வெள்ளி, 29 ஜூன், 2018

விற்றலும் வாங்குதலும்

விற்றலும் வாங்குதலும் பண்டைக்காலத்திலே தொடங்கிவிட்டன. வில் என்ற சொல்லும் தமிழிலே உண்டானது,   அது தல் விகுதி பெற்று,  வில்+தல் =  விற்றல் ஆனது. தமிழில் விற்றல் என்பதற்கு விலைக்குக் கொடுத்தல் என்பது அர்த்தமாக அல்லது  பொருளாகக் கொடுக்கப்படுகிறது.

வாங்குதல் என்பதற்கோ இப்படியமையாமல்  வளைதல் என்றே பொருள்பட்டது,  இன்றும் எதையாவது இன்னொருவரிடம் பெற்றுக்கொள்பவர், சற்றுக் கையை நீட்டி, உடல் வளைந்து நின்று பெற்றுக்கொள்கிறார்.  வாங்கு  என்பது வளைதல் குறிக்கும் பெயர். பழங்காலத்தில் வளைந்து நின்றுதான் பொருளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இற்றை நிலையில் வாங்குதல் என்பது விலைக்கு வாங்குதலையும் அல்லாது வாங்குதலையும் குறிக்கும். இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

வில் என்பதோர் அடிச்சொல். அது விர்>விய் என்றும் திரியும்.

விர் என்பது விரி > விரிதல் என்றும் திரியும்.  

விர்> விய் என்று திரிந்தபின் பல சொற்களை அவ்வடிச்சொல் பிறப்பித்துள்ளது.

வி> விய்> வியன் = விரிவு என்பது பொருள்>

விரிநீர் வியனுலகு என்று குறளில் வருவது காண்க.

விர்> விய் > விய >வியன்.

விய > வியா.

வியா > வியாபித்தல் =  விரிந்து பரவுதல்.

வியா என்பது வியாபாரம் என்ற சொல்லின் முதலாக நின்றது.

பாரம் என்பது உண்மையில் பரத்தல் என்ற அடியிலிருந்து வரும்.

பர > பரத்தல்.   எங்கும் பரவுதல்.

பர> பரவு.   பர> பார்.  

பார் என்பது பரவுதல் என்பதே.  அது முதனிலை நீண்டு பெயரானது,

பர+அம்,= பாரம்.  இதன் பொருள் பரவுதலைச் செய்தல் என்பது.

வியாபாரம் என்ற சொல்லில் பொருளுக்கு விற்றல் அல்லது வாங்குதல்  என்ற பொருளில்லை ஆயினும் அது சொல்லின் வழக்கில் ஏற்பட்டது,

பண்டைக்காலத்தில் பண்டமாற்று வணிகமிருந்தது.  விலை என்பது தெளிவாக ஏற்பட்டிருக்கவில்லை. பல இடங்களுக்கும் பொருளைச் சுமந்து சென்று பரவச் செய்தல் என்பதே வியாபாரம் என்பதன் பொருளாம்.

இன்று அதன் பொருள் வேறுபட்டுள்ளது.  இன்று வாங்குதல் விற்றல் என்று பொருள்.

வருத்தகம் என்பது இப்போது வர்த்தகம் என்று எழுதப்படுகிறது,  ஆனால் சொல் அமைந்தது:  வருத்து + அகம் என்றபடியே ஆகும்  பொருளை வெளியிலிருந்து வருத்தி விற்பதே வருத்தகம் ஆகும்.  அது பின் வர்த்தகம் என்று மெருகுபெற்றது.

வருத்துதல் என்றால் வருந்தச் செய்தல் என்றும் பொருள்.  அதனால் குழப்பம் தவிர்ப்பான் வேண்டி,  வருத்தகம் என்பது உண்மை வடிவமெனினும் அதை வர்த்தகம் என்று எழுதுவதே நன்று என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் முன்னமைப்புச் சொல் பொருந்தாவிடில் திரிபையே ஆளுதல் நன்றாகும்.

தமிழ்ச்சொற்களே திரிந்து   வழங்குகின்றன.  அது தமிழனுக்கு ஒருவகையில் பெருமையே ஆகும்.

பிழைத்திருத்தம் பின்பு.
மூலத்திலிருந்து வேறுபட்டுப் பிழையாகத்
தோன்றியவை: 11.7.2018 ல் திருத்தம்பெற்றன


கருத்துகள் இல்லை: