புதன், 16 ஜனவரி, 2019

காவியம் சொல்

கவி என்ற சொல்லை முன் விளக்கியிருக்கிறோம்.

ஒரு பொருள்மேல் கருத்துகளையும் கற்பனைகளையும் கவித்துப் பாடப்படுவதே கவிதை.

-----------------------
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை எல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்

என்பது  கவிதை  ;  நூல்:  அழகின் சிரிப்பு.

அப்படியானால் செய்யுள் என்பதென்ன?   இதற்கு,  பவணந்தியார் கூறிய வரையறவு :  " வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"  என்பது.  ஒளவையாரின் இந்தப் பாட்டு ஒரு செய்யுள்:

ஈதல்  அறன்;   தீவினைவிட்டு ஈட்டல் பொருள்;
காத லிருவர் கருத்தொருமித்து  -----  ஆதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந்  திம்மூன்றும்  
விட்டதே பேரின்ப வீடு.

கவிதைகளால் ஆக்கப்பட்ட பெருநூல்  காவியம்.

கவி + இயம் =  காவியம்.   

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  முதனிலை நீண்டது காண்க.

பாடம் என்பதும் முதனிலை நீண்ட சொல்:

படி + அம் =  பாடம்.  படி என்பது பாடி என்று திரிந்து,  இகரமிழந்து பாட் ஆகி, அம் சேர்ந்து பாடம் ஆனது.

முன் காலத்தில் பாடங்களெல்லாம் பெரும்பாலும் பாடல்களாக இருந்தன.  அவற்றை அவர்கள் இராகம் போட்டுப் பாடி ஒப்புவித்தார்கள்.  ஆசிரியர்களும் பாடியே சொல்லிக்கொடுத்தார்கள்.  திரு வி க அவர்களின் காலத்தில் இவ்வழக்கம் குறைந்தது,  தம் நூலில் அவர் பாடியே படிக்கவேண்டும் என்றார்.

படித்தல் என்றாலே பாடுதல் என்ற பொருளும் உண்டு.

உன்ன நெனச்சேன்
ஒரு பாட்டுப் படிச்சேன்

என்ற திரைப்பாடலில் படிச்சேன் என்ற சொற்பயன்பாடு காண்க.

பாடு+ அம் = பாடம் என்பதையும் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆகவே காவியம் என்ற சொல் முதனிலைத் திரிபு ஏற்ற சொல் என்பதுணர்க.






கருத்துகள் இல்லை: