செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ரகர ஒற்றுகள் மறைதல்

 ரகர ஒற்றுகள் மறையும் சொற்கள் பலவாகும்.  அவற்றில் சிலவற்றை எழுதி வெளியிட்டது நினைவில் உள்ளது.

பேச்சுத் தமிழில் இவ்வாறு மறைதல்  மிகுதியாகும். வாருங்கள் என்பது அப்படியே பேச்சுத் தமிழில் வருவதில்லை.  அது  வாங்க ( வா(ரு)ங்க(ள்) )  என்று பிறையிட்ட எழுத்துக்கள் மறைதலைக் காணலாம்.  தாருங்கள் என்பதும் இவ்வாறே  தாங்க என்று மாறிவிடுகிறது.  வந்தார்கள் என்பதிலும் வந்தாக என்று திரிந்து,  ர் என்பதுடன் ள் என்பதும் மறைவு எய்துதல் காணலாம்.  பேச்சு மொழியில் திரியாமல் வழங்கும் சொற்கள் சிலவே என்னலாம்.  இப்படிச் செய்தலின் மூலமாக,  மிகுதியான உடல்வலிமையைத் தமிழர்கள் எட்டினர் என்று சொல்லத் தோன்றுகிறது. இது முயற்சிச்சிக்கனம்.

ஆனால் பார்வை என்ற சொல்லை இப்படித் திரித்துப் பேசுவதில்லை.   கோவை என்ற சொல்லில், ஒரு ரகரத்தை வரவழைத்துப் பேசுவதைக் காணலாம்.  கோர்வை என்பது வழுவிய சொல் என்று சில நூல்கள் காட்டினாலும், அவற்றை படித்துப் போற்றுவோர் சிலரே ஆவர் கூடுதலாக ஓர் எழுத்தைச் சேர்ப்பது முயற்சியை மிகுத்தல் என்று நினைப்பதில்லை.  அதாவது மூச்சுச் செலவு!

அவர் என்பது அவா, அவாள் என்று திரிவதைக் காணலாம்.  வகரம் நீண்டதுடன் ஒற்று ரகரத்துக்குப் பதில் ளகர ஒற்று வருதலையும் அறியலாம்

சோர்வு என்ற சொல்லில் ரகர ஒற்று உள்ளது.  இச்சொல்லிலிருந்து சோகம் என்ற சொல்லை ஆக்குகையில்,  சோர்+கு+ அம் > சோர்கம்> சோகம் என்று வந்துவிடும். கு என்பது இங்கு இடைநிலையாய் நிற்கும். அம் விகுதி. ஆர்கலி என்ற சொல்லில் இவ்வாறு நிகழாது.

சீர்த்துவம் என்ற சொல்,  சீத்துவம் என்று ரகர ஒற்றை இழந்துவிடுகிறது.  அதாவது சீரான தன்மை என்பது இது.  இது பேச்சில் வரும்  ''பாத்தா'' தெரியும்  என்பது போன்றதே.  பார்த்தால் என்பது இப்படித் தன் மெய்யை இழக்கிறது.

சீதனம்  எனபது  எப்படி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஆனந்தம்

 ஆன்மாவின் அடிப்படைக் குணம் அல்லது பண்பு  அளவற்ற மகிழ்ச்சி என்று சொல்லப்படுகிறது,   இதற்குக் காரணம் அஃது உடலோடு கூடியிருக்கும் தன்மையே  ஆகும். இதுவும் ஆனந்தம் என்ப்படுகிறது. இந்தப் பொருளில் இது இப்போது வழங்குவதில்லை எனலாம். இது சத்து, சித்து எனவும் கூறுவர்.

இஃது மட்டுமின்றி,  ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகளில் நந்தமும் ஒன்றெனப்படும்.  ஆ நந்தம்  என்பதால்  ஆ= ஆக்கந்தருகின்ற,  நந்தம் -  செழிப்பு என்பது. இந்த நந்தம் , நன்று  என்ற சொல்,  நல்+ து>  நன் து > நந்து+ அம் என்று வந்து, நந்தம் :   செழிப்பு  , வளர்ச்சி என்று பொருள்தரும்.  நல் > நன் என்று வருவது லகர நகரத் திரிபு.   மேலும் இன்னொரு வழியில் நோக்கின்,  நரந்தம் என்பது இடைக்குறைந்து, நந்தம் என்றாகி  இனிய மணமாகிய நன்மை என்றும் பொருள்படும்.  நந்துதல் ஆதலுமாகும் என்பதால்,  ஆனந்தம் என்றும் கொள்ளற்குரியது.  

நந்தம், நந்தல் என்பதற்குக் கெடுதல் என்ற பொருளும் உண்டு.  மிகுந்த நலங்கள் உண்டாதல்,  கெடுதலுக்கும் இட்டுச் சென்று  அழிவும் தருமாதலின்,  கெடுதற் பொருள் ஏற்பட்டுள்ளது.  நன்மையும் தீமையும் பிரிக்க இயலாதவை என்பதை உணர்க.    அதிகம் பொன் வைத்திருக்கும் ஒருவன் திருடனால் கொல்லப்பட்டு அவன்றன் பொருள் எடுத்துச்செல்லப் படுதல் காண்க.  தீதும் நன்றும் ஒருகளத்தில் தோன்றக்கூடியவை.

இவை நிற்க,  ஆனந்தம் என்பது   ஆக நன்று>  ஆ + நன் + து+ அம்  > ஆனந்தம் ஆகும். இதில் நல் > நன் என்றானது.  ஆகவே இது தமிழ் மூலமுடைய சொல்லே ஆகும்.  பனி என்ற சொல், பல்> பன்> பனி என்றாதல் காண்க.

ஆ+ நன்(  மை ) + து + அம் >  ஆனந்தம் என்றும் காட்டலாம். ஆநந்தம் என்றும் ந-வரவும் எழுதப்படுதல் உள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 23 ஏப்ரல், 2026

மனம் என்னும் சொல்லும் போல்வனவும் உருபு ஏற்றல்

 மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-

மனத்துக்கண் மாசிலன்  ஆதல் அனைத்தறன்  

ஆகுல நீர பிற

என்பது  அது.

கண் என்பது உருபு.   மனத்துக்கண் என்றால் மனத்தில்.  இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.

அறம் என்பதும் உருபு ஏற்க,  அறத்தில் என்று வரும்.  இது அறம்+ அத்து + இல் என்பதுதான்.  கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.

அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல்.  அதனால் சாரியை எனப்பட்டது.  இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும்.  அதாவது தகர ஒற்று இரட்டித்தது.  அ த்+த்+உ..

மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை  கொள்ள,

உரலில் கட்டி,  வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ----  கண்ணனை.

இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான்.  இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,

பிர-மனும்  இந்-திர-னும் மன-தில்-பொ  றா-மை-கொள்-ள

இங்கு த்  என்னும் வல்லொற்று நீங்கியவாறு  காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.