ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வேடம்: டகரத்துக்கு ஷகரம்.

சில மொழிகளில் ட என்பதும் த என்பது ஷ என்றும் ஸ என்றும் ஒலிக்கும். இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இதை நீங்கள் சில அன்றாடச்  சொல்வழக்குகளி   லிருந்து  அறிந்துகொள்ளலாம்.

ஒத்நீல் என்ற பெயர் ஒஸ்நீல் என்று ஒலிக்கப்பெறுகிறது.
ஒத்மான் என்று  எழுதிவைத்து விட்டு ஒஸ்மான் என்று அழைக்கிறார்கள்.

சில மொழிகளில் ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்கின்றன.  ஆனால் தமிழில் ஓர் எழுத்துக்கு ஓர் ஒலியே உள்ளது.  இது மொழிமரபு..

டி ஐ ஓ என் என்ற எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பின்னொட்டுக்கு ஷன் என்ற ஒலித்தரவு உள்ளது.  சிட்டுவேஷன் என்பதை எழுதிப் பார்த்தால் டி என்ற எழுத்துக்கு ஷ என்ற ஒலி வரும்.

வேடம் என்ற சொல் பின்  வேஷம் என்று மெருகு பெற்றுள்ளது. டவுக்கு ஷ வந்தது.   சரிதானே? சிற்றூரார் இதனை வேசம் என்று சொல்வர்.  தமிழிலும் டகரத்துக்கு  மெலித்த சகரமும்  அயல் ஒலி ஷகரமும் பயன்பாடு கண்டுள்ளன.   இது தமிழின் ஒலிமரபுக்கு ஒத்ததன்று என்பது நீங்கள் அறிந்ததே.  பிராமணரான தொல்காப்பியனாரே அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பர்.  வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாவை நோக்குக.

வேஷம் என்பது வடசொல்.  வேடம் என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் நாட்டில் இருக்கும்போது வேட்டி கட்டிக்கொண்டால் இங்கிலாந்துக்குப் போனவுடன் கால்சட்டை போட்டுக்கொள்ளலாம். மனிதன் அவன் தான்.  வேடம் வேறுவேறு.

சமஸ்கிருதம்  மேலைத்தரவு என்று நினைத்தால் வேடம் என்பதன் மூலம் வே என்ற தமிழே.   அது உள்நாட்டு மொழி என்பதனால் வே என்பது இரண்டுக்கும் பொதுவான அடிச்சொல் என்னலாம். ஏனென்றால் அடுத்தடுத்து வாழ்ந்த குகை மாந்தர்கள் இந்த ஒரே வே என்ற அடிச்சொல்லைப் பகிர்ந்து பேசி இருக்கலாம்.

வேடு என்பது பானையின் வாயில் கட்டப்படும் மூடுதுணி ஆகும்.  தயிர்ப்பானைக்கு வேடு கட்டிப் பூச்சி புழுக்கள் உள்ளே போய்விடாதபடி காப்பது பண்டை வழக்கம். இப்போதெல்லாம் ஒரு மூடியைப் போட்டு வைக்கின்றனர். தயிர் வந்துவிடுகின்றது.  உறைமோர் ஊற்றித்தான் அது வரும்.

வே என்பது மேல் துணியால் போர்த்துவதைக் குறிக்கும்.  அதுபின் வேய் என்று நீண்டு  வேய்தல் என்று வினைச்சொல் ஆகும்.   முடியை வேய்ந்து கொண்டவனே  வேய்ந்தன் >  வேந்தன் ஆனான். யகர ஒற்று விடப்பட்டதற்குக் காரணம் மூலச் சொல் வே என்பதுதான்.  வே என்ற அடி, சொற்களில் பதிவு பெற்றிருந்தாலும் தனிச்சொல்லாக இன்று வழங்கவில்லை. இறந்துவிட்ட பாட்டி மாதிரி ஆகிவிட்டது.

வே > வேள் என்பதும் அன்னது.  அவனுக்கு முடி இல்லை என்றாலும் ஒரு துணியைத் தலையில் கட்டிக்கொண்டுதான் அவையில் அமர்ந்தான். அதனால் வேள் ஆனான்.  வே என்ற அடிச்சொல் பல்பொருள் ஓரடிச் சொல் ஆகும்.  அதற்கு வெம்மை என்ற பொருளும் உள்ளதன்றோ?  வேளான்மை  வேட்டல் வேள்வி  வேட்பு என்பன பிற.

சீனமொழியில் ஓரெழுத்துக்கு ஒரு சொல் ஒரு பொருள். ஒரு சொல்லொலி எடுப்பிலும் படுப்பிலும் பொருள் வேறுபடும்.  ஆரோகணம் அவரோகணம் மாதிரி.   சில கூட்டுச் சொற்களும் உள.  அவ்யோங்க்  என்பது போல.  தமிழில் சொற்கள் விகுதி பெற்றுச் சமத்கிருதம்  ( குறிப்பு:   த் <> ஸ் )  போல் மிகும். இம்மிகுதியே விகுதி எனப்பட்டது.  மிஞ்சு >  விஞ்சு என்பதுபோலும் திரிபு.

வே > வேய்
வே >  வேள்
வே > வேள் > வேடு >

வேடு > வேடம்.

இன்னும் பல.  பிற பின். நன்றி.

பிழைகள் இருப்பினும் புகுத்தப்படினும் பின் திருத்தம் பெறும்.

கருத்துகள் இல்லை: