திங்கள், 5 நவம்பர், 2018

கண்ணதாசன்: " வந்த வழி மறந்தேனே!"

நாம் எல்லோருமே ஒருவகையில் வந்த வழியை மறந்தவர்கள் தாம்.

காதல் வயப்பட்டுவிட்ட ஒரு கதைநாயகிக்கு ஒரு பாட்டு எழுதவேண்டிய சூழலில் கண்ணதாசன் இப்படிச் சிந்தித்தார்.  அவள் யாருக்கோ மகளாய்ப் பிறந்தவள்.  எங்கோ உலகின் ஒரு மூலையில் வளர்ந்தவள். கொஞ்சம் பெரியளானவுடன் இங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஓர் ஆண்மகனைக் கண்டாள். மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள்.

வந்த வழி மறந்தேனே--- புது
மனந்தனைக் கொண்டேனே---  புது
வாழ்வதனைக் கண்டேன்   ( வந்த)

சிங்கப்பூரில் ஒவ்வோர் அடுக்குமாடிக் கட்டிடத்திலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.  அங்கு வாழும் பலர் வந்த வழியை மறந்தவர்கள்தாம்.  புதிய வாழ்வினைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறே உலகனைத்தையும் சிந்தித்து உணர்ந்துகொள்ளலாம்.

மொழியில் வழங்கும் ஒவ்வொரு சொல்லும் தான் வந்த வழியை மறந்துவிட்ட சொல்தான். சொல் எப்படி அது அமைந்த வழியினை மறந்துவிடும்?  அதற்கென்ன மனமா இருக்கிறது?

" உயர்ந்த மலையும் உனது அன்பின்
உயர்வைக் காட்டுதே!:"

"இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?"

என்று இன்னொரு கவிஞர்  ( கவி கா.மு.ஷெரிப் )  காதலன் கேட்பது போன்ற வரியை எழுதினார்.  மொழியில் இருக்கும் சொல்லுக்கும் மனம் இல்லையாதலால் தான் வந்த வழியைச் சொல் அறிவதில்லை.  தான் வந்த வழியை அது அறிந்ததோ இல்லையோ,  வந்த வழியை அது காட்டிக்கொண்டு நிற்கிறது.  சொல்லைக் காணும்போது நாமதனை யுணர்ந்துகொள்கின்றோமே.

இதயம் என்பது குருதியை உள்ளிழுத்தும் வெளிக்கொணர்ந்து உடலின் எப்பகுதிக்கும் செலுத்தியும் கொண்டிருக்கும் ஓர் உறுப்புதான்.  அதற்குள் மனம் என்பதொன்றில்லை.   முன்னுதல் > மன்னுதல்:  மன்னுதல் >  மன்: மன்+ அம் = மனம் ஆகும். உடலில் சிந்திப்பது நடக்கிறது; ஆனால் அஃது இருதயத்தில் இல்லை.  ஈர் என்றால் ஈர்த்தல்:  இழுத்தல். ஈர்  +  து + அ + அம் = ஈர்தயம் > இருதயம்.  (  முதனிலைக் குறுக்கம் ).  தோண்டிய தோடு போன்ற குரல்வளைப் பகுதி  தோண்டு+ ஐ =  தொண்டை என்று குறுகியதுபோலவே இதுவும். பல சொற்கள் இப்படித் திரிகின்றன. இதன் மறுபக்கம் என்னவென்றால்:   இழு> இரு> இரு + து + அ + அம்=  இருதயம் என்பதே.    இரு என்பதே பின் ஈர் > ஈர்த்தல் என்று திரிந்ததென்னலாம். எவ்வாறாயினும் இரு என்பதும் ஈர் என்பதும் தொடர்புடை சொற்கள்.  இரு என்ற வடிவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன.   எடுத்துக்காட்டு:  இரு1=  பெரிய;   இரு2:  ஓரிடத்து அசைவின்றி அமைதல்.  இரு3:  இழு என்பது.   இரை என்ற சொல்லில் சிதறியபின் ஓரிடத்துப் பறவைகளோ விலங்குகளோ உண்ணும்படியாகக் கிடத்தல்; பொதுவாக உயிரிகளின் உணவு.  அது இரு> இரை என ஆனதே ஆகும்.  இரைத்தல் என்று வினையுமாயிற்று,  ஈர்த்தலில் தொடர்பு உள்ளபடியால் இரு என்பது இரை என்று மாறி உண்டற்குரியதையும் காட்டும்.

அயல் என்ற சொல் அருமையாய் அமைந்தது,  அங்கும் அல்லாத அப்பாலிடத்தைக் குறிப்பது அயல் ஆகும்,  இவ்வாறே அப்பால் கண்டு பயன்பாட்டுக்கு வந்தது அயம் என்ற இரும்பு ஆகும்,  அயச் செந்தூரம் என்ற மருந்து இரும்பினால் அல்லது இரும்புத் தூளால் செய்யப்பட்டது ஆகும்.  செந்தூரம் என்பதே செந்தூளம் என்பதன் திரிபு ஆகும்,  நன்றாக பூசப்பட்ட சாயம், சாயலையும் காட்டவல்லது.  சாயலாவது நிழல்.

அயல் > அயம்
சாயல் > சாயம்.

வேறு புதுச் சொற்களைத் தேடி அலையாமல்  லகர ஒற்றினையே மகர ஒற்றாக மாற்றியமைத்துச் சொற்புனைவு செய்தமை மிகுந்த திறன் ஆகும். பூசிய இடத்தில் சார்ந்திருப்பதால் சார் > சாய் > சாயம் எனினுமாம்,

அந்தச் சொற்களுக்கு வந்த வழி தெரியாவிட்டாலும் ஆய்வாருக்குத் தெரிகிறது,

ஆக வந்த வழி அறியக்கூடியதாய் உள்ளது.

தீபாவளி நடப்புக்கு வந்து மக்கள் கொண்டாடுமுன் தீபங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். அதன்பின்னரே அவற்றை வரிசையாய் வைத்து ஆடவோ பாடவோ மக்கள் தொடங்கியிருக்கவேண்டும்,  ஆகவே தீபம் + ஆவலி (/ளி)  என்று சொல்லமைந்திருக்கலாம். ஆனால் வட இந்திய வழக்கில் தீ+ வளி  (தீ-வாளி)   என்று வருதலின்  தீபம் என்பதிலுள்ள பகர முதலியவை காணப்படவில்லை.   தீப (தீபா) என்ற சொல் அங்கும் உள்ளது.  ஆக தீவாளி என்று வந்து தீவளி   என்பதனுடன் ஒற்றுமைப்படுவது  ஆய்வுக்குரித்தாய் அதை ஆக்குகிறது,  படிக்க அறியாதார் இன்னும் தீவளி என்றே தெற்கிலும் கூறுகின்றனர் என்பதால்  தீயையும் வளியாகிய காற்றையும் குறிக்கின்றதா என்பதை அறிதல் வேண்டும்,  அப்படியானால் தீபத்தைக் காணுமுன் தீயும் வளியும் கண்டு உவந்த காலத்தது என்றாகலாம்,
அது இன்னும் பழையது என்றாகிவிடும்.

பிழை -  திருத்தம் பின்



 



கருத்துகள் இல்லை: