ஞாயிறு, 21 அக்டோபர், 2018

ஆறுமோ ஆவல் ஆறுமுகனைக் காணாமல் (பாட்டு)

இது ஓர் அழகிய கர்நாடக சங்கீதப் பாடல்:

பாடலை முழுமையாகத் தருகிறேன். இசைவட்டில் உள்ள பாடல்தான்:


ஆறுமோ  ஆவல்
ஆறுமுகனை நேரில் ----  காணாமல்   (ஆறு)

ஏறுமயில் ஏறிக் குன்று
தோறும் நின்றாடியவன்
பேரும் புகழும் தெரிந்தும் அவன்
பேரழகைப் பருகாமல்                               (ஆறு)

ஞான குருபரன்
தீனர்க் கருள் குகன்
வானவரும் தொழும்
ஆனந்த வைபோகன்

காணக் கிடைக்குமோ
கூறுதற் கில்லாத
அற்புத தரிசனம்
கற்பனை செய்தால் மட்டும்                   (ஆறு )

இதை  அமரர் எம். எல். வசந்தகுமாரி கச்சேரிகளிலும் பாடியுள்ளார்.
கேட்டு மகிழவும்.

இயற்கை எல்லாம் அழகுதான்.  அதுவே அழகு.  அதுவே முருகு என்பார்
திரு வி.க.    "பேரழகைப் பருகாமல்"  என்ற வரியை  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இயற்கை அழகெல்லாம் காணுங்கள்.  முருகு என்றால் அழகு,    பின்  முருகு நிலைகொள்ளும் முருகனையும் காணுங்கள்.  அதுவே "ஆனந்தம்" என்பது.  அவன் ஆனந்த வைபோகன்.  மகிழ்வனைத்தையும் ஒருசேர ஆங்குக் காணலாம்.  நுகரலாம்.   அற்புத தெரிசனமே அது. வானின் அனைத்தும் அவ்வழகைத் தொழுகின்றது.  அதைக் கற்பனை செய்து கொண்டிருந்தால்மட்டும் காணுதற் கியலாது.  சென்று வணங்க வேண்டும்.

அழகைப் பெண்ணாக உருவகம் செய்கிறார் பாரதிதாசன். 

காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன் அந்தச்
சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்
மாலையிலே மேற்றிசையில் இலங்கு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்  ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டம்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்

எங்கெங்கு காணினும் சக்தியடா -- தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா!

பின் சொந்தமாகப் பாடி  உவகை கொள்ளுங்கள்.

அம்மையும் ஆறுமுகனும் ஒன்றே,  எல்லாம் அழகுதான். தூணிலும்
துரும்பிலும் இருப்பது இறைமை ஆகும்.  சிவம் வேறு முருகன் வேறன்று என்பார் அருணகிரிநாதர்.

கருத்துகள் இல்லை: