வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

நிமிஷம் நிமிடம் எப்படி அமைத்தனர்?

 ஒரு சொல்லை  அமைக்கப் பல தந்திரங்களைக் கையாளவேண்டியுள்ளது.  அவ்வாறு அமைப்பதில் இலக்கணம் படித்த புலவர்கள் திறனுடையோர் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழ்க்கை முழுவதையும் கல்வியில் செலவிட்டுப் பலவற்றை அறிந்து உளப்புலம் அடைந்தோரை நாம் போற்றத்தான் வேண்டும்.  என்றாலும் சில பழஞ்சொற்களை ஆய்வுசெய்கையில், பாமரர்கள் புலவர்களை வென்றுவிட்டதைப் போலவே தெரிகிறது.

நிமை என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  நிமைத்தல்  என்பது வினைச்சொல். இது இமைத்தல் என்றும் வரும்.

நிமை இடும் நேரமே  நிமிடம் எனப்படுகிறது.   நிமை+ இடு+ அம் >  நிமிடம்.  நிமை என்பதில் உள்ள ஐகாரம் குன்றிப் புணர்ந்தது.  இது சொல்லாக்கப் புணர்ச்சி.  நிமை எனற்பாலது நிம் என்று நின்றது.

நிம் என்பது ஓர் தமிழ் அடிச்சொல்.  நிம்> நிமிர் என்பதில்,  மனிதன் கூனுதல் இன்றிச் சரிப்படுத்திக்கொள்கிறான். நிம்+ ஐ > நிமை என்பதில்  நிற்கும் இமை தன் இயக்கத்தை மேற்கொள்கிறது.  இதில் சேர்ந்த ''ஐ''  இதைக் குறிக்கிறது. நிமைத்தல் என்பது  ஆகும் தொழிற்பெயர்.   இமைத்தல் என்பதும் அது.

நிமித்தம் என்பது நிமிர்ந்து இடுவித்தலுக்கான  நோக்கினைக் குறிக்கிறது.  இங்கு ''இடுத்தம்''  என்பது குறுக்கப்பட்டது.  வல்லொலியான டுகரம் விலக்குண்டு சொல் நன்கு அமைகிறது.    இது சொல்லாக்கத்தில் கடைபிடிக்கப் படும்.  எ-டு:  பீடு+ மன் >  பீமன். பீடுடைய மன்னன் என்பது. காரணப்பெயர்.  

ஒரு மத்து என்பது  சுற்றியுள்ளவற்றை மருவிச் சுற்றுகிறது.   அதனால் அதற்கு இப்பெயர் வந்தது.    மரு> மருத்து> மத்து என்று ருகரம் நீங்கியது காண்க. 

ஒரு பொருளின் நடு என்பது அதன் சுற்றியுள்ள பாகங்களை மருவி நிற்பது ஆகும்.  மருவாமை இருப்பின் அது நடுவாகாமை உணர்க. மருவி இயல்வதினால், மருத்து+ இயம் >  மருத்தியம்>  மத்தியம்  ஆயிற்று. ருகரம் நீங்கிற்று.  இந்நீக்கம், நாட்கடப்பினாலோ,  கருதி விலக்கினதாலோ நடைபெறலாம்.

நிமிடம் ( நிமை+ இடு+ அம்)  என்பது சரி. இதில் இடு என்பது பொருந்தி நிற்கிறது.  நிமிஷம் என்பது  சம ஒலி அமைப்பு ஆகும்.  அதுவே சம(ஸ்) கிருதம் என்பது.  கத்து> கது> கதம்> கிருதம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


புதன், 19 ஆகஸ்ட், 2026

திவாகரன்

இந்தச் சொல்:  '' திவாகரன்''  என்பது.  இவனுக்கு ( சூரியனுக்கு),  ஆதித்தன் என்ற பெயரும் உள்ளது.

இதைத்  தீ+வார்+ கு+ அரு+ அன்:   தீயைத் தொலைவிலிருந்தே வாரிக் கொணர்ந்து அருகில் சேர்த்துச்  (சூட்டைத்) தருபவன் என்பது எமக்கு நன்றாக இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்தைப் பதிவிடலாம்.  சூட்டைத் தருபவன் சூரியன் என்பதற்கு இது இனிய இணைப்பைத் தருகிறது.  சூரியன் என்பது  அன் விகுதி இல்லாமல் சூரியா என்று இருந்தாலும்  அதுவும் நலமே.  மடி> மரி என்ற இரண்டும் ஒருபொருள் தரும் போலிகள்.  டி என்பது ரி என்பதற்குப் போலியாக வரவில்லை?  என்ன வேறு ஆதாரம் வேண்டிக்கிடக்கின்றது.

இந்தச் சொல்லைப் பலவழிகளில் விளக்கலாம்.  இச்சொல் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கமுடையது ஆகும்.    பல ஆயிரக்கணக்கான அடிச்சொற்களைக் கொண்டது தமிழ்மொழி.  இதிலுள்ள மூலங்கள் எல்லா உலக மொழிகளிலும் பரவியுள்ளது.  சமஸ்கிருதம் என்பது இன்னொரு மொழி.  அதுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என்பதைச் சிந்திக்கவேண்டும்.   சமம்+ கதம்> சமக்கதம்> சங்கதம்.  என்றால் சமஸ்கிருதம்.   சமம் + ஸ்+ கதம் >  சமம்+ ஸ்+ கிருதம்>  சமஸ்கிருதம்.  இது என்ன பொருள் என்றால் சமமான ஒலியமைப்பு உடைய மொழி என்று பொருள்.  தமிழின் அடிச்சொற்களுடன் ஓரொலி உடைய மொழி சமஸ்கிருதம்.   ஏன் கிருதம் என்று  சொல் வந்தது என்றால் மகம்> மிருகம் என்பதுபோல்,  கதம்> கிருதம் என்று முடிந்தது.  அவ்வளவுதான் தெரியவேண்டியது.  

கதம் என்பது, கத்து என்பது ஓரெழுந்துக் குறைந்து,  கது என்று வந்தது. அம் விகுதி வந்தது. கது என்பதே நீண்டு காது என்று வந்து ஒலிவாங்கி என்ற பொருளைத் தந்தது.  இன்னும் பல. இது நிற்க.

திவாகரன் என்பது சமஸ்கிருதம் என்றாலும் சரிதான்.  தமிழ் என்றாலும் சரிதான். திவாகர் என்றாலும் வேறுபடாது.

திருவாகும் அரன் >  திருவாகு அரன் >  திருவாகரன் >  திவாகரன் என்றும் வரும். இப்படி வந்தால் அது ஒரு சொற்றொடராய் வந்து,  ஒரு சொல்லாகி,  ரு என்பது இடைக்குறையாகி,  திவாகரன் என்று வரும்.   யாரைக் குறிக்கிறது.  சிவனைக் குறிக்கும்.  சூரியனையும் குறிக்கும்.   பண்டைத் தமிழரின் வரலாற்றின் அவர்கள் இயற்கை எழிலர்களான சூரியன், சந்திரன், உடுக்கள் என இவற்றையும் தேவர்கள் என்றே கொண்டனர். நாளடைவில் சிவனைத் தனியாக அறிந்துகொண்டனர்.  

அர்> அரு> அருகுதல்  ( பலவாக இல்லாமை).  அர் > ..   இது சிவப்பு என்றும் பொருள்.  எ-டு:  அர்> அரத்தம் >  இரத்தம் > ரத்தம் ( சிவந்த நீர்,  செந்நீர் என்றும் கூறுப.  மனிதர்கள் பெருகியதுபோல் சொற்கள் பல பின் தோன்றின. தொடக்கத்திலே இலக்கக் கணக்கில் தோன்றிவிடவில்லை. அர் என்றால் ஒலி என்றும் பொருள்.  அர்> அருச்சனை> அர்ச்சனை என்பதில் ஒலிப்பொருள். அர்> அரசன் என்பதில் ஒலிசெய்து மக்களை ஒன்றுகூட்டுவோனைக் குறித்தது. படைநடத்துகையில் இன்றும் இதை உணர்ந்துகொள்ளலாம். இது நிற்க.

இனித் தீ(ய்)வு + ஆகு+ அரன் >  தீவாகரன் > திவாகரன் என்று பார்ப்போம். தீய்வு ஆகுமாறு அருகில் இருப்போன்.   சிவனும்  தீமை செய்வோரை தீய்ப்பதற்கு  அருகில் இருப்பவன் தான்.  அரன் என்பதற்கு தீயோரை அரித்தெடுப்போன் என்ற பொருளும் கூறியுள்ளனர். அரி+ அன் >  அரன் என்பதில் ரி என்பதன் இகரம் கெட்டது.

மற்றொன்று:  தீ+ வா( ர் )+ கு + அரன் >  திவாகரன்  ஆகும்.  தீயை அல்லது அதில் வரும் ஒளியை வரச்செய்து அல்லது வாரித்தந்து செயல்புரிவோன் என்க. 

இன்னும் உள.  இன்னொரு பதிவில் வெளிப்படுத்துவோம். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

[இதை வரையும்போது சில பாகிகள் முன்னுக்குப் பின்னாக மாறிவிட்டன. இது யாம் செய்யாமல் கணினி தானேகவே செய்துவிட்டது.  எனினும் யாம் இதில் ஏதும் மாற்றாமல் விடுத்துவிட்டதே நலம் என்று கருதுகிறோம். ]

சனி, 15 ஆகஸ்ட், 2026

''பெலக்கப் பேசு'' என்றது -. கோஷம் என்பது



''பெலக்க'' என்ற எச்சவினை, இன்னும் வழக்கில் உள்ளது. '' தம்பீ, கொஞ்சம் பெலக்கப் பேசினால்தான் எல்லாருக்கும் கேட்கும்'' என்னும்போது, இச்சொல் வந்துவிடுகிறது. இந்த எச்சத்துக்கு உரிய முழு வினைச்சொல், '' பெல(த்தல்)'' என்பதுதான்.

எடு> எடுக்க. கெடு> கெடுக்க, வெறு> வெறுத்த என்பனபோலும் வினையின் போந்த எச்சமே இதுவாகும். தொழிற்பெயர்கள் எடுத்தல், கெடுத்தல், வெறுத்தல் என்பனவாம். இளை> இளைத்தல் என்பதும் காண்க. ஆகவே பெலத்தல் என்பது நன்றுதான். பெலக்குதல், பிலத்தல் என்ற வடிவங்களும் கிடைக்கின்றன. இவை ஏற்புறவே, பலத்தல் என்ற சொல் ஏற்புறாது போகுமோ. வலத்தல் என்பது பொருள் திரிபுடன் வருகின்றது. இது சொல்லல், நினைத்தல், வளைத்தல் என்றும் பொருள்தரும்.

இருநூறு முன்னூறு ஆண்டுகட்கு முன் வெளிவந்த அகரவரிசைகள் ஆய்வுக்கு வேண்டியவை ஆகும். அவற்றைக் காத்து வைப்பதற்கு நடவடிகைகளை தமிழரசுகள் உதவவேண்டும்.

வல் என்பதே அடிச்சொல். வல்- வலம்> பலம் என்பது திரிபு. ''பலத்த கைதட்டல்'' என்பது இன்றும் வழக்கில் உள்ளது.

கோடு என்றால் தமிழில் வளைவு என்று பொருள். சங்கப் பாடலில் '' கோடுயர் உச்சி'' என்றால் வளைவான உச்சி( மலை) என்பதுதான். பண்டை மக்கள் வளைவாக நின்றுகொண்டு ஒலி எழுப்பியதே அடிக்கடி நிகழ்வாகும். கோடு> கோடம் என்பது வளைந்து நிற்றல். இது ஒலி எழுப்புதலையும் குறித்தது. பின்னர் கோடம்> கோஷம் என்று மெலிந்தது. கோடித்தல் > கோஷித்தல். கோடித்தல் என்பது வழக்கிறந்தது. கோஷம் தான் கோடம் ஆனது என்று பிறழ நினைத்தனர். வேஷம் என்பதற்கு யாம் தந்த விளக்கத்தைப் படிக்கவும். வேய்ந்துகொள்ளுதலே வேஷம். மேலிட்டுக்கொள்ளுதல். ட என்பது ஷ் என்பதன் சம ஒலி ( சமகதம் > சங்கதம் > சம(ஸ்)கிருதம்).

கோடு என்பது எல்லையாதலால், கோடம் என்றும் சொல்வர். ஆனால் இது பெரிதும் வழக்குப்பெறவில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

சனி, 8 ஆகஸ்ட், 2026

அபலை என்பது. ஆண்பால் அபலன்.

 அபலை என்பது  கைவிடப்பட்ட பெண்ணைக் குறிக்குமென்பர்.  இந்தப் பொருளை இங்கு ஆய்வு செய்வோம்.

இதில் வரும்  பலை என்ற இறுதி,  பலம்+ ஐ <  பல+ ஐ <பல்+ ஐ  எனவரும்.  பல்  என்பது பலம் என்ற சொல்லின் அடிச்சொல். இது வழக்கில் பலமில்லாதவன் என்பதில் பயன்பாடு காணும்.   ஆளும் கட்சி பலமிழந்தது என்ற வழக்கைக் காண்க.  அபலன் என்பது அபலை என்பதன் ஆண்பால் வடிவம்.

பலம்   என்ற சொல்,  பிற்காலத் திரிபு.  முன் அது  வல்- வலம் என்றே இருந்தது.  பகர வகரப் போலியை உணர்ந்துகொள்ள வகு> பகு என்பதைக் கண்டுணரலாம்.

வந்து இரு  என்பதே  வந்திரு >  வது இரு>  ( ரு குன்றி) >  வது இ > வதி என்றானது. இதை வந்திரு> வந்தி> வதி என்றும் காட்டலாம்.  வந்தி இடைக்குறை வதி என்பதுணர்க.  ரு மறைவு கடைக்குறை ஆகும்.  பின் வகு > பகு போல வதி > பதி என்று சொல்லமைந்தது. இது வகர பகரப் போலி.

அல் என்பது கடைக்குறைந்து,   அ+பலை  என்று சேர்ந்து அபலை ஆயிற்று.

வதிதலாவது,  குடியிருத்தல்.  பதி என்ற கணவனைக் குறிக்கும் சொல்,  வந்து பெண்வீட்டில் தங்கிக் குடித்தனம் செய்தவனைக் குறிக்கும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தனுஷ் என்பது (வில்)

 வில் என்று குறிக்கப்படும் கருவி,   பழைய தொடக்கத்தின்போது,  மரத்தண்டுகளால் ஆனவைதாம்.  நல்லபடி வளைந்துகொடுக்கும் தண்டுகளால் இந்த வில்கள் அமைக்கப்பட்டன.

தண்டு என்ற  சொல்:  தண் என்பது அடிச்சொல். இதில் வந்த டுகரம்,  உண்மையில் '' து''  என்பதுதான்.  பின்னர் '' டு''  என்பதே ஒரு விகுதியாகக் காட்டபட்டிருக்கலாம்.  எதுவாயினும் சொல்லமைந்தபின் அது பயன்பட்டு, புழங்கப்படுகிறதா என்பதுதான் அந்தச் சொல்லின் நீடிப்புக்குக் காரணம்.

தண்+ து >  தண்டு.

தண்+ டு > தண்டு. 

மேலது புணர்ச்சி காரணமான திரிபு  ஆகும்.

தண் என்பது தண்மை அல்லது குளிர்ச்சிக்கும் வரும் அடிச்சொல்  ஆகும்.

தண்டுவடம்,  தண்டுக்கீரை என்ற சொற்களில்,  தண்டு என்பது தண்மை என்னும் குளிர்ச்சியைக் குறிக்கவில்லை.  கம்பு, கம்பம் என்பனவும் தண்டு குறிக்கும்.

தணுஷ் என்ற சொல்லில் டு அல்லது து என்பதற்குப் பதில் ஷ் வந்தது.  தண்> தணு> தணுஷ்.     தணு என்பது உகரத்தில் முடிந்த சொல்.   கண்> கணு என்பது போல.

தணுஷ் என்பது வில் குறித்தமையால் இது ஒரு கருவிக்குப் பெயராய் வழங்கியுள்ளது.

தண்டு என்பது படையினர் வைத்திருந்த ஆயுதம் ஆதலால்,   அது படையையும் குறித்தது. தண்டு என்பது வில்  (தணுஷ்).  தண்டெடுத்தல் என்பது படையை இயக்குதலையும் குறித்தது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.

புதன், 5 ஆகஸ்ட், 2026

வாக்கு

 வாக்கு என்பதன் சொல்லாக்கம்  அறிவோம்.

வாக்குதல்  என்ற வினைச்சொல்லும் உள்ளது.  இதன் பொருள் வார்த்தல் ( வார்த்தெடுத்தல்) என்பதாகும். 

வார்த்தல் என்பது, தனித்தனியாக வகைப்படுத்தி ஒவ்வொரு வார்ப்பையும் ஒரு குறித்த அளவுடன் எடுத்தல் என்று சொல்வர். இதைச்செய்ய ஏனங்கள் இருக்கும். இவை பலகார வகையாக இருக்கலாம்.  உலோகக் கட்டிகளாகவும் இருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகை வகுத்தமைத்தலே ஆகும். வார்த்தல் என்பது ஒருபக்கம் நீளமாக வரச்செய்தல் என்றும் கொள்ளலாம். வார்த்தலில் வேறுபாடுகள் உள.

வகு> வாகு> வாக்கு.

வகு > வார்.

வகு > வகை> வாகை   (வாகை என்பது வகைகளை உடைமை என்றும் பொருள்தரும்.)

வகு> வாகு> வாகை.

இவற்றின் பொருளை நிகண்டுகள் வாயிலாக அறிந்துகொள்க.

சொற்களும் பலவேறு வகையின  ஆதலின்,  வகுக்கப்பட்டவை எனலாகும்.

வாய்>  வா>  வாக்கு என்று அமைதலும் ஆகும்.  இது நா> நாக்கு என்றபடி அமைதலே.

ஆகவே இச்சொல் இருபிறப்பி என்று முடிக்கவேண்டும். வாய் என்பதை வா என்று யகர மெய் விடுத்துப் பேசுவோரும் உளர்.  வாய்ப்பேச்சு>  வாப்பேச்சு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

திருநாமகரண அழைப்பிதழ்

 


1940 வாக்கில்  இலங்கைப் புலவர் திரு. சேகரம் பிள்ளை ஒரு விழா எடுத்து எமக்குப் பெயரிட்டார்.  அவர் இட்ட பெயர் மாசிலாமணி என்பது. இதுநாள் வரை இதுவே எம் பெயர். இதன் அசல் திருட்டுப்போய் விட்டது.  இவர் பத்திரிகை ஆசிரியர் ஆதலால், இவர் நடாத்திய இதழ் பற்றிய வரலாறு  அரசு பதிவகத்தில் இருக்கும். (1935 முதல் 1940 வரை). இவ்விதழின் பெயர்: ''புதிய உலகம்''   என்பதாகும்.

திரு சேகரம் பிள்ளை அவர்கள் இலங்கையிலிருந்து வந்து முதன்முதலாகத் தங்கிய இடம்:  சிறம்பான் என்ற நகரம். இங்கு ஒரு தமிழர் சங்கீத சபா  ஒன்று இவரது  ஆதரவில் நடைபெற்று வந்தது என்று தெரிகிறது.  இதை இளநாட்களில் எம்மிடம் பழகிய பெரியோரிடமிருந்து யாம் அறிந்துகொண்டோம். 

அப்போது ஒரு பாட்டுப்புத்தகமும் கிடைத்தது.  அதன்  ஆக்கியோர் கவி காருண்யம் என்பவர். அவர் கவிதை நூலுக்கு சேகரம் பிள்ளை ஒரு மதிப்புரை வழங்கி இருந்தார்.  அதில் அவர் பாடிக்கொடுத்த ஒரு சாற்றுகவி இவ்வாறு இருந்தது.  

உயர்ராக நாதபுரம் தனிலேதான்
ஓங்குபுகழ் தாங்குகீழைச் சீவல்பட்டி, 
தயவுநிறை மக்களுறை மாங்கொம்பாம்
தங்கபுரி மங்களம்சேர் சிங்கமான
புயவலியன் கருப்பையா தந்தபுத்ரன்
பூதலத்துச் சமுகச்சீர் திருத்தவல்லன்,
நயமாகத் தருசமத்வ கீதமீந்த
நாட்டவர்கள் கேட்பதற்கோர் நல்லநூலே.

 இவர் இலங்கை சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களின் மாணவர். கொழும்பு பலகலை அல்லது கல்லூரியில் தமிழ்ப்புலவராகத் தேறித் தமிழ்ப்புலவர்ப் பட்டம் பெற்றவர்.   இவருக்கு  திரு வி. கல்யாண சுந்தரனாரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன என்று திரு அடைக்கலம் அவர்களிடமிருந்து அறிந்துகொண்டேம்.  எனது மாணவப் பருவத்தில் இவர் பதிப்பித்த இதழின் படிகள் ( பிரதிகள்) சில இருந்தன.  அவற்றில்  வெண்பாக்கள், விருத்தங்கள் , விடுகதைகள், குடும்பக்கதைகள் முதலிய பல இருந்தன. இவற்றைக் கற்றறிய ஆவலும் இருந்தது. இவற்றின் காரணமாகவே,  ஆரிய சமஜத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த திரு  அப்பாத்துரைச் செட்டியார் என்பவரிடம் சென்று யாமும் தமிழ் கற்றுக்கொண்டோம். அப்போது யாம் சிங்கப்பூர் செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தோம். இது ஓர் அரசு உதவிபெற்ற கிறித்துவ உயர்நிலைப் பள்ளியாக இருந்தது.

எமக்குப் பெயரிட்ட காலத்தில் எம் அம்மாவின் பெயர் எதுவும் இந்த அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளவும்.  யாம் ஜோசப் பள்ளியில் சேருங்காலத்தில்  என்னிடம் இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் இருந்தன. இவற்றில் பெயர் முதலியவை கையெழுத்தால் எழுதப்பட்டவை. இவற்றை பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாமல், ஒரு வெள்ளி கட்டணத்துக்குப் பதிலாக ஐந்து வெள்ளி மாதம் வசூலிக்கப்பட்டது என்பதும்  எம் நினைவில் உள்ளதாகும்.


சனி, 1 ஆகஸ்ட், 2026

நிரஞ்சன் என்பது

 நிரஞ்சன் என்பதைக் கவனிப்போம். பெண்பாற் சொல்லாக, நிரஞ்சி என்ற சொல் ஒன்று அமையவில்லை என்று சொல்லலாம். அல்லது எங்கோ இருந்து வழக்குப் பெற்றிலது என்று வைத்துக்கொள்ளுதலும் கூடும். நிரஞ்சன் என்பதை ரஞ்சன் என்று சுருக்கிவிட்டால், ரஞ்சிதா என்ற சொல் கிட்டிவிடும். இதற்கு நல்ல பல பொருள்களைக் கூட்டி உரைக்கலாம். மிகப்பழைய நாட்களில் இது : ரஞ்சி ஆத்தா என்றிருந்து,  ஆத்தா என்பது தா வாகி, பழையதிலிருந்து புதிய சொல் ஒன்று வந்திருக்கின்றது.  மொழி என்பது இப்படி அமைவதுதான்.  புதிய சொற்கள் விரியும் கற்பனைகேற்ப சொற்களும் பெருகும்.

நிறைந்தவன் >  நிறைந்தான் > நிறஞ்சான் >  நிரஞ்சன் > ரஞ்சன்.

பழைமையில் தோன்றியதுதான் புதுமை. வெற்றிடத்தில் எதுவும் விளவதில்லை.

என்னதான் புதுமை மனிதனாக இருந்தாலும் அந்தக் காற்று இருக்கும் வரைதான் நீ மனிதன்.  இதை உணர்கிறோம் அன்றோ?

அ, இ, உ என்பவை திரிந்து பல ஆயிரக்கணக்கான சொற்களாயின என்று சிலர் கூறுவது அதனால்தான்.  ஆனால் பேசுகிறவனுக்கு ஒவ்வொரு சொல்லும் தனித்தனி அர்த்தம் உள்ளதாகத் தோன்றவேண்டும்.  அப்போதுதான் மொழியின் இயக்கம் சரியாக நடைபெறும்.  இதனால்தான் சட்ட நூல்களில் சொற்கள் வரையறவு (  definitiions ) செய்யப்படுகின்றன.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை