சனி, 24 நவம்பர், 2018

போகாத இடந்தனிலே.......


வரவேண்டாம் என்`கின்ற கோவிலுக்குள்----- பெண்ணே

போகேனென்றே நீங்கிப்  போயின் என்ன?

தரமாட்டேன் பார்த்தருளை  என்னும்தெய்வம்---- கண்டு

தாரணியில் நீயும்பெறும் தண்மையாதோ?

 

வேறிடங்கள் கைதொழவே பெண்கட்குண்டே -----நங்காய்

வேண்டாத ஒண்தலத்துள் வீழ்தலென்னோ?

கூறிடமோ பெண்மைநீங்கு தேவனென்றார் ---- அந்தக்

கூற்றினுக்கும்  ஓர்மதிப்புக் கூர்ந்தாலென்னோ?

 

போராடிப் புண்பட்டு மீறிச்சென்று  ----- ஆங்கும்

புண்ணியங்கள் மேல்வருதல் எண்ணலாமோ?

வேரோடிப் போய்விட்ட உள்ளமைப்பை----முட்டி

வெற்றியொன்றும் சேர்வதிலை மெள்ளப்பாரே.
 
யாப்பியற் குறிப்புகள்:
இந்தச் சிந்து கவியில் ஓரடிக்கு மூன்று சீர்களும்  முதலடியும் மூன்றாம் அடியும் தனிச்சொற்களும் பெற்று வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. சில சீர்கள் நாலசைச் சீர்களாக வந்துள்ளன.  பொதுவொரு நாலசையே என்று காரிகை சொல்வதாலும் பண்டித ந,மு வேங்கடசாமி நாட்டார் முதலியோர் நாலசைச்சீர்களும் வரும் என்பதாலும் இதனுண்மை உணர்க. இப்பாடல் ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தியுள்ளது, 
என்னோ என்பதில் ஓ அசை.
 

கருத்துகள் இல்லை: