வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

புகார் என்றால் நுழையமாட்டார் என்பது! என்ன புகார்?



மன்னர்கள் ஆட்சிகாலத்தில் அவர்களும் குடிமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றுக்கொண்டனர். ஒரு மன்னர்முன் நேரடியாகத் தோன்றி ஒருவன் தன்வருத்தக் கூற்றுகளை முன்வைப்பதானால் அப்போது அரசவையில் மன்னன் அமர்ந்து ஆய்வு செய்வதில் ஈடுபட்டுக்கொண்டுள்ள நேரமாக இருக்க வேண்டும். அரண்மனைக்கு வருவோருள் இருவகையர். இருந்தனர்.  ஒருவகையினர் “புகுவார்”.  புகுவார் என்போர் அனுமதி என்னும் நுழைவிணக்கம் பெற்றவர்கள்.  இவர்கள் அரசனுக்கு அணுக்கமானவர்கள்.  அரசு அதிகாரிகளும் கவிஞரும் பாவலரும் அறிஞர் பெருமக்களும் இவர்களில் அடங்குவர்.  இன்னொரு வகையினர் புகார்.  புகாரைப் படைஞரும் காவலதிகாரிகளும்  உள்ளே விடமாட்டார்கள். அரசரிடம் காவலாளி சென்று கேட்டுச் சரி வரச்சொல் என்றபின் இவர்கள் புகுந்தனர்.

மு(த)ன்மை வாய்ந்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது புகார் ஆனவர்கள் தங்கள் வருத்தக் கூற்றுகளை யார்மூலமாவது சொல்லி அனுப்பி ஓர் அதிகாரியின் வாயிலாக  அரசர்  அவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கலாம்.  வாய்மொழியாக இல்லாமல் ஓர் ஓலையில் தம் வருத்தங்களையும் குறைபாடுகளையும் சுருக்கமாக எழுதி அனுப்பிவைத்தோரும் உண்டு. இவை ஒரு வகையில் நிலையான கூற்றுமுன்வைப்புகள் ஆயின.  மன்னுதல் என்றால் நிலையானது என்று பொருள். இவையே “ மனுக்கள்’ ஆயின.  மன்+உ – மனு.  உ விகுதி.  உ என்பது முன் என்றும் பொருள்படும். இருவகையிலும் பொருள் கூறலாம்.

சிலர் முன் கூட்டியே தாம் கருதியவற்றை எழுதி ஓலையைக் கொண்டுபோய் அதிகாரிகளிடம் நீட்டினர். இவை நீட்டோலைகள் எனப்பட்டன.  . தக்க தருணத்தில் இவர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டு அவர்களின் நீட்டோலைகளை அவர்களே வாசித்தனர். தானே வாசிக்க இயலாதவன்  “நல்ல மரம்” எனப்பட்டான். அவனுக்குப் பிறர் உதவி தேவைப்பட்டது.

அரண்மனையுள் புகார் (புக இயலாமல் நிறுத்தப்பட்டவர்கள் )  அனுப்பிய மனுக்களே நீட்டோலைகள் அல்லது புகார்மனுக்கள் ஆயின.  இவை பின்னர் வாசிப்புப் பெற்றன.
புகார் மனு என்பது இப்போது வெறும் புகார் என்று குறுகி ஆங்கிலத்தில் கம்பிளைன்ட் என்ற சொல்லுக்கு நிகராக வழங்கிவருகிறது. புகார் என்றால் அரசவைக்குள் புகாதவர்கள் என்று பொருள்.  புக என்றால் உள்ளே போக அனுமதி அல்லது அதிகார இணக்கம் என்பதுதான். இவ்விணக்கம் பெறாதோர் உள்ளே புகார் (புகமாட்டார் அல்லது நுழையமாட்டார்). நுழையாரின் மனுவே புகார்மனு. மன்னியிருப்பது மனு.  எழுத்தில் இருந்தால் அது மன்னும். (  மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநில மீதிது போல் பிறி திலையே என்ற பாரதி பாட்டில் மன்னும் என்றால் நிலைபெற்ற என்று பொருள்.  அந்த மலை அங்கேதான் இருக்கும். நிலையானது. யாரே  திருடவல்லார்?).  எழுத்தில் வரும் வருத்தக்கூற்றுக்கள் ஓரளவுக்கு நிலையானனவையே.  நீர்மேல் எழுதியிருந்தால் அது மனு இல்லை என்று நம் பாட்டி முன்பே சொல்லியிருக்கிறாள்.  உணர்க..  ஓலையில் எழுதி அரசரிடம் சேர்த்தது கல்மேல் எழுத்துப் போலும் கடினமான பொருளாதலின் மனு ஆகிறது.

மனு என்பது உருது கிருது என்பார்கள்.  எப்படி உருது?  தமிழில் பொருளிருக்கிறதே. உருது உருது என்று கத்திக்கொண்டு இருப்பதை உருதுப் பேராசிரியன் கேட்டால் ஆமாம் என்னது தான் என்று எடுத்துக்கொண்டு அவனது அகரவரிசையில் புகுத்திக்கொள்வான். அப்புறம் என்ன? நம்ம வீட்டுக் கறவைப் பசுவை அடையாளம் தெரியாமல் அடுத்தவீட்டுப் பசு என்று சொல்லிக்கொண்டிருந்தால் அடுத்தவீட்டான் எடுத்துக்கொள்வது அவன் குற்றமன்று.  என்னது அன்று என்று ஒரு பத்து வெள்ளியை கீழே போட்டுவிட்டுப் போனால் வருகிறவன்  எடுத்துக்கொண்டு நன்றிசொல்கையில் அது அவன் குற்றமன்று. ஆக  அதன்பிறகு அவன் எடுத்துக்கொண்டானே அது அவனுடையதாக இருக்கும் என்று இளிவாயுடன் களிகொள்வதே சாலும்.

முற்காலத்தில் ஓலைகள் எழுத அமைத்தவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலேதான் அதை அமைத்தனர். நீட்டோலை என்றால் ரொம்ப (  நிரம்ப) நீட்டமான ஓலை என்று சொல்லிக்கொடுப்பார்கள்.  நீட்டமான ஓலை ஓலையின் அளவைக் குறிக்காது.  அதிகாரி யிடத்து நீட்டி அதை அவர் வாங்கிக் கொண்டதைக் குறிக்கும்.  Submitted by extending a copy of whatever complaint in writing to an officer who received it with royal permission. Extending does not mean that the “olai” or palm leaf is long.  The complaint in it may be not short and may have consumed several leaves. That is not the matter. The leaves must be of a certain standard length and must be tied. All such things are basic. Standard cut and prepared leaves could not be that long to call it long. 

 இந்தியர்கள் எதையும் சுருக்கமாகச் சொல்லாமல் சுற்றிவளைப்பவர்கள் என்று சீனர் மலைக்காரர்கள் சொல்வதுண்டு. வள்ளுவர் சொன்னார்:  பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற…….தவர்'  என்று. சீனமொழியைப் படியுங்கள். அப்போது எப்படிச் சுருக்கிவிட்டார்கள் என்று தெரியும்.

அவ்வளவுதான் புகார். மந்திரி வரும்போது நீட்டிய ஓலைகளை இனி நீட்டோலை என்னலாம். குற்றமில்லை. நீங்களேபோய் வாசிக்கவேண்டா. எண்ணிய அனைத்தும் எழுதாமல் மன்னிய புகார்களை முன்வைக்கவும்,
மந்திரியின் அதிகாரிகள் வாசித்துக்கொள்ளுவார்கள்.

கருத்துகள் இல்லை: