ஞாயிறு, 27 ஜனவரி, 2019

விகுதி இல்லாத சொல்லுருக்கள்.

சொற்களின் அமைப்பில் பகுதி விகுதி சந்தி இடைநிலை சாரியை என்று பல சொல்வர்.  இப்போது நாம் இவற்றில் எவையுமற்ற சொல்லமைப்புகள் சிலவற்றைக் கண்டு இன்புறலாமே.

எடுபிடி என்ற சொல்லைக் கவனியுங்கள்.   ஒரு சீமானுக்கு வேண்டியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிப்பந்தியைத் தான் எடுபிடி என்`கின்றோம்.  எடு என்பது ஒரு வினைச்சொல். பிடி என்பதும் ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டுச்சொல்லாகி இது அமைந்துள்ளது.

கெடுபிடி என்ற சொல்லும் அன்னது.  கெடுதல், பிடித்தல் என்பனவே  இணைந்து ஒரு சொல்லாகிவிட்டது.

வருமானம் என்பதற்கு ஈடாக வரும்படி என்ற சொல்லும் வழங்குகிறது.  இதில் படி என்பது சிறு வகையினவான வரத்துகளைக் குறித்ததுபோலும்.  வரும் என்பது எச்சவினையாகும்.

இரு தொழிற்பெயர்கள் இணைப்பில் அமைந்ததே பேச்சுவார்த்தை என்ற சொல் வழக்கு ஆகும்.  பேச்சு வார்த்தை என்பன ஒரு பொருளன போல் தோன்றிடினும் அவை குறிப்பது ஒரு அலுவலகப் பூர்வமான ஓர் உடையாடலையே  ஆகும்.

பேச்சு என்பதில் விகுதி இல்லை.  பேசு > பேச்சு;  இங்கு சகரம் இரட்டித்துச் சொல் அமைந்தது, வார்த்தை என்பதில் ஐ விகுதியாகும். தகர ஒற்று இடைநிலை என்று சொல்க.  இரும்பு ஈயம் போலவே வார்த்தைகளும் வார்த்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்துகொள்க.  வார் என்பது ஏவல் வினை. வார்த்தை :   இது வார்த்தல் என்பதன் சார்பில் அமைந்த சொல்லாகும்.

கருத்துகள் இல்லை: