இந்தச் சொல்லை இன்று கவனிப்போம்.
சொல் என்பது தமிழில் பயன்பாடு மிக்குள்ள ஒரு வார்த்தை. வார்த்தை வாயிலிருந்து வருவது என்னும் பொருளுடையது. வரு(தல்) > வார் > வாருங்கள், மற்றும் வாரும், வாரான், வாராய் என்றெல்லாம் திரிதல் காண்க. ஆகவே வார்த்தை என்பதில் வார் என்பது பகுதி. தை என்பது விகுதி. தைத்தல் என்பது வந்து இணைவதையும் குறிக்குமாதலால், இந்தத் தை என்ற விகுதி, பொருளுடன் கூடிய ஒன்று எனவும் கொள்ளற்கு இடனுண்டு என்க. இனி, வாய் > வாய்த்தை> வார்த்தை என்று திரிந்திருத்தலும் ஏற்புடையதே ஆகும். ரகரம் யகரமாகும் இடங்களும் உண்டு. இது வருங்கால் குறித்துக்கொள்க. ஆர் என்ற விகுதி வந்தார் என்பதில் பலர்பாலில் வர, வந்தாய் என்பது முன்னிலை ஒருமையில் வருவதால், இவை தொடர்புடையவை என்றும் தெரிந்துகொள்க. இவற்றின் தொடர்புகளைத் தனியாக ஆராயவேண்டும். மரி(த்தல்) என்னும் சொல், அதே பொருளுடன் மாய்தல் என்னும்போது, யகரம் கொண்டு முடிந்ததும் காண்க. சார்(தல்) என்ற சொல், சாய்(தல்) என்று வந்து தொடர்புள்ள பொருள்குறித்தலும் காண்க. ஆய்தல் என்பது உள்புகுந்து நோக்கி அறிதல் குறிக்க, ஆர்தல் என்பது நிறைவு குறிக்கவருகிறது. இது பொருள் தொடர்பு ஆகும்.
ஒர்தல் என்பதும் ஓய்தல் ( ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் என்பது வழக்கு) என்பதும் தொடர்புடையவை.
வார்த்தை என்பது தமிழ்ச்சொல். இணைமொழியான சமஸ்கிருதத்தில் வழங்கவும் ஏற்புடைய சொல்லே ஆகும்.
மலாய் மொழியில் வார்த்த பெரித்த என்றால் செய்தி அறிக்கை. இலக்கிய வழக்கும் உடையது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.

