செவ்வாய், 6 நவம்பர், 2018

தீபாவளி முடிந்ததா? பொங்கல் வந்துவிடும்........

கவலை வேண்டாமே..!


ஒருதிகதி  ஓடியிற்ற தீபா- வளி
ஓராண்டில் இனிவருமே தீர்வ-- திலை;
மறுபடியும் மறுபடியும் பலகா- ரமே.
மாந்தமிலை மகிழ்வுகொளீர் மாலை -- வரை;
இருவரிங்கு விருந்தோம்பி மகிழ்வு-- கொள
இனிப்பொங்கல் தனிவசதி மாறாப்--- புகழ்!
ஒருபடியாய் நாளனைத்தும் ஒடுங்கி-- நிலை
உற்றுவிடின் வாழ்விதுவும் வெற்றுக்--குழை

அரும்பொருள்:
திகதி:  தேதி, நாள்.
ஓடியிற்ற :  சென்றுமுடிந்த.
கொளீர் : கொள்ளீர் = கொள்வீர்
கொள -  கொள்வதற்கு
மாறாப் புகழ் -  வயிறார உண்டு மகிழ்ந்து
வாழ்த்துவதால் வரும் கீர்த்தி.
ஒருபடியாய் =  ஒரே மாதிரியாய்  வேறுபாடுகள்
இல்லாமல்;
ஒடுங்கி -  விரிவு இழந்து;
நிலை உற்று =  மாறாமல் அமைந்துவிட்டால்
வெற்றுக்குழை = பயனற்ற துளைத்தண்டு.
அணிகலன் இல்லாத கூந்தல் என்பதுமாம்..

உரை:

தீபாவளி ஒரே நாளில் ஓடிவிட்டதே என்று கவலைப்
படவேண்டாம், அது மீண்டும் வந்துவிடும் - அதுவும்
ஒரே ஆண்டிற்குள்ளாகவே.  அப்போதும் அடுத்தடுத்து
பல இனிப்புணவுகளை உண்டபடியே நீங்கள் மகிழலாம்.
காலையிலிருந்து மாலை வரும்வரை அப்போதும்
மகிழுறுவீர்கள். ஓராண்டா காத்திருக்கவேண்டும் என்று
அயர்வு கொள்ளாதீர். அதற்குமுன்பே பொங்கல்
வந்துகொண்டே இருக்கிறது! குடும்பத்தில் கணவன் மனைவி
இருவருமே விருந்தோம்புதலில் ஈடுபட்டு எல்லையில்லாப்
புகழை அடைந்துவிடலாம். அதுவும் வசதியான பண்டிகைதான்.
இவ்வாறு இல்லாதபடி ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாய்
மாற்றமொன்று மில்லாமல் இருந்தால் அதுவோ அணிகலன்கள்
அணிந்து அழகுகாட்டாத பெண்ணின் கூந்தல் போலும்
கிளர்ச்சிதராத வெறுமை வாழ்க்கை ஆகிவிடுமே. அத்தகை
உணர்வு அற்ற வாழ்க்கையோ நமக்கு வேண்டாம்,,



யாப்பியற் குறிப்புகள்

ஒவ்வோர் அடியிலும் இறுதிச்சீர் நிரையசையில்
முடியுமாறு தொடுக்கப்பட்டது.  பாடிமகிழ்க.

ஆக்கியோன் தனிக்குறிப்பு:

காலை ஐந்திலிருந்து வேலையாய்ப் போய்விட்டபடியால்.
வாயில்வந்த கவிதையை எழுதிவிட்டு ஓய்வு கொள்வேன்.

தன்-திருத்தப் பிழைகள் முளைப்பின் திருத்தம் பின்.

கருத்துகள் இல்லை: