செவ்வாய், 9 ஜூன், 2026

துருவாச முனிவர் பெயர்

 இவர் பெயரைச் சற்று சிந்திப்போம்.

இவர் மகாயோகி என்று போற்றப்படுபவர்.  விரதங்களின் மேன்மையை அடிப்படையிலிருந்தே நன்கு அறிந்து போற்றுபவர் அவரென்று இறைநூல்களிலிருந்து அறிகிறோம். துருவாச முனிவர் என்பதைத் தமிழால் பொருள் கூறவியலுமா என்பதைப் பார்ப்போம்.

இவர் பெயரைத் துரு(வுதல்) +  ஆசு + ( அ )  ;  முனிவர்.

நிகழ்வு,  வரலாறு,  இறைநிலை  ஆகியன நல்லபடி உணர்ந்தும்  துருவிப் பற்றுக்கோடு கண்டும், ஆனபடி நடப்பவர் என்ற அவர்பெயர்,   நல்ல காரணம் தருவதாக அமைந்துள்ளது.  ஆசு என்றால் ஆதாரம்,  சிறந்தவை கைக்கொள்ளுதல்  என்றெல்லாம் சொல்லலாம்.

ஆசு+ இரு+ இ + அர் >  ஆசிரியர் என்பது கற்கும் மாணவர்க்குப்  பக்கபலமாக இருப்பவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.  ஆசு+ ஆன் > ஆசான் என்பதும் ஏறத்தாழ அப்பொருளதே. ஆசி ( ஆசு+ இ)   ஒருவனின் வாழ்வில் நன்மை சென்று பற்றுக என்ற வாழ்த்துதலைத் தெரிவிப்பதாக இருக்கும்.  ஆக்கம் என்ற சொல்லும் ஆதல் என்பதன் அடியாகத் தோன்றிய சொல்லே ஆகும். ஆ என்பது வினைப்பகுதி.  சு என்பது விகுதி. முனிவர் என்ற பெயருடன் இணைய,  துருவாசு என்பது துருவாச என்று வந்தது,

முன்னரும் பாரதச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் தந்துள்ளோம்.  அவற்றையும் நோக்குக.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.














சனி, 6 ஜூன், 2026

ஆமைக்கு வந்த அருமையான பெயர்.

 தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை.  இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர்.  ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில்,  அஃது  ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார்.  இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.

ஏம் என்றால் பாதுகாப்பு.  அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர்,  சாடி என்று திரிந்தபின்,  ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.

எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம்.  ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும்.  இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம்.  இப்போது ஏமம்  சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.

ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில்,  ஒன்றுக்கு  மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில்,  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை  ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம்.  ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது,  மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள.  ஆனால் குறைவு ஆகும்.

இனி ஆமை.   ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும்  ஓர் உயிரி  ஆகும்.  ஆகையினால்,   அகத்து மெய் >  அகமெய் > ஆமெய்>  ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது  ஆயினும்,  இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.

சங்கு ஓட்டை அண்மி வாழ்வது.   அண்> சண்> சம்+கு> சங்கு  ஆகும்.  சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  சேர்ந்திருத்தலைக் குறிக்கும்.  தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம்.  பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

















புதன், 3 ஜூன், 2026

கந்தல் என்பதற்கு விளக்கம்

 கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.

கிழிந்த /  கழிந்த என்ற வினை எச்சங்கள்:

கிழிந்த >  கழிந்த + அல் (விகுதி) >  கழிந்தல்.

கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.

கழிந்தல் >  க(ழி)ந்தல்>  கந்தல்.

கந்தல் >  கந்தை.

கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது  வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர்.  ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே.  கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று.  கிழிதல்>  கழிதல்  என்றதில்,  ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும்  சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.

ஒப்பு நோக்குக:

ஆண்டு  > (ஆண்டுகொண்டிருப்பவன்)  எச்சவினை.

ஆண்டு >  ஆண்டவன்.

பண்டு என்பது கவனிக்கவும்:

பண்டு நம்மைக் காத்தவன்.

பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.

இதில்  பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.  

பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா.  வினைகளில் தரு என்பது  திரிபு பலவுடைத்து.

பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்

இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர். 

வேறுபாடு ஒனறுமில்லை.

கிழிந்தல் - கழிந்தல் :  கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது.  இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம்.   இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது.  இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது.  பழைய இடுகைகளில்  யாம் காட்டியிருப்போம்.  எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால்,  படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.  

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை