வியாழன், 17 செப்டம்பர், 2026

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 போர்கள்  விரிந்துபுன்  வெடிகள் பொரிந்தன

யார்யார் இறந்தனர்  யாரும்  அறிந்திலா

குழப்பம் விளைந்தது  அமைதியும் குலைந்தது

தணிந்திடல் இலாது  வணிகமும்   குறைந்தது;

பணந்தனை  ஈட்டுதல் நாடுகள் கணித்தனர்;

இழந்தனம்  மேன்மையை என்றனர் உழைந்தனர்;

ஒருவர்  பாரதத் தாய்பெறு  குலமகள்

இரவொடு பகலிலும் கரவாக் கண்விழித்து, 

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலாச்

சேவை மனத்தொடு கோவைப்  பட்டனர்;

இந்திய  நாட்டின் செந்தமிழ்ச் செல்வி.

மனந்தளர்  வில்லா மாண்புறு  கல்வி

நிர்மலா  சீதா  ராமன்  நிதித்துறைத்

தருமம்  நிறைந்த பெருமகள்  அமைச்சர்,

உறுவரு  மானம் உயர்த்திப்   பாரதம்

விளங்கிடச் செய்த விண்ணுறு மேன்மை,   

துலங்கிடச் சொல்வாய் தோழி,

கலங்குதல் அற்றுன்  நற்றாய்  மகிழவே.


அருஞ்சொற்களுக்கு  விளக்கம்:

புன்வெடிகள் -  தீய வெடிகள்.

உழைந்தனர்  -   துன்பமுற்றனர்

தருமம் நிறைந்த --  மக்கள் துயர் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் துன்பம் நீங்க  வேண்டும் என்று எண்ணியமையால்,  தருமம் நிறைந்த எனப்பட்டது.

வெடிகள் பொரிந்தன -  இங்கு தீப்பிழம்புகள் பறத்தலைக்  குறிக்கவேண்டி, மீமிசையாகக் கூறப்பட்டது.

தணிந்திடல் -  வணிகத் துன்பங்கள் குறையாமல் என்று பொருள்.

ஈட்டுதல்   பணம் வருமானம் சேர்த்தல்.

கரவா = அமைச்சர் என்ற முறையில் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டார் என்பதைக்  குறிக்க இச்சொல்.   ஒளிவு மறைவின்றி,  தன் சுகம் கருதாமல்.

இழந்தனம் -  இழந்தோம்.

தாய் பெறு குலமகள் -  பாரத நாட்டின் மேன்மைச் செல்வி.

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலா -  கணக்கில் சிறந்தவர்.

வரவு செலவு திட்டம் ( பட்ஜட்) தயாரிப்பில் சிறந்தவர் என்பது,

கோவைப்  பட்டனர் - தம் வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்.

இது மகள் தாய்க்கு எடுத்துச் சொல்லியது.  

தருமம் நிறைந்த -  இவர் பட்ஜட் மூலம் நன்மைகள் பல செய்துள்ளவர்.

நாட்டின் வருமானத்தை வெகுவாக உயர்த்தியுள்ளார்.   உறு வருமானம் என்ற தொடர் கவனிக்க,

பாரதம் விண்ணுறு மேன்மை -  வானளாவிய மேன்மை பாரத நாடு அடைந்தது.

மகளைத் தாயின்பால் ஆற்றுப்படுத்தியது. தாயின் துன்பம்

களைவித்தது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வு உரிமை 


செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தகவல்

 தக அகவல் என்பதே  குறுகித்  தகவல் ஆயிற்று.. அகவுதல் என்பதனடியாகப் பிறந்த சொல்,  தமிழ்ச் செய்யுளாகிய அகவற்பா என்பதிலும் இதன் பயன்பாட்டைக் காணலாம்.

கல்யாணமோ கருமாதியோ தக்கபடி சொல்லி அழைக்கவேண்டும் என்பது பண்டைத் தமிழர் பண்பாடு ஆகும்.

இது கவிஞர் தக்கபடி அழைக்கவில்லை என்பதைக் குறிக்க,  ''தக அகவல்'' இல்லை அதனால் போகவில்லை என்று சொல்வதிலிருந்து ஏற்பட்டுப்  பின்னர் இந்தி, அரபியிலும் பரவிற்று.  அழைத்தலும் அகவல் ஆகும்.

இப்போது இதன் பொருள் பெறப்பட்ட அல்லது அனுப்பிய செய்தி என்பதே ஆகும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்கது. பல்பிறப்பி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தாமதம் என்பது. மற்ற ஒருபொருட்சொற்களும்.

 ஒவ்வொரு நிகழ்விலும்,  எதை எப்போது எதிர்பார்க்க வேண்டுமென்ற ஒரு திட்டக்குறி தானே எழுகிறது..  ஒரு தாலிகட்டுக் கல்யாணத்தில்  என்ன என்ன வாத்தியங்கள் இசைக்கப்பட்டாலும் வேறு ஏதேது நடைபெற்றாலும்  தாலிகட்டும் நேரத்தில் அது காணாமற் போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுக் கட்டப்படுகிறது என்றால் அதைத் '' தாமதம்'' என்று சொல்கிறோம். சிலப்பொழுது நடத்துநர் அல்லது சோதிடர் குறித்த நேரம், தவறிவிட்டமையால், அது தாமதமாயிற்று என்ப.

இதைக் காலந்தாழ்த்தல், நேரத்தளர்வு என்றும் கூறலாம்..

அட்டி என்பது:  இது அடு+ இ எனல் தான்.  இதன் பொருள்:  அடுத்து இடுதல். இப்போது செயல்தக்க தொன்றை,  அடுத்த காலத்துக்கு அல்லது இடத்திற்கு வைத்துக்கொள்வது   .  இதன் பொருள்: தெளிவாக அமைந்துள்ளது. டகரம் இரட்டித்தது என்பர். இது யாதெனின்,  அ+ ட்+ ட்+ இ > அ-ட்+டி  என இரட்டித்தல் காண்பீர்.

அப்பியந்தம்  என்ற சொல்லைப் பயன்படுத்துவார் இன்று குறைவு. இது அ+பின்+ அண்+ து+ அம் என்பதுவே.  அ+ பி( ன்)+(ய*)+ அண்+ து + அம்>  அப்பியண்தம் > அப்பியந்தம்  ஆகும். இதுவும் நல்ல புனைசொல் தான்;  அதற்குப் பின் அடுத்து வந்து அமைவது  என்பது பொருள். இது அப்பியந்தரம் என்றும் வரும்.  அ+ பின்+ அண்+ தரு + அம் > அப்பியந்தரம் என்றாகும். இங்குப் பின் என்பதில் னகரம் மறைந்தது. இது எடுபடாவிடாவிடின் சொல்லழகு குன்றும்.  ''பினண்த'' என்று வருதலில் அழகில்லை.

வேகக் குறைவினால் தாமதம் ஏற்படுகிறது.  எனவே  '' அவேகம்''  என்பது வேகக்குறைவு அல்லது வேகமின்மை என்று பொருள்பட்டு, பயன்படுத்துவாரின் உரைதிறத்தால்  தாமதம் என்றே பொருள்தர வல்ல சொல்லுமாகலாம்.

தாமதம் என்பது,  தாழும் + அது + அம் என்ற சொற்றொடரில்,  ழு வை எடுத்துவிட்டால்,  தாம்+ அது+ அம் ஆகி,  தாமதம் எனவரும்.  தமிழ்ப்புனைவு ஆகும்.  சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் உரியது. காலம் தாழும் அதுதான் தாமதம். இத்தமிழ்ச்சொல்லை , சமஸ்கிருதமும் பயன்படுத்தியது நம் கொடைப்பெருமை என்றாலும் உள்ளூர் மொழியாகும் அதுவும்,

ஒரு மொழி என்றால் -  கடன்வாங்குவது அப்புறம் பார்க்கலாம்,  போதுமான சொற்கள் வேண்டுமே,  இப்படிப் படைத்து அளித்தவர்களுக்குப் பின் தோன்றல்கள் என்ற முறையில்  நாம் நன்றியுடன் இருப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை