மிகுவதெலாம் புகுவதற்கோ பூமி வேண்டும்
புகுவதெலாம் புன்மைதாம் பொய்கள் என்றால்
''புகுமி'' யெனும் பூமியனை பொங்கு வாளே
பொறுத்திடவே திறன்தானும் உண்டோ சொல்வீர்
வெகுள்வதுவும் வீசுவதும் வெள்ளம் என்னும்
விளைவனைத்தும் பூமிஇவள் சீற்றம் அன்றோ
தகுமுறையில் உணருவனோ தாழ்ந்த மாந்தன்
தாரணியோ தருபொறுமை தாழா மைக்கே.
( சந்தம் மாறுகிறது)
உயிர்பெற்று வாழ்கின்ற மனிதன் பூமிக்
குயிரில்லை என்றுள்ளில் நினைத்துக் கொண்டு
தயை ஒன்றும் பாராமல் அகழ்ந்து வீசித்
தகைநீங்கு அன்முறையால் செயல்கள் செய்தார்
பெயல்மிக்கு வளிவீச்சு அழிவு கூடி
பேணாமை தாளாமை ஒழிந்து யாரும்
அயல் எனவே கருதாமல் மயலும் நீங்கி
அனைவருமே ''அக உதரம் '' அடைந்து வாழ்க
பொருள்:
தாரணியோ - பூமியோ, ( நிலமடந்தை என்பவள்)
தாழாமைக்கே --- குறையாமைக்காகவே
அக உதரம் - சகோதரம் அல்லது உடன்பிறப்பு ( உதரம் - வயிறு)
தயை - அன்பு
உள்ளில் நினைத்துக்கொண்டு- வெளியில் சொல்வதில்லை.
பூமியனை - பூமிய(ன்)னை ( தொகுத்தல்)
அன்முறை - அநியாயம்
பேணாமை - பாதுகாவல் செய்யாமை
தாளாமை - பொறுத்துக்கொள்ளாமை
மயல் - தெளிவின்மை
பெயல் - மழை, மிக்கு - அதிகம் ஆகி
அக உதரம் > சக உதரம் > சகோதரம்.- சகோதரத்துவம்.
இவ்வாறு சொல் திரிந்தது.
உட்கருத்து. எங்கு அகழவேண்டுமோ, அங்கே நிறுத்திக்கொள்வது
மனித குலத்துக்கு நல்லது. இமயமலையிலெல்லாம் போய் அகழ்ந்தால்
விளவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக