ஞாயிறு, 1 மார்ச், 2026

அலங்காரம்

 அலம் புரிதல்  ( அலம்புரிதல்)  என்றால்  அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே  அழகு செய்தல் தான்.  அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால்,  அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது,  மிகுதி செய்தல் ஆகிறது.  அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம்.  அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு  ஆகிவிடக்கூடும்.

இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும்.  அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள்.  ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.  

ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.

அல் -   அழகு அன்மை.

கு  -  கூட்டிச் சேர்த்தல்.   இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.

ஆர்(தல்)  -  நிறைதல். நிறைத்தலுமாம்.

அமை(தல்):   இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.

அலம்+ கு+ ஆர் + அம் =  அலங்காரம் ஆகிறது.   இதன் பொருள்:  அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை  அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து,  அமைவுறுத்துதல்.

தமிழில்,  அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன.  எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி,  ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர்.   இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே  ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது.  கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும். 

அலம்+ கு+ ஆரம்  என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது.  அதுதான் அழகுறுத்துதல்.  இச்சொல் அலம்+கு+ அரண்+ அம்  > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.

பழ > பல என்பதுபோல்,  அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க.  இதை இங்கு விரிக்கவில்லை.  வேறு இடுகையில் இதை விளக்கலாம்.

புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

அனுமான், அனுமானம்

 அனு என்ற முன்னொட்டு,  அணுகுதல் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட ஒரு திரிபு  ஆகும். இதில் ணுகரம்  மாறி,  னுகரம் ஆயிற்று.  இது எதையும் மறைப்பதற்காகச் செய்யப்பட்ட திருட்டுத்தனம் என்று நினைக்கவேண்டாம்.  அப்படி நினைப்பதால் சொல்லியல் ஏதும் சிகரத்தில் ஏறிவிடுவதில்லை.  அணுகு என்பது மற்ற வடிவங்களுடன் இணைந்து சொல்லாகும்போது,  முன்னொட்டு வடிவத்தில் நின்று, இருசுழியுடன் திரிவதால், சற்று இலகு  நிலைபெறுகிறது.  அணு என்ற சொல்லின் பொருளையும் அணுகு என்ற சொல்லின் பொருளையும் நினைவுக்குக் கொணர்ந்து மூளைக்குச் சுமை ஏற்றாமல்,  புதிய சொல்லாக்கத்தின் புதுப்பொருளை முழுமையாகப் பெறுவதற்கு நல்ல வழியை வகுக்கின்றது என்பதை உணரவேண்டும்.  

அனுமான் என்ற சொல்லில்,    அணுகு> அனு- (முன்னொட்டு).  இது கூறினோம்.  மான் என்பதில் மகன் என்ற சொல்லானது, மான் என்று திரிந்தது.  இதற்குரிய சொற்பொருள்:   அணுக்கமான மகன் என்பது.  பிறப்பு என்ற பொருளுடைய மக என்ற அடிச்சொல்லிலிருந்து உண்டாவதால்,   அணுக்கப் பிறப்பு என்று பொருள்.  பழங்காலத்திலே, இவர் மனிதனுக்கு மிக நெருங்கிய உருவமைப்புடன் சிறக்கப் பிறந்தவர் என்ற நற்பொருள் கிடைக்கிறது.  அனுமான் என்பது உயர்வுப் பன்மை பெற்று,  அனுமார் என்றபடி வந்திடினும்,  இச்சொல்லை இழிவாக நோக்குவதற்கு எந்தச் சரியான காரணமுமில்லை. இராமபிரானுக்கு மிக நெருக்கமான அவர்,  மனிதருடன் நெருக்கமான உறவுடையார் என்க. இராமருக்கு நெருக்கமுடையார் ஆதலின், இறைப்பற்றினால் எந்த மனிதருக்கும் முன்னே உள்ளவர்.

மான் என்னாமல் மன் எனினும், மனிதன் என்பதன் அடிச்சொல் அதுவாகும். மனிதப் பிறவிக்கு நெருங்கியவர்.

அனுமானம் என்ற சொல்லிலும், அனு என்பது அணுக்கமே பொருளாகக் கொண்டது.   மானம்  என்பது அளவு என்ற பொருள் உடையது எனினும் ஒருவன் ஒன்றை அணுகி உள்ள தகவல்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பொருண்மை அல்லது கருத்தளவு ஆகும்.  அனு என்பது அணுகுவதே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 25 பிப்ரவரி, 2026

விகிதம் வீதம்

 இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.

பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில்,  அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள்,  1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது.  விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.

விகுதல் என்ற வினைவடிவம்:

மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,

விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்

வரும்.

எடுத்துக்காட்டு:

மிஞ்சு >  விஞ்சு;

தொழுதி -  தொகுதி.  ( திரட்சிக் கருத்து).

மிகு> விகு> விகுதி  ( மிகுதி - விகுதி).

தொகு> தொழு - திரிபு.

புழுதி என்பது பூதி என்றும் திரியும்.

பகுதி என்பது பாதி என்றும்  மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால்,  விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும்.  அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.

விழுக்காடு  (விழு)

விகிதம்  ( விகு< விழு)

இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.