செவ்வாய், 23 ஜூன், 2026

சேதம் செது என்னும் அடிச்சொல்

 செது என்பது ஓர்  அடிச்சொல்.  தமிழில் உள்ளது. இழைத்தல் என்பது ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..

செதுக்குவது வேறு  இழைப்பது வேறு எனலாம்.

கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான்.   இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது.

கது > கதுவு > கதுவுதல்  ( வினைச்சொல்: கதுவு).

கது >  கதுவு >  கதவு.

ஒப்பு:

உது > உதவு  

உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.

மடை என்பது  மதகு   எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை,  அளவோடு நீரை வெளியேற்றுதல்.

இனிச் செது.   இந்த அடியிலிருந்து,   

செது >  செதுக்கு.

செது > செத+ அம் > சேதம்.  முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.

ஒப்பு:  சா+ அம் > சவம்,  இங்கு முதனிலை குறுகிற்று.   தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.

செது - ( செதும்பு )- செதும்பல்.   ( குழம்பிய மண்).

செதும்பல் தாமரை.

செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல்.  செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.

செதுகை என்றால் தீமை என்றும் பொருள்.  சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.

செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





சனி, 20 ஜூன், 2026

விமானம்தாங்கி (க் கப்பல்)

 வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்)  முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன.  இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.

மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் >  மனிதன்.  து என்பது அஃறிணை ஒருமை என்றாலும்,  பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில்  தல் என்பது  து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில்  து என்பது அஃறினை ஒருமை காட்டினால்,  தல் என்பதில் அது  வினைச்சொல் என்று குறிக்கவந்து,  தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு.  பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது.  பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக.  து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.

மான என்பது ஒரு உவமவுருபும்  ஆகும்.

மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

விழு+ மானம் >  விமானம்.  எல்லாம் தமிழ்தான்..   குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.

சம+ கதம் > சம+ கிருதம் >  சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி.  எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  1>

குறளை மனத்தில் இருத்துக.

சமம் > சமன் , இது  அறம் > அறன் போலும் திரிபு.

தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள.  And என்பது  அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான்.  தா என்ற சீனச்சொல்,  தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும்  தமிழ்ச்சொல்.  

வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையனவாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவார்.

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தியவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய்த் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை