புதன், 17 அக்டோபர், 2018

சில வினைமுற்றுக்களின் சிறப்புகள் ( ஒரு வினா)

இன்று சில வினைமுற்றுக்களை ஆய்ந்தறிவோம்.

தமிழில் நிகழ்கால வினைமுற்றுக்களில் இன்று என்ற சொல் பயன்பட்டுள்ளது இப்போது காண்போம்.

வருகின்றான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

வரு+ கு + இன்று + ஆன்  = வருகின்றான்.
செய் + கு + இன்று + ஆன் =  செய்கின்றான்.

இப்போது  இவ்வினை வினைமுற்று வடிவங்களில் இன்று என்ற சொல்
பயன்படுத்தப்பட்டதென்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதை வேறு விதமாகச் சொல்வோம்.

வருகின்றனன்    -  இதில் அன் என்று ஓர் இடைநிலையும் அன் என்ற
ஓர் ஆண்பால் விகுதியும் இணைந்துள்ளன காண்பீர்.

வரு + கு+ இன்று + அன் + அன்
செய் + கு + இன்று + அன் + அன்.

இன்று என்பதே இப்போது செயல் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது.
காலம்  நிகழ்காலம் எனப்படும்.

இனி,  இறந்த காலத்தில் இதைக் கூறுவதானால் இன்றுக்குப் பதிலாக
அன்று என்பதை இடவேண்டும்.

வ  +  து +  அன்று.
செய் + து + அன்று.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இன்றுக்கு எதிர்மறையான அன்று என்பதே இறந்தகாலம் காட்டுவது.  நாளடைவில் அன்று என்ற விகுதி களைவுற்றது.  பயன்பாட்டு வழக்கின் காரணமாக வந்து என்பதே இறந்தகாலத்தைக் காட்டத் தொடங்கியது. இற்றைக்கு வந்து என்பதே இறந்தகால எச்சமாகவும் வந்தான் என்ற ஆன் விகுதி இணைப்பு உள்ள முற்று  இறந்தகால வினைமுற்றாகவும் இயல்கின்றது.

ஆகவே பழம்பாடல்களில் வந்தன்று எனின் இன்றைய வழக்கில் வந்தது என்பதாகும்.

அன்று என்பது  அன்+து என்று அமைந்த சொல்.   அன் என்பது இறந்தகாலச் சுட்டுச்சொல்.  அ என்பது அதனடி. ஆகும்.

எனவே வந்தன்று என்பதைப் பிரித்தால்:

வ+ து + அன் + து  என்று பிரியும்.   இதில் து இருமுறை வந்துள்ளது.

இதில் புலவர்கள் புகுந்து,  வந்து என்பதில் வ+த் +உ என்று  உறுப்புகள் சேர்ந்து  த் என்பதே இறந்தகாலம் காட்டிற்று என்றனர்.  அன்று என்பது விகுதியாக இல்லாதுபோயின் த் என்பதுதான் இறந்தகாலம் காட்டவேண்டிவரும். வந்~ என்பதில் நகர ஒற்று புணர்ச்சியினால் உண்டானது எனக்கொள்க. கால உணர்வு ஏதாவதொன்றில் தொற்றிக்கொள்வதே உண்மையாகும்.

பொழிப்பாக:

வருகின்று என்பது  நிகழ்காலம்.
வந்தன்று என்பது இறந்தகாலம்.

வருகின்று  என்பது  வருன்னு என்று  நிகழ்விலும்  வந்தது என்பது வன்னு என்று இறப்பிலும் மலையாளத்தில் திரிதல் காண்க.

 இன்று என்பது இன்னு என்று திரிய,  அன்று என்பது அன்னு என்று திரியும்.

வருன்னு என்பது வரு என்ற பகுதியில் காலம் இல்லை.
வன்னு என்பதில் 0ன்  எனற்பாலதில் காலம் இல்லை.
ஈரிடத்தும் உகர இறுதி சாரியை.

இதற்கு மாறாகக் காலம் வரு என்பதில் நிகழ்வு;  வன் என்பதில் இறப்பு எனலாமோ?
அல்லது  வருகின்று என்பதில் இன்று எனல் காலம்;  ஆயின் வந்தன்று என்பதில் அன்று என்பது காலப் பொருள் பொதிந்திருக்கவில்லை என்னலாமோ?

மறுதலித்துப் பின்னூட்டம் செய்க.

வந்தன்று, மகிழ்ந்தன்று என்பன சங்ககால வடிவங்கள்.

நினைவிலிருந்து:

"இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே"

யாதுமூரே என்ற கணியன் பூங்குன்றனார் புறநானூற்றுப் பாட்டு,

காலச்சுவடுகள் யாங்குள கூறுக.

-----------------------------------------------

அடிக்குறிப்புகள்:




நன்னூல்: எழுத்ததிகாரம்: பதவியல்.

143. ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை


கு+ இன்று என்பதை கின்று என்று பிரித்து வகைப்படுத்தும் நன்னூல்.
இன்று என்பதும் முன் நிற்கும் கு அல்லது க் என்னும் ஒற்றும் தனித்தியங்காமல் இடைநின்றமையின் அவற்றுக்குத் தனிப்பொருள்
நன்னூலார் கூறிற்றிலர். இது பிறழ்பிரிப்பென்பார் அறிஞர் மு.வரதராசனார்.

கிறு என்பது கின்று என்பதன் இடைக்குறை.

ஆநின்று:   செய்யாநின்றான் =  செய்துநின்றான்.
இது செய்யாமல் நின்றான் என்று பொருடருதலும் உண்டு. கவனமுடன்
காண்க.

142. த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை   ( நன்.)






கருத்துகள் இல்லை: