ரகர ஒற்றுகள் மறையும் சொற்கள் பலவாகும். அவற்றில் சிலவற்றை எழுதி வெளியிட்டது நினைவில் உள்ளது.
பேச்சுத் தமிழில் இவ்வாறு மறைதல் மிகுதியாகும். வாருங்கள் என்பது அப்படியே பேச்சுத் தமிழில் வருவதில்லை. அது வாங்க ( வா(ரு)ங்க(ள்) ) என்று பிறையிட்ட எழுத்துக்கள் மறைதலைக் காணலாம். தாருங்கள் என்பதும் இவ்வாறே தாங்க என்று மாறிவிடுகிறது. வந்தார்கள் என்பதிலும் வந்தாக என்று திரிந்து, ர் என்பதுடன் ள் என்பதும் மறைவு எய்துதல் காணலாம். பேச்சு மொழியில் திரியாமல் வழங்கும் சொற்கள் சிலவே என்னலாம். இப்படிச் செய்தலின் மூலமாக, மிகுதியான உடல்வலிமையைத் தமிழர்கள் எட்டினர் என்று சொல்லத் தோன்றுகிறது. இது முயற்சிச்சிக்கனம்.
ஆனால் பார்வை என்ற சொல்லை இப்படித் திரித்துப் பேசுவதில்லை. கோவை என்ற சொல்லில், ஒரு ரகரத்தை வரவழைத்துப் பேசுவதைக் காணலாம். கோர்வை என்பது வழுவிய சொல் என்று சில நூல்கள் காட்டினாலும், அவற்றை படித்துப் போற்றுவோர் சிலரே ஆவர் கூடுதலாக ஓர் எழுத்தைச் சேர்ப்பது முயற்சியை மிகுத்தல் என்று நினைப்பதில்லை. அதாவது மூச்சுச் செலவு!
அவர் என்பது அவா, அவாள் என்று திரிவதைக் காணலாம். வகரம் நீண்டதுடன் ஒற்று ரகரத்துக்குப் பதில் ளகர ஒற்று வருதலையும் அறியலாம்
சோர்வு என்ற சொல்லில் ரகர ஒற்று உள்ளது. இச்சொல்லிலிருந்து சோகம் என்ற சொல்லை ஆக்குகையில், சோர்+கு+ அம் > சோர்கம்> சோகம் என்று வந்துவிடும். கு என்பது இங்கு இடைநிலையாய் நிற்கும். அம் விகுதி. ஆர்கலி என்ற சொல்லில் இவ்வாறு நிகழாது.
சீர்த்துவம் என்ற சொல், சீத்துவம் என்று ரகர ஒற்றை இழந்துவிடுகிறது. அதாவது சீரான தன்மை என்பது இது. இது பேச்சில் வரும் ''பாத்தா'' தெரியும் என்பது போன்றதே. பார்த்தால் என்பது இப்படித் தன் மெய்யை இழக்கிறது.
சீதனம் எனபது எப்படி?
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.