கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ரகர ஒற்றுகள் மறையும் சொற்கள் பலவாகும். அவற்றில் சிலவற்றை எழுதி வெளியிட்டது நினைவில் உள்ளது.
பேச்சுத் தமிழில் இவ்வாறு மறைதல் மிகுதியாகும். வாருங்கள் என்பது அப்படியே பேச்சுத் தமிழில் வருவதில்லை. அது வாங்க ( வா(ரு)ங்க(ள்) ) என்று பிறையிட்ட எழுத்துக்கள் மறைதலைக் காணலாம். தாருங்கள் என்பதும் இவ்வாறே தாங்க என்று மாறிவிடுகிறது. வந்தார்கள் என்பதிலும் வந்தாக என்று திரிந்து, ர் என்பதுடன் ள் என்பதும் மறைவு எய்துதல் காணலாம். பேச்சு மொழியில் திரியாமல் வழங்கும் சொற்கள் சிலவே என்னலாம். இப்படிச் செய்தலின் மூலமாக, மிகுதியான உடல்வலிமையைத் தமிழர்கள் எட்டினர் என்று சொல்லத் தோன்றுகிறது. இது முயற்சிச்சிக்கனம்.
ஆனால் பார்வை என்ற சொல்லை இப்படித் திரித்துப் பேசுவதில்லை. கோவை என்ற சொல்லில், ஒரு ரகரத்தை வரவழைத்துப் பேசுவதைக் காணலாம். கோர்வை என்பது வழுவிய சொல் என்று சில நூல்கள் காட்டினாலும், அவற்றை படித்துப் போற்றுவோர் சிலரே ஆவர் கூடுதலாக ஓர் எழுத்தைச் சேர்ப்பது முயற்சியை மிகுத்தல் என்று நினைப்பதில்லை. அதாவது மூச்சுச் செலவு!
அவர் என்பது அவா, அவாள் என்று திரிவதைக் காணலாம். வகரம் நீண்டதுடன் ஒற்று ரகரத்துக்குப் பதில் ளகர ஒற்று வருதலையும் அறியலாம்
சோர்வு என்ற சொல்லில் ரகர ஒற்று உள்ளது. இச்சொல்லிலிருந்து சோகம் என்ற சொல்லை ஆக்குகையில், சோர்+கு+ அம் > சோர்கம்> சோகம் என்று வந்துவிடும். கு என்பது இங்கு இடைநிலையாய் நிற்கும். அம் விகுதி. ஆர்கலி என்ற சொல்லில் இவ்வாறு நிகழாது.
சீர்த்துவம் என்ற சொல், சீத்துவம் என்று ரகர ஒற்றை இழந்துவிடுகிறது. அதாவது சீரான தன்மை என்பது இது. இது பேச்சில் வரும் ''பாத்தா'' தெரியும் என்பது போன்றதே. பார்த்தால் என்பது இப்படித் தன் மெய்யை இழக்கிறது.
சீதனம் எனபது எப்படி?
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
ஆன்மாவின் அடிப்படைக் குணம் அல்லது பண்பு அளவற்ற மகிழ்ச்சி என்று சொல்லப்படுகிறது, இதற்குக் காரணம் அஃது உடலோடு கூடியிருக்கும் தன்மையே ஆகும். இதுவும் ஆனந்தம் என்ப்படுகிறது. இந்தப் பொருளில் இது இப்போது வழங்குவதில்லை எனலாம். இது சத்து, சித்து எனவும் கூறுவர்.
இஃது மட்டுமின்றி, ஒன்பது வகைப்பட்ட குபேரநிதிகளில் நந்தமும் ஒன்றெனப்படும். ஆ நந்தம் என்பதால் ஆ= ஆக்கந்தருகின்ற, நந்தம் - செழிப்பு என்பது. இந்த நந்தம் , நன்று என்ற சொல், நல்+ து> நன் து > நந்து+ அம் என்று வந்து, நந்தம் : செழிப்பு , வளர்ச்சி என்று பொருள்தரும். நல் > நன் என்று வருவது லகர நகரத் திரிபு. மேலும் இன்னொரு வழியில் நோக்கின், நரந்தம் என்பது இடைக்குறைந்து, நந்தம் என்றாகி இனிய மணமாகிய நன்மை என்றும் பொருள்படும். நந்துதல் ஆதலுமாகும் என்பதால், ஆனந்தம் என்றும் கொள்ளற்குரியது.
நந்தம், நந்தல் என்பதற்குக் கெடுதல் என்ற பொருளும் உண்டு. மிகுந்த நலங்கள் உண்டாதல், கெடுதலுக்கும் இட்டுச் சென்று அழிவும் தருமாதலின், கெடுதற் பொருள் ஏற்பட்டுள்ளது. நன்மையும் தீமையும் பிரிக்க இயலாதவை என்பதை உணர்க. அதிகம் பொன் வைத்திருக்கும் ஒருவன் திருடனால் கொல்லப்பட்டு அவன்றன் பொருள் எடுத்துச்செல்லப் படுதல் காண்க. தீதும் நன்றும் ஒருகளத்தில் தோன்றக்கூடியவை.
இவை நிற்க, ஆனந்தம் என்பது ஆக நன்று> ஆ + நன் + து+ அம் > ஆனந்தம் ஆகும். இதில் நல் > நன் என்றானது. ஆகவே இது தமிழ் மூலமுடைய சொல்லே ஆகும். பனி என்ற சொல், பல்> பன்> பனி என்றாதல் காண்க.
ஆ+ நன்( மை ) + து + அம் > ஆனந்தம் என்றும் காட்டலாம். ஆநந்தம் என்றும் ந-வரவும் எழுதப்படுதல் உள்ளது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
மனம் என்ற சொல்லில் இல் என்ற உருபு வந்திணைந்தால், மனத்தில் என்று வரவேண்டும். இந்தக் குறளைப் பாருங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவ நாயனார் இக்குறள் வெண்பாவை எவ்வாறு யாத்துள்ளார் என்று:-
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
என்பது அது.
கண் என்பது உருபு. மனத்துக்கண் என்றால் மனத்தில். இது மனம்+ அத்து+ இல் என்பதுதான்.
அறம் என்பதும் உருபு ஏற்க, அறத்தில் என்று வரும். இது அறம்+ அத்து + இல் என்பதுதான். கண் என்பதை இணைப்பதாயின், முன் கூறியவாறே, அறத்துக்கண் என்று வரவேண்டும்.
அத்து என்பது சார்ந்தும் இயைந்தும் வரும் சொல். அதனால் சாரியை எனப்பட்டது. இது அது என்பது தகரம் இரட்டித்து வந்தது ஆகும். அதாவது தகர ஒற்று இரட்டித்தது. அ த்+த்+உ..
மனத்தில் என்ற சொல் பாடல்களில் இரட்டிக்காமலும் வரும். காண்க:
பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள,
உரலில் கட்டி, வாய்பொத்தி, கெஞ்சவைத்தாய் ---- கண்ணனை.
இங்கு மனதில் என்று வந்ததும் சரிதான். இப்படிக் குறுக்குவதற்கு கவிஞனுக்கு உரிமை உள்ளது. இதனைத் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும் தந்துள்ளன. இது தொகுத்துக்கொள்ளும் உரிமை.,
பிர-மனும் இந்-திர-னும் மன-தில்-பொ றா-மை-கொள்-ள
இங்கு த் என்னும் வல்லொற்று நீங்கியவாறு காண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உள்ளது.
பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் வாழநேரிட்டது. நகரங்கள் இன்னும் உருவாகிவிடவில்லை. அரசன் என்ற ஆட்சியாளன் ஏற்பட்டுவிட்டானா என்றும் தெரியாத நிலை. காட்டை அழிக்கக் கூடாது, காட்டில் போய் மரம்வெட்டினால் தண்டனை என்னும் சட்டம் எதுவும் இன்னும் உண்டாகிவிடவில்லை.
ஒரு மனிதனும் அவனுடன் ஒருவர் இருவர் இருந்த சிறு குடும்பமும் காட்டின் சில மரங்களை வெட்டி அப்புறப் படுத்திவிட்டுக் கட்டிய வீட்டில் அவன் வாழ்ந்தான். மரங்களை இணைத்து வீடு கட்டிக்கொள்வதற்கு ஆணி கூட இருந்திருக்காது. ஏனென்றால் இரும்பை உருக்கி ஆணி செய்துகொள்ளும் திறன் அவனுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இரும்புக் காலம் இன்னும் வரவில்லை.
அவன் என்ன உணர்ந்து கொண்டான் என்றால் அவன் வீடு கட்டி வாழ்ந்த இடம் கொஞ்ச நாட்களிலே பலவித அழுக்கும் உள்ள இடமாகிவிட்டது. சுற்றுமுற்றும் பார்த்தால் பசுமையான நீண்டு வளர்ந்த மரங்கள். பச்சை பசேலென்ற இலைகள். காய்கள் கனிகள் எல்லாம் இருந்தன. பக்கங்களில் எல்லாம் தூய்மையாகவே அழகு காட்டிய வண்ணம் இருந்தன.
இதுபோலவே, சுற்றுப்புறம் என்பது, சுத்தமாகவே இருந்தது. அதனால் சுத்தம் என்ற சுற்றுப்புறத்தைக் குறிக்கவேண்டிய சொல், அமைப்புப் பொருள் மாறி தூய்மை என்ற பொருளை அணைத்துக்கொண்டும் இணைத்துக்கொண்டும் இலங்கியது.
சுத்தம் என்ற சொல்லுக்கு அழுக்கின்மை என்று பொருள் உண்டாகி இன்றுவரை நின்று நிலவுகின்றது. சமஸ்கிருதம் என்பது சம ஒலியினதாகிய மொழியாதலின், அதிலும் இச்சொல் வழங்கியது. இருமொழிகட்கும் உரிய சொல்லே இதுவாகும்.
பொருள் மாற்றம் அடைந்த சொல். தமிழிலிருந்து தோன்றிய சொல்தான். சுற்றம் என்பது உறவினரைக் குறிக்க, சுத்தம் என்பது தூய்மைப்பொருளைக் குறித்தது. காட்டுவாணர் சொல். காட்டுவாழ்நர்> காட்டுவாணர் என்பது திரிபு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
பகிர்வுரிமை உடையது.
பரவணி என்றால் பரவலாக அணிவகுத்துச் செல்வது. அணிவகுத்துச் செல்லும்போது இரண்டிரண்டாக, அல்லது மூன்று மூன்றாக ஆட்களை நிறுத்தி, அணிவகுத்துச் செல்லலாம். இப்படிச் செய்யாமல் ( அதாவது எண்ணிக்கை வரம்பின்படி நின்று பின் நடந்துசெல்லாமல் அமைப்பு இன்றி நடந்து சென்றால் அதுதான் பரவணி ஆகும்.
இது புரியவில்லை என்றால், எமக்கு எழுதிக் கேட்கவும். யாம் ஒரு படம் வரைந்து இதை விளக்க முற்படுவோம்.
பரவணி என்பது பர(வு) அணி என்ற இருசொற்களால் ஆன கூட்டுச்சொல். இது திரிந்து பரவணி> பரவனி>பவனி என்று ஆயிற்று.
சமஸ்கிருதத்தில் (அம்மொழியில் இருந்தாலும்) இச்சொல்லில் ணகரம் இல்லை. இந்தத் திரிபு சமஸ்கிருத மொழிக்குச் சென்றால், பவனி என்றுதான் வரவேண்டும். அல்லாமலும் இருசொற்கள் புணர்த்தி அமைத்த சொல்லில், ணகரம் என்பது னகரமாக மாறிவிடும். இது தமிழிலேயும் நடக்கும். சமஸ்கிருதம் செல்லாமலே நடக்கும். இதுபோன்ற திரிபுகளுக்கு யாரும் நூல் எழுதவில்லை. ஆதலால் அவர்சொன்னார் இவர் சொன்னார் என்று காட்டமுடியாது.
ஒருவரை ஒருவர் அணுகிச் சென்று பாசமுடன் உறவாடாமல் அன்பு செலுத்தமுடியாது. அண்> அணுகு. இனி அண்> அன்> அன்பு என்று இதற்குச் சொல் அமைகிறது. அண்பு என்றுதான் சொல் அமையவேண்டும் என்று எந்த இலக்கணவிதியும் தமிழில் இல்லை. சமஸ்கிருதத்திலும் இல்லை. உம்மாலும் காட்டமுடியாது.
இதை இங்குச் சொல்லக் காரணம், எதற்கும் ஓர் ஆதாரம் காட்டவேண்டும் என்று சிலர் சொல்வதுதான். உலகில் ஆதாரம் இல்லாத உண்மைகள் பலவுள்ளன.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது
இச்சொற்களை இப்போது உணர்ந்துகொள்வோம்.
இதற்குரிய வினைச்சொல்: சரிதல் என்பது. இதிலிருந்து சரம் என்ற சொல் தோன்றுகிறது. சரிதல் மற்றும் சரம் என்பன அசைவுக் குறிப்பின ஆதலின், அசரம் என்னும் சொல் அசைவின்மையைக் குறிக்கிறது. அசர்தல் கவனக்குறைவைக் குறித்தாலும் இஃது ஒருவன் இடைநேரத்தில் அசைவின்றி இருத்தலையே குறிக்கின்றது. கவனத்துடன் இருத்தல் - அசைவுண்மை என்று கொள்ளப்படும், ஆகவே அசைவின்மை அசையாமையைக் குறிக்கும். அதாவது ஒன்றும் செய்யாதிருத்தல். கொஞ்சம் அசந்துவிட்டால், திருடிவிடுகிறார்கள் என்ற வாக்கியத்திலிருந்து இது தெரிகிறது. . '' அசந்தா மிளகாய் அரைச்சிடுவானாம்'' என்பதும காண்க.
அயர்வு என்பது இயற்சொல்லாக இருப்பதால், அசர்தல் என்பது திரிபு என்னலாம். அசர்தல் என்பதை அசைதல் என்பதனோடும் தொடர்பு படுத்தலாம் என்றாலும் பொருள்முரணால், அசை+ அறுதல் > அசறுதல் > அசர்தல் என்னலாம். இன்னொரு சொல்லுடன் சேர்கையில் றுகரம் என்ற வல்லினம் ர் என்ற இடையின மெய்யாய்த் திரிகின்றது. அசை அறு > அசறு> அசர்தல் > அசரம். இவ்வாறின்றி, சரம்> அல் சரம் > அசரம் என்றுமாகும். அல்= அல்லாதது. இது கடைக்குறைந்து : அ என்று முன்னொட்டு ஆயிற்று.
இனிச் சரவணம் என்பது:
சரிதல் வினையிலிருந்த் பிறந்த இச்சொல், இயக்கம் குறிப்பது தெளிவு. இது இச்சொல்லின் ஆதிப் பொருள். ஆனால் இற்றை வழக்கில் இது ( சரம் என்பது) ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருத்தலையே குறித்தது. இதற்குக் காரணம் அறிய இயலாத ஒன்றன்று. சரிந்த பொருள், சரிவான நிலையிலே இருந்து கெட்டி நிலையை அடைந்துவிடுதலும் இயற்கையில் காணப்படுகிறது. இந்நிலையில் இயக்கமின்மையையே இச்சொல் குறிக்கிறது. சரிந்த பொருள் சரிவு நிலையிலிருந்து படுக்கை வாட்டமாக மாறாமை, இயக்கத்திலிருந்து இயக்கமின்மை நிலைக்கு வருவதுதான். சரவெடி என்பது ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தல் என்று பொருள்படும்.
சரிந்த நிலையில் மேலும் சரியாமல் வரிசையாக நின்று நிலை காட்டுகின்றது. இந்நிலையில் வண்ணம் அல்லது நிலைபெறுதலை சரவணம் என்கிறோம். வரிசைநிலை அடைதல். இவ்வாறு பூக்கள் இருக்க அழகுபெற்ற நீர்நிலை, சரவணப் பொய்கை ஆகிறது. இவ்வாறு நிலைபெற்று துதிக்கப்படுவது பராநிலை ஆகிறது. பலநிறங்களில் இருப்பதும் ஒரே நிறத்திலிருப்பதும் இதனுள் அமையும். வண்ணம் என்பது நிலை என்ற பொருளிலும் நிறம் என்ற பொருளிலும் அமைவதாம். ஏற்ப நாம் பொருளுரைத்தல் தக்கது. சொற்கள் அமைதலுக்குப் பின் பொருள் மாறுதலும் பெறும், மாறாமலும் இயலும். இங்கு நாம் அமைப்புப் பொருளே கருதினோம். பின் அடையும் பொருளை விரித்துக்கொள்க.
எடுத்துக்காட்டு: சரப்பலகை, வரிசையாக உள்ள பலகை என்ற பொருளே தரும். அவை கடைகளில் அடைப்புப் பலகை என்பது, விரிபொருள். தாமே அறிந்துகொள்ள வேண்டிய பொருளாகும்.
''சரவணம் சமஸ்கிருதம்'' என்றால் எப்படி? என்ன?
சரவணம் சமஸ்கிருதம் எங்கிறீர்களா? அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள். சம - ஒப்புமையுடன் கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது. இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார். சுனில் குமார் சட்டர்ஜீ என்பது அவர் பெயர். இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள் 'தற்சமம்'', ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின. இதை மறந்துவிட்டு, சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லாம் நினைப்பது மூடமதேயாகும். உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ > என்றால் முன் நிற்பதாக ஆகுவது என்று பொருள். அண்- அண்மி நிற்பது. அம் - அமைப்பு. எல்லாம் சேர்த்தால் ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம். தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும், சம கதம் என்பது புரிகிறதா? கதம் என்பது: கத்து, இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம், அல்லது கிர்தம். இப்போது சமஸ்கிருதம் என்ற சொல் கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.
வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி, இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே ஆகும்.
சர்வம் (முன் இடுகை) என்பதும் சரவணம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கவையாகும்..
மெய்ப்பு பின்னர்.
பகிர்வுரிமை.
இவற்றைக் கவனிப்போம்.
இடைக்காலத்தில் உருவான சொற்களில், வாய்தா, சந்தா, சாதா ( ordinary) முதலியவும் பிறவும் உள்ளன. அவற்றில் சிலவற்றைத் தனித்தனியாக விளக்கியுள்ளோம். பேதா என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது. இங்கு கோதா என்ற சொல்லை எடுத்துக்கொண்டுள்ளோம்.
கோதா என்பதில் கோத்தல் என்பது வினைச்சொல். தா என்பது தருதல் வினை. இவ்வாறு இருவினையொட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியோர் இடைக்காலத்தோர் என்று நாம் அறிந்திருந்தாலும், இவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்கள் ஏதும் எழுதிவைக்கவில்லை யாதலின், இவர்களை அறியமுடியவில்லை. இஸ்லாமிய மக்களிட மிருந்து இவை வழக்குக்கு வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. தமிழ் மூலங்களைப் பயன்படுத்தியோர், தமிழ் இஸ்லாமியராய் இருந்திருக்கவேண்டும். இவற்றுள் ஹோதா என்பது வேதகாலம் தொட்டு வழங்கியதால் இஸ்லாமுக்கு முந்தியதாகும்.
கோத்தல் என்ற வினையும் அதனோடு தா ( தருதல்) என்ற சொல்லும் இணைந்து, கோத்துத் தருதல் என்று பொருள்படுகிறது: எனவே அமைப்பு என்பது பொருள். இது பின்னர், ஹோதா என்றும் திரிந்துள்ளது. கோத்துத் தரு(தல்) என்பது கோத்துத்தரு> கோத்தரு> ஹோத்தரு> ஹோத்ரு என்று மாறியமைந்தது. இவ்வமைப்பு முதலில் தீயினை வணங்கும் வழிபாட்டு அமைப்புக்கு வழங்கியது என்பது வரலாறு ஆகும்.
அமைப்பு என்ற பொதுப்பொருளில், இது அமைத்தல் அல்லது அமைப்பு என்றே பொருள்பெற்றது.
கோதாட்டு என்பது கோதா+ ஆட்டு என்பதுதான். இது பாவமன்னிப்பு சடங்குகளையும் அவ்வமைப்பையும் குறித்து வழங்கியுள்ளது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
அகந்தை என்பது தமிழ்ச்சொல் அன்று என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நம் எண்ணக்கோட்டம் தவிர.
இதில் அகம்+ தை என்ற இரு பகவுகள் உள்ளன. அகம் என்பது உள் என்று பொருள் தருவது. தை என்பது ஒரு பெயராகவும் வினையாகவும் உள்ள சொல். தைத்தல் ஒரு வினை. தை என்ற மாதம், இயற்கை வளத்தின் நிலைகளுடன் மக்கள் வாழ்வு செய்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டுசென்று தைத்தல் அல்லது இணைத்தல் என்ற பொருளில் அமைந்த பெயராகும். தைத்தல் என்ற நூல்கொண்டு தைத்தல் மட்டுமன்று, தடவுதல் கூட ''தைத்தல்'' என்பதில் அடங்கும். தை+ இல்+ அம் > தை+ ல் + அம் > தைலம், அல்லது தையிலம்> தயிலம்> தைலம் என்றும் காட்டலாம்.. இது சிற்றூர்ச் சொல். தைவருதல் என்றால் தடவுதல். '' நரந்தம் நாறும் என் தலை தைவரு மன்னே'' என்று ஒளவையின் புறநானூற்றுப் பாட்டில் வருதல் கண்டு கொள்க.( புறம் 235)
தையல்காரன் என்ற சொல்லில் வரும் தை என்ற சொல்லையும் கவனிக்கவும். taugo என்ற செருமானிய மொழிச்சொல்லும் டை என்ற ஆங்கிலச்சொல்லும் அறியத் தக்கனவாகும். கழுத்துக்கட்டுக்கு ''டை'' என்பர். டையும் தையும் ஒன்றுதான்.
அகந்தை என்ற சொல்லில் தை என்பது ஒரு விகுதி என்று சொல்லலாம். தை என்ற விகுதிக்கு இணைப்பு என்ற பொருளும் காணற்குரியது ஆகும். தா+ இ என்ற இருபகவுகள் பழங்காலத்தில் இணைந்தபடி ''தை'' என்றும் ஆயின என்பது அறிதற்குரியது. குழந்தையைத் தாய் தருகிறாள். தா என்ற சொல் தருவதைக் குறிப்பதுடன் தாய் என்பதற்கும் விளக்கத்தைத் தருகிறது. ய் ஏன் வந்தது? என்று கேட்டாலே சிந்திக்க இயக்கம் உண்டாகும்.
அகந்தை: அகத்துடன் இணைந்தியங்கும் தன்மை உடையது இறுமாப்பு. ஆகவே விகுதி அழகாக அமைந்துள்ளது.
ஒருபொருட் சொற்கள்
அகங்காரம்
இறுமாப்பு
தன்மதிப்புமிகை
உட்கரணம்
செருக்கு
இடும்பு
சமுன்னதி
சளுக்கு
கற்பம்
காட்டிகம்
தெறிப்பு
பெத்தரிக்கம்
தற்பெருமை
மமதை
மேட்டிமை
வாமிலம் (வாயினால் மிலைந்துகொள்ளுதல்)------ முதலியவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
: நீ,
பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்
பிதற்றுவ தெற்றுக்கடா
மத்தினைப் பிடித்து மண்ணில் கடைந் திடில்
மதுரத் தயிர்மறுத்தே,
மெத்தச் சுவைதரு மோர்வரு மோசொல்க!
மென்மேல் பிழைசெய்கிறாய்
எத்தனை ஆண் டுகள் அடிமைப் புத்தியில்
இருந்ததனால் அழிந்தாய்.
ஆரியர் என்றது சங்கத் தமிழரை
அறிவாளிகள் அவரே;
சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்
குறித்திடும் தொடரதுவே!
ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்
அறிவுடையான் அல்லனே!
ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே
பிறரொன்றும் அறியாததே.
பொருள்:
எற்றுக்கடா - எதற்கடா
மென்மேல் - மேலும் மேலும்
மத்து - சிலுப்பிக் கடையும் கோல்,
மதுரத் தயிர் மறுத்து - இனிய தயிரைக் கடையாமல்
மெத்த - மிகுந்த
சுவைதரு- சுவையான
ஆர் என்ற... - வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.
பிறர் - தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.
இனப்பெயர் - ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்
சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.
புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது. திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும். புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை