வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தனுஷ் என்பது (வில்)

 வில் என்று குறிக்கப்படும் கருவி,   பழைய தொடக்கத்தின்போது,  மரத்தண்டுகளால் ஆனவைதாம்.  நல்லபடி வளைந்துகொடுக்கும் தண்டுகளால் இந்த வில்கள் அமைக்கப்பட்டன.

தண்டு என்ற  சொல்:  தண் என்பது அடிச்சொல். இதில் வந்த டுகரம்,  உண்மையில் '' து''  என்பதுதான்.  பின்னர் '' டு''  என்பதே ஒரு விகுதியாகக் காட்டபட்டிருக்கலாம்.  எதுவாயினும் சொல்லமைந்தபின் அது பயன்பட்டு, புழங்கப்படுகிறதா என்பதுதான் அந்தச் சொல்லின் நீடிப்புக்குக் காரணம்.

தண்+ து >  தண்டு.

தண்+ டு > தண்டு. 

மேலது புணர்ச்சி காரணமான் திரிபு  ஆகும்.

தண் என்பது தண்மை அல்லது குளிர்ச்சிக்கும் வரும் அடிச்சொல்  ஆகும்.

தண்டுவடம்,  தண்டுக்கீரை என்ற சொற்களில்,  தண்டு என்பது தண்மை என்னும் குளிர்ச்சியைக் குறிக்கவில்லை.  கம்பு, கம்பம் என்பனவும் தண்டு குறிக்கும்.

தணுஷ் என்ற சொல்லில் டு அல்லது து என்பதற்குப் பதில் ஷ் வந்தது.  தண்> தணு> தணுஷ்.     தணு என்பது உகரத்தில் முடிந்த சொல்.   கண்> கணு என்பது போல.

தணுஷ் என்பது வில் குறித்தமையால் இது ஒரு கருவிக்குப் பெயராய் வழங்கியுள்ளது.

தண்டு என்பது படையினர் வைத்திருந்த ஆயுதம் ஆதலால்,   அது படையையும் குறித்தது. தண்டு என்பது வில்  (தணுஷ்).  தண்டெடுத்தல் என்பது படையை இயக்குதலையும் குறித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

புதன், 5 ஆகஸ்ட், 2026

வாக்கு

 வாக்கு என்பதன் சொல்லாக்கம்  அறிவோம்.

வாக்குதல்  என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இதன் பொருள் வார்த்தல் ( வார்த்தெடுத்தல்) என்பதாகும். 

வார்த்தல் என்பது, தனித்தனியாக வகைப்படுத்தி ஒவ்வொரு வார்ப்பையும் ஒரு குறித்த அளவுடன் எடுத்தல் என்று சொல்வர். இதைச்செய்ய ஏனங்கள் இருக்கும். இவை பலகார வகையாக இருக்கலாம்.  உலோகக் கட்டிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகை வகுத்தமைத்தலே ஆகும். வார்த்தல் என்பது ஒருபக்கம் நீளமாக வரச்செய்தல் என்றும் கொள்ளலாம். வார்த்தலில் வேறுபாடுகள் உள.

வகு> வாகு> வாக்கு.

வகு > வார்.

வகு > வகை> வாகை   (வாகை என்பது வகைகளை உடைமை என்றும் பொருள்தரும்.)

வகு> வாகு> வாகை.

இவற்றின் பொருளை நிகண்டுகள் வாயிலாக அறிந்துகொள்க.

சொற்களும் பலவேறு வகையின  ஆதலின்,  வகுக்கப்பட்டவை எனலாகும்.

வாய்>  வா>  வாக்கு என்று அமைதலும் ஆகும்.  இது நா> நாக்கு என்றபடி அமைதலே.

ஆகவே இச்சொல் இருபிறப்பி என்று முடிக்கவேண்டும். வாய் என்பதை வா என்று யகர மெய் விடுத்துப் பேசுவோரும் உளர்.  வாய்ப்பேச்சு>  வாப்பேச்சு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

திருநாமகரண அழைப்பிதழ்

 


1940 வாக்கில்  இலங்கைப் புலவர் திரு. சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எமக்குப் பெயரிட்டார்.  அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே எம் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது.  இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு  அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை). இவ்விதழின் பெயர்: ''புதிய உலகம்''   என்பதாகும்.

திரு சேகரம் பிள்ளை அவர்கள் இலங்கையிலிருந்து வந்து முதன்முதலாகத் தங்கிய இடம்:  சிறம்பான் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் சங்கீத சபா  ஒன்று இவரது  ஆதரவில் நடைபெற்று வந்தது என்று தெரிகிறது.  இதை இளநாட்களில் எம்மிடம் பழகிய பெரியோரிடமிருந்து யாம் அறிந்துகொண்டோம். 

அப்போது ஒரு பாட்டுப்புத்தகமும் கிடைத்தது.  அதன்  ஆக்கியோர் கவி காருண்யம் என்பவர். அவர் கவிதை நூலுக்கு சேகரம் பிள்ளை ஒரு மதிப்புரை வழங்கி இருந்தார்.  அதில் அவர் பாடிக்கொடுத்த ஒரு சாற்றுகவி இவ்வாறு இருந்தது.  

உயர்ராக நாதபுரம் தனிலேதான்
ஓங்குபுகழ் தாங்குகீழைச் சீவல்பட்டி, 
தயவுநிறை மக்களுறை மாங்கொம்பாம்
தங்கபுரி மங்களம்சேர் சிங்கமான
புயவலியன் கருப்பையா தந்தபுத்ரன்
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்,
நயமாகத் தருசமத்வ கீதமீந்த
நாட்டவர்கள் கேட்பதற்கோர் நல்லநூலே.

 இவர் இலங்கை சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் மாணவர். கொழும்பு பலகலை அல்லது கல்லூரியில் தமிழ்ப்புலவராகத் தேறித் தமிழ்ப்புலவர்ப் பட்டம் பெற்றவர்.   இவருக்கு  திரு வி. கல்யாண சுந்தரனாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன என்று திரு அடைக்கலம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேம்.  எனது மாணவப் பருவத்தில் இவர் பதிப்பித்த இதழின் படிகள் ( பிரதிகள்) சில இருந்தன.  அவற்றில்  வெண்பாக்கள், விருத்தங்கள் , விடுகதைகள், குடும்பக்கதைகள் முதலிய பல இருந்தன. இவற்றைக் கற்றறிய ஆவலும் இருந்தது. இவற்றின் காரணமாகவே,  ஆரிய சமஜத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு  அப்பாத்துரைச் செட்டியார் என்பவரிடம் சென்று யாமும் தமிழ் கற்றுக்கொண்டோம். அப்போது யாம் சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தோம். இது ஓர் அரசு உதவிபெற்ற கிறித்துவ உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

எமக்குப் பெயரிட்ட காலத்தில் எம் அம்மாவின் பெயர் எதுவும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.  யாம் ஜோசப் பள்ளியில் சேருங்காலத்தில்  என்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தன. இவற்றில் பெயர் முதலியவை கையெழுத்தால் எழுதப்பட்டவை. இவற்றை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு வெள்ளி கட்டணத்துக்குப் பதிலாக ஐந்து வெள்ளி மாதம் வசூலிக்கப்பட்டது என்பதும்  எம் நினைவில் உள்ளதாகும்.