வியாழன், 9 ஜூலை, 2026

பரிபூரணானந்தம். பெயரமைவு



இந்தச் சொல்லை அல்லது சொற்றொடரை இப்போது கவனிப்போம்.

இது இறைவனுக்கு ஒரு பெயராகத் தாயுமான சுவாமிகள் பயன்படுத்துகிறார். பரிந்து -  இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி,  எங்கும் புகுந்து, ஆவிக்கு மகிழ்வினைத் தந்துகொண்டிருப்பது இறைமை என்னும் உடனறிந்திட இயல்பாக இயலாத நன்றான ஒன்றுதான் ''பரிபூரணானந்தம்'' .

''பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே'' என்ற பாடல் தொடரில் இது வருகின்றது.

பரிதல் என்ற சொல்லுக்கு கதிர்வேலுப்பிள்ளை எல்லாப் பொருள்களையும் விரித்துத் தருகிறார். இவற்றைச் சுருக்கமாக:

பரிதல் - அறுத்தல், அன்பு,  அன்போடு பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல்.

என்று சுருங்கச் சொல்லலாம். பரிதல் என்ற சொல், அதன் முன்வடிவில் பருத்தல் என்றிருந்தது. பரு> பரி. பருத்தது எல்லை கடப்பின் அறுபடும்; ஆகையால் அறுத்தல், அப்புறம் ஒடித்தல், ஒடிபட்டபின் இன்னொன்றுடன் இணைந்து நடத்தல், காதுதல் இன்ன பிறவும் அறிக

மனவுணர்வு கலந்து நடைபெறுதலும் இவற்றுள் வரும்.

புகு(தல்) என்பது பேச்சில் பூர்தல் என்றும் வரும். இதன் எச்சம் பூந்து என்று பேச்சில் வருவதுண்டு. இதைப் புகுந்து என்பதன் திரிபாகவும் கருதற்கு இடனுண்டு. புகு> பூர்> பூரணம் என்பதே இச்சொல்லின் அமைவு. சங்கதத்தில் (சமஸ்கிருதத்தில்) பூரணம் என்ற சொல் இருப்பின் இது தமிழ்த் திரிபுதான். பூர்தல் pūrtal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1065)
பூர்தல் - நிறைதல். என்பதும் கூறப்படுகிறது.

ஆக நன்று அம் > ஆ+ நன் + து + அம் > ஆனந்தமானது காணலாம்.

வினைச்சொற்கள் எங்கு இருக்கின்றனவோ. அந்த மொழிக்குரியவை சொற்கள்.  இங்கு சொற்கள் ஆவன:  பரிதல், பூர்தல், ஆதல், நன்று, அமைதல் என்பவை.

இவற்றைக் கூட்டிப் பொருளுரைத்துக்கொள்க.

சமஸ்கிருதம் என்பது சம + கதம். கதம் - ஒலி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 6 ஜூலை, 2026

இடைக்குறை இல்லாத மொழியா தமிழ்?

 இடைக்குறைகள், குறுக்கங்கள்  முதலியன இல்லாத மொழி தமிழ் என்று எவனாவது சொன்னால் அவனுக்குப் புகட்ட என்ன செய்வீர்?

பத்து    இது முழுச்சொல்.

ஆனால் ஒன்பது? 

ஒன் என்பது ஒன்று  என்பதன்  கடை எழுத்தில் வெட்டு.

இதைக் கடைக்குறை என்று சொல்வோம்.

அடுத்தது: பத்து என்பது பது என்றன்றோ வருகிறது.

இது ஓர் இடைக்குறைச் சொல்தான்.  ஒன்று பத்து >  ஒன்+ பது > ஒன்பது.


அடுத்து,  பன்னிரண்டு என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் சொல்லலாம்.

பத்து+ இன் >  பத்தின்>  பதின்> பன்+ இரண்டு >  பன்னிரண்டு..

பத்தொன்பது என்ற சொல் எப்படி வருகிறது.

கண்ணை மூடிக்கொண்டு படிப்பவர்கள்தாம்  அதிகம்.

அப்படியாவது படித்தால் நன்மைதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.


வியாழன், 2 ஜூலை, 2026

சுவர் என்றது

 சுவர் என்பது எவ்வாறு வந்தது -   தமிழில்?

இதைச் சுருக்கமாக,  சுற்றிலும் இருப்பது என்று சொல்லிவிடலாம்.    சுற்றிலும் என்பது ,  சு என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.  இங்கு இருப்பது என்பதை இரண்டாவது பகவாக எடுத்துக்கொண்டால்,  இ  என்ற எழுத்தைப் போட்டு விளக்கலாம்.  சு+ இரு>  சு+ வ்+ இரு>   சுவிரு என்று வந்து .  சுவரு என்று திரிந்ததாகக் கொள்ளலாம் என்றாலும்,   இரு என்னாமல்  வரு என்று எடுத்துக்கொள்வதே இயல்பானதாகும்.   சு+ வரு >  சுவரு என் க.   வரு என்பது பேச்சுக்குச் சரியாகலாம் என்றாலும்,  வர் என்று குறுக்கியே இணைத்தால், அதிக விளக்கம் இன்றி முடித்துக்கொள்ளலாம்.   அரசுக்கு வருகின்ற வசூல் பணம்,    வரு என்பதினின்றே குறுகி,  வர்> வரி என்றே ஆக்கமுறும் சொல்.  சு+ வர் என்பதும் இவ்வாறே  '' சுற்றி வரும் அடைப்புத்தடுப்பு''  என்று  ஆகிறது. இதிலிருந்து சு+வர் >  சுற்றிவரும் வீட்டின் அடைதடுப்பு  என்று சுருக்கி முடிக்க.

வர் என்பதே மூலச்சொல்.  (வர்)> வரு>வந்(தான்)>வா    என்பவற்றுக்கெல்லாம்  முன்னது மூலம். இம்மூலத்தினின்று  வருடம் --இன்னும் பல உருவாகியுள்ளன. எம் பட்டியலில் தேடிக் காண்க.

இந்த உண்மையை,  எந்த நூலையும் பார்த்துத் தெரிந்துகொள்ளாமல் நாம் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.

சு+வர் என்னாமல் சு+ வம் என்றாலும் சரிதான்.   வரு என்ற சொல், வம் என்றும் திரியும்.   '' வம்மினோ''  என்றால்  வருமினோ என்று சொல்வதே  ஆகும். ''வம்மின் மக்காள்''  என்பது இவ்வாறும் திரியும் என்பது அறிந்துகொள்ள,  பழந்தமிழ் அறிந்திருக்கவேண்டும். பழந்தமிழ் உரையாசிரியர்களின் எழுத்துக்களையும் வாசித்து அறிந்திருக்கவேண்டும்.  இற்றை நாட்களில் இதை அறிந்தோர் சிலரே ஆவர்.

சுவரைச் செவர் என்ற பேச்சுத் தமிழ்  பொருந்தாது.   அது வெறுந்திரிபுதான். முதலெழுத்துக்களை வைத்தே ஒருவாறு சொல்லைப் படைத்துவிடலாம் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

செவ்வாய், 30 ஜூன், 2026

வெண்சாந்துக்கு வேறுபெயர் ''தான்-தோன்றி'' யானது அன்று

 சாந்து என்ற நீர்ப்பூச்சு போன்ற பொருள்,   வெண்மையாக இருக்குங்கால்,  அதை வெண்சாந்து என்று பெயரிட்டு அழைப்பது ஒரு திறமான செயல் என்றே ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் மனித சமுதாயத்தினர்  அல்லது குமுக உறுப்பினர்கள் எப்போதுமே இவ்வாறு வெளிப்படையாக நடந்துகொள்ள முடிவதில்லை.  சிலவேளைகளில் சிலவற்றை வெளிப்படைத்தன்மை குறைந்துச் சொல்வது எல்லா இனக்குழுவினரிடத்தும் காணப்பெறும் ஒரு பொது நடப்புத் தன்மை என்று கூறவேண்டும். அவற்றுள்ளும் அச்சாந்து போல்வன மனித உடலுள் இருந்தே வெளிப்பட்டிருந்தால்,   உடற்கழிவுக்கும் அதற்கும் வேறுபாடு குறுக்கமாகிவிடுகிறது.

வெண்சாந்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடு குறைந்துவிடுகிறது.  வெண்சாந்து உடலிற் பிறந்திட்ட பின் வெளிப்பட்டிருந்தால்,  அதில் காணும் வெண்நிறத்தை மறைத்துச் சொல்லி,  இடக்கர் அடக்கலாக்கி விடுதலே சிறப்பு ஆகும்.   வெண்து  என்பதை,  விண்து என்று திரித்தபின்,  விந்து என்று மாற்றுதலே சிறப்பு ஆகும்.  இத்தகு முறைகள், சொல்லாக்கத்திற் கடைப்பிடிக்கப்பட்டன.

சாந்து என்பது  (சுவர் முதலிய)   வீட்டின் சுவர்களைச் சார்ந்திருப்பனவே என்பதும் அதன் காரணமாக பெயர் பெற்றவை என்பதும் தெளிவே  எனினும், அதைச் சார்>  சா>  சாந்து என்று ரகர ஒற்றை ஒளித்து அமைத்தது ஒரு சிறப்பு ஆகுமென்க.  இஃதுபோலவே  வெண் என்பது மறைந்து  விண் என்ற மற்றொரு வெண்மைவெளித் தன்மை வெளிப்பட்டதும்   சிறப்பே என்று கூறிச்செல்க.   சொல்லாய்வில் இவை தற்செயலாக வெளிப்ப்பட்டவை என்று எண்ணுவது ஆய்வின்மை என்றே  முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்மை

பகிர்வுரிமை



ilavakam இலாவகம்

 ஒன்றைச் செய்ய விழைந்தவன்,   அவ் விழைந்த செயலின்பால் மனத்தைச் செலுத்தாமலும்,  உடல்முயற்சி செய்யமலும் அக்காரியத்தை  செய்து முடிப்பனாயின்  அவன் அதனை இலாவகமாகச் செய்து முடித்தான் எனல் சரியாகும்.

இப்படிச் செய்து முடித்தால்,  ( மனமுயற்சியும் செயல்முயற்சியும் இல்லாமல்  முடிப்பீரானால் ),  உண்மையில் அதைத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

எளிதாக்கம்,  நுணுக்கம் காட்டுதல், சாதுரியமாகச் செய்தல், சீருடன் முடித்தல் என்று பலவாறும் கூறலாம்.

இனிச் சொல்லைப் பார்ப்போம்.

இலா+ அகம் >  இலாவகம்.

உள்ளிருந்து வெளிவந்து   செயலைச் செய்ய உதவுவது:  மனத் திட்பம் மட்டுமன்றி, உடலின் கைகளின் ஆற்றல் முதலியவையும் தாம்.   மனவலிமை மட்டுமின்றி உடல்வல்லமையையும் இது உளப்படுத்தும் என்பதறிக.

இற்றை நிலையில் செயலகத்தில் பணி செயவதில் திறமையானவர், வெளியிடங்களிலும் அவ்வாறு திறமை காட்டினால் அவர் செயலும் இலாவகம் என்று கொள்ளப்படுதல் கூடும்.  செயலகம் இல்லாதவிடத்தும் மனத்திட்பத்துடன் பணிபுரிவது.

(1) இலகுவாக, (2) இலாகுவாக என்றும் வழங்குவதாகத் தெரியும் சொல் இது.

இல் என்பதும் இலா என்பதும் ஒன்றுதான். இல் அகு, இலா அகு, இலா அகு அம், இவை ஒன்றுதாம்.  சுருக்கி எழுதவும் விரித்து எழுதவும் இயலும் மொழி தமிழ்.  இது ஒரு வசதி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


சனி, 27 ஜூன், 2026

நபர் என்னும் சொல் ( நண்பர் இடைக்குறை)

நண்பர் என்ற சொல்லை ஒரு சீனர், மலாய்க்காரர், இந்தோனேஷியர், வெள்ளைக்காரர் ஆகியோரிடம் சொல்லிக்கொடுத்து,  உச்சரிக்கச் செய்தால் அதைச் சரியாக வெளிப்படுத்த அவர்களால் இயல்வதில்லை. இதைப் போலவே நம்மில் பலருக்கு, பிறமொழியில் பல சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதனால் தமிழ்ச்சொற்கள் வேற்று மொழிக்காரர்களால் கையாளப்படும்போது வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.  இது எந்த மொழிச்சொல் என்ற கேள்வி வரும்போது, பதிலைத் தருகிறோம்.

ஒரு சொல் எந்த மொழிக்கும் சொந்த மாக இருக்கும்;  பிறமொழிச் சொற்களைக்   கற்று,  எவ்வெச் சொற்கள் எவ்வாறு  திரிகின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லலாம்.  அவ்  இருப்பினால் மட்டும் அந்தச் சொல்லுக்கென்று எந்த தகுதிமேம்பாடும் ஏற்படுவதில்லை. உச்சரிப்பினால்மட்டும் ஒரு சொல்லுக்கு  நிலையுயர்வு உண்டாகு மென்பது ஒரு வெற்றுக்கற்பனை.   பிறழ் பலுக்கினால் (தடுமாறி உச்சரித்தால்) சொல் புரியாமற் போய்விடும் இடர் உள்ளது என்பது மட்டுமே   உண்மை ஆகும்.

நீங்கள் உங்கள் கருத்தை இங்குப் பதிவிடலாம். இவ்வுரிமை யார்க்கும் உள்ளதே ஆகும்.   இதனை நாம் மதிப்போம்.   ஆனால் பின்னர் உண்மை இது என்றும் சொல்லவேண்டும். நீங்களும் இங்கு இதைச் சொல்லலாம்.

நண்பர் என்பது தமிழில் வழங்கிய சொல்.  இதை தமிழரல்லாதார் சொல்லும்போது,  நண் என்பதைச் சொல்வதற்கு இடர்ப்படுவர்.  அதனால் ண் என்பதை விடுத்து, நபர் என்றுதான் சொல்வர். ண் அப்படியே வந்தாலும் அரைகுறையாக வெளிப்படும்.  இப்படிப் பிறர்க்கு தொந்தரவு கொடுப்பதினும் நபர் என்று நாமும் சொல்லி அவர்களுடன் இணைந்துவிடுவது சிறப்பு   ஆகும்.  உங்கள் தமிழ் நாவிற்காக மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமை நன்று.  அப்படி வந்தது தான் நபர்,   பின்னர் நபர் வேறு, நண்பர் வேறு என்று எண்ணிவிட்டனர்.

நபர் என்ற அதை ஒலித்ததனால் இன்னொரு சொல் கிடைத்துள்ளது என்று மகிழ்வு கொள்ளவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

28.06.2029 திருத்தம்.

பகிர்வுரிமை 











ர்ர

செவ்வாய், 23 ஜூன், 2026

சேதம் செது என்னும் அடிச்சொல்

 செது என்பது ஓர்  அடிச்சொல்.  தமிழில் உள்ளது. இழைத்தல் என்பதுp ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..

செதுக்குவது வேறு  இழைப்பது வேறு எனலாம்.

கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான்.   இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது. பழங்காலக் கதவுகள் செதுக்கிச் சேர்க்கப்பட்டவை.  இப்போது நெகிழிக் (plastic) கதவுகள் ஒரே வார்ப்பாக உள்ளன, இணைக்கப்பட்டவையும் உள,

கது > கதுவு > கதுவுதல்  ( வினைச்சொல்: கதுவு).

கது >  கதுவு >  கதவு.

ஒப்பு:

உது > உதவு  

உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.

மடை என்பது  மதகு   எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை,  அளவோடு நீரை வெளியேற்றுதல்.

இனிச் செது.   இந்த அடியிலிருந்து,   

செது >  செதுக்கு.

செது > செத+ அம் > சேதம்.  முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.

ஒப்பு:  சா+ அம் > சவம்,  இங்கு முதனிலை குறுகிற்று.   தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.

செது - ( செதும்பு )- செதும்பல்.   ( குழம்பிய மண்).

செதும்பல் தாமரை.

செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல்.  செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.

செதுகை என்றால் தீமை என்றும் பொருள்.  சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.

செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





சனி, 20 ஜூன், 2026

விமானம்தாங்கி (க் கப்பல்)

 வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்)  முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன.  இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.

மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் >  மனிதன்.  து என்பது அஃறிணை ஒருமை என்றாலும்,  பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில்  தல் என்பது  து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில்  து என்பது அஃறினை ஒருமை காட்டினால்,  தல் என்பதில் அது  வினைச்சொல் என்று குறிக்கவந்து,  தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு.  பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது.  பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக.  து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.

மான என்பது ஒரு உவமவுருபும்  ஆகும்.

மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

விழு+ மானம் >  விமானம்.  எல்லாம் தமிழ்தான்..   குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.

சம+ கதம் > சம+ கிருதம் >  சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி.  எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  1>

குறளை மனத்தில் இருத்துக.

சமம் > சமன் , இது  அறம் > அறன் போலும் திரிபு.

தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள.  And என்பது  அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான்.  தா என்ற சீனச்சொல்,  தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும்  தமிழ்ச்சொல்.  

வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையனவாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவார்.

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தியவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய்த் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 15 ஜூன், 2026

சீக்கிரம்

 இச்சொல்லை இன்று அறிவோம்.

முன்னர் வெளியிட்டது இதுவாகும்:

https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_72.html

முன் எழுதியது இவ்வாறாயினும்,  அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் ஒரு சொல்லுக்கு எழுதினால் குழப்பம் உண்டாகுமென்பதனால்,  ஒன்றே வெளியிட்டோம்.  சில சொற்கள் உண்மையில் பலபிறப்பிகளாக இருப்பனவாதலால்,  யாம் சிறந்தது என்று கருதும் இன்னொரு கருத்தையும் இன்று வெளியிடுகிறோம்.

இது சீர்க்கு + இறும் >  சீர்க்கிறும் >  சீக்கிறம் என்றாகி,  சீக்கிரம்  என்பதாகும்.

இச்சொல்லில் ரகர ஒற்று மறைந்தது.

இன்னொரு சொல்லமைப்பில் புகுந்த காலை,  றகர மாவது,  ரகரம்  ஆகிவிடும்.

இத்தகைய திரிபு பல சொல்லாக்கங்களில் வந்துள்ளது.  அதை வேறு சில இடுகைகளில் யாம் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  கண்டு தெளிக.

சீர்க்கு இறும் என்னில்,   சீரை அடைந்து முடியும் என்பதுதான்.  இதில் வரும் இறும் என்ற சொல்  முடியும் என்ற வினைமுற்று.  இங்கு இது  புதிய சொல்லின் இறுதிப் பகவாக வருகிறது.  பகவு என்றால் சொல்லமைப்பின்  இன்னொரு பகுதி என்ற பொருளில் எழுதுகிறோம் என்பதறிக.

இரும்> இரம் என்று திரிவதாகக் காட்டினும்,  இருக்கும் என்ற பொருளில் சரியாகவே வரும் என்பதறிக.

முன் செய்த ஆய்வில், கிறங்குதல் என்ற வினைச்சொல் கவனம் பெற்றது.  சீர்க் + கிறம் -->  என்றால்,  சீரான எதிர்பார்ப்புக்குரிய வேகத்துடன் முடித்திடு என்பதே பொருள். முன் இடுகையில் நோக்கி அறிக. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வு




வியாழன், 11 ஜூன், 2026

பிரபலம் திரிபுச்சொல்.

 இன்று பிரபலம் என்ற திரிபுச்சொல்லைக் காண்போம்.. இதைத் திரிசொல் என்று சொன்னாலும், திரிபுச்சொல் என்றாலும் பொருள் ஒன்றுதான்.

சிலர் தம் குடுப்பத்திலே நன்கு மதிக்கப்பட்டு, சிறப்புடன் வாழ்வர்.  வெளியாரில் பலரும் இத்தகையோரை அறிந்திருப்பர்.  பலர் அகத்தும் புறத்தும் மிக்க அரிய புகழை அடைந்து,  நாடறிந்த நல்லவராக இருப்பர்.  இவரை மிக்கப் பிரபலமானவர் என்று சொல்வர்.

அறிமுக நிலை மிக்க விரிவடைந்து,  மிக்கப் பகழுடன் இருத்தலே பிரபலம்  என்பதறிந்தோம்.   இத்தகையோரின் பின்பு, பெருந்திரளாக மக்கள் இருப்பர். இந்தச் சொல்லும் நம் ஆய்வில் தமிழே  ஆகும்.   'பிறர்' , 'பலர்' என்ற சொற்களின் அடிப்படையில் அமைந்ததே இது.

'பிறர்' + 'பலர்' >  பிரபலம்.

குடும்பத்திலிருந்தோர் இருப்போர் மட்டுமின்றிப்  பிறர் பலரும் அறிந்த  நபர் என்று வரையறை செய்யவேண்டும்.

திரிசொற்களை அவை தமிழ் மூலமுடையன வாயினும்  சமஸ்கிருதம் என்று வகைப்படுத்தியது சரியென்றே சொல்க.  இதற்குக் காரணம் திரிசொற்கள் சமஸ்கிருத்திலிருந்தால் அதைத் தமிழ்ப்புலவர் எவரும் இலக்கணம் பேசி மறுக்கமாட்டார்,  தொல்லையும் குறைந்தது .  பாணினி  என்ற பாணர், இதற்குத் தனியாக இலக்கணம் வகுத்துவிட்டதால், அந்தத் தொல்லை ஒழிந்தது. தமிழ்ச் சொல்லமைப்பில்,  ஆதியில் எவ்வாறு தமிழ் வளர்ந்திருந்தாலும், அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோருக்குப் பின்வந்த காலத்தில்,  தமிழறிவு மேம்பட்டமையினால் இலக்கம் எழுதியோரும் பேசியோரும்  கவிதைப் புலமையைக் கொண்டு, சரிதவறு சொல்வோர் கூட்டம் விரிந்துவிட்டது.  இவர்களிடம்  இரண்டும் இருகண்கள் என்றோ, சமஸ்கிருதமே முந்தியது  என்றோ சொல்லிவிட்டால் வாய்மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். வடக்கே  தோன்றிய முந்தைய மொழி என்று சொல்வதை வாதம் செய்ய இவர்கள் போன்று கேட்போர் சொல்லாய்வு நிபுணர்களா என்ன?

உண்மையில் இவ்வாறு சொல்வதிலும்  உண்மை உள்ளது.  உங்கள் வீட்டுச் சட்டியில் பழைய  மற்றும் ஓரளவே பழகிய சட்டி பழம்பெருமை உடையதா,  போனவாரம் வாங்கியது பழம்பெருமை உடையதா என்றால்  பழம் பெருமை உடையது பழையதே ஆகும்.    ஆனால் சொற்களில் இது எளிதில் அறியத் தக்கதாய் இல்லை.  எது திரிசொல், எது இயற்சொல் என்பது சாதாரணப் பண்டிதனுக்குத் தெரிவதில்லை.  அவன் சில பட்டங்கள் பெற்றிருந்தாலும் தெரிவதில்லை. எப்படியாயினும், சொற்களைப் பயன்படுத்திப் பொருளை அறிவிப்பதுதான் பேசுவதன் நோக்கம்.

தொல்காப்பியம் நூற்பா சொல் 394:

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா

தெரியவேண்டுமே!

மொழியைப் பயன்படுத்துகையில் சில கலந்து பேசினாலும் மரணம் ஏற்பட்டுவிடாது.  

ஆனால் கவிதை, உரைநடை ஆகியவற்றைக் கையாளும்போது,  கவனமாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.

ஆனால் தமிழும் சமஸ்கிருதமும் மிகப் பழையவை. ஒரு திரிசொல், திரிவதற்குப் பலகாலம் ஆகவேண்டும். இயற்சொற்கள் திரிந்துதான் திரிசொற்கள் உண்டாகின்றன.  ஒன்று இயற்சொல்லாய் இருந்து பின்னர்தான் திரிகிறது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  12.06.2026

























செவ்வாய், 9 ஜூன், 2026

துருவாச முனிவர் பெயர்

 இவர் பெயரைச் சற்று சிந்திப்போம்.

இவர் மகாயோகி என்று போற்றப்படுபவர்.  விரதங்களின் மேன்மையை அடிப்படையிலிருந்தே நன்கு அறிந்து போற்றுபவர் அவரென்று இறைநூல்களிலிருந்து அறிகிறோம். துருவாச முனிவர் என்பதைத் தமிழால் பொருள் கூறவியலுமா என்பதைப் பார்ப்போம்.

இவர் பெயரைத் துரு(வுதல்) +  ஆசு + ( அ )  ;  முனிவர்.

நிகழ்வு,  வரலாறு,  இறைநிலை  ஆகியன நல்லபடி உணர்ந்தும்  துருவிப் பற்றுக்கோடு கண்டும், ஆனபடி நடப்பவர் என்ற அவர்பெயர்,   நல்ல காரணம் தருவதாக அமைந்துள்ளது.  ஆசு என்றால் ஆதாரம்,  சிறந்தவை கைக்கொள்ளுதல்  என்றெல்லாம் சொல்லலாம்.

ஆசு+ இரு+ இ + அர் >  ஆசிரியர் என்பது கற்கும் மாணவர்க்குப்  பக்கபலமாக இருப்பவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.  ஆசு+ ஆன் > ஆசான் என்பதும் ஏறத்தாழ அப்பொருளதே. ஆசி ( ஆசு+ இ)   ஒருவனின் வாழ்வில் நன்மை சென்று பற்றுக என்ற வாழ்த்துதலைத் தெரிவிப்பதாக இருக்கும்.  ஆக்கம் என்ற சொல்லும் ஆதல் என்பதன் அடியாகத் தோன்றிய சொல்லே ஆகும். ஆ என்பது வினைப்பகுதி.  சு என்பது விகுதி. முனிவர் என்ற பெயருடன் இணைய,  துருவாசு என்பது துருவாச என்று வந்தது,

முன்னரும் பாரதச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் தந்துள்ளோம்.  அவற்றையும் நோக்குக.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.














சனி, 6 ஜூன், 2026

ஆமைக்கு வந்த அருமையான பெயர்.

 தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை.  இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர்.  ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில்,  அஃது  ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார்.  இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.

ஏம் என்றால் பாதுகாப்பு.  அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர்,  சாடி என்று திரிந்தபின்,  ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.

எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம்.  ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும்.  இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம்.  இப்போது ஏமம்  சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.

ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில்,  ஒன்றுக்கு  மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில்,  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை  ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம்.  ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது,  மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள.  ஆனால் குறைவு ஆகும்.

இனி ஆமை.   ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும்  ஓர் உயிரி  ஆகும்.  ஆகையினால்,   அகத்து மெய் >  அகமெய் > ஆமெய்>  ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது  ஆயினும்,  இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.

சங்கு ஓட்டை அண்மி வாழ்வது.   அண்> சண்> சம்+கு> சங்கு  ஆகும்.  சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  சேர்ந்திருத்தலைக் குறிக்கும்.  தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம்.  பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

















புதன், 3 ஜூன், 2026

கந்தல் என்பதற்கு விளக்கம்

 கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.

கிழிந்த /  கழிந்த என்ற வினை எச்சங்கள்:

கிழிந்த >  கழிந்த + அல் (விகுதி) >  கழிந்தல்.

கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.

கழிந்தல் >  க(ழி)ந்தல்>  கந்தல்.

கந்தல் >  கந்தை.

கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது  வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர்.  ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே.  கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று.  கிழிதல்>  கழிதல்  என்றதில்,  ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும்  சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.

ஒப்பு நோக்குக:

ஆண்டு  > (ஆண்டுகொண்டிருப்பவன்)  எச்சவினை.

ஆண்டு >  ஆண்டவன்.

பண்டு என்பது கவனிக்கவும்:

பண்டு நம்மைக் காத்தவன்.

பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.

இதில்  பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.  

பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா.  வினைகளில் தரு என்பது  திரிபு பலவுடைத்து.

பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்

இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர். 

வேறுபாடு ஒனறுமில்லை.

கிழிந்தல் - கழிந்தல் :  கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது.  இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம்.   இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது.  இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது.  பழைய இடுகைகளில்  யாம் காட்டியிருப்போம்.  எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால்,  படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.  

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



சனி, 30 மே, 2026

ஜனாதிபதி

 மக்கள் தலைவர்,   (குடியரசுத் தலைவர்) என்னும் பொருளில் ''ஜனாதிபதி'' என்ற சொல் இப்போது வழங்கி வருகிறது. இதில் சிலருக்கு  மறுப்பு இயல்வதற்குக் காரணம், குடி என்ற சொல் மக்களையும்  குடிபானத்தையும் குறித்தலாகும். குடிமகன் என்ற சொல் குடித்துத் திரிகிறவனைக் குறிக்கிறது என்பது இன்னொரு தொடர்புடைய மறுப்பாகும். சனாதிபதி என்ற வடவெழுத்து நீங்கிய சொல் பலருக்குப் பிடிக்கவில்லை.

மனிதனிறந்த பின்பு,  அவனது உயிர்,  மீண்டும் இன்னோர் உடலில் புகுந்து மறுபிறவி உண்டாகின்றது என்ற கருத்தின் காரணமாக,  சா(தல்)> ஜா> ஜன்> ஜனி என்று ஒரு சொல் உண்டாகி,  அதுவே பிறத்தல் என்ற பொருளுடைய சொல் (ஜனித்தல்)  ஏற்படக் காரணமானது என்ற கருத்து,  புலவர் சிலரிடைத் தோன்றலானது என்று எழுதப்படாத கருத்தாக ஆசிரியரிடையே வழங்கி வந்தது என்று அறிகிறோம்.

இதன் மூலம், ஜனி(த்தல்) என்ற சொல் பின்னர் உண்டாகி பிறப்பு  குறிப்பதாக‌ இனறு உணரப்படுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. கருவினுள் பின்னர் உயிர் செல்கிறது என்பதால்,  செல்> செல்நீ>  செனி> செனித்தல் > ஜெனித்தல் என்று சொல் உண்டானது என்றும்  பொருந்துகிற இன்னொரு கருத்து உள்ளது.  பழம்நீ என்ற முருகனின் பெயர் பழனி என்று சுருங்கி அமைந்தது போலும் ஓர் ஒப்புமையே இதுவாகும்.  வயல்களின் நடுவில் உள்ள குளம்,  நீரினால் வயல்களைக் கழுவிச் செழுமை அடையச் செய்கிறது  என்ற கருத்தால்,   கழுநீர்> கழனி என்ற சொல் சரியாகிறது.  தமிழாயினும் எந்த வேறு மொழியாயினும், இலட்சக் கணக்கான சொற்களுடன் உடனே உண்டாகிவிடவில்லை.   கழிபல வூழிகளாக வளர்ந்துதான் மொழிகள் நம்மிடையே வந்து எட்டியுள்ளன. மொழிநூல் (philology) (கருத்தும்) அதுவே ஆகும்.

ஆகவே இச்சொல்  ( ஜெனி, ஜனி)  ஒரு பல்பிறப்பிச் சொல் ஆகும். இதற்கு வேறு மூலங்களும் கூறப்படுதல் உண்டு.  சமஸ்கிருதம் என்பது தமிழுடன் வழங்கி வளர்ந்த இணைமொழி ஆகும். இரண்டு மொழிகளிலும் ஒன்றை மற்றொன்று வளப்படுத்திய சொற்கள் பல.

சமஸ்கிருதம்  (  சம + கதம் >  சம+ கிருதம் > சம ஸ் கிருதம்  [ ஸ் என்பது இந்த இரண்டு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி,  க் என்ற வல்லெழுத்து வராமல் மென்மையாக்கி, ஒருசொன்னீர்மையை உண்டாக்கி இணைப்புறுத்துகிறது என்று அறிக.  ]  > சமஸ்கிருதம்  என்ற சொல் பிறந்தது.  சமஸ்கிருதப் புணரியல்  ( சந்தி இலக்கணம் ) வேறு சொல்லிணைப்புக் கூறினாலும் யாம் கூறும் காரணத்துக்காகவே  ஸ் என்ற ஒலி எழுகிறது.  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் இதற்குக் கூறும் முறையை யாம் இங்கு கூறவில்லை.  அதனை அவர்தம் நூலில் கண்டு தெளிக.   பாணினி என்பவர் வட இந்தியாவில் சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த இலக்கணம் இயற்றிய ஒரு பாணர் வழிவந்த பெரும் புலவர்  ஆவார்.  பாணர் என்பது குடிப்பெயர்.   இது வள்ளுவர், காப்பியர் ( தொல் காப்பியர்) என்பன போலும் குடிப்பெயர்.

குத்துச் சண்டை வகைக்குக் குஸ்தி என்று பெயர்.    குத்து> குத்தி > குஸ்தி என்று சொல் மென்மைப்பட்டது.  விரி தருதல் > விரிதாரம் (விரிவாக அமைவது),  >  விஸ்தாரம் என்று திரிந்தது  சம ஒலிச்சொல்.  அதாவது சமஸ்+ கிருதம்.    கிருதம் என்பது,  கத்து (ஒலித்தல்), >  கத்து > கது  (இடைக்குறை)> கது+ அம் > கதம்> கிருதம்.  சமஸ் கிருதம் என்றால் சம ஒலி  உடைய மொழி.  தமிழுக்குச் சமமான ஒலிகளை உடைய மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது பிற்காலத்து வெள்ளையன் தந்த பாகுபாட்டு மொழியியல். கத்து என்பதே, தமிழிலும் கத்து> கது> (நீண்டு) காது என்று வந்து செவி என்று பொருள்படும்.  அறிக.

தேவநேயப் பாவாணரும் பல தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்திலும் ; இதற்கு எதிர்மாறு செய்யும் வளர்ச்சிகளும் இருமொழிகளிலும்,  இருப்பன என்பதையும் கண்டு,  எழுதியுள்ளார்.  ( முதல் தாய்மொழி என்னும் நூல்).  ஆனால் சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது ஆரியன் மொழி என்பது சரியான கருத்து அன்று.  அதை வெள்ளைக்காரன் மேற்கொண்டு தம் ஐரோப்பிய மொழிகளை வளப்படுத்திக் கொண்டான். தேவைக்கு ஏற்ப எதையும் பயன்படுத்திக்கொள்வது உலக வரலாற்றில் ஒன்றும் புதிது அன்று.  நாடு, மொழி எதுவும் பிறர் மேற்கொள்ளக் கூடியதுதான். கணவன், மனைவி உட்பட எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வது கடமை  ஆகும்.

ஜனம் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறுதான் முளைத்தது.  அதிபதி என்பதும் தமிழ்தான்.  இதை இடுகை இன்னொன்றில் கூறுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை










 

வியாழன், 28 மே, 2026

விருத்தி என்பது.

 விருத்தி என்பதன் சொல்வரவியல். இப்போது சொன்னூல், சொல்லமைப்பியல், என்று பலவகையில் கூறலாம்.  தமிழில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை.

விர் என்பது அடிச்சொல்.

விர்+ உ.   உ என்ற அடிச்சொல் முன்னிடத்தில் விரிதல் என்று பொருள்.  உ > உம்> உன்> உங்கள் என்பனவெல்லாம் முன்னிடத்தில் உள்ளோரையே குறிக்கிறது. படிக்காதவராக  ஒருவர் இருந்தாலும்,  இவை யெல்லாம் முன்னிடத்து உள்ளவரைக் குறிப்பதால்,  விர்+உ என்பதிலும் அதுவே பொருள் என்று கூறிவிடுவார்.

விர்+ இ .  இ என்பது இங்கு என்று பொருள்தருவதால்,  இங்கு விரிதல் என்பதன் இதன் பொருள் என்று அறிந்து கொள்ள அவ்வளவு இன்னல் உறார்.

விர் + அ.   விர.  அங்கு விரிதல்.  விரல் என்ற கையில் கடைக்கோடியில் (அ)  விரியும் உறுப்பு என்பதை அறிய அவ்வளவு கடினமா? விரியவும் செய்து அல்லாமல் சுருங்கவும் செய்து கையிறுதியில் இருப்பது விரல்.  இதற்கு அல் விகுதி புணர்த்தல் மிக்கப் பொருத்தமே.  இன்னொரு சொல்லைப் பார்ப்போம். 

ஈரல் என்ற சொல் காற்றையோ அரத்தத்தையோ  ( blood) உள்ளிழுப்பதும் வெளித்தள்ளுவதும் செய்யும் உறுப்பு.  செரிமானம் செய்யும் கல்லீரலும் இவ்வாறே குறிக்கப்பெறும். ஈர்ப்பதும் அல்லாமல் தள்ளுவதும் செய்வதால் அல் என்ற விகுதி பொருத்தமே என்க..

கந்தல் என்ற சொல்லைப் பார்ப்போம். கண் என்ற சொல்,  சிறு பொத்தல்களையும் குறிக்கும்.   சேலையில் பூச்சி கடித்துக் கண்கண்ணாகப் போய்விட்டது என்று சிற்றூர்களில் சொல்வர்.  உடல்துவாரங்களில் கண்ணும் துவாரமே. ஒன்பது வாசல் என்றும் சொல்வதுண்டு. இவை எல்லாம் பண்டை மக்கள் மொழியை நன்கு கையாளும் திறனுடையோராய் இருந்தனர் என்பதையே காட்டுகிறது.  புதிய தலைமுறையினர்க்குப் படித்தாலும் தெரியப்போவதில்லை.  கண்+து+ அல் >  கண்தல்> கந்தல்.  கண் என்பது இடம் என்றும் பொருள்படும். பழைய நூல்களை எல்லாம் நாம் இழந்துவிட்டால், இந்த மொழிநலங்களை எல்லாம் இழந்துவிடுவோம். கண்கள் உடையதும் அல்லாமல் இடை இடை வருவதும் உடைய துணி - கந்தல்.  ஒரு ''கந்தல்'' அல்லது கிழிசல் துணியை எடுத்தால்,  அதில் கிழிந்து பயனில்லாத பகுதியும் இருக்கலாம். கிழியாத ஏறக்குறைய நல்லதென்று கருதத்தகும் பகுதியும் இருக்கும். இதுபோல் கிழிந்தும் அல்லாமலும் இருக்கும் ஒன்றை,  அல்விகுதி கொடுத்து அமைத்தல்  தமிழின் திறனே  ஆகும்.  பந்தல் என்பதும் இப்படித்தான். பரவலாக நாலு அல்லது மேற்பட்ட கால்களுடன்,  அங்கு விரிக்கப் பட்டிருந்தாலும் காரியம் முடிந்ததும் அது கழற்றி அகற்றப்படும்.  ஆகவே பரப்பி வைத்துப் பின் சுருட்டி வைக்கப்படும். பரப்பியும் பின் அல்லாமலும் வைக்கப்படுவது  ஆகும்.

கந்தல் என்பதற்கு வேறு விளக்கங்கள்  அடுத்த இடுகையில்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை













ஆங்கை

செவ்வாய், 26 மே, 2026

சஹாரா என்ற அரபியிலிருந்து திரிந்த சொல்.

 சஹாரா என்ற சொல்லைக் கவனிப்போம். அரபிமொழியில் சாரா என்ற சொல் உள்ளது.  ஆனால் ஆய்வுகளில்,  சில தமிழ்ச்சொற்கள்  ஆப்பிரிக்க மொழிகளிலும் இருப்பனவாகக் கண்டுபிடித்துள்ளனர். கருப்பர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து ஆசியாவிற்கு வந்தவர்கள் என்பதும் சொல்லப்படுகிறது. மிக்க கருப்புடையோரும் சற்றுப்  பொன்னிற மானவர்களும் கலந்துதான் தமிழர் தோன்றினர் என்ற கருத்துக்களும் உள்ளன. இந்த ஆய்வுகளில் முடிந்த முடிபுகள் உண்டாகிவிடவில்லை என்ற கருத்தும் உள்ளது. இவை தெரிவியல்கள் ( theories)தாம் என்பர்.  சொல்லாய்வில் நாம் இந்த முடிபுகளுக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை.

அகத்தில்  ( உட்பகுதியில்)   தாவரங்கள் மிகக் குறைவாகிய இடமே பாலைநிலம் என்று குறிக்கப்பெறும்  இதையே தமிழில்  அக அறவு என்போம்.  அக அறா என்பதும் அது.  அக அறா  -  அகத்தில் தாவரங்கள் அற்ற என்று பொருள். பழந்தமிழில்,  இறுதியில்  ஆகார விகுதி பெற்ற சொற்கள் பல இருந்தன,  இன்றும் இவற்றுட் சில உள்ளன.  நிலா ( நில்+ஆ),  கல்+ஆ (கலா),  பல்+ஆ ( பலா, அதாவது பல சுளைகள் உள்ள பழம்), உல்+ ஆ  ( உலா). கலா என்பது தமிழ்ச்சொல் என்பார் பேராசிரியர் அனவரத விநாயகம் பிள்ளை. சமஸ்கிருதம் என்பதும் உள்நாட்டு மொழிதான் என்பதால்,  அது தமிழன்று  என்பது வலுவற்ற கருத்தாகிவிடுகிறது.  எம் முன் இடுகைகளில் இக்கருத்துகளின் விளக்கம் பரிமாறியுள்ளேம்.  அதாவது, அறா என்பது அறவு என்று வருதலும் உடைத்து. எதிர்மறை வினை எச்சமுமாம்.

அக எனற்பாலது,  சக என்று வரும். இது தமிழிலும் உளது.  அமணர் என்பதைச் சமணர் என்பதுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.  சக அறா>  சகாரா என்று வந்தது தெளிவாகிறது. காதிப் என்ற அரபிச்சொல்  காதை முதலிய சொற்களுடன் தொடபுற்ற சொற்கள். இந்தத் திரிபைச் சில இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

சகாரா என்ற சொல் அரபியில் பாலை என்று பொருள்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.

இப்படித் திரிந்த சொற்கள் பல உள்ளன. இங்கு ஒன்றிரண்டு காட்டினோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை












சனி, 23 மே, 2026

மவுனம், மௌனம்

எண்ணங்களில் சிறியவை என்று பழிக்கப்படுவன பல. பெரியன என்று போற்றப்படுவனவும் உள.  இவற்றை இவ்வாறு சிறியன, பெரியன என்னாமல்,  உயர்வன,  தாழ்வன என்றும் பிரிக்கலாம். தெய்வப் புலவர் இதை, '' உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்,  மற்றது  தள்ளினும் தள்ளாமை நீர்த்து''  என்று அருளுதல் காண்க. மனவுணர்வின் அடிப்படையில் எழுவனவற்றை, இத்தகு சொற்களால் அளவிட்டுச் சொல்லும் தன்மை,  பல மனித இனத்தாரிடத்தும் காணப்படுவது.

மனிதன் அதிகச் சிந்தனையில் ஈடுபடுகையில்,  பெரிய கருத்துக்களை உணர்வதுடன்,  அதிகம்  பேசுவதோ  அலட்டிக்கொள்வதோ குறைந்துவிடுவதைக் காணலாம். ஏன் அதிகம் பேசுவதில்லை?  பெரிதானதை, உயர்வானதை எண்ணுவதால்தான். இவ்வாறே, கணக்கில் ஈடுபட்டிருக்கும் போதும் அதிகம் பேசுவது குறைந்துவிடுகிறது.

மா என்ற சொல், தமிழில் பெரிதைக் குறிக்கிறது.  இது மஹா என்று சமஸ்கிருதத்தில் வரும். இதுவே மகா என்றும் எழுதப்பெறுவது ஆகும்.ஆதிகாலத்தில் கண்ணாடி பளிங்கு முதலியவை இல்லாதிருந்தன. பிறகு அவை கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தகாலத்தில்,  மகுரம் என்ற சொல் உண்டானது.  மக+ உரு+ அம் >  மகுரம் என்று திரிந்தது காண்க. பிள்ளை என்று பொருள்படும்  மகன், மகள் என்ற சொற்களும் இவ்வாறு தோன்றின. மகு+ உடு+ அம் >  மகுடம் என்று இன்னொரு சொல்லையும் காண்க. ஊதப்பட்டு மயக்குவதும் ''மகுடி''  ஆகிறது. இது மகு+உடு+ இ   >  மகுடி ஆகிறது.  பூவின் மொட்டும்  ஒரு மகவுதான்,  பிறப்பது.

முகு>மிகு> மகு  என்பன தொடர்புடைய அடிச்சொற்கள்.

முகு> முகுர்த்தம் என்றிருந்த சொல் நாளடைவில் முகூர்த்தம்  ஆனது.

முகு> முகு_+ உருத்தம்> முகுர்த்தம்> முகு+ ஊர்த்தம் > முகூர்த்தம் என்பது காண்க.

உரு> உருத்து= உருவினை உடையது.  உருத்தம் என்பதில் அம் விகுதி.  அமைவு குறித்தது.

உரு > ஊர் என்பது,  ஓர் அமைப்பினை அல்லது உருவினை அடைந்த இடம்.  மனிதனுக்கு உரு இருப்பதுபோல ஊருக்கும் ஓர் அமைப்பு அல்லது உரு உள்ளது.

மா என்பதிலிருந்து திரிந்த சொற்களின் வளர்ச்சி காட்டினோம்.

மகுடம் என்பது அரசன் உடுத்துக்கொள்ளும் தலையுடை.   பெரிய உடை என்றும் சொல்லவேண்டும்.

மவுனம் என்பது சிந்தனை ஆழ்வினால் பேசாமை.  உனம் என்பது உன்னுதல்> உன்னு> உன்னம்> உனம் ஆகிறது.   மா+ உனம்> மவுனம் ஆகும். மௌனம் என்பதும் அது.  உன்னுதல் சிந்தித்தல். உன்னித்தல் என்பதுமாம்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை











புதன், 20 மே, 2026

வாசித்தல்.

 இது வந்தவிதம்:

வாய்>  வாயித்தல்> வாசித்தல்.  வாயினால் வெளிப்படுத்துதல்.

யகர சகரத் திரிபு.   இது போலித் திரிபு.  அதாவது போல இருக்கும் திரிபு.

இன்னொரு சொல் காணொப்புக்கு:

பாய்  -  ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு வேகமாச் செல். 

நீர் பாய்கிறது.

வேகமாக இடம்பற்றிக்கொள்ளும் அன்பு:  பாய்>  (பாயம்) > பாசம்

வேகமாகப் படர்வது பச்சை:  பாய்> பாசி.  ( பாய்> பாயி என்று  யி வந்து சொல் முடிவதில்லை.  அதற்குப் பதில் சி வரும்.)

அன்பாய் வழங்குவது ஆசி.    இது  ஆதல்>  ஆய்>  ஆசு  >  ஆசி.

ஆ> ஆய் என்ற எச்சவினையே இதன் உண்மையான அடிச்சொல்.  ஆனால் இப்படி சொல்வது தவிர்ப்பர்.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்து சொல்லாக்கம் செய்வதைத் தமிழ்ப்புலவர்கள் விரும்பார்.  ஆகவே ஆய் என்பது தவிர்ப்பர்.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 18 மே, 2026

விஞ்ஞாபனம்

 இச்சொல்லை  (விஞ்ஞாபனம்)  இன்று தெரிந்துகொள்வோம்.

இந்தச் சொல்லைக் கேட்டவுடன்,  இது ஏதோ புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பொருளுடையது என்று எண்ணிவிடவேண்டாம்.  இது தமிழில் வழக்குடைய சொல்லே ஆகும்.

வியன் என்ற சொல் நல்ல வழக்குடைய சொல். வழக்கு என்று நாம் சொல்வது,  வழங்குதல் என்பதுதான். இன்னொரு வகையில் சொல்வதானால்  பயன்பாடு அல்லது உபயோகம் உடையது  என்பதுதான்.

அடிச்சொற்களைக் காண்போம்.

வியன்  -  விரிவு.  '' விரிநீர் வியனுலகம்''  என்ற குறள் பயன்பாட்டினைக் காண்க. ( விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலத்து உள்நின்று உடற்றும் பசி என்னும் குறளில் வருகிறது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரின் குறள் நூலைப் பார்த்து எழுதவில்லை ஆதலான் குறள் எண் மறதி ).

விர்> விய் என்று திரியும். விர்> விரி.  விர்> விய்> வியன்.  விய்> விஞ்.

விய் > வியம்> வியங்கோள்.   ( வியங்கோள் வினைமுற்று).

விய் > விய> விய+ ஆ > வியா.  விரிவாகும் என்று பொருள்.  பர> பார்> பாரி.  சேர்த்தால்  ' 'வியாபாரி''.    விரிந்து பரவலாகப் போய்ப் பொருளை விற்பவன் அல்லது பரப்புவன்.  One who goes round distributing or selling goods.  விய -  விரிந்து.  இப்போது விற்பவன் என்ற பொருளே உள்ளது.  சிறப்புப் பொருள் தொலைந்தது.

வியப்பு என்பது, கண்கள் விரியும்படி,  மனம் விரியும் படி அமையும் நிகழ்வு அல்லது நிலை.

இனி ஞாபனம் என்பது:

பகவுகள்:

நாவு > நாபு>  ஞாபு.

அண் > அன் (  அணுகிச் சொல்லுதலைக் குறித்தது).

அமை>  அம்.   அமைவு என்று பொருள்.>

வியன்> இடைக்குறைந்து,  வின்> விண்.

வாய்> வார் > வார்த்தை என்பதில்  ர்>ய் மாற்றம்.

வியன்> விய்.    விர்> விய்,  ர் >ய்  காண்க.

விய> வியர்> வியர்.  (  பரவலாக [ வெப்பத்தினால்] நீர் வெளிப்படுதல்.)

வின்> வினி> வினியோகம்> விநியோகம்.  பரப்புதல்.

ஒன்றைச் செய்பவனும் அதைப் பரப்புகிறான் அல்லது பிறர்காணச் செய்கிறான்.   வின்> வினை ( செயல், தீயவை பரப்புதல் முதலியவை).

வின்> வினா.  பிறரிடம் அறிந்துகொள்ள ஒன்றைக் கேட்டல்.  இதுவும் பரவுதல்தான்.

விண்(வியன், விஞ்),  நாவு> நாபு.   அண்> அன்  ( அணுகுதல்),  அம்..அமைதல்..

விரிவு என்பதே விண், வியன், விஞ்,  விந் என்றெல்லாம் வந்தன.

பிறரிடம் சென்று சொல்வது,  தெரிவிப்பது,  தெரிவித்தல்.

இலக்கணம்ப்படி எழுதிக் குழப்பாமல் எப்படி புரியவைப்பது என்று எண்ணி, இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. 

முறைப்படுத்தி  வாசித்துக்கொள்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை













வியாழன், 14 மே, 2026

கந்தமூலம்

 மூலம் என்ற சொல்லுக்குக் கிழங்கு  என்ற பொருள் இருக்கிறது.  இந்தச் சொல்லில்  ''கந்த'' என்ற சொல்லைச் சேர்க்காமலே இந்தப் பொருள் கிடைக்கிறது.

கந்தம் என்ற சொல்லுக்கும் கிழங்கு என்ற பொருள் இருக்கின்றது.   கந்த மூலம் என்ற இரண்டையும் சேர்த்தால்  அதற்குக் கிழங்கு கிழங்கு என்று இரண்டுமுறை சொன்னதுபோலும் பொருள் வருகிறது.  அப்படி வருவது கூறியது கூறலாகிவிடும். கந்தம் என்ற சொல்லுக்கு வாசனை என்ற பொருளும் இருப்பதால் '' கந்தமூலம்'' என்ற இருபெயரொட்டுச் சொல்லுக்கு  வாசனைக் கிழங்கு என்று பொருள் கூறலாம் என்றாலும்,  இந்தக் கவிதையில் அப்படிப் பொருள் கொள்ளலாமோ என்று எண்ணித் துணிய வேண்டும்.. இந்தப் பாட்டில் அவ்வாறு பொருள்கொள்ளுதல் நேரிது என்று எண்ணமுடியவில்லை.

'' கந்தமூலமே புசிக்க நேரினும் 

கடமை தவறவே மாட்டான் தமிழன்''  1

என்று கவிஞர்  C.A. அய்யாமுத்து  பாடியுள்ளார். இவர்தாம் இப்படத்திற்குப் பாடல்களை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பாடல் தொடங்குவது:  ''இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோர் எங்கள் தமிழன் ''  என்றபடியாம். இப்பாடலின் பதிவுகள் இப்போது இல்லை என்று தெரிகிறது. 

இந்தப் பாடல்,  ஏழ்மையினால் கிழங்கு புசித்தலைக் குறிப்பதால்,  இதற்கு மேல்குறித்தபடி பொருண்மை காணுதல் தவறுதலாகத் தெரிகிறது.

கண்டம் என்பது துண்டு என்று பொருள்தருவதால்,  "முழுக்கிழங்கும் கிட்டாமல்  துண்டுக் கிழங்கே கிட்டினாலும்" என்0று பொருள்கொள்ளவேண்டும்.

கண்டு என்ற சொல் நூல்கண்டு என்ற வழக்கிலும் உள்ளது.  சேலையில் வண்டு கடித்து  கண்டு கண்டாக உள்ளது என்று கேள்விப்பட்டுள்ளோம்.   கண்டுகண்டாகத் தடித்துவிட்டது என்ற வழக்கும் உள்ளது.

கண்ட >  கந்த  திரிபு.  கண்டு>  கண்+ து.  கண்து அம் > கண்டம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.

அடிக்குறிப்பு:  கஞ்சன் என்ற திரைப்படத்தில் வந்த பாடல்.










செவ்வாய், 12 மே, 2026

சந்தோஷம் என்ற சொல்லுரு

 இதைச் சுருக்கமாகவே பார்த்துவிடுவோம்..

சன்+ தோ  + ஷம் என்பது சந்தோஷம் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். உண்மையில்,  இது ''அன்பு தோய்ந்த அமைவு'' என்ற ஒரு வாக்கியத்தின் சுருக்கக் கருத்தே ஆகும்.   அன்பு என்ற சொல்லின் முதற்பகவு ஆகிய  அன் என்பது,  சன் என்று திரிந்தது.  இது எப்படி என்றால்,  அமணர் என்ற சொல்,  சமணர் என்று திரிந்தது அல்லவா.  அதுவே போலும் ஒரு திரிபுதான் இது. அன்> சன் என்பதற்குப் பின்,  தோய் என்பது தோய்தல் குறிக்கும் வினைச்சொல் ஆகும்.  இதில் இறுதி எழுத்தாகிய ய் தவிர,  தோய் அப்படியே சந்தோஷம் என்ற சொல்லில் இருப்பதைக் காணலாம். தோய்தல் > தோய> தோஷ என்பது அங்குள்ளது காணலாம். அம் விகுதி அமைப்புக் குறிப்பது.   அது அம் என்றே ஈற்றில் அடிச்சொல் போல் வந்து விகுதியாய் உள்ளது.

அன்பிலிருந்து விளைவதுதான் சந்தோஷம் என்பதை இச்சொல் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.

இவ்வாறு இச்சொல்லில் தமிழ் உதவி இருத்தலுக்கு நாம் மகிழ்வு கொள்வோம்.

இதை வேறுவகையிலும் பிரித்துச் சொல்வார்கள். ஆகவே இது இருபிறப்பிச் சொல் என்று கொள்க.  எனினும் இதுவே இதன் உண்மை வடிவாக்கம் ஆகும்.

அறிக மகிழ்க்.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

சனி, 9 மே, 2026

வார்த்தை என்னும் சொல்.

 இந்தச் சொல்லை இன்று கவனிப்போம்.

சொல் என்பது தமிழில் பயன்பாடு மிக்குள்ள ஒரு வார்த்தை.  வார்த்தை வாயிலிருந்து வருவது என்னும் பொருளுடையது.   வரு(தல்) >  வார் > வாருங்கள், மற்றும் வாரும்,  வாரான், வாராய் என்றெல்லாம் திரிதல் காண்க.   ஆகவே  வார்த்தை என்பதில்  வார் என்பது பகுதி.   தை என்பது விகுதி.  தைத்தல் என்பது வந்து இணைவதையும் குறிக்குமாதலால்,  இந்தத் தை என்ற விகுதி, பொருளுடன் கூடிய ஒன்று எனவும் கொள்ளற்கு இடனுண்டு என்க.   இனி,  வாய் > வாய்த்தை> வார்த்தை என்று திரிந்திருத்தலும் ஏற்புடையதே ஆகும்.  ரகரம் யகரமாகும் இடங்களும் உண்டு.  இது வருங்கால் குறித்துக்கொள்க. ஆர் என்ற விகுதி  வந்தார் என்பதில் பலர்பாலில் வர,  வந்தாய் என்பது முன்னிலை ஒருமையில் வருவதால்,  இவை தொடர்புடையவை என்றும் தெரிந்துகொள்க.   இவற்றின் தொடர்புகளைத் தனியாக  ஆராயவேண்டும்.  மரி(த்தல்) என்னும் சொல்,  அதே பொருளுடன் மாய்தல் என்னும்போது,  யகரம் கொண்டு முடிந்ததும் காண்க.  சார்(தல்) என்ற சொல்,  சாய்(தல்) என்று வந்து தொடர்புள்ள பொருள்குறித்தலும் காண்க.  ஆய்தல் என்பது உள்புகுந்து நோக்கி அறிதல் குறிக்க,  ஆர்தல் என்பது நிறைவு குறிக்கவருகிறது.   இது பொருள் தொடர்பு ஆகும்.

ஒர்தல் என்பதும் ஓய்தல்  ( ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல்  என்பது வழக்கு)  என்பதும் தொடர்புடையவை.

வார்த்தை என்பது தமிழ்ச்சொல்.  இணைமொழியான சமஸ்கிருதத்தில் வழங்கவும்  ஏற்புடைய சொல்லே  ஆகும்.

மலாய் மொழியில் வார்த்த பெரித்த  என்றால் செய்தி அறிக்கை. இலக்கிய வழக்கும் உடையது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.







புதன், 6 மே, 2026

சுலோகம் என்ற சொல்.

 சொல்லானது வாயிலிருந்து புறப்பட்டாலும்,  அது கேட்போனின் காதுகளில் சென்று அடைதல் வேண்டும்.   சொல்  என்பது  வு என்னும் விகுதி பெற்று,  சொலவு என்றுமாகும்.  அது செவிகளைச் சென்றடைந்து பின்னரே அறியப்படுதலால்,  சொலவடை  ( சொலவு + அடை) என்றும் வந்தது.  இனிச் சொலவு என்பது, அம் விகுதி பெற்று,  சுலவம் என்றும் வந்தது.

இதிலிருந்து,  சுலவம்>  ( சுலோவம்) >  சுலோகம்  என்று வந்ததில் ஏதும் வியப்பில்லை.   வகரம் ககரத்துக்கு மாற்றீடாக வரும் சொற்களைத் திரிபுகளின் பட்டியலில்  சென்று கண்டு இன்புறுக.  சிலவற்றை யாம் பழைய இடுகைகளில்  விவரித்துள்ளேம்.  வாய்ப்பேச்சிலும் இந்தத் திரிபு காணலாம்.  ஆகும் என்பதை ஆவும் என்போர் பலர்.  வேகாது >  வேவாது!!  நாக்கு என்ற சொல், நாவு என்று திரிதல் காணின், ககர வகரத் தொடர்பு எளிதில் புரியும்.  இதில் புரியவேண்டியது என்னெவென்றால் நாக்கு என்பது நாவ்வு என்று வருவதில்லை,   நாவு என்றே வரவேண்டும்.  ஒற்றுக்கு ஒற்று வரவேண்டுமென்பதில்லை.

இதை,  சொல் > சுல்,  சுல்+ ஓகம் >  சுலோகம் என்றும் காட்டலாம்.   ஓகம் என்பது,  ஓங்கு,  இடைக்குறைந்து  ஓகு, பின் ஓகு+ அம்  > ஓகம் என்றாகி,  சுல்+ஓகம்> சுலோகம் என்றுமாகும்.   ஆதலின்,  இது பல்பிறப்பிச் சொல் என்று உணர்க.

தமிழும் சமஸ்கிருதமும் உறவுடைய மொழிகள்..

திராவிட மொழிகள் என்ற பட்டியலில் சமஸ்கிருதத்தை விட்டு ஆய்ந்தது,  ஒரு வகையில் பொருத்தமற்றது ஆகும்.

வெள்ளைக்காரர்கள் சமஸ்கிருதத்தை எடுத்து உறவாடிக்கொள்ள எண்ணியதையே இது காட்டுகிறது.  கிருதம் என்பது கதம் என்பதன் திரிபு.  கதம் என்பது கத்து> கது> கதம் என்று வந்த சொல்.   கது என்பது நீண்டு காது என்றும் வந்து சொல்லானது காண்க. கத்து> கது> கதை.  வாயால் சொல்வது என்று பொருள்.  காதை, - சொல்லும் கதை..  பண்டை நாட்களில் இதைப் பாடினார்கள்  ( இசையுடன்).  சிலம்பு, மேகலை முதலிய இலக்கியங்களை இப்போது பாடுவதற்கு  (வாயினால் பாட),   வெட்கப் படுகிறார்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


ஞாயிறு, 3 மே, 2026

சத்தியம் என்ற சொல்லின் தமிழ்மூலம்.

 சத்தியம் என்ற சொல்,  தமிழ்நாட்டின் சிற்றூர்களில் இன்றும் நன்றாகவே வழங்கி வருகிறது.  இதன் தமிழ் மூலங்களை இன்று விளக்கிப் பதிவு செய்வோம்.

சத்தியம் என்பது உண்மையில் உண்மை பற்றிய மனத்திலிருந்து  எழும் உறுதிபற்றிய எண்ணப்பான்மை ஆகும்.  மனத்தில் எழுவது ஆகையினால் அகம் இங்கு பங்குபெறுகிறது.  அகத்தில் உண்மை நிலவுகிறது என்பதே நிகழ்வதாகும். இதுவே நடந்தது என்று மனம் நினைக்கின்றது.  இதை அகத்தில் இயங்குகிறது என்று நாம் சொல்வோம்.  அகத்து  (  அதாவது அகத்தில் );   இயங்குகிறது :  இதற்குரிய சொல் சுருக்கிச் சொன்னால் '' இயம்'' என்பது ஆகும். இந்த இரண்டு சொற்களையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  சேர்த்துச் சொன்னால்:  அகத்து இயம் >  அகத்தியம்.  அகத்தியம் என்று ஓர் இலக்கண நூல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  அது இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.  அந்த நூலுக்கும் இப்பெயர் இருப்பது, ஒரு உயர்வான செய்தியே ஆகும்.  அது இருக்கட்டும்.

அகத்தியம் என்ற சொல்,  அத்தியம் என்று இடைக்குறைந்து.  இதில் உள்ள ககரம் மறையும்.   இனி,  அகரம் சகரமாகும்   ஆதலால்,  அத்தியம் என்பது சத்தியம் ஆகும்.   அமணர் என்ற சொல் சமணர் என்று ஆனது போலுமே இது.  ஆடு>  ஆடி> சாடி என்று சகர வருக்கத்தில் சொல் அமைந்தது போலுமே இதுவும்.  இது போன்ற திரிபுகளை பல் இடங்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

இதுவே சத்தியம் என்ற சொல்லின் பிறப்பு ஆகும்.   அகத்தியம் என்ற நூலின் பெயரே சத்தியம் என்று திரிந்துள்ளது என்று கூறினாம் இதற்கு முரண் ஆகாது என்பது உணர்க. அகக்களத்தி> சகக்களத்தி> சக்களத்தி என்ற சொல்லையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது பின் தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் வழங்கி,  சமஸ்கிருதத்தில் உண்மை குறிக்கும் சொல்லாக மாறியிருப்பது,  தமிழருக்குப் பெருமை சேர்க்கும்  வரலாறு ஆகும்.

அண்முதல்:  அண்( மூலச்சொல்)> சண்>  சம்> சந்தை என்பதும் காண்க.  பொருள்களை வாங்கப் பலர் அண்மிச் செல்வது சந்தை ஆகும்.

சத்தியம் என்பது ஒரு பல்பிறப்பிச் சொல். பல்வேறு சொல்தரவுகள் உள்ளன.  இவற்றுள் இங்கு காட்டப்பெறுவது சிறந்தது :  ஏனென்றால்,  இது பெரிதும் போற்றப்பட்ட அகத்தியம் என்னும் இலக்கண நூலின் பெயருடன் தளத்திலிருந்தே தோன்றியுள்ளதைக் காட்டுவதுதான். தமிழின் இலக்கண முதனூலுக்கு உண்டான பெயருக்கும் உண்மைக் குறிப்புக்கும் ஒரே எழுகளம் தோன்றக் காண்பதுதான்.

அறிக மகிழ்க

மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_18.html

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



  


வெள்ளி, 1 மே, 2026

தமிழ்ச் சொல்லாக்கத்தில் ஒலியமைப்பு. சொற்கள்: அன்பு அனுக்கிரகம்.

 இந்தத் தலைப்பு  ஒரு நூலாக்கத்திற்கு ஏற்ற தலைப்பு  என்னில் மிகையாகது. இங்கு ஓர் இடுகையாகப் பதிவேற்றம் செய்வதால், இரண்டு சொற்களை விளக்குவதன் வாயிலாகத் தமிழ் சொற்களின் ஒலியமைப்பினை இங்கு விளக்குவேம். வேறு இடுகைகளிலும் இதனைத் தொட்டு விளக்கியிருத்தல் கூடும்.  அவற்றைக் காணின், அவற்றையும் கருத்தில் கொள்ளுமாறு விழைகின்றனம்.

அண் என்ற அடிச்சொல்லினின்றே அனுக்கிரகம் என்ற சொல் அமைகிறது என்பதை விளக்கியுள்ளோம். இதைச் சங்கதம் என்னும் சமஸ்கிருதத்தில் மூலமாகவும் விளக்கலாம்.  அவ் வாறு பிறர் விளக்கியுள்ளனர். பல சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்குறத் தக்கவையாக இருக்கலாம்.  மெத்த இனிய விளக்கம் எவ்வழி வருகிறதோ, அதுவே மிக்கப் பயனுள்ள விளக்கம் என்று கொள்ளுதல் வெண்டும். மொழியின் பண்புகளை நன்கு விளக்குவதே என்றும் நனறென நீங்கள் கொள்ளவேண்டும்.

இனி ஒலியமைப்பைச் சொல்வோம்.  அணுக்கிரகம் என்று சொல் அமைவுற்றால் முச்சுழி ணகரம் சற்று  வன்மையுடைய ஒலியே  ஆகும். னகரமும் ணகரமும் மெல்லினமே ஆனாலும் இஃது உண்மையாம்.  மேலும் முச்சுழி ணகரமாயின் பொருளில் வேறு கருத்துகள் புகுதலும் கூடும்.   ஆதலால்  அணு என்பது அனு என்று மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்புதலுடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அண் > அண்பு என்று சொல்லமைந்தால் மென்மை தவழும் அன்புக்கு ஏலாமை உணர்ந்துகொள்க.  ஆகவே அன்பு என்று அமைதலே ஒலிப்பொருத்தம் உடையது என்பதும் உணர்க.

பொருட் பொருத்தம் இருப்பினும் அத்துடன் ஒலிப்பொருத்தமும் சொல்லுக்கு வேண்டுமென்பதைத் தமிழ்ச் சொல்லமைப்பு எடுத்துக் காட்டுகின்றது அறிக.

அன்பு என்பதற்கு னகரம் பயன்பாடு கண்டபடியே,  அனுக்கிரகம் என்பதற்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது போற்றற்குரியது ஆகும்.

அனுசரணை,  அனுகூலம், அனுதுரிதம், அனுபோகம்,  அனுபவம், அனுப்பு ( வினைச்சொல்) என்பவற்றிலும் இம்முறை பயன்பாடு கண்டுள்ளது.  பிறவற்றிலும் ஒலியமைப்பு இணக்கம் கண்டு தெளிக.

 அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

வியாழன், 30 ஏப்ரல், 2026

எரிதவழ் வேலன், ஒரு சுடர்ப்பையன் சுப்பையன்.



பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ நான்முகன் படைப்பு

நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்

கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்

கலசமோ புவியிற் சிறுமண்

புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்

அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்

உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்

இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்

தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.


இதில் ஔவைப்பாட்டி, வேலனை எரிதவழ் வேலன் என்கின்றார்.

சிலர் வேலனின் வேல் தீயின் நிறமானது என்று கூறுவர். ஆனால் இஃது வேல் அந்நிறத்தினது என்பதாக இருக்கலாம். வேலன் அந்நிறத்தவன் என்பதாகவும் இருத்தல் கூடும். எமது ஆய்வில் வேலனே அந்நிறத்தவனாக வணங்கப்பட்டான் என்பதுதான். சிவந்த நிறமுடையோன் என்றும் பொருள்படும் சிவன் என்ற சொல் ( வட இந்தியாவில் ஷிவா என்பது வெண்ணிறத்தினன் என்றா;லும்) செம்மை நிறத்தினன் என்றே கொள்ளல்வேண்டும். அரன் என்ற சொல்லும் அரத்தம அரக்கு முதலிய சொற்கள் சிவப்பு நிரம் காட்டுவதால், சிவப்பு நிறத்தினன் என்றே சிவனைக் காட்டுகிறது. அர் என்பது சிவப்பு என்பதே.


இனிச் சுப்பையன் என்ற சொற்பொருள் காண்போன். இச்சொல் தமிழன்று என்று சிலர் கூறினும், இது சுடர்ப்பையன் என்பதன் திரிபு என்பதே உண்மை. சுடர் என்பது செம்மை நிறமே ஆகும்.


இச்சொல்லில் சுடர்ப்பையன் என்பது சுப்பையன் என்று இடைக்குறையாகிற்று. இன்னொன்றும் கவனிக்கவேண்டியதாகிறது. சு(டர்)ப்பையன் என்பது எந்த இடர்ப்பாடும் இல்லாத குறுக்கமாகும். இச்சொல் சுப்பையன் ஆன பிறகு, சுப்பு ஐயன் ஆகி, பையன் என்பது ஐயன் என்று கொள்ளும்படியாக மாறிற்று. சுடர்ப்பு + ஐயன் என்று பொருத்தினும் சுடர்தல் என்ற வினை பெயராகி ஐயன் என்பதனோடு இணைந்தது, அடிப்படைப் பொருள் மாற்றம் எதையும் தரவில்லை.


சுடர்ப்பையன் என்பதும் எரிதவழ் வேலோன் என்பதற்கு வேறுபடாத கருத்தே ஆகும். தாமே சுடர் என்பது மட்டுமின்றி, சுடர்ப்பினுக்கு அடிப்படையான தெய்வம் என்றும் பொருள் தரும்.

தீயும் கும்பிடப்பட்டதே ஆகும். தீயினைக் கும்பிடும் பார்ப்பார் என்று பாரதியாரின் பாட்டில் வருவதையும் காண்க. பார்ப்பார் என்போர் கோயிற்காரியம் பார்ப்போர்.

இதன் மூலம் சுப்பையன் என்பது தமிழ் எனபது அறிவிக்கப்பட்டது. இதை Subbaiah எனினும் ஒன்றும் இழுக்காது. பலசொற்கள் எடுத்தொலிக்கப்பட்டு வேற்றுச்சொல் போல் எண்ணப்படுகிறது. இந்தச் சொல் ஏனைத் தமிழின் இணைமொழிகளிலும் வழங்கும் சொல்லேயாகும். உச்சரிப்புகள் மொழிக்குமொழி  வேறுபடும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை




செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ரகர ஒற்றுகள் மறைதல்

 ரகர ஒற்றுகள் மறையும் சொற்கள் பலவாகும்.  அவற்றில் சிலவற்றை எழுதி வெளியிட்டது நினைவில் உள்ளது.

பேச்சுத் தமிழில் இவ்வாறு மறைதல்  மிகுதியாகும். வாருங்கள் என்பது அப்படியே பேச்சுத் தமிழில் வருவதில்லை.  அது  வாங்க ( வா(ரு)ங்க(ள்) )  என்று பிறையிட்ட எழுத்துக்கள் மறைதலைக் காணலாம்.  தாருங்கள் என்பதும் இவ்வாறே  தாங்க என்று மாறிவிடுகிறது.  வந்தார்கள் என்பதிலும் வந்தாக என்று திரிந்து,  ர் என்பதுடன் ள் என்பதும் மறைவு எய்துதல் காணலாம்.  பேச்சு மொழியில் திரியாமல் வழங்கும் சொற்கள் சிலவே என்னலாம்.  இப்படிச் செய்தலின் மூலமாக,  மிகுதியான உடல்வலிமையைத் தமிழர்கள் எட்டினர் என்று சொல்லத் தோன்றுகிறது. இது முயற்சிச்சிக்கனம்.

ஆனால் பார்வை என்ற சொல்லை இப்படித் திரித்துப் பேசுவதில்லை.   கோவை என்ற சொல்லில், ஒரு ரகரத்தை வரவழைத்துப் பேசுவதைக் காணலாம்.  கோர்வை என்பது வழுவிய சொல் என்று சில நூல்கள் காட்டினாலும், அவற்றை படித்துப் போற்றுவோர் சிலரே ஆவர் கூடுதலாக ஓர் எழுத்தைச் சேர்ப்பது முயற்சியை மிகுத்தல் என்று நினைப்பதில்லை.  அதாவது மூச்சுச் செலவு!

அவர் என்பது அவா, அவாள் என்று திரிவதைக் காணலாம்.  வகரம் நீண்டதுடன் ஒற்று ரகரத்துக்குப் பதில் ளகர ஒற்று வருதலையும் அறியலாம்

சோர்வு என்ற சொல்லில் ரகர ஒற்று உள்ளது.  இச்சொல்லிலிருந்து சோகம் என்ற சொல்லை ஆக்குகையில்,  சோர்+கு+ அம் > சோர்கம்> சோகம் என்று வந்துவிடும். கு என்பது இங்கு இடைநிலையாய் நிற்கும். அம் விகுதி. ஆர்கலி என்ற சொல்லில் இவ்வாறு நிகழாது.

சீர்த்துவம் என்ற சொல்,  சீத்துவம் என்று ரகர ஒற்றை இழந்துவிடுகிறது.  அதாவது சீரான தன்மை என்பது இது.  இது பேச்சில் வரும்  ''பாத்தா'' தெரியும்  என்பது போன்றதே.  பார்த்தால் என்பது இப்படித் தன் மெய்யை இழக்கிறது.

சீதனம்  எனபது  எப்படி?

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

ஆனந்தம்

 ஆன்மாவின் அடிப்படைக் குணம் அல்லது பண்பு  அளவற்ற மகிழ்ச்சி என்று சொல்லப்படுகிறது,   இதற்குக் காரணம் அஃது உடலோடு கூடியிருக்கும் தன்மையே  ஆகும். இதுவும் ஆனந்தம் என்ப்படுகிறது. இந்தப் பொருளில் இது இப்போது வழங்குவதில்லை எனலாம். இது சத்து, சித்து எனவும் கூறுவர்.

இஃது மட்டுமின்றி,  ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகளில் நந்தமும் ஒன்றெனப்படும்.  ஆ நந்தம்  என்பதால்  ஆ= ஆக்கந்தருகின்ற,  நந்தம் -  செழிப்பு என்பது. இந்த நந்தம் , நன்று  என்ற சொல்,  நல்+ து>  நன் து > நந்து+ அம் என்று வந்து, நந்தம் :   செழிப்பு  , வளர்ச்சி என்று பொருள்தரும்.  நல் > நன் என்று வருவது லகர நகரத் திரிபு.   மேலும் இன்னொரு வழியில் நோக்கின்,  நரந்தம் என்பது இடைக்குறைந்து, நந்தம் என்றாகி  இனிய மணமாகிய நன்மை என்றும் பொருள்படும்.  நந்துதல் ஆதலுமாகும் என்பதால்,  ஆனந்தம் என்றும் கொள்ளற்குரியது.  

நந்தம், நந்தல் என்பதற்குக் கெடுதல் என்ற பொருளும் உண்டு.  மிகுந்த நலங்கள் உண்டாதல்,  கெடுதலுக்கும் இட்டுச் சென்று  அழிவும் தருமாதலின்,  கெடுதற் பொருள் ஏற்பட்டுள்ளது.  நன்மையும் தீமையும் பிரிக்க இயலாதவை என்பதை உணர்க.    அதிகம் பொன் வைத்திருக்கும் ஒருவன் திருடனால் கொல்லப்பட்டு அவன்றன் பொருள் எடுத்துச்செல்லப் படுதல் காண்க.  தீதும் நன்றும் ஒருகளத்தில் தோன்றக்கூடியவை.

இவை நிற்க,  ஆனந்தம் என்பது   ஆக நன்று>  ஆ + நன் + து+ அம்  > ஆனந்தம் ஆகும். இதில் நல் > நன் என்றானது.  ஆகவே இது தமிழ் மூலமுடைய சொல்லே ஆகும்.  பனி என்ற சொல், பல்> பன்> பனி என்றாதல் காண்க.

ஆ+ நன்(  மை ) + து + அம் >  ஆனந்தம் என்றும் காட்டலாம். ஆநந்தம் என்றும் ந-வரவும் எழுதப்படுதல் உள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 23 ஏப்ரல், 2026

மனம் என்னும் சொல்லும் போல்வனவும் உருபு ஏற்றல்

 மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-

மனத்துக்கண் மாசிலன்  ஆதல் அனைத்தறன்  

ஆகுல நீர பிற

என்பது  அது.

கண் என்பது உருபு.   மனத்துக்கண் என்றால் மனத்தில்.  இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.

அறம் என்பதும் உருபு ஏற்க,  அறத்தில் என்று வரும்.  இது அறம்+ அத்து + இல் என்பதுதான்.  கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.

அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல்.  அதனால் சாரியை எனப்பட்டது.  இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும்.  அதாவது தகர ஒற்று இரட்டித்தது.  அ த்+த்+உ..

மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை  கொள்ள,

உரலில் கட்டி,  வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ----  கண்ணனை.

இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான்.  இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,

பிர-மனும்  இந்-திர-னும் மன-தில்-பொ  றா-மை-கொள்-ள

இங்கு த்  என்னும் வல்லொற்று நீங்கியவாறு  காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உள்ளது.



சனி, 18 ஏப்ரல், 2026

சுத்தம் சொல்லாக்கம்

 பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் வாழநேரிட்டது.  நகரங்கள் இன்னும் உருவாகிவிடவில்லை. அரசன்  என்ற ஆட்சியாளன் ஏற்பட்டுவிட்டானா என்றும் தெரியாத நிலை.  காட்டை அழிக்கக் கூடாது, காட்டில் போய் மரம்வெட்டினால் தண்டனை என்னும் சட்டம் எதுவும் இன்னும் உண்டாகிவிடவில்லை.

ஒரு மனிதனும் அவனுடன் ஒருவர் இருவர் இருந்த சிறு குடும்பமும்  காட்டின் சில மரங்களை வெட்டி அப்புறப் படுத்திவிட்டுக் கட்டிய வீட்டில் அவன் வாழ்ந்தான். மரங்களை இணைத்து வீடு கட்டிக்கொள்வதற்கு  ஆணி கூட இருந்திருக்காது.  ஏனென்றால் இரும்பை உருக்கி ஆணி செய்துகொள்ளும் திறன் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இரும்புக் காலம் இன்னும் வரவில்லை. 

அவன் என்ன உணர்ந்து கொண்டான் என்றால் அவன் வீடு கட்டி வாழ்ந்த இடம் கொஞ்ச நாட்களிலே  பலவித அழுக்கும் உள்ள இடமாகிவிட்டது.  சுற்றுமுற்றும் பார்த்தால் பசுமையான நீண்டு வளர்ந்த மரங்கள். பச்சை பசேலென்ற இலைகள். காய்கள் கனிகள் எல்லாம் இருந்தன.  பக்கங்களில் எல்லாம் தூய்மையாகவே  அழகு காட்டிய வண்ணம் இருந்தன.

இதுபோலவே, சுற்றுப்புறம் என்பது,  சுத்தமாகவே  இருந்தது.  அதனால் சுத்தம் என்ற சுற்றுப்புறத்தைக் குறிக்கவேண்டிய சொல்,  அமைப்புப் பொருள் மாறி தூய்மை என்ற பொருளை அணைத்துக்கொண்டும் இணைத்துக்கொண்டும் இலங்கியது.

சுத்தம் என்ற சொல்லுக்கு  அழுக்கின்மை என்று பொருள் உண்டாகி இன்றுவரை நின்று நிலவுகின்றது. சமஸ்கிருதம் என்பது சம ஒலியினதாகிய மொழியாதலின், அதிலும் இச்சொல் வழங்கியது.  இருமொழிகட்கும் உரிய சொல்லே இதுவாகும்.

பொருள் மாற்றம் அடைந்த சொல். தமிழிலிருந்து தோன்றிய சொல்தான். சுற்றம் என்பது உறவினரைக் குறிக்க, சுத்தம் என்பது தூய்மைப்பொருளைக் குறித்தது.  காட்டுவாணர் சொல்.  காட்டுவாழ்நர்> காட்டுவாணர்  என்பது திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வுரிமை உடையது.



திங்கள், 13 ஏப்ரல், 2026

பவனியும் பரவணியும்.

 பரவணி என்றால் பரவலாக அணிவகுத்துச் செல்வது.  அணிவகுத்துச் செல்லும்போது  இரண்டிரண்டாக,  அல்லது  மூன்று மூன்றாக ஆட்களை நிறுத்தி, அணிவகுத்துச் செல்லலாம். இப்படிச் செய்யாமல் ( அதாவது எண்ணிக்கை வரம்பின்படி நின்று பின் நடந்துசெல்லாமல் அமைப்பு இன்றி நடந்து சென்றால் அதுதான் பரவணி ஆகும்.

இது புரியவில்லை என்றால், எமக்கு எழுதிக் கேட்கவும்.  யாம் ஒரு படம் வரைந்து இதை விளக்க முற்படுவோம்.

பரவணி என்பது பர(வு) அணி என்ற இருசொற்களால் ஆன கூட்டுச்சொல். இது திரிந்து பரவணி> பரவனி>பவனி என்று ஆயிற்று.

சமஸ்கிருதத்தில் (அம்மொழியில் இருந்தாலும்)  இச்சொல்லில்  ணகரம் இல்லை. இந்தத் திரிபு சமஸ்கிருத மொழிக்குச் சென்றால்,  பவனி என்றுதான் வரவேண்டும். அல்லாமலும்  இருசொற்கள் புணர்த்தி அமைத்த சொல்லில்,  ணகரம் என்பது னகரமாக மாறிவிடும்.  இது தமிழிலேயும் நடக்கும். சமஸ்கிருதம் செல்லாமலே நடக்கும்.  இதுபோன்ற திரிபுகளுக்கு யாரும் நூல் எழுதவில்லை.  ஆதலால் அவர்சொன்னார் இவர் சொன்னார் என்று காட்டமுடியாது.

ஒருவரை ஒருவர் அணுகிச் சென்று பாசமுடன் உறவாடாமல்  அன்பு செலுத்தமுடியாது. அண்> அணுகு.  இனி அண்> அன்> அன்பு என்று இதற்குச் சொல் அமைகிறது. அண்பு என்றுதான் சொல் அமையவேண்டும் என்று எந்த இலக்கணவிதியும் தமிழில் இல்லை.  சமஸ்கிருதத்திலும் இல்லை. உம்மாலும் காட்டமுடியாது.

இதை இங்குச் சொல்லக் காரணம், எதற்கும் ஓர் ஆதாரம் காட்டவேண்டும் என்று சிலர் சொல்வதுதான். உலகில் ஆதாரம் இல்லாத உண்மைகள் பலவுள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

சரவணம், சரவணன், சரவணப்பொய்கை

 இச்சொற்களை இப்போது உணர்ந்துகொள்வோம்.

இதற்குரிய வினைச்சொல்: சரிதல் என்பது.   இதிலிருந்து சரம் என்ற சொல் தோன்றுகிறது.  சரிதல் மற்றும் சரம் என்பன அசைவுக் குறிப்பின ஆதலின்,  அசரம் என்னும் சொல்  அசைவின்மையைக் குறிக்கிறது.  அசர்தல் கவனக்குறைவைக் குறித்தாலும்  இஃது ஒருவன் இடைநேரத்தில் அசைவின்றி இருத்தலையே குறிக்கின்றது.  கவனத்துடன் இருத்தல் -  அசைவுண்மை என்று கொள்ளப்படும்,  ஆகவே அசைவின்மை அசையாமையைக் குறிக்கும். அதாவது ஒன்றும் செய்யாதிருத்தல். கொஞ்சம்  அசந்துவிட்டால்,  திருடிவிடுகிறார்கள் என்ற வாக்கியத்திலிருந்து இது தெரிகிறது. . '' அசந்தா மிளகாய் அரைச்சிடுவானாம்''   என்பதும காண்க.

அயர்வு என்பது இயற்சொல்லாக  இருப்பதால்,  அசர்தல் என்பது திரிபு  என்னலாம்.  அசர்தல் என்பதை  அசைதல் என்பதனோடும் தொடர்பு படுத்தலாம் என்றாலும் பொருள்முரணால்,  அசை+ அறுதல் > அசறுதல் > அசர்தல் என்னலாம்.  இன்னொரு சொல்லுடன் சேர்கையில்  றுகரம் என்ற வல்லினம்  ர் என்ற இடையின மெய்யாய்த் திரிகின்றது.   அசை அறு  > அசறு> அசர்தல் > அசரம்.   இவ்வாறின்றி,  சரம்> அல் சரம் > அசரம் என்றுமாகும்.   அல்=   அல்லாதது. இது கடைக்குறைந்து : அ என்று முன்னொட்டு  ஆயிற்று.  

இனிச் சரவணம் என்பது:  

சரிதல் வினையிலிருந்த் பிறந்த இச்சொல், இயக்கம் குறிப்பது தெளிவு.  இது இச்சொல்லின் ஆதிப் பொருள்.  ஆனால் இற்றை வழக்கில் இது ( சரம் என்பது)  ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருத்தலையே குறித்தது. இதற்குக் காரணம் அறிய இயலாத ஒன்றன்று.  சரிந்த பொருள், சரிவான நிலையிலே இருந்து கெட்டி நிலையை அடைந்துவிடுதலும் இயற்கையில் காணப்படுகிறது. இந்நிலையில் இயக்கமின்மையையே இச்சொல் குறிக்கிறது.  சரிந்த பொருள் சரிவு நிலையிலிருந்து படுக்கை வாட்டமாக மாறாமை,  இயக்கத்திலிருந்து இயக்கமின்மை நிலைக்கு வருவதுதான். சரவெடி என்பது ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தல் என்று பொருள்படும்.

சரிந்த நிலையில் மேலும் சரியாமல் வரிசையாக நின்று நிலை காட்டுகின்றது. இந்நிலையில் வண்ணம் அல்லது நிலைபெறுதலை  சரவணம் என்கிறோம். வரிசைநிலை அடைதல்.  இவ்வாறு பூக்கள் இருக்க அழகுபெற்ற நீர்நிலை, சரவணப் பொய்கை  ஆகிறது.  இவ்வாறு நிலைபெற்று துதிக்கப்படுவது பராநிலை  ஆகிறது. பலநிறங்களில் இருப்பதும் ஒரே நிறத்திலிருப்பதும் இதனுள் அமையும்.   வண்ணம் என்பது நிலை என்ற பொருளிலும்  நிறம் என்ற பொருளிலும் அமைவதாம்.  ஏற்ப நாம் பொருளுரைத்தல் தக்கது.  சொற்கள் அமைதலுக்குப் பின் பொருள் மாறுதலும் பெறும், மாறாமலும் இயலும். இங்கு நாம் அமைப்புப் பொருளே கருதினோம்.  பின் அடையும் பொருளை விரித்துக்கொள்க.

எடுத்துக்காட்டு:  சரப்பலகை, வரிசையாக உள்ள  பலகை என்ற பொருளே தரும்.  அவை கடைகளில் அடைப்புப் பலகை என்பது,  விரிபொருள்.  தாமே அறிந்துகொள்ள வேண்டிய பொருளாகும்.

''சரவணம் சமஸ்கிருதம்'' என்றால் எப்படி? என்ன?

சரவணம் சமஸ்கிருதம் எங்கிறீர்களா?  அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லாம் நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் (முன் இடுகை)  என்பதும் சரவணம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கவையாகும்..

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.







புதன், 8 ஏப்ரல், 2026

சொல்: கோதா, கோதாட்டு, ஹோதா

 இவற்றைக் கவனிப்போம்.

இடைக்காலத்தில் உருவான சொற்களில்,  வாய்தா,  சந்தா, சாதா ( ordinary) முதலியவும் பிறவும் உள்ளன.  அவற்றில் சிலவற்றைத் தனித்தனியாக விளக்கியுள்ளோம். பேதா என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது. இங்கு கோதா என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளோம்.

கோதா என்பதில் கோத்தல் என்பது வினைச்சொல்.  தா என்பது தருதல் வினை. இவ்வாறு இருவினையொட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியோர்  இடைக்காலத்தோர் என்று நாம் அறிந்திருந்தாலும், இவர்கள் யாரென்று தெரியவில்லை.  அவர்கள் ஏதும் எழுதிவைக்கவில்லை யாதலின், இவர்களை அறியமுடியவில்லை. இஸ்லாமிய மக்களிட மிருந்து இவை வழக்குக்கு வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.  தமிழ் மூலங்களைப் பயன்படுத்தியோர், தமிழ் இஸ்லாமியராய் இருந்திருக்கவேண்டும்.  இவற்றுள் ஹோதா என்பது வேதகாலம் தொட்டு வழங்கியதால் இஸ்லாமுக்கு முந்தியதாகும்.

கோத்தல் என்ற வினையும் அதனோடு தா ( தருதல்) என்ற சொல்லும் இணைந்து, கோத்துத் தருதல் என்று பொருள்படுகிறது:  எனவே  அமைப்பு என்பது பொருள். இது பின்னர், ஹோதா என்றும் திரிந்துள்ளது.  கோத்துத் தரு(தல்) என்பது  கோத்துத்தரு> கோத்தரு> ஹோத்தரு> ஹோத்ரு என்று மாறியமைந்தது. இவ்வமைப்பு முதலில் தீயினை வணங்கும் வழிபாட்டு அமைப்புக்கு வழங்கியது என்பது வரலாறு ஆகும்.

அமைப்பு என்ற பொதுப்பொருளில், இது அமைத்தல்  அல்லது அமைப்பு என்றே பொருள்பெற்றது.

கோதாட்டு என்பது கோதா+ ஆட்டு என்பதுதான்.  இது பாவமன்னிப்பு சடங்குகளையும் அவ்வமைப்பையும் குறித்து வழங்கியுள்ளது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



 



சனி, 4 ஏப்ரல், 2026

அகந்தை என்பது

அகந்தை என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம் எண்ணக்கோட்டம் தவிர.

இதில்  அகம்+ தை என்ற இரு பகவுகள் உள்ளன.   அகம் என்பது உள் என்று பொருள் தருவது.  தை என்பது ஒரு பெயராகவும் வினையாகவும் உள்ள சொல்.  தைத்தல் ஒரு வினை.  தை என்ற மாதம், இயற்கை வளத்தின் நிலைகளுடன் மக்கள் வாழ்வு செய்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுசென்று தைத்தல் அல்லது இணைத்தல் என்ற பொருளில் அமைந்த பெயராகும்.  தைத்தல் என்ற நூல்கொண்டு தைத்தல் மட்டுமன்று,  தடவுதல் கூட ''தைத்தல்'' என்பதில் அடங்கும்.  தை+ இல்+ அம் >  தை+ ல் + அம் > தைலம்,   அல்லது  தையிலம்> தயிலம்> தைலம் என்றும் காட்டலாம்..  இது சிற்றூர்ச் சொல். தைவருதல் என்றால் தடவுதல். '' நரந்தம் நாறும் என் தலை தைவரு மன்னே'' என்று ஒளவையின் புறநானூற்றுப் பாட்டில் வருதல் கண்டு கொள்க.(  புறம் 235)

தையல்காரன் என்ற சொல்லில் வரும் தை என்ற சொல்லையும் கவனிக்கவும். taugo என்ற செருமானிய மொழிச்சொல்லும்  டை என்ற ஆங்கிலச்சொல்லும் அறியத் தக்கனவாகும். கழுத்துக்கட்டுக்கு ''டை'' என்பர்.  டையும் தையும் ஒன்றுதான்.

அகந்தை என்ற சொல்லில் தை என்பது ஒரு விகுதி என்று சொல்லலாம்.  தை என்ற விகுதிக்கு இணைப்பு என்ற பொருளும் காணற்குரியது ஆகும்.  தா+ இ என்ற இருபகவுகள் பழங்காலத்தில் இணைந்தபடி ''தை'' என்றும் ஆயின என்பது  அறிதற்குரியது. குழந்தையைத் தாய் தருகிறாள்.  தா என்ற சொல் தருவதைக் குறிப்பதுடன் தாய் என்பதற்கும் விளக்கத்தைத் தருகிறது.  ய் ஏன் வந்தது? என்று கேட்டாலே சிந்திக்க இயக்கம் உண்டாகும்.

அகந்தை: அகத்துடன் இணைந்தியங்கும் தன்மை உடையது இறுமாப்பு.   ஆகவே விகுதி அழகாக  அமைந்துள்ளது.

ஒருபொருட் சொற்கள்

அகங்காரம்

இறுமாப்பு 

தன்மதிப்புமிகை

உட்கரணம்

செருக்கு

இடும்பு

சமுன்னதி

சளுக்கு

கற்பம்

காட்டிகம்

தெறிப்பு

பெத்தரிக்கம்

தற்பெருமை

மமதை

மேட்டிமை

வாமிலம்  (வாயினால் மிலைந்துகொள்ளுதல்)------  முதலியவை.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை




வியாழன், 2 ஏப்ரல், 2026

சரித்திரம் பிறழ்ந்துரை அல்லது பொய்யினைப் பரப்புதல்

 : நீ,

 பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்

பிதற்றுவ தெற்றுக்கடா

மத்தினைப் பிடித்து  மண்ணில் கடைந் திடில் 

மதுரத்    தயிர்மறுத்தே,

மெத்தச்  சுவைதரு  மோர்வரு   மோசொல்க!

மென்மேல்  பிழைசெய்கிறாய்

எத்தனை ஆண் டுகள் அடிமைப்  புத்தியில்

இருந்ததனால் அழிந்தாய்.


ஆரியர் என்றது  சங்கத்  தமிழரை

அறிவாளிகள்  அவரே;

சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்

குறித்திடும்  தொடரதுவே!

ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்

அறிவுடையான்  அல்லனே!

ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே

பிறரொன்றும்  அறியாததே.


பொருள்:

எற்றுக்கடா -  எதற்கடா

மென்மேல்  -  மேலும் மேலும்

மத்து -  சிலுப்பிக் கடையும் கோல், 

மதுரத் தயிர் மறுத்து -  இனிய தயிரைக் கடையாமல்

மெத்த - மிகுந்த

சுவைதரு-  சுவையான

ஆர் என்ற...  -  வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.

பிறர்  -  தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.

இனப்பெயர் -  ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.

புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது.  திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும்.  புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





செவ்வாய், 31 மார்ச், 2026

கொடுங்கோளூர் பெயர்க்காரணம். அஞ்சலி என்பது.

 இந்த ஊரின் பெயர், இப்போது திருவஞ்சைக்களம் என்பதாகவும் இது கேரளத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. இங்கு முன்னிருந்தவர்கள், அரசரின் அஞ்சலியைக் கண்டு இன்புற்றனர் என்று தெரிகிறது.

இது திருச்சூர் மாவட்டத்திலுள்ள மகாதேவசாமி கோயிலாகும். இது அஞ்சைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. அஞ்சைக்களத்தப்பனே  என்று தேவாரப்பாடலில் வருகிறது. தேவாரம் (913.1)

அஞ்சலி என்பது அகஞ்செலி  என்பதன் திரிபு.   அஞ்சை என்பது அகஞ்செய் என்பதன் திரிபே.  அஞ்சைக்களம் என்பது அஞ்சைக்குளம் என்று திரிந்துவிட்டதென்று தெரிகிறது.

அரசர்கள் அரியன மேற்கொள்தற்கு இங்கு வந்து வணங்கிப் பின் செயல் கொண்டனர் என்று அறிக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வெள்ளி, 27 மார்ச், 2026

நிபந்தனை என்பது

 நி என்பது ஒரு சங்கத முன்னொட்டு என்றாலும்,  அது நில் என்ற தமிழ்ச்சொல்லின் கடைக்குறைச் சொல்தான்.  நில்- நி. அதாவது ஒரு நிகழ்வின் அல்லது எதிர்நோக்கும் நிகழ்வின் முன்நிற்பது.

பந்து என்பது பற்றி நிற்பது என்னும் பொருளது.  பல் + து.  இது தமிழ் முறைப்படி பற்று என்று வரும்.  ஆனால் சமஸ்கிருதச் சொல்லாக்கத்தில்  பல்> பன்  ஆகிறது.  இது எழுத்துத் திரிபு அமைப்பின்படி தமிழிலும் வரக்கூடியது.  பன்+து > பந்து என்று விளையாடும் பந்து என்ற சொல்லிலும் வருகிறது. இதற்குக் காரணம், பழங்காலத்தில் பந்துகள் கயிற்றினால் கட்டப்பட்டன.  அவ்வாறு கட்டி அதை அடித்து விளையாடினர். தேய்வை ( ரப்பர்)ப்   பந்துபோல் அடித்தவுடன் அமுங்கி எழக்கூடிய திறன் இதற்குக் குறைவு.

சங்கதத்தில் இது  முன் பற்றி நிற்கும் நிலையைக் காட்டுகிறது.

அன், ஐ என்பன விகுதிகள்.

அன் என்பது அண்டி நிற்பது,  அணுகி நிற்பது என்று பொருண்மை தரலாம்.  ஏற்ற முறையில் விளக்கி இதை மற்ற இரு பகவுகளினோடும் இணைக்கவேண்டும்.

எனவே முன்னரே பற்றி நிற்குமாறு  சொல்லப்படும் அல்லது விதிக்கப்படும் ஒரு நிலைப்பாடு ஆகிறது.

இதில் என்ன தெரிந்துகொள்கிறோம் என்றால் தமிழிலும் சங்கதத்திலும் எத்தகு உறவு உடையவை சொற்கள் என்பது. இதை மிக்க நெருங்கிய உறவு என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

புதன், 25 மார்ச், 2026

கற்சிதைவில் உண்டான சொற்சிதைவுகள்.--கச்சிதம் என்பது ஒன்று.

 கல் சிதைவு என்றால் கல் உடைந்து சிறியதாகி அல்லது தேய்ந்து  சிறியதாகி பிற கற்கருவிகளை உண்டாக்கிக்கொள்வது என்பதுதான்.  இது கற்காலத்திலிருந்த நம்மிடையே நடைபெற்று வருவதாக இருந்தாலும், எல்லாச் சொற்சிதைவுகளையும் ஒரே இடுகையில் கவனித்துவிட முடியாது. நேரம் என்பது தேவைப்படும்.

இத்தகைய சொற்களையெல்லாம் பொறுக்கிச் சேர்த்து ஒரு நூலாகவும் எழுதலாம். நீங்கள் எழுதி ஒரு சேவையைச் செய்யலாம்,

இந்தத் தஅலிப்பு எமக்கு பிடித்துப்போய்விட்ட படியால் இதை மாற்றாமல் வைத்துக்கொண்டு இங்கு சில் கூறுவேம்.

கல் உடைந்து சிறிதாகிவிட்டால், அதையும் சில கருவிகட்கோ பொருட்களுக்கோ பயன்படுத்த வைத்துக்கொள்ளலாம்.. கற்காலத்தில் இதைச் செய்து மகிழ்ந்திருப்பார்கள்.

இன்று கச்சிதம் என்ற சொல்லை மட்டும் கவனிப்போம்.

முதலில் சிதைவு என்ற சொல் கவனிப்போம்.  சில்> சிறு> சிறிது > சிது> சிதை> சிதைவு  என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு திரிகையில், சில முழுச்சொற்கள் போல் தோன்றும்.  சிது என்பது சிறிது என்பது நடுகெட்டு அல்லது இடைமறைந்து,  அவ்வாறு வந்தது.  அதிலிருந்து இன்னொரு சொல் வந்ததைக் கண்டுகொள்வீர்.

கல் சிதை>  கல் சிதம்>  கச்சிதம்.   ஒரு கல் சிதைந்து நன்றாக அமைந்துவிட்டால் மனிதன் அதை எடுத்து, கொஞ்சம் சரிசெய்து கருவியாக்கிக் கொளல். மிக்கச் சரியாக அமைந்தது என்று பொருள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


சனி, 21 மார்ச், 2026

சில் என்ற அடிச்சொல். சின் என்று மாறுகிறது.

 சில் என்ற அடிச்சொல், ஒன்றுக்கு மேற்பட்டன என்று பொருள்படும். மணல்போல் நுண்மையாக இல்லாமல், சற்று பெரியனவாய் ஆனால் ஒரு பெரிய துண்டிலிருந்து பிரிந்து விழுந்து இருப்பனவைக் குறிக்கும்.

லகர மெய்யீறு,  னகர மெய்யீறாகத் திரியும்.  சில்> சின்> சின்ன > சின்னது என்பன காண்க.

சின்>  சினை  ( விலங்குகளின் கரு முட்டைகள்). சினைகளில் முட்டைகள் பலவாய் இருக்கும்.  எ-டு: மீன் சினை.  பசு சினைப்பட்டிருந்தால், கன்றுபட்டிருக்கின்றது என்பர். (கருவுற்று என்ற எச்சவினை, மாடு முதலியவற்றிற்குச் சொல்லலாகாது.) 

சின்னம் என்பது.   சின் என்றது அடிச்சொல்.  அம் என்பது அமைப்பு என்பதைக் குறிக்கும் அடிச்சொல்,  இங்கு ஒரு விகுதியாக வருகிறது.  அம்> அமைப்பு என்ற பொருளைக் குறிக்கும்  தமிழ் அடிச்சொல்.  இந்த அம் வந்த ஒரு சொல்லை எடுத்துக்க்காட்ட வேண்டின், நிறம் என்பதைக் காட்டுக.  நிறு+ அம் >  நிறம். நிறு என்றால்  மாறிவிடாமல் நிற்கச் செய்வது என்பதே பொருள்.

நிறு > நிறுத்து.   ( வினைச்சொல் பகுதியில் உண்டாகிறது.  இங்கு து என்பது வினையாக்க விகுதி.).  பொரு> பொருத்து என்ற சொல்லில் பொரு என்பது வினையடியாகவும் து என்பது வினையாக்க விகுதியாகவும் இருத்தலை  உணர்ந்துகொள்வீர்   நிறு என்ற அடிச்சொல் எப்படி உண்டானது என்றால்,  நில்> நின்று ( வினை எச்சமாகி),  பின் ன் என்பது இடைக்குறைந்து, நிறு என்றாகி இங்கு மீண்டும் வினையாகிற்று.   நிறு என்பது முன்வடிவில் நின்று என்று எச்சமாகி இடைக்குறைந்து நிறு என்றானது என்பதைக் கூறுவதில்லை. இங்கு இதை விரிவாக விளக்கியுள்ளோம்.

நில் > நிறு என்று வந்ததுபோலுமே  சில் என்பதும் சிறு என்று திரியும். சில்லிடுதல் என்ற வினை, இடு என்ற துணைவினை பெற்று வரும். 

சில்லுதல், சின்னுதல் என்ற வினைவடிவங்கள் கிடைக்கவில்லை.

சிறுத்தல் என்ற வினை வழங்கியுள்ளது. சிறுப்பனவாதல் என்பதும் ஒக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


செவ்வாய், 17 மார்ச், 2026

நீர் என்பது

 நீரின் தன்மை  குளிர்ச்சியாகவும் இருக்கலாம்,  வெப்பமாகவும் இருக்கலாம்.  வெந்நீர்க் குளங்களும் இந்தோனேசியா, மலேசியா முதலிய நாடுகளில் காணலாம்.  பிற நாடுகளிலும் உள.

நீர் என்பது பள்ளங்களில்  தன்னை நிறுத்திக்கொள்ளும் தன்மை வாய்ந்தமையால் ஏற்பட்ட பெயர்.

நில்> நிறு> நிறுத்து.

நில்> நிறு > நீர்.. இதன் முதனிலையாகிய நி என்பது நீ என்று நீண்டுவிட்டால், று என்பது ஏலாமையால், ர் என்பதே வந்து ஈற்றில் நின்று பெயராகும்.  நீறு என்பது நீரின் வேறுபட்ட சாம்பற் பொருள்.

நில்> நிறு> நீறு> நீற்றல்  என்ற வினை அமைகிறது.  இது சாம்பலாகிவிடுதல் என்று பொருள்படுகிறது. மேலாகச் சாம்பல் பூத்திருத்தல்.

நீர் உள்ளதாவது நீர்த்தல் என்ற வினையினால் சுட்டப்படுகிறது. நீர்ப்பு என்பதும் அமையும். 

நீர் என்பது இணைமொழியாகிய  சமஸ்கிருதத்திலும் வரும். அது தமிழினோடு வந்த மொழி. அது இந்தோ ஐரோப்பியம்  ஆனது அதிலிருந்து கடன் கொண்டு ஐரோப்பிய மொழிகள் தம்மை வளப்படுத்திக் கொண்டதால்  அவர்கள் அவ்வாறு கொண்டனர்.  இக்கருத்துக்கு (  இந்தோ ஐரோப்பியம் என்பதற்கு)  தேவநேயப் பாவாணரும் உடன்படுவார். என்றாலும், சமஸ்கிருதம் என்பது தென்மொழியின் வழிப்பட்டது என்று தம் ''முதல்தாய்மொழி'' என்னும் நூலில் அவரும் ஒத்துக்கொண்டுள்ளார்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை