சொல்லானது வாயிலிருந்து புறப்பட்டாலும், அது கேட்போனின் காதுகளில் சென்று அடைதல் வேண்டும். சொல் என்பது வு என்னும் விகுதி பெற்று, சொலவு என்றுமாகும். அது செவிகளைச் சென்றடைந்து பின்னரே அறியப்படுதலால், சொலவடை ( சொலவு + அடை) என்றும் வந்தது. இனிச் சொலவு என்பது, அம் விகுதி பெற்று, சுலவம் என்றும் வந்தது.
இதிலிருந்து, சுலவம்> ( சுலோவம்) > சுலோகம் என்று வந்ததில் ஏதும் வியப்பில்லை. வகரம் ககரத்துக்கு மாற்றீடாக வரும் சொற்களைத் திரிபுகளின் பட்டியலில் சென்று கண்டு இன்புறுக. சிலவற்றை யாம் பழைய இடுகைகளில் விவரித்துள்ளேம். வாய்ப்பேச்சிலும் இந்தத் திரிபு காணலாம். ஆகும் என்பதை ஆவும் என்போர் பலர். வேகாது > வேவாது!! நாக்கு என்ற சொல், நாவு என்று திரிதல் காணின், ககர வகரத் தொடர்பு எளிதில் புரியும். இதில் புரியவேண்டியது என்னெவென்றால் நாக்கு என்பது நாவ்வு என்று வருவதில்லை, நாவு என்றே வரவேண்டும். ஒற்றுக்கு ஒற்று வரவேண்டுமென்பதில்லை.
இதை, சொல் > சுல், சுல்+ ஓகம் > சுலோகம் என்றும் காட்டலாம். ஓகம் என்பது, ஓங்கு, இடைக்குறைந்து ஓகு, பின் ஓகு+ அம் > ஓகம் என்றாகி, சுல்+ஓகம்> சுலோகம் என்றுமாகும். ஆதலின், இது பல்பிறப்பிச் சொல் என்று உணர்க.
தமிழும் சமஸ்கிருதமும் உறவுடைய மொழிகள்..
திராவிட மொழிகள் என்ற பட்டியலில் சமஸ்கிருதத்தை விட்டு ஆய்ந்தது, ஒரு வகையில் பொருத்தமற்றது ஆகும்.
வெள்ளைக்காரர்கள் சமஸ்கிருதத்தை எடுத்து உறவாடிக்கொள்ள எண்ணியதையே இது காட்டுகிறது. கிருதம் என்பது கதம் என்பதன் திரிபு. கதம் என்பது கத்து> கது> கதம் என்று வந்த சொல். கது என்பது நீண்டு காது என்றும் வந்து சொல்லானது காண்க. கத்து> கது> கதை. வாயால் சொல்வது என்று பொருள். காதை, - சொல்லும் கதை.. பண்டை நாட்களில் இதைப் பாடினார்கள் ( இசையுடன்). சிலம்பு, மேகலை முதலிய இலக்கியங்களை இப்போது பாடுவதற்கு (வாயினால் பாட), வெட்கப் படுகிறார்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை