தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.
கிழங்கு என்ற சொல்லை ஆய்ந்தால், அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும். கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ) நெடிலில் தொடங்கினாலும், சொல்லாக்கத்தில் நெடிலான கீ, குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல.
கிழங்கு என்பது கீழ் என்பதிலிருந்து தோன்றியது போலவே, கிழமை என்ற சொல்லும் கீழ் என்பதிலிருந்து வருகிறது. கிழங்கு என்பது வேர். கிழவி கிழவன் என்போரும் குடும்பத்தின் வேர் போன்றவர்களே. செடியின் இலை, இணுக்கு என அனைத்தும் மண்ணுக்கு மேலிருப்பவை. இது மரம் கொடி அனைத்துக்கும் ஒக்கும். பிள்ளைகளும் பின் தோன்றல்களும் அப்படியே. வேரானது செடிக்கு உரிமை, உரிமையும் அவ்வாறே. இதனால் கிழமை என்பது உரிமை குறித்தது.
கிழவன், கிழவி என்போரும் உரிமையானவர்கள் என்றே பொருள்தரும். பிற்காலத்து இதை மறந்து, இச்சொற்களுக்கு முதியோன், முதியோள் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டன.
கிழத்தி என்பதும் உரிமை உடையாள் என்ற பொருள் உடைய சொல்லே. இல்லக் கிழத்தி, காதற்கிழத்தி என்று வருவனவுக்கும் அவ்வாறே பொருள் கொள்க.
வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளிக்கு உரிய நாள். இவ்வாறே பிறவும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
பகிர்வுரிமை.