செவ்வாய், 29 ஜனவரி, 2019

மரங்கள் ஆடியது நாட்டியமா உடல்பயிற்சியா?

ஒளிமங்கிய மாலையிலே களிபொங்கிய ஆட்டம்
ஒவ்வொன்றாய் இலைகொம்பு கிளையெல்லாம் கூட்டும்
வளியெங்கும் புகுந்தோடி வழைச்சுறுத்தும்,   சீன
வளைநீரில் மேலெழுந்து வந்தடைந்த  வற்கே;

கலைகளிலே நாட்டியமோ கிளைகளுமே மேவிக்
காட்சியிதைப் படைத்தனவே கைகால்கள் போல
இலைகிளைகள் அசைவும்தான் மரங்களுமே செய்யும்
ஏற்றதொரு உடல்பயிற்சி எனப்புகலல் சாலும்.

அசைவில்லா மரங்களவை உடற்பயிற்சி  கொள்ளும்
அணியில்லை என்பதெலாம் அறியாரின் சொல்லோ?
இசைவெல்லும் மெல்லொலியும் எழுகின்ற தம்மா
இயற்கையழ கிதனையான் என்னென்று சொல்வேன்.


அரும்பொருள்

களி -  மகிழ்வு
வழைச்சு -  புதுமை  fresh
"வழைச்சற விளைந்த" (பெரும்பாணாற்றுப்படை 280)
வழைச்சுற  ( எதிர்ச்சொல்)  வழைச்சற.
கூட்டும் -  நடத்தும்
சீன வளைநீர் -(   தென்)   சீனக் கடல்
வற்கு -   அழகு   (வல்+கு,  வன்மையான அழகு)
ஒரு  -  கவிதையில் ஓர்  எனற்பாலது
ஒரு என்று வரும்.
புகலல் -  சொல்லுதல்.
அணி -  வகை, பிரிவு

வல் + அழகு = வல்லழகு : இதில் லழ என்பது குறைய வல்கு என்றாகும்.
வல் கு என்பவை புணர்த்த வற்கு என்பது இறுதியாம்.  இது இடைக்குறைச் சொல்  ஆகும்.

நீரைக் கழுவிய படி (  தொட்டுக்கொண்டு)  மலர்ந்து நிற்பது  " கழுமலர்",  செந்தாமரை என்பது  செங்கழுமலர் அல்லது செங்கழுநீர்மலர்.  கழுமலர் என்பதில் ழு  மற்றும் ர் என்பவை நீங்க கமல என்றாகும்.  இடைக்குறையும் கடைக்குறையுமான சொல்.  இது பின் அம் விகுதி பெற்றுக் கமலம் ஆகி  தமிழன்று என்று குறிக்கப்பட்டது,  இதன் இடைக்குறை அமைப்பை அறியாமல்தான்.  கமலம் என்பது ஒருவாறு தனிச்சொல்லாக ஏற்றமுற்றுவிட்டது.

தாமரை என்பதும்  நீருடன் தாழ்ந்து அதை மருவி நிற்கும் மலர் எனப்பொருள் தரும் சொல்.  தா :  தாழ் என்பதன் கடைக்குறை.  மருவு என்பதில்  மரு + ஐ என்று சேர்க்க மரை ஆகிறது.  ஆக :   தாமரை.


கருத்துகள் இல்லை: