செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

ஒழுகுதல் வடிதல் நக்குதல்> அமைந்த சொற்கள்.

இப்போது சில சொற்களை அறிந்து இன்புறுவோம்.

நக்கு > நாக்கு.
வடி > வாடிக்கை. (எப்போதும் வடிவது.  அதைப்போல் எப்போதும் நிகழக்கூடியது. )

ஓழுகுதல் நீரொழுகுதல் செயல்பாட்டையும் குறித்ததுபோல வடிதல் வாடிக்கையும் எப்போதும் வழக்கமாக நடைபெறுவதைக் குறித்தது.

சீரும் கூட ஒழுகக் கூடியதுதான். இதையெல்லாம் மறந்துவிட்டுப் படிப்பீரானால் குழம்புவீர்.  " சீரொழுகு சான்றோர் சினம்". இத்தொடர் எங்கிருந்து வருகிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே.

என் முன் எந்தப் புத்தகமும் (பொத்தகமும்) இல்லை.

இவை இரண்டும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்.  தொழிற்பெயர் என்பது ஒரு வினைச்சொல்லில் நின்று தோன்றுமொரு பெயர்ச்சொல். அந்த வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயர்.

வாத்தியார் பையனுக்கு ஓர் அறை கொடுத்தார் என்னும்போது  அறை என்ற ஒரு செயல்,  ஒரு கல்லையோ அல்லது மரத்தையோ போல் எண்ணிக்கைப் படுத்தப்படுவதை அறியலாம்.  ஒரு முட்டை, இரு முட்டை என்று எண்ணுவதைப் போலவே ஓர் அறை. ஈர் அறை என்று என்று எண்ணிக்கைப் படுத்துகிறோம். அறை என்ற வினையை ஒரு பொருள்போல் கொள்கின்றோம். எனவே அஃது வினைப்பெயராகிறது.  இதையே தொழிற்பெயர் என்றனர்.

நக்குதல் என்பது நாவால் ஒன்றைத் தடவுதல்.  இதில் முதலெழுத்து ஆகிய ந என்பது நா என்று நீள்கின்றது   நக்கு > நாக்கு.  இப்படித் திரிந்து ஓர் உறுப்பின் பெயராய் மாறிவிடுகிறது. உறுப்பின் பெயர என்பது  சினைப்பெயர் எனப்படும். உண்மையில் இது தொழிற்பெயர் ஆகி தொழிலுக்கே பெயராய் இல்லாமல் அத்தொழிலை இயற்றும் ஓர் உறுப்புக்குப் பெயராகின்றது. தொழிலின் பெயராய் அமைந்து பின் உறுப்பைக் குறித்ததால் ஆகுபெயராய் ஆகிப் பின் உறுப்பின் பெயராகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கலாம். அது ஒரு சுற்றிவளைப்பு ஆகும். சுருக்கமாக அதைச் சினைப்பெயர் என்னலாம். இந்தத் தந்திரம் மொழியில் பலவிடத்துக் கையாளப்பட்டு வந்துள்ளது.

நக்கு என்பதில் அடிச்சொல் ந என்பதுதான்.  ந என்பது நீண்டு நா என்றாகி உறுப்பைக் குறிக்கிறது. ந என்பதே ஓர் ஆதி வினை என்று அறிந்துகொள்க. குகைமனிதன் ந என்றால் நக்கு என்று ஏவினான். மரக்கொம்பில் தேனெடுத்த வேளையில் அவன் இன்னொருவனிடம் ந,  ந என்றிருப்பான்.  அது அவனுக்குப் பொருளுணர்த்தப் போதுமானதாய் இருந்தது.  நாம் இன்று நுழைபுலம் மூலமே இதை அறியமுடிகிறது.

ந  -----   வினை: நாவினால் தடவு.

ந -----     நக்கு :  இதில் வந்த மேம்பாடு என்னவென்றால் கு என்ற வினைச்சொல்லாக்க விகுதி வந்து சொல் நீண்டுள்ளது.  பொருள் அதுவேதான்.

கு என்பது (விகுதி )  மூழ்கு,  தாங்கு,  தேங்கு, என்று பல சொற்களில் வினைகளை உருவாக்கித் தருகிறது.

ந என்பதும் நா (  = நாக்கு) என்பதும்   பேச்சுக்கு வசதியில்லைபோலும். அது பின் நாவு, நாக்கு என்று நீண்டு சொல்ல வசதி தந்தன.

பண்டை மனிதன் நாவினாலும் சிரிப்பொலியை எழுப்பினான்.  ந > நகு என்ற சொல்லும் உண்டானது. வாயைப் பிளந்துகொண்டு நாக்கைத் தூக்கி ஒலியை எழுப்ப அது நகுதல் ஆனது. பின் அது பொதுவாக எப்படிச் சிரிப்பதையும் குறிக்க விரிந்தது.

ந > நகு.  நகுதல். (சிரித்தல்).

துன்பம் வருங்கால் நகுக!

சந்திப்போம்.

உங்களுக்கு ஒரு கேள்வி:

வாடிக்கை -  இது இயற்சொல்லா திரிசொல்லா?

எழுத்துப்பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.

கருத்துகள் இல்லை: