வெள்ளி, 30 நவம்பர், 2018

பரத்தையும் பரையனும் சடங்குகளும்.


https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_28.html  இதன் தொடர்ச்சி:

பர என்ற சொல்லை ஆய்ந்துகொண்டிருந்தோம். இதை நாம் தொடர்வோம்.

பரத்தை என்ற சொல்லினை நோக்கின் அதுவும் பரத்தல் ( அதாவது பல இடங்களிலும் உளதாதல் )  என்னும் சொல்லினின்றே வந்திருத்தலை உணரலாம்.  அதாவது ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு இல்லாளாக வாழாமல் யார்மாட்டும் தொடர்பு வைத்துக்கொள்பவளாகப் பரந்து ஒழுகுபவள் என்ற பொருளுடையது என்பது தெற்றெனத் தெரியக்கூடியதாகிறது. இது பரமனடி பணிந்தோர் என்ற பொருளில் எங்கும் பயன்படவில்லை ஆதலின் தேவரடியாள் என்ற பதத்தினும் வேறுபட்ட வரலாற்றினை உடையது என்பதும் புலனாகும்.

இனிப் பறையன் எனப்பட்ட  பரையன் என்ற சொல்லும் பரத்தல் என்ற சொல்லினின்றே பிறந்தது என்பதும் பொருத்தமுடையதே. இதற்கான காரணங்களை ஆராய்வோம்.  மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை பிறந்ததற்கே காரணம் மரணம்தான்.   ஆதிமனிதனால் மரணத்தையும் அதன் தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை.  அதை வெல்லவும் இயலவில்லை. ஆகையினால் சாவைப் பற்றி விளக்குவன எழுத்தில் உள்ளனவும் கருத்தில் மட்டும் உள்ளனவும் என அனைத்திலும் கண்ட உண்மைகளை அவன் "சாத்திரம்" என்றான்.  இது உண்மையில் "சாவின் திறத்தை உரைப்பவை" என்று பொருள்படுந்  தொடரிலிருந்து எழுந்த சொல்லாட்சி.  சாத்திறம் என்பது "சாத்திரம்" ஆனது.   முற்காலத்தில் ரகர றகர வேறுபாடின்று மொழியில் பல சொற்கள் வலம்வந்தன.இன்றும் சில உள்ளன. மொழி நன்'கு வளர்ச்சி அடைந்த பின்னரே இவற்றுள் வேறுபாடு காணப்பட்டது.  மேலும் றகரம் என்பது இரண்டு ரகரங்கள் இணைந்த ஓர் எழுத்தே ஆகும்.  ஒரு ரகரம் ஏற்பட்டுக் காலம் கடந்தபின்னும், குழப்பம் தவிர்க்க வேறுபாடு வேண்டுமென்னும் கோரிக்கை எழுந்த பின்னும் தாம் இரட்டை ரகரமாகிய றகரம் தோன்றியிருக்க முடியும் என்ற கருத்தை உன்னிப் பார்க்கவும். சாத்திரம் என்பது பின் சாஸ்திரம் என்று மெருகு பெற்றதும் சாவு மட்டுமின்றிப் பிற நிகழ்வுகளையும் அலசி ஆய்வு செய்யும் பிற விடயங்களும் அச்சொல்லால் தழுவிக்கொள்ளப்பட்டன.   (ொுள் ிிு ) தெளிவு தோன்றத் தோன்றவே கலைகளும் அறிவியலும் வளர்ந்தன.  இவை இறைவனால் அருளப்பட்டவை என்பது இவற்றைச் சிந்திக்கும் மூளையைக் கொடுத்ததற்காக அவனுக்குச் செலுத்தப்பட்ட நன்றியுணர்ச்சியைக் காட்டுவதே ஆகும்.  கலைகளும் அறிவியலுமோ படிப்படியாகவே வளர்ச்சி பெற்றிருத்தல் கூடும்.  சாவு உட்பட்ட முன்மையான  நிகழ்வுகளைக் கையாண்டவன் பறையன் என்னும் பரையன்.  சடங்குகளென்பவை அவனாலே தொடங்கப்பட்டன.  ஊதியத்திற்காக அவன் இவற்றைச் சாவுகள்தோறும் நடத்தி வந்தான்.  சடங்கு என்ற சொல்லும் அடங்கு என்ற சொல்லின் திரிபே. ஒருவன் இறந்துவிட்ட நிலையில் எல்லாவித நடவடிக்கை டி க் கை யும் உள்ளடங்குமாறு செய்யப்பட்ட தொகுப்புதான் சடங்கு.   அடங்கு > சடங்கு.  இவ்வகைத் திரிபுகள் முன் விளக்கப்பட்டன.  அடு என்பதே  அடிச்சொல். அடுத்து நடப்பதும் அதில் எல்லாம் அடங்கிவிடுதலும் குறிப்பதே சடங்கு. ஒரு சடங்கு பல உள்ளுறுப்புகள் உடைய  தாகலாம். எல்லாம் அடங்கிய தே சடங்கு  ஆகும்.
அகரத திரிபே சகரம்.

https://sivamaalaa.blogspot.com/2017/02/blog-post_92.html

சடங்குகள் பல நிகழ்த்தி வந்தமையாலும்  அவன் நான்கு  வகை நிலங்களிலும் பரவி அதை நிகழ்வித்ததாலும்  பர+ஐயன் =  பரையன் எனப்பட்டான். நாலு வகை நிலங்களுக்கும் -  மருதம்,  நெய்தல், முல்லை, குறிஞ்சி என்ப -  அவன் பொதுவானவன்.  பிற்காலத்து இச்சொல் பறையன் என்று மாற்றி எழுதப்பட்டு அவன் இயக்கிய கிணையும் பறை என்று பெயர் பெறலாயிற்று.  இராமகாதை இயற்றிய வால்மீகி முதலியொரும் சங்கதத்துக்கு இலக்கணம் பாடிய பாணனாகிய பாணினியும் அவன் வழியினரே. சடங்குகட்கு இவன் சிறப்புமொழியைப் பயன்படுத்தியது வியப்பன்று.

இராமகாதை சங்கத இலக்கணம் முதலியவை இந்தியாவிலே இயற்றப்பட்டவை.

சடங்கு என்பதற்கு மறுபெயர் வழங்கவேண்டுமானால் அதற்கு முடிநிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெண் பூப்பு எய்துகிறாள்.  அடுத்து நிகழ்வது ஒரு சடங்கு.  அடுத்த அதனில் யாவும் அடங்கிவிடுகிறது: அதனால் அது ---அடு> அடுத்தல்;  அடு > அடங்குதல் என்பவை ---- சடங்கு என்பதன் நடுவண் கருத்தமைவுகள் ஆகின்றன.

முடிநிகழ்வு :  முடித்துவைக்கும் நிகழ்வு. அதுவே சடங்கு.

குறிப்பு:

கேரளாலில் பரைய அரசன் ஆண்ட ஊர் பரவூர் எனப்பட்டது.  பரவு+ ஊர் = பரவூர். இவனை வீழ்த்தி அவ்வூரை நம்பூதிரிகள் மேற்கொண்டதாக இவ்வூர் மக்களிடை வழங்கும் வரலாறு கூறுகிறது.  நம்+ புது + இரி = நம்பூதிரி:  புதிதாக வந்து தங்கிய கூட்டத்தினர் என்று இச்சொல் பொருள்படுகிறது.

ஒரு வள்ளுவ அரசனிடம் பிராமணன் பாடிப் பரிசில் பெற்ற நிகழ்ச்சி புறநானூற்றில் காணப்படுகிறது.

பெரும் சமஸ்கிருதப் புலவர் வால்மீகி யாரும் பரையரே. இவரே காலத்தால் மூத்த புலவர். பாரதம் பாடியோன் மீனவன் வேதவியாசன்.  சமஸ்கிருத இலக்கணம் அமைத்தவன் பாணனாகிய பாணினியும் பரையன். இதனால் இவையெல்லாம் பிராம்மணர் சூழ்ச்சி என்பது வெறும் ஆதாரமற்ற கூற்றாகிறது. இர் + ஆம் + அன் ( இருள்நிறம் உடையோன்) என்பதும் காரணப் பெயர். இராமன் நீல நிறத்தோன். 

இதற்கு வேறொரு பொருளும் உண்டு.  பரை என்பது பார்வதியையும் குறிக்கும்.எனவே பார்வதியை முற்காலத்தில் வணங்கியவர்கள் என்ற பொருளும் உள்ளது.  அன் விகுதி சேர்த்து,  பரையன் -  அம்மையின் வணக்கம் உடையவன் என்ற பொருளுக்கு,  பிராமணன் - பிரம்மனை வணங்கியவன் என்ற பொருள் மாற்றநிலை காட்டுவதாகிறது.  பரைச்சி - இதுவும் பார்வதியையே குறித்தது.  மேலும் பரை என்பது சிவனருள் பெற்ற நிலையினையும் உணர்த்தும்.  சைவசித்தாந்தத்தில் ஆன்மா சிவனருள் வேண்டி நிற்றல் குறிக்கும்.  பரிபூரண நிலை.  பரையர் ( இன்று பறையர்) இந்நாளிலும் பெரும்பாலும் சிவமதத்தாரே.

இனிப் பரம்பரை என்ற சொல்லின் இறுதிப்பாதி, பரவிநிற்றலைக் குறிப்பதும் காணவேண்டும். இன்று இது வழித்தோன்றல்களைக் குறித்தாலும்,  பரனைப் பரவி நிற்றல் என்ற பொருளும் தொக்கது. பின்னும் பரை நாபியிலிருந்து எழும் ஒலியையும் குறிக்கும்.

பரத்தல் - தொழுதல் என்பது, பரவுதல் கருத்தடிப்படையில் பற > பறையாகி, பரை - பறை என்பனவற்றிடை எழுத்து மாற்றம் ஏற்படுதல் முற்றிலும் ஏற்புடைத்தே ஆகும். குருவி பறத்தலும் ஓரிடத்திருந்து இன்னோரிடத்துப் பரவுதலே.  பறை அடித்தலும் ஒலி பரவுதலே.  பறைதல் என்பதும் சொல் பரவுதலே.  ஆதலின் இச்சொல் முற்காலத்துப் பரை என்றே இருந்தது என்பது தெளிவாகும்.

அறிக மகிழ்க.

சில பாகிகள் சேர்க்கப்பட்டன. மெய்ப்பு பின். 10042021








புதன், 28 நவம்பர், 2018

பரத்தல் சொல்

பரவுதல்:  இச்சொல் எளிய -  தமிழர் யாருக்கும் புரியக்கூடிய சொல் என்று கூறலாம்.  எடுத்துக்காட்டாக: நோய் பரவுதல்;  செய்திகள் பரவுதல்;  நுகர்பொருட்கள் மக்களிடைப் பரவுதல்;  கொள்கைகள் பரவுதல்; விதைகள் கொட்டைகள் இயற்கையில் பரவுதல் என்று பரவுதற்குரிய விடயங்கள் பலவாகும்.

ஒரு பொருள் ஒரே இடத்திலிருக்குமாயின் அது பரவுதல் உடைய பொருளாகாது.  அந்த ஒரு பொருளின் மாதிரியில் பல உண்டாகி இடவிரிவு கண்டு ஆங்காங்கு காணப்படுமாயின்:  முதலாவதாக, ஒன்று பலவானது; இரண்டாவதாக ஒன்றுபோன்ற பிறவும் பரவுதலைச் செய்தன என்று கூறலாம்.    ஆகவே பல், பல என்பது எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்டவையாய் இருத்தல் ஒருவிடயம்; அது இடவிரிவு கொண்டது இன்னொரு விடயமாகும்.   ஆகவே பல், பல, பர, பரவு என்பன பொருள் தொடர்பு உடையன என்பதைக்  கூரறிவால் உணர்தல் வேண்டும்.

இறைவனைப் பாடிப் பர  என்பது ஒரு வாக்கியம். இதில் பர என்பது ஓர் ஏவல் வினையாகும். அவன் நாமத்தைக்  கூடுமானவரை இடமகன்று விரியும்படியாக இசைத்துப் பரப்பு என்பதையே  :  " பர " என்ற சொல் தெளிவுபடுத்துகிறது.  நீ பாடுகையில் ஒரே இடத்தில் நின்று அங்கு மட்டும் கேட்டால் போதாது; அடுத்தவீட்டுக்கும் அப்பாடல் கேட்கவேண்டும்; அதற்கு அடுத்த வீட்டிலும் ஒலி எட்டவேண்டும்; நீ நின்றாலும் நடந்தாலும் கவலையில்லை; ஒலி பரவுக என்பதே பர என்பதன் பொருள்.  இன்னும் சிந்தித்தால் பர என்பது திசைகளெங்கும் அகன்று விரிந்து செல்வதாகிய தரைமட்டப் பெருக்கம் ஆகும்.  A horizontal spread or diffusion  but not entirely excluding any vertical spread.

இதன் தொடர்பில் 'பலகை' என்ற சொல்லையும் கவனிக்கவேண்டும்.  பலகை என்பதைக் கிடத்தினால் அது படுக்கைவாட்டத்தில்  இடம்கொள்வது ஆகும். இச்சொல்லில் வரும் பகரம் இதையே நமக்குத் தெரிவிக்கிறது.  பல் > பல > பலகை என்பது  இப்படிக் கிடப்பு இடக்கொள்வினை நமக்குப் புலப்படுத்துவதாகும்.  தூக்கி நிமிர்த்தினால் நிற்பு  இடக்கொள்வினையும் உணர்த்தும்.

பல் என்ற சொல் ஓர் அடிச்சொல்;  இதுவே பர் > பர என்று ஆனதென்பதை அறிதல் வேண்டும்.  பல் என்பது பன்மை குறித்து இன்று எண்ணிக்கை குறிப்பதாயினும் பர் பர என்றாகி எண்ணிக்கைக்கியலாத இடக்கொள்வினையும் காட்டும் சொல்லாகிவிடுகிறது.   எனவே இந்தக் கூரிய வேறுபாட்டினைத் தமிழ்மொழி சிறுசிறு எழுத்துத் திரிபுகளின் மூலமாகக் காட்டும் திறத்தால் சாதித்துக்கொண்டுள்ளது என்பதை அறிக

பர என்பது திரிந்து பார் ஆகியது.  இது முதனிலை நீட்சித் திரிபு ஆகும். பர என்பது மொழிக்கிறுதியாக அகரத்தைக் கொண்டிருந்தாலும் அது திரிந்து அமையுங்கால் பார் என்று ஒற்றிலேதால் முடிகின்றது. இப்படி முடிவதே தமிழின் இயல்புக்கு ஒத்த வடிவம்கொள்வதாகும். இது உலகம் என்ற பொருளைக் கொண்ட சொல்லாக உருவெடுத்துள்ளது மிக்கப் பொருத்தமே.

இனிப் பாரிவள்ளலுக்கு வருவோம்.  பரந்த புகழுடையோன் பாரி.  இவ்வுலகில் மக்கள்பாலும் மரஞ்செடிகொடிகள் மலை காடு என்பவற்றின் பாலும் நீங்காத பற்றும் அருளும் உடையோன் பாரி. நன்மை எதையும் எதிர்பார்க்காமல் ஒருவனுக்கோ அல்லது உயிருள்ள எப்பொருட்குமோ ஒன்றை உதவுதலே அவன்றன் பண்புநலன் ஆகும்.  இஃது ஓர் பரந்த நோக்கு.  பர > பார்.  இவ்வகையிலும் பரவற் கருத்து மிளிர்வதாகிறது. பாரி என்பது இயற்பெயராயினும் புகழிற்பெற்ற பெயராயினும் பொருத்தமுடைத்தே ஆகும்.  பாரியினால் பாரெல்லாம் ஓர்  கவினுற்றது. முல்லைக்கும் இரங்கி ஒரு தேர் ஈந்தான் பாரி.   இவ்வுலகினுக்குத் தேவையான ஒரு மாந்தனானான்.  ஆகவே பார் > பாரி என்பது இவ்வுலகினன் என்ற பொருளில் நன்றாக அமைந்த பெயராகும். இப்பாருக்கே உரியவன் பாரி ஆனான்.

'இனிப் பரம்பரை என்பது அறிவோம். குடும்பத்தில் புதல்வர்களும் புதல்விகளும் தோன்றுவர்.  (புது +அல் +வு +அர்.  புது+ அல் + வி).இச்சொற்களில் அடிச்சொல் புது என்பதே. இது தமிழ்.  இம்மக்கள்  -  புதுவரவுகள் என்று பொருள். இப்புது வரவுகள் உண்டாக உண்டாக,  உங்கள் குலம் - குடும்பம் பரவும்.   பர+அம் , பர + ஐ:  பரம்பரை.  இது ஒரு பெரிய பொருளுடைய சொல் போல உங்களுக்குத் தோன்றிடினும் இதை வாக்கியமாக்கினால்:  "  பரவுதல் - பரவுதல்" என்று இருமுறை சொல்வதேபோல்தான்  சொற்பொருள் அமைந்துள்ளது..  இதுபோலும் இருமுறை சொல்லிப் பன்மையையும் பெருக்கத்தையும் உணர்த்தும்  இயல்பு சில மொழிகளுக்கு இருக்கிறது. இந்தப் பரம்பரை என்ற சொல்லை அந்த வகையறாவில் தான் சேர்க்கவேண்டும்.( வகையறா என்பதும் அந்த வகையினதான சொல்லே ). வகுத்தலும் அறுத்தலும் துண்டுகளாக்குவதுதான்.

மக்கள் பிறந்து குலம் விரிவு அடைவது :  வேறோன்றுமில்லை,  அது சொல்லமைத்தவர்களில் மொழிப்பாணியிலே சொன்னால்:  பரவுதல் பரவுதல்
குலவிரித்தி > குலவிருத்தி.  விரி= விரு.

விர் > விரு.
விர் > விரி.

அடுத்து,  பரமன் என்ற சொல்லைக் காண்போம்..

இறையுண்மை எப்படி விளக்கப்படுகிறது என்றால் இறை எங்கும் உள்ளதாகும், அஃது இன்மையான இடமொன்றும் எங்கும் இல்லை; இவ்வுலகிலும் இல்லை; இதற்கப்பாலுள்ளதாய்க் கருதப்படும் எந்தவிடத்தும் இல்லை; அது எங்கும் பரந்து நிற்பதொன்றாம்.  ஆகவே பர + அம் + அன் என்ற சொல் பொருத்தமுடைத்தாம். இதனினும் பொருத்தமுடையது பரம்பொருள் என்பதாம். இறைக்குப் பான்மை அல்லது பாலியன்மை  இலது ஆதலின்  பரம் என்று நிறுத்துதலே சரி. பொருள் என்பதும் ஒருவகையில் சரியாயினும் இன்னொரு வகையில் சரியாகத் தோன்றவில்லை.

பொருள் என்பது முன் விளக்கப்பட்ட சொல்லே.  தன்னுள் தான் பொருந்தித் தனித்தியங்குதல் அல்லது இருத்தலை உடையதே பொருள். இதன் அடிச்சொல் பொரு என்பது.  உள் என்பது விகுதி. கடவுள். இயவுள் என்பனபோல. யாமுரைப்பது சொல்லமைப்புப்பொருளே.  அறிவியல் இங்கு கூறப்படாது என்பது உணர்க. உயிரற்றதும் பொருள் எனப்படுதலின் பரம் பொருள் என்பது ஒருவகையில் சரியில்லை. பரம் என்பதுடன் ஒட்டியே பொருளுரைக்க இன்னொருவகையில் அது சரியாகுமென்`க   அதாவது சரியாக உரைதந்து பொருளில் தோன்றுவதாகக் கருதற்குரிய மாறுபாட்டைக் களைதல் வேண்டும். (  தொடரும் )

திருத்தம் பின்.
எழுத்துப்பிழைகள் சில சரிசெய்யப்பட்டுள.




Tea and Allergy நீங்கள் தேநீர் குடிப்பவரா? - படியுங்கள்.

தேநீருக்குக் கொழுந்துநீர் என்பது மொழிபெயர்ப்பாகத் தரப்பட்டுள்ளது.

இந்நாள் தேநீர் (  ~ குடிப்போர் தொகை உலகில் அதிகம் என்று நினைக்கிறேன் ) என்பது பெரிதும்  விரும்பப்படும் பானம் ஆகிவிட்டது.  அதனால் கெடுதல் உண்டு என்றும் நன்மை உண்டு என்றும் பலவாறாகச் செய்திகள் நம் செவிகளை எட்டுகின்றன.

வயிற்றுப் போக்குக்கு வெறும் தேநீரை (  பால் இனிப்பு முதலிய இல்லாமல்) இளஞ்சூடாக இரண்டு மூன்று முறை அருந்தினால் அது கட்டுக்குள் வரும் என்பதும் பலர் கூறுகின்றனர்.  நுகர்வில் இது உண்மை என்று அறிகிறோம்.  தேநீரைக் குடித்தால் இரவில் தூக்கம் வருவதில்லை என்பதும் கூறப்படுகின்றது.  இதுவும் உண்மையென்றே கருதும்படி நமது நுகர்வறிவு நமக்குப் புலப்படுத்துகின்றது.  நம் சீன மலாய் அன்பர்களும் இதை நம்புகின்றனர்.

மிகுதியான தாகத்துக்கு ( நீர்விடாய்)  குளிர்க்கட்டிகளை இட்டுத் தேநீர் அருந்தினால் ( பால் சீனி இல்லாமல்)  அந்தத் தாகம் நின்றுவிடும் என்று சிலர் நம்புவர்.

ஒவ்வாமை விளைவிக்கும் பானவகைகளில் தேநீரும் ஒன்று ஆகும்.   இதைப் பற்றிய பலரின் பட்டறிவுரைகள் இங்குக் கிட்டுகின்றன. இதைச் சொடுக்கி வாசிக்கவும்:

Comments for Tea and Allergy - Cause Sore Tongue?

https://www.amazing-green-tea.com/tea-and-allergy-cause-sore-tongue-comments.html 

 

விரைவில் சந்திப்போம்.



 

செவ்வாய், 27 நவம்பர், 2018

கடாட்சம் என்ற சொல் அமைப்பு.

அம்மையின் அருளை வணங்கி வந்த பற்றர்கள் ( பக்தர்கள் )  எவ்வாறாயினும்  அம்மையே இறுதியில் ஆள்பவள் என்ற  உணர்நிலையை எய்தினர்.   இக்கருத்து  எந்தக் காலத்தில் வளர்ச்சி பெற்று  பெரும்பாலான மக்களைப் பிணித்து நின்றதோ அக்காலத்திற்றான் கடாட்சம் என்ற சொல்லும் அமைந்திருத்தல் வேண்டும் என்பது எடுத்துச்சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

வரலாற்றுத் தெளிபதிவுகள் இல்லாத இந்தியரிடத்தும் குறிப்பாகத் தமிழரிடத்தும் இதனை ( வரலாற்றை) ஆய்ந்தே காணல்வேண்டும்;  மற்றும் உரையும் எதிருரையும் இன்றி முடிவினை எட்டிவிடுதலும் எளிதன்று.

ஆனால் யாம் இங்கு உரைப்பது சொல்லமைவே; சொல் வரலாறு அன்று.

கடைசியில் ஆள்பவள் அம்மை.

இக்கருத்தைச் சொல்லாக்குவோம்.

கடை + ஆட்சி + அம்
அம் என்பது விகுதி.
கடை என்பதில் ஐகாரம் விலக்கப்படுகிறது:  மீதம் கட அல்லது கட்.

இனி  ஆட்சி என்பதில்  இகரம் விலக்கப்படுகின்றது:   ஆட்ச் என்பது மீதம்.

கட + ஆட்ச் + அம் =  கடாட்சம். புணர்ச்சியில்  கட என்பது கட் என்றேமாறி,  கட்+ ஆ = கடா என்றாகும்.   அகரத்தை முதலிலே விலக்கினும் அப்புறம் விலக்கினும் காணுமொரு வேறுபாடின்மை உணர்க. இறுதிவிளைவு கடாட்சம் என்பதே.

இறுதியாட்சியில் அம்மை அருள்மழை பொழிவாள். என்றலின் இஃது இறுதியருள்,  பேரருள் என்று பொருள்புகட்டும் சொல்லாயிற்று. 

தமிழிலும் வழக்குடைய சொல்லே.  ஆனால் சங்கதத்தில் சொலிக்கும் சொல்லாம்.




வருடம் சொல்

வருதல் என்னும் வினையினடிப்படையில் உண்டாகி உலவும் சொற்கள் பலவாகும்.  இவற்றில் சிலவற்றையாவது அணுக்கமாக நோக்கின், அவை வருதலடிப்படையின என்பது தெற்றெனப் புலனாகும். வேறு சொற்களை அடியாகப் பிறழ உணர்ந்து அயர்ந்தோர் சிலர் உள்ளனர்.

ஆங்கில வருடக் கணக்கு, அறுபதாண்டு சுழல்வட்டத்தில்  அடங்காதது. இன்னும் மூவாயிரமாம் ஆண்டு நாலாயிரமாம் ஆண்டு என்று போய்க்கொண்டிருக்க வல்லது ஆகும். ஆனால் தமிழ் மாதங்கள் என்று சொல்லப்படுபவை அறுபது எனப்படும்; மற்றும் ஒரு சுழற்சியில் அறுபதும் முடிந்துவிட்டால் மீண்டும் ஒன்றாம் ஆண்டிலிருந்து தொடங்குபவையான ஆண்டுகள்   என்பது நீங்கள் அறிந்ததே.  இதிலென்ன இடர் என்றால் ஒரு மன்னன் எந்தக் காலத்தான் என்று பார்ப்பதற்கு எத்தனை சுழற்சிகள் என்று அறிந்தாலே கணக்கிடலாகும்.

ஆண்டு என்பது வருடம் எனப்படும்.  இது வருஷம் எனவும்  சொல்லப்படும்.  இது மழையின் தொடர்பாக அமைந்த சொல் என்பர்.

மழையும் வருவதுதான்;  அதேபோல் ஆண்டுகளும் ஒன்று முடிய இன்னொன்று வருபவைதாம்..

வரு+ உடம்=   வருடம் >  வருஷம்.

மழையினுடன் வருவது வருடம்.   உடம் என்பது உடன் என்பதே.

உடம்படு மெய் என்பதில் உடன்படுத்தும் மெய் என்பதே பொருள்.

வருஷம் எனபது திரிபு.

அம் என்று முடியும் சில அன் என்றும் முடியும்.

அறம் > அறன் என்பது காண்க.


இதையும் வாசித்து மிக்கது அறிக:

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_0.html

திருத்தம் பின்.

திங்கள், 26 நவம்பர், 2018

Malaysia Sri Mariamman Temple Riots: மாரியம்மன் ஆலயம் கலகம்

இந்தக் கலகத்தில் 18 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. கலகமும் நடைபெற்றுள்ளது.  இங்கு இதனை  வாசித்து அறியவும்:

http://theindependent.sg/18-vehicles-set-on-fire-in-malaysias-seafield-sri-mariamman-temple-riot/


http://theindependent.sg/18-vehicles-set-on-fire-in-malaysias-seafield-sri-mariamman-temple-riot/

அக்குள் ( கமுக்கட்டு ) அமைப்புச் சொல்.

அருகிலும் உங்கள் உடலின் உள்பக்கமாகவும்  உள்ள ஓரிடத்திற்கு ஒரு பெயரை அமைக்கவேண்டின் அதை எப்படி அமைப்பது?

கமுக்கட்டு என்பது மார்பு என்னும் முக்கியப் பகுதிக்கு அருகிலே இருக்கிறது.  எனவே அருகு என்ற  சொல்லை இட்டுக்கொள்ளவேண்டும்.

அருகு.

தோளின் உள்பக்கத்தைக் குறிக்கவருகிறோம்.  ஆகவே உள் என்பதையும் இடவேண்டும்.

அருகு + உள்.

இரண்டையும் சேர்த்தால்  " அருக்குள்" என்று வரக்கூடும்.

இங்கு அருகுள் என்று வராமல் ககரம் இரட்டித்தது.  இதுபோன்று இரட்டித்த வேறுசொற்களைப் பார்ப்போம்:

புகு + அகம் =  புக்ககம். ( மணமாகிப் பெண் புகுந்தவீடு.)  இது நீங்கள் அறிந்ததுதான்.

இதுபோலவே  அருகு என்பது அருக்கு என்று இரட்டித்தது.

எனவே அருகிலும் உள்பக்கமாகவும் இருப்பது அருக்குள்.

அருக்குள் என்பதில் ஓர் இடைக்குறை ஏற்படுகிறது.

அருக்குள் >   அக்குள்.

இதற்கு உதாரணங்கள் வேண்டின்:

சறுக்கரம் >  சக்கரம்.
வருக்கரம் > வக்கரம் > வக்கிரம்.
தடுக்கை > தக்கை.  ( தடுத்துநிற்கும் செருகுபொருள் ).
பகு + குடுக்கை = பக்குக்குடுக்கை > பக்குடுக்கை.அல்லது:  பகுகுடுக்கை(வினைத்தொகை ) > பக்குடுக்கை.

இப்போது ஒரு புதிய சொல் மொழிக்குக் கிட்டிற்று.  அதுதான் அருகு உள் என்பது அக்குள் என்றாயது ஆம்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

அத்தியாயம்

முன் அத்தியாயம் என்ற சொல்லினமைப்பை விளக்கியிருந்தேம்.  கள்ளமென்பொருள் அதை நீக்கிவிட்டது. 

இப்போது அதை மறுபார்வை இடுவோம்.

ஓர் அத்தியாயம் முடிந்தால் இன்னொன்று தொடங்குகிறது.  இருப்பினும் ஒரு நூலில் அத்தியாயங்கள் இயைந்தே இருக்கின்றன.

அற்று =  முடிந்து;

இயை = இணைவது.

அம் =  விகுதி.  இவ்விகுதி வேறுமொழிகளிலும் பரவி வாழ்கிறது.

அற்றியையம்

=  அத்தியாயம்.

அற்று என்பது அத்து என்று வருவது தமிழ்ப் பேச்சில்.

எ-டு:  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.

திரிபுகள் :   ற்ற > த்த

ல > ர.   இது வழக்கமான  திரிபு.

இத்திரிபுகள் பல சொற்களில் வந்துள்ளன.

சனி, 24 நவம்பர், 2018

போகாத இடந்தனிலே.......


வரவேண்டாம் என்`கின்ற கோவிலுக்குள்----- பெண்ணே

போகேனென்றே நீங்கிப்  போயின் என்ன?

தரமாட்டேன் பார்த்தருளை  என்னும்தெய்வம்---- கண்டு

தாரணியில் நீயும்பெறும் தண்மையாதோ?

 

வேறிடங்கள் கைதொழவே பெண்கட்குண்டே -----நங்காய்

வேண்டாத ஒண்தலத்துள் வீழ்தலென்னோ?

கூறிடமோ பெண்மைநீங்கு தேவனென்றார் ---- அந்தக்

கூற்றினுக்கும்  ஓர்மதிப்புக் கூர்ந்தாலென்னோ?

 

போராடிப் புண்பட்டு மீறிச்சென்று  ----- ஆங்கும்

புண்ணியங்கள் மேல்வருதல் எண்ணலாமோ?

வேரோடிப் போய்விட்ட உள்ளமைப்பை----முட்டி

வெற்றியொன்றும் சேர்வதிலை மெள்ளப்பாரே.
 
யாப்பியற் குறிப்புகள்:
இந்தச் சிந்து கவியில் ஓரடிக்கு மூன்று சீர்களும்  முதலடியும் மூன்றாம் அடியும் தனிச்சொற்களும் பெற்று வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. சில சீர்கள் நாலசைச் சீர்களாக வந்துள்ளன.  பொதுவொரு நாலசையே என்று காரிகை சொல்வதாலும் பண்டித ந,மு வேங்கடசாமி நாட்டார் முதலியோர் நாலசைச்சீர்களும் வரும் என்பதாலும் இதனுண்மை உணர்க. இப்பாடல் ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தியுள்ளது, 
என்னோ என்பதில் ஓ அசை.
 

வியாழன், 22 நவம்பர், 2018

பிளவர் என்ற ஆங்கிலச் சொல் பிளவு அர்

ஆங்கிலத்தில் பூ என்பதற்கு ஃபிளவர் என்பர்.  இது இலத்தீன் மொழியிலிருந்து ஏனை ஐரோப்பிய மொழிகட்குக் கிடைத்த சொல்.

மற்ற ஐரோப்பிய மொழிகளில் இது பலவாறாகத் திரியும். அவை:

Fleur, Floor, Florina, Fleurette, Floortje Fleur, Flore, Florine, Fleurette, Florette  Flora Flóra  Fiore, Fiorella, Flora Italian Florina  Florinda  Flora   Florina  Florina, Florinda Fflur
என்பனவாம்.

பிளவர் என்பது தமிழ் என்று சொல்ல முந்தவில்லை.

ஒரு மொட்டு என்ற மூடிய பூக்காதது, பிளந்து தன் இதழ்களை விரிக்கிறது. இதனை மொட்டு வெடித்தது என்றும் ஒரு கவிஞன் எழுதியதுண்டு. பிளந்தது என்பதும் அதுவானாலும் இச்சொல்லைப் பெரிதும் நாம் பூ மலர்ச்சிக்குப் பயன்படுத்துவதில்லை என்றாலும் அதையும்  கவிதையில் பயன்படுத்துவது எளிதேயாகும். 

பிள > பிளவு > பிளவர். 

பொருளை நோக்க இது ஒரு நெருக்கமான சொல்லே.

பிளந்த என்ற எச்சமும் பிளரிந்த என்ற ஐரோப்பியச்சொல்லும் நெருக்கமுடையவையே ஆகும்.

இதனை மேலும் ஆய்வு செய்யலாம். 

திரையிசை வைத்திரவுகள்.

repositories என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு எளிய மொழிபெயர்ப்பைத் தேடினேம்.(சில விநாடிகள் ).  இரு சொற்கள் முன்வந்து நின்றன.  ஒன்று களஞ்சியம் என்பது.  இந்நாளில் இச்சொல் பொருள்விரிவு அடைந்துள்ளது.  தமிழ் செறிந்த ஒரு நூலை எழுதிய அறிஞர் க.ப.மகிழ்நன் ( 1945) அதைத் தமிழ்க் களஞ்சியம் என்று பெயரிட்டார். இனிய தமிழ்நடையான் இயன்றது அந்நூல்.  இவர் தமிழ்நடையை எடுத்துக்காட்டுகளிலொன்றாகப் பாவாணர் முன்வைப்பார்.    களஞ்சியம் -  முற்காலத்தில் தானியங்களை கொணர்ந்து சேர்த்து வைக்குமிடத்தைக் குறித்தது.  யாவருமறிந்த எளியவழியில் இதைச் சொல்வதானால் வைக்குமிடம் எனலாம்.  இதை வைப்பிடம் என்று தோற்றுவிக்கலாம். வைப்பகம் என்றால் சற்று முறைப்படி அமைந்த ஓரிடத்தைக் குறிப்பதாகவே எமக்குத் தோன்றுகிறது.  ஆனால் வைப்பிடத்துக்கு இன்னொரு பெயரும் தமிழில் இல்லாமல் இல்லை. அதுதான் குதிர் என்ற சொல்.  நெல்லைக் கொணர்ந்து கொட்டிவைக்க ஒரு கூடு குடியானவர்கள் வீடுகளில் இருக்கும்.  அந்தக் கூட்டுக்குக் குதிர் என்று பெயர்.

கொஞ்ச நேரம் தேடினாலும் அது தேடுதல்தானே.  ஒரு பொருளைச் சில விநாடிகள் திருடி வைத்திருந்துவிட்டு மனம் மாறி மீண்டும் பழைய இடத்திலே யாருமறியாமல் வைத்துவிட்டாலும் அதுவும் திருட்டுதான் என்று சட்டம் சொல்வதாக அறிவோம்.  அதுவேபோல் தான் தேடுதலும்.

இந்தச் சொற்களையெல்லாம் உங்கள் முன் நிறுத்திவிட்டு, இதற்கு ஒரு புதிய பதத்தை கொண்டுதரலாமோ என்று எண்ணினேம்.  அதற்கான ஒரு சொல்லை மிதப்பித்ததில் வைத்திரவு என்பது  வந்து நின்றது.   வைத்திரு > வைத்திரவு.  இங்கு வைத்திரு என்பதில் உள்ள இறுதி உகரம் கெட்டு அகரமாக மாறிவிட்டிருக்கிறது.  இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கூறவேண்டின், உறு + வு =  உறவு என்றசொல்லைக் கொண்டுநிறுத்தலாம்.  திற+ வு = திறவு என்பதில் எதுவும் திரியாமல் இயல்பாய் அமைந்ததால் உறவு என்னும் சொற்கும் திறவு என்னும் சொற்கும் இலக்கணம் வேறாகிறது. இரவு என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதன் அடிச்சொல் இர் என்பது.  இர் + உள் = இருள்.   இர்+ ஆ =  இரா.  இர்+ ஆம் + அர் = இராமர்.  (  இருள் நிறமாகுமவர்). இராமரும் கண்ணனும் கருமை நிறம். இரவு என்பதில் ஓர் அகரம் தோன்றியது.

இறுதிச் சில வரிகளைப் பொழித்துரைப்பின்:

உறு + வு =  உறவு.  ( உகரம் கெட்டு அகரம் தோன்றியது).
திற + வு =   திறவு    (  இயல்பு:  அதாவது விகாரம் இல்லை).
இர் + வு =  இரவு.  ( இங்கு ஓர் அகரம் தோன்றியது.)

இவை நோக்கி.  வைத்திரவு என்பதற்கான இலக்கணத்தை நீங்களே சொல்லிவிடலாம்.

இன்று  ஓரிடத்திற்குச் செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேம்.  ஒன்றன் பின ஒன்றாக இரு விருந்துகள் ஏற்பட்டுவிட்டன:  இருவர் வந்துவிட்டனர். அவர்களுடன் பேசிச்சிரித்து அமுதும் படைத்து அனுப்பி வைக்க வேண்டியதாயிற்று.

அதில் இரண்டாமவராக வந்தவர்  ஓர் இசைப்பிரியர்.  பல பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தார்.   பேசுகையில் ஜோன்புரி என்ற வட இந்திய இராகமும் கல்யாணி என்ற நாமறிந்த கருநட இராகமும் மேலெழுந்தன.  இறுதியில் கல்யாணி இராகத்தில் அமைந்த " நமக்கினிப் பயமேது?"  என்ற பி.யு. சின்னப்பாவின் பாடலைப்  போட்டுக்காட்டினோம்.
அதுகேட்டு அவர் அசந்துவிட்டார்.  இந்தப் பாடலுக்கான இசைத்தட்டு போன்றவை எங்கள் தாத்தா காலத்திலிருந்து எம் வீட்டிலிருந்தன.  பழைய பதிவிசைப் பெட்டியைப் பழையனவாங்குவோரிடம் தூக்கிக்கொடுக்குமுன் சிலமுறை கேட்டிருக்கிறேம்.  இப்போது அது யூடியூபில் கிடைக்கிறது.

பல இசைத்தட்டுகள் உடைந்துவிட்டன. வீடுமாறும்போது உதவியவர்களின் கவனக்குறைவால் அவை போய்விட்டன.

எம்மிடம் முறையான வைத்திரவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சில ஆண்டுகளின் முன் யாமறிந்த முஸ்லீம்  நண்பர் ஒருவர் திருமணத்தின் பின் எம்மையும் சிலரையும் தனிவிருந்துக்கு அழைத்திருந்தார்.  எங்களுக்காக சைவ உணவு உணவகத்திலிருந்து தருவித்திருந்தார்.  உண்டபின் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவர் வீட்டில் நிமையத்துக்கு 78 சுற்று ஓடும் இசைத்தட்டுகள் படப்பெயர்களுடன் வரிசையாக நிலைப்பேழைகளில் அடுக்கியிருக்கக் கண்டோம். 1940 முதல் 1065 வரை  வந்த தமிழ்-   இந்தித் திரைப்படங்களின் பெயர்களும் குறிக்கப்பெற்று இருந்தன. இவற்றுக்குச் சந்தை ஏற்படும், அப்போது அவற்றை உரிய புதிய ஊடகத்தில் (  அதாவது ஓடகத்தில்) பதிவேற்றி விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்றார். நல்ல திட்டம் என்று யாமும் புகழ்ந்தேம்.  இத்தகைய வைத்திரவு    வேறு  வீடுகளிலும் இருக்கலாம்.  எமது தாத்தா விட்டுப்போனவை சிலவே ஆதலின் யாம் இத்தகு வணிகத்தில்  ஈடுபட நினைக்கவில்லை.

இது ஒரு வைப்பகம் அன்று; அதனினும் சிறிது. குடியிருக்கும் வீட்டினொரு பகுதியுமாகும்.   இது ஒரு வைக்குமிடமும் அன்று;  அதனினும் சற்றுப் பெரிது. ஒரு முறையும் வரிசையும் அங்குக் காணப்பட்டன.  எனவே வைத்திரவு என்று பதத்துடன் இதைப்பற்றிப் பேசலானோம். இவையே திரையிசை வைத்திரவுகள்.

தமிழில் சொற்களை உண்டாக்குதல் கடினமன்று. அதற்கு வசதிகள் பல உள்ளது தமிழாகும். கொஞ்சம் சிந்தனையும் முயற்சியும் இருந்தால் பல படைக்கலாம். போர்ப்படைகளுக்குரிய சில அலுவலர் தரநிலைப் பெயர்களை முன்னர் படைத்து வெளியிட்டதுண்டு. அவை மீளா இருளில் மூழ்கிவிட்டன.

இங்கு உள்ள இடுகைகளின் வழிமுறைகளைப் பற்றிநின்று சில சொற்களையாவது உருவாக்கலாம்.

அறிந்து மகிழ்வீர்.

குறிப்புகள்:

வை :  வைத்து > வத்து > வஸ்து.
வை : வையகம்.  இறைவனால் அல்லது இயற்கையால் வைக்கப்பட்ட இடம்.
வைபோகம்:  இனிமை வேண்டிப் போகும்படியான நிகழ்வு.
வை > வ > வயம்:  வைத்திருப்போனிடம் இருத்தல்.
வை > வயம் > வயந்தம்:   உயிர்களைத் தம்பால் ஈர்க்கும் (வைக்கும் )  காலம்.
வை > வய > வயல்:  பயிர்கள் வைத்திருக்கும் இடம்.
வை > வைத்தியம்:  மருத்துவனால் வைத்துப் பார்க்கப்படும் நோயாளிகள் சிகிச்சை முறை  
இன்னும் பல.

எழுத்துப்பிழைகள் பின் திருத்தப்பெறும்,

புதன், 21 நவம்பர், 2018

காலம் மற்றும் தொடர்புடைய சொற்கள்.

காலம் என்ற சொல்லை இன்று அறிவோம்.

உடலினின்றும் வெளிப்பட்டு  கீழாக நீண்டு நாம் தரையில் நிற்க உதவுவது நம் கால்கள்.  இதன் அடிப்படைக் கருத்து நீட்சியே என்பதைக் கால்வாய், வாய்க்கால், பந்தல் கால்  என்றுவரும் சொல்லாட்சிகளால் நாமுணரலாம். காலத்தை உருவகம் செய்யுங்கால் காலன் என்பது மரபு. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டவன் -  பட்டது,  காலம் ஆதலின் காலத்தைக் "காலதேவன்" என்றும் கூறுவதுண்டு.

நாம் வாழும் இப்பூவுலகு வானில் தொங்கிக்கொண்டிருப்பதாகப் பண்டையாசிரியன்மார் சிலர் உணர்ந்தனர். நிலவு, சில கோள்கள் முதலியன வானிலிருத்தலைப் போலவே இப்பூவுலகும் இருப்பதாக எண்ணியே அவர்கள் அவ்வாறு முடிவுக்கு வந்தனர்.  இவர்கள் அமைத்த சொல் "ஞாலம்" என்பது.  இச்சொல்லில் உள்ள "ஞால்" என்பது தொங்குதலைக் குறித்தது. இஃது பழந்தமிழ்ச் சொல் என்பதை நோக்க, பண்டைக் காலத்திலே அவர்கள் அறிவியற் கருத்துகளில் முன்னோடிகள் என்று துணிந்து கூறலாம். இச்சொல் அம் விகுதி பெற்று அழகாய் அமைந்துள்ளது.

ஒப்பிடுங்கால்:

ஞால் -  ஞாலம்;
கால் -  காலம்

என்று ஓரமைப்பில் வருகின்றன இரு சொற்களும்.

இதனோடு கூலம் என்ற சொல்லையும் சேர்த்து நோக்கலாம்.  குல் என்ற அடிச்சொல்லில் விளைந்தது கூலம் என்ற சொல். குல்: குலை; குல் : குலம் முதலியன சேர்ந்திருத்தல், சேர்த்துவைத்தல் முதலிய கருத்துகளை உள்ளடக்கிய சொற்கள்.  கூலம் என்பதும் குல்+அம் = கூலம் என்று அமைந்து தானியங்களைக் குறித்தது. (முதனிலை நீண்டு விகுதி பெற்ற சொல் ).  தான் விளைத்துத் தனக்குரியதாய் விவசாயி கருதியதால் கூலம் என்பது தானியம் (  தான்+ இ + அம்)  என்றும் அமைவுற்றது.  தானி =  தனக்குரியது;  தானி+ அம் = தானியம். வரிக்கு ஒரு பகுதியைச் செலுத்தியபின் மிச்சமெல்லாம் குடியானவனுக்   குரியதே ஆகும். தனக்கு உரியதென்று அவன் வைத்துக்கொள்ளும் விளைச்சல் பகுதி தானியம்.  இதில் "ய்" (ய் + அ) --  யகர உடம்படு மெய்.

இப்போது ஆட்டோ என்னும் வண்டி "தானி" எனப்படுகிறது.  தானே இயங்குவது என்று பொருள்.  ஆட்டோ என்பதற்கும் அதுவே பொருள்.

ஒவ்வொருவரும் ஒரு விலையை ஏற்பு விலையாகக் கூறி, பொருள் கைமாறுவது ஏலம் என்னும் ஒருவகை விற்பனையிலாகும்,  ஏற்புறும் விலை என்னும் பொருள் இந்நடவடிக்கை :  " ஏல் + அம் = ஏலம்" எனப்பட்டது.  வானத்தின் நிற்கும் நிறம் = நிலையான நிறம் என்னும் பொருளில் நீலம் என்ற சொல்லும் முதனிலை திரிந்தே அமைந்தது காண்க.

ஆதலின் காலம் என்ற சொல் அதன் ஓசைகாரணமாக தமிழன்று என்பது ஒரு பிறழ்வுணர்ச்சி என்பதை அறிந்துகொள்ளலாம்.

சூரியன் தோற்றம் தொடங்கி ஏற்படும் பொழுதினைக் காலை என்று சொல்வோம்.  இதுவும்  நீண்ட நேரம் என்னும் பொருளுடையதேயாம்.

கால் > காலை.

நீட்சியான கால அளவையே காலம் என்று சொல்கிறோம். குறுங்காலத்தை "நேரம்" என்றே  குறிப்போம். ஏதேனும் ஒன்று நேரும் பொழுது   ( குறும் காலம்) அது நேரமாகும்; நீண்டு செல்லும் பொழுது காலமாகும். காலும் வாய்க்காலும் நீண்டனபோல.

சால அமைந்து மக்களைப் பெருமிக்க வைப்பது:  சாலம்  ஆகும். பின் அச்சொல் ஜாலம் என்று மெருகூட்டப்பட்டது. சாலவும் வியக்கத்தக்க நிகழ்வு ஜாலம்.
இதன் வினையடி சாலுதல் என்பதே. அடிப்படைக் கருத்து நிறைவு என்பதாகும்.

காலம் என்ற சொல் தொடர்பில் அதற்கு எதுகையாய் ஒலிப்பனவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. அறிந்து மகிழ்க.

செவ்வாய், 20 நவம்பர், 2018

அரணும் சரணும்

இன்று நாம் சரணம் என்ற சொல்லை அறிவோம்.

அகர முதலான அல்லது அகர வருக்க முதலான சொற்கள் சகர முதலாக அல்லது சகர வருக்க முதலாகத் திரிவது பெரும்பான்மை.  இவ்விடுகைகளில் இத்தகு சொற்கள் பல ஆராயப்பட்டுள்ளன. விளக்கினாலன்றி தெளிவுறாத பல சொற்களும் இப்பட்டியலில் உள.

இப்போது ஒரு சொல்:

அடுதல்:  என்றால் சமைத்தல் என்று பொருள்.

இதிலிருந்து தோன்றியதுதான் அடுப்பு என்ற சொல்.

அடுப்பில் வைக்கும் சட்டிக்கும் இவ்வடியினின்றே சொல் அமைந்தது.

அடு >  அட்டி >  சட்டி.


அடு என்பதனுடன் இகரம் சேர்த்தால் அடு + இ =  அட்டி ஆகும்,  இப்போருளில் இச்சொல் வழக்கில் இல்லை, இதிலிருந்து தோன்றியதே :  சட்டி என்பதாகும்.

யாவரும் அறிந்த பட்டியலில் உள்ள ஒரு சொல் வேண்டுமென்றால்:  அமண் = சமண் என்பதை வைத்துக்கொள்க.

அரண் என்பது தமிழில் பாதுகாப்பைக் குறிக்கும்.  அரண்கள் எங்கும் இருப்பவை அல்ல.  ஆனால் பாதுகாப்பிற்கு உரிய இடத்தில் இருக்கும்.
அரிய பாதுகாப்புக் கருவிகளுடன் உரிய இடத்தை அண்மி இருப்பது அரண். அரு+ அண் =  அரண் ஆகும். உரிய இடமென்பது எதிரிகள் கடந்து சென்றால் எங்கு பேரிடர் ஏற்படுமோ அவ்விடமே உரிய இடம்.  அப்படிக் கடக்க முடியாமல் அவர்களைத் தடுத்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே அரண்களின் தேவை ஆகும்.

இவ்வழகிய சொல்லே அரண் ; அது பின் இறைவனிடத்துப் புகுந்து பாதுகாப்பு வேண்டுவோனுக்குச் சரண் என்று மாறியமைந்தது.  அரண் புகுதலே சரண் புகுதலாம்.  இதிலிருந்து சரணம் என்ற சொல் அமைந்தது.

நான் இறைவனிடத்திற்கு வந்துவிட்டேன்; இங்கே எனக்குக் காவல் முழுமை பெறுகிறது.  இதுவே அரண்,  இதுவே சரண்,  என்பவன்,  சரணம் சரணம் என் கின்றான்.    அம் என்ற விகுதியை வெறும் விகுதி என்றாலும் அமைவு குறிகும் பொருள்விகுதி என்றாலும் அதனால் பிழையில்லை என்பதறிக.

அரு அண் -  அரண்.
அரண் >  சரண்>  சரணம்.

இது பின் ஷரணம் என்றும் ஆனது.  இறைவனின் இடமே  பற்றனுக்குக் கோட்டை என்றுணர்வோம்.

ஏதேனும் பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.

திங்கள், 19 நவம்பர், 2018

உணவும் அளவும்

சருக்கரை நோயில் ஒருகால் எடுத்துவிட்டால்
இருக்கவும் நடக்கவும்  அடைவது துன்பமதே.
உருக்கென ஊட்டமாய் வளர்ந்த உடம்பெனினும்
பருக்கை மிகுதியால் பாழ்படக் கெடும்பலர்காண்.

உண்பதும் கணித்தினி அளவுடன்  செய்திடுவாய்
பண்புடன் உணவினை அமைத்துப் பாரினில்வாழ்;
கண்படும் உண்பொருள் அனைத்தும் விழைந்திடிலோ
விண்படும் நோய்களும் விரைந்து வந்திடுமே.


உருக்கு :  இரும்பு.

பருக்கை மிகுதியால் பாழ் :   இது இரத்தத்தில் இனிப்பு
கூடுவதால் ஏற்படும் நலமின்மை;

பலர் கெடும் காண் -   பலர் இன்னும் கெட்டு பொது உடல்
நலக் கேட்டை அடைதல்  காண்க .

அதாவது கெடுதல் ஒன்று இன்னொன்றுக்கு வழி செய்தல்.

இனிப்புநீரும் காலும்.

இனிப்புநீர் நோயாளிகளுக்குக் கால்தான் மிக முக்கியமானது என்று கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

அம்மையார் ஒருவருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது.  இவ்வகையான புண் வந்து அப்புறம் அது தானே ஆறிப்போய் நன்றாக இருந்தவர்களும் பலராவர்.

ஆனால் இந்த அம்மையாருக்கு வந்தது கொஞ்சம் 'பிடிவாதமாய்'  ஆறாப்புண்ணாக இருந்துவந்தாலும்  பலவகைக் களிம்புகள் தைலங்களைத் தேய்த்துக்கொண்டு அம்மையார் கவனிக்காமல் இருந்துவிட்டார்.  யாரும் கேட்டால் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று சொல்வார்.

நாளடைவில் காலில் நோய்நுண்மிகள் நச்சுத்தன்மையைக் கக்குவனவாக மாறிவிட்டன. ஒற்றைக் கால் வலிமை இழந்ததுடன் மருத்துவர்கள் அதனை அறுவை செய்து எடுத்தாலே பிழைக்கமுடியும் என்று சொல்லிவிட்டனர்.

கால் போனபின் சக்கர நாற்காலியில் கட்டுண்டவராக இருந்தவர் பலமுறை மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றார். ஐந்தாண்டுகள் இவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இனிப்பு நீர் நோய் கூடிவிட்டது.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவ்வம்மையாரின் ஆத்ம சாந்திக்கு வேண்டிக்கொள்கிறோம்.

 இதுபோலத்  துயர் உறுவோர் பலர் என்பதை அறிவோம். இனிப்பு நீர் இருந்தால் கால்களை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் காயமோ புண்ணோ ஏற்பட்டால் அதற்கு முதன்மை கொடுத்து உரிய மருத்துவ உதவியைத்  தாமதம் இன்றி நாடுங்கள்.


வெள்ளி, 16 நவம்பர், 2018

மந்தி பெயர் அமைவு

மந்தி என்பது ஒரு விலங்கின் பெயர்.

விலங்கு என்ற சொல் மனிதரிலிருந்து வேறாக விலக்கப்பட்ட ( உயிரிகள் ) என்று பொருள்தருஞ்  சொல்.  வில -  விலக்கு;   வில -  விலங்கு. மூலச்சொல் வில் என்பதுதான். அதை முன் விளக்கியுள்ளேம். பழைய இடுகை காண்க.

மக என்ற பிறப்புக் குறிக்கும் சொல் ம்ருக என்று அயல்திரிபு அடைந்தது. அதிலிருந்து மிருகம் என்ற சொல் அமைவானது.   மகம் >   மிருகம்.  மகமென்பது ஒரு நக்கத்திரத்தின் ( நட்சத்திரத்தின் ) பெயராய் அமைந்த அல்லது உருவான உடு என்னும் பொருளைப் போதருவிக்கின்றது.  இன்பம் என்பது எப்போதும் இருப்பதன்று.  அப்போதைக்கப்போது உண்டாகி மறைவதாம்.  இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும்.  ஆதாலின் அவ்வப்போது வாழ்க்கையில் உண்டாவது என்ற சொல்லமைப்புப் பொருளில் மகம் என்பது இன்பத்தையும் குறிப்பது.

பிற அணியில் உள்ளவை பிறாணி;  பிறாணி > பிராணி. இது வேறு இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.  பிராணி > பிராணன். (  உயிர் ).  மக்கள் அணி அல்லாத பிற அணியின பிராணி எனப்பட்டன.  ற > ர திரிபு.

மந்தி என்ற சொல்லுக்கு வருவோம். இது:

மன் + தி = மந்தி என அமைந்தது.

எழுத்துப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

முன் > முந்தி;  பின் > பிந்தி,   தொல்>தொன்>தொந்தரவு;  மன்+திறம் = மந்திரம்.  இது ற>ர திரிபு.  திரம் என்பது ஒரு விகுதி.  திறம் என்பதிலிருந்து வந்தது ஆகும்.

மனிதன்.  மாந்தன் என்ற அவ்வடிச்  சொல்லினின்றே மந்தி என்பதும் தோன்றியுள்ளது.

மந்தி :   எனவே மனிதன் போன்ற விலங்கு என்பது பொருள்.

மன் > மன்+  இது + அன் = மனிதன்
மன் > மான் > மான் + து + அன் = மாந்தன்.
மன் > மன்+தி > மந்தி.
மன் > மான் + இடன் >  மானிடன்.

இது,  து,  இடம் என்பன சொல்லிடைநிலைகள்.

மன்னுதல்:  நிலைபெறுதல்.  மனிதன் தன்னை நிலைபெற்ற உயிராகக் கருதிக்கொண்டான்.  அதுவே அவன் அமைத்த சொல்லிலும் காணப்படுகிறது.
மந்தி என்ற சொல்லில் அவன் அவ்விலங்கின் மனிதப்போன்மையை ஒப்புக்கொள்கிறான்.  மன் என்பது முன்> முன்னுதல் என்பதன் திரிபு என்பார்
பிற ஆய்வாளர். முன்னுதலாவது சிந்தித்தல்.

திருத்தம் பின்.


ரோடா போர்த்துக்கீசிய சொல்.

ரோடா என்றொரு சொல் உள்ளது.  இதற்குச் சக்கரம் என்று பொருள்.  தமிழில் இன்னொரு சொல் வேண்டுமானால் "உருளை" எனில் பொருளொக்குமென் றறிக.

ரோடா என்பது தமிழில் ரோதை என்று சற்று ஒலிவன்மை குறைந்து இயலும்.

தொடர்புடைய வேறு பொருள்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன,

https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_50.html

டா என்ற ஒலிக்கு தா என்பது சற்று மென்மை; இருப்பினும் இரண்டும் தமிழ் இலக்கணியரால் வல்லினம் என்றே அடையாளம் காணப்பட்டவை.

ரோதையும் ரோடாவும் தமிழன்று என்பது தமிழ் ஆய்வாளர் நமக்குச் சொல்வது.

இருக்கட்டும்.  இச்சொல் எப்படி அமைந்தது என்பதைக் காண்போம்.

உருளுவதும் ஓடுவதும் உருளையின் அடைவுகள்.  "த ப்ராப்பர்டீஸ்" (    the properties / characterestics        )   என்பர்.

அடைவு என்பது:  ஒரு பொருளை அடைந்து அல்லது சென்றுசேர்ந்து அப்பொருளின் தன்மையாகிவிட்ட சிறப்பமைவுகள் . யாம் அடைவு என்றால் அதற்கு இதுவே பொருள்.

உருள் +  ஓடு + ஆ=   உரு + ஓடு + ஆ=  உரோடா > ரோடா

உருள் என்ற சொல்லைத் தலையும் வாலும் வெட்டிப் புகுத்தியுள்ளனர்.

ஆ இறுதிநிலை பெற்ற சொற்கள்:


நில் >  நிலா
பல் >  பலா (  பல சுளைகள் உள்ள பெரிய பழம் )
கல் >  கலா  ( கற்றுச் செய்யப்படுவது )  கலை.
வில் >  விலா  ( வளைவு)
உல் > உலா.
செல் > செலா  (  செலாவணி )

இவ்விகுதி வினைச்சொற்களிலும் அல்லாதனவிலும் வரும்.
 ளகர ஒற்று வீழ்ந்த இன்னொரு சொல்:

இருள் + வசி=   இருள்வசி > இருசி.>  இருடி.

காட்டிருளில் வாழும் தபசி. இவர்கள் பெரும்பாலும் ஊர்வாணரை வெறுத்ததால் " கெட்ட இருசி"  என்று குறிக்கப்பெற்றனர்.


உருள் என்பது முதலில் தன்  ளகர ஒற்றை இழந்தது.  சொல்லமைந்த  பின் உகரத்தை இழந்தது.

ரோட் என்பதனுடன் தொடர்புடைய இந்தோ ஐரோப்பியச் சொற்கள் பல. அவற்றை ஈண்டு பட்டியற்படுத்தவில்லை.

ரோதை என்பது திரிபு.

உருள்  -  தமிழ்
ஓடு -  தமிழ்.
ஆ -  தமிழ் விகுதி .

இரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டால் அது  போர்த்துக்கீசியச் சொல் ஆகிவிடுகிறது.

இந்த ரோடா இங்கிருந்தால் என்ன?  உருண்டு அடுத்தவீட்டுக்கு ஓடிவிட்டால்தான் என்ன?  எங்கிருந்தாலும் வாழ்க.




புதன், 14 நவம்பர், 2018

திகைதல் : திகைதி தேதி.

தேதி திகதி என்பன தமிழ்ச்சொற்கள் என்பதை முன்பு வெளியிட்டதுண்டு.

இதற்குரிய வினைச்சொல் திகைதல் என்பது.

இப்போது ஆங்கில மொழி மிகுதியாக வழங்குவதால் இச்சொல் பயன்பாடு குன்றி வருகின்றது.  தமிழ் மொழி என்பது பெரும்பாலும் வீட்டுமொழியாகிவிட்டது.

சிங்கப்பூர் மலேசியா முதலிய நாடுகளில்தான் இப்படி என்றால் தமிழ் நாட்டில் இன்னும் மோசம் என்றுதான் சொல்லவேண்டும்.  உரையாடலில் இயல்பான நிலையில் பிரிட்டன் அமெரிக்கா முதலிய நாடுகளில் வழங்காத அல்லது குறைவாகவே வழங்கும் (ஆங்கிலச் ) சொற்கள் கூட தமிழில் கலந்து பேசப்படுகிண்றன.. அன்றாடப் பொருள்களான ரொட்டி என்னும் உரொட்டி கூட "பிரட்டு" என்று ஆங்கிலச்சொல்லால் குறிக்கப் பெறுவதாகிறது.  இந்நிலை மாறுமென்று எதிர்பார்க்கவில்லை.  தோசையை டோசா என்பாரும் உளர்.  தோசை என்பதோ  அரிசியையும் உளுந்தையும் நீரில் தோய்வித்து  அரைத்துச் செய்யப்படுவதால் தோயல் :  தோயை >  தோசை என்று அமைந்தது.  மற்றொன்று:  அப்பிச் சுடுவதால் அப்பம் ஆனது.

ஆகவே திகைதல் என்ற வினைச்சொல் புழக்கம் குறைவது வியப்பிற் குரித்தென்று நினைக்கவில்லை.

சந்தையில் மாடு வாங்கப் போனவன்,  மாடு வாங்கிக் கொண்டிருந்த இன்னொருவனைப் பார்த்து:  "விலை திகைந்து விட்டதா?":  என்று கேட்பான்.  அதாவது விலை தீர்மான மாகிவிட்டதா என்பது கேள்வி.

நாள் எது என்று குறிப்பதே  திகை >  திகைதி >  தேதி  ஆகும்.

நாள் -  பொதுச்சொல்.  குறிக்கப் படாததும் குறிக்கப் பட்டதும் நாள்.
24 ಮಣಿಕ್ಕೂಱು ಎನ್ಪಥು ನಾಳ್.  ಪಕಲುಮ್ ನಾಳ್ ಥಾನ್.

ಥಿಕಥಿ - ಥೇಥಿ ಎನ್ಪನ ಕುಱಿಕ್ಕಪ್ಪತ್ತವೈ; ಥಿಕೈನ್ಥವೈ.

திகைதி என்பது திகதி என்று வருதல்  ஐகாரக் குறுக்கம். வேறு எடுத்துக்காட்டுகள்:

பகு > பகுதி > பாதி;
தொகு > தொகுப்பு > தோப்பு.
வகு > வகுதி  > வாதி. (வகுந்த அல்லது பிரிந்த நிலையில் பேசுவோன்). இதனை வேறு வழியிலும் விளக்கலாம்).

தோப்பில் வீடு என்பது கேரளாவில் ஒரு சிற்றூரின் பெயர். வீட்டுப் பெயருமாம்.

திகைதி என்பது திகதி என்று சுருங்கிய பின் திக என்பது  தே என்று நீளும்,

அடுத்து ஒரு ககரமோ அதன் வருக்கமோ வரின் முதல் நீளும்.

எ-டு:

அகத்துக்காரி >  ஆத்துக்காரி.    அ என்பதை அடுத்து க வந்தது.
அக > ஆ,

ஆதலின் திகதி தேதி என்பன தமிழென்று உணர்க.

நாள்:  1.  24 மணிநேரம் கொண்ட கால அளவு,  2.பகற்பொழுது.

தேதி :  நாட்காட்டியில் குறிக்கப்பட்ட மற்றும் தீர்மானிக்கப்பட்ட இரவும் பகலுமான கால அளவு,

திகதி தேதி என்பன தமிழன்று  என்று அஞ்சிய அறியார்   " நாள்" என்பதையே உகப்பர்.   திகதி தேதி இரண்டும் திரிசொல்;  நாள் இயற்சொல்.

ஆனால் தேதி என்பது உலகசேவையில் ஈடுபட்ட சொல்.  "டேட்" என்ற ஆங்கிலச்சொல்கூட இதனுடன் தொடர்பு உள்ளது.  இலத்தீன்:  டேட்டம்,
கணினி அறிவியலில் அடிக்கடி பயன் காணும் டேட்டா என்பது   இது   இதன் இலத்தீன் பன்மை வடிவம்.

திகைதல் என்ற  வினையினின்று உருப்பெற்று உலகப்பணி புரியும் இச்சொல்லால்  எமக்கும் பெருமையே. இதனை உலகினுக்கே தந்தது நம் தமிழ்.

மகிழின் மணத்தினை மறைத்திடலும் கூடுமோ?

errors will be rectified later..


தெருப்பாவலனின் உணர்ச்சிக் கவிகள்.

கவிதை என்பது ஒருவித மனமயக்கில் ஏற்படுவதாகும்.  முற்றத் தெளிந்த உள்ளத்தினனுக்குக் கவிதை பிறப்பது அரிதே ஆகும். அவன் சில சொற்களை  வரிசைப் படுத்தி இணைத்து ஒருவாறு பொருண்மை தோன்றும்படி அமைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது.  கவிநோட்டம் செய்யும் அறிஞர்கள் கவிதையில் உணர்ச்சி இருக்கவேண்டும் என்று உரைப்பர். உணர்ச்சி அற்ற கவியானது வெறும் சொல்லடுக்கே ஆகும்.

நாம் எழுதும் கவிதைகள் இந்த வகையில் கவிதைகள் என்ற பெயர்ப்பலகைக்கு ஏற்புடையவல்ல என்று யாரேனும் சொன்னால் அதற்காக நாம் அவர்பால் சினம் கொள்ளாமல் இருப்போம். உணர்ச்சியைக் கண்டுகொள்வதில் கவிதையைக் கேட்போனுக்கும் பங்கு இருக்கிறது.  பாடியவனின் உணர்ச்சிநிலையைக் கேட்போனும் எட்டிப்பிடிக்க வேண்டுமே.  இல்லாவிட்டால்  கேட்போன் பாவலனின் உணர்ச்சிப்பதிவினை மீட்டெடுக்கத் தவறியவன் ஆகிவிடுவான்.  பாடியோன் எத்தகைய உணர்ச்சி நிலையில் நின்று பாடினானோ அதே நிலைக்குக் கேட்போனும் உயரவேண்டும். இப்படி உயர இயலாதவன் எத்துணை அளவிற்குப் பண்டிதன்மை உடையவனாய் இருப்பினும்  கேள்வித் தகுதி உடையவன் அல்லன். இந்நிலையில் அவன் நீருக்குள் இல்லாத மீனே ஆவான்.  இன்னொரு மீனை யவன் உணர்ந்துகொள்ளல் இயலாதது ஆகிவிடும்.

நீர் என்பது உணர்வலைத் தொகுப்பு.  மீன் என்போன் அதிற் கிடக்கும் கவிஞன். கேட்போனும் அந்நீருக்குள்ளேயே குதித்துவிடவேண்டும்; மீனோடு மீனாகிவிட  வேண்டும்,  பாவலனின் நீராழத்தை எட்ட இயலாதவனாய் இருக்கலாம். உணர்வாழம் ஏற்புடைய மூழ்களவினை எட்டிவிடவேண்டும்.

காமத்தின் அளவு மிஞ்சியதால்  இடுப்பு உடுக்கை மார்பு படுக்கை என்று எழுதுகிறவனும் கூடக் கவிஞனே ஆனாலும் இவன் காமவிகாரக் கடலில் வீழ்ந்து தத்தளிப்பவன்.  அவன் கவிதையால் நன்மை விளைதல் இல்லை. இவனை ஒதுக்குவது நமக்கு நன்மை ஆகும்.

மயங்குவதை விளைப்பதே மது   ஆகும். இச்சொல்லே இடைக்குறைந்து மது என்று வழங்கத் தொடங்கியது. ,மயக்குவது >  ம~து = மது.  குடிப்போரிடை உருவாகிய இந்தக் குழூஉக் குறி நாளடைவில் பரவி உயர்ந்து மொழியில் ஒரு சொல்லாகியது.

ஓர் உண்மை நிகழ்வில்  மதுமயக்கில் ஒருவன் இப்படிப் பாடினான்.  இவன்பெயர் சின்னத்தம்பி என்று இவனே பாடிச் சொல்வான்:

" அடடா இந்தச்
சிங்கப்பூரு பதினாறு கல்லுக்குள்ளே --- இந்தச்
சின்னத்தம்பி கால் படாத    இடமும் இல்லே ----  நானும்
பார்க்காத ஆளும் இல்லே."

என்று பாடிக்கொண்டிருப்பான்.  இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றால் இவன் பாடத் தொடங்கிவிடுவான்.  உலகறியப் பெயர் விளங்கியவன் மட்டுமா கவிஞன்?  இவனும்கூட ஒரு கணிப்பில் கவிஞனே  ஆனான்.

இன்னொரு சமயம் இவனிடமிருந்து ஒரு வெறுப்புக் கவிதை வெளியானது.
அது இப்படி உருக்கொண்டது:

" அண்டமா முனிவரெல்லாம்
அடங்கினார்  ...............க்குள்ளே
தொண்டு செய்யும் தோழரெல்லாம்
தொங்கினார் ...............க்குள்ளே"

என்று இடக்கர்ச் சொற்களைப் புகுத்திப் பாடினான்.  உலக வெறுப்பின்  உச்ச நிலைக்குச் சென்றுவிட்டான் இந்தத் தெருப்பாவலன்.

இவைகளெல்லாம் இவன்தன் "கையெழுத்து வெளிப்பாடுகள்." signature outpourings  அல்லது அடையாள ஒளித்தட்டுகள் luminous identification plates என்னலாம்.  இவன் வேறுபாடல்களும் பாடிக்கொண்டிருப்பான் ஆனாலும் கிறுக்கில் தாக்கினாலும் தாக்குவான் என்று அஞ்சி இவனிருக்கு மிடத்தை விரைவில் கடந்து செல்லுதல் எமது  வாடிக்கையாய் இருந்தது.

கவி என்றாலே அது உணர்ச்சிகளின் குவி   ஆகும்.   குவி என்றால் குவிப்பு, கொட்டிவைப்பு.  அகர முதற் சொற்கள் உகர முதலாகவும் அவ்வழியிலே அம்முதல்களே முறைமாற்றாகவும் வருதல் சொல்லியல் இயல்பு ஆகும்.
கவிதல் என்பது குவிதல்.  கவிகை என்பது குவிந்த நிலையினதான குடைக்குப் பெயர்.

ஒரு பொருண்மேல் எண்ணங்கள் கவிந்து நிற்க வெளிப்படும் பாடலே கவி.
இதன் வினைச்சொல் கவிதல் ஆகும்.

இவன் கவியில் உணர்ச்சிகள் குவிந்து கிடப்பனவான நிலை காணலாம். பா என்பது பொருட்பொதிவு உடையது;  கவி என்பது உணர்ச்சிக்குவியல். அது உணர்வுக் குவியல் என்ற நிலையில் தெளிநிலை கடந்து நிற்பது ஆகும்.
ஒளிமழுக்கில் ஓடிவரும் நெளிவலை அதுவாம்.

பிழைகள் பின்னர் சரிசெய்யப்படும்.
ஒருமுறை திருத்திய நாள்:  16.11.2018 
தன் திருத்த மெல்லியும் கள்ளப் புகவர்களும்
புதிய பிழைகளை ஏற்படுத்தக்கூடும்.





செவ்வாய், 13 நவம்பர், 2018

அப்பாவும் கப்பாவும் அருமன் > வருமா, வர்மா

ஒரு நல்ல நண்பரின் இனிய பெயர் முருகப்பா.  இவர் பெயரை நினைக்கும்போதெல்லாம் என் அப்பன் முருகனை நினைத்துக்கொள்வேன்.

அப்பன் முருகனே  முருகு+ அப்பன்.   இரண்டு சொற்கள் கூடிய பெயர் என்பது உங்களுக்குத் தெரியும்.   இவற்றுள்  முருகு என்றால் அழகு;  அப்பன் என்பது தெரிந்த சொல்லே.

அப்பனை அழைக்கும் போது அது அப்பா ஆகிறது.  அப்பா என்பது விளி வடிவம்.   இச்சொல்  அத்தன் ( அத்தா) என்றும்  அச்சன் ( அச்சா) என்று வேறுவடிவங்கள் உள்ள சொல் ஆகும்.  விளி வடிவம் என்றால் அழைக்கும்போது ஒரு சொல் ஏற்கும் அல்லது அடையும் வடிவமாற்றம் ஆகும்.

விளிவடிவத்தையே தன் பெயராகக் கொண்டவர் அந்த நண்பர்.  இப்படி விளியே எழுவாய் நிலையில் நிற்பதும் அப்புறம் உருபு ஏற்பதும் இலக்கண நூல்களில் விரிக்கப்படவில்லை என்றாலும், அது உலக வழக்கில் உள்ளது.

படித்த இலக்கணத்தைக் கொண்டு படிக்காதவற்றையும் அறிந்து இன்புறுவோனே அறிவாளி.  இதை என் வாத்தி (வாய்த்தி :  வாய்ப்பாடம் சொல்வோன்)  சொல்லிக்கொடுக்கவில்லை என்றோ  என் பாடபுத்தகத்தில் இல்லை என்றோ சொல்வது கல்விக்கும் கேள்விக்கும் நேர்ந்த ஒரு கொடுமையே ஆகும்.

உலக வழக்கில் விளிவடிவமும் உருபு ஏற்கும்.  எடுத்துக்காட்டு:

"முருகப்பாவைக் கடையில் பார்த்தேன். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்."

பெயர் முருகப்பன் அன்று.  முருகப்பாதான்.  அச்சொல்லே உருபு ஏற்று மாற்றம் அடைந்தது.

ஆகவே முருகப்பா என்பது விளிவடிவத்திலிருந்தாலும்,  எழுவாய் வடிவம்போல் உருபு ஏற்றது.  முருகப்பாவை என்பதில் ஐ வேற்றுமை உருபு ஆகும்.

முருகப்பாவை :  இது செயப்படுபொருளாகிறது.

சில மொழிகளில் சொல் வடிவம் மாறுவதில்லை.  உருபுகளும் இல்லை.

முருகப்பா என்ற பெயர் ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பெறின் நீண்டுவிடுகிறது.  இதனை பிறமொழிக்காரர்கள் சுருக்கியே அழைப்பர். நண்பர் முருகப்பாவை அவர்கள் "மிஸ்டர் கப்பா"  என்று அழைத்ததுமட்டுமின்றி பெயர் அருமையான பெயர் என்றும் பேசிக்கொண்டனர்.  நாமும் ஒப்புவோம்.
கப்பா என்பது நல்ல பெயர்தான்.

இவர் பெயர் நல்ல வேளையாக வேங்கடப்பா  என்று இல்லை. இருந்திருப்பின் கடப்பா என்றோ டப்பா என்றோ இவர்பெயர் உருமாறியிருக்கும்.

ஆனால் பெரியசாமி மிஸ்டர் பெரி என்று விளிபெறும் போது மிக்க நன்றாகவே இருக்கிறது.

இப்போது முருகப்பா மீதில் ஒரு வெண்பா பாடுவோம்.

நல்லமுரு  கப்பாவே  நாளைக்கு நீவாவா
வெல்லமிட்டு நான் தரு வேன் தேனீரை ----- நில்லாதே
சம்பளம் இன்றில்லை சாற்றிவிட்டார் நம்காணி
கொம்புமடித் துக்கொண்டு போ.

காணி:  கங்காணி என்பதன் முதற்குறை. ( "சுப்பர்வைசர்")

எனது இந்த வெண்பாவில்  முரு என்பது முதற்சீரிலும்  கப்பாவே என்பது இரண்டாம் சீரிலும் வந்துவிட்டது.  பிரிந்து நிற்கின்றன இத்துண்டுகள்.
பாடல்களில் நாமும் இப்படி பிரித்துப்  பாடுவதுண்டு என்றாலும்  பாடும்போது அது முருகப்பா என்ற ஒரு பெயர் என்று நினைவில் இருத்திக்கொண்டு அதற்குப் பங்கமின்றிப் பாடுவோம்,

குருவிக்காரி  வண்டிக்காரன் என்ற சொற்களில் காரன் என்பது பிறழ்பிரிப்பில் வந்த சொல்.  இது உண்மையில்  குருவிக்கு + ஆர் + அன், என்பதுதான்.  ஆர்தல் என்பது  உரிமை என்று அல்லது உடைமை என்றும் பொருள்தரும்,  இந்தக் காரன் காரி வேற்று மொழிகளிலும் பரவிய சொல் ஆகும்.   ஆர் = அவர் என்றும் அமைதற்குரியது.   எடுத்துக்காட்டு:  கண்டார் =  கண்டவர்.

ஆர்தல்:  பல்பொருளொரு சொல்.

அருமை + மன்னன் =   அரு + மன்  =  அர்மன்.
நந்தி + அருமன் =  நந்திவருமன் =  நந்தி வர்மன் =  நந்தி வர்மா.

தி + அ =  திவ  ( நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் )

அருமை மன்னன் என்பதில்  மை பண்புப்பெயர் விகுதி.   அன் என்பது  ஆண்பால்.

பிறழ்பிரிப்பால் வர்மா போதரும் என்பது உணர்க.

அருமன் என்ற சொல் மறைந்தது,  ஆனால் அருமை, மன்னன் என்ற சொற்களின் இணைப்பில் அது மீண்டும் வெளிப்படுவதாகும்,

திங்கள், 12 நவம்பர், 2018

சிங்கம் சொற்பொருள்.

மிகப் பழங்காலத்திலே அரிமாக்கள் என்னும் சிங்கங்கள் அருகிவிட்டன.
அதாவது அவை எண்ணிக்கையில் உலகில் சுருங்கிவிட்டன.  பல நாடுகளில் அவை அழிந்துவிட்டன.

அவற்றைக் காத்து இன அழிவினைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் சிங்குதல் என்பது ஒரு வினைச்சொல்.  இது பழைய சொல்.  இது குறைந்துகொண்டு வருதல் என்னும் பொருளுடையதாகும்.  நல்ல வேளையாக இச்சொல் போன்றவை  இன்னும் நிகண்டுகளில் பாதுகாத்து  வைக்கப்பட்டுள்ளன

சிங்கு + அம் =  சிங்கம்

அப்படியென்றால் எண்ணிக்கையில் குறைந்துவரும் விலங்கு.

பிற விலங்குகளை அரித்து அழிக்கும் விலங்கு என்ற பொருளில் அது அரிமா எனப்பட்டது.  அதாவது பிற விலங்குகளை வேட்டையாடி அழிக்கும் திறம் கொண்ட விலங்கு என்று பொருள்.  அரி என்பது ஒலியையும் குறிக்கும்.  அரற்று என்ற சொல்லில் வரும் அர் என்ற அடிச்சொல்லிலிருந்தே  அரி என்பதையும்   அர்+ இ  என்று விளக்கலாம்.   கர்ச்சனை செய்யும் விலங்கு என்று பொருள்.  கர்ர் என்பது ஒலிக்குறிப்பு.  கர்> கர்ச்சி > கர்ச்சித்தல்.  இது கர்ஜித்தல் என்றும் உருப்பெறும்.  அர்ர் > கர்ர் ஒலிக்குறிப்புகள்.

மனிதரிலிருந்து விலக்கித் தனியாக வைக்கப்பட்டவை விலங்கு,   வில > விலகு;  வில > விலங்கு.  விலக்கு என்பது விலங்கு என்று மெலித்துச் சொல் அமைந்தது,

மக என்பது பிறப்பைக் குறிக்கும்.  எடுத்துக்காட்டு:  மகப்பேறு.   மகன், மகள் , மக்கள் என்பனவும் மாக்கள் என்பதும் காண்க.  மக என்பது ம்ருக என்று அயலில் திரிந்து மிருக என்ற சொல் அமைந்தது, குறிலையடுத்து ஒரு ககரம் வர இடையில் ஒரு ருகரம் தோன்றுவது அயல்திரிபு.

மக >  மிருக > மிருகம்.   பிறப்பு உடையது என்று பொருள்.

மனிதரல்லாத பிற அணியிலுள்ளவை  பிற அணி -  பிறாணி -  பிராணி ஆயின. இங்கு பிற என்பது  மற்ற என்றும் பிறப்பது என்றும் இருபொருளும் தரும் இருபிறப்பிச் சொல் ஆகும்.  பிராணி உயிருள்ளதாகையினால் பிராணன் என்ற சொல் அமைந்து உயிரைக் குறித்தது. பல சொற்களில் றகரம் ரகரமாகிச் சொல் அமைந்திருத்தல் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது அறிக.

விலகு > விலங்கு என்பதும் பிற அணி > பிராணி என்பதும் மனிதரிலிருந்து வேறுபட்டவை என்ற பொதுக்கருத்தினடிப்படையில் ஏற்பட்ட சொற்களே.

பிறப்புடையது,  வேறானது என்ற கருத்துகள் எளிய கருத்துகளே ஆம்.

Lion entered a house வீட்டினுள் சிங்கம்

Read this amazing story in:

https://www.indiatoday.in/india/story/lioness-enters-house-gujarat-what-she-does-next-will-make-you-smile-1386949-2018-11-12

வீட்டினுள் சிங்கம்

இன்று நல்ல மழை; இனிய குளிர்.

நிலம்குளிரப் பெய்மழையால்
  நெஞ்சும்  குளிர்ந்ததே-----  இங்கு
நேற்றுவரை மேய்ந்த குருவி
  எங்கு  மறைந்ததோ.

கலங்கள்கொண்டு வெளியில்இட்டால்
  நிறைந்து  வழிந்திடும் -----வீட்டுக்
குழாய்கள் நீரைத் தந்த தாலே
 கண்டு களிக்கிறோம்,

பனிபடர்ந்த  நாட்டில்போல
 இனிய குளிரிதே ---- குளிர்
ஊட்டு கருவி ஓட்டமின்றி
 உறங்க முயல்கிறோம்,

எண்ணம்ஓடித்  தண்மைதன்னில்
கரைந்து போனதோ --- கவி
பண்ண வேண்டும் என்னில் ஈண்டு
வரிகள் வேணுமே!

உறக்க தேவி பதுக்க வந்து
என்னை  அழைக்கிறாள்----நேரம்
இருக்கும் நாளைக் காலைவந்து
கவிதை விளைக்கிறேன்,

பதுக்க -   மெல்ல.

ஞாயிறு, 11 நவம்பர், 2018

தீபாவளியும் தொழிலாளர்களும்

சுற்றுப்புறம் தூய்மைசெய்  தொழிலாளர் எமதுநண்பர்
பற்றுமிக அவர்பால்வை; பாவமவர்  காலைமாலை
உற்றபணி செய்துயர்வார்; ஊர்சிறக்க உழைத்திடுவர்.
மற்றெவரோ நல்லகாற்று மூச்சிழுக்க வழங்குபவர்?

தீவளிக்குப் பலகாரம் தேர்ந்தெடுத்துக் கொணர்ந்துண்டாய்
ஆவனயா வும்செய்தாய்  அலங்காரம் பலவிளைத்தாய்
நாவுயர்த்தும் ஆண்டவனோ நம்தொழிலா ளர்துணைவன்;
கூவியழைத் தவர்க்கெல்லாம் நாவினிக்க விருந்தளிப்பாய்,

செய்தபல ஊணனைத்தும் சீருடனே அவர்முன்வை;
வைததுண்டோ அவர்களைநீ  வாயில்கை முட்டிக்கொள்;
நெய்ச்சோற்றை  நீகொடுப்பாய்; நேரிதாகப் பாலும்கொடு
வையமெல்லாம் வாழ்வுபெறும் பைநிறையும் கைநிறைம்மே.


நிறைமே - நிறையுமே. 
தீவளி -  தீபாவளி.  ( பா - இடைக்குறை).
வட இந்தியாவில் தீவாளி என்று வரும்.

பிழைத்திருத்தம் பின்.

ஸகரம் ஷகரம் ஒற்றுகள் தோன்றிய சொற்கள் சில

ஒரு கட்டிடம் கட்டுங்கால்,  நிலத்தை நன் கு அகழ்ந்து  தூண்களை உள்ளிறக்கி அதன்  பிணிப்பில் சுவர் கூரை முதலிய அமைத்துக் கட்டுவது வழக்கம்.  இந்த வேலையைப் பிராமணர்கள் செய்ததில்லை.  அவர்கள் கட்டிட வேலைக்காரர்கள் அல்லர்.  இந்த வேலையைச் செய்தவர்கள் தொழிலாளர்கள் தாம்.

அஸ்திவாரம் என்பது கட்டுமான ஊழியர்கள்  அமைத்த பெயரே.   அதில் இலக்கணப் பின்புலம் ஏதேனு இருக்குமானால் அது   ஆகூழால் (அதிர்ஷ்ட வசமாக )  அமைவுற்றதே ஆகும்.  அதாவது சொல்லமைப்பு என்று கருதாமல் காலப்போக்கில் பேச்சுவழக்கில் அமைந்த சொல்  இது  ஆகும்.  இதற்கொரு சொல் கொடுக்குமாறு புலவரைக் கேட்டு அவர் அமைத்தால் இரண்டு மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்.  அத்தகையோர் கடினச் சொல்லொன்றை அமைத்தளிப்பதே பெரும்பான்மை.  கட்டிட வேலை என்பது இரும்படிக்கும் இடத்துக்குச் சமானமானது;  அங்கு ஈயாகிய புலவருக்கு என்ன வேலை என்பதே பொருத்தமான சிந்தனை.

சிறுசிறு மனைகளைக் கட்டிய தொழிலாளிகளே இச்சொல்லை அமைத்தனர். அவர்கள் மண்வெட்டியும் கூடையும் கொண்டு மண்ணை அழுத்திவாரி அப்புறப்படுத்தித் தூணை நட்டனர்.  அக்காலங்களில் கற்றூணே  ( கல் தூணே) பெரும்பான்மை.

அழுத்திவாருதல் > அழுத்திவாரம் > அஸ்திவாரம்.

பேச்சுவாக்கில் ழு என்பது ஸ் ஆகிவிட்டது.   உயர்த்தி என்ற சொல் ஒஸ்தி என்று ஒலிக்கப்படுவது எப்படியோ இதுவும்  அப்படியே..

 இன்னொரு சொல்:


உதாரணமாக:  கழுத்தூறி > கஸ்தூரி.

கஸ்தூரி மான் ஒரு வாசனையை வெளிப்படுத்தும் மான். அதன் கழுத்துப் பக்கமாக ஊறிவந்ததென்பது சிற்றூரார் நம்பிக்கை.  அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல் அமைந்துவிட்டது.

ஸ் போன்ற ஒலிகள் இயற்கையில் இல்லாதவை அல்ல.  அதுதான் பாம்பு சீறும்போது காதில் விழுகிறதே!  வாணம் விடும்போதும் புஸ் என்று போகிறதே! மனிதனுக்கும் அது ஒவ்வாத ஒலி அன்று.  இலக்கணம் செய்த தொல்காப்பியனார், பல்காப்பியனார் , பல்காயனார், காக்கைபாடினியார் முதலியோர் அதை  ஓர் எழுத்தொலியாக ஏற்கவில்லை.  அக்காலத்திய மொழி நிலை அது.  ஆகவே மொழிமரபு.

சீன மொழியில் பெரும்பாலும் சொல்முதலில் அது வரும். ஸியாவ், ஸ்யோங்க், ஸியா  ஸெங்க் எனப்பல உள்ளன.

தொல் மொழியான அரபியிலும் இத்தகு ஒலிகள் உள.

ஏனைத் திராவிட மொழிகளிலும் உள.

பிற்காலத்தில்  ழுகரத்தை விலக்கிவிட்டுச் சில சொற்கள் அமைந்தன. எடுத்துக்காட்டு:

விழுபுலம் >  விபுலம்.  (விழுமிய அதாவது சிறந்த நாட்டினர்). பிற வந்துழிக் குறித்து மனப்பாடம் செய்க.

அழுத்திவாரம் >  அத்திவாரம் (  ழுகரம் வீழ்ச்சி)
அத்திவாரம் >  அஸ்திவாரம்  ( ஒரு ஸ்கர ஒற்று தோன்றல்).

தவணைக்குக் கெடு என்றும் சொல்வர்.  காலவரை முடிந்தது என்றால் கெடு முடிந்தது என்பர்.  கெடுதல் என்ற சொல்லின் முதனிலை கெடு  -. குறித்த காலத்தில் எல்லை கெடுகிறது என்பது பொருள். எல்லை -  கால எல்லை.


கெடுத்தி > கெஸ்தி > கிஸ்தி.

கெடு > கிடு > கிஸ் > கிஸ்தி எனினும் அதே.

பீடுடைய மன்னவன் பீடுமன்.  அவன் பீஷ்மன் ஆனது காண்க.  டு >ஶ்.


திரிபுகளால் மகிழ்க.



திருத்தம் பின்.
தன்-திருத்த மாற்றங்கள் பின்னர் மறுபார்வை.
சில பிழைகள் சரிசெய்யப்பட்டன. 

வெள்ளி, 9 நவம்பர், 2018

தெக்காணியும் உருதும்.

தெக்காணி என்பது இடைக்காலத்தில் வழங்கிய ஒரு மொழியின் பெயர்.

தென்+ கண் + இ =  தெற்கணி > தெற்காணி.>  தெக்காணி;

தென் :  இது தென் திசை குறிக்கும் திசை அடை.
கண்:    இது இடமென்று பொருள்தரும்.

குறளில்

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் ...."

இல் =  கண்.

மனத்தில்=   மனத்துக்கண்,

அத்து என்பது சாரியை.  அம் விகுதி கெட்டது; அத்துச்சாரியை பெற்றது,

தெக்காணி என்பது ஆங்கிலத்தில் "டெக்கான்" என்று திரிந்தது,

டெக்கானில் பேசப்பட்ட மொழி:  டெக்கானி.



தென்பகுதியில் வழங்கிய மொழி என்று பொருள்.

அதிலிருந்து உருவானது உருது.

உருவானது :>   உரு~து   >  உருது.  இடையில் உள்ள எழுத்துக்கள் குறைந்தன.

உருது என்ற சொல் வேறுமொழியில் இருக்கலாம்.  அது ஒலியொற்றுமைச் சொல்.

ஒரே ஒலியுள்ள சொற்களுக்கு எடுத்துக்காட்டு:

மாய் (தமிழ் ) : செத்துப்போ.

மாய் ( சீனம் )  :  வேண்டாம்.

இவை வெவ்வேறு சொற்கள்.

உர்டு என்ற பாரசீகச் சொல் படைமுகாம் என்று பொருள்படுவதால் படையினர் பேசிய மொழி என்பர்.   இது வெறும் கருத்துரைதான். அப்படிப் பேசியிருக்கலாம் என்றாலும் முஸ்லீம்களின் வீட்டுமொழியினின்று தோன்றியதே உருது ஆகும்,  ஒரு மொழி உருவாகப் பலகாலம் பிடிக்கலாம்,
படைஞர்கள் திடீரென ஒருமொழியை உருவாக்கிப் பேசிக்கொண்டனர் என்பர் =  இது ஒரு வியத்தகு சிந்தனை ஆகும்.

உலகில் எத்தனையோ நாடுகளில் படைஞர்கள் கூடிப் பேசுகின்றனர்.  அவற்றுள் எத்தனை புதுமொழிகள் தோன்றின?  இது முஸ்லீம்களின் வீட்டு மொழி.  நெடுங்காலம் அமைதியாக வளர்ந்திருக்கும். கலவை மொழி.

குறிப்பு:  தக்கு என்ற சொல்லிலிருந்து தக்காணம் என்ற சொல் பிறந்தது என்பார் தேவநேயப்பாவாணர்,  தக்கு = தாழ்வு, நிலத்தின் தாழ்நிலையை உன்னியிருப்பர்,  அதனால் பெயரமைந்திருக்கும் என்பது சற்று தொலைவான
சிந்தனையாகத் தோன்றுகிறது.  நிலநூலறிஞர்களே இப்படி எண்ணலாகும். வடநாடு தென்னாடு என்று எண்ணுவது இன்னும் எளிமையானது ஆகும்.

வியாழன், 8 நவம்பர், 2018

பலவகைச் சொல்லாக்கம்

இடைச்சுருக்குகள்:


பிறப்பிப்பது >  பிற~து  > பிராது.:  ஒரு நடவடிக்கையை  வழக்குமன்றில் (காவல் துறையிலும் ஆகலாம் )  பிறப்பிக்க அளிக்கப்படும் மனு.

மயங்குவது >  ம~து.

வயங்குவது > வ~து +அன் + அம் =  வதனம்.  இடைச்சுருக்குடன் இடைநிலை விகுதிகள் பெற்ற சொல்.

உருக்கொள்ளுமொழி:   உருக்கொள்வது >  உரு~து.  புதிதாக அமைந்துகொண்டிருந்த மொழி. தெக்காணி மொழியிலிருந்து அமைந்ததாகச் சிலர் உரைத்துள்ளனர்.  இது ஒரு கலவை மொழி.  தென்னகத்தின் வடபகுதிகளில் பலசொற்களையும் கலந்து பேசியதால் உருவானது என்பர். முஸ்லீம்களிடையே உருவானது.   உருது என்ற ஒலியொற்றுமைச் சொல் வேறுமொழிகளிலும் இருந்தாலும் இது வேறு; அது வேறு.

எடுத்துக்காட்டு:  மான் என்ற ஆங்கிலச்சொல் மான் என்ற தமிழ்ச்சொல்லைப் போலவே ஒலித்தாலும் தொடர்பற்றவை. ஆங்கில மான்: மனிதன் என்று பொருள்படும்.  தமிழ் மான் என்பது ஆட்டைப்போலும் ஒரு விலங்கின் பெயர்.

விழுமிய வாழ்க்கை ஆக  அமைவது >  விவாக அம் > விவாகம்.
விழுமிய = சிறந்த.

விழுமிய வாழ்வு சார்ந்து அமைவது:  வி-வா-சா-அம் > விவசாயம்.  யகர உடம்படு மெய் சேர்ந்த சொல்.  பயிர்த்தொழில்.

விவா என்று நீட்டாமல் விவ என்று சுருக்குண்டது.
ஆனால் இலத்தீனர்கள் விவா என்று பயன்படுத்தினர். வேற்றுமை மாற்றங்களால் சிலவிடத்து விவோஸ் என்று வரும்.  :  இன்டர் வைவோஸ் கிஃப்ட் என்பது காண்க. intervivos gift.  as opposed to  a testamentary gift.

விரிந்து பரந்து சார்ந்து ஒழுகுபவள் : .>   விபசாரி,

இடைக்குறைச் சொற்கள்:

தாழ்(வு) + மரு (வு) +  ஐ = தா+ மரு + ஐ =  தாமரை.

தாழ்வாக நீருடன் மருவி நிற்கும் மலரும் அது வளர்  தண்டுச் செடியும்.

தூக்கி எறியத் தக்க வேண்டாத ஒலிகளை விலக்காமல் எல்லாமும்
வைத்துக்கொண்டு  தாழ்வுமருவை என்று பெயர்கொடுப்பவன் நேர்மைவாதி
யாகவிருக்கலாம்.  ஆனாலும் சொல்லியல் அறிஞன் ஆகான்..

கமலம் என்ற சொல்:  கழுமலர்,  செங்கழுநீர்மலர் என்பவற்றிலிருந்து: படிக்க:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_21.html 

தாழ்வணி > தாவணி.

இல்லா அணி அமைந்தவள் >  இலாவணியாள் .>  இலாவண்யா.
இல்லா -  ஊரில் இல்லா, நீர் நம்பத்தகுந்த வேறிடத்தில் இருந்த என்பது பொருள்.

ஊரில் வசிக்கும் அழகி போன்றவள் :  ஊர்வசிப்பவள் > ஊர்வசி


 முன்பின்னாகப் புனையப்பட்டவை:


பிதா :   தாய்ப்பின்.    பி = பின்;  தா= தாய்.

தாய்க்கு அப்புறமே தகப்பன்.

மாதா :     (  அம் )மாதா(ய்).   தலைக்குறை கடைக்குறை ஒட்டுச்சொல்.


கொடுந்திரிபுகள்:

உங்க   அப்பன்  :   ங்கொப்பன் அல்லது    ஙொப்பன் 
உங்க ஆயி  :         ஙோயி

அவ  ஆத்தா :    வாத்தா
அவ அப்பா :   வாப்பா.

ஒலிச்சமன்:

ஐயர் =  அய்யர்


மெலித்தல்:

வெந்த ஆணம் >  வெஞ்சனம்
நிறைஞ்ச  அன்ன  >  நிரஞ்சன 


சில திரிபுகள்

1தன் திறம் >  தந்திரம்
2மன்னும் திறம் >  மன் திறம் > மந்திரம்
மேலிரண்டும்  1& 2 ,  பிறரும் கூறினர்.
இயங்கு  திறம் > இயந்திரம்
கரிஞ்சவன் >  கரிஞ்சன் > கஞ்சன். இரக்கம் இன்றிக் கருப்பு எய்தியவன்.
வினை ஆயகன் > வினாயகன்.  வி+நாயகன் :  விழுமிய நாயகன்.
தெரிதல்:  தெரி+ சு + அன்+ அம் : தெரிசனம் > தரிசனம்.
தெருள்:  தெருட்டி:  > திருட்டி > திருஷ்டி.> திருட்/ஶ்டாந்த.

ஈண்டு விடுபாடு இருப்பின் பின்னர் சரிசெய்யப்பெறும்.
பிழை திருத்தம் பின்.

 


 








குறுக்கி வழங்கும் ஆங்கிலச்சொற்கள். டிவி முதலிய

பொதுவாக மக்கள் தம் பேச்சில் வழங்கும் சொற்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தேஅவர்கள் பேச்சின் இயல்பு அமைகின்றது. இப்போது சில ஆங்கில மொழிச் சொற்களை எப்படி யவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று பார்ப்போம்.

இப்போது நாம் சினிமா என்று வழங்கும் சொல் "சினிமாட்டோகிராப்" என்ற சொல்லின் பாதி ஆகும்.  இங்கு முதல்பாதியை எடுத்துக்கொண்டுள்ளனர்.  ஆனால் டெலிபோன் என்ற சொல்லில் முதல்பாதியை எடுத்துக்கொள்ளவில்லை.  இப்படி மேற்கொள்ளாமைக்குக் காரணத்தை நாம் ஊகிக்கலாம்.  டெலி என்னும் போது டெலி என்று தொடங்கும் பல சொற்கள் ஆங்கிலமொழியில் உள்ளன. குழப்பம் ஏற்படக்கூடும் என்பதுதான் காரணமா என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.  இதில் போன் என்ற இறுதிப்பாதியையே மேற்கொண்டுள்ளனர்.

கார் (from c 1300 ) என்ற சொல் இப்போது பெரிதும் வழங்குவதாகும். தமிழில் உந்து என்று சொல்கிறோம்.  இது (கார்) ஆங்கிலத்திலிருந்து  நாம் பெற்றுக்கொண்ட சொல். இது ஆங்கிலோ பிரஞ்சு மொழியில் வழங்கியது.  இதற்குமுன் இலத்தீனில் இருந்துள்ளது.  செல்டிக் மொழியில் இரு சக்கரங்கள் உள்ள போர் வண்டியை இது குறித்தது.  இப்போது நாலு சக்கரமாகிவிட்டாலும் மற்றும் போருக்கு உரியதாக இல்லாவிட்டாலும் இதைக் கார் என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.

cart  என்பதோ தொட்டிலையும் ஒரு காலத்தில் குறித்தது,  மரண தண்டனைக்கு கொண்டுசெல்லப்படும் கைதிகளின் வண்டியையும் குறித்துள்ளதாம்.  கூடையையும் குறித்துள்ளதாகக் கூறுவர்,  இதற்கும் கார் என்பதற்குமுள்ள உறவு புரியவில்லை.

வண்டிகள் இருவகை:  இழுவை வண்டிகள்  தள்ளுவண்டிகள் என்பனவாம்.
லோர், லாரி என்பன இழு(வண்டி)  என்று பொருட்படும்  லரி என்ற சொல்லினின்று பெறப்பட்டிருக்கலாம் என்பர். போக்குவரத்துச் சட்ட நூல்களில் மோட்டோர் ( மோட்டார்) என்ற அடைமொழியுடன் தான் இதுபோலும் சொற்கள் கையாளப்பட்டிருக்கும்  லாரி என்பது பிற்காலத்தில் தொடர்வண்டித் துறையில்தான் முந்துவழக்குடையதாய் இருந்ததென்பர். பிற்காலத்தில் சாலைகளில் செல்வன குறிக்கப்பட்டன.

டெலி விஷன் ( தொலைக்காட்சி ) என்பதை இப்போது டிவி என்றுதான் பலரும் சொல்வர். டெலிபோனை போன் என்றதுபோல டெலிவிஷனை விஷன் என்று யாரும் சொல்வதில்லை.  இதற்கு எழுத்துக்குறுக்கச் சொல்லே  பயன்பட்டுவருகிறது. போனுக்குத் தொலைபேசி என்பது முழுதும் வழங்காவிட்டாலும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.  கைப்பேசி என்பது கடைகளின் விளம்பரங்களில் கையாளப்படுகின்றது.

சொற்களைக் குறுக்காமல் மக்கள் வழங்குவதில்லை. இதை அறிஞர் வரதராசனார் முயற்சிச்சிக்கனம் என்பார்.

சில சொற்களைக் குறுக்கமுடிவதில்லை.  இயர் ரிங்க் என்பதை இயர் என்றோ ரிங்க்  என்றோ குறுக்கினால் பொருள்மாறாட்டம் ஏற்படும். காதணி என்பதைக் காது என்றோ அணி என்றோ குறுக்க இயலவில்லை.

கணினி என்பதை இப்போது கணக்கு இயந்திரமாக நாம் பயன்படுத்துவதில்லை.  முன் கால வழக்கை ஒட்டிய பெயர் இதுவாகும்,  கல்குலேட்டர் என்ற கணக்கி தனியாக பயன்பாட்டில் உள்ளது.  கணக்குப் பார்பவர்கள் முன்பு "கணக்கப்பிள்ளைக" எனப்பட்டனர்.  இப்போது கணக்கர்கள் என்பது இவர்களுக்குப் பொருத்தமே. கணிதர்கள் என்பதும் அமையும்,   பழங்காலத்தில் கல்லைக் குலுக்கிக் கணக்குப் பார்த்தபடியால் "கல்குலஸ்" என்ற இலத்தீன்சொல் அமைந்தது. இதனைப் பலர் அறிந்ததில்லை.

மறுபார்வை செய்யப்படும்.
பிழைத் திருத்தம் பின்

புதன், 7 நவம்பர், 2018

உதவி உதடு உதாரணம்

அது :   அங்கிருப்பது

இது :    இங்கிருப்பது

உது :  முன்னிருப்பது.


தமிழ் மொழியில் இவை மூன்றும்  சுட்டு ச் சொற்கள்.  சுட்டுதல் என்றால் விரலாலோ அல்லது வேறு செய்கையாலோ   ( சைகையாலோ ) குறித்துக் காட்டுதல்.

இவற்றுள் உது என்பதை எடுத்துக்கொள்வோம்.


உது +  அ + வி  =  உதவி.

முன்சென்று ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டியாங்கு வேண்டியன செய்திடுதல்.

இதில் அகரம் இடைநிலை.
வி என்பது ஒரு சொல் விகுதி. ( மிகுதி > விகுதி)

உதடு :  உ =  முன்னாகவும்,   அடு =: இரண்டாகப் பிளவுபட்டதுபோல் அடுத்தடுத்து இருப்பது உதடு.,

உது + அடு.


உதை :   உது = முன்னாக,  ஐ =  மேலெழும்படியாகக்  (காலால்)   மெல்லவோ கடுமையாகவோ தொடுதல்.

ஐ என்பது மேலெழுச்சி காட்டும் சொல்.  ஐயன் என்ற  சொல்லில் இது மேலானவன் என்ற பொருளில் வருகிறது.

செய்தனை, கண்டனை, பேசினை என்ற வினை முற்றுக்களிலும் இந்த ஐ
வினைமுற்று விகுதியாக வந்து உயர்வு குறித்தாலும் நாளடைவில் இவ் வுயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.   வெறும் முன்னிலை விகுதியாகிவிட்டது,

ஐ என்பது ஆய் என்று நீண்டது.    வந்தாய்.

இதிலும் இதன் உயர்வுப் பொருள் இழக்கப்பட்டது.


உதாரணம்:

உது : முன்னிருப்பது.

ஆர்:   நிறைவாக

அணம் : விகுதி.   இது அண்+ அம் என்ற இரு சிறு துண்டு விகுதிகளில் இணைப்பு.   அண் :   அடுத்து.   அதாவது அண்மை.   அம் :  அமைதல் . ஆனால் இவை பின் பொருளிழந்து விகுதிகளாகக் கொள்ளப்பட்டன,

நிறைவாக அடுத்து முன்னிருப்பதே உதாரணம்.  அப்படி இருப்பதே இன்னொன்றுக்கு எடுத்துக்காட்டாக முடியும்.

இதில் அயல் ஒன்றுமில்லை.

அணம் விகுதி வந்த இன்னொரு சொல்:  கட்டணம்.   பட்டணமும் ஆம்.

உதையம் > உதயம் (  இதில் ஐகாரம் குறுகிற்று )

உது:  முன்னாகவும் ஐ: மேலாகவும் எழுவது.

அறிந்து மகிழ்க.

விற்பனை, விற்பன்னர், நிபுணர். நிபுணத்துவம்.

வில் என்பது நீக்கப்பொருள் உணர்த்தும் சொல்லாகும்.  இது சென்ற இடுகையில் விளக்கப்பட்டது.  பொருளானது ஒருவனிடத்திருந்து  நீங்கி இன்னொருவன்பால் செல்வதை வில் என்பது குறிக்கும்.  அம்பு எய்யும் வில் என்றாலும் வில்லில் இருந்து அம்பு நீங்கிச் செல்லும்படியான ஒரு பொறியே அது வாகும்.  நீக்கப் பொருளே அதுவாகும்.

இனி இவற்றைக் காண்க:

வில் >  விலை  ( வில் + ஐ)    ஐ என்பது விகுதி.   ( மிகுதி > விகுதி).

சொல்லை மிகுத்து வேறுபடுத்துவதும் புதுப்பொருள் தருவதும் விகுதி.

வில்+ பு + அன் + ஐ  =  விற்பனை.

பு :  விகுதி.
அன்:  இடைநிலை.
ஐ:  விகுதி.

இதேபோல் அமைந்ததே கற்பனை என்பதும்.

கல் + பு + அன் + ஐ =  கற்பனை.

விற்பன்னர்

பலருக்கு ஒன்றை நேர்வழியாகச் சொல்லவே தெரியும்,  ஆனால் விற்பன்னர் என்பவரோ ஒன்றை வளைத்துச் சொல்லி  வெற்றியை ஈட்டுபவர் ஆவார்.
பன்னர் -   பன்னுபவர்.  பன்னுதல்:  பலமுறை எடுத்துச்சொல்லுதல்.  வில் என்பது நீக்கப்பொருட் சொல் ஆதலின் இவர் ஒன்றிலிருந்து  இன்னொன்றைக் கண்டுபிடித்துச் சொல்வார்.  ஒன்றினின்று இன்னொன்று வருதலே இதில் நீக்கம்  ஆகும். வில் என்பது நீக்கத்தில் வெற்றி அல்லது அடைவைக் குறிக்கின்றது.  வில் போலும் குறிவைத்துப் பன்னுபவர் எனினும் ஆகும்.

நிபுணர்

நிபுணர் என்பவர்   ஒன்றன் நிலையை முழுதுமுணர்ந்தவர்.  நிற்பு  உணர் என்ற இருசொற்கள் கூடிய சொல் இதுவாகும்.   நிற்பு -  நிலை;  உணர் =  உணர்தல்.
இது முதனிலைத் தொழிற்பெயர்.  ஆகுபெயராய் உணர்ந்தவரைக் குறித்தது.  நிற்பு என்பதில் றகர ஒற்று குறைந்து  நிபு ஆன
 து.  இது தப்புதல் என்னும் சொல்லில் பகர ஒற்று வீழ்ந்து தபு ஆகி,  தபம், தவம் என்ற சொற்களைப் பிறப்பித்தல் போலுமே ஆகும்.

உலகத் துயர்களிலிருந்து தப்புபவரே தவமுனிவர்.    தப்பு > தபு > தபம்.

நிற்புணர்த்துவர்>  நிற்புணர்த்துவம் >  நிபுணத்துவம்

திருத்தம் பின்

செவ்வாய், 6 நவம்பர், 2018

வில் என்னும் அடிச்சொல்.

ஒன்றிலிருந்து இன்னொன்று அகன்று செல்வதையே "விலகு" என்னும் தமிழ்ச்சொல் குறிக்கிறது.

இதில் கு என்பது ஒரு வினையாக்க விகுதி.  இதைத் தெரிந்துகொள்வதற்கு ஒரு வாய்த்தி அதைச் சொல்லித்தர வேண்டும்.  அதாவது வாய்ப்பாடமாகச் சொல்லிக்கொடுப்போனே வாய்த்தி.  அது பின் தன் யகர ஒற்றினை இழந்து வாத்தி ஆகி, பணிவு கருதி வாத்தியார் ஆயிற்று.   உப அத்தியாயி என்ற சொல் உபாத்தியாய என்றானது வேறு. குழப்படி பண்ணாமல் கு என்ற விகுதியை அறிவோம்.

விலகு என்பதில் வில்+ அ + கு என்று மூன்று துண்டுகள் உள்ளன.  கு என்பது சேர்விடம் குறிக்கும்.   கோலாலம்பூருக்கு,  அமெரிக்காவிற்கு என்று நாம் போமிடம் குறிப்பது.   வேற்றுமை உருபு ஆனாலும் அங்குமட்டும்தான் வருமென்று தடையேதும் இல்லை.  ஆகையினால் சொல்லாக்கத்திலும் பயன்பட்டு அது மொழியை வளர்த்துள்ளது.

பழ -   பழகு
உரு  -  உருகு
பெரு - பெருகு.
இள -  இளகு

என்பவை போதும்.

இடைநிலையாக நிற்பது   அ என்ற சுட்டுச்சொல் ஆகும்.  ஒரே எழுத்து,   அதற்குப் பொருளிருக்குமானால் அது ஒரு சொல்லுமாகும்.  இங்கு இடையுற்று  முழுச்சொல்லை ஆக்குவதனால் சொல்லிடைநிலை.   இந்த அகரம் சுட்டுச்சொல் ஆதலால் இதற்கு அங்கு என்று பொருள். இடத்தைக் காட்டுகிறது.

ஓர் இடக்குறியினின்று அங்கு சென்று சேர்வது  "  விலகு"  என்ற சொல்லால்
குறிக்கப்பெறுகிறது. அங்கு என்பது எவ்விடத்துப் போகுமோ அவ்விடம், அது ஒரு விரற்கடையாகவும் இருக்கலாம்.  நூற்றுக்கணக்கான கல் தொலைவாகவுமிருக்கக்கூடும்.

விலகு என்பது வேறிடம் மாறிச்செல்வது ஆகும்.

இதை அறிந்துகொள்ளுங்கள்.  தொடர்வோம்.


பார்க்கவும்:
29.6.18 விற்றலும் வாங்குதலும்.:https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_67.html

சாப்பாட்டு ராமர்களைக் காணவில்லை

ஓருசீமை நல்லிலந்தை  ஒற்றடியாய்த் தின்னத்
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.

புரிந்துகொள்ள:

சீமை இலந்தை:   ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் -  சளைக்காமல்
திருவமை -  உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ :  ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் -  அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு =  முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே -  சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் -  உயர்ந்தது போலும் என்றபடி.

நபர் :  இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,

யாப்பியற் குறிப்புகள்

ஒரே அடியினுள்:

தன்னொரு வன்மை:  எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.

தீபாவளி முடிந்ததா? பொங்கல் வந்துவிடும்........

கவலை வேண்டாமே..!


ஒருதிகதி  ஓடியிற்ற தீபா- வளி
ஓராண்டில் இனிவருமே தீர்வ-- திலை;
மறுபடியும் மறுபடியும் பலகா- ரமே.
மாந்தமிலை மகிழ்வுகொளீர் மாலை -- வரை;
இருவரிங்கு விருந்தோம்பி மகிழ்வு-- கொள
இனிப்பொங்கல் தனிவசதி மாறாப்--- புகழ்!
ஒருபடியாய் நாளனைத்தும் ஒடுங்கி-- நிலை
உற்றுவிடின் வாழ்விதுவும் வெற்றுக்--குழை

அரும்பொருள்:
திகதி:  தேதி, நாள்.
ஓடியிற்ற :  சென்றுமுடிந்த.
கொளீர் : கொள்ளீர் = கொள்வீர்
கொள -  கொள்வதற்கு
மாறாப் புகழ் -  வயிறார உண்டு மகிழ்ந்து
வாழ்த்துவதால் வரும் கீர்த்தி.
ஒருபடியாய் =  ஒரே மாதிரியாய்  வேறுபாடுகள்
இல்லாமல்;
ஒடுங்கி -  விரிவு இழந்து;
நிலை உற்று =  மாறாமல் அமைந்துவிட்டால்
வெற்றுக்குழை = பயனற்ற துளைத்தண்டு.
அணிகலன் இல்லாத கூந்தல் என்பதுமாம்..

உரை:

தீபாவளி ஒரே நாளில் ஓடிவிட்டதே என்று கவலைப்
படவேண்டாம், அது மீண்டும் வந்துவிடும் - அதுவும்
ஒரே ஆண்டிற்குள்ளாகவே.  அப்போதும் அடுத்தடுத்து
பல இனிப்புணவுகளை உண்டபடியே நீங்கள் மகிழலாம்.
காலையிலிருந்து மாலை வரும்வரை அப்போதும்
மகிழுறுவீர்கள். ஓராண்டா காத்திருக்கவேண்டும் என்று
அயர்வு கொள்ளாதீர். அதற்குமுன்பே பொங்கல்
வந்துகொண்டே இருக்கிறது! குடும்பத்தில் கணவன் மனைவி
இருவருமே விருந்தோம்புதலில் ஈடுபட்டு எல்லையில்லாப்
புகழை அடைந்துவிடலாம். அதுவும் வசதியான பண்டிகைதான்.
இவ்வாறு இல்லாதபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாய்
மாற்றமொன்று மில்லாமல் இருந்தால் அதுவோ அணிகலன்கள்
அணிந்து அழகுகாட்டாத பெண்ணின் கூந்தல் போலும்
கிளர்ச்சிதராத வெறுமை வாழ்க்கை ஆகிவிடுமே. அத்தகை
உணர்வு அற்ற வாழ்க்கையோ நமக்கு வேண்டாம்,,



யாப்பியற் குறிப்புகள்

ஒவ்வோர் அடியிலும் இறுதிச்சீர் நிரையசையில்
முடியுமாறு தொடுக்கப்பட்டது.  பாடிமகிழ்க.

ஆக்கியோன் தனிக்குறிப்பு:

காலை ஐந்திலிருந்து வேலையாய்ப் போய்விட்டபடியால்.
வாயில்வந்த கவிதையை எழுதிவிட்டு ஓய்வு கொள்வேன்.

தன்-திருத்தப் பிழைகள் முளைப்பின் திருத்தம் பின்.

திங்கள், 5 நவம்பர், 2018

கண்ணதாசன்: " வந்த வழி மறந்தேனே!"

நாம் எல்லோருமே ஒருவகையில் வந்த வழியை மறந்தவர்கள் தாம்.

காதல் வயப்பட்டுவிட்ட ஒரு கதைநாயகிக்கு ஒரு பாட்டு எழுதவேண்டிய சூழலில் கண்ணதாசன் இப்படிச் சிந்தித்தார்.  அவள் யாருக்கோ மகளாய்ப் பிறந்தவள்.  எங்கோ உலகின் ஒரு மூலையில் வளர்ந்தவள். கொஞ்சம் பெரியளானவுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஓர் ஆண்மகனைக் கண்டாள். மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.

வந்த வழி மறந்தேனே--- புது
மனந்தனைக் கொண்டேனே---  புது
வாழ்வதனைக் கண்டேன்   ( வந்த)

சிங்கப்பூரில் ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டிடத்திலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.  அங்கு வாழும் பலர் வந்த வழியை மறந்தவர்கள்தாம்.  புதிய வாழ்வினைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறே உலகனைத்தையும் சிந்தித்து உணர்ந்துகொள்ளலாம்.

மொழியில் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் தான் வந்த வழியை மறந்துவிட்ட சொல்தான். சொல் எப்படி அது அமைந்த வழியினை மறந்துவிடும்?  அதற்கென்ன மனமா இருக்கிறது?

" உயர்ந்த மலையும் உனது அன்பின்
உயர்வைக் காட்டுதே!:"

"இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?"

என்று இன்னொரு கவிஞர்  ( கவி கா.மு.ஷெரிப் )  காதலன் கேட்பது போன்ற வரியை எழுதினார்.  மொழியில் இருக்கும் சொல்லுக்கும் மனம் இல்லையாதலால் தான் வந்த வழியைச் சொல் அறிவதில்லை.  தான் வந்த வழியை அது அறிந்ததோ இல்லையோ,  வந்த வழியை அது காட்டிக்கொண்டு நிற்கிறது.  சொல்லைக் காணும்போது நாமதனை யுணர்ந்துகொள்கின்றோமே.

இதயம் என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்து உடலின் எப்பகுதிக்கும் செலுத்தியும் கொண்டிருக்கும் ஓர் உறுப்புதான்.  அதற்குள் மனம் என்பதொன்றில்லை.   முன்னுதல் > மன்னுதல்:  மன்னுதல் >  மன்: மன்+ அம் = மனம் ஆகும். உடலில் சிந்திப்பது நடக்கிறது; ஆனால் அஃது இருதயத்தில் இல்லை.  ஈர் என்றால் ஈர்த்தல்:  இழுத்தல். ஈர்  +  து + அ + அம் = ஈர்தயம் > இருதயம்.  (  முதனிலைக் குறுக்கம் ).  தோண்டிய தோடு போன்ற குரல்வளைப் பகுதி  தோண்டு+ ஐ =  தொண்டை என்று குறுகியதுபோலவே இதுவும். பல சொற்கள் இப்படித் திரிகின்றன. இதன் மறுபக்கம் என்னவென்றால்:   இழு> இரு> இரு + து + அ + அம்=  இருதயம் என்பதே.    இரு என்பதே பின் ஈர் > ஈர்த்தல் என்று திரிந்ததென்னலாம். எவ்வாறாயினும் இரு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடை சொற்கள்.  இரு என்ற வடிவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன.   எடுத்துக்காட்டு:  இரு1=  பெரிய;   இரு2:  ஓரிடத்து அசைவின்றி அமைதல்.  இரு3:  இழு என்பது.   இரை என்ற சொல்லில் சிதறியபின் ஓரிடத்துப் பறவைகளோ விலங்குகளோ உண்ணும்படியாகக் கிடத்தல்; பொதுவாக உயிரிகளின் உணவு.  அது இரு> இரை என ஆனதே ஆகும்.  இரைத்தல் என்று வினையுமாயிற்று,  ஈர்த்தலில் தொடர்பு உள்ளபடியால் இரு என்பது இரை என்று மாறி உண்டற்குரியதையும் காட்டும்.

அயல் என்ற சொல் அருமையாய் அமைந்தது,  அங்கும் அல்லாத அப்பாலிடத்தைக் குறிப்பது அயல் ஆகும்,  இவ்வாறே அப்பால் கண்டு பயன்பாட்டுக்கு வந்தது அயம் என்ற இரும்பு ஆகும்,  அயச் செந்தூரம் என்ற மருந்து இரும்பினால் அல்லது இரும்புத் தூளால் செய்யப்பட்டது ஆகும்.  செந்தூரம் என்பதே செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,  நன்றாக பூசப்பட்ட சாயம், சாயலையும் காட்டவல்லது.  சாயலாவது நிழல்.

அயல் > அயம்
சாயல் > சாயம்.

வேறு புதுச் சொற்களைத் தேடி அலையாமல்  லகர ஒற்றினையே மகர ஒற்றாக மாற்றியமைத்துச் சொற்புனைவு செய்தமை மிகுந்த திறன் ஆகும். பூசிய இடத்தில் சார்ந்திருப்பதால் சார் > சாய் > சாயம் எனினுமாம்,

அந்தச் சொற்களுக்கு வந்த வழி தெரியாவிட்டாலும் ஆய்வாருக்குத் தெரிகிறது,

ஆக வந்த வழி அறியக்கூடியதாய் உள்ளது.

தீபாவளி நடப்புக்கு வந்து மக்கள் கொண்டாடுமுன் தீபங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அதன்பின்னரே அவற்றை வரிசையாய் வைத்து ஆடவோ பாடவோ மக்கள் தொடங்கியிருக்கவேண்டும்,  ஆகவே தீபம் + ஆவலி (/ளி)  என்று சொல்லமைந்திருக்கலாம். ஆனால் வட இந்திய வழக்கில் தீ+ வளி  (தீ-வாளி)   என்று வருதலின்  தீபம் என்பதிலுள்ள பகர முதலியவை காணப்படவில்லை.   தீப (தீபா) என்ற சொல் அங்கும் உள்ளது.  ஆக தீவாளி என்று வந்து தீவளி   என்பதனுடன் ஒற்றுமைப்படுவது  ஆய்வுக்குரித்தாய் அதை ஆக்குகிறது,  படிக்க அறியாதார் இன்னும் தீவளி என்றே தெற்கிலும் கூறுகின்றனர் என்பதால்  தீயையும் வளியாகிய காற்றையும் குறிக்கின்றதா என்பதை அறிதல் வேண்டும்,  அப்படியானால் தீபத்தைக் காணுமுன் தீயும் வளியும் கண்டு உவந்த காலத்தது என்றாகலாம்,
அது இன்னும் பழையது என்றாகிவிடும்.

பிழை -  திருத்தம் பின்



 



ஞாயிறு, 4 நவம்பர், 2018

எமக்குத் தீங்கு எண்ணும் கேடு புரிவோர்

தாழிசை 

எழுத்தழுத்துப் பலகைதனைத் தட்டி  னாலும்
எழுத்துச்சில திரைதன்னில் தோன்றா வண்ணம்
கொழுத்தசிலர் இயற்றிவிட்ட புழுத்த மெல்லி
கூடிவந்த  தெங்கணினிக் கோவை நீக்க!

இத்தகையில் மெத்தஅழி வூட்டும் கேடர்
இப்புவியில் இருத்தற்கோ ஏதோ ஊட்டம்?
சித்தரொடு சீர்பெரியோர் உற்ற  பூமி
பித்தரொடும்  எத்தனைநாள் ஒத்தி லங்கும்?

 இதன்பொருள்:

எழுத்தழுத்துப் பலகை:  தட்டச்சு செய்யும் எழுத்துப் பலகை.
computer keyboard
திரை:  கணினித் திரை  computer screen
கொழுத்த -   திமிரினால் கெடுதல் செய்ய முயல்கின்ற

சிலர் -   சிறு எண்ணிக்கையினர்
புழுத்த -  பரவும் கெடுதல் உள்ள  infectious
மெல்லி  -கணினி   மென்பொருள்  software
கோவை =  பல திறமும் இணைக்கப்பட்ட கணினியின் நிலை.
integrity of our machines

தகையில் =  தகைமை இல்லாத;
மெத்த  :   அதிகம்
கேடர் -  கேடு புரிவோர்
ஊட்டம் = விளைவித்த காரணம் causation
சித்தர் =  சிந்தனையாளர் நல்லோர்
பித்தர் =  தீமைசெய்யும் பைத்தியக்காரர்கள்
ஒத்திலங்கும்  =  ஏற்றுக்கொண்டு தாங்கி நிற்கும்

கவிதை 

சனி, 3 நவம்பர், 2018

காசு என்ற சொல்.

சென்ற இடுகையில் காத்தல் (கா) என்பதனடிப் பிறந்த  சில சொற்களைக் கவனித்தோம்.

காசு என்பது ஒரு விலைப்பொருளுக்கு ஒத்தீடாக வழங்குவது ஆகும். ஒரு மாட்டுக்கு ஐயாயிரம் உரூபாய் என்றால் அதுவும் நல்ல விலை என்று மனநிறைவு கொண்டு மாட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைக் கொள்வோம்.

ஐயாயிரம் வந்தவுடன்,  மாடு அதுவேயாக மாற்றப்பட்டுள்ளதால் மாட்டைக் காத்தது போலவே இந்த ஐயாயிரத்தையும் காத்து வைப்பில் இருத்துவோம்.

காத்து வைப்பதால் கா என்ற அடியினின்றே காசு என்னும் சொல்லும் உருவெடுத்தது.  சு என்பது விகுதி அல்லது இறுதிநிலை ஆகும்.

சு விகுதி பெற்ற சொல்:

ஆ -  ஆதல்.

ஆ >  ஆசு.  ( மனிதற்குப் பலவும் ஆவது பற்றுக்கோட்டினால்தான்,  ஆதலின் ஆ என்ற வினையடிச் சொல் அமைந்தது.)

தா > தாசு.  ( உழைப்பினைத் தந்து ஊதியம் பெறுபவர். அல்லது சோறு கஞ்சி முதலிய பெறுபவர் ).   இது அயலிலும் பரவி வேற்றுமொழியினது என்று எண்ணப்பட்ட சொல்).

பாவி > பவிசு    தன்னை  நலம் உள்ளவள்போல் பாவித்து நடந்துகொள்ளுதல்.
இது முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர்.  இப்படிக் குறுகி அமைந்த இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை. பிற இடுகைகளில் காண்க.

இவ்வறு காசு என்பது காத்துவைக்கப்படுவது என்னும் பொருளில் அமைந்த சொல்லே.கா

pavisu from paavi

mUsu

காமியம் காமுகன் காமித்தல்

"கலகம் மூலம் காமினி மூலம் "

என் கின்றது ஒரு மலையாளச் செய்யுள். கலகங்கள் எல்லாம் காதலி மனைவி போன்றவர்களால்தாம் வருமாம்.  கணவர்களால் வரும் கலகங்கள் பற்றி மனைவிமார் யாதும்  செய்யுள் இயற்றவில்லை போலும்.

காம் காதல் என்ற சொற்கள் முன்னர் எம்மால் விளக்கப்பட்டன.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலங்களிலும் காடுகளில் திரிந்த காலங்களிலும் அவன் வேட்டையில் வென்றுவந்த ஊனையும் பழங்களையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  கடினப்பட்டுக் கொணர்ந்த இவைதம்மைப் பிறர் முயற்சி யாதுமின்றி எடுத்துச் செல்வதை விரும்பவில்லை. பொருட்களைக் காத்தல் தொடங்கவே  தனியுடைமை தொடங்கிற்று.  அவன் கொணர்ந்தவற்றை அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் உண்டனர். மிச்சம் மீதாரியைப் பக்கலில் வாழ்ந்தோர்க்குக் கொடுத்திருப்பான். வைத்திருக்க இயலாதவை பல. கெட்டழிந்திடுவன ஆம். இப்படிப் பொருட்பகிர்வு அடிகோலப்பட்டது.

வைத்துப் போற்றத்தக்க வைத்து > வத்து ஆனது.  பின் அது வஸ்து என்று உருமாறி வழங்கியது. பொருட்களை மட்டுமின்றித்  தம் பெண்டிரையும் காத்தனன். அடுத்தவன் அதே பெண்ணை விரும்பிய காலை அவனும் அவளுக்குக் காவலை வழங்கினான்.  காதல் என்ற சொல் அப்படிக் காப்பதையே குறித்தது.  கா என்ற அடிச்சொல்லில் அமைந்த காம், காமம் (காம்+அம்) என்பவும் அதே காத்தலடியாக அமைந்த சொற்களே. தம் குகையினரோ வீட்டினரோ வழங்கிய காத்தல் ஆகிய காவல் விரிவுற்றுப் பிறனும் விரும்பி வந்து காக்கத் தொடங்கிய ஞான்று  அதுவே பிற ஏம் >  பிறஏமை > பிறேமை > பிரேமை ஆனது. பிற என்பது அடுத்துவந்தவனையும் ஏம் என்பது காவலையும் குறித்தது. இவன் தான் இன்று காதலன் கணவன் என்று அறியப்படுகின்றான்.   அகர வருக்கச் சொற்கள் ( அதாவது அ, ஆ, இ , ஈ என்று தொடர்வனவாகிய எழுத்துகள் அல்லது ஒலிகளை யுடைய சொற்கள் ) பின்னர் சகர வருக்கமாகின என்பதைப் பலமுறை கூறியும் கூவியும் உள்ளோம் என்பதை மறவாதீர்.  அதன்படியே  ஏ என்று  தொடங்கியவை சே என்று திரியும். திரியவே,  ஏமம் என்ற காவற் பொருட் சொல்  சேமம் என்று திரியலாயிற்று. இதுவே பிற்காலத்து  க்ஷேம என்று மெருகு பூசிக்கொண்டதென்பதை அறிவீர்.

காமினி என்றது காம் என்ற அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.  காம்+இன்+இ என்பதே இதிற் புனைவு.  ஒரு பொருள்மேல் ஆசை யுறுதல்  காமியம் எனப்படும்.

நமது நூல்கள் :

யாமெனும் அகங்காரம்
காமியம் வெல்க

என்று பறைசாற்றும்.  காமம் இதில் அமையுமாயின் இதுவே காமியம்.

காம்:  விழைதல்.  (  அடி )
இ   - இங்கு. சுட்டு இடைநிலை.
அம் - அமைதல், அல்லது இறுதிநிலை (விகுதி).

ஒன்றை நோக்கி மனம் அசையுறுவதே  அசை > ஆசை என்று வருவது.  ஆசை என்பது மன அசைவு என்று பொருள்படும்.

காமுகன் என்போன் காமத்தை உகந்து நிற்போன்.  உகத்தல் விரும்புதல்.
காம் + உக + அன் என்று புணர்க்க.    காமத்தையே முகமாய்க் கொண்டவன் என்று அணியியல் முறையிலும் சொல்ல இப்பதம் வழிவைத்துள்ளது.

நம் சைவ நூல்கள் காமியத்தைக் குற்றமாகக் கூறும். யாமெனலையும் காமியமும் வெல்வீர்.  வெல்லான் கீழ்த்தரத்து உள்ளான்.

காம் + ஈ என்பது காமீ என்று வந்து காமம் ஈதல் என்று பொருடரும்,  ஆயின் அது பிறப்புக்கணிப்புகளில் ஏழாமிடம் குறிக்கும்.

காம் > காமி > காமித்தல் என்பது வினைச்சொல். விரும்புதல்.

பின் சந்திப்போம். அளவளாவுவோம்.

திருத்தம் பின்.



வெள்ளி, 2 நவம்பர், 2018

ரொக்கம்

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ வெற்றுருவோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவர் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது.    உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.


இவ்விடுகைக்கான முற்பார்வை  ( ப்ரிவியூ)  கிட்டவில்லை.
திருத்தம் பின்,