சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.
சித்திரச் சோலைகள்
சித்திரச் சோலைகளே உமை நன்குதிருத்த இப் பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.
உங்கள் வேரினிலே.
இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை. யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.
சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் அமைப்பில் ஒற்றுமை இருப்பின், அதுவும் சித்திரமே. திரம் என்பது திறம் என்பதன் திரிபு. பின் விகுதியாகிவிட்டது. இதுபற்றி முன் கூறியுள்ளோம். காண்க.
ஒன்றைப்போல் சிறிதாகச் செய்யப்பட்டது அல்லது எழுதப்பட்டது சித்திரம் என்றும் கூறுவதற்குப் பொருந்திய சொல் சித்திரம். சிறுத் திரம் > ( இதில் றுகரம் குன்றி இடைக்குறையாகிச்) சித்திரம் என்றும் வரும். இது பின் சமஸ்கிருதம் சென்று இடம்பிடித்தது. ஆகவே நல்ல தமிழ்ச்சொல்.
செத்தல் என்றால் ஒத்திருத்தல்.
செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி. இந்தத் திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது. திறம் > திரம். சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம். பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன. சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன. மிகுதி > விகுதி. சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும். வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம். வரு> வரு+கு+ அம்= வருக்கம். வருகின்ற கொடிவழி.
மி>வி: இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.
செ + திரம் = செத்திரம். இதுபின் சித்திரம் என்று திரிந்தது. அதன்பின் செத்திரம் என்ற சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது. இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.
ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று. செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.
ஒத்தலும் செத்தலும்
இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு. எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர். ஆகவே ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும். எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும். இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.
செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று. சா என்பதே ஆகும், சா> சாதல். சா - செத்தல் அன்று. செத்து என்ற வினை எச்சம் சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது. தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது. இதைக் கொண்டுபோய் ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.
ஓவியம் என்ற சொல்லிலும் ஒ என்பதே பகுதி அல்லது அடி. ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம். ஓ+ அம் = ஓவம். என்றால் சித்திரம். ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார். அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம். ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்). ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால் முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர். சுடு> சூடம் என்பது போல.
புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும் ஓவியமாய் உலவுவது புலி.
சி - செ/ செ- சொ திரிபுகள்
சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும். சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம். அது இப்போது மட்கிவிட்டது.
ஒப்பு நோக்குக: செந்தூரம் > சிந்தூரம்.
நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம். நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு. ஊறு என்பதே ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக. ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.
நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன. இருந்தால் கொண்டாடுங்கள். இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.
பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.
அறிக; மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
இதிலிருந்த எழுத்துக்களில் பிறழ்வு ஏற்பட்டுச் சில காணமற்போய் விட்டன. இப்போது திருத்தி அமைக்கப்படுகிறது. 27.08.2026 0727 மணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக