அலம் புரிதல் ( அலம்புரிதல்) என்றால் அதிகமாகச் செய்தல் என்று பொருள். முகத்தை நன்கு கழுவித் துடைத்தால் அதுவே அழகு செய்தல் தான். அத்துடன் அழகுமாவு அல்லது முகமாவு பூசினால், அது இன்னும் அதிகமாகச் செய்தல். ஒவ்வொரு முறையும் சற்று அதிகமாகத் தடவும்போது, மிகுதி செய்தல் ஆகிறது. அழகின் எல்லை விரிந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட எல்லை கடந்துவிட்டால், தேவைக்கு அதிகம் ஆகிவிடலாம். அப்போது அழகின்மை தோன்றவும் கூடும், அன்றி மிக்க அழகு தோன்றினும் தோன்றும். இதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அளவினைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அத்தொழிலில் இல்லாதவனுக்கு இது பற்றித் தெரிந்துகொண்டது ஓரெல்லைக்கு உட்பட்டிருக்கும். நமக்கே யாவும் தெரியும் என்று நினைப்பதும் தவறு ஆகிவிடக்கூடும்.
இயற்கை அழகு என்பது எல்லார்க்கும் இருப்பதில்லை. சிலர்க்கு அழகின்மை சிலவிடத்து இருத்தல் கூடும். அழகுக் கலைஞர்கள் அவ்விடத்தையும் அழகுடைத்தாக மாற்றியமைக்கும் திறன் பெற்றவர்கள். ஆளையே வேறு ஒருவராகக் காட்டவும் வல்லவர்கள். நசுங்கிவிட்ட உந்துவண்டியின் மேற்கூட்டினை எவ்விடத்துத் தட்டினால் முன்போல வந்துவிடும் என்ற அறிவை உடையவர்க்கு நல்ல சம்பளம் கிடைப்பதை அறிந்துகொள்வீர்.
ஆகவே அலம் என்ற சொல்லுக்கு அன்மை கடந்து மேலும் செய்தல் என்று பொருள் கூறுவது நன்றாகும்.
அல் - அழகு அன்மை.
கு - கூட்டிச் சேர்த்தல். இது வேற்றுமை உருபாகவும் பயன்பாடு காணும் சொல்.
ஆர்(தல்) - நிறைதல். நிறைத்தலுமாம்.
அமை(தல்): இது அம் என்ற விகுதியால் சுட்டப்படுகிறது.
அலம்+ கு+ ஆர் + அம் = அலங்காரம் ஆகிறது. இதன் பொருள்: அன்மை அல்லது அழகு அன்றான / அல்லதான ஒன்றை அதனோடு சேர்ப்பிக்கும் முறையினால் நிறைவு செய்து, அமைவுறுத்துதல்.
தமிழில், அலங்கரித்தல் என்பதும் அலங்காரித்தல் என்பதும் காணப்படுகின்றன. எனவே, அரு என்பதிலிருந்து தோன்றிய அரி, ஆரி என்ற இரண்டும் கொள்ளற்குரியன. இதை முன்னர் --கரித்தல் என்று பிரித்தனர். இது உண்மையில் கு+ அரித்தல் அல்லது கு+ ஆரித்தல் என்பனவின் பிறழ்பிரிப்பே ஆகும்.. கு என்பதன் உகரம் கெட்டது. கு என்ற பழஞ்சொல், கெ, கி என்றெல்லாம் கீழை மொழிகளில் வரும். சிலவற்றை இங்கு தவிர்க்கிறோம். கண்டுபிடித்துக் கொள்ளவும்.
அலம்+ கு+ ஆரம் என்றால் அழகு அல்லாதனவற்றுக்கு நிறைவு செய்தல் என்பது இங்கு கச்சிதமாக வருகிறது. அதுதான் அழகுறுத்துதல். இச்சொல் அலம்+கு+ அரண்+ அம் > அலங்கரணம் என்றுமாகும் என்பதுணர்க.
பழ > பல என்பதுபோல், அழ(கு) >அல என்றுமாவது கண்டுகொள்க. இதை இங்கு விரிக்கவில்லை. வேறு இடுகையில் இதை விளக்கலாம்.
புரியாதவிடத்து எழுதிக் கேட்கவும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக