திங்கள், 29 ஜூன், 2020

உள்ளங்கள் நடுங்கும் உலகப்போர் வருமோ?

மூளுமோ  மூன்றுறழ்  உலகக்  கொடும்போர்
 முனைகள்   பலவாக
ஆளுமோ  எந்தவல்  லரசும்      அதனில்             
பெருவெற்   றிகள்பெற்றே     
நீளுமோ  நுண்மியாம் முடிமுகி விளைத்த 
 இடர்கள்          துயர்யாவும்
நாளுமே  மக்களும் தெளிவில்  நிலையில்
 உளங்கள்  நடுக்குற்றவே..


மூன்றுறழ் - மூன்றாவது.
முடிமுகி = கொரனா
நுண்மி -  நோய்க்கிருமி
நடுக்குற்றவே -  நடுக்கம் உற்றனவே.

சனி, 27 ஜூன், 2020

இலிகிதம் (கடிதம்)

இலிகிதம் என்னும் சொல் இப்போது வழக்கில் அருகிவிட்டது. அதற்கு ஈடான சொற்கள் சில வழக்குக்கு வந்துள்ளன. அவற்றுள் மடல் என்பதொன்று.


கடிதம் என்பது ஒரு கடினப் பொருளில் பதிவுசெய்யப்பட்ட செய்தி என்னும் கருத்தை நமக்கு அறிவிக்கிறது. இச்சொல்லமைப்பில் இடைநிலையாக வருவது இது என்ற சுட்டுப்பெயராகும். அது இது என்பவனவெல்லாம் இவ்வாறு இடைநிலையாகப் போதரும் சொற்கள் பிற்காலத்தில் தமிழர்களால் அமைக்கப்பட்டன. இப்புதியவை படிப்போரைக் கவர்ச்சி செய்தமையால் வழக்கில் இருந்தன. ஓர் எடுத்துக்காட்டு: ( இடைநிலை: அது)


பரு + அது + அம் = பருவதம். வகர உடம்படு மெய் புணர்க்கப்பட்ட சொல் இது. வினைப்பகுதி பரு (பருத்தல் ) என்பது. பருவதம் என்பது மலையைக் குறிக்கிறது. மலை பருத்ததன்று என்று நீங்கள் எண்ணினாலும் அது பரியது என்பதை ஒப்புவீர். என்ன வேறுபாடு? ஏதுமிருப்பினும் இருக்கட்டுமே.


இதைப்போலவே இது ( இடைநிலை ) வந்த சொற்களும் பல. ஆயிடை

கடிதமென்பதும் ஒன்றாகும்.


கடு + இது + அம் = கடிதம்.


சொல்லால் தெரிவிப்பது, கடிதம் ஆகாது. இதற்குக் காரணம் சொல்லில் கடிய அல்லது கடினமான பொருள் ஏதுமில்லை. அது வெறும் காற்று. கேட்போன் செவிடனானால் அவன் சொல்லை அறியமாட்டான். ஏதாவது செவிக்கருவி வேண்டும். ஆனால் எழுதிக் கொடுத்துவிட்டால் அது கடினப் பொருளில் எழுதப்பட்டிருப்பதனால் கடு (கடுமை) + இது (இடைநிலை) + அம் (அமைந்தது காட்டும் விகுதி) --- ஆகின்றது. அதாவது "ஹார்டு காப்பி" ஆகிவிடுகிறது.


நாம் தெரிந்துகொள்ள முனைந்தது இலிகிதம். இந்தச்சொல், எதன்மேல் பதிவுபெற்றுள்ளது என்பதைப் பற்றிச் சொல்லாமல், எவ்வாறு பதிவுபெற்றுள்ளது என்பதை அறிவிக்கும் சொல்லாகின்றது. அது எப்படி என்பதைச் சொல்கிறோம்.


பழம் என்ற சொல் பலம் என்றும் வரும். ல் - ழ் போலி அல்லது திரிபு. தமிழ் என்பது தமில் என்பதினின்று திரிந்தது என்பார் கமில் சுவலெபெல். விழிப்ப நின்று இவைபோலும் மாற்றுக்கள் வருங்கால் குறித்துக்கொண்டு அறிக. இவ்வாறுதான்:


இழு > இலு என்பதும் அமைந்தது. இழு என்றாலும் இலு என்றாலும் கோடிழுப்பது. கோடிழுப்பதுதான் எழுதுவது.


பிற ஆசிரியர்கள் கூறியபடி:


இழு > இழுது > எழுது.


இழு > இலு:


இலு > இலுக்கு > இலக்கு ( எழுதிக் குறிக்கப்பட்டது).

இலக்கு > இலக்கியம் ( எழுத்தல் இயன்றது / அமைந்தது).

இலக்கு > இலக்கணம் ( எழுத்தால் இயன்றவற்றை அணவி எழுந்தது.)

அணம் விகுதி. (சார்ந்து எழுவதை குறிக்கப் பொருத்தப்படும் விகுதி.)


இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் என்பர்.


இனி இலிகிதம்.


இலு + இகு +இ து + அம்.


இலு> இழு என்பது எழுது என்னும் கருத்து.

இகு என்பது இங்கு என்பதன் இடைக்குறை.

( இதை எல்லாம் பலவழிகளில் விளக்கலாம். இகு என்பதிலிருந்து தான் இங்கு என்ற சொல் மெலித்துப் பிறந்தது எனினுமது ).

= இகரச் சுட்டு. கு = சேர்விடம் குறிக்கும் இடைச்சொல்.)

இங்கிருந்து (அங்கு) இழுப்பதுதான் கோடு, எழுத்து எல்லாம்.


இவற்றுள்:


இலு என்பதன் உகர ஈறும் இகு இது எனற்பால இவற்றின் உகர ஈறுகளும் விலக்குக.



இல் + இக் + இத் + அம்


இலிகிதம் ஆகிவிடும்.


மறுபார்வை பின்.








வியாழன், 25 ஜூன், 2020

வாலிபன்

வாலிபன் என்ற சொல்லின் மூலங்களைக் 
காண்போம். இதனடிச் சொல் வல் என்பது
இதிலிருந்து கிளைத்த உங்களுக்குத் தெரிந்த
 சில சொற்கள் இங்கு தரப்படுகின்றன.

வல் - வலிமை;
வல் - வல்லவன்.
வல் - வாறு ( பொருள்: வலிமை).
(வல் > வால் > வால்+து > வாறு. இது வாற்று என்று வலி மிக்கு வரினும் பின் இடைக்குறைந்து வாறு என்றாம். சொற்கள் நீடலும் குன்றலும் தமிழியல்பு. பழைய இடுகைகளிற் கண்டு
குறிப்பெடுத்துக் கற்றுக்கொள்க).

-டு:

நல் > நறு > நாறு > நாற்றம்.

நாற்றம் என்றால் நன்மணம். இது பின் பொருள் இழிபு கொண்டது.

வல் > வாலரி > வாளரி

வலிமையுடன் பிற விலங்குகளை அடித்துக் கடித்துக் கொல்லும் சிங்கம். அரிமா என்பதும் அப்பொருள் பகுதிபொருந்துவதே.

வல் > வால் > வாலுகம். மணல்.
கட்டிட வேலைகளில் வலிமைக்காகக் காரையுடன் ( சிமென்ட்)
கலக்கப்படுவதாகிய மணல்.

வல் > வால் (வலிமைக்காக)
உக > உக+ அம் > உகம் ( உகக்கப்படுவது).

வல் > வால் > வால் + உகு + அம் > வாலூகம்

இது நஞ்சு. உண்டால் வலிமையை உகுத்து ( எடுத்துக்) கொன்றுவிடவும் செய்யக்கூடியது. உகு+ அம் = ஊகம், இது முதனிலை நீண்டு திரிந்த தொழிற்பெயராய் வல் என்பதனுடன் ஒட்டிச் சொல் அமைந்துள்ளது.

வால் என்பது மிகுதியும் குறிக்கும். வலிமை என்பது உடல் தெம்பு மிகுதி.

ஒரு மனிதன் அல்லது விலங்குக்கு வலிமை மிக்கிருக்கும் காலமெனின் அது இளம் பருவமே. ஆகவே வலிமைக் கருத்து இளமைக் கருத்துக்குத் தாவிற்று.

வல் > வால் > வால் > வாலை (வாலைப்பருவம்)
வல் > வள் > வாளார் ( இளங்கொம்பு).
வள் என்ற அடிக்குப் பல பொருள்: அவை, கூர்மை, படுக்கை, பெருமை, வலிமை - தொடக்கத்துப் பலவாகும்.
வல் > வால் > வால்+ பு + அன் = வாலிபன், இங்கு இகரம் சாரியையாய் வந்து சொல்லுக்கு இனிமை பயந்தது.




புதன், 24 ஜூன், 2020

இலடாக்கு (Ladakh)


இங்குள்ள தாளிகை வலைத்தளத்துக்குச் சென்று, அதில் உள்ள படத்தைப் பார்த்தபின் கவிதையையும் பிறவற்றையும் வாசிக்கவும்:

https://www.hindustantimes.com/india-news/india-china-hold-diplomatic-meeting-on-border-stand-off-in-ladakh/story-wrnl1LQZ1UTOdItWRJrMvL.html?utm_source=browser_notifications&utm_medium=Browser&utm_campaign=notification


நிலவின் படமென உலவுமென்  கண்கள்;
கண்களை உறுத்தும் கருமுகப் பாறை;
பாறையின் பாங்கினில் பயிர்களோ இலவே;
இலர்சிலர் உளர்; இல்  அடாஆக்கு மலையே.


அந்தாதிப் பாடல்.

உரை:

என் கண்கள் இது நிலவின் படமோ என்று
அப்படத்தில் மேல் உலாவுகின்றன;
அந்தக் கருமுகம் காட்டும் பாறைகள் கண்களை
உறுத்துகின்றன.
எந்தப் பயிரும் அங்கு முளைக்கவில்லை;
சில ஏழைகள் பக்கத்தில் உள்ளனர்.

இது இலாடாக்கு மலை.

இல் = வீடுகள்' (வீடுகளுக்கு)*
அடா = அடுத்துக்கூட வர இயலாமல்;
( கொடிதானமுறையில் )*
ஆக்கு = இயற்கை ஆக்கிய; 
மலை.

*இப்படி உரைப்பினும் ஆகும்.

இல்+ அடா+ஆக்கு = இலாடாக்கு!!.
(பயன்பாடற்ற நிலப்பகுதி
என்பது.)

எ-டு:

அடு > அடி. (தொழிற்பெயர்).  அடுத்துவரலால் அடி என்ப.

மெய்ப்பு பின்.

திங்கள், 22 ஜூன், 2020

இன்றைய கொரனா நிலைமை


கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!
வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல் ;
தெருவிற் பனையும் அருகிய நிலையே!
முருகிழந் ததுவே முதுபே ருலகே.


உரை:


கொரனாக் கொல்நோய்  -  கொரனா என்னும்
உயிர்க்கொல்லி நோய்;

பரவும் முடிமுகி! -  இது தொற்றிப் பலரையும்
பீடிக்கும்,  மணிமுடி வடிவில் தெரிவதாம் நோய்
நுண்மி;

வருவார் வாய்ப்புகள்  கருதுக குன்றுதல்  - 
கடைகள் பொதுமக்கள் வருமிடங்கள் எல்லா
வற்றிலும் வரத்துக் குறைந்துவிட்டது; தொழில்
வாய்ப்புகளும் குறைந்துவிட்டன;


தெரு   விற்பனையும் அருகிய நிலையே! - 
தெருவில் இருக்கும் கடைகள் கூட மிகக்
குறைந்துவிட்டன, இதுவே நிலை.

தெரு விற்பனை;  தெருவிற்  பனை என்று
ஓசைப்பொருட்டு வகையுளி.
தெருவில் வளர் பனைமரத்தைக் குறித்திலது.


முருகிழந் ததுவே முதுபே ருலகே. - இவ்வாறு
இவ் வயதாகிவிட்ட பெரிய  உலகம் தன் அழகை
இழந்துவிட்டதே!

என்றவாறு.





முடி - மணிமுடி,  முகி - முக உருவம். (கொரனா)
முருகு - அழகு. இதை வேறு பாடல்களில் மகுடமுகி
என்றும் குறித்துள்ளேம்.


நிலைமை விளக்கும் கவிதை.

திருத்தங்கள்:
இதில் கொரனா என்னும் முடிமுகி நோயினால்
என்பதை "கொரனாக் கொல்நோய்,  பரவும் முடிமுகி!"
என்றும்  "வருவார் குன்றினர் வாய்ப்புகள் குன்றின"
 என்பதை வருவார் வாய்ப்புகள் கருதுக  குன்றுதல் 
என்றும் மாற்றியுள்ளோம். 

பரவும் முடிமுகியையே கொரனா கொல்நோய் என்று
உலகம் சொல்கிறது என்பது முதல்வரி..


எதுகைகள்:

கொர,  பர,  வரு,  கரு,
தெரு,  அரு,  முரு.

மோனைகள்

கொரனாக் கொல்நோய்!
வருவார் வாய்ப்புகள்  
முருகிழந் ...முதுபே 

என்பவற்றில் மோனைகளைக் கண்டுகொள்க.

மெய்ப்பு பின்.


அதிகாரம் (நூற்பிரிவு)

அதிகாரம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.
இங்கு நாம் கவனிப்பது நூலதிகாரம். அதாவது நூலில்
பிரிவுகளாக வரும் அதிகாரங்கள். முன் இதை 
அதி + காரம் என்று பிரித்துப் பொருள்கூறுவதுண்டு.


அத்தியாயம் என்ற சொல்லுக்கு இங்குப் பழைய 
இடுகைகள் தந்துள்ள பொருளைச் சார்ந்தே இதை
விளக்கப் புகுவோம்.


அற்று > அத்து. இது பேச்சு வழக்கிலும் இயல்பான
திரிபாகும்.


இகு இது இங்கு என்பதன் ஙகர ஒற்று நீங்கிய
இடைக்குறைச் சொல்.  எடுத்துக்
காட்டு  இன்னொன்று: 

ஓங்கு > ஓகு > ஓகம் என்பது போலுமே.

ஆரம் : இது ஆர்தல் என்னும் வினையில் அம் 
சேர்ந்த தொழிற்பெயர். நிறைவு என்பது 
இச்சொல்லின் பொருள். இச்சொல்லுக்கு
வேறு பொருட்களும் உள. சூழ்தல் அல்லது
சுற்றி இருத்தலும்  ஆகும்.


அத்து = முடிந்து,
இகு = இதே இடத்தில் அல்லது நூலில்
ஆரம் = நிறைவாகுவது.


அத்தியாயம் ஒவ்வொன்றும் முடிந்து முடிந்து 
தொடங்கித் தொடங்கி  நிறைவாகுவதுதான். ஆதலால் 
பொருள் பொருத்தமாக உள்ளது.


அத்து இகு ஆரம் > அத்திகாரம் , மீண்டும்
இடைக்குறைந்து அதிகாரம் ஆகிறது.

தமிழ்மொழி முழுவதும் இவ்வாறு சொற்களைத்
தொகுத்தலும் குறைத்தலும் மிகுதி. விழிப்ப
நோக்கின் விரியும் அறிவு; புரியும் நிலைமை.

என்னில் -  எனில்,  தன்னில் - தனில்;
முக்கண்ணா போற்றி -  முக்கணா போற்றி.


அத்தியாயம் என்பதில் த் என்ற ஒற்று
வீழவில்லை. இதில் வீழ்ந்துள்ளது. இது
சொற்சுருக்குக்கும் இனிமைக்கும் ஆகும்.


சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்
என்பதில் த் என்னும் ஒற்று வீழ்ந்துள்ளது. 
லகரம் ரகரம் ஆயிற்று. இவை பல 
சொற்களில் காண்புறும் நடைமுறைகளே.


தட்டச்சு:  சரிபார்க்கப்பட்டது. 23062020

பெருமானும் பிராமணரும்

[Re-posted after Edit.]


ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சில இணையதளங்களில் பிராமணர் என்ற சொல்லின்  தோற்றம் பற்றிய ஆய்வுகளும் உரையாடல்களும் 
நடைபெற்றன. அதில் பலர் பெருமான் என்ற சொல்லினின்றுதான் இச்சொல் முகிழ்த்தது என்று கருத்துத்தெரிவித்திருந்தனர்.

இந்தச் சொல் நீண்டகாலமாகவே ஆய்வு செய்யப்பட்டுப் பல்வேறு முடிபுகள் முன்வைக்கப்பட்ட சொல்லாகும்.

ஆபி ட்யூபா என்ற பிரஞ்சு அறிஞர் தம் ஆய்வில் இது " ஏப்ரகாம் " என்ற சொல்லினின்று திரிந்துற்றது என்று கூறினார்.

இப் பிராமணர் என்ற சொல்பற்றிப் பிறர் கருத்துக்களை யெல்லாம் இவண் தொகுத்துரைப்பதென்றால் இடுகை நீண்டு படிப்போருக்கு உறக்கமே வந்துவிடுமாதலால்
அவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாம் நேரடியாகவே நம் ஆய்வினைத் தொடங்கிவிடுவோம்.

பெருமான் என்ற சொல் பிரான் என்றும் பெருமாட்டி என்ற சொல் பிராட்டி என்றும் திரியும். பெரு - பிரா என்ற முதலசைத் திரிபுகளைக் கவனிக்கவேண்டும். இவ்வாறே பெருமான் - பிராமான் > பிராமனன் என்று இச்சொல் திரிந்துவிட்டது. இதில் 0னகரம் என்ற எழுத்தே வந்திருக்கவேண்டும். ணகரத்துக்கு வேலையில்லை. ஏனென்றால் பெருமான் என்ற மூலத்தில் ணகர ஒற்று இல்லை. இன்றைய நிலையில் பிராமணர் என்றே தமிழில் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருதலால், இந்த மரபினை நாம் போற்றவேண்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றீடுதான் ஆய்வாளர்களைத் திசைதிருப்பி விட்டதென்பதை உணர்க.

------என்று முடிக்கவே, பிரம்மன் என்ற சொல்லும் பெருமான் பிரம்மன்(திரிபு) என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.

பெருமான் என்பதும் திரிசொல்லே. அது பெருமகனென்பதன் திரிபே என்று உணர்க.

ஞாயிறு, 21 ஜூன், 2020

தொற்று நோய் நீங்கிச் சிங்கப்பூர் மேலெழும்



நளியிரு முந்நீர் தாண்டி

நம்சிங்கை வந்த நோயோ




வெளிநாட்டு வேலை யோரை

விதப்புறப் பற்றிக் கொண்டு




களிநடம் ஆர்த்த தன்றே.

காலத்தில் நீங்கி வீழும்




ஒளியுறும் மீண்டும் நாடே

உங்களுக் கையம் வேண்டாம்.







பொருள்:-

நளியிரு முந்நீர் - நடுக்கடல்.

வேலையோர் - ஊழியர்

களிநடம் - மகிழ்ச்சி நடனம்

ஆர்த்ததன்றே - செய்ததல்லவோ

விதப்புற - பெரிதும், தனியாக.

காலத்தில் - நாட்கள் செல்லச்செல்ல





சனி, 20 ஜூன், 2020

ஆடு மேய்களம் இலடாக்கு.



ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார் வாழும் இடமே
ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை திடமே
ஆடுகொடு மனத்தராய் அரசுகளில் வல்லோர் ஊன்று கடமே
ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் செல்லார் எனில் மடமே.


பொருள் 

1.ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார்
 வாழும் இடமே - அமைதியாக ஏழைகள் ஆடுமேய்த்து 
வாழ்க்கை நடத்தும்  இடமாகும்; 
 ( இல்லார் - ஏழைகள்)

2.ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை  - 
இலாடாக்கு என்னும் இந்நிலப் பரப்பில் ஆடவேண்டியவை 
ஆடுகளே; 
 ( அதுதான்இறைவன் அமைத்தவழி என்பது).

3. திடமே   ஆடு   கொடு மனத்தராய் அரசுகளில்
 வல்லோர் ஊன்று கடமே - ( இப்போது)  அவ்விடம் 
வளைந்த  மனத்திடம் வாய்ந்த வல்லரசுகள் 
அசையாமல் நிற்கும் மலைப்பகுதி  ஆகிவிட்டது!!

(ஊன்றுதல் - நிலையாக நிற்றல் .
 கடம் - மலைப் பகுதி. 
 எ-டு: வேங்கடம் - வெப்பமுள்ள மலைப்பகுதி) 

திடமே  ஆடு(ம்) கொடு மனத்தர் -  மிகுந்த மன 
அழுத்தமுடன்  செயல்படும் கொடிய நெஞ்சினர்.
  (  போரினை விரும்புவதால் ).


4.  ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் 
செல்லார் எனில் மடமே. -   இந்த வல்லரசுப்
படையினர் அங்கிருந்து செல்லாவிட்டால் 
அது மடமையாய் முடியும்.  
( அழிவை உண்டாக்குவது மடமை என்பது 
கருத்து. மடம் - மடமை)


இக்கவிதையை நுகர்ந்து இன்புறுவீர்.

மெய்ப்பு - பின்
Edited 5.31 am 22.06.2020


வெள்ளி, 19 ஜூன், 2020

விகாசித்தல் - விரிவடைதல்.

எந்தச் சொல்லையும் அது எப்படிக் காதுகளில் வந்து ஒலிக்கிறது
என்பதை மட்டும் வைத்து  அதன் தோற்றுவாயை முடிவு செய்துவிடமுடியாது.பல அளவைகளால் அவற்றை முடிவு செய்வதுதான் சொல்லாய்வு என்பது. இதற்கு ஓர் உண்மையான எடுத்துக்காட்டினை
யாம் எம் நண்பர்களிடம் கூறுவதுண்டு.

பெரியசாமி என்ற ஒரு தமிழர் ஓர் அமெரிக்கன் குழும்பில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் சற்று நீட்டமாக இருக்கிறது என்று அழைக்க இடருற்ற அவருடைய  அலுவல் தோழர்கள் அவரைப் பெரி என்று அழைத்தார்கள். ஆகவே பெரியசாமி மிஸ்டர் பெரி ஆகிவிட்டார்.  மிஸ்டர் பெரி என்ற நிலையில் இந்தத் தமிழர் தம் சக அலுவலரிடையே மிகவும் விரும்பப் படுபவர் ஆனார்.  அதற்கு அவர் பெயரும் ஒரு காரணியாகிவிட்டது.பெரிதும் ஓரசைச் சொற்களால் ஆன மொழியுடையார் நா ன் கு  ஐந்து அசைச் சொற்களைப் பெயராகக் கொண்ட தமிழரையும் ஏனை இந்திய வழியினரையும் விளிப்பதில் சிரமம் அடைவது உண்மை. மிஸ்டர் பெரி ஒரு வெள்ளைக்காரன் என்று அவரைத் தெரியாதவர்கள் நினைத்தனர்.

தமிழ்ச் சொற்கள் இன்னொரு மொழிக்குப் பரவினால் எவ்வாற்றானும்  இடர்ப்பட்டு மாறி ஒலிக்குமென்று உணரவேண்டும்.

அதனால்தான் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளின் முன்னரே தொல்காப்பியனார் " திரிசொல்" என்றொரு சொல்வகையைக் கூறினார். திரிசொல், ஒலித்திரிபு மட்டும் கொண்டதன்று. இதைப் பின்னர் ஓர் இடுகையில் விளக்குவோம். எம் பழைய இடுகைகளிலும் ஆங்காங்கு விளக்கம் காண்க

இன்று விகாசித்தல் என்ற சொல்லை விளக்குவோம். இதன் அடிச்சொற்கள் (அதாவது: வினைச்சொல் அடிகள் தொடங்கி  ) மிகு(தல்),  ஆ(சு){ ஆதல்} ,  வினையாக்க விகுதியான இகரம் முதலியவை.

மிகுதல்::  மிகு என்பது விகு என்று திரியும். இது  மிஞ்சு > விஞ்சு என்ற திரிபு போலுமே ஆகும்.

ஆசு என்பது பற்றுக்கோடு என்று பொருள்படும் சொல்.  பற்றுக்கோடென்பது பற்றிக்கொள்ளுதல்.

ஆசு என்பது ஆசிரியர் என்ற சொல்லிலும் உள்ளது. ஆசான் என்பதும் அது.  ஆசிடையிட்ட எதுகை என்ற யாப்பிலக்கணக் குறியீட்டிலும் உள்ளது. இவற்றை இங்கு விளக்கவில்லை. பழைய இடுகைகளிற் காண்க. தமிழ்ப்புலவராகிய எம் குரு அப்பாத்துரைச் செட்டியார்,  தமிழ் ஆசான் என்ற என்ற இதழின் ஆசிரியரும் ஆவார். இவர் அலுவலகம் சிங்கையில் பழைய ஆரிய சமாஜ் அலுவலகத்தில் கீழ்மாடியில் இருந்தது.  ஆதனால் ஆசான் என்ற சொல் எமக்கும் பிடித்ததுதான்.   ஆசு+ஆன்:  ஆன் என்பது ஆண்பால் ஒருமை விகுதி.

மிகு > விகு.
ஆசு.
இ - வினையாக்க விகுதி.
விகாசித்தல் : இதன் பொருள் விரிவு அடைதல். பூத்தல்.

விகாசித்தல் என்ற தமிழ்ச்சொல், முயற்சித்தல் என்பதுபோல்  ஒரு தொழிற்பெயராகிய ஈற்று ஆசு என்பதிலிருந்து  முகிழ்த்துள்ளது. விகாசித்தல் என்பதன் நிலையுறுப்பு:  விகு ( திரிசொல்).  வருவுறுப்பு: ஆசு ( இயற்சொல்). விகுதி:  இ ( இகரம் ).

அறிக, மகிழ்க.


மெய்ப்பு:  பின்பு. 19.6.2020
தட்டச்சு பிறழ்வு:  5.42 மாலை 20.6.2020 சரிபார்க்கப்பட்டது.

















குறிப்புகள்:

அக ஊழியர் -  சக ஊழியர் (திரிபு). இன்னொரு எடுத்துக்காட்டு:  அமணர்- சமணர்.

புதன், 17 ஜூன், 2020

இரங்கல்



போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம்

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே
நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
றாரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே


உரை:

போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே - 
இத்திறத்தார் அனைவருக்கும் நம் நெஞ்சுருக்கம் உரித்தாகுக.

நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
று  -  ( இவர்கள் உறவினர் நட்பினர் முதலானோர்)  அதனால்
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று; 

ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
-  அருள் நிறைந்த இறைவன் அடிகளின் முன் நின்று வணங்கி
( இறைஞ்சிக்கொண்டு) விழுந்தேம் யாம்

என்றவாறு.

ஆர் அருள் - வினைத்தொகை.






செவ்வாய், 16 ஜூன், 2020

நலமே வாழ்வீர் ஆய்வன்பர்களே

ஆய்வு மனத்தால் அகிலம் அணிசெயும் அன்பர்கள்நாம்
காய்தல் உவத்தல் எதுவுமே இன்றிக் கணித்தறிந்தோம்
தேய்வென யாதும் பிணியாத் திறனுடன் தேன்சொரிந்தோம்
நோய்த்தொற் றிலாது நலமாய் உலவி நனிவாழ்வமே 




பொருள்
ஆய்வு மனம் - ஆராய்ச்சி மனப்பான்மை.
உண்மை காணும் நெஞ்சம். தம்கருத்துக்களைத் திணியாமை.
கணித்தறிதல் - அடிப்படைகளுடன் கூடிய துருவியறிதல்
தேய்வு பிணியா -  குறைகள் பீடிக்காத
தேன்சொரிந்தோம் - இனிமையாகப் பண்ணும் ஆராய்ச்சியும் விளைத்தோம்.
பண் - பாடல். இங்குப் பண்ணான அல்லது நல்ல ஆய்வு.
நனி -  இன்னல்கள் இல்லாத

காய்தல் - வெறுப்பு
உவத்தல் - விருப்பு
(அதாவது எப்போதும் நடுநிலையுடன்)

உடல்நலம் காத்துக்கொள்ளுங்கள்.
இது கடினமான காலம்.

திங்கள், 15 ஜூன், 2020

இக்கட்டு

இக்கட்டு என்ற பேச்சு வழக்குச் சொல்லைப் பார்ப்போம்.

இது ஓர் இடைக்குறைச் சொல்.

இடுக்கண் என்பதில் இடு+ கண் என்று இரு உறுப்புச்சொற்கள் உள்ளன.
கண் =  ஏதேனும் ஒரு நிலையில் அல்லது இடத்தில்;   இடு = இடப்பட்டது, அல்லது எவ்வாறோ வந்து நிற்பது என்று பொருள் கூறலாம்.  அதுபோலவே, இடுக்கட்டு என்ற சொல்லே டுகரம் குன்றி, இக்கட்டு என்று வந்துள்ளது.

கட்டப்பட்டதுபோல் வந்துற்ற ஒரு நிலையே இடுக்கட்டு. இடையில் உள்ள டுகர வீழ்ச்சி. இதுபோல் டுகரம் வீழ்ந்தவை:

கேடு+ து >  கேது  ( ஒரு நிழற்கோள்).

பீடு + மன் > பீமன் > வீமன்.  ( பெயர் ).

இங்கனம் வல்லினம் வீழ்ந்த இடைக்குறைகளை எம் பழைய இடுகைகளிற் காணலாம்.

கண்+ து = கட்டு என்று வல்லெழுத்து வருதல் உண்டு.  என்றாலும் இடுக்கண்+து > இடுக்கட்டு > இக்கட்டு என்று இடைக்குறை வரவே செய்யும்.

அறிக. மகிழ்க.

முகக் கவசம் அணிக. இடைவெளி போற்றுக.

மெய்ப்பு பின்

ஞாயிறு, 14 ஜூன், 2020

பங்கயம் (பங்கஜம்)




இன்று பங்கயம் என்ற சொல்லினை அறிவோம்.

தாமரைப் பூவில் இதழ்கள் அடுக்கிவைத்தது போல், விரிந்து அழகாக இருக்கும். இதழ்கள் அடுத்தடுத்து இருத்தலால் அகரச் சுட்டிலிருந்து பிறந்த அயம் ( அயல் ) என்ற இறுதி வந்துள்ளது. - அடுத்தடுத்து, அம் - அமைந்தது என்பது காட்டும் விகுதி. அமைதல் என்ற வினையின் அடிச்சொல்லே அம் என்பது, இங்கு விகுதியாய் வந்துள்ளது.

அயல் ( அயம்) -  அடுத்தடுத்து அமைந்தது.  அயலென்பது அடுத்திருப்பதே. (அ அல் : அயல்; அ அம் : அயம், யகர உடம்படுமெய்.)

இவ்வாறு அடுத்தடுத்துப் பகுந்து நிற்றலால் பங்கு என்ற சொல் முன் நிற்கிறது. பகு > பங்கு. பங்கு என்பது தொழிற்பெயர். இதன் பொருள் பகுக்கப்பட்டதென்பது.

பங்கு + அயம் > பங்கயம் ( பங்கஜம் ).

பங்கயவல்லி > (பங்கஜவல்லி ) - தாமரையில் வீற்றிருப்பவள்.

இதனைப் பங்-~   + கயம் என்று பிரிப்பர் சில ஆசிரியர். குளத்தில் இருப்பது என்று பொருளுரைத்தல் ஆம்.  பங்கம் - சேறு என்பதுமொன்று. சேற்றில் மலர்வதென்பது.

இது எவ்வாறு காணினும் காரண இடுகுறிப்பெயராகும்.

அறிவீர் - மகிழ்வீர்.

தட்டச்சு மெய்ப்பு - பின்.





வியாழன், 11 ஜூன், 2020

அரசனும் அரணும்.( ராஜன் - ராணா - ராணி.)

இங்குத்   தலைப்பில் கொடுத்துள்ள  சொற்களின் முகிழ்புலங்களைக் கூடுமானவரை சுருங்கத் தெரிந்துகொள்ள முனைவோம்.

கூறியன மீண்டும் கூறப்படாதொழியுமாறு, அரசன் என்ற சொல்பற்றி அறிய
இவ்விடுகையைப் படித்தறியப் பரிந்துரைப்போம்:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html  -   அரசன்.

அரசன் என்பதன் அடிச்சொல் அர் > அர ķĺĺò
என்பதுதான். உடனிருப்பவர்களையும் நாட்டு மக்களையும் அடக்கி ஆளும் வலிமை பெற்றவனே அரசன். குடிவாழ்நரை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நன்மையையும் அரசனே செய்தான்.  அயலார் உட்புகுந்து மக்களைத் துன்புறுத்தாமல் அவன் பார்த்துக்கொண்டான்.  இவற்றுக்காக அவன் கோட்டைகளையும் அரண்களையும் நிறுவினான்.

அர் என்ற அடியினின்றே அரண் என்ற சொல்லும் தோன்றியது. அரண்களை உருவாக்கி  ஆட்சி இனிது செல்லுமாறு பார்த்துக்கொண்டமையின், அவன் அரணியன் (  "அரணன்"  "அரணான்" )  ஆவான். அவனுடன் இருந்த அவன் அரசி அவனின் ராணி ஆனாள்.   அரண் >( அரணி ) > ராணி > இராணி..

அயன்மொழித் திரிபு  ராணி என்பது.   அரண்களை ஆட்சி புரிந்தோர் அரசர் குலத்தோரே ஆதலின்,  அரசி ராணி எனப்பட்டதும் அவர்கள் வாழ்ந்த பெருமனை அரண்மனை எனப்பட்டதும் பொருத்தமாய் அமைந்தன.

அரங்கன் என்ற சொல் ரங்கன் என்று தலையிழந்தது. . இதுபோலவே ராணி என்ற சொல் தலையிழந்து அவ்வாறாயது..

அரசனும்  ராணா  ( அரணன் - வழக்கழிந்த சொல்வடிவம்)  என்றும் அரசி,  ராணி மகாராணி என்றும் சுட்டப்பெற்றனர்.

இற்றை ஆய்வில் திராவிட அல்லது தமிழின மக்களே அரசுகளை நிறுவினர் என்று கருதப்படுகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


( இடைவெளி கடைப்பிடித்து நோயினின்று
காத்துக்கொள்ளுங்கள் ).

மெய்ப்பு - பின்

இது  ( ķĺĺò )  என்ன குறிப்பு என்று தெரியவில்லை. கள்ளப்
புகவர்கள் இதைப் பதித்துள்ளனர். ஏன் என்பது தெரியவில்லை.
என்ன நடக்கும் என்று பார்ப்போம்.



புதன், 10 ஜூன், 2020

செது என்னும் அடிச்சொல்.

இன்று சேதம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இது தமிழில் உள்ள வழக்குச்சொல் தான்.

"சேதம் இல்லாத இந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடலில் வருகின்றது.

தான் - இடமென்றும் பொருள். தான் இருப்பது இடம். எதை எங்கு இடுகிறோமோ அது அதற்கு இடம்.   தான் > தானம்> ஸ்தானம். இந்தச் சொல் எங்கும் பரவி, துருக்கிஸ்தான் என்னும் ஊருக்குமப்பால் சென்றுள்ளது.  அது நிற்க,

ஒரு பொருளைச் செதுக்கினால் அல்லது வெட்டினால் அது செதுக்கம் அடைகின்றது.  செதுக்கு+ அம் = செதுக்கம்.  செதுக்கமென்பது ஒரு புத்துருவாக்கச் சொல். முன்னர் எவரும் கையாண்டிருக்கலாம்; எமக்குக் கிட்டவில்லை. அல்லது புதிய கருத்துக்குப் பயன்பாடு செய்யலாம்.

ஆனால் முன்பே வழக்கில் உள்ள சொல் சேதம் என்பது.   செதுக்கு என்பதில் உள்ள கு என்ற வினையாக்க விகுதியை விலக்கிவிட்டால் அடிச்சொல்லே மிஞ்சும்.  அது செது என்பது.

செது என்பது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றால் அது செது + அம் = சேதம் ஆகின்றது. ஒன்றைச் செதுக்கினால் அது உருவில் குறைவு பட்டுவிடும்.  ஏற்கெனவே இருந்த நிலை முழுமையானால் செதுக்கியபின் உள்ள நிலை சேதமாகின்றது.  நகை முதலியவற்றில் செய்யும்போது எடையில் குறைவுபடுதலைச் சேதாரம் என்பர்.   செது+ ஆரம் = சேதாரம் ஆகின்றது. புல்முதலியவற்றை மேலாக வெட்டுதலைச் செத்துவது என்பர். இந்தச் சொல்லை அகரவரிசைச் செந்நாப்புலவன்மார் விடுபாடு இழைத்து  தவறிவிட்டனர் என்று தெரிகிறது. அது அவர்கள் சேகரிப்பில் இல்லை. புல்வெட்டும் மூத்த தமிழரிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். உங்களிடம் உள்ள அகராதியில் தேடிப்பாருங்கள். அகர முதலாகச் செல்லுக்குப் பொருள்கூறுவது  அகர + ஆ(தல்) + தி (விகுதி). > அகராதி.

செது > செத்து > செத்துதல்.

சா ( சாதல் ) என்ற வினைச்சொல் வினை எச்சமாகும்போது சத்து என்றுதான் வரவேண்டும்.   சத்து > செத்து என்று வருதல் திரிபு.  செ என்பது இதன் வினைப்பகுதி அன்று. ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகள் சத்து என்று அதனை எச்சமாக்குதல் காண்க.

செத்துதல் என்பதில் தகரம் இரட்டித்து வினை அமைந்தது.

எனவே செது என்பது ஒரு பகுதி வெட்டுப்படல்  அல்லது பகுதி அழிதலைக்
குறிக்கும் அடிச்சொல்.

தட்டச்சுச் சரிபார்ப்பு - பின்னர்.


திங்கள், 8 ஜூன், 2020

சுழல் -- சொல்லின் தோன்றுதல் எடுத்துக்காட்டுகள்

சுழல் என்னும் தமிழ்ச் சொல்லின் தோற்றத்தினை (தொடக்கத்தினை) அறிந்துகொள்வோமாயின் இதுவரை நேயர்கள் சிலருக்குப்  பிடிபடாதிருந்த
நெறிமுறைகள் சில விளக்கத்தை அடைந்துவிடும்.

ஒரு வினைச்சொல் பெயர்ச்சொல் ஆகும்போது திரிபுகளை அடைதல் நீங்கள் அறிந்ததே. விகுதி சேர்ந்தும் சேராமலும் வரும். சில சமயங்களில் முன்னொட்டுப் பெறுதலும் கூடும். பெரும்பாலன விகுதியுடன் வந்து தோன்றும்.  சொல் மிகுந்து நிற்க உதவுவதே விகுதி. விகுதி என்பதும் மிகுதி என்ற சொல்லின் திரிபு ஆதலின் , சொல் நீண்டுவிடும் நிலையே அது என்பதும் அறிக. இச்சொல், மிஞ்சு > விஞ்சு என்பது போன்ற திரிபு.

வீதி என்ற சொல்லும் அகலம் என்ற சொற்பொருளும் உடையது.  மிகு> விகு> வீ> வீதி என்பது காண்க. இங்கு தி என்பது இச்சொல்லின் விகுதி அல்லது இறுதிநிலை. தொகு> தோ> தோப்பு போலுமே.  விளக்கம் எளிதாம்பொருட்டு இங்கு தரப்பட்ட விளக்கம் சற்றே வேறுபட்டிருக்கலாம் ஆயினும் முன் (பழைய இடுகைகளில் ) கூறியவற்றுக்கும் இதற்கும் ஆழ்ந்து நோக்கின் வேறுபாடின்மை அறியலாகும். ஓர் ஒற்றடிப் பாதையினும் வீதி அகலமானது. ஓர் ஒழுங்கையினும் அது அகலமானதே. இவ்வாறு நினைத்துத்தான் செல்லும் அகன்ற பாதை என்னும் பொருளில் வீதி என்ற சொல்லும் வழங்கலாயிற்று.
இவ்வாறு நோக்க, விகுதி என்ற சொல்லும் வீதி என்ற சொல்லும் உறவின எனப் புலப்படும்.

பெயர்களில்  தொழிற்பெயர்களை அல்லது வினையினின்று பிறந்த  பெயர்களை  விகுதி அல்லது இறுதிநிலை பெற்றனவென்றும் பெறாதனவென்றும் பிரிக்கலாம். படி(தல்) என்னும் வினையிற் பிறந்த பாடி என்னும் சொல் முதனிலை அல்லது சொல்லின் முதலெழுத்து,  நீண்டு ( ஆகவே திரிந்து )  அமைந்த சொல்லாகும். ஏறத்தாழ வீடுகள் ஒரே மாதிரியாக அமைந்து (படி அமைந்து )  தொழிலும் வாழ்க்கை முறையும் அவ்வாறே படியமைந்து,  மக்கள் வாழும் ஊர் பாடி ஆகும்.  எடுத்துக்காட்டு:  ஆயர் பாடி.

ஆனால் இவ்வாறு தொழிலின் அல்லது ஒரு வினைச்சொல்லினடியாய்த் தோன்றி இடத்தின் பெயராய் முற்றி நின்றமையின் அதனைத் தொழிற்பெயர் என்னாது இடப்பெயர் என்று விளக்குவோரும் உண்டு. ஆனால் இவ்வாறு இதனை இடப்பெயர் என்று வகைப்படுத்திவிடில் அது படி என்னும் வினையினின்றே உருவெடுத்தது மறைவு படும்.  இவ்வாறு மறைவுண்டது காணார் அது தமிழோ அன்றோ என்று அலமருவர்.  ஆதலின் இலக்கணம் எழுதியோர் எவ்வாறு அதை வகைப்படுத்தினர் என்பது நமக்குத் தேவையற்றது ஆகும். மறைந்ததை வெளிப்படுத்தி அதனைத் தொழிற்பெயர் என்பதே சொல்லமைப்பியலுக்கு உதவுவதாகும். தொழிற்பெயர் என்ற பெயரும்கூட என்னவென்று கூறியபின்னரே புரியும் பெயராய் இருத்தலின் அதனை வினைத்தோன்றுபெயர் என்று புதியபாணியில் சுட்டுதல் இன்னும் நல்லது ஆகும்.  ஆனால் அஃது வினையாலணையும் பெயர் என்ற இன்னொரு பகுப்புடன் மயங்குமாதலின், இம்மயக்கு விலக்க, தொழிற்பெயர் என்பதையே ஏற்றுக்கொள்வதுதவிர வழியில்லை என்பதறிக.

அடுக்குகளாய் அல்லது மடித்து மடித்துக் கட்டப்பெற்ற கட்டடமும் மாடி என்ப்படுகிறது.  மடி > மாடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். இங்கு வந்த திரிபு முதலெழுத்து நீட்சி. இதுபின்  அம் விகுதி பெற்று மாடம் என்றாகும்.மாடம் என்பதில் மாடி அல்லது மடி என்பதன் ஈற்று இகரம் வீழ்ந்து அம் விகுதி பெற்றது. மடி என்பதன் மகரம் நீண்டது காண்க. இந்த இகரம் வீழாதாயின்  மாடம் என்று வராமல் மடியம் என்று வந்துவிடும்.  இப்படி ஒரு சொல் அமையவில்லை என்று தோன்றுகிறது.  புதிய மடிப்புள்ள பொருள் எதற்கும் இன்னும் தமிழில் பெயரில்லையாயின் இந்த அமையாச் சொல்லை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள வசதி இன்னும் உள்ளது.  பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி முதனிலை நீட்சி பெறாது குறுகி அமைந்த சொற்களையே இன்று காணத் தொடங்கினோம்.  விளக்கத்தின்பொருட்டு நீட்சிபெற்றனவாகிய சில சொற்களைப் பற்றி உரையாடினோம்.

சாவு > சவம்  அல்லது சா> சவம் என்பது சில இடுகைகளில் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது.  தோண்டு > தொண்டை என்ற முதனிலைக் குறுக்கமும் காட்டியுள்ளோம். இவைபோலுமே சுழல் என்ற சொல்லும் இவ்வாறு ஆயிற்று:-

சூழ் என்பது வினையடி. ( சூழ்தல் ).
சூழ் >  சூழ்+ அல் >  சுழல்.    இது குறுகி அமைந்தது.  நீர்ச்சுழல், காற்றுச்சுழல் முதலியன குறிக்கும்.
சூழ் + அல் = சூழல்.  இது சுற்றுச்சார்பு என்று பொருள்தருவது.  விகுதி புணர்த்தி இயல்பாய் அமைந்தது.

சூழ் > சுழி என்பதும் குறுக்கமே.  இகரம் விகுதி.

இவ்வாறு வினையைக் காட்டாமல்,  சுள்> சுழி,  சுள்> சுழல் என்று காட்டுதலும் ஆசிரியர் சிலரால் கொள்ளப்படும் முறையாகும். அஃது இன்னொரு வகை விளக்கம். எளிதின் உணரப் பயன்படும் வழி மேற்கொள்ளத் தக்கது ஆகும்.

வேறொரு சூழலில் சந்திப்போம். 


தட்டச்சுச் சரிபார்ப்பு - (மெய்ப்பு) - பின்னர். 






வெள்ளி, 5 ஜூன், 2020

அனுஜன் என்ற சொல்லில் தமிழ் மூலங்கள்.

இங்கு யாம் சொல்லப்போகின்றவை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக
யாம் சொல்லிவருபவை தாம்.  ஆராய்ச்சி என்று கடுமையாக ஒன்றிலும் ஈடுபடுவதில்லை.

அணுகுதல் என்ற வினைச் சொல்லை எடுத்துக்கொள்வோம்.  இதன்
வினைப்பகுதி   அண்> அணு > அணு(கு)> அணு(கு)(தல்) என்பதுதான். 
அண் என்ற மூலச்சொல்லுக்கு இடைவெளியின்றி  அருகிலிருப்பது
என்பதுதான் பொருள்.  இந்த அண் என்பது அன் என்றும் திரியும்.  அப்புறம்
பு என்னும் விகுதி பெற்று அன்பு என்றாகும்.  அன்பு என்றால்  -  சொல்லமைப்பில் என்ன தெரிவிக்கிறதென்றால்-   இருவர் அணுக்கம் அடைந்துவிட்டனர் என்பதைத் தெரிவிக்கிறது.  இந்தச் சொல்லை எடுத்து உங்களுக்கு மனநிறைவு உண்டாகுவண்ணம் வரையறவு செய்துகொள்ளலாம். யாம் சொல்வது சொல்லைப் பிரித்து அறிந்த அமைப்புப் பொருளை மட்டுமே.  சொற்பொருள் என்பது வேறு. சொல்லமைப்புப் பொருள் என்பது வேறு.

அண் > அன் என்று திரிகிறது.  பின் உகரச் சாரியை பெற்று அனு என்றாகும். அன்> அனு>அனுசு> அனுசன் என்று ஆகிப் பிறப்பில் ஒருவனுக்கு அடுத்து உள்ளவனைக் குறிக்கிறது.  அடுத்ததிலும் பின் உள்ளவனைக் குறிப்பது வழக்கு ஆகும். இந்த பின்மைப் பொருள் சொல்லின் உடைசல்களில் இல்லை. பயன்பாட்டில் உண்டாவதாகும்.  ஆனால்  தம்பி என்ற சொல் தம்+பின் என்ற இரண்டு துணுக்குகளின் திரிபாக இருப்பதால், பிறப்பால் பின்மை என்பது சொல்லிலேயே வந்துவிட்டது.   அனுசன் என்பதில் இப்பின்மைக் கருத்து வழக்கினால் அல்லது பயன்பாட்டினால் வருகின்றமையின், காரண இடுகுறி ஆகின்றது.  தம்பி என்பதிலும் இப்பிறப்புப்பின்மை முழுமையாக வந்துவிட்டதா என்றால்,  இல்லை; அது இடத்தால் பின்மை அன்று. அதாவது காலத்தால் பின்மை. இன்னும் வரிசையில் பின்னால் நிற்பவனைக் குறிக்காது; அடுத்துப் பேருந்தில் ஏறப்போவோனைக் குறிக்காது( காலம், இடம் இரண்டும்). அது ஒருதாயிலிருந்து முன் பிறந்தோனுக்கு அடுத்துப் பிறந்தோனைக் குறிக்கிறது.  ஆகவே அனுசன் என்பதில் இப்பொருண்மை இல்லையாதலால், வழக்கிலுளமை கருதி, காரண இடுகுறியே ஆகும்.

அனுசன் என்பதில் சு இடைநிலை; அன் ஆண்பால் விகுதி.

இது பின் அனுசன்> அனுஜன் என்று மாறிவிட்டது. வடவெழுத்து ஒரீஇ நோக்கின், அனுசன் என்பதே அதன் வடிவம் ஆகும்.

இராமனுக்கு அனுசன், இராம+ அனுசன் > இராமானுசன்> ~ஜன் ஆகும்.

ஜன் என்பதைப் பிறப்பு என்று கொண்டாலும், அடுத்து என்பது வழக்கினால்
பெறப்படுவதே ஆகும். அடுத்து அல்லது பின் என்பதைக் கல்லி எடுத்தற்கு
இப்படிச் செல்லலாம்:

இராம +
அன் +
உ +
ஜன்.

உ என்ற சுட்டு, பின்மையும் காட்டும். எடுத்துக்காட்டு: உப்பக்கம் என்ற
சொல்.

இதிலுள்ள பிற சிறப்புக்களைப் பின் அறிவோம்.

தட்டச்சுப் பிறழ்வு காணப்படின் பின் சரிசெய்யப்படும். 

வியாழன், 4 ஜூன், 2020

கொரனா அறிவுரைகள் மறந்தனரோ?



இடைவெளி தம்மில் கடைப்பிடி; கடனே;
மடைதிறந் தன்ன வருநோய் தடுப்பாய்;
உடுமுக ஆடை தடுசளிச் சிதறல்;
நெடுசொல வின்ன வனைத்தையும் அறிந்தோம்.

அறிந்திலர் என்பார் எவருமிங் கிலையே.
தெரிந்தன செய்ய மறுத்திடும் நிலையில்
நெரிசலில் தம்மை நுழுந்திய படியாய்
வரிசையில் நின்றார் வழக்கமே யதனால்.

நோய்க்கோர் நுடக்கம் அரசியற்றிற் றில்லாயின்
மாய்க்குவழிச் செல்வரோ சொல்.

சொற்பொருள்:


தம்மில் -  ( மனிதர்கள் ) தம்மிடை.
கடனே - கடமையே.
மடைதிறந்தன்ன - மடை திறந்ததுபோல், 
பெருந்தொகையாய்.
உடு முக ஆடை - முகக் கவசம் அணிக.
அறிந்திலர் - அறியாதார்
நெடுசொலவு -  நீண்ட உரைகள். பேச்சுகள்.
நெடுத்தல் = நீளுதல். நெடுசொலவு (வினைத்தொகை).
இன்ன - இந்தமாதிரி.
நுழுந்திய - உட்புகுத்திய

நுடக்கம் - முடக்கம்
அரசியற்றிற்றில்லாயின்- அரசாங்கம்
நடைமுறைப்படுத்தவில்லை என்றால்
மாய்க்குவழி - மாய்க்கும்வழி; தம்முயிரை
எடுத்துக்கொள்ளும் வழி. ம் ஒற்று - தொக்கது.



http://theindependent.sg/phase-1-report-card-seen-as-a-fail-by-netizens-as-crowds-gather-at-transportation-hubs/

Singapore – Members of the public questioned the effectiveness of the Post-Circuit Breaker’s Phase 1 wherein households are allowed only two visitors a day, yet huge crowds were spotted at various public transport hubs.

புதன், 3 ஜூன், 2020

பொய் சொன்னால் பிழைக்கலாம்

மெய்யொன்றே சொன்னான் இயற்கையோ தண்டித்தாள்
பொய்சொல்லிப் போனாலே வாழ்விங்கு ---- உய்வுறவே
பூமியிலே  வேண்டும் புளுகிடவே நாட்டுக்கே
நாமும் புளுகுதலே நன்று.



உண்ணாமலே இருந்துவிட்டால்.......

உண்ணாமல் இருந்துவிடில்  விண்ணாகும் வீடெமதே,
உடலங்குப் போகாது நிழல்வடிவில் அங்கிருப்போம்.

தண்ணீரைக் குடிக்காமல் முந்நாளில் முடிவாழ்வாம்
தாரணியின் பொய்வாழ்வில் காரணமாய் மகுடமுகி!

தலைமுன் புறம்மூடு தள்ளிநில்லு கைகழுவே
இலைகூடத் தரைதனிலே இருந்துவிடும் விழுந்தபின்பு

மனிதவுடல் ஆறடிக்கீழ் மரத்திலையோ மேல்தரையில்,
புனிதமிந்த வாழ்வென்று புகல்வதெலாம் பொய்தானே.

வாய்வயிறே ஒன்றாகும் மனிதருக்கும் விலங்குக்கும்
மாயும்வரை திரிந்துவிட்டு ஓய்ந்தபின்னே ஒழிந்திடுவாய்.


பொருள்


மகுடமுகி -  கொரனாவைரஸ். 

மூதாதையர் - சொல்வடிவம்.

எந்த மொழியிலும் ஒன்றைத் தவறான 
சொல், சரியான சொல் என்று வகைப்
படுத்துவதினும் 
புரியும் சொல்,
புரியாத சொல் என்று வகைப் 
படுத்துவதே ஏற்புடைத்தாகும். புரியாத 
சொற்களால் பயன்பாடு இல்லை. ஓட்டைச்
சட்டியாய் 
இருப்பினும் கொழுக்கட்டை
வெந்து எல்லோரும் உண்பதற்கு உதவுவது
 போன்றதே  சரியான சொல் 
எனலாகும்.
 புரியாத சொற்கள் எனப்படுபவையும்
ஒருசார் மக்கட்குப் புரிந்து இன்னொருசார்
குழுவினர்க்குப் புரியவில்லை எனில்,  

புரிந்தோர் புரியாதோருக்கு சொல்லிக்
கொடுத்து உதவலாம்.இதன்மூலம் 
புரிதல் விரிதல் அடைந்து பயன்
 ஆழ்ந்துசெல்லுதல் கூடும். இவ்வலைப்
பூவின் நோக்கங்களில் இதுவும் ஒன்று 
என்று கொள்க.

தாத்தா என்பது விளிவடிவம். அதாவது
கூப்பிடும்போது சொல் மேற்கொள்ளும்
வடிவம். அதன் இயல்பான வடிவம் 
தாதை என்பதுதான். இதை எழுவாய்
வடிவம் என்பர்.  எழு - சொல் எழுந்த
முதல் நிலையில்,  வாய் - அவ்விடத்து,
வடிவம் - அமைப்பு. (வடிதல் என்பது
அமைத்தல். ( எ-டு:  வேல்வடித்தல், 
செய்யுள் வடித்தல்,  இன்னிசை வடித்தல்
என்று எதை எதையெல்லாம் அமைக்க
இயலுமோ அதையெல்லாம் நன்றாகவே
வடிக்கலாம்,    சோறுவடித்தல் உள்பட.)
வடிக்கை > வாடிக்கை: எப்போதும் வந்து
வாங்கிக்கொள்ளுபடி வணிகர்கள் 
ஏற்படுத்திக்கொள்வது .  

நம் தாத்தாவுக்கு முன் பல தாத்தாக்கள்
இருந்தனர்.  தாத்தாவுக்குத் தாத்தாக்கள்
அவர்கள்.  அவர்களை எண்ணித்தான்
பார்க்கமுடிகிறது. அவர்களை நாம் அறியோம்.
அவர்களும் நம்மை அறியார். அவர்களை

அழைத்துப் பேசும் சில முறைகளை அறிந்த
ஆன்மிக ஆசிரியர்கள்
உள்ளனர் என்று
கேள்விப்படுகிறோம். யாம் சந்தித்ததில்லை.


இந்த முன்னிருந்த தாத்தாக்களைத் தாம் 
நாம் "மூதாதையர்" என் கின்றோம்.  மூ = 
மூத்த அல்லது முன்னிருந்த;  தாதை - தாத்தா'
அர் - அவர்கள்.

இப்போது சங்கு என்ற சொல்லைப் பார்ப்போம்.
இது ஓர் உயிர்வாழ் பொருளை அல்லது 
உயிரியைக் குறிக்கிறது.  அது குடியிருக்கும்
கூட்டுக்கும் சங்கு என்றுதான் பெயர். இந்தச் 
சொல் தங்கு என்ற சொல்லிலிருந்து திரிந்தது.
தங்கு என்பதோ  தம்+ கு என்பதிலிருந்து 
உருவாயிற்று.

தான் > தன் ( இது ஒரு மனிதனைக் குறிப்பது)
இரண்டு தான் கள் சேர்ந்துகொண்டால் அவர்கள்
தம்  ஆகிறார்கள். அதாவது தாம் > தம்.

இவ்வாறு இரண்டு தம் ஒன்றானால்
அது தம் + கு
= தங்கு. இவ்வாறே ஒரு
கூட்டில் ஓர் உயிர் இருந்தால்

அது தம்+கு = தங்குகிறது.  தகரம்
சகரமாகவும்
திரியும்.   ஆகவே தம் > சம்
என்று திரிந்து " இணைந்தமை" காட்டுகின்றது.
 ஆங்கில மொழியில் இருக்கும் சம்
(கணக்குக் கூட்டுதல் ) 

என்னும் சொல்லும்  இதன் வடிப்பே ஆகும்.

தம் > சம் > சங்கு.
தம் > சம் > சங்கு >  ~+ அம் = சங்கம்.

தன் என்பதில்  0ன் என்னும் ஒற்று ( மெய்) 
ஒருமை. அது பன்மை ஆகும்போது தம்
என்று மாறுகிறது. இந்த "ம்" இருக்கிறதே,
அது தொல்பழங்காலத்தில்
பன்மை
விகுதியாய்,  "கள்" விகுதிபோல் இருந்தது.

இந்த "ம்", உம் என்பதன் முதற்குறை ஆகும். 
அவனும் இவனும் என்பதில் உம் சேர்க்கை
அல்லது இரண்டு ஒன்றாதல் குறிக்கிறது.
தான் > தம் ஆனதிலும் பன்மையே
காட்டுகிறதே. இந்த ம்-மும்

உம்-மும் மொழியில் இன்னுமிருப்பது
நமது
நற்காலமே ஆகும். அம் என்னும்
விகுதி அமைதல்
என்பதன் அடிச்சொல்
லாகவும்  சொல்லமைப்பு விகுதியாகவுமாய்
விளங்குகின்றது.


தந்தை என்பதில் அப்பனைக் குறிக்கும்
 சொல்
"தை" என்பதுதான்.  விளியில்
தா என்றாகும்.
தாத்தா அல்லது தாதை =
 தந்தையின் தந்தை ஆகும்.


சந்திப்போம். ( இதில் சம் - தம்மிலிருந்து 
திரிந்த சம் - ;  தி என்பது வினையாக்க 
விகுதி;  இதில் அடிப்படை வினையாக்க
விகுதி இ என்பதுதான்.  இங்கு, இப்போது
என்றெல்லாம் பொருள். த்  என்பது ஓர்
இடைநிலைதான். பின் விளக்குவோம்.