செவ்வாய், 20 நவம்பர், 2018

அரணும் சரணும்

இன்று நாம் சரணம் என்ற சொல்லை அறிவோம்.

அகர முதலான அல்லது அகர வருக்க முதலான சொற்கள் சகர முதலாக அல்லது சகர வருக்க முதலாகத் திரிவது பெரும்பான்மை.  இவ்விடுகைகளில் இத்தகு சொற்கள் பல ஆராயப்பட்டுள்ளன. விளக்கினாலன்றி தெளிவுறாத பல சொற்களும் இப்பட்டியலில் உள.

இப்போது ஒரு சொல்:

அடுதல்:  என்றால் சமைத்தல் என்று பொருள்.

இதிலிருந்து தோன்றியதுதான் அடுப்பு என்ற சொல்.

அடுப்பில் வைக்கும் சட்டிக்கும் இவ்வடியினின்றே சொல் அமைந்தது.

அடு >  அட்டி >  சட்டி.


அடு என்பதனுடன் இகரம் சேர்த்தால் அடு + இ =  அட்டி ஆகும்,  இப்போருளில் இச்சொல் வழக்கில் இல்லை, இதிலிருந்து தோன்றியதே :  சட்டி என்பதாகும்.

யாவரும் அறிந்த பட்டியலில் உள்ள ஒரு சொல் வேண்டுமென்றால்:  அமண் = சமண் என்பதை வைத்துக்கொள்க.

அரண் என்பது தமிழில் பாதுகாப்பைக் குறிக்கும்.  அரண்கள் எங்கும் இருப்பவை அல்ல.  ஆனால் பாதுகாப்பிற்கு உரிய இடத்தில் இருக்கும்.
அரிய பாதுகாப்புக் கருவிகளுடன் உரிய இடத்தை அண்மி இருப்பது அரண். அரு+ அண் =  அரண் ஆகும். உரிய இடமென்பது எதிரிகள் கடந்து சென்றால் எங்கு பேரிடர் ஏற்படுமோ அவ்விடமே உரிய இடம்.  அப்படிக் கடக்க முடியாமல் அவர்களைத் தடுத்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே அரண்களின் தேவை ஆகும்.

இவ்வழகிய சொல்லே அரண் ; அது பின் இறைவனிடத்துப் புகுந்து பாதுகாப்பு வேண்டுவோனுக்குச் சரண் என்று மாறியமைந்தது.  அரண் புகுதலே சரண் புகுதலாம்.  இதிலிருந்து சரணம் என்ற சொல் அமைந்தது.

நான் இறைவனிடத்திற்கு வந்துவிட்டேன்; இங்கே எனக்குக் காவல் முழுமை பெறுகிறது.  இதுவே அரண்,  இதுவே சரண்,  என்பவன்,  சரணம் சரணம் என் கின்றான்.    அம் என்ற விகுதியை வெறும் விகுதி என்றாலும் அமைவு குறிகும் பொருள்விகுதி என்றாலும் அதனால் பிழையில்லை என்பதறிக.

அரு அண் -  அரண்.
அரண் >  சரண்>  சரணம்.

இது பின் ஷரணம் என்றும் ஆனது.  இறைவனின் இடமே  பற்றனுக்குக் கோட்டை என்றுணர்வோம்.

ஏதேனும் பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.

கருத்துகள் இல்லை: