வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

தீவிரம் என்னும் பதம்.

 இவற்றைக் கற்றுக்கொள்ளவும்:

விர் -   விரல்   ( விர்+ அல் ).

விர்> விரு> விகு> விகு+ ஆர் + அம் >  விகாரம். ( விரிவானதுடன் சேர்ந்தது மேலும் விரிந்து அமைவது விகாரம்).  கு என்பது சென்றுசேர் குறிப்பு.  ஆர்தல் - நிறைதல். அம் - விகுதியும் அமைதலும்  ஆகும்.

விகாரித்தல்  ,  ஆர்தல் > ஆரித்தல்.  ஆர் என்னும் வினையின் தோன்றிய தொடர்பினதாகிய இன்னொரு வினைச்சொல்.

விர் > விரு> விருத்தம்.

விர்> விரி> விரிவு.

விர் > விரை. விரிதலில் உண்டாகும் வேகம்,  விரைவு.

தீயானது எரிகையில் விரைந்து பரவிவிடும். 

விர்> விரம்.

விரிதலில் பகை உண்டாகும்.  இதனின்று  விர்> விர்+ ஓ(ங்கு) + து+ அம் > விரோதம் என்ற சொல் பிறந்தது. விரிவு ஓங்குவதால் உண்டாகும் பகை உணர்வு.  ஓங்கு என்பதில் கு என்னும் வினையாக்க விகுதி தவிர்ப்புறும்.

விர்> விர்+ அடு> விர்+ அட்டு > விரட்டு. (விரிவதனால் இன்னோரிடம் செல்லுமாறு முடிவது).

இதைப் படித்து,  தீவிரம் என்ற சொல்லின் தமிழமைப்பை உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 27 ஆகஸ்ட், 2026

உத்தரவு - இது எவ்வாறு தரவு செய்யப்பட்டது.

 இன்று இந்தச் சொல்லைப் பார்ப்போம்.

முதலில் தரவு என்னும் சொல்லைப் பார்ப்போம்.

தரவு என்பதில் அடிச்சொல் அல்லது பகுதி  '' தரு '' என்பதுதான்.  இதை வினையடி என்னலாம்.  இதில் ஏற்படும் வினைமுற்றுக்களைச் சொல்வதாயின்,  தருகிறான், தருகிறாள், தருகிறது  எனபனபோலும் சில கூறலாம். ஆனால் தமிழ் ஓரளவே அறிந்தவனுக்கு,  தரவு என்பதும் தருகிறான் என்பதும் தொடர்பற்றவையாகத் தோன்றும்.  அப்படித் தோன்றுகிற ஒருவன் சொல்லாய்வு அறியாதவனா யிருப்பினும், மொழியை வேறு கோணங்களில் நன்கு  அறிந்து பயன்பெறத் தக்கநிலையில் இருப்பானாகவும் இருத்தல் கூடும். மொழிப் பயன்பாட்டாளன், சொல்லாய்வு அறியாமலே ஒரு நல்ல கட்டுரையோ கவிதையோ எழுத அறிந்திருக்கலாம்.  இலக்கணம் அறியாமலே பலர் மொழியை நல்லபடி பிழையின்றிப் பயன்படுத்தும் திறனுடையார்.

தரப்படுவது தரவு.

உ என்பது பண்டைத் தமிழில் இருந்த, இன்னும் இருக்கின்ற  ஒரு சுட்டுச்சொல்லாகும். இதன் பொருள் ''முன்னிருப்பது''  என்பதாகும்..  அதிகாரத்தில் நமக்கு மேலிருப்பவர்  அல்லது நமக்குக் கட்டளைகள் பிறப்பிக்கத் தக்க ஒருவர்,  அக்கட்டளையைப் பிறப்பித்துக் கடைப்பிடிக்குமாறு நம்மைப் பிணிப்பதே  உத்தரவு ஆகும்.   உ என்பது முன்னிருப்பது என்பதை ''உன்''  என்னும் சொல்லிலிருந்து அறிந்துகொள்ளலாம்.   உன் தாய் என்பதில்  என்பவள் உனக்கு முன்னிருந்து உன்னைப் பெற்றவள். இந்தச் சொல்லின் மூலம் ''உ''  என்ற சுட்டுச்சொல் தான்.

தமிழ்ச் சொற்கள் என்பவை,  தமிழில் காணப்படலாம்.  சமஸ்கிருதத்திலும் காணப்படலாம்.  தமிழிலிருந்து திரிந்த சொற்களும் திரியாத சொற்களும் சமஸ்கிருதத்திலும் வழங்கும் என்பதறிக.  

தமிழில் திருக்குறள் பாடியவரே  சமஸ்கிருதத்திலும்  சாணக்கியர் என்று அறியப்படுகிறார்.  நம் எழுத்துக்கள்,  ஆக்கங்கள் பல்வேறு இடங்களில் பதிவு பெற்று இருக்கின்றன.  ஒவ்வோரிடத்தில் வேறு நபர் என்று எண்ணபடும் ஒருவரை சிலவேளைகளில் அறிந்து சிலர் வியப்பதுண்டு. அதுபோலவே இதுவும்.

ஒவ்வொரு கருத்தினையும் ஒரு சாணுக்குள் அடக்கிவர்தாம் சாண் அ(ட)க்கியவ்ர்.  இந்தப் பெயரில் அடக்கியவர் என்பதில் உள்ள (ட) குறுக்கப்பட்டுள்ளது.  ட முதலிய கடும் ஒலிகளை ஒடுக்கிச் சொல்லமைப்பது ஒரு திறமையும் நற்புத்தியும் ஆகும்.  இலக்கணத்தில் இதற்கு இடைக்குறை என்று பெயர். கவிதையில் இது வரும்:  என்னில் -  எனில்  என்பது காண்க.  பேச்சிலும்  வாருங்கள் என்பது வாங்க என்றாகும். இச்சொல் ள் மறைந்து கடைக்குறையும் ஆகும்.

இச்சொல் அடக்குதல் -  அக்குதல் தான்  (  ககர மெய் நீக்கினால்),  என்றாலும் அதை அஃகுதல் என்றே முன்னோர் எழுதியதால் நாம் அதையே பின்பற்றுவோம்.  அக்கம்பக்கம் என்ற சொல்லிலும் அக்கம் என்பது  ஓர் தொலைவுக்குள் அடங்கிய பகுதி என்பதே குறித்து,  டகரம்  ஒழிந்தமை தெரியக்காட்டும்.

சம ஒலியமைப்புடன் அடுத்து நின்ற மொழி சமஸ்கிருதம்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 26 ஆகஸ்ட், 2026

பூமியை அகழ்ந்துகொண்டிருத்தல்.

 மிகுவதெலாம் புகுவதற்கோ பூமி  வேண்டும்

புகுவதெலாம் புன்மைதாம்  பொய்கள் என்றால்

''புகுமி'' யெனும் பூமியனை பொங்கு வாளே

பொறுத்திடவே திறன்தானும் உண்டோ சொல்வீர்

வெகுள்வதுவும் வீசுவதும்  வெள்ளம் என்னும்

விளைவனைத்தும் பூமிஇவள் சீற்றம் அன்றோ

தகுமுறையில் உணருவனோ தாழ்ந்த மாந்தன்

தாரணியோ தருபொறுமை தாழா மைக்கே.


( சந்தம் மாறுகிறது)


உயிர்பெற்று வாழ்கின்ற மனிதன் பூமிக்

குயிரில்லை என்றுள்ளில் நினைத்துக் கொண்டு

தயை ஒன்றும்  பாராமல் அகழ்ந்து வீசித்

தகைநீங்கு அன்முறையால்  செயல்கள் செய்தார்

பெயல்மிக்கு  வளிவீச்சு  அழிவு  கூடி

பேணாமை தாளாமை ஒழிந்து  யாரும்

அயல் எனவே கருதாமல்   மயலும் நீங்கி

அனைவருமே ''அக உதரம் ''  அடைந்து வாழ்க


பொருள்:

தாரணியோ -  பூமியோ, ( நிலமடந்தை என்பவள்)

தாழாமைக்கே ---  குறையாமைக்காகவே

அக உதரம் -  சகோதரம் அல்லது உடன்பிறப்பு ( உதரம் - வயிறு)

தயை  - அன்பு   

உள்ளில் நினைத்துக்கொண்டு-  வெளியில் சொல்வதில்லை.

பூமியனை -  பூமிய(ன்)னை ( தொகுத்தல்)

அன்முறை -  அநியாயம்

பேணாமை - பாதுகாவல் செய்யாமை

தாளாமை - பொறுத்துக்கொள்ளாமை

மயல் -  தெளிவின்மை

பெயல் - மழை, மிக்கு -  அதிகம் ஆகி

அக உதரம் >  சக உதரம் > சகோதரம்.-  சகோதரத்துவம்.

இவ்வாறு சொல் திரிந்தது.


உட்கருத்து.  எங்கு அகழவேண்டுமோ, அங்கே நிறுத்திக்கொள்வது

மனித குலத்துக்கு நல்லது.  இமயமலையிலெல்லாம் போய் அகழ்ந்தால்

விளவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை