வெள்ளி, 11 செப்டம்பர், 2026

பாண்டியர் என்னும் சொல்

 பாண்டியர் என்ற சொல், வரலாற்று ஆசிரியர் பலரால் விளக்கப்பட்ட சொல்லாகும்.  பாண்டிய அரசுகள்,   தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த  மிகப்பழைய அரசுகளைக் குறிப்பதாகும்.

இங்கு யாம் வரலாற்று ஆய்வு எதிலும் ஈடுபடவில்லை.  தனித்தனிச் சொற்களும் அவற்றுக்கான அடிச்சொற்களும் ஆகியனவற்றைக் கொண்டு சொல்லாக்கம் அறிந்து பொருளைத் தெரிவித்தலையே செய்துவருகின்றோம்.

பண்டு என்ற சொல்லே பாண்டி, பாண்டியன் என்று அமைந்தது என்ற சொல்லமைப்பு விளக்கமும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.   இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  அவர்கள் ஆளத்தொடங்கிய முதற்காலத்தில் அவர்கள் புதியவர்களாகவே இருந்தமையால்,   இந்தப் பண்டு என்ற சொல்லடியாக அவர்களின் மன்னர்குலத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது என்று கொள்வது பொருத்தமான கருத்தாகாது. அவர்கள் பழையவர்கள் என்ற அடைமொழி பெறுமுன் எவ்வாறு குறிக்கப்பெற்றனர் என்று அறிதல் அறிவுடைமை ஆகும். இதே சொல்லில் அறியப்பட் டிருந்தனராயின் ஏன் அவ்வாறு அறியப்பட்டனர் என்று கேட்டல் வேண்டற்பால தொன்றே  ஆகும்.  தொடக்க காலத்துக்கு ஏகுவோமாயின் ஏன் பாண்டியர் என அறியப்பட்டனர் என்பது சிறப்பான கேள்வியாகும்.

அவ்வரசுமுறை, தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டனர் என்பதற்கு ஆய்வு செய்ய உதவும் நூல்கள் ஏதும் இப்போது எமக்குக் கிடைக்கவில்லை..

  பாரதக்கதையில் வரும் பாண்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதற்கும் உதவும் நூல்கள் யாவையும் எம்மிடம் இல.

திரௌபதையின் தொடர்பாகவும் எதுவும் கைகளை எட்டவில்லை.

ஓரிரு சொற்களைக் கொண்டே ஆரியர் வந்தனனர் என்று சரித்திரம் வரைந்த வெள்ளைக்காரன் போலவே, நாமும் செல்லவேண்டியுள்ளது.

இனிப், பண்டை நாட்களில் பாண் என்ற சொல்லடியாக,  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் பாண வகுப்பினன் என்று சொன்னது சரி என்றே கருதலாம்.   பாணர்ஜீ என்ற வகுப்பினரும் பாணர் வகுப்பினர் என்பதும் சரியென்றே  ஆகும்.  பாண அரசிகளில் மிக்கச் சிறப்புடையவர் பாண்சாலி> பாஞ்சாலி ( அம்மன்)  என்ற ஆய்வும் ஏற்புக்குரியதே  ஆகும்.   அந்தக் காலங்களில் பாணர்கள் மிக்கிருந்தனர்.  தமிழிலக்கியமும் பாணர்கள் பற்றிய குறிப்புகள் மிக்குடையது ஆகும்.  மாதிரியைக் குறிக்கும் பாணி என்ற சொல்லும் தொடர்புடைமை காட்டவல்லது. அம்பணம் என்பது ஒரு வாத்தியக் கருவி.  பண்> பணம்.  பண்> பாண்> பாணர்.  பாண்டவருள் தவமியற்றியோர் பாண்டவர்  ( பாண்+ தவர்>  பாண்டவர்).  பாணர் என்ற சொல் ஆணர் என்றும் திரியக்கூடியது. அல்லது ஆள்+நர் >  ஆணரும் ஆகலாம்.  பாணருள் ஒரு வகையோர் கண்டியர் எனப்பட்டனர்.  இவர்களும் பாடுவோரே.  கண்ணிகள் என்பவை சிறிய பாடல்வகை.

பாணர்கள் அரசாண்டுள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்று உள்ளது.

நீங்கள் ஆய்வு தொடரலாம்.


அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.



ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வாத்தியம்

 வாத்தியம் என்ற சொல் தமிழ்ச்சொல்.  இதை ''வாத்யம்''   என்று எழுதி சமஸ்கிருதம் ஆக்கிவிடலாம். சமமாகக் கத்துவது என்ற கருத்துத்தான் இறுதியில் '' சம + கத்து+ அம் '' >( சமக்கத்தம்) > (சமக்கதம்) > சமஸ்கதம்> சமஸ்-கிருதம்> சம்ஸ்கிருதம் > சம்ஸ்கிர்தம் என்றெல்லாம் பேசுபவன் கற்பனைக்கேற்ப வடிவங்கள் மாறின.

ஏன் இடையில் ரு வந்தது என்று நீங்கள் கேட்கலாம்.  மெது என்பது மிருது என்று வரவில்லையா?  வெளியார் மெது என்பதை உச்சரிக்கும்போது நாவிற்கு எளிதாக, ஒரு ரு-வை இடையில் நுழைத்து தமக்கு வேண்டிய முறையில் நீட்டிக்கொள்வார்கள்.

இதுவே போல்,  கத்து என்ற சொல்,  கடத்து என்ற சொல்லுடன் தொடர்புடையது.  எப்படி என்றால், ஒலியானது நாவினால் உச்சரிப்புற்று அல்லது பலுக்கப்பட்டு, ஒலி ஆகும்..  கத்து என்பதற்கும் கடத்து என்பதற்கும் என்ன தொடர்பு? சிந்திக்க வேண்டுமே.  சொல்லாய்வு முறையில் சிந்திக்கவேண்டுமே. ஒரு வல்லின எழுத்து சொல்லிடையில் இருந்தால் ,  அதை எடுத்துவிட,  சொல் வேறு வடிவம் பெற்றுவிடும்.  ஒலியைக் கடத்துவது நாவு.  அது சில வேளைகளில் சோர்வினால் கடத்து என்பதைக் கத்து ஆக்கிவிடும்.  எப்போது என்பதை எப்போ என்னும். என்னடி என்பதை என்ரி  என்னும். யாம் எப்போதும் ஒரு பீடுமன்  (பீடுடைய மன்னன்) என்பதைச் சொல்வோம்.  அது பீமன் என்று வரும்.  நாற்புற ஏனச் சுவரையும் மருவி நிற்கும் ஒரு சிலுப்பி உடைய தண்டினை, மத்து என்னும்.  இது இடையின ஒலி ஆயினும் இங்கும் வரும்.  வல்லின ஒலியே இடையினமாகிவிடும்.  மருத்து, ( மருவித்து ). நாற்புறத்தையும் மருவி நிற்கும் ஒரு தடி, மத்து ஆகிறது.  மடி என்ற டகர ஒலி, மரி ஆகிறதன்றோ?  எப்படிப் போலி  ஆனது?

வாழ்த்தியம் என்பது வாத்தியம் என்றாகலாம்.  வாய்த்தியம் என்பதும் அப்படி வந்திருக்கலாம். வாய்தான் வாழ்த்திப் பாடுகிறது.  பாடுவது எப்படிப் பாவானது?  டு ஏன் தொலைந்தது?

இனியும் உரை செய்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஆபரணம்

 இதன் அமைப்பறிவோம்.

இதை ஆ+ பரு+ அணி+ அம்  என்று பிரிக்க:

அணி+ அம் > அணம் என்றுமாகும்.  இதன்  அணி என்ற சொல்லில் உள்ள இகரம் கெடும்.  ஆகவே  அணம்  ஆம்.

ஆக்கத்திலும் ஈட்டியதாலும் பரிய (பெரிய)  பொருள் என்றற் பொருட்டு,  ஆ+ பரு> ஆபர என்று வந்தது.  அணம் என்ற சொல்லின் அகரம், ருகரத்தில் இணைய, அஃது உகரம் கெட்டு, ரகரமாயிற்று.

இவ்வாறு நோக்க,  ஆபரணம் என்பது பெரிய வகை அணிகலன்களுக்கு வழங்கப்பட்ட பெயர்க்குறிப்பு என்பது தெரிகிறது.  நாளடைவில் இது சிறியவையாகிய அணிகலன்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது மறக்கப்பட்டு,  ஆபரணம், அணிகலன் ஆகிய இரண்டுமே எல்லா வகை அணிகளுக்கும்  வழங்க நேர்ந்துவிட்டது இவ்வாய்வின்மூலம் அறியப்படுகிறது.

ஆபரண் என்ற முதலிரு சொற்பகவுகளையும் இன்னொரு வழியில் நோக்குவோம்.  அப்போது அது, '' பரணில் வைத்துக்கொள்வதற்கு ஆகும் பொருள்'' என்ற பொருளைத் தருகிறது. விலை உயர்ந்த சிறு அணிகலன் களைப் பெட்டிகளில் வைத்துப் பூட்டுவர்; அல்லது  திருடர் மிக்கிருந்த இடங்களில்  மண்ணிற் புதைத்து வைத்து,  வேண்டிய போது எடுத்துப் புழங்குவர். இக்காரணியாலும்,  ஆன பரணின்கண் அடங்குவது என்று இன்னொரு பொருளைத் தந்து,  சற்றுப் பருமையுடைய அணிபொருட்களையே இச்சொல் குறித்தது. 

இச்சொல் இருபொருட் பதிந்த ஒரு சொல் என்பது இவற்றினின்று தெளிவாகத் தெரிகிறது. 

''அணிகலன்'' என்பதில் வரும் அணி என்ற சொல்லும்  அண் என்ற அடியிலிருந்தே வருகிறது.  இவ் அடி,  அடுத்துவருவனவைக் குறிப்பது.  ஒரு கதணியை அணிந்துகொள்வது என்ற வழக்கு,  உடலை அடுத்து நிலைகொள்வது என்ற பொருளில்தான்.  இந்தச் சொல்லின் பொருள்,  ஆ பரண் அண் அம் என்பதிலும் உண்டு;  ஆ+ பரு+ அண்+ அம் என்பதை நல்லபடி நோக்குக.. அணிதல் என்ற சொற்பொருள்,  உடலை அடுத்திருப்பதால் ஏற்பட்டதுதான். அணிபவை அனைத்தும் கலந்து அணியப்படுபவைதாம். கலந்து என்றால் ஒரு நேரம் தோடு, இன்னொரு நேரம் தொங்கட்டான் அல்லது வேறு என்பதுபோலும் கலந்தணிகை.  அதனால்தான் அவற்றுக்கு கலன் ( கல+ அன்) என்று பெயர்வந்தது. பலவகை அணிபொருட்களைக் குறிக்கையில், இவ்வாறுதான் பொருந்தி அமையும். கல என்ற சொல், ஒரு மறைவான பல்பொருட் குறிப்பு ஆகும்.

இதிலிருந்து தமிழின் தற்தோற்ற நெறிமுறைகளையும் அறிந்துகொள்க.  சமஸ்கிருதத்தைத் திறம்பட வளர்த்த நெறியாளர்களும் பண்டைத் தமிழர்களே ஆவர். இதன்பின் அது இவண்வந்த பிறரிடமும் வளர்ந்து பரவியது நாம் செய்த இறைவணக்கத்தின் பெரும்பயன் ஆகும். இவற்றை அறியாக் கதைகளால் மறைக்க முயன்றவர்கள்  யாராயினும் அவர்கள் உண்மை அறிந்து போற்றுவதற்குக் கற்று அமையவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

புதன், 2 செப்டம்பர், 2026

தூபம் சொல்தரவு

 இச்சொல்லை அறிக.

தூபமிடுவதற்குரிய கைப்பிடி ஏனத்தை,  தூபக்கால் என்பர். தடவு, இந்தளம் என்ற பெயர்களும் உள்ளன.  இடுந்தளம் என்பது  சுருங்கி இந்தளம் ஆகியுள்ளது அறிக. எரியும் கரி கீழே கொட்டிவிடாமல் தடுப்பது  தடு+ வு >  தடவு என்பது பொருத்தமான பெயர்,  இதில் உள்ள டுகரம் டகரமாய் அமைந்துள்ளது.  இது தடவுதல் என்ற வினைச்சொல்லுடன் ஒத்திருப்பதனால் தொல்லை இல்லை.

தூவு> தூவம்>  தூபம் என்பதில்  வகரம் பகரமாய்த் திரிந்துள்ளது.  வகர பகரப் போலி.  வகு--- பகு என்பது போலும் வகர பகரப் போலி இதுவாகும்.

தூப  தீப நைவேத்தியம் என்பவற்றில் தூபம் இடம்பெறுகிறது.  தமிழுக்கும் சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் இச்சொற்கள் உரியவை.   தீ > தீபு> தீபம் என்பதும்  நெய்வைத்து இயலுதல் என்பதன் காரணமாக நைவேத்தியம் என்று வந்தது திரிபு. நெய் வைத்து வணக்கம் நடைபெறுதலால் நைவேத்தியம் என்று வந்தது சம ஒலித் திரிபு. 

சம ஒலி என்பது ஓசை ஒத்துவரும் மொழி. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை 


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

தங்கம் -- தகித்தல் : சொல்தரவு.

தங்கம் என்ற சொல்லுடன் தகித்தல் என்பதையும் சேர்த்து ஆய்வுறுத்துவோம். 

இங்கு நாம் ஆய்வு என்பது,  வேர்ச்சொற்களைக் ஆய்ந்து கூறுவதுதான். நூல்களில் பிறர் பலவாறு எழுதி வெளியிட்டிருக்கலாம்.  இது அவற்றைப் படித்து எழுதுவதன்று.   தேவை ஏற்பட்டிருந்தால்,  பிறர் எழுதியது மாறுதலைச் சுட்டிக்காட்ட, குறிக்கப்படலாம்.  அதுவும் எப்போதாவதுதான். இவை எம்  வேர்ச்சொல் ஆய்வுகள் ஆதலால் பிற புறக்கணிக்கப்படுதலே பெரும்பான்மை ஆகும்.

தங்கம் என்ற சொல்,  தகத்தக என்ற இரட்டைக் கிளவியிலிருந்து வருகிறது.  கிளத்தல் என்றால் சொல்லுதல்.  கிளவி என்றால் சொல்லுதல் என்று பொருள்.

தொடர்புடைய சொற்கள்:, 

அனல் -  அனற்றுதல்

கனல்  -  கனற்றுதல்

தகதகத்தல் ,   தகனித்தல்.

தகர்த்தல்.  பல்வேறு துண்டுகளாக அல்லது உடைசல்களாக சிதைத்துப் போடுதல்.  தீயினால் வெந்ததும் இவ்வாறு தகர்ப்புறும்.

தகித்தல்.  இது சுடுதலையும் சீரணித்தலையும் குறிக்கும்.

சீர் அணித்தல் -- சீரணித்தல் என்றால் சீரான நிலையை அடைதல் என்பதுதான்.   ஜீரணித்தல் என்பது முன் தமிழின்  திரிபு.  அணித்தல் என்றால் நெருங்கிச் செல்லுதல்.  அழகாகுதல் என்பதுமாம்.

தக என்பதிலிருந்து ஏற்பட்டதே  தகித்தல் என்பது.  இ-த்தல்,  இடுதல் என்பதன் திரிபு.  டு என்பது அடுதல், சுடுதல், விடுதல், படுதல் என்பவற்றிலும் பிறவற்றிலும் வினையாக்கம் செய்யும் விகுதி.  உ> உடு(த்)தல் என்று வினையானது.  உ என்பது முன் என்பது.

சம(ஸ்)கிருதம் என்பது தமிழுக்குச் சமமான ஒலியமைத்தலுடன் உண்டான மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

தீவிரம் என்னும் பதம்.

 இவற்றைக் கற்றுக்கொள்ளவும்:

விர் -   விரல்   ( விர்+ அல் ).

விர்> விரு> விகு> விகு+ ஆர் + அம் >  விகாரம். ( விரிவானதுடன் சேர்ந்தது மேலும் விரிந்து அமைவது விகாரம்).  கு என்பது சென்றுசேர் குறிப்பு.  ஆர்தல் - நிறைதல். அம் - விகுதியும் அமைதலும்  ஆகும்.

விகாரித்தல்  ,  ஆர்தல் > ஆரித்தல்.  ஆர் என்னும் வினையின் தோன்றிய தொடர்பினதாகிய இன்னொரு வினைச்சொல்.

விர் > விரு> விருத்தம்.

விர்> விரி> விரிவு.

விர் > விரை. விரிதலில் உண்டாகும் வேகம்,  விரைவு.

தீயானது எரிகையில் விரைந்து பரவிவிடும். 

விர்> விரம்.

விரிதலில் பகை உண்டாகும்.  இதனின்று  விர்> விர்+ ஓ(ங்கு) + து+ அம் > விரோதம் என்ற சொல் பிறந்தது. விரிவு ஓங்குவதால் உண்டாகும் பகை உணர்வு.  ஓங்கு என்பதில் கு என்னும் வினையாக்க விகுதி தவிர்ப்புறும்.

விர்> விர்+ அடு> விர்+ அட்டு > விரட்டு. (விரிவதனால் இன்னோரிடம் செல்லுமாறு முடிவது).

இதைப் படித்து,  தீவிரம் என்ற சொல்லின் தமிழமைப்பை உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


வியாழன், 27 ஆகஸ்ட், 2026

உத்தரவு - இது எவ்வாறு தரவு செய்யப்பட்டது.

 இன்று இந்தச் சொல்லைப் பார்ப்போம்.

முதலில் தரவு என்னும் சொல்லைப் பார்ப்போம்.

தரவு என்பதில் அடிச்சொல் அல்லது பகுதி  '' தரு '' என்பதுதான்.  இதை வினையடி என்னலாம்.  இதில் ஏற்படும் வினைமுற்றுக்களைச் சொல்வதாயின்,  தருகிறான், தருகிறாள், தருகிறது  எனபனபோலும் சில கூறலாம். ஆனால் தமிழ் ஓரளவே அறிந்தவனுக்கு,  தரவு என்பதும் தருகிறான் என்பதும் தொடர்பற்றவையாகத் தோன்றும்.  அப்படித் தோன்றுகிற ஒருவன் சொல்லாய்வு அறியாதவனா யிருப்பினும், மொழியை வேறு கோணங்களில் நன்கு  அறிந்து பயன்பெறத் தக்கநிலையில் இருப்பானாகவும் இருத்தல் கூடும். மொழிப் பயன்பாட்டாளன், சொல்லாய்வு அறியாமலே ஒரு நல்ல கட்டுரையோ கவிதையோ எழுத அறிந்திருக்கலாம்.  இலக்கணம் அறியாமலே பலர் மொழியை நல்லபடி பிழையின்றிப் பயன்படுத்தும் திறனுடையார்.

தரப்படுவது தரவு.

உ என்பது பண்டைத் தமிழில் இருந்த, இன்னும் இருக்கின்ற  ஒரு சுட்டுச்சொல்லாகும். இதன் பொருள் ''முன்னிருப்பது''  என்பதாகும்..  அதிகாரத்தில் நமக்கு மேலிருப்பவர்  அல்லது நமக்குக் கட்டளைகள் பிறப்பிக்கத் தக்க ஒருவர்,  அக்கட்டளையைப் பிறப்பித்துக் கடைப்பிடிக்குமாறு நம்மைப் பிணிப்பதே  உத்தரவு ஆகும்.   உ என்பது முன்னிருப்பது என்பதை ''உன்''  என்னும் சொல்லிலிருந்து அறிந்துகொள்ளலாம்.   உன் தாய் என்பதில்  என்பவள் உனக்கு முன்னிருந்து உன்னைப் பெற்றவள். இந்தச் சொல்லின் மூலம் ''உ''  என்ற சுட்டுச்சொல் தான்.

தமிழ்ச் சொற்கள் என்பவை,  தமிழில் காணப்படலாம்.  சமஸ்கிருதத்திலும் காணப்படலாம்.  தமிழிலிருந்து திரிந்த சொற்களும் திரியாத சொற்களும் சமஸ்கிருதத்திலும் வழங்கும் என்பதறிக.  

தமிழில் திருக்குறள் பாடியவரே  சமஸ்கிருதத்திலும்  சாணக்கியர் என்று அறியப்படுகிறார்.  நம் எழுத்துக்கள்,  ஆக்கங்கள் பல்வேறு இடங்களில் பதிவு பெற்று இருக்கின்றன.  ஒவ்வோரிடத்தில் வேறு நபர் என்று எண்ணபடும் ஒருவரை சிலவேளைகளில் அறிந்து சிலர் வியப்பதுண்டு. அதுபோலவே இதுவும்.

ஒவ்வொரு கருத்தினையும் ஒரு சாணுக்குள் அடக்கிவர்தாம் சாண் அ(ட)க்கியவ்ர்.  இந்தப் பெயரில் அடக்கியவர் என்பதில் உள்ள (ட) குறுக்கப்பட்டுள்ளது.  ட முதலிய கடும் ஒலிகளை ஒடுக்கிச் சொல்லமைப்பது ஒரு திறமையும் நற்புத்தியும் ஆகும்.  இலக்கணத்தில் இதற்கு இடைக்குறை என்று பெயர். கவிதையில் இது வரும்:  என்னில் -  எனில்  என்பது காண்க.  பேச்சிலும்  வாருங்கள் என்பது வாங்க என்றாகும். இச்சொல் ள் மறைந்து கடைக்குறையும் ஆகும்.

இச்சொல் அடக்குதல் -  அக்குதல் தான்  (  ககர மெய் நீக்கினால்),  என்றாலும் அதை அஃகுதல் என்றே முன்னோர் எழுதியதால் நாம் அதையே பின்பற்றுவோம்.  அக்கம்பக்கம் என்ற சொல்லிலும் அக்கம் என்பது  ஓர் தொலைவுக்குள் அடங்கிய பகுதி என்பதே குறித்து,  டகரம்  ஒழிந்தமை தெரியக்காட்டும்.

சம ஒலியமைப்புடன் அடுத்து நின்ற மொழி சமஸ்கிருதம்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 26 ஆகஸ்ட், 2026

பூமியை அகழ்ந்துகொண்டிருத்தல்.

 மிகுவதெலாம் புகுவதற்கோ பூமி  வேண்டும்

புகுவதெலாம் புன்மைதாம்  பொய்கள் என்றால்

''புகுமி'' யெனும் பூமியனை பொங்கு வாளே

பொறுத்திடவே திறன்தானும் உண்டோ சொல்வீர்

வெகுள்வதுவும் வீசுவதும்  வெள்ளம் என்னும்

விளைவனைத்தும் பூமிஇவள் சீற்றம் அன்றோ

தகுமுறையில் உணருவனோ தாழ்ந்த மாந்தன்

தாரணியோ தருபொறுமை தாழா மைக்கே.


( சந்தம் மாறுகிறது)


உயிர்பெற்று வாழ்கின்ற மனிதன் பூமிக்

குயிரில்லை என்றுள்ளில் நினைத்துக் கொண்டு

தயை ஒன்றும்  பாராமல் அகழ்ந்து வீசித்

தகைநீங்கு அன்முறையால்  செயல்கள் செய்தார்

பெயல்மிக்கு  வளிவீச்சு  அழிவு  கூடி

பேணாமை தாளாமை ஒழிந்து  யாரும்

அயல் எனவே கருதாமல்   மயலும் நீங்கி

அனைவருமே ''அக உதரம் ''  அடைந்து வாழ்க


பொருள்:

தாரணியோ -  பூமியோ, ( நிலமடந்தை என்பவள்)

தாழாமைக்கே ---  குறையாமைக்காகவே

அக உதரம் -  சகோதரம் அல்லது உடன்பிறப்பு ( உதரம் - வயிறு)

தயை  - அன்பு   

உள்ளில் நினைத்துக்கொண்டு-  வெளியில் சொல்வதில்லை.

பூமியனை -  பூமிய(ன்)னை ( தொகுத்தல்)

அன்முறை -  அநியாயம்

பேணாமை - பாதுகாவல் செய்யாமை

தாளாமை - பொறுத்துக்கொள்ளாமை

மயல் -  தெளிவின்மை

பெயல் - மழை, மிக்கு -  அதிகம் ஆகி

அக உதரம் >  சக உதரம் > சகோதரம்.-  சகோதரத்துவம்.

இவ்வாறு சொல் திரிந்தது.


உட்கருத்து.  எங்கு அகழவேண்டுமோ, அங்கே நிறுத்திக்கொள்வது

மனித குலத்துக்கு நல்லது.  இமயமலையிலெல்லாம் போய் அகழ்ந்தால்

விளவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது.


மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 24 ஆகஸ்ட், 2026

சிறு(த்) திறமும் சித்திரமும் ( Post restored )

 சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகள்

சித்திரச் சோலைகளே உமை நன்கு
திருத்த இப் பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.  உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அமைப்பில் ஒற்றுமை இருப்பின், அதுவும் சித்திரமே.  திரம் என்பது திறம் என்பதன் திரிபு.  பின் விகுதியாகிவிட்டது. இதுபற்றி முன் கூறியுள்ளோம்.  காண்க.

ஒன்றைப்போல் சிறிதாகச் செய்யப்பட்டது  அல்லது எழுதப்பட்டது சித்திரம் என்றும் கூறுவதற்குப் பொருந்திய சொல் சித்திரம்.   சிறுத் திரம் >  ( இதில் றுகரம் குன்றி இடைக்குறையாகிச்)  சித்திரம் என்றும் வரும்.  இது பின் சமஸ்கிருதம் சென்று இடம்பிடித்தது.  ஆகவே நல்ல தமிழ்ச்சொல்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

ஒத்தலும் செத்தலும்

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சி - செ/  செ- சொ  திரிபுகள்

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன. இருந்தால் கொண்டாடுங்கள்.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

இதிலிருந்த எழுத்துக்களில் பிறழ்வு ஏற்பட்டுச் சில காணமற்போய் விட்டன.  இப்போது திருத்தி அமைக்கப்படுகிறது. 27.08.2026    0727 மணி.


















வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நிமிஷம் நிமிடம் எப்படி அமைத்தனர்?

 ஒரு சொல்லை  அமைக்கப் பல தந்திரங்களைக் கையாளவேண்டியுள்ளது.  அவ்வாறு அமைப்பதில் இலக்கணம் படித்த புலவர்கள் திறனுடையோர் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை முழுவதையும் கல்வியில் செலவிட்டுப் பலவற்றை அறிந்து உளப்புலம் அடைந்தோரை நாம் போற்றத்தான் வேண்டும்.  என்றாலும் சில பழஞ்சொற்களை ஆய்வுசெய்கையில், பாமரர்கள் புலவர்களை வென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது.

நிமை என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  நிமைத்தல்  என்பது வினைச்சொல். இது இமைத்தல் என்றும் வரும்.

நிமை இடும் நேரமே  நிமிடம் எனப்படுகிறது.   நிமை+ இடு+ அம் >  நிமிடம்.  நிமை என்பதில் உள்ள ஐகாரம் குன்றிப் புணர்ந்தது.  இது சொல்லாக்கப் புணர்ச்சி.  நிமை எனற்பாலது நிம் என்று நின்றது.

நிம் என்பது ஓர் தமிழ் அடிச்சொல்.  நிம்> நிமிர் என்பதில்,  மனிதன் கூனுதல் இன்றிச் சரிப்படுத்திக்கொள்கிறான். நிம்+ ஐ > நிமை என்பதில்  நிற்கும் இமை தன் இயக்கத்தை மேற்கொள்கிறது.  இதில் சேர்ந்த ''ஐ''  இதைக் குறிக்கிறது. நிமைத்தல் என்பது  ஆகும் தொழிற்பெயர்.   இமைத்தல் என்பதும் அது.

நிமித்தம் என்பது நிமிர்ந்து இடுவித்தலுக்கான  நோக்கினைக் குறிக்கிறது.  இங்கு ''இடுத்தம்''  என்பது குறுக்கப்பட்டது.  வல்லொலியான டுகரம் விலக்குண்டு சொல் நன்கு அமைகிறது.    இது சொல்லாக்கத்தில் கடைபிடிக்கப் படும்.  எ-டு:  பீடு+ மன் >  பீமன். பீடுடைய மன்னன் என்பது. காரணப்பெயர்.  

ஒரு மத்து என்பது  சுற்றியுள்ளவற்றை மருவிச் சுற்றுகிறது.   அதனால் அதற்கு இப்பெயர் வந்தது.    மரு> மருத்து> மத்து என்று ருகரம் நீங்கியது காண்க. 

ஒரு பொருளின் நடு என்பது அதன் சுற்றியுள்ள பாகங்களை மருவி நிற்பது ஆகும்.  மருவாமை இருப்பின் அது நடுவாகாமை உணர்க. மருவி இயல்வதினால், மருத்து+ இயம் >  மருத்தியம்>  மத்தியம்  ஆயிற்று. ருகரம் நீங்கிற்று.  இந்நீக்கம், நாட்கடப்பினாலோ,  கருதி விலக்கினதாலோ நடைபெறலாம்.

நிமிடம் ( நிமை+ இடு+ அம்)  என்பது சரி. இதில் இடு என்பது பொருந்தி நிற்கிறது.  நிமிஷம் என்பது  சம ஒலி அமைப்பு ஆகும்.  அதுவே சம(ஸ்) கிருதம் என்பது.  கத்து> கது> கதம்> கிருதம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 19 ஆகஸ்ட், 2026

திவாகரன்

இந்தச் சொல்:  '' திவாகரன்''  என்பது.  இவனுக்கு ( சூரியனுக்கு),  ஆதித்தன் என்ற பெயரும் உள்ளது.

இதைத்  தீ+வார்+ கு+ அரு+ அன்:   தீயைத் தொலைவிலிருந்தே வாரிக் கொணர்ந்து அருகில் சேர்த்துச்  (சூட்டைத்) தருபவன் என்பது எமக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடலாம்.  சூட்டைத் தருபவன் சூரியன் என்பதற்கு இது இனிய இணைப்பைத் தருகிறது.  சூரியன் என்பது  அன் விகுதி இல்லாமல் சூரியா என்று இருந்தாலும்  அதுவும் நலமே.  மடி> மரி என்ற இரண்டும் ஒருபொருள் தரும் போலிகள்.  டி என்பது ரி என்பதற்குப் போலியாக வரவில்லை?  என்ன வேறு ஆதாரம் வேண்டிக்கிடக்கின்றது.

இந்தச் சொல்லைப் பலவழிகளில் விளக்கலாம்.  இச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கமுடையது ஆகும்.    பல ஆயிரக்கணக்கான அடிச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி.  இதிலுள்ள மூலங்கள் எல்லா உலக மொழிகளிலும் பரவியுள்ளது.  சமஸ்கிருதம் என்பது இன்னொரு மொழி.  அதுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பதைச் சிந்திக்கவேண்டும்.   சமம்+ கதம்> சமக்கதம்> சங்கதம்.  என்றால் சமஸ்கிருதம்.   சமம் + ஸ்+ கதம் >  சமம்+ ஸ்+ கிருதம்>  சமஸ்கிருதம்.  இது என்ன பொருள் என்றால் சமமான ஒலியமைப்பு உடைய மொழி என்று பொருள்.  தமிழின் அடிச்சொற்களுடன் ஓரொலி உடைய மொழி சமஸ்கிருதம்.   ஏன் கிருதம் என்று  சொல் வந்தது என்றால் மகம்> மிருகம் என்பதுபோல்,  கதம்> கிருதம் என்று முடிந்தது.  அவ்வளவுதான் தெரியவேண்டியது.  

கதம் என்பது, கத்து என்பது ஓரெழுந்துக் குறைந்து,  கது என்று வந்தது. அம் விகுதி வந்தது. கது என்பதே நீண்டு காது என்று வந்து ஒலிவாங்கி என்ற பொருளைத் தந்தது.  இன்னும் பல. இது நிற்க.

திவாகரன் என்பது சமஸ்கிருதம் என்றாலும் சரிதான்.  தமிழ் என்றாலும் சரிதான். திவாகர் என்றாலும் வேறுபடாது.

திருவாகும் அரன் >  திருவாகு அரன் >  திருவாகரன் >  திவாகரன் என்றும் வரும். இப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராய் வந்து,  ஒரு சொல்லாகி,  ரு என்பது இடைக்குறையாகி,  திவாகரன் என்று வரும்.   யாரைக் குறிக்கிறது.  சிவனைக் குறிக்கும்.  சூரியனையும் குறிக்கும்.   பண்டைத் தமிழரின் வரலாற்றின் அவர்கள் இயற்கை எழிலர்களான சூரியன், சந்திரன், உடுக்கள் என இவற்றையும் தேவர்கள் என்றே கொண்டனர். நாளடைவில் சிவனைத் தனியாக அறிந்துகொண்டனர்.  

அர்> அரு> அருகுதல்  ( பலவாக இல்லாமை).  அர் > ..   இது சிவப்பு என்றும் பொருள்.  எ-டு:  அர்> அரத்தம் >  இரத்தம் > ரத்தம் ( சிவந்த நீர்,  செந்நீர் என்றும் கூறுப.  மனிதர்கள் பெருகியதுபோல் சொற்கள் பல பின் தோன்றின. தொடக்கத்திலே இலக்கக் கணக்கில் தோன்றிவிடவில்லை. அர் என்றால் ஒலி என்றும் பொருள்.  அர்> அருச்சனை> அர்ச்சனை என்பதில் ஒலிப்பொருள். அர்> அரசன் என்பதில் ஒலிசெய்து மக்களை ஒன்றுகூட்டுவோனைக் குறித்தது. படைநடத்துகையில் இன்றும் இதை உணர்ந்துகொள்ளலாம். இது நிற்க.

இனித் தீ(ய்)வு + ஆகு+ அரன் >  தீவாகரன் > திவாகரன் என்று பார்ப்போம். தீய்வு ஆகுமாறு அருகில் இருப்போன்.   சிவனும்  தீமை செய்வோரை தீய்ப்பதற்கு  அருகில் இருப்பவன் தான்.  அரன் என்பதற்கு தீயோரை அரித்தெடுப்போன் என்ற பொருளும் கூறியுள்ளனர். அரி+ அன் >  அரன் என்பதில் ரி என்பதன் இகரம் கெட்டது.

மற்றொன்று:  தீ+ வா( ர் )+ கு + அரன் >  திவாகரன்  ஆகும்.  தீயை அல்லது அதில் வரும் ஒளியை வரச்செய்து அல்லது வாரித்தந்து செயல்புரிவோன் என்க. 

இன்னும் உள.  இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

[இதை வரையும்போது சில பாகிகள் முன்னுக்குப் பின்னாக மாறிவிட்டன. இது யாம் செய்யாமல் கணினி தானேகவே செய்துவிட்டது.  எனினும் யாம் இதில் ஏதும் மாற்றாமல் விடுத்துவிட்டதே நலம் என்று கருதுகிறோம். ]

சனி, 15 ஆகஸ்ட், 2026

''பெலக்கப் பேசு'' என்றது -. கோஷம் என்பது



''பெலக்க'' என்ற எச்சவினை, இன்னும் வழக்கில் உள்ளது. '' தம்பீ, கொஞ்சம் பெலக்கப் பேசினால்தான் எல்லாருக்கும் கேட்கும்'' என்னும்போது, இச்சொல் வந்துவிடுகிறது. இந்த எச்சத்துக்கு உரிய முழு வினைச்சொல், '' பெல(த்தல்)'' என்பதுதான்.

எடு> எடுக்க. கெடு> கெடுக்க, வெறு> வெறுத்த என்பனபோலும் வினையின் போந்த எச்சமே இதுவாகும். தொழிற்பெயர்கள் எடுத்தல், கெடுத்தல், வெறுத்தல் என்பனவாம். இளை> இளைத்தல் என்பதும் காண்க. ஆகவே பெலத்தல் என்பது நன்றுதான். பெலக்குதல், பிலத்தல் என்ற வடிவங்களும் கிடைக்கின்றன. இவை ஏற்புறவே, பலத்தல் என்ற சொல் ஏற்புறாது போகுமோ. வலத்தல் என்பது பொருள் திரிபுடன் வருகின்றது. இது சொல்லல், நினைத்தல், வளைத்தல் என்றும் பொருள்தரும்.

இருநூறு முன்னூறு ஆண்டுகட்கு முன் வெளிவந்த அகரவரிசைகள் ஆய்வுக்கு வேண்டியவை ஆகும். அவற்றைக் காத்து வைப்பதற்கு நடவடிகைகளை தமிழரசுகள் உதவவேண்டும்.

வல் என்பதே அடிச்சொல். வல்- வலம்> பலம் என்பது திரிபு. ''பலத்த கைதட்டல்'' என்பது இன்றும் வழக்கில் உள்ளது.

கோடு என்றால் தமிழில் வளைவு என்று பொருள். சங்கப் பாடலில் '' கோடுயர் உச்சி'' என்றால் வளைவான உச்சி( மலை) என்பதுதான். பண்டை மக்கள் வளைவாக நின்றுகொண்டு ஒலி எழுப்பியதே அடிக்கடி நிகழ்வாகும். கோடு> கோடம் என்பது வளைந்து நிற்றல். இது ஒலி எழுப்புதலையும் குறித்தது. பின்னர் கோடம்> கோஷம் என்று மெலிந்தது. கோடித்தல் > கோஷித்தல். கோடித்தல் என்பது வழக்கிறந்தது. கோஷம் தான் கோடம் ஆனது என்று பிறழ நினைத்தனர். வேஷம் என்பதற்கு யாம் தந்த விளக்கத்தைப் படிக்கவும். வேய்ந்துகொள்ளுதலே வேஷம். மேலிட்டுக்கொள்ளுதல். ட என்பது ஷ் என்பதன் சம ஒலி ( சமகதம் > சங்கதம் > சம(ஸ்)கிருதம்).

கோடு என்பது எல்லையாதலால், கோடம் என்றும் சொல்வர். ஆனால் இது பெரிதும் வழக்குப்பெறவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

சனி, 8 ஆகஸ்ட், 2026

அபலை என்பது. ஆண்பால் அபலன்.

 அபலை என்பது  கைவிடப்பட்ட பெண்ணைக் குறிக்குமென்பர்.  இந்தப் பொருளை இங்கு ஆய்வு செய்வோம்.

இதில் வரும்  பலை என்ற இறுதி,  பலம்+ ஐ <  பல+ ஐ <பல்+ ஐ  எனவரும்.  பல்  என்பது பலம் என்ற சொல்லின் அடிச்சொல். இது வழக்கில் பலமில்லாதவன் என்பதில் பயன்பாடு காணும்.   ஆளும் கட்சி பலமிழந்தது என்ற வழக்கைக் காண்க.  அபலன் என்பது அபலை என்பதன் ஆண்பால் வடிவம்.

பலம்   என்ற சொல்,  பிற்காலத் திரிபு.  முன் அது  வல்- வலம் என்றே இருந்தது.  பகர வகரப் போலியை உணர்ந்துகொள்ள வகு> பகு என்பதைக் கண்டுணரலாம்.

வந்து இரு  என்பதே  வந்திரு >  வது இரு>  ( ரு குன்றி) >  வது இ > வதி என்றானது. இதை வந்திரு> வந்தி> வதி என்றும் காட்டலாம்.  வந்தி இடைக்குறை வதி என்பதுணர்க.  ரு மறைவு கடைக்குறை ஆகும்.  பின் வகு > பகு போல வதி > பதி என்று சொல்லமைந்தது. இது வகர பகரப் போலி.

அல் என்பது கடைக்குறைந்து,   அ+பலை  என்று சேர்ந்து அபலை ஆயிற்று.

வதிதலாவது,  குடியிருத்தல்.  பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல்,  வந்து பெண்வீட்டில் தங்கிக் குடித்தனம் செய்தவனைக் குறிக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தனுஷ் என்பது (வில்)

 வில் என்று குறிக்கப்படும் கருவி,   பழைய தொடக்கத்தின்போது,  மரத்தண்டுகளால் ஆனவைதாம்.  நல்லபடி வளைந்துகொடுக்கும் தண்டுகளால் இந்த வில்கள் அமைக்கப்பட்டன.

தண்டு என்ற  சொல்:  தண் என்பது அடிச்சொல். இதில் வந்த டுகரம்,  உண்மையில் '' து''  என்பதுதான்.  பின்னர் '' டு''  என்பதே ஒரு விகுதியாகக் காட்டபட்டிருக்கலாம்.  எதுவாயினும் சொல்லமைந்தபின் அது பயன்பட்டு, புழங்கப்படுகிறதா என்பதுதான் அந்தச் சொல்லின் நீடிப்புக்குக் காரணம்.

தண்+ து >  தண்டு.

தண்+ டு > தண்டு. 

மேலது புணர்ச்சி காரணமான திரிபு  ஆகும்.

தண் என்பது தண்மை அல்லது குளிர்ச்சிக்கும் வரும் அடிச்சொல்  ஆகும்.

தண்டுவடம்,  தண்டுக்கீரை என்ற சொற்களில்,  தண்டு என்பது தண்மை என்னும் குளிர்ச்சியைக் குறிக்கவில்லை.  கம்பு, கம்பம் என்பனவும் தண்டு குறிக்கும்.

தணுஷ் என்ற சொல்லில் டு அல்லது து என்பதற்குப் பதில் ஷ் வந்தது.  தண்> தணு> தணுஷ்.     தணு என்பது உகரத்தில் முடிந்த சொல்.   கண்> கணு என்பது போல.

தணுஷ் என்பது வில் குறித்தமையால் இது ஒரு கருவிக்குப் பெயராய் வழங்கியுள்ளது.

தண்டு என்பது படையினர் வைத்திருந்த ஆயுதம் ஆதலால்,   அது படையையும் குறித்தது. தண்டு என்பது வில்  (தணுஷ்).  தண்டெடுத்தல் என்பது படையை இயக்குதலையும் குறித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

புதன், 5 ஆகஸ்ட், 2026

வாக்கு

 வாக்கு என்பதன் சொல்லாக்கம்  அறிவோம்.

வாக்குதல்  என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இதன் பொருள் வார்த்தல் ( வார்த்தெடுத்தல்) என்பதாகும். 

வார்த்தல் என்பது, தனித்தனியாக வகைப்படுத்தி ஒவ்வொரு வார்ப்பையும் ஒரு குறித்த அளவுடன் எடுத்தல் என்று சொல்வர். இதைச்செய்ய ஏனங்கள் இருக்கும். இவை பலகார வகையாக இருக்கலாம்.  உலோகக் கட்டிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகை வகுத்தமைத்தலே ஆகும். வார்த்தல் என்பது ஒருபக்கம் நீளமாக வரச்செய்தல் என்றும் கொள்ளலாம். வார்த்தலில் வேறுபாடுகள் உள.

வகு> வாகு> வாக்கு.

வகு > வார்.

வகு > வகை> வாகை   (வாகை என்பது வகைகளை உடைமை என்றும் பொருள்தரும்.)

வகு> வாகு> வாகை.

இவற்றின் பொருளை நிகண்டுகள் வாயிலாக அறிந்துகொள்க.

சொற்களும் பலவேறு வகையின  ஆதலின்,  வகுக்கப்பட்டவை எனலாகும்.

வாய்>  வா>  வாக்கு என்று அமைதலும் ஆகும்.  இது நா> நாக்கு என்றபடி அமைதலே.

ஆகவே இச்சொல் இருபிறப்பி என்று முடிக்கவேண்டும். வாய் என்பதை வா என்று யகர மெய் விடுத்துப் பேசுவோரும் உளர்.  வாய்ப்பேச்சு>  வாப்பேச்சு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

திருநாமகரண அழைப்பிதழ்

 


1940 வாக்கில்  இலங்கைப் புலவர் திரு. சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எமக்குப் பெயரிட்டார்.  அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே எம் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது.  இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு  அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை). இவ்விதழின் பெயர்: ''புதிய உலகம்''   என்பதாகும்.

திரு சேகரம் பிள்ளை அவர்கள் இலங்கையிலிருந்து வந்து முதன்முதலாகத் தங்கிய இடம்:  சிறம்பான் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் சங்கீத சபா  ஒன்று இவரது  ஆதரவில் நடைபெற்று வந்தது என்று தெரிகிறது.  இதை இளநாட்களில் எம்மிடம் பழகிய பெரியோரிடமிருந்து யாம் அறிந்துகொண்டோம். 

அப்போது ஒரு பாட்டுப்புத்தகமும் கிடைத்தது.  அதன்  ஆக்கியோர் கவி காருண்யம் என்பவர். அவர் கவிதை நூலுக்கு சேகரம் பிள்ளை ஒரு மதிப்புரை வழங்கி இருந்தார்.  அதில் அவர் பாடிக்கொடுத்த ஒரு சாற்றுகவி இவ்வாறு இருந்தது.  

உயர்ராக நாதபுரம் தனிலேதான்
ஓங்குபுகழ் தாங்குகீழைச் சீவல்பட்டி, 
தயவுநிறை மக்களுறை மாங்கொம்பாம்
தங்கபுரி மங்களம்சேர் சிங்கமான
புயவலியன் கருப்பையா தந்தபுத்ரன்
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்,
நயமாகத் தருசமத்வ கீதமீந்த
நாட்டவர்கள் கேட்பதற்கோர் நல்லநூலே.

 இவர் இலங்கை சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் மாணவர். கொழும்பு பலகலை அல்லது கல்லூரியில் தமிழ்ப்புலவராகத் தேறித் தமிழ்ப்புலவர்ப் பட்டம் பெற்றவர்.   இவருக்கு  திரு வி. கல்யாண சுந்தரனாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன என்று திரு அடைக்கலம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேம்.  எனது மாணவப் பருவத்தில் இவர் பதிப்பித்த இதழின் படிகள் ( பிரதிகள்) சில இருந்தன.  அவற்றில்  வெண்பாக்கள், விருத்தங்கள் , விடுகதைகள், குடும்பக்கதைகள் முதலிய பல இருந்தன. இவற்றைக் கற்றறிய ஆவலும் இருந்தது. இவற்றின் காரணமாகவே,  ஆரிய சமஜத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு  அப்பாத்துரைச் செட்டியார் என்பவரிடம் சென்று யாமும் தமிழ் கற்றுக்கொண்டோம். அப்போது யாம் சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தோம். இது ஓர் அரசு உதவிபெற்ற கிறித்துவ உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

எமக்குப் பெயரிட்ட காலத்தில் எம் அம்மாவின் பெயர் எதுவும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.  யாம் ஜோசப் பள்ளியில் சேருங்காலத்தில்  என்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தன. இவற்றில் பெயர் முதலியவை கையெழுத்தால் எழுதப்பட்டவை. இவற்றை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு வெள்ளி கட்டணத்துக்குப் பதிலாக ஐந்து வெள்ளி மாதம் வசூலிக்கப்பட்டது என்பதும்  எம் நினைவில் உள்ளதாகும்.


சனி, 1 ஆகஸ்ட், 2026

நிரஞ்சன் என்பது

 நிரஞ்சன் என்பதைக் கவனிப்போம். பெண்பாற் சொல்லாக, நிரஞ்சி என்ற சொல் ஒன்று அமையவில்லை என்று சொல்லலாம். அல்லது எங்கோ இருந்து வழக்குப் பெற்றிலது என்று வைத்துக்கொள்ளுதலும் கூடும். நிரஞ்சன் என்பதை ரஞ்சன் என்று சுருக்கிவிட்டால், ரஞ்சிதா என்ற சொல் கிட்டிவிடும். இதற்கு நல்ல பல பொருள்களைக் கூட்டி உரைக்கலாம். மிகப்பழைய நாட்களில் இது : ரஞ்சி ஆத்தா என்றிருந்து,  ஆத்தா என்பது தா வாகி, பழையதிலிருந்து புதிய சொல் ஒன்று வந்திருக்கின்றது.  மொழி என்பது இப்படி அமைவதுதான்.  புதிய சொற்கள் விரியும் கற்பனைகேற்ப சொற்களும் பெருகும்.

நிறைந்தவன் >  நிறைந்தான் > நிறஞ்சான் >  நிரஞ்சன் > ரஞ்சன்.

பழைமையில் தோன்றியதுதான் புதுமை. வெற்றிடத்தில் எதுவும் விளவதில்லை.

என்னதான் புதுமை மனிதனாக இருந்தாலும் அந்தக் காற்று இருக்கும் வரைதான் நீ மனிதன்.  இதை உணர்கிறோம் அன்றோ?

அ, இ, உ என்பவை திரிந்து பல ஆயிரக்கணக்கான சொற்களாயின என்று சிலர் கூறுவது அதனால்தான்.  ஆனால் பேசுகிறவனுக்கு ஒவ்வொரு சொல்லும் தனித்தனி அர்த்தம் உள்ளதாகத் தோன்றவேண்டும்.  அப்போதுதான் மொழியின் இயக்கம் சரியாக நடைபெறும்.  இதனால்தான் சட்ட நூல்களில் சொற்கள் வரையறவு (  definitiions ) செய்யப்படுகின்றன.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வெள்ளி, 31 ஜூலை, 2026

பிரசன்னம் அல்லது காட்சிதருதல்

 சான்னித்தியம் என்ற சமஸ்கிருத உருவாக்கத்தில்,  காட்சிதந்து நிற்றல் என்ற பொருளில் சொல்லமைகிறது.  சன்னம் ( பிரசன்னம்) என்பதற்கும் சான்னித்யம் என்பதற்கும் உள்ள நெருக்கத்தினை உணர்ந்துகொள்க. இவ்வேறுபாட்டில் உள்ள பொருளொற்றுமைகளையும் உணர்ந்துகொள்க. நீங்கள் 'வாரு'மே, மற்றும் 'வரு'க என்பவற்றில் வகரம் வாகாரம் எனச் சொல் மாறினும் பொருளொற்றுமை மாறவில்லை என்பதை அறிக.  அதே வருதல் என்பதுதான்.

அன் (அன்பு) என்ற  மூலமே,  அண் என்றும் (அண்மை என்பதில் ) மாறிவிடுகிறது. இனி,  அன் என்பது சன் என்று மாறுகிறது.  இதுபோலவே அண் என்பது சண் என்று மாறுகிறது.  இவை எல்லாம் அடுத்துநிற்றல் கருத்துத்தான். அன்பு என்பது ஒரு மனிதனை அடுத்துச்சென்று கொள்ளும் மனவுணர்வு.  அண்> அண்ணன் என்பவன் தம்பிக்கு அடுத்து மேல்நின்று பேணுவோன் அல்லது பராமரிப்பவன். காட்சிதருதல் என்பது காணத்தக்க வகையில் அடுத்துவருதல்.  அன்> சன் என்று திரியும். உள்ளமைந்த சன் தரும்  பிரசன்னம் இது என்பதை உணர்ந்துகொள்க.

இதிலிருந்து  அண்> ஆண் என்ற சொற்களைக் காண்போம்.  அண் என்பது மூல (அடி)ச்சொல். ஆண் என்பவன் பெண்ணை அடுத்துச் செல்பவன் அல்லது செல்லும் பிறப்பு  என்பது பொருளாகிறது.  ஆள் என்பதிலிருந்து ஆண் வந்தது என்று கொண்டு  ஆட்சி செய்வோன் எனப் பொருள்கொள்வது ஒக்குமா என்பது நன்கு ஆராயத்தக்கது. இது பொருண்மை பற்றியதாதலின், இதைப் பின்பு சிந்திக்கலாம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். எம் முடிவை இப்போது சொல்லவில்லை.

பிற என்பது பிர என்று வந்தது.  உண்டாதல் என்னும் கருத்து.  சன்னம் என்பது அடுத்து என்னும் கருத்தாதலின்,  பிற என்பது அதே பொருளில் வருவது பொருத்தம் என்று கொள்வதற்கில்லை. அடுத்து முன் தோன்றுதல் என்பதுதான் பிரசன்னம் என்பது ,    இஃது தெளிவாகின்றது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 27 ஜூலை, 2026

உக்கிராந்தி ( இறந்தவர்க்குத் தரும் பசுக்கொடை)

உக்கிராந்தி என்பது  உள்ளிருக்கும் ஆத்துமா  ( அகத்துமா>  ஆத்மா,  ஆன்மா )  உடலை விட்டு நீங்கிச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொல்..  ஆகவே ஆன்மாவின் வெளியேறுதலைக் குறிக்கிறது.  இதை இப்படிப் பிரித்தால் இதன் தமிழ்மூலம் தெளிவாகும்.

உக்கு + இற  --  ஆம் + தி.

உக்கு :  உட்கு > உள்+ கு.   இதன் பொருள், உள்ளே இருக்கும் ஆத்மா, 

இற :   இறந்தவாறு அல்லது இறந்த பின்.   இது இர என்று மாறிவிடும்.  வேறு சொல்லுள் ஒரு பகுதியாக வந்தால் அதன் வல்லின எழுத்து மாறிவிடும்.  ஆகவே ர வருவது பல சொற்களில் தெரிகிறது. பழைய சொல்லின் விளக்கங்களில் இதைக் குறிப்பிடும் இடங்களை யெல்லாம் படித்து, குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.இதன் மூலம் உக்கிர என்ற திரிபின் விளக்கம் தெளிவாகிறது.

ஆந்தி என்பது,   ஆம்+தி.   ஆம் என்பது ஆகும் என்பதன் தொகுப்பு.

தி என்பது விகுதி.  இதன் பொருள் திருப்பம் என்றும் சொல்ல, பொருந்துவதாகும்.

இது ஒரு சடங்கினைக் குறிக்க வழங்குகிறது.  இந்தச் சடங்கில் ஒரு பசுவைத் தானம் செய்வது குறிக்கப்படுகிறது.  ஆதலால் இறந்தவர்க்கு  ஒரு கொடை கிடைக்கிறது.  அவருடைய செல்லும் காலம், இடைஞ்சல்கள் இலாமல் நடைபெறுகிறது. இறந்தவர் சார்பில் இருப்பவர்களில் ஒருவரோ இருவரோ பெறுவர்.

ukkirānti from University of Madras "Tamil lexicon" (p. 386)


*உக்கிராந்தி ukkirānti , n. ut-krānti. Departure, usually of life or soul from the body; death; colloquially applied to the ceremony of giving away a cow uttering mantra with the prayer that a dying person may pass away without much suffering; மரணகாலத்திற் செய்யுங் கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார்.

''உக்கிராந்தி வாங்கும்/ கொடுக்கும் பாக்கியம் உடையவர்.  எல்லாம் இறைவன் அருள் '' என்று பேசிக்கொள்வதுண்டு.

இதை வேறு வகையிலும் விளக்கலாகும். 

இக்காலங்களில் பசுவாக இல்லாமல் பணமாகப் பெற்றுக்கொள்வர். 

மனிதவாழ்வைப் பசுமை செய்வதால் மாட்டுக்குப் பசு என்று பெயர். சிறப்பு, செல்வம், செவ்வி இவற்றைக் குறிப்பது இச்சொல் { பசுமை}. பசுவைப் பரிசாக்கியதற்கு இதுவே காரணம். செல்வத்தைப் பசை என்று குறிப்பதுமுண்டு.  பசு+ ஐ > பசை. பசு+ அம் > பாசம், முதனிலை நீண்டு விகுதி பெற்ற பெயர்ச்சொல் ( பசி முதலிய சொற்கள் இன்னொரு பதிவில் தருவோம்).

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்பு.

பகிர்வுரிமை 

சனி, 25 ஜூலை, 2026

சிதிலம் சிதலம்

 சிதிலம் என்பது காண்போம்.

சொற்கள்,  ஒவ்வொன்றும் ஒரு குடும்பம் போலவே இணைந்த சொற்களுடன் கூடிவாழ்கின்றன என்று சில  ஆய்வு நிபுணர்கள் குறித்துள்ளனர். இது ஒரு பேருண்மை என்று கூறலாம்.  சிது என்ற சொல்லே அடிச்சொல் ஆகும்.

சிது என்பதை உணர்ந்துகொள்ள,  சிறிது என்ற சொல்லைப் பார்க்கலாம்.  பெரிதாக இருந்த ஒன்று பிளந்தோ, உடைந்தோ, பிரிக்கப்பட்டோ,  சிறிது என்ற நிலையை அடைகிறது.  இதன்பின் சொல்லில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  சிறிது என்பது சிது என்று மாறுகிறது.  இது பேசுகிறவர்களின் நாவொலிப்பினால், அல்லது சொல்லமைப்பாளரின் திரிப்பினால் அல்லது வேறு காரணங்களால் ஏற்படலாம். சொல்லமைப்பாளர் அல்லது சொல் திரித்தோர், தங்கள் குறிப்புகளை விட்டுச்செல்லவில்லை. எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அதிற் கவனம் செலுத்தி அதைப் பாதுகாத்து வைத்துத் திறனாய்வு செய்தோர் யாரையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.   அதனால் சிது என்பதை இடைக்குறை அல்லது சொல் தொகுப்பு என்ற இலக்கணியர் தந்த  விதிகளின் மூலமே அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.   

சிது என்பது மீண்டும் அடிச்சொல்லாகி,  சிதை என்று ஐவிகுதி பெற்று, மீண்டும் வினையாகின்றது.  சிதைத்தல் என்பது தொழிற்பெயர்.

சிதிலம் என்பதை அறிய,  சிதை என்பதை பின்னோக்கிச் சிது என்று கண்டு,  மூலமாக்கி,  இல் அம் அல்லது அல் அம் என்பனவற்றைச் சேர்த்தால்,  சிதிலம் என்ற சொல்லை உணர்ந்துகொள்ளலாம்.  சிதைவு என்பதே அதன் பொருள்.

ஒரு சிலை சிதிலம் அடைந்துள்ளது என்றால், முழுவதும் சிதைந்துவிடாமல், இடங்களில் -  அதாவது சிலையில் சில பாகங்களில் தேய்ந்தோ, சில்விட்டோ, பெயர்வுகளாலோ, மாறுதல்களாலோ  -  சிதைவுகள் உள்ளன என்று தெரிந்துகொள்கிறோம்.

சிதிலம் :  இல் என்பதற்குப் பொருள் சொன்னால்,  ஒரு சிற்றிடம் என்று கொள்ளவேண்டும். இப்படி ஆங்காங்கு மேற்பரப்பில் தேய்வுகளும் மாற்றங்களும் உள்ளன. இதைச் சிதிலம் என்னலாம்.  

இதுபோல சிறப்புப் பொருள் அமைப்புகள் மொழியில் வெற்றிபெற்றிருக்க வில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிதிலம் என்பது சிதலம் என்றும் வழங்கும் என்பதறிக.  சிது என்ற அடி, சிது> சீத்து> சீத்தை எனவும் ஆகும்.  சிதிதலம் என்பதும் உளது.  இது பழைய நூல்களில் வரும் சொல். பொருள் அதுவே.  ஸிதிலம் என்று எழுதப்படுவதும் உண்டு.  

தமிழில் உரைநடை இல்லாத காலமும் இருந்தது.  எழுதி வைத்தவை எல்லாம் பாடல்களே ஆகும். பின்னர் பாடல்கள் கடினமாகி அவற்றுக்குப் பொருளறிய வேண்டி வந்த காலையில், உரை எழுதும் பழக்கம் வந்தது. சிறந்த உரையாசிரியர்கள் உருவாகினார்கள்.  அடியார்க்குநல்லார், சேனாவரையர், நச்சினார்க்கினியர் எனப்பலர்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

புதன், 22 ஜூலை, 2026

அபாரம் இன்னொரு விளக்கம்

 இதை விளக்குவோம்.

முன்னைத் தந்த விளக்கம் இங்கு உள்ளது.  ஒரு சொல்லைப் பலகோணங்களில் தமிழில் ஆராயலாம்.  தமிழ்மொழியில் ஒரு சொல் சிலேயாடைகிப் பலவழிகளிலும் பயன் தரலாம்.

சிலேடை என்றது சிலவாக எடுத்துக்கொள்ளத்தக்கது என்று பொருள்.  இந்தப் பொருளை யாம் சொல்லில் பகுத்தே விளக்குகிறோம்.  சில+ எடு+ ஐ >  சிலேடை என்று அமைக்கப்பட்ட சொல்.

பல்பொருள் எடுபடத்தக்க சொல் சிலேடை.

அ+ பாரம் .  பர > பர+அம் >  பாரம்.  இது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்றது.

அ என்பது அதிகம் என்பதன்  சுருக்கம்.  அது+ இகம் > அதிகம்.  இகத்தல்:  -  விரிதல்.  அங்கிருப்பது விரிந்து ஆவது என்பது பொருள்.

ஒன்று தன்னிலையினின்ற படி விரிந்து பரந்து காட்டினால் அது அபாரம் ஆகும்.

அதிகபாரம் உடையது என்றும் ஆகும்.

 இகத்தல் ikattal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 201)

இகத்தல் - கடத்தல், நடத்தல், பழிந்த ல், புறப்படுதல், பொறுத்தல், போ தல், மீறுதல், விட்டு விடுதல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

பகிர்வுரிமை உடையது.




திங்கள், 20 ஜூலை, 2026

மமதை மக்கர். இன்னும் சில

 மமதை என்பதன் சொல்வரவு எத்தகையது?

மமதை என்பது  மனத்தின் மருவுதலால்,  அம்மனத்தின் கண்ணே ஒரு மயக்கத்தினை விளைவிக்கும் ஓர் உணர்வுக்கு இடப்பட்ட பெயர். இது எவ்வாறு வந்த சொல் என்பதை இப்போது விளக்குவோம்..

மரு+  மது + ஐ>  ம  (ரு) மதை   > மமதை.

ருகரம் இடைக்குறைந்தது.

இதில்.   ஐ   விகுதி.

மிகுதியாய் வந்து முடிவது விகுதி.  மி- வி  போலித் திரிபு.   எ-டு: மிஞ்சு- விஞ்சு, (மிஞ்சுதல்  - விஞ்சுதல் ). 

மருமதை>  ம(ரு)மதை.

மயக்கினை விளைப்பது மது .


சில அரிய இடைக்குறைகள்:

இரு சொற்களுக்கும் பொதுவான இடைக்குறைச்சொல்.

மடக்கு> மடக்கர்> ம(ட)க்கர்> மக்கர்.

மயக்கு> மயக்கர்>௳(ய)க்கர்>மக்கர்.

கறுப்பிலம்>  க(று)ப்பிலம் > கபிலம்

கபிலம் என்பதற்கு வேறு உருவாக்கங்களும் உள.

நிகர், புகர்,  தகர்,  நகர்.

மகன்,  மகர்,  அன் விகுதிக்குப் பன்மையில் அர் வந்து முடிந்த சொல்.  மக+ அர்.

அர் விகுதியன்றி  ஆர் விகுதியும் வந்து முடியும்.  மகார் என்பது காண்க.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

.


சனி, 18 ஜூலை, 2026

கேந்திரம் என்பது

 மத்தியம் என்ற சொல்லுக்கு எழுதிய விளக்கத்தினை இப்போது  நினைவிற் கொள்வோம்.  அவ்விளக்கம் இங்கு உள்ளது.

https://sivamaalaa.blogspot.com/2025/12/blog-post_16.html

இதைச் சொடுக்கி,  இதன் பொருளை அறிந்துகொள்க. இது தொடர்புடைய பொருளாதலின், இதைப் பற்றிய விவரங்களைச் சுருக்கிக்கொள்கிறோம்.

கேந்திரம் என்ற சொல்,  கேளுந்திரம் என்ற சொல்லின் இடைக்குறை.  இதில் ளு என்பது குன்றியதுடன்,  திறம் என்பது திரம் என்றும் வந்தது.  இது இன்னொரு புதிய சொல்லின் பகுதியானல்,  ற என்ற வல்லொலி இடையினமாக மாறிவிடும். இதை பலசொற்களில் எடுத்துக்க்காட்டியுள்ளோம்.  பழைய இடுகைகளைப் பார்த்து, குறிப்பு எடுத்துக்கொள்க.

எடுத்துக்காட்டு.  சற்றுப் பரப்பு உடையதாகத் திறமாக அமைக்கப்படுவது பாத்திரம்.  திறம் என்பது திரமாகிப் பின்னொட்டாக ஆகிவிடுவதால்,  வல்லொலி ற  என்பது இடையின ரகரம் ஆகிவிடுகிறது.  அதாவது புதிய சொல்லின் பகுதியாக வருவதால்,  ற என்று வலித்து ஒலிக்கவேண்டியதில்லை. அதுதான் ஒலியமைப்பு மாற்றம்.

கே(ளு)ந்திரம் >  கேந்திரம்.

இதைக் கேள்> கேண்>...,  திரம் ( விகுதி),  ஆகவே >  கேந்திரம்  என்று விளக்கலாம்.  எப்படி விளக்கினாலும் மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்கப்படுகிறதா என்பதே முக்கியம் ஆகும்.

இது ஓர் அரசியற் சொல் என்பது புரியவேண்டும்.  படையினர் ஒரு நடுவிடத்திலிருந்து கொடுக்கும் கட்டளை,  படையின் பகுதிகள் நாற்புறம் கேட்டு நடந்துகொள்ளும் நடுப்பகுதிலும் கேட்கவேண்டும்.  அப்போதுதான் படைநடத்துதல் ஒழுங்காக நடைபெறும். பண்டை படையினர் சொற்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.  ஆகவே ஒவ்வொன்றாகத்தான் ஆய்ந்து அறிந்துகொள்ள முடிகிறது.  மேலும் பல சொற்களை அறிந்துகொள்ள எல்லா இந்திய மொழிகளில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


------------------------------------------------------------------------------------------------------------------

விவரம் என்பது என்பது,  வி(ரி)+ வரு + அம் என்று அமைந்த சொல்.  விரித்து வருவித்தல். சமஸ்கிருதம் என்பது சம (ஸ்) கதமான ஓர் இணைமொழி.  சம் - சம  ( ஒலியில் சமமான),  க(த்)து+ அம் > கதம்,   கதம் என்றால் ஒலி அமைப்பு. சம ஒலி மொழியாகத் தொடங்கிப் பின் விரிந்து பெருகியது.

முகு > முகம்;  முகு > மூக்கு;  முகு> முக்கு+ இ+ அம் > முக்கியம்.

புதன், 15 ஜூலை, 2026

அரம்பை, அரம்பையர், ரம்பை, ரம்பா

 இந்தச்  சொற்கள்  வழக்கில் சற்று  குறைந்துள்ளன என்று தெரிகிறது.

அரம்பை என்பவள் ஒரு தேவருலக மாது என்பர். இச்சொல் பன்மையில் அரம்பையர் என்று வரும். இச்சொல் தலையிழந்தபின்,  ரம்பை, ரம்பா என்றும் வழங்கும்.

அரம்பை என்ற சொல்லின் பகவுகள் ( உட்பிரிவுகள்),   அரு+ அம்+ பை  என்பன. இவற்றை இணைத்தால் ''அரம்பை''  என்ற சொல் வந்துவிடும். பாணினியில் சமஸ்கிருதச் சொற்பிரிப்பின்படி,  வேறு பிரிப்புகள் இருக்கும்.  பிற எழுத்தாளர்கள்,  வேற்று விளக்கங்களும் அளித்திருப்பர்.  அவற்றை  அவர்களின் நூல்களில் அறிந்துகொள்ளவும். அரம்பை -  பாற்கடற் பாவையருள் ஒருவர்.

அரு என்பதே முதற்பகவு.  அரிய என்ற பொருள்தரும்.

அம் என்பது அழகைக் குறிப்பது. அம் - அம்மை : அழகு.

பை என்பது இளமை குறிக்கும் அடிச்சொல்.   பை> பய் என்றும் வரும்.  பய்> பயில். பயிலுதல் -  தொடக்கப் படிப்பைக் குறிக்கும்.  பய்- பயிர்:  முளைப்பனவில் இளம்பகுதி.  பய் > பயம்:  ஒன்றை முழுமையாக அறியாத போது தோன்றும்  அச்ச உணர்வு என்று சொல்க.  பை > யையன்.  இந்தச் சொல்  boy என்று இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வரும். கிரேக்க மொழிச்சொல் ''பைஸ்'' என்பது உறவுச்சொல்லாகக் காட்டப்பெறும். இளநாட்களில் விளைதல் ''பயத்தல்''  என் க.  இந்த இளமைப் பொருள் நாளடைவில் தேய்வுற்றது -  பிறமொழிகளில்.

அரம்பை என்பதில் இறுதியில் இச்சொல்லே பகவாகும்.

பொருள்:  அழகுடன் இளமையும் உடைய பேரழகி. இது தமிழிலிருந்து வருவது.

அறிக மகிழ்க

மெய்ப்பு: பின்னர்

பகிர்வுரிமை




திங்கள், 13 ஜூலை, 2026

காரன் சொல் - அப்பக்காரன், குருவிக்காரன் முதலிய பல

 குருவிக்கு  ஆர்  வந்தார்  >  குருவிக்கார் வந்தார்>   குருவிக்காரன் வந்தான் என்றபடி வந்த சொல்தான் இது.  இங்கு குருவிக்கு அவர்>   என்பதே குருவிக்கவர்> குருவிக்கார் என்றும் வரும்.  காரன் என்பது ,..கு+ஆர்+அன் என்பதன் பிறழ்பிரிப்பு.  ஆர் என்பது   ஆர்> ஆரன்,  இது  கு+ ஆர்+ அன் என்பதே.

அப்பத்துக்கு  அவர்>  அப்பத்துக்கவர்>  அப்பத்துக்கார்>  அப்பக்கார்>  அப்பக்காரன்.   இப்போது காரன், காரர் என்பன வந்தன.

இது போல் பிறழ்பிரிப்புச் சொற்கள் முன்னர் மொழியறிஞர்களால் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

வாழ்கு+ இன்று+ ஆன் >  வாழ்கின்றான் என்று வந்தது காண்க.

அன்றி,  கின்று என்பது ஓர் நிகழ்கால இடைநிலை என்றனர்.  அதன் மூலம் கு+ இன்று  என்பதுதான்.  இலக்கணியர் இதை மறைத்தனர்.  நன்னூல் இப்படிச் சொல்லும்.  தவறு ஒன்றுமில்லை.  விரைவாக உணர்ந்துகொள்வதற்காக இலக்கணம் இப்படிக் கையாளும்.

இது வடநாட்டில்  கார் என்று குன்றிவழங்கும்.

இன்னொரு விளக்கமும் உண்டு. பின் சொல்வோம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

வியாழன், 9 ஜூலை, 2026

பரிபூரணானந்தம். பெயரமைவு



இந்தச் சொல்லை அல்லது சொற்றொடரை இப்போது கவனிப்போம்.

இது இறைவனுக்கு ஒரு பெயராகத் தாயுமான சுவாமிகள் பயன்படுத்துகிறார். பரிந்து -  இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி,  எங்கும் புகுந்து, ஆவிக்கு மகிழ்வினைத் தந்துகொண்டிருப்பது இறைமை என்னும் உடனறிந்திட இயல்பாக இயலாத நன்றான ஒன்றுதான் ''பரிபூரணானந்தம்'' .

''பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமே'' என்ற பாடல் தொடரில் இது வருகின்றது.

பரிதல் என்ற சொல்லுக்கு கதிர்வேலுப்பிள்ளை எல்லாப் பொருள்களையும் விரித்துத் தருகிறார். இவற்றைச் சுருக்கமாக:

பரிதல் - அறுத்தல், அன்பு,  அன்போடு பேசல், இரங்கல், ஒடித்தல், ஒழுகல், தறித்தல், பங்கிடல், பரிந்து பேசுதல், வெட்டுதல்.

என்று சுருங்கச் சொல்லலாம். பரிதல் என்ற சொல், அதன் முன்வடிவில் பருத்தல் என்றிருந்தது. பரு> பரி. பருத்தது எல்லை கடப்பின் அறுபடும்; ஆகையால் அறுத்தல், அப்புறம் ஒடித்தல், ஒடிபட்டபின் இன்னொன்றுடன் இணைந்து நடத்தல், காதுதல் இன்ன பிறவும் அறிக

மனவுணர்வு கலந்து நடைபெறுதலும் இவற்றுள் வரும்.

புகு(தல்) என்பது பேச்சில் பூர்தல் என்றும் வரும். இதன் எச்சம் பூந்து என்று பேச்சில் வருவதுண்டு. இதைப் புகுந்து என்பதன் திரிபாகவும் கருதற்கு இடனுண்டு. புகு> பூர்> பூரணம் என்பதே இச்சொல்லின் அமைவு. சங்கதத்தில் (சமஸ்கிருதத்தில்) பூரணம் என்ற சொல் இருப்பின் இது தமிழ்த் திரிபுதான். பூர்தல் pūrtal from Kadirvelu Pillai's "Tamil Moli Akarathi" (p. 1065)
பூர்தல் - நிறைதல். என்பதும் கூறப்படுகிறது.

ஆக நன்று அம் > ஆ+ நன் + து + அம் > ஆனந்தமானது காணலாம்.

வினைச்சொற்கள் எங்கு இருக்கின்றனவோ. அந்த மொழிக்குரியவை சொற்கள்.  இங்கு சொற்கள் ஆவன:  பரிதல், பூர்தல், ஆதல், நன்று, அமைதல் என்பவை.

இவற்றைக் கூட்டிப் பொருளுரைத்துக்கொள்க.

சமஸ்கிருதம் என்பது சம + கதம். கதம் - ஒலி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


திங்கள், 6 ஜூலை, 2026

இடைக்குறை இல்லாத மொழியா தமிழ்?

 இடைக்குறைகள், குறுக்கங்கள்  முதலியன இல்லாத மொழி தமிழ் என்று எவனாவது சொன்னால் அவனுக்குப் புகட்ட என்ன செய்வீர்?

பத்து    இது முழுச்சொல்.

ஆனால் ஒன்பது? 

ஒன் என்பது ஒன்று  என்பதன்  கடை எழுத்தில் வெட்டு.

இதைக் கடைக்குறை என்று சொல்வோம்.

அடுத்தது: பத்து என்பது பது என்றன்றோ வருகிறது.

இது ஓர் இடைக்குறைச் சொல்தான்.  ஒன்று பத்து >  ஒன்+ பது > ஒன்பது.


அடுத்து,  பன்னிரண்டு என்பதை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் சொல்லலாம்.

பத்து+ இன் >  பத்தின்>  பதின்> பன்+ இரண்டு >  பன்னிரண்டு..

பத்தொன்பது என்ற சொல் எப்படி வருகிறது.

கண்ணை மூடிக்கொண்டு படிப்பவர்கள்தாம்  அதிகம்.

அப்படியாவது படித்தால் நன்மைதான்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

பகிர்வுரிமை.


வியாழன், 2 ஜூலை, 2026

சுவர் என்றது

 சுவர் என்பது எவ்வாறு வந்தது -   தமிழில்?

இதைச் சுருக்கமாக,  சுற்றிலும் இருப்பது என்று சொல்லிவிடலாம்.    சுற்றிலும் என்பது ,  சு என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.  இங்கு இருப்பது என்பதை இரண்டாவது பகவாக எடுத்துக்கொண்டால்,  இ  என்ற எழுத்தைப் போட்டு விளக்கலாம்.  சு+ இரு>  சு+ வ்+ இரு>   சுவிரு என்று வந்து .  சுவரு என்று திரிந்ததாகக் கொள்ளலாம் என்றாலும்,   இரு என்னாமல்  வரு என்று எடுத்துக்கொள்வதே இயல்பானதாகும்.   சு+ வரு >  சுவரு என் க.   வரு என்பது பேச்சுக்குச் சரியாகலாம் என்றாலும்,  வர் என்று குறுக்கியே இணைத்தால், அதிக விளக்கம் இன்றி முடித்துக்கொள்ளலாம்.   அரசுக்கு வருகின்ற வசூல் பணம்,    வரு என்பதினின்றே குறுகி,  வர்> வரி என்றே ஆக்கமுறும் சொல்.  சு+ வர் என்பதும் இவ்வாறே  '' சுற்றி வரும் அடைப்புத்தடுப்பு''  என்று  ஆகிறது. இதிலிருந்து சு+வர் >  சுற்றிவரும் வீட்டின் அடைதடுப்பு  என்று சுருக்கி முடிக்க.

வர் என்பதே மூலச்சொல்.  (வர்)> வரு>வந்(தான்)>வா    என்பவற்றுக்கெல்லாம்  முன்னது மூலம். இம்மூலத்தினின்று  வருடம் --இன்னும் பல உருவாகியுள்ளன. எம் பட்டியலில் தேடிக் காண்க.

இந்த உண்மையை,  எந்த நூலையும் பார்த்துத் தெரிந்துகொள்ளாமல் நாம் சரியாகச் சொல்லியிருக்கிறோம்.

சு+வர் என்னாமல் சு+ வம் என்றாலும் சரிதான்.   வரு என்ற சொல், வம் என்றும் திரியும்.   '' வம்மினோ''  என்றால்  வருமினோ என்று சொல்வதே  ஆகும். ''வம்மின் மக்காள்''  என்பது இவ்வாறும் திரியும் என்பது அறிந்துகொள்ள,  பழந்தமிழ் அறிந்திருக்கவேண்டும். பழந்தமிழ் உரையாசிரியர்களின் எழுத்துக்களையும் வாசித்து அறிந்திருக்கவேண்டும்.  இற்றை நாட்களில் இதை அறிந்தோர் சிலரே ஆவர்.

சுவரைச் செவர் என்ற பேச்சுத் தமிழ்  பொருந்தாது.   அது வெறுந்திரிபுதான். முதலெழுத்துக்களை வைத்தே ஒருவாறு சொல்லைப் படைத்துவிடலாம் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை

செவ்வாய், 30 ஜூன், 2026

வெண்சாந்துக்கு வேறுபெயர் ''தான்-தோன்றி'' யானது அன்று

 சாந்து என்ற நீர்ப்பூச்சு போன்ற பொருள்,   வெண்மையாக இருக்குங்கால்,  அதை வெண்சாந்து என்று பெயரிட்டு அழைப்பது ஒரு திறமான செயல் என்றே ஏற்றுக்கொள்ளலாம்.  ஆனால் மனித சமுதாயத்தினர்  அல்லது குமுக உறுப்பினர்கள் எப்போதுமே இவ்வாறு வெளிப்படையாக நடந்துகொள்ள முடிவதில்லை.  சிலவேளைகளில் சிலவற்றை வெளிப்படைத்தன்மை குறைந்துச் சொல்வது எல்லா இனக்குழுவினரிடத்தும் காணப்பெறும் ஒரு பொது நடப்புத் தன்மை என்று கூறவேண்டும். அவற்றுள்ளும் அச்சாந்து போல்வன மனித உடலுள் இருந்தே வெளிப்பட்டிருந்தால்,   உடற்கழிவுக்கும் அதற்கும் வேறுபாடு குறுக்கமாகிவிடுகிறது.

வெண்சாந்துக்கும் மற்றவற்றுக்கும் வேறுபாடு குறைந்துவிடுகிறது.  வெண்சாந்து உடலிற் பிறந்திட்ட பின் வெளிப்பட்டிருந்தால்,  அதில் காணும் வெண்நிறத்தை மறைத்துச் சொல்லி,  இடக்கர் அடக்கலாக்கி விடுதலே சிறப்பு ஆகும்.   வெண்து  என்பதை,  விண்து என்று திரித்தபின்,  விந்து என்று மாற்றுதலே சிறப்பு ஆகும்.  இத்தகு முறைகள், சொல்லாக்கத்திற் கடைப்பிடிக்கப்பட்டன.

சாந்து என்பது  (சுவர் முதலிய)   வீட்டின் சுவர்களைச் சார்ந்திருப்பனவே என்பதும் அதன் காரணமாக பெயர் பெற்றவை என்பதும் தெளிவே  எனினும், அதைச் சார்>  சா>  சாந்து என்று ரகர ஒற்றை ஒளித்து அமைத்தது ஒரு சிறப்பு ஆகுமென்க.  இஃதுபோலவே  வெண் என்பது மறைந்து  விண் என்ற மற்றொரு வெண்மைவெளித் தன்மை வெளிப்பட்டதும்   சிறப்பே என்று கூறிச்செல்க.   சொல்லாய்வில் இவை தற்செயலாக வெளிப்ப்பட்டவை என்று எண்ணுவது ஆய்வின்மை என்றே  முடிக்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்மை

பகிர்வுரிமை



ilavakam இலாவகம்

 ஒன்றைச் செய்ய விழைந்தவன்,   அவ் விழைந்த செயலின்பால் மனத்தைச் செலுத்தாமலும்,  உடல்முயற்சி செய்யமலும் அக்காரியத்தை  செய்து முடிப்பனாயின்  அவன் அதனை இலாவகமாகச் செய்து முடித்தான் எனல் சரியாகும்.

இப்படிச் செய்து முடித்தால்,  ( மனமுயற்சியும் செயல்முயற்சியும் இல்லாமல்  முடிப்பீரானால் ),  உண்மையில் அதைத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

எளிதாக்கம்,  நுணுக்கம் காட்டுதல், சாதுரியமாகச் செய்தல், சீருடன் முடித்தல் என்று பலவாறும் கூறலாம்.

இனிச் சொல்லைப் பார்ப்போம்.

இலா+ அகம் >  இலாவகம்.

உள்ளிருந்து வெளிவந்து   செயலைச் செய்ய உதவுவது:  மனத் திட்பம் மட்டுமன்றி, உடலின் கைகளின் ஆற்றல் முதலியவையும் தாம்.   மனவலிமை மட்டுமின்றி உடல்வல்லமையையும் இது உளப்படுத்தும் என்பதறிக.

இற்றை நிலையில் செயலகத்தில் பணி செயவதில் திறமையானவர், வெளியிடங்களிலும் அவ்வாறு திறமை காட்டினால் அவர் செயலும் இலாவகம் என்று கொள்ளப்படுதல் கூடும்.  செயலகம் இல்லாதவிடத்தும் மனத்திட்பத்துடன் பணிபுரிவது.

(1) இலகுவாக, (2) இலாகுவாக என்றும் வழங்குவதாகத் தெரியும் சொல் இது.

இல் என்பதும் இலா என்பதும் ஒன்றுதான். இல் அகு, இலா அகு, இலா அகு அம், இவை ஒன்றுதாம்.  சுருக்கி எழுதவும் விரித்து எழுதவும் இயலும் மொழி தமிழ்.  இது ஒரு வசதி  ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


சனி, 27 ஜூன், 2026

நபர் என்னும் சொல் ( நண்பர் இடைக்குறை)

நண்பர் என்ற சொல்லை ஒரு சீனர், மலாய்க்காரர், இந்தோனேஷியர், வெள்ளைக்காரர் ஆகியோரிடம் சொல்லிக்கொடுத்து,  உச்சரிக்கச் செய்தால் அதைச் சரியாக வெளிப்படுத்த அவர்களால் இயல்வதில்லை. இதைப் போலவே நம்மில் பலருக்கு, பிறமொழியில் பல சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதனால் தமிழ்ச்சொற்கள் வேற்று மொழிக்காரர்களால் கையாளப்படும்போது வேறுபாடுகள் வெளிப்படுகின்றன.  இது எந்த மொழிச்சொல் என்ற கேள்வி வரும்போது, பதிலைத் தருகிறோம்.

ஒரு சொல் எந்த மொழிக்கும் சொந்த மாக இருக்கும்;  பிறமொழிச் சொற்களைக்   கற்று,  எவ்வெச் சொற்கள் எவ்வாறு  திரிகின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லலாம்.  அவ்  இருப்பினால் மட்டும் அந்தச் சொல்லுக்கென்று எந்த தகுதிமேம்பாடும் ஏற்படுவதில்லை. உச்சரிப்பினால்மட்டும் ஒரு சொல்லுக்கு  நிலையுயர்வு உண்டாகு மென்பது ஒரு வெற்றுக்கற்பனை.   பிறழ் பலுக்கினால் (தடுமாறி உச்சரித்தால்) சொல் புரியாமற் போய்விடும் இடர் உள்ளது என்பது மட்டுமே   உண்மை ஆகும்.

நீங்கள் உங்கள் கருத்தை இங்குப் பதிவிடலாம். இவ்வுரிமை யார்க்கும் உள்ளதே ஆகும்.   இதனை நாம் மதிப்போம்.   ஆனால் பின்னர் உண்மை இது என்றும் சொல்லவேண்டும். நீங்களும் இங்கு இதைச் சொல்லலாம்.

நண்பர் என்பது தமிழில் வழங்கிய சொல்.  இதை தமிழரல்லாதார் சொல்லும்போது,  நண் என்பதைச் சொல்வதற்கு இடர்ப்படுவர்.  அதனால் ண் என்பதை விடுத்து, நபர் என்றுதான் சொல்வர். ண் அப்படியே வந்தாலும் அரைகுறையாக வெளிப்படும்.  இப்படிப் பிறர்க்கு தொந்தரவு கொடுப்பதினும் நபர் என்று நாமும் சொல்லி அவர்களுடன் இணைந்துவிடுவது சிறப்பு   ஆகும்.  உங்கள் தமிழ் நாவிற்காக மற்றவர்களைத் தொல்லைப்படுத்தாமை நன்று.  அப்படி வந்தது தான் நபர்,   பின்னர் நபர் வேறு, நண்பர் வேறு என்று எண்ணிவிட்டனர்.

நபர் என்ற அதை ஒலித்ததனால் இன்னொரு சொல் கிடைத்துள்ளது என்று மகிழ்வு கொள்ளவேண்டும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

28.06.2029 திருத்தம்.

பகிர்வுரிமை 











ர்ர

செவ்வாய், 23 ஜூன், 2026

சேதம் செது என்னும் அடிச்சொல்

 செது என்பது ஓர்  அடிச்சொல்.  தமிழில் உள்ளது. இழைத்தல் என்பதுp ஏறக்குறைய இச்சொல்லின் பொருளாகலாம். இச்சொற்கள் பருப்பொருள் ஒற்றுமையும் நுண்பொருள் வேறுபாடுகளும் உடையனவாயிருப்பது மறுக்கவியலாது. ஒன்று ஒருவருக்குக் கூடுதலான அல்லது குறைவான பொருண்மையை வழங்கலாம். நிகண்டுகள் எது கூறினும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தெடுக்கும் காரணங்களும் இருக்கும்..

செதுக்குவது வேறு  இழைப்பது வேறு எனலாம்.

கதுவுதல் என்றாலும் செதுக்குதல்தான்.   இதிலிருந்து கதவு என்ற சொல் வருகிறது. பழங்காலக் கதவுகள் செதுக்கிச் சேர்க்கப்பட்டவை.  இப்போது நெகிழிக் (plastic) கதவுகள் ஒரே வார்ப்பாக உள்ளன, இணைக்கப்பட்டவையும் உள,

கது > கதுவு > கதுவுதல்  ( வினைச்சொல்: கதுவு).

கது >  கதுவு >  கதவு.

ஒப்பு:

உது > உதவு  

உது என்பது முன்செல்லுதல் குறிக்கும் அடிச்சொல்.

மடை என்பது  மதகு   எனவும் படுவதாகும்,.இவற்றின் வேலை,  அளவோடு நீரை வெளியேற்றுதல்.

இனிச் செது.   இந்த அடியிலிருந்து,   

செது >  செதுக்கு.

செது > செத+ அம் > சேதம்.  முதனிலை நீண்டு அமைந்த தொழிற்பெயர்.

ஒப்பு:  சா+ அம் > சவம்,  இங்கு முதனிலை குறுகிற்று.   தோண்டு > தொண்டை என்பதிலும் காண்க.

செது - ( செதும்பு )- செதும்பல்.   ( குழம்பிய மண்).

செதும்பல் தாமரை.

செதுகு என்பது குப்பை கூளத்தையும் உட்படுத்தும் சொல்.  செதுகாத படை என்றால் குற்றமற்ற படை என்றும் பொருள்.

செதுகை என்றால் தீமை என்றும் பொருள்.  சேதமில்லாத இந்துஸ்தான் என்று பாரதியார் பாடலில் வருகிறது.

செது என்னும் அடிச்சொல்லை அறிந்துகொண்டோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





சனி, 20 ஜூன், 2026

விமானம்தாங்கி (க் கப்பல்)

 வி என்பது சிறப்புடைய என்று பொருள்தரும் ஒரு முன்னொட்டு. வியன், விழுமிய, விரி(தல்)  முதலிய சொற்கள், விரிவு, சிறப்பு என்றெல்லாம் பொருள்தருவன.  இதைச் சுருக்கித்தான் வி- என்பது முன்னொட்டாக ஏற்படுத்தப் பட்டதென்பது உணர்க.

மானுதல் எனின் ஒத்திருத்தல். மன் என்ற சொல்லும் மன்னுதல் என்று வினையாகும். மன் - மன்+ இது+ அன் >  மனிதன்.  து என்பது அஃறிணை ஒருமை என்றாலும்,  பல சொல்லாக்கங்களில் ஆக்கத்துணைச்சொல்லாகப் பயன்பாடு கண்டுள்ளது. அழிதல், ஒழிதல் என்பனவில்  தல் என்பது  து+அல் >தல் என்பதே ஆகும். நரி ஓடியது என்பதில்  து என்பது அஃறினை ஒருமை காட்டினால்,  தல் என்பதில் அது  வினைச்சொல் என்று குறிக்கவந்து,  தொழிற்பெயராய்த் தெளிவிக்கிறது. எழுது என்பதில் அது வினையாக்க விகுதியாய் நிற்கிறது. எழுதல் வேறு, எழுதுதல் வேறு.  பொருது என்பதில் அது வினையாக்கம் செய்கிறது.  பொருந்து என்பதிலும் அது இன்னொரு சொல்லைப் பிறப்பிக்கிறது. தல் என்பது து+அல் இணைந்த நிலை அறிக.  து என்பது என்னவெனில், அதன் தொழில் அல்லது செயல் யாது என்பதைக் கணித்தே அதற்குப் பெயர் கூறவேண்டும்.

மான என்பது ஒரு உவமவுருபும்  ஆகும்.

மானம் என்றால் ஒப்பாகச் செய்யப்பட்டது என்று பொருள் கொள்ளவேண்டும்.

விழு+ மானம் >  விமானம்.  எல்லாம் தமிழ்தான்..   குறுகி ( வி என்பது விழு என்பதன் குறுகிய முன்னொட்டாக ) விமானம் என்ற சொல் ஆகின்றது.

சம+ கதம் > சம+ கிருதம் >  சமஸ்கிருதம் என்றால் சம ஒலி உடைய மொழி.  எதற்குச் சமம் என்றால், தமிழுக்குச் சமமான ஒலியை உடைய மொழி. இங்கு ஸ் வந்தது ஒரு மென்மையாக்கம். சமக்கிருதம் எனில் கடினமாக இருக்கும்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி.  1>

குறளை மனத்தில் இருத்துக.

சமம் > சமன் , இது  அறம் > அறன் போலும் திரிபு.

தமிழ் மொழியின் சொற்கள் உலகெங்கும் எல்லா மொழிகளிலும் உள.  And என்பது  அண்டு(தல்) என்ற வினைச்சொல்லின் திரிபுதான். எட் என்ற இலத்தீன், அடு(த்தல்) என்பதன் குறுக்கம்தான்.  தா என்ற சீனச்சொல்,  தாக்கு என்பதன் வினையாக்கவிகுதி நீங்கிய வினைதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


1>சமம் என்பது ஒப்பு என்று பொருள்படும்  தமிழ்ச்சொல்.  

வியாழன், 18 ஜூன், 2026

இரகசியம் (ரகஸ்யம், ரகசியம்)

 இரகசியம் என்ற சொல். தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டில் வழங்கிவரும் சொல்லே ஆகும்.

ஏகாந்தம் என்ற சொல்லும்  இரகசியம் என்பதனோடு ஒத்த பொருளுடையதாய்க் கருதப்படுதல் கூடும். எனினும் இவ்விரு சொற்களும் தமிழறிந்தாரிடை ஒத்த பொருளுடையனவாய் நாட்டில் வழங்கவில்லை. ஏகாந்தம் என்பது ஒருவன் தனித்திருக்குமிடத்தைக் குறித்ததென்பதும் தெரிகிறது.  அறிஞர் கதிர்வேலுப் பிள்ளை (  அகரவரிசைத் தொகுப்பாளர்) , தனியிடம், ஒருவந்தம், தீனியிடம், வேறிடம் என்றும் பொருள் கூறுவார்.

ஒருவந்தம் என்ற சொல்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்  (குறள் 563)

என்ற குறளில்  ஒருவந்தம் என்பது திண்ணமாக என்ற பொருளுடைத்தாகிறது. இங்கு ஒருவந்தம் என்பது ஏகாந்தம்  அல்லது இரகசியம் என்ற பொருளின் வேறுபடுவதாகத் தெரிகிறது.  வெறு (த்தல்) என்ற சொல் கூட்டுச்சொல்லாய் வந்தவிடத்து,  இதிலுள்ள றுகரம்  ருகரமாகிவிடும் என்ற எம் கண்டுபிடிப்பு சரியாகவே  உள்ளது.  இதைப் பிறரும் கூறியிருத்தல் கூடும். விரித்துணர்ந்துகொள்க.  ஒருவந்தம் எனின் ஒரேமுடிபாய் உள்ளது அல்லது உள்ளவை. ஒரு+ வன் + தம்  :  ஒரு -  ஒரே.  வல்> வன் > வன்+து> வந்து>  வந்து+ அம்> வந்தம்.  வன்- வன்மையானவாய் அமைவது,  அமைபவை.  முடிபு.  கெடுவது மிக்கத் திண்ணமானது என்பது இக்குறள் கூறுவது.  இது தமிழ்ச்சொல், வடசொல், கலப்புச் சொல் என்றெல்லாம் அலைவு தேவையற்றது.  சரியான பொருளே காண  வேண்டுமென்க. ஏகாந்தம் என்பது வேறு.  ஏகாந்தம் என்பது, ஒற்றைப்பொருள், ஏகும் பொருள் என்று இருவிதமாய்  வரவும் கூடும்.  ஒன்று ஏகின், இன்னொன்று வலிவாகும் என்பன போலும் கருத்துக்கள்.

பல்பொருள் ஒருசொல் என்றிருப்பவற்றில், ஒருசொல்லை இன்னொன்றுக்கு ஒத்த பொருளுடையது என்று சொல்ல முடிவதில்லை.  பயன்பாடு கருதியவிடத்து மட்டும் அவ்வாறு உரைத்தல் ஏற்புடைத்தாகலாம்.

இரகசியம் என்பது.

சிலர், சங்க இலக்கியங்களில் பயன்படுத்தியவை மட்டுமே தமிழ்ச்சொற்கள் என்ற பெயருக்குத் தகுதி உடையவை  என்று கருதுவர்.  அவ்வாறு கருதுவதாயின் ''சங்கத் தமிழ்ச் சொற்கள்''  என்று விதந்து  அவற்றை உரைக்க வேண்டும்.  அல்லது கழக இலக்கியச் சொற்கள்  என்று கூறவேண்டும். தமிழ் என்பது சங்க காலத்தையும் முந்தி இருந்த சொற்கள்.  அக்காலத்துக்கும் முன்னே சென்றால், பண்டைத் தமிழ் என்றோ, மற்ற பொருத்தம் நோக்கியோ சொல்லவேண்டும்.

இனி, இரகசியம். இச்சொல் ஆனது இவ்வாறு:

இரு +  அகம் + சி + அம் >  இரகசியம்.

நிகழ்வதைப் பற்றிய ஒரு கருத்து,   அகத்தில் இருப்பதாய்,  வெளியிடப் படாத சிறப்பு (சி)  உடையதாய்  அமைந்திருக்குமாயின்,  அது இரகசியம் என்பது சொல்லில் உட்பகவுகள் மூலமாய்த் தெளிவாய்த் தெரிகிறது.  அகத்தினுள் மறைந்து வெளிவராமைச் சிறப்புடன் இருப்பது இரகசியம்.  அதை வெளிப்படுத்துவோனே  '' இதுதான் இதன் இரகசியம்;  வெளிப்படுத்துகிறேன்'' என்று அதற்குப் பெயரிடத் தக்கவன். அதை முன் அறியாமல் கேட்ட பின்பே அறிந்துகொள்பவனும் அதை அவ்வாறு பெயரிட்டுக் குறிக்கலாம்.  ஒன்று ''தனிமைப் பண்பு''  உடைமையால் அவ்வாறு தகுதியுற்றதாகுமா எனின், அஃது அகத்திலிருத்தல், வெளிவராமை ஆகிய குணநலன்கள் இல்லாதவை ஆயின், இரகசியம் ஆகமாட்டா.  தனிமை என்பது வேறு , அகத்தினுள் மறைவாய் இருப்பது வேறு என்று முடிக்கவேண்டும்.

இச்சொல்லின் உள்ளிருப்பனவற்றால், இரகசியம் என்பது ஒரு தனிச்சிறப்புற்ற சொல்லாகிறது என்பது அறிக. இதை ஒரு பொதுச்சொல் என்று கொள்க. அதாவது இருமொழிக்கும் உரியவை,  ஆயின் தமிழ் மூலங்கள் உடையவை என்று விரிக்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 15 ஜூன், 2026

சீக்கிரம்

 இச்சொல்லை இன்று அறிவோம்.

முன்னர் வெளியிட்டது இதுவாகும்:

https://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_72.html

முன் எழுதியது இவ்வாறாயினும்,  அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கம் ஒரு சொல்லுக்கு எழுதினால் குழப்பம் உண்டாகுமென்பதனால்,  ஒன்றே வெளியிட்டோம்.  சில சொற்கள் உண்மையில் பலபிறப்பிகளாக இருப்பனவாதலால்,  யாம் சிறந்தது என்று கருதும் இன்னொரு கருத்தையும் இன்று வெளியிடுகிறோம்.

இது சீர்க்கு + இறும் >  சீர்க்கிறும் >  சீக்கிறம் என்றாகி,  சீக்கிரம்  என்பதாகும்.

இச்சொல்லில் ரகர ஒற்று மறைந்தது.

இன்னொரு சொல்லமைப்பில் புகுந்த காலை,  றகர மாவது,  ரகரம்  ஆகிவிடும்.

இத்தகைய திரிபு பல சொல்லாக்கங்களில் வந்துள்ளது.  அதை வேறு சில இடுகைகளில் யாம் சுட்டிக்காட்டி யுள்ளோம்.  கண்டு தெளிக.

சீர்க்கு இறும் என்னில்,   சீரை அடைந்து முடியும் என்பதுதான்.  இதில் வரும் இறும் என்ற சொல்  முடியும் என்ற வினைமுற்று.  இங்கு இது  புதிய சொல்லின் இறுதிப் பகவாக வருகிறது.  பகவு என்றால் சொல்லமைப்பின்  இன்னொரு பகுதி என்ற பொருளில் எழுதுகிறோம் என்பதறிக.

இரும்> இரம் என்று திரிவதாகக் காட்டினும்,  இருக்கும் என்ற பொருளில் சரியாகவே வரும் என்பதறிக.

முன் செய்த ஆய்வில், கிறங்குதல் என்ற வினைச்சொல் கவனம் பெற்றது.  சீர்க் + கிறம் -->  என்றால்,  சீரான எதிர்பார்ப்புக்குரிய வேகத்துடன் முடித்திடு என்பதே பொருள். முன் இடுகையில் நோக்கி அறிக. 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

பகிர்வு




வியாழன், 11 ஜூன், 2026

பிரபலம் திரிபுச்சொல்.

 இன்று பிரபலம் என்ற திரிபுச்சொல்லைக் காண்போம்.. இதைத் திரிசொல் என்று சொன்னாலும், திரிபுச்சொல் என்றாலும் பொருள் ஒன்றுதான்.

சிலர் தம் குடுப்பத்திலே நன்கு மதிக்கப்பட்டு, சிறப்புடன் வாழ்வர்.  வெளியாரில் பலரும் இத்தகையோரை அறிந்திருப்பர்.  பலர் அகத்தும் புறத்தும் மிக்க அரிய புகழை அடைந்து,  நாடறிந்த நல்லவராக இருப்பர்.  இவரை மிக்கப் பிரபலமானவர் என்று சொல்வர்.

அறிமுக நிலை மிக்க விரிவடைந்து,  மிக்கப் பகழுடன் இருத்தலே பிரபலம்  என்பதறிந்தோம்.   இத்தகையோரின் பின்பு, பெருந்திரளாக மக்கள் இருப்பர். இந்தச் சொல்லும் நம் ஆய்வில் தமிழே  ஆகும்.   'பிறர்' , 'பலர்' என்ற சொற்களின் அடிப்படையில் அமைந்ததே இது.

'பிறர்' + 'பலர்' >  பிரபலம்.

குடும்பத்திலிருந்தோர் இருப்போர் மட்டுமின்றிப்  பிறர் பலரும் அறிந்த  நபர் என்று வரையறை செய்யவேண்டும்.

திரிசொற்களை அவை தமிழ் மூலமுடையன வாயினும்  சமஸ்கிருதம் என்று வகைப்படுத்தியது சரியென்றே சொல்க.  இதற்குக் காரணம் திரிசொற்கள் சமஸ்கிருத்திலிருந்தால் அதைத் தமிழ்ப்புலவர் எவரும் இலக்கணம் பேசி மறுக்கமாட்டார்,  தொல்லையும் குறைந்தது .  பாணினி  என்ற பாணர், இதற்குத் தனியாக இலக்கணம் வகுத்துவிட்டதால், அந்தத் தொல்லை ஒழிந்தது. தமிழ்ச் சொல்லமைப்பில்,  ஆதியில் எவ்வாறு தமிழ் வளர்ந்திருந்தாலும், அகத்தியர் தொல்காப்பியர் ஆகியோருக்குப் பின்வந்த காலத்தில்,  தமிழறிவு மேம்பட்டமையினால் இலக்கம் எழுதியோரும் பேசியோரும்  கவிதைப் புலமையைக் கொண்டு, சரிதவறு சொல்வோர் கூட்டம் விரிந்துவிட்டது.  இவர்களிடம்  இரண்டும் இருகண்கள் என்றோ, சமஸ்கிருதமே முந்தியது  என்றோ சொல்லிவிட்டால் வாய்மூடவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். வடக்கே  தோன்றிய முந்தைய மொழி என்று சொல்வதை வாதம் செய்ய இவர்கள் போன்று கேட்போர் சொல்லாய்வு நிபுணர்களா என்ன?

உண்மையில் இவ்வாறு சொல்வதிலும்  உண்மை உள்ளது.  உங்கள் வீட்டுச் சட்டியில் பழைய  மற்றும் ஓரளவே பழகிய சட்டி பழம்பெருமை உடையதா,  போனவாரம் வாங்கியது பழம்பெருமை உடையதா என்றால்  பழம் பெருமை உடையது பழையதே ஆகும்.    ஆனால் சொற்களில் இது எளிதில் அறியத் தக்கதாய் இல்லை.  எது திரிசொல், எது இயற்சொல் என்பது சாதாரணப் பண்டிதனுக்குத் தெரிவதில்லை.  அவன் சில பட்டங்கள் பெற்றிருந்தாலும் தெரிவதில்லை. எப்படியாயினும், சொற்களைப் பயன்படுத்திப் பொருளை அறிவிப்பதுதான் பேசுவதன் நோக்கம்.

தொல்காப்பியம் நூற்பா சொல் 394:

மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா

தெரியவேண்டுமே!

மொழியைப் பயன்படுத்துகையில் சில கலந்து பேசினாலும் மரணம் ஏற்பட்டுவிடாது.  

ஆனால் கவிதை, உரைநடை ஆகியவற்றைக் கையாளும்போது,  கவனமாக இருக்கவேண்டும் என்பதே உண்மை.

ஆனால் தமிழும் சமஸ்கிருதமும் மிகப் பழையவை. ஒரு திரிசொல், திரிவதற்குப் பலகாலம் ஆகவேண்டும். இயற்சொற்கள் திரிந்துதான் திரிசொற்கள் உண்டாகின்றன.  ஒன்று இயற்சொல்லாய் இருந்து பின்னர்தான் திரிகிறது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்துதான் சொல்லவேண்டும்.  

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  12.06.2026

























செவ்வாய், 9 ஜூன், 2026

பிறப்புக்குறிப்பு

 


துருவாச முனிவர் பெயர்

 இவர் பெயரைச் சற்று சிந்திப்போம்.

இவர் மகாயோகி என்று போற்றப்படுபவர்.  விரதங்களின் மேன்மையை அடிப்படையிலிருந்தே நன்கு அறிந்து போற்றுபவர் அவரென்று இறைநூல்களிலிருந்து அறிகிறோம். துருவாச முனிவர் என்பதைத் தமிழால் பொருள் கூறவியலுமா என்பதைப் பார்ப்போம்.

இவர் பெயரைத் துரு(வுதல்) +  ஆசு + ( அ )  ;  முனிவர்.

நிகழ்வு,  வரலாறு,  இறைநிலை  ஆகியன நல்லபடி உணர்ந்தும்  துருவிப் பற்றுக்கோடு கண்டும், ஆனபடி நடப்பவர் என்ற அவர்பெயர்,   நல்ல காரணம் தருவதாக அமைந்துள்ளது.  ஆசு என்றால் ஆதாரம்,  சிறந்தவை கைக்கொள்ளுதல்  என்றெல்லாம் சொல்லலாம்.

ஆசு+ இரு+ இ + அர் >  ஆசிரியர் என்பது கற்கும் மாணவர்க்குப்  பக்கபலமாக இருப்பவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும்.  ஆசு+ ஆன் > ஆசான் என்பதும் ஏறத்தாழ அப்பொருளதே. ஆசி ( ஆசு+ இ)   ஒருவனின் வாழ்வில் நன்மை சென்று பற்றுக என்ற வாழ்த்துதலைத் தெரிவிப்பதாக இருக்கும்.  ஆக்கம் என்ற சொல்லும் ஆதல் என்பதன் அடியாகத் தோன்றிய சொல்லே ஆகும். ஆ என்பது வினைப்பகுதி.  சு என்பது விகுதி. முனிவர் என்ற பெயருடன் இணைய,  துருவாசு என்பது துருவாச என்று வந்தது,

முன்னரும் பாரதச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் தந்துள்ளோம்.  அவற்றையும் நோக்குக.

அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது.














சனி, 6 ஜூன், 2026

ஆமைக்கு வந்த அருமையான பெயர்.

 தமிழில் பெருவாரியான சொற்கட்கு மூலம் கண்ட பெருமை, தேவநேயப் பாவாணர்க்கு உரியது என்பதே உண்மை.  இவர்தம் பெருமையை பிற பல அறிஞர்கள் கண்டு வியந்துள்ளனர்.  ஆமைக்கு அந்தப் பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று ஆய்வு செய்கையில்,  அஃது  ஏமம் என்ற தமிழ்ச்சொல்லினின்று வந்தது என்று தேவநேயர் கூறினார்.  இது எனக்குச் சரியாகவே தோன்றுகிறது. அறிஞர் அப்பாத்துரை அவர்களும் இவரை புகழ்ந்துள்ளார். தேவநேயனாரால், தமிழ்ச் சொல்லாய்வு மிக்க வளர்ச்சி பெற்றது.

ஏம் என்றால் பாதுகாப்பு.  அமணர் என்பது சமணர் என்று திரிந்ததுபோலவே, ஏமம் என்பதும் சேமம் என்று திரிந்தது. ஆடி என்ற ஏனப்பெயர்,  சாடி என்று திரிந்தபின்,  ஜாடி என்றும் திரிந்தது. ஆடியில் இருக்கும் நீர் சற்று ஆடினால், சாடியிலும் ஆடுமாதலின், அதற்கு இதன் மூலம் பெயர் வந்தது பொருத்தமே ஆகும். சாடுதல் என்பது அடித்தலையும் குறிப்பதுதான். சாடியைத் தட்டினால் உள்ளே நீரும் ஆடுவதால் அந்தப் பெயர் வந்தது என்று கூறினும் அதனால் இப்பொருள் தொய்வுறாது என்னலாம்.

எம் பொருளை யாம் எப்போதும் காத்துக்கொள்வோம்.  ஆகையினால் எம்- ஏம் என்பதிலிருந்து பாதுகாவல் என்ற பொருள் வந்தது பொருந்துவது. அவர் பிறன் பொருளையும் அவ்வாறே காப்பதற்கு ஏதேனும் கூடுதல் காரணமிருக்க வேண்டும்.  இச்சூழ்நிலையில் பாதுகாவலைச் சிந்தனை செய்யுங்கால் இதனை மேற்கொண்டு ஆராயலாம்.  இப்போது ஏமம்  சேமம் எல்லாம் தமிழில் ஆழ்ந்த கற்காலத்துக்கும் முன்பு உண்டான பொருள் உடையன என்பதை மட்டும் கவனித்துக்கொள்வோம்.

ஆகையினால் ஆமைக்கு இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் சொற்களை ஆய்வு செய்கையில்,  ஒன்றுக்கு  மேற்பட்ட காரணங்களால் பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிலேடை முதலிய மேற்பட்ட அலங்காரங்கள் தவழணி செய்யும் தமிழ்மொழியில்,  ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இயல்பானவை  ஆகும். ஒன்றுக்கு ஒரே பொருள் என்பது தமிழறியாதவனுக்கு ஏற்புடையதாய் இருக்கலாம்.  ஒரு பொருளில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் அணிசெய்வது,  மிக்க இயல்பானது ஆகும். வேறுமொழிகளிலும் உள.  ஆனால் குறைவு ஆகும்.

இனி ஆமை.   ஆமை என்பது ஓர் ஓட்டினகத்துத் தன் மெய்யை ( உடலை) ஒளித்து வைத்துக்கொண்டு வாழும்  ஓர் உயிரி  ஆகும்.  ஆகையினால்,   அகத்து மெய் >  அகமெய் > ஆமெய்>  ஆமை என்றும் பெயர் விளைந்திருத்தல் கூடும். சங்கு என்ற உயிரியும் இவ்வாறு வாழ்வது  ஆயினும்,  இது இடுகுறியாக வந்து சங்கு முதலியவற்றைக் குறியாது என்று வரையறுத்துக்கொள்ளலாகும்.

சங்கு ஓட்டை அண்மி வாழ்வது.   அண்> சண்> சம்+கு> சங்கு  ஆகும்.  சம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும்  சேர்ந்திருத்தலைக் குறிக்கும்.  தமிழில் இணைமொழி யாகித் தமிழரால் வளர்க்கப்பட்டது சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதம்.  பாணனாகிய பாணினியாலே இலக்கணமும் கூறப்பட்டது.. இந்திய மொழி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை உடையது

















புதன், 3 ஜூன், 2026

கந்தல் என்பதற்கு விளக்கம்

 கந்தல் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிப்பதாகக் கூறினோம். இந்த முன்பகுதி இங்கு உள்ளது.

கிழிந்த /  கழிந்த என்ற வினை எச்சங்கள்:

கிழிந்த >  கழிந்த + அல் (விகுதி) >  கழிந்தல்.

கழிந்தல் என்பது இடைக்குறைகிறது.

கழிந்தல் >  க(ழி)ந்தல்>  கந்தல்.

கந்தல் >  கந்தை.

கழித்த என்ற எச்சத்துடன் அல் என்பதை இணைப்பது  வழக்கமில்லை. கழி என்ற வினை ஏவல்வினையே இதற்கு ஏற்றதாகக் கொள்வர்.  ஆதலால் இதை வேறுவழிகளில் காட்ட முனைதல் இயல்பே.  கிழி> கழி > கழிதல்>( கதல்)> கந்தல் என்று காட்டலாம். இங்கு ஒரு விகாரம் தோன்றிற்று.  கிழிதல்>  கழிதல்  என்றதில்,  ஒரு மெய்தோன்றிற்று என்பதை மறைக்கமுடியாது.  பாலி மொழிபோல் எச்சத்திலிருந்தும்  சொற்கள் தோன்றக்கூடும் என்பதை மறைத்தலாகாது. தேவை என்பதே ஆக்கத்தின் தாய் என்பது முற்றிலும் உண்மை.

ஒப்பு நோக்குக:

ஆண்டு  > (ஆண்டுகொண்டிருப்பவன்)  எச்சவினை.

ஆண்டு >  ஆண்டவன்.

பண்டு என்பது கவனிக்கவும்:

பண்டு நம்மைக் காத்தவன்.

பண்டு>பண்டு + இ+ அன்> பாண்டியன்.

இதில்  பண் எனற முதலசை பாண் என்று முதல் நீண்டது.  

பல சொற்கள் நீண்டாலும் பொருள் தொடர்பு அற மாட்டா.  வினைகளில் தரு என்பது  திரிபு பலவுடைத்து.

பாண்டவர் என்பதும் இவ்வாறு அமைந்த சொல்லே ஆகும்

இதைப் பண்டு>பாண்டு>பாண்டியன் என்றும் காட்டுவர். 

வேறுபாடு ஒனறுமில்லை.

கிழிந்தல் - கழிந்தல் :  கிழிந்ததாக இருந்தது பின்னர் பயன்பாடு குன்றி, கழிந்ததாகிவிடுகிறது.  இன்னொரு சொல்லைக் காட்டுகிறோம்.   இடித்தல் - அடித்தல். இரண்டும் ஏற்படும் மோதுதலைக் குறிக்கிறது.  இணைத்தல் - அணைத்தல், இரண்டுக்கும் உள்ள தொடர்பைக் கவனத்தில் கொண்டால், தொடர்பு புரிதலை அடைகிறது.  பழைய இடுகைகளில்  யாம் காட்டியிருப்போம்.  எனினும் தொகுத்து வழங்க நேரமில்லை ஆதலால்,  படிக்கும் நீங்கள் தொகுத்து எடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.  

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



சனி, 30 மே, 2026

ஜனாதிபதி

 மக்கள் தலைவர்,   (குடியரசுத் தலைவர்) என்னும் பொருளில் ''ஜனாதிபதி'' என்ற சொல் இப்போது வழங்கி வருகிறது. இதில் சிலருக்கு  மறுப்பு இயல்வதற்குக் காரணம், குடி என்ற சொல் மக்களையும்  குடிபானத்தையும் குறித்தலாகும். குடிமகன் என்ற சொல் குடித்துத் திரிகிறவனைக் குறிக்கிறது என்பது இன்னொரு தொடர்புடைய மறுப்பாகும். சனாதிபதி என்ற வடவெழுத்து நீங்கிய சொல் பலருக்குப் பிடிக்கவில்லை.

மனிதனிறந்த பின்பு,  அவனது உயிர்,  மீண்டும் இன்னோர் உடலில் புகுந்து மறுபிறவி உண்டாகின்றது என்ற கருத்தின் காரணமாக,  சா(தல்)> ஜா> ஜன்> ஜனி என்று ஒரு சொல் உண்டாகி,  அதுவே பிறத்தல் என்ற பொருளுடைய சொல் (ஜனித்தல்)  ஏற்படக் காரணமானது என்ற கருத்து,  புலவர் சிலரிடைத் தோன்றலானது என்று எழுதப்படாத கருத்தாக ஆசிரியரிடையே வழங்கி வந்தது என்று அறிகிறோம்.

இதன் மூலம், ஜனி(த்தல்) என்ற சொல் பின்னர் உண்டாகி பிறப்பு  குறிப்பதாக‌ இனறு உணரப்படுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. கருவினுள் பின்னர் உயிர் செல்கிறது என்பதால்,  செல்> செல்நீ>  செனி> செனித்தல் > ஜெனித்தல் என்று சொல் உண்டானது என்றும்  பொருந்துகிற இன்னொரு கருத்து உள்ளது.  பழம்நீ என்ற முருகனின் பெயர் பழனி என்று சுருங்கி அமைந்தது போலும் ஓர் ஒப்புமையே இதுவாகும்.  வயல்களின் நடுவில் உள்ள குளம்,  நீரினால் வயல்களைக் கழுவிச் செழுமை அடையச் செய்கிறது  என்ற கருத்தால்,   கழுநீர்> கழனி என்ற சொல் சரியாகிறது.  தமிழாயினும் எந்த வேறு மொழியாயினும், இலட்சக் கணக்கான சொற்களுடன் உடனே உண்டாகிவிடவில்லை.   கழிபல வூழிகளாக வளர்ந்துதான் மொழிகள் நம்மிடையே வந்து எட்டியுள்ளன. மொழிநூல் (philology) (கருத்தும்) அதுவே ஆகும்.

ஆகவே இச்சொல்  ( ஜெனி, ஜனி)  ஒரு பல்பிறப்பிச் சொல் ஆகும். இதற்கு வேறு மூலங்களும் கூறப்படுதல் உண்டு.  சமஸ்கிருதம் என்பது தமிழுடன் வழங்கி வளர்ந்த இணைமொழி ஆகும். இரண்டு மொழிகளிலும் ஒன்றை மற்றொன்று வளப்படுத்திய சொற்கள் பல.

சமஸ்கிருதம்  (  சம + கதம் >  சம+ கிருதம் > சம ஸ் கிருதம்  [ ஸ் என்பது இந்த இரண்டு சொற்களையும் இணைத்து ஒன்றாக்கி,  க் என்ற வல்லெழுத்து வராமல் மென்மையாக்கி, ஒருசொன்னீர்மையை உண்டாக்கி இணைப்புறுத்துகிறது என்று அறிக.  ]  > சமஸ்கிருதம்  என்ற சொல் பிறந்தது.  சமஸ்கிருதப் புணரியல்  ( சந்தி இலக்கணம் ) வேறு சொல்லிணைப்புக் கூறினாலும் யாம் கூறும் காரணத்துக்காகவே  ஸ் என்ற ஒலி எழுகிறது.  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் இதற்குக் கூறும் முறையை யாம் இங்கு கூறவில்லை.  அதனை அவர்தம் நூலில் கண்டு தெளிக.   பாணினி என்பவர் வட இந்தியாவில் சமஸ்கிருத மொழிக்குச் சிறந்த இலக்கணம் இயற்றிய ஒரு பாணர் வழிவந்த பெரும் புலவர்  ஆவார்.  பாணர் என்பது குடிப்பெயர்.   இது வள்ளுவர், காப்பியர் ( தொல் காப்பியர்) என்பன போலும் குடிப்பெயர்.

குத்துச் சண்டை வகைக்குக் குஸ்தி என்று பெயர்.    குத்து> குத்தி > குஸ்தி என்று சொல் மென்மைப்பட்டது.  விரி தருதல் > விரிதாரம் (விரிவாக அமைவது),  >  விஸ்தாரம் என்று திரிந்தது  சம ஒலிச்சொல்.  அதாவது சமஸ்+ கிருதம்.    கிருதம் என்பது,  கத்து (ஒலித்தல்), >  கத்து > கது  (இடைக்குறை)> கது+ அம் > கதம்> கிருதம்.  சமஸ் கிருதம் என்றால் சம ஒலி  உடைய மொழி.  தமிழுக்குச் சமமான ஒலிகளை உடைய மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது பிற்காலத்து வெள்ளையன் தந்த பாகுபாட்டு மொழியியல். கத்து என்பதே, தமிழிலும் கத்து> கது> (நீண்டு) காது என்று வந்து செவி என்று பொருள்படும்.  அறிக.

தேவநேயப் பாவாணரும் பல தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத்திலும் ; இதற்கு எதிர்மாறு செய்யும் வளர்ச்சிகளும் இருமொழிகளிலும்,  இருப்பன என்பதையும் கண்டு,  எழுதியுள்ளார்.  ( முதல் தாய்மொழி என்னும் நூல்).  ஆனால் சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிதான்.  அது ஆரியன் மொழி என்பது சரியான கருத்து அன்று.  அதை வெள்ளைக்காரன் மேற்கொண்டு தம் ஐரோப்பிய மொழிகளை வளப்படுத்திக் கொண்டான். தேவைக்கு ஏற்ப எதையும் பயன்படுத்திக்கொள்வது உலக வரலாற்றில் ஒன்றும் புதிது அன்று.  நாடு, மொழி எதுவும் பிறர் மேற்கொள்ளக் கூடியதுதான். கணவன், மனைவி உட்பட எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வது கடமை  ஆகும்.

ஜனம் என்ற மக்களைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறுதான் முளைத்தது.  அதிபதி என்பதும் தமிழ்தான்.  இதை இடுகை இன்னொன்றில் கூறுவோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை