வெள்ளி, 18 செப்டம்பர், 2026

அபத்தம்

 பற்று என்னும் சொல் நீங்கள் அறிந்ததே. இணக்கத்தினால் ஏற்படும் அன்புத் தொடர்பினைப் பற்று என்போம். தேவர் தம் குறளில்:

பற்றுக பற்றற்றார் பற்றினை;   அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்கின்றார்.  பன்மணிகளில் இக்குறளும் ஓர் ஒளிமணியாகும்.

சற்று என்ற சொல்லைப் பேச்சில் ''சத்தெ''  என்று சொல்வர்.  உச்சரிப்புப்  பங்கமுடையார்,  செத்தே என்றும் சொல்வர். அப்போது செத்தாய் என்பதனுடன் அது மாறுகொள்ளலாம்.

இதைப் போன்றே,  பற்று என்பதும்   பத்து என்று வந்து, 10 என்ற எண்ணைக் குறித்தல்போலுமே பேச்சில் வரும்.  காலில் அடி, மஞ்சட்பத்துப் போட்டிருக்கிறேன் என்பதிலும், காலில் பூசிப் பற்றி யிருக்கும் மருந்து, பத்து எனப்படும்.

பட்டினத்தடிகளும் பிறர் தூற்ற நம் மீது ஒட்டி வருத்தும் நிந்தனைச் சொற்களையும் பத்தம்  (பற்றம்) என்றே சொல்வார்.

நம்பால் எது பற்றியிருக்க வேண்டுமோ  அதுவே உரியது ஆகும்.  அதையே பற்றம் அல்லது பத்தம் என்போம்.  ஒன்று இயற்சொல். மற்றது திரிபு   ஆகும்.

குவியலில் உள்ள செத்தை, ஒன்றுடன் ஒன்று பற்றியிருந்து அசுத்தமாகும்.  அதிலிருந்து வேறுபடுத்த,  தூற்றும்பெத்தம் என்று பழைய நூல்கள் கூறும்.  ஆகவே பத்தம்--- பெத்தம், எனினும் பின்னது இந்நாட்களில் செவிக்கு வருவதில்லை.

அல் என்ற அல்லாமை குறிக்கும் முன்னொட்டு,  அ(ல்) என்று குன்றி முன்னொட்டாகும். (prefix).  அ -  எதிர்மறை முன்னொட்டு.  எதிர்மறை என்றால் எதிராக மறுப்பது.  மறு >  மறை. (தொழிற்பெயர்).  மறைதல்> மறை (முதனிலைத் தொழிற்பெயர்) என்று சற்று ஒளிவாக உள்ளதைக் குறிப்பது இன்னொரு சொல்.

அ+ பத்தம் > அபத்தம் என்ற சொல்லாம். இது சமஒலி மொழியாகிய சம+கதத்திலும் வழங்கும். சம+ கதம்> சங்கதம்> சம(ஸ்)கதம்> சமஸ்கிருதம்.

கதம் என்றால் ஒலி.  கத்து> கது > கது+அம் >கதம்>கிருதம்.  ஆகவே சம(ஸ்)கிருதம்.   ஸ் என்பது இணைப்பு ஒலி. சம(க்) கதம் என்ற வல்லொலி கடினமாகையால், சம(ஸ்)கிருதம் என்று மென்மைப்பாடு அடைகிறது. பிறர்க்கு ஒலிக்க எளிதானது.  அவ்வளவுதான். பத்தம் என்பதைப் பஸ்தம் என்றாலும் மென்மைப்பாடு தான்.  ஆனால் சொற்களில் இது இந்து வரவில்லை.

எதையும் சரிப்படுத்த இன்னொன்றைச் சேர்ப்பது என்பது பலவேளைகளில் உலகில் நடைபெறுகிறது.  சுவருக்குச் சுண்ணாம்பு அல்லது வெள்ளை போல. சேர்ப்பது பற்றிக்கொள்கிறது.   பற்று> பற்றி> பத்தி> பஸ்தி  என்றால் திருத்தம் சேர்த்தல். உறுதியாதல்.  இது மலாய் மொழியில் தொடர்புள்ள பொருளில் வழங்கும்.  இரு சட்டங்களில் ஆணி ஒன்று சேர்த்தால் உறுதி. பற்றி என்பது சொல்ல எளிதாயில்லாமையால் அவர்களுக்கு பஸ்தி என்பதே ஆமோதிக்கத் தக்கதானது  ( ஆம் என்று ஓதிக்கொள்ளத் தக்கதானது!!).

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 17 செப்டம்பர், 2026

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 போர்கள்  விரிந்துபுன்  வெடிகள் பொரிந்தன

யார்யார் இறந்தனர்  யாரும்  அறிந்திலா,

குழப்பம் விளைந்தது  அமைதியும் குலைந்தது

தணிந்திடல் இலாது  வணிகமும்   குறைந்தது;

பணந்தனை  ஈட்டுதல் நாடுகள் கணித்தனர்;

இழந்தனம்  மேன்மையை என்றனர் உழைந்தனர்;

ஒருவர்,  பாரதத் தாய்பெறு  குலமகள்,

இரவொடு பகலிலும் கரவாக் கண்விழித்து, 

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலாச்

சேவை மனத்தொடு கோவைப்  பட்டனர்;

இந்திய  நாட்டின் செந்தமிழ்ச் செல்வி.

மனந்தளர்  வில்லா மாண்புறு  கல்வி

நிர்மலா  சீதா  ராமன்  நிதித்துறைத்

தருமம்  நிறைந்த பெருமகள்  அமைச்சர்,

உறுவரு  மானம் உயர்த்திப்   பாரதம்

விளங்கிடச் செய்த விண்ணுறு மேன்மை,   

துலங்கிடச் சொல்வாய் தோழி,

கலங்குதல் அற்றுன்  நற்றாய்  மகிழவே.


அருஞ்சொற்களுக்கு  விளக்கம்:

புன்வெடிகள் -  தீய வெடிகள்.

உழைந்தனர்  -   துன்பமுற்றனர்

தருமம் நிறைந்த --  மக்கள் துயர் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களின் துன்பம் நீங்க  வேண்டும் என்று எண்ணியமையால்,  தருமம் நிறைந்த எனப்பட்டது.

வெடிகள் பொரிந்தன -  இங்கு தீப்பிழம்புகள் பறத்தலைக்  குறிக்கவேண்டி, மீமிசையாகக் கூறப்பட்டது.

தணிந்திடல் -  வணிகத் துன்பங்கள் குறையாமல் என்று பொருள்.

ஈட்டுதல்   பணம் வருமானம் சேர்த்தல்.

கரவா = அமைச்சர் என்ற முறையில் தன் கடமையை உணர்ந்து செயல்பட்டார் என்பதைக்  குறிக்க இச்சொல்.   ஒளிவு மறைவின்றி,  தன் சுகம் கருதாமல்.

இழந்தனம் -  இழந்தோம்.

தாய் பெறு குலமகள் -  பாரத நாட்டின் மேன்மைச் செல்வி.

எண்கள்  தம்முடன் பண்படப் பிணக்கிலா -  கணக்கில் சிறந்தவர்.

வரவு செலவு திட்டம் ( பட்ஜட்) தயாரிப்பில் சிறந்தவர் என்பது,

கோவைப்  பட்டனர் - தம் வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்தார்.

இது மகள் தாய்க்கு எடுத்துச் சொல்லியது.  

தருமம் நிறைந்த -  இவர் பட்ஜட் மூலம் நன்மைகள் பல செய்துள்ளவர்.

நாட்டின் வருமானத்தை வெகுவாக உயர்த்தியுள்ளார்.   உறு வருமானம் என்ற தொடர் கவனிக்க,

பாரதம் விண்ணுறு மேன்மை -  வானளாவிய மேன்மை பாரத நாடு அடைந்தது.

மகளைத் தாயின்பால் ஆற்றுப்படுத்தியது. தாயின் துன்பம்

களைவித்தது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வு உரிமை 


செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தகவல்

 தக அகவல் என்பதே  குறுகித்  தகவல் ஆயிற்று.. அகவுதல் என்பதனடியாகப் பிறந்த சொல்,  தமிழ்ச் செய்யுளாகிய அகவற்பா என்பதிலும் இதன் பயன்பாட்டைக் காணலாம்.

கல்யாணமோ கருமாதியோ தக்கபடி சொல்லி அழைக்கவேண்டும் என்பது பண்டைத் தமிழர் பண்பாடு ஆகும்.

இது கவிஞர் தக்கபடி அழைக்கவில்லை என்பதைக் குறிக்க,  ''தக அகவல்'' இல்லை அதனால் போகவில்லை என்று சொல்வதிலிருந்து ஏற்பட்டுப்  பின்னர் இந்தி, அரபியிலும் பரவிற்று.  அழைத்தலும் அகவல் ஆகும்.

இப்போது இதன் பொருள் பெறப்பட்ட அல்லது அனுப்பிய செய்தி என்பதே ஆகும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்கது. பல்பிறப்பி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை