செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பெருச்சாளி.

பெருச்சாளி என்ற சொல்லைப் பார்ப்போம்,

இது ஒரு புலவர் புனைவு அன்று என்பது சொல்லைப்பார்த்தாலே தெரிகிறது.

இருசொற்கள் ஒட்டி அமைக்கப்பட்ட கூட்டுச்சொல் இது,  இவ்விரண்டனுள் இரண்டாம் சொல்லில் இறுதியாய்  நிற்பது எலி என்ற சொல்.  எனினும் பெருச்சாளி என்பதில் எலி எங்கே என்று தேட வேண்டி உள்ளது.

சாளை என்ற சொல்லிலிருந்து தொடங்குவோம்.  சாளை என்னும் சொல்லின் பல பொருள்களில் குடிசை என்பதுமொன்று. அது ஒரு வகை மீனைக் கூட குறிக்கும். ஆனால் மீனுக்கு இங்கு வேலை இல்லை.

அந்தக் காலத்தில் பெருச்சாளிகள் அதிகமாகக் காணப்பட்டது  குடிசைத் தொகுதிகள் உள்ள இடங்களில்தாம். அங்கு வாழ்ந்தவர்கள் தின்ற உணவு முதலியவற்றைத் திறந்த வெளிப் பக்கங்களில் வீசி எறிந்து குப்பைகளை மிகுத்து மகிழ்வு கொண்டாடியவர்களாக இருந்தபடியால். இவ்வெலிகள் அங்கு அதிகம் உண்டாயின. இதுமட்டுமின்றி இப்பெரிய எலிகளை அடிக்கக் கூடாது என்று போற்றி வந்ததாகவும் தெரிகிறது.

இந்தச் சாளை எலிகள்  நாளடைவில் சாளிகள் என்று பதமாற்றம் அடைந்தன.

சாளை எலி >சா(ளை எ)ளி >   சாளி.

இப்புணர்வில் ஏற்பட்ட மாற்றங்கள்

சாளை எலி என்றது சாளி என்று மாறியதை மரூஉ என்`க.

சாளையெலி >  சாளெலி > சாளி.

ஐ கெட்டது;  சாள்+எலி > சாள்+(எ)+(ல்)+(இ) >  சாள்+இ > சாளி.

ஐயுடன் எகரமும் லகர ஒற்றும் கெட்டன.

ளகர ஒற்று வந்ததால் லகர ஒற்று வீழ்ந்தது. இவ்விரண்டில் ளகர ஒற்று வலிவானது என்பது இதனின்றும் பெறப்படும்.

இதன்வழி,  குடிசை எலிகளைக் குறிக்கச் சாளி என்றொரு சொல் இருந்தமை யும் பெறப்படும். அஃது இன்றில்லை.

 இவை பின் வேறு இடங்கட்கும் பரவி உருவில் பெரியவையாய் இருந்தமையின் பெரு என்ற அடைமொழி பெற்றன.

பெரு+ சாளி =  பெருச்சாளி.

வலித்தல் விகாரம். (பெருஞ்சாளி என்று வாராது பெருச்சாளி என்ற வந்தது....).
(வலிக்கும்வழி வலித்தல் என்ற தொல்காப்பிய விதி சொல்லமைப்பிலும் பின்பற்றப்பட்டது. அவ்வாறு படுமென்பது முன்னர் இடுகைகளில் உரைக்கப்பட்டது காண்க.

சில விரித்து எழுதப்பட்டன.

கருத்துகள் இல்லை: