புதன், 2 ஜனவரி, 2019

இடைக்குறை தொகுத்தல் முதலிய அணுகும் விதம்

கண் என்பது இடம் என்றும் பொருள்தரும் என்பதை அறிவீர்கள். இங்கு முன் இடுகைகளிலும் இது கூறப்பட்டிருக்கிறது.

உரைநடையில் முக்கண்ணன் என்று தான் வரும்.  சிலர் செய்யுள் நடையில் உரை நடையை எழுத முற்பட்டு முக்கணன் என்று கட்டுரையிலோ கதையிலோ எழுதியிருக்கலாம்.  இவ்வாசிரியர்கள் தாம் செய்யுளில் மிக்க ஆர்வமும் பட்டறிவும் உடையராய் இருக்கலாம்.  இப்படிக் கட்டுரைகளில் எழுதவேண்டியதில்லை.  ஆனால் செய்யுளில் நீட்டம் குறைக்கவேண்டின் வேறுவழியில்லை.  எடுத்துக்காட்டு:

முக்கணா போற்றி   ( தேவாரம் 968.10 ).

பெண்பாலிலும்  முக்கணி என்று வரும்.

என்னுதல் ( என்று சொல்லுதல் ) என்பதும்  குறுகி  எனுதல்,  எனல் என்று எழுதப்படக்கூடும். முதலாம் இரண்டாம் செய்யுளடிகளில் மனுவை என்று தொடங்கி இருந்தால் அடுத்த அடியில் எனுதல் என்று போடுவதற்குத் தடை ஏதும் இல்லை.  ஆனால் அண்மையில் இவ்வாறு எழுதி யாம் அறியவில்லை.

 தெக்கணி -  தக்கணி என்ற மொழிப்பெயரில் கணி என்பதும் இவ்வாறு குறைந்ததே.  இந்தச் செய்யுள் வசதியை மொழிப்பெயர் அமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிந்து, ஒருவகையில் பெயரமைத்தவர்களைப் பாராட்டவேண்டியுள்ளது.

கணம் என்ற சொல் கண்ணிமைக்கும் காலத்தைக் குறிப்பது. இது வெகுகாலமாய்த் தமிழில் வழக்கில் உள்ள சொல்லாகும்.

குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி ..... கணமேயும் என்ற குறளில் கணமென்பது வந்துள்ளதென்பது நீங்கள் அறிந்ததொன்றே.   கண் + அம் =  கண்ணம் என்று இரட்டிக்காமல் கணமென்றே வந்துள்ளது காண்க.  இதிலொரு வசதி என்னவென்றால் பொருந்தியவிடத்து கண்ணம் என்ற  புத்தமைப்பை வேறொரு பொருளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஒரே அடிப்பிறந்த சொற்கள் இரட்டித்து ஒரு பொருளையும் இரட்டிக்காமல் இன்னொரு பொருளையும் ஏற்றமைதல் உளது.   இதற்கு எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்  (  வாழ்க்கை நெறி விதிகள் அல்லது ஆலோசனைகள் ).
அறு + அம் =  அற்றம்.  ( தருணம் )
தருணமாவது சூழ்நிலைகள் தருமொரு செயல்பாட்டு வசதி ,  நல்வேளை .

தமிழா உனக்கிது தருணமே வாய்த்தது
தாரணிக்கெல்லாம் வழி காட்ட   ( ஒரு பாடல் வரி ).

கோபம் வந்தால் பலர் கத்துவர்.  கத்துவதன்மூலம் தன் ஏற்றுக்கொள்ளா மனப்பான்மையைக் காட்டுவர். 

கத்து >  கது   > கதம் .

கழுதைக்கு ஏற்பட்ட பெயர்களில் ஒன்று காழ் காழ் என்று அது கத்துவதால் ஏற்பட்ட பெயர்.   காழ் என்பது கழு என்று மாறி  ( முதனிலை குறுகித் திரிந்து ) தை விகுதி பெற்றுக் கழுதை என்று அமைந்தது.  ஒப்பொலிச் சொல்.

எப்படிக் கத்துகிறது என்பதைக் குறிக்காமல்,  வெறுமனே அதன் கத்தும் குணத்தைக் குறித்து எழுந்த சொல் கத்து > கத்தை என்பதாகும்.  கத்து > கது > கதை என்பது இதிலிருந்து அமையினும் வேறு பொருள் தருவதுவாம். . இடைக்குறையால் குறிக்கும்பொருள் வேறானது.

அறிந்து மகிழ்க.

திருத்தம் பின்

 

கருத்துகள் இல்லை: