சிக்கு ஏற்பட்ட நிலைக்கு
இரங்கி எழுந்தது இக்கவி.

ஆக்கிய  ஆண்டு :  2015..  அடுத்து இன்னொன்று இன்னோர் இடுகையில்
படிதது மகிழுங்கள்.






ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அவத்தையும் அவஸ்தையும்.

அவத்தை என்ற உருக்கொண்டு பின்னர் அவஸ்தை என்று உருமாற்றம் அடைந்த சொல் பிறந்த விதம் அறிவோம்.

பச்சை நெல்லை சுடுநீரிலோ நீராவியிலோ வைத்து வேவித்தால் அது அவியல் ஆகிவிடுகிறது.  இப்படிச் செய்யாமல் அதே நெல் புழுக்கமான இடத்தில் காற்றோட்டமின்றி வைக்கப்பட்டுவிட்டால் அதுவும் ஒருவகையில் அவிந்து பயனற்றுப் போகிறது. குளிர்ப்பெட்டியில் நெடுநாள் இருந்த காய் முதலியவையும் அவிந்து  சுருங்கிப் பயனற்றுப் போகிறது.  இப்படித் தாமாக அவிந்துவிட்டவை  அவம் அடைகின்றன. இவை உணவுக்கு ஏற்றவை அல்ல.

எனவே அவம் என்ற சொல்லுக்குக் கேடு (கெடுதல்) என்ற பொருள் உண்டாயிற்று. அவம் என்ற சொல் பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. சில நூல்களில் உள்ளன.

இது ஆன விதம் இவ்வாறு:

அவி > அவிதல் :  வினைச்சொல்.

இங்கு தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  அவி என்பதே வினை.

அவி என்பது அம் விகுதி பெற்றால்  அவி + அம் = அவம் ஆகிறது. அவி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு   (அவ்)+ அம்= அவம்  என்று நின்று  வ் + அ ஆனவை புணர்ந்தபின் அவம் என்ற இறுதிவடிவம் பெறுகிறது.  அவ் என்பது ஒரு சொல்லன்று. அது ஒரு புணர்நிலை இடைவடிவம் ஆகும்.  பொருள் உடையதே சொல். புணர்நிலையில் ஏற்படும் இடைவடிவம் பொருள் காட்டுதல் இல்லை ஆதலின் அதனை ஒரு சொல் என்று நாம் குறிப்பதில்லை. சில சொற்கள் இவ்வாறு இடைவடிவம் அடைவதில்லை. எடுத்துக்காட்டாக அறு என்ற சொல்லினின்று ஆறு என்ற சொல் ( நதி ) உருவாகுகையில் எந்த இடைவடிவமும் இல்லாமல் முதனிலை நீண்டு திரிபுற்று  "ஆறு" ஆகிவிடுகிறது.  மாறாக,   குவியல் என்ற சொல் உருவாக்கத்தில் குவி என்பது மாற்றம் ஒன்றும் அடையாமல் ஒரு யகர உடம்படு மெய் ஒட்டப்பெற்று அஃது அடுத்து வரும் அல் என்ற விகுதியில் முதனிலையுடன் புணர்ந்து  அவியல் என்ற சொன்னிலையைப் பெற்றுவிடுகிறது.

அறு + அம் என்பவை பகுதியும் விகுதியும் புணர, உகரம் கெட்டு, அற் என்று இடைவடிவம் கொண்டு,  அம் வர  ற் + அ = ற ஆகி,  அறம் என்றாகும். இறுதி நிலை உயிர் கெடுகிறது. வருநிலை அகரம் றகர ஒற்றினைப் பற்றி முழு றகரம் ஆகிவிடுகிறது.

இவ்வாறே  அவம் என்ற முழுச்சொல் அந்நிலையை அவி என்ற வினையினின்று எய்தியவாறு கண்டுகொள்க.

அவத்தை என்ற சொல்லும்,  அவி என்ற வினையினின்று அமைந்த விதம் அறிக.

அவி + அத்து + ஐ. >  அவ்( இ ) + அத்து + ஐ >  அவ் + அத்து + ஐ >  அ (வ்+அ)த்து+ ஐ > அவத்தை  ஆயிற்று.  வினைச்சொல்லீற்று இகரம் கெட்டது.  வகர ஒற்று வருநிலை அகரத்துடன் இணைந்தது.

கொதிநீர்  ஆவி உடலிற்படும்படியான எரிவு ஒத்த துன்பமே அவத்தை ஆகும். அத்து என்பது ஓர் சொல்லாக்க இடைநிலை. இதனை அவம் + தை = அவத்தை என்றும் தை விகுதி என்றும் காட்டினும் அதுவேயாகும்.

வேகும் ஆவியிற் பட்டதுபோலும் துன்பம். இது ஒப்பீட்டில் உண்டான சொல்.

அவஸ்தை என்ற வடிவம், உயர் > உயர்ச்சி >   உசத்தி > ஒஸ்தி ஆனதுபோலும் அவத்தை அவஸ்தை ஆனது.  ஸ் என்றது மெருகு  அல்லது கவின்பொடிப் பூச்சு ஆகும்.

வடவெழுத்து ஒருவினால் உண்மைச் சொல் வெளிப்படும் என்றார் தொல்காப்பிய முனிவர்."  பல்புகழ் நிறுத்தப் படிமையோன் "  அன்னவர்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுத் திருத்தம் பின்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

மரியாதையும் மருவாதையும்

மருவுதல் என்றால் தழுவுதல்,  கைகளால் ஒருவரைச் சுற்றிக்கட்டிப் பற்றிக்கொள்ளுதல்.  இது பணிவின் நிமித்தமாகவும்  அன்பின் நிமித்தமாகவும் வரவினை ஏற்பதன் நிமித்தமாகவும் நடைபெறக்கூடும். வேறு காரணங்களும் பொருந்துமாறு மருவுதல் உளது.  மனத்தால் மருவுதல், காலத்தால் மருவுதல், இடத்தால் மருவுதல் என மருவுதல் பல்வகையாகும்.  சங்ககலத்துடன் இணைந்த காலத்தை சங்க மருவிய காலமென்பர். சங்கத்தின் தாக்கம் மறைந்துவிடாத அடுத்த காலத்தையும் மருவிய காலமென்பதுண்டு.

திருமண உறவால் மகளான நிலையை அடைந்தவளை மருமகள் என்பர்.  மருவு என்ற வினையுடன் தொடர்புடைய "  மரு " என்னும் சொல் மருமகள், மருமகன், மருமக்கள் முதலிய சொற்களிலும் மரு என்பது  தெளிவான அடிச்சொல்லாய் உள்ளது.

மருமகன் என்ற சொல்லின் இடைக்குறை மருகன் என்பது.  இதில் ம என்ற ஓரெழுத்து குறைவாயிற்று.

மரியாதை என்ற தமிழ்ச்சொல்லைப் பற்றிய விளக்கம் ஈண்டு உள்ளது .https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_90.html

அதையும் படித்து நினைவுபடுத்திக் கொள்க.

கைகளால் மருவிக்கொள்ளாமல் வாயினால் மட்டும் அன்பின் இணைப்பை ஏற்படுத்திக்கொள்வது  மரு + வாய் +  தை =  மருவாதை என்பதை அறியலாம்.
இங்கு வாய் என்பது கடைக்குறைந்து  வா என்று நின்றது.  வாய்= து + அம் = வாதம் என்ற சொல்லிலும் வாய் என்பது வா என்று நின்றது.   வாய்ப்பேச்சரிடை வாய் என்பது வா என்று சுருங்கும்.  எ-டு:  வாப்பட்டி. இவ்வாறு குறைந்தமைந்த சொற்களும் உள.

வாய்த்தியார் > வாத்தியார் ( வாய்ப்பாடம் சொல்பவர் ).

நாளடைவில் மரியாதையும்  ( மருவி யாத்துக்கொள்ளுதலும் )  மருவாதையும் (  வாய்மருவுதலும் ) தம்  நுண் பொருள் வேறுபாட்டினை இழந்தன. இன்று ஒன்று மற்றொன்றின் திரிபாக எண்ணப்படுகின்றது.

வியாழன், 16 ஜனவரி, 2020

பிரபஞ்சம்

தமிழ் மொழியின் இனிய சொற்கள் யாண்டும் காணப்படுவனவே. காணவே மொழிகளிடை இழையும் ஓர் அணுக்கம் நமக்குத் தெளிவாகிறது.

எடுத்துக் காட்டாக கஜானா என்ற சொல்லைக் காணலாம்.

காசு + எண்ணாம் = காசெண்ணா (ம்)> காஜாநா ஆகிவிடும். இதில் வந்த மாற்றங்களும் பெரியவை அல்ல. சகர வருக்கத்துக்கு ஜா உள்ளே வந்துள்ளது. அவ்வளவுதான்.  காசினெட்டு என்பதி  ிருந்து  cashewnut வந்தது போலுமே.

உலகில் முதலாகப் பூத்த
வை  ஐம்பூதங்களே. அவையே முற்பிறப்புக்கள்.

பிறப்பு+ அஞ்சு + அம் = பிறப்பஞ்சம்> பிறபஞ்சம் ( இது இடைக்குறைந்து,)
பிரபஞ்சம் என்று இன்று உலவுகிறது.

ஐந்து > அஞ்சு .  இது பேச்சு வழக்குச் சொல்.

அஞ்சுதல் ( அச்சம்) என்னும் சொல் வேறு.

ஐந்து என்ற செந்தமிழை  நுழைத்திருந்தால் "பிரபைந்தம்" என்று விளைந்து  இனிதாய் இருந்திருக்காது.
அறிவீர் மகிழ்வீர்.

தட்டச்சுத் திருத்தம் பின்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

பொங்கல் வாழ்த்துகள்

யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
நாவினிக்கும் முக்கனிச் சக்கரைப் பொங்கலைத்
தேவியர்தம் கணவர் மக்க ளுடனுண்க
நோவெனவொன் றில்லா வாழ்வு  மலர்கவே.

திங்கள், 13 ஜனவரி, 2020

கொடூரமும் நெட்டூரமும்.[ நிஷ்டூரமும்]

ஊறு என்றால் துன்பமென்று பொருள். கெடுதல் என்றும் பொருளுரைக்கலாம். இச்சொல் உறு என்பதிலிருந்து வருகிறது.

படு (படுதல்) என்பது  பாடு என்று முதனிலை திரிந்து பெயர்ச்சொல் ஆகிறது. முதனிலை என்றது முதலில் நிற்கும் ப என்ற எழுத்தை.  அது "பா" என்று நீண்டுவிட்டதன்றோ?  நீள்தல் (  நீடல் )  திரிபு வகைளில் ஒன்று.

இவ்வாறே  உறு  ( உறுதல் )  பெயராவதற்கு ஊறு என்று மாறியுள்ளது.   ஊறுதல் என்ற வினைச்சொல் வேறு.  எடுத்துக்காட்டு: நீர் ஊறுதல்.

கொடுமை என்பது மனிதனோ அன்றி விலங்குகளோ ஏனை உயிரினமோ "உறுவது". இவ்வாறு சொன்னால், பின் ஊறு என்பது ஏன் அம் விகுதிபெற்று ஊறம் என்றாகி, மேலும் திரிந்து ஊரம் என்று ஆகி, கொடுமை உறுவது என்ற பொருளில் கொடூரம் என்று  அமைந்திருத்தல் இயலாது என்ற எண்ணம் தோன்றலாம்.  அவ்வாறாயின்,  ஊறு என்பது அம் விகுதி பெற்றதும் அதன்பின் கொடு என்ற கொடுமை குறிக்கும் சொல்லுடன் இணைந்ததும் ஆகிய செயல்களால் ஆனதோர் பயன் ஒன்றுமில்லை என்று அறிக.  மேலும் கொடுமை என்பதும் துன்பம்; ஊறு என்பதும் துன்பம்,  ஆதலின் பயனொன்றும் இல்லை (mImisaich chol -  மீமிசைச்சொல்) என்பதுடன், அம் விகுதியினாலும் ஒன்றும் கூடுதல் கிட்டவில்லை என்பதும் அறிக.  சிலவிடத்து வெற்று விகுதிகள் இணைப்பும் மொழியிற் காணப்படுமெனினும் இங்ஙனம் அருகியே நடைபெறுதல் நன்று என்பத     ு அறிக.

ஊர்தல் என்பது நெருங்கிவருதல் , நாமறியாமலே மெல்ல வந்து சேர்தல்  என்ற பொருளில்,  கொடு+ ஊர் + அம் = ுஉரம்   ொூரம்
என்ற சொற்புனைவு உண்டாயிற்று  என்பதே பொருந்துவதாகும்.

ஆகவே கொடூரமாவது எதிர்பாராமல் வந்துற்ற மிகுதுன்பம் ஆகும். இது சொல்மைப்பாலும் வழக்காற்றாலும் பெறப்படும் பொருளென்று உணர்க.

நெடிதும் உறும் பெருந்துன்பமே நெட்டூரம் ஆகும்.  இச்சொல் ஒழிய, இதுவே நிஷ்டூரம் என்று மாற்றுரு அடைந்து உலவலாயிற்று என்றறிதல் தடையற்ற சிந்தனையாகுமென்பது அறிக.

அரிதல் என்பது மிகமிகச் சிறிதாக,     அளவிலும் சற்றுக் கூடுதலாக வெட்டுதல் ஆகும்.  அப்படி அரியப் பயன்படும் கத்தி ஆரி ஆகும்.  இதுவும் முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  தொழிலுக்குப் பெயரானது பின்னர் அத்தொழிற்குப் பயனாகும் கத்திவகைக்குப் பயன்படுவதனால் அஃது ஆகுபெயராய் ஒரு கருவியைக் குறித்தது.  சற்று நெடிதான " நெட்டாரி" காணப்படுவதில்லை.  நெடிதானவை அரிதற்குப் பயன்படுவதில்லை போலும்.
இந்த "ஆரி"  கட்டையாக,  (  நீளம் குறைவாக )  இருந்ததால், கட்டை+ ஆரி = கட்டாரி ஆயிற்று.  கட்டை என்பது குட்டை.  குட்டையான பை குட்டான் எனப்படுகிறது. (வெற்றிலைக் குட்டான்).   குட்டையானவர்  "குட்டார்" என்றும் அழைக்கடுவது காண்க.  எ-டு:   குட்டார்க் கங்காணி. (குட்டார் என்பது வழக்கிலிருந்து யாம் அறிந்தது.  அகரவரசையில் தேடிப்பார்க்கவும் ).  சிலவிடத்துக் கட்டாரி என்பது இயற்பெயராகவும் உள்ளது. ஆட்பெயராகும்போது  இங்கு வரும் ஆரி என்பது, ஆர்  = மரியாதைக்குரிய ,  இ  - மனிதரைக் குறிந்த வந்த விகுதி.  (  ந(ண்)பர் ).   அரியும்  குட்டை வாளானது சிறவாமையின்.  கட்டாரி என்பது குத்துவதில் திறனுடைய மனிதர் என்று ஒப்புமை கூறுவதாயினும் அதுவும் கொள்ளாமென்று ஏற்பதில் எமக்கொரு மறுப்பும் இலது காண்க.

கொடூரம் என்பது கடூரம் என்றுமாகும். பின்னுமது  குடோரமென்றும் உருமாறும்.

குட்டன் என்பது மகனையும் குறிக்கும்.   அப்புக் குட்டன் -  அப்புவாகிய குட்டன்; அப்புவின் மகன் எனலுமாம்.

குட்டாரம், குட்டரி என்பன (  சிறிய ) மலை குறிப்பவை.  இங்கு வந்த ஆரம் அரி என்பவை வெட்டுதல் குறிப்பவை அல்ல.   அரு+ அம் = ஆரம்,  அருகிலிருப்பது (குன்று).   அரு+ இ = அருகிலிருப்பது.  குட்டை ( குட்டையானது) என்பதும் குன்று  ( குன்றுதல் ) என்பதும் சிறுமை குறித்து ஒரு பொருளனவாயின.

This post has been hacked. It
defies edits. Re-edit is postponed.
Pl read with care.

சனி, 11 ஜனவரி, 2020

பீச்சக்கை

இன்று "பீச்சக்கை" என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

இந்தச் சொல் ஒரு கூட்டுச்சொல் ஆகும். இதைப் பிரித்தால் இரு சொற்கள் தென்படுகின்றன. அவையாவன:

பீச்சு + கை

பீச்சுதல் என்பது பேதியாகுதல், மலம் கழிதல் என்பதை இங்குக்  குறிக்கிறது. இந்தச் சொல் (பீச்சுதல் ) இப்போது இந்தப் பொருளில் பேச்சு வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணக்கிடைப்பது ஆகும். பீச்சுதல் என்பதன் வேறு பொருள்களை இங்கு நாம் ஆய்வு செய்யவில்லை. இஃது "பல்பொருளொரு சொல்.    " (ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுடையது)”

பீச்சு+ கை என்பது பீச்சக்கை என்றும் பீச்சங்கை என்ற  அம்  என்னும் சொல்லாக்க இடைநிலை பெற்றும் வழங்கும். ஆறு + கரை > ஆற்றங்கரை என்பதில் அம் என்னும் சாரியை வருவது போன்றது இதுவாகும். வேம்பு + குச்சி = பேப்பங்குச்சி என்பதில் அம் இடையில் வருவதும் அது.

கழிவைக் கழுவுதற்குப் பயன்படும் கை என்பது இக்கூட்டுச் சொல்லின் பொருளாகிறது. இது பேச்சுவழக்கில் மட்டும் உள்ளதாகும். பீச்சு என்பது முதனிலைத் தொழிற்பெயராய்க் கை என்னும் சினைப்பெயருடன் ( உறுப்பின் பெயருடன் ) இணைந்தது.

இக்கூட்டினை, “ பீ + சக்கை " என்று பிரிக்கவில்லை அஃது பொருந்தாமையின்.

பீச்சக்கை என்பது இடக்கரடக்கல்.

This has been hacked by intruders and has been
rectified to some extent. Please read with care.

வெள்ளி, 10 ஜனவரி, 2020

நீக்கப்பொருள் தரும் தமிழ்ச்சொற்கள்.

நீங்குதல் என்ற சொல்லுக்கு அடியாவது " நீ " என்ற (அடிச்)சொல்.
நிந்தனை:
தான் நீங்கலாக முன் நிற்போனைக் குறிக்கும் சொல்லே " நீ " என்பதாகும்.  அடிப்படைக் கருத்து " நீக்கம்" என்பதே என்றறிக.  இது முன்னிலைப் பதிற்பெயர்.

நீ என்பது சீனமொழியிலும் வழங்குவதாகும்.

நீ என்பது அடிச்சொல்லாய், கு என்னும் வினையாக்க விகுதி பெற்று  " நீங்கு " என்று அமைந்தது. இதுவே பிறவினையாய் "  நீக்கு" என்றமைந்தது.

நீரில் தான் மிதந்த இடத்தினின்று இன்னோர் இடத்துக்கு நீங்கிச் செல்வதே " நீந்துதல்"  ஆகும்.  நீ என்ற சொல்லுடன் து என்னும் வினையாக்க விகுதி இணைந்ததுதான் " நீந்து" என்பது.

இது தொழிற்பெயராகும்போது  " நீச்சு"  " நீச்சல்" என்ற உருக்கள் கொள்ளும்.

பலிநீச்சு என்பது சடுகுடு விளையாட்டுக்கு இன்னொரு பெயர்.

"பலிநீச்சடிக்கவே பல்லு இரண்டு உடையவே..."  என்பது ஒரு சிற்றூர்ப்பாட்டு.

மனிதன் குகைகளிலும் காடுகளிலும் வசித்த தொல்பழங்காலத்தில் கூட்டமாகவே வாழ்ந்தான்.  கூட்டமாக வாழ்வது அவனுக்குப் பாதுகாப்பானதாக இருந்ததே இதற்கு அடிப்படைக் காரணம். உணவுடைய கூட்டத்தாரை இல்லாதவரும் அவர்களுக்குள் வலிமை உள்ளவரும் ஆனோர் வந்து பாய்ந்து அடித்து உணவையும் பிற அரும்பொருட்களையும் எடுத்துச் சென்றனர். ஒரு கூட்டத்தாருக்கு உரிய பொருளை அவர்களுக்கே உரிமை என்று நிலைநிறுத்தும் ஏற்பாட்டுநடக்கை அல்லது விதியமைப்பு உருவாக வெகுகாலம் சென்றது.  உரிமைவிதிகள் பிற்கால ஏற்பாடுகள். உங்கள் பொருள்கள் உங்கட்கே என்பதை இன்னொரு குழுவினர் ஏற்று நடத்தலே பொருளுரிமைக் கோட்பாடு ஆகும்.

இத்தகைய கோட்பாடுகளை மதிக்காமல் நடப்பவனே  "  நீசன்"  " நீச்சன்" என்று அறியப்பட்டான்.  இந்த நீசம் அல்லது நீச்சத்தன்மை கட்டொழுங்கு போற்றி அமைதி காண விழைந்தோரால் கடிந்துகொள்ளப்பட்டது.   நீச்சத்தன்மை மண்கவர்தல், பெண்கவர்தல், பொருள்கவர்தல் ஆகிய மூன்றையும் தழுவிக் கேடு என்று உணரப்பட்டது ஆகும்.

நீ >  நீசு > நீசம்  (  சு, அம் விகுதிகள்).

நீ > நீச்சு ( புணர்வில் வலி மிகுதல் )  > நீச்சு + அம் =  நீச்சம்.

பிறன்பொருள் கொள்வதற்கு ஒரு வலிமை வேண்டியது போலவே அஃது வேண்டாமை போற்றுதற்கும் ஒரு வலிமை வேண்டும் என்பது உணரப்பட்டது. அஃதே  மனவலிமை என வலிமை ஆகும்.  இம்மன வலிமைப் பாதையின் நீங்கி நின்றோன்  நீசன் அல்லது நீச்சன்.  இம்மன வலிமை இல்லாதவன் அல்லது அதனின் நீங்கியோன் நீச குணம் அல்லது நீச்ச குணமுடையோன் என்று அறியப்பட்டான்.  மனிதர்கள் கூட்டமாகச் செயல்பட்டமையின், இத்தகு சில கூட்டத்தார் நீச்சர் அல்லது நீசர் எனப்பட்டது.  மனவலிமை நீங்கியோர் இவர்கள். இது இழிகுணம் ஆதலின் நீச்சர் அல்லது நீசர் என்பதற்கு இழிவு என்பது பெறுபொருண்மை (  பின்னர் அடைந்த பொருள் ) ஆகும். இது அடைவுப்பொருள் எனலும் அது.

அறிந்து மகிழ்க.

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மடிக்கணினித் தமிழ் அலைபேசியில் தவழ்கிறது

மடிக்கணினி செய்கின்ற வேலை எல்லாம்
மணிப்பேசி செய்முனைப்புக் காலம் காணீர்
பொடிப்பேழை முன்னேற்றம் கண்ட யர்ந்தோம்
பொன்னான காலமிதில் சங்கம் இல்லை!
இடியப்பம் பிரியாணி ஆகும் மாற்றம்
இக்காலப் பிறழ்வாகும் தக்க தொன்றே;
முடிமன்னர் குடிவாழ்த்தும் அன்னை இன்று
முன்சென்றாள் தன்மகிழ்வுக் கெல்லை உண்டோ?

சனி, 4 ஜனவரி, 2020

நிந்தனையும் நீயெனலும்

( இவ்விடுகையில் ஒரு பகுதி காணாமற்  போயிற்று.  ஆகவ பின் எழுதிச் சேர்க்கப்பட்டவை இதில் உள்ளன. ச்   அதன்பின் காணாமற் போனதும் கண்டுபிடிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுள்ளது எனினும்  அப்பகுதி தனியாக வெளியிடப்படும்.  அதாவது இங்கு சேர்க்கப்படவில்லை. கள்ள மென்பொருள் நுழைவும் கடவாணைபெறார் புகவும் அறிந்து வருந்துகிறோம். )

Inconvenience to readers regretted.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

TEXT OF THE POST.

நம்மினும் மூத்த பெருமக்களை , முன்நின்று உரையாடும் போது -   நீங்கள் என்றுதான் சுட்டவேண்டும்; "நீ" எனல் பணிவு  அல்லது மரியாதைக் குறைவு என்பது நம் பண்பாட்டு விதியாய் உள்ளது.

இப்பண்பாட்டு விதியினின்றே நிந்தனை என்னும் சொல் தோன்றியுள்ளது.

மூத்த பெருமக்களில் ஒருவர் நீ என்று குறிப்பதை இழித்தலுக்கு ஒப்பாகக்  கரு
தினார். பிறரும் அன்னர்.

இத்தகைய பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தாரிடமும் காணப்படுகின்றன.  மலாய் மொழியில் "லூ"( நீ)  எனலாகாது. முன்னிலைப் பணிவை 'அண்டா"  என்று  தான் சொல்லவேண்டும்.  வயதிற் குறைந்தோர் பெரியோர்முன் செல்லும்போது குனிந்தவாறு பணிவினைத் தெரிவித்துக்கொண்டுதான் கடந் து செல்ல வேண்டும்.

நீ என்ற சொல் ஒரு  து விகுதிபெற்று முதனிலை குறுகி " நிந்து" என்றாகி,  பின்னும் ஒரு வினைச் சொல்லாக்க    விகுதியாகிய "இ" என்பதை மேற்கொண்டு நிந்தி என்றாகி நிந்தித்தல் ஆனது.

நிந்தனை என்பது  'நிந்தி' + அன் + ஐ' என்பன புணர்வுற்ற சொல்.  அன் என்பது இடை நிலை ஆகும்.

நீ  என்பதென்ன?  தன்னின் நீங்கிய நிலையே "நீ"  ஆகும்.  நீக்கக் கருத்து.
இதிலிருந்தே பேசுவோன் தன் பண்பினின்றும் நீங்கியதையும் தான் இழிந்ததையும் பிறரை  இழித்ததையும் குறித்துப் பொருள் விரிந்தது.

இதேபோல் "நம்"  என்பதிலிருந்து நம்பு என்ற சொல் தோன்றியதும் காண்க.

ஒப்பீடு: (சொல்லமைப்பு)



நாம் > நம் > நம்பு (வினையாக்க விகுதி "பு") > ( நம்புதல்)
நீ > நின் > நிந்து ( து விகுதி ) > நிந்தி ( இ வினையாக்க விகுதி) > ( நிந்தித்தல் ).



பிறனின் எண்ணத்தைத் தனதாக்கி (நமதாக்கிக்) கொள்ளுதலே நம்புதல். நம்புதல் என்ற சொல்லமைந்தபின் கருத்தமைப்பில் ஒருமை ( தான் ) பன்மை ( நாம் ) என்பன தேவையற்றவை. தேவையானது நாவுரையைச் செவிப்பட்டார் ஏற்பு என்பதொன்றே.



சந்தித்திரிபுகள்:



நின்+து > நிந்து என்பதும் புணர்ச்சியில் பின் > பிந்து > பிந்துதல், முன்> முந்து> முந்துதல் என்பனவற்றின் அமைப்பைப் பின்பற்றியவேயாம்.  முன்> முந்து > முந்திரி, மன் > மன்+ து + இரு + > மந்திரி ( அரசனுடன் நிரந்தரமாய் நின்று ஆலோசனை வழங்கும் பெரிய அலுவலர் ) என்பன காண்க. மன்னுதல் - நிலையாய் இருத்தல். முன்னுதல் பின் மன்னுதலாய்த் திரிந்தது என்றும் அறிஞர் கூறியதுண்டு. சில் > சின் > சின்+து > சிந்து ( சிறு கவி )( சிறு நூல் நெயவு என்றும் கூறுப) என்பதுமது. பல் ( பலர் ) + தி > பன் தி > பந்தி ( பலர் உண்ணும் நிகழ்வு ) என்பதும் அறிக.



நின் + தி : நின்னை ( உன்னைத்) திட்டுதல் என்று சொல்லவும் வழியுள்ளது.


வெள்ளி, 3 ஜனவரி, 2020

ஊரும் பேரும். ( கிராமம், காராகிரகம், கிரகம், கிருகம், நத்தம் பிறவும்)


  1. முன் காலங்களில் வெளிச்சமும் காற்றுவசதியும் இல்லாத அறைகளில் கைதிகளைப் பூட்டிவைத்தனர் என்று அறிகிறோம்.   அதனால் காராகிரகம்" என்ற சொற்புனைவு தோன்றிற்று.  இது:


கார்  +  ஆகு + இரு + அகம்

என்னும் நான்'கு சிறு சொற்கள் இணைந்த புனைவு ஆகும்.

கார் :  கருப்பு.    கரு என்பது  கார் என்று திரியும்.  கார்முகில் என்பதுகாண்க.
ஆகு என்பது ஒரு வினைச்சொல்.
இரு  ( இருத்தல், வினைச்சொல்)
அகம்  - இடம், வீடு.

இச்சொல்லிலிருந்து  "கிரகம்" என்ற சொல்லைத் தனிச்சொல்லாக்க ஓர் உந்துதல் வந்தது..

இருக்குமிடம் என்னும் பொருளில்  இரு+ அகம் = இரகம் என்பது கிரகம் எனத் திரிதற்கு இஃது வழிவகுத்தது.

கிரு +  அகம் >  கிரு+ கம் >  கிருகம்  என்பது இன்னொரு புனைவு.

மா+ உலகம் என்பது   மா+ கம் என்று பகவொட்டு ஆனது.   மாக விசும்பு : விண்வெளி,    மா உலகம் என்பதில்  உல என்பது களைவுற்றது.

மக்கள் இருப்பதற்கு இடம் என்னும் பொருளில்   இரு+ ஆகும் + அம்  =  இரு+ ஆம் + அம் =  இராமம் > கிராமம் என்றுமாகும்.

பண்டைத்தமிழில்  "கம்"  > கமம் என்பதும் கிராமம் அல்லது சிற்றூர் குறித்தது.

க என்பது கிர என்று அயலில் திரியும்.

க > கிர > கிரா > கிராமம் என்று திரிதலும் கூடும்.  கமம் > கமா என்பது "காமா" என்று சிங்கள மொழியில் திரிந்தது.  கத்ரிகாமா.  இன்னும் "கதிர்காமம்". இராமம் என்பது கிராமம் என்றுமாதல் கூடும்.  ஆதலின் இது இருபிறப்பிச் சொல்

கம்+ போங்க்  என்ற தென் கிழக்காசியச் சொல்லிலும்  கம் உள்ளது.

புகுதல் என்பது மணமாகிப் புகுதல் அல்லது சென்று வாழ்தல்.

புகும் கமம்  >   கம் + புகும் > கம்பூங்க் > கம்போங்க் என்பது மறுதலைப் புனைவு.

கம் என்ற பழஞ்சொல்,   கண் >  கம் என்று விளைந்த சொல்.  கண் என்பது இடம்.  ண்>ம் ஆதல் மட்டுமின்றி,  கண்> கணம் , இடைக்குறைந்து  கம் என்றுமாகும்.  ஆதலின் கம் என்பது தமிழே   ஆகும்.

பல தென் கிழக்காசிய மொழிகளில் மண்டிங்க்  அல்லது திராவிட  ( தமிழ் இனமொழி) ச் சொற்கள் உள்ளன என்று பிறரும் கருதியுள்ளனர்.  ( வின்டர்ஸ் என்னும் ஆய்வாளர் உரை).

தவளை என்ற சொல்லும் தென் கிழக்கு ஆசியாவில் வழங்கும்.  தாவு + அளை = தவளை,  நெடிற்குறுக்கம்.  தோண்டு> தொண்டை,  சாவு > சவம் , கூம்பு > கும்பம்,  கூடு >  குடும்பு, குடும்பம்;  கூவு > குயில்,   காழ் > கழுதை  என்பன காண்க.

குமரி> குமர் > கிமர்  .

கம் + புகு + சி + யா > கம்பூச்சியா.   ( எ-டு:  பகு> பா:   பகுதி > பாதி)

கிராமம் போட்டு வாழ்ந்தவர்கள்:  கம்+போடு+ சி + யா>  கம்போட்சியா > கம்போட்ஜா.

குமரிக் கடல்கோளில் தப்பிச்சென்று கமம் அல்லது கிராமம் போட்டவர்கள். ( என்பர்).

நத்தம் என்பது ஓர் ஒட்டுக் கிராமம்.  பல வசதிகளும் உள்ள பெரிய கிராமத்தை ஒட்டியுள்ள சின்னஞ் சிறு ஊர்.  நத்துதல் - ஒட்டியிருத்தல்.

நத்து > நத்தை.
நத்து > நத்தம்.  (ஊர்ப்பெயர்:  இடையநத்தம்).

நத்தி வாழ்தல் >  அண்டி வாழ்தல்.

தண்செய் > தஞ்சை (ஊர்பெயர்).   ஆற்றுப்பாய்ச்சலால் தண்மை பெற்ற ஊர்.   செய் என்பது நிலம்.  நன்செய், புன்செய் முதலிய காண்க.
ஆனால் அங்கு அரசனின் மரணதண்டனை பெற்ற கைதிகளுக்கு  அது தம்+ சாவு+ ஊர் = தஞ்சாவூர்  ஆய்விடும்.( சோழப்பேரரசர்கள் காலத்தில்)

அடுத்து உரையாடுவோம்.


  • தட்டச்சுப் பிழை  காணின்  - பின் திருத்தம்.