திங்கள், 28 ஜனவரி, 2019

வேற்றுமை வித்தியாசமான கதை

வே என்ற எழுத்துக்கும் ( வேகாரம் )   வி என்ற எழுத்துக்கும்  (  விகரம் )  உள்ள ஓர் ஒலித்தொடர்பினை இப்போது கண்டு இன்புறுவோம்.

வேதம் என்ற சொல் வித் என்னும் சொல்  லடிப்படையில் தோன்றியதென்று  ஏறத்தாழ சில நூற்றாண்டுகட்கு முன் சொல்லியிருந்தனர்.  அதனை இன்றும் பலர் மகிழ்வுடன் சுட்டிக்காட்டுவதுண்டு.

வித் >  வேத்    :  வேத் + அம் = வேதம்  என்றனர்.

இவர்கள் இப்படிக் கூறக் காரணம் நாம் இங்குக் கூறியவாறு இவ்வொலிகள் திரிதொடர்புடையன என்பதே.

வேறு,  வேற்றுமை என்ற சொற்கள் தமிழில் உள்ளன.

அதே பொருளுடைய இன்னொரு சொல்:  வித்தியாசம் என்பது.

இங்கும்  வே > வி தொடர்பு நல்லபடியாகப் பளிச்சிடுகின்றது.  ஆதலின் திரிபு வகையை ஒரு விதி அல்லது முறைப்படியானது என்று சொல்வது சரியானதே.

திரிபுமுறை சரி என்றாலும் அடிச்சொல்லாகத் தரப்பட்டது சரிதானா என்பது இன்னொரு கேள்வி.  அதற்குள் நாம் இப்போது செல்லவில்லை.

வே < வி;  வே > வி. இரண்டும் முறைப்படியானவை.

வேறு > வேற்று >  வேத்து > வித்து

வேறு என்பது சொல்லின் உரு வேற்று என்று இரட்டிக்கும்: அதை வேற்றுமை என்ற சொல்லில் கண்டறிவது ஒன்றும்  கடினமில்லை.

வேற்று என்பது வேத்து என்று ஊர்ப்பேச்சில் திரியும்.  வேற்று ஆள் என்னாமல் வேத்தாள் என்று பேச்சில் சொல்வதால் இது தெரியக்கூடியதுதான். இதை அறியவும் பெரிய மூளை வேண்டியதில்லை.

வேத்து என்பது வித்து என்று மாறுவது  மேற்சொன்ன விதிமுறைகளுக்குள் அடங்கிய ஒன்றுதான்.  அதிலும் நமக்கு  ஒரு கருத்துவேற்றுமை இல்லை.

வித்தியாசம் என்பதில்   இ - யாசம் என்பவற்றைக் கவனிப்போம்.

ஆயது = ஆனது.

ஆய+  அம் =  ஆயம்   ( ஆனது )

வித்தி  என்ற முதற்படிச் சொல்பகுதியில்  வித்து என்பது வித்தி என்று மாறியது.

வித்து ஆயம் என்றால் நன்றாக இல்லை.   எச்சச் சொற்களில் வருவதுபோல அதை வித்தி  ஆயம் என்பது நன்று.   விரும்பு என்ற சொல் எச்சமாகும்போது விரும்பி என்பதுபோலும்   சொல்லு என்பது சொல்லி என்று வருவது போலும் ஓர் அமைப்பு இது.   ஆய என்பது வினைச்சார்பான அமைப்பு ஆதலின் இகரம்
பொருந்துகிறது.  வித்தி  ஆய  என்பது மிக்க நன்று.

இனி  யகரம்  சகரமாகும்.  எடுத்துக்காட்டு:  நேயம் >   நேசம்;  வாயில் > வாசல்.

இங்கு  வித்தி ஆய என்பது வித்தி ஆச என்று மாறுகிறது. அப்புறம் இவற்றைப் புணர்த்தினால் வித்தியாச என்றாகிறது.   அம் விகுதி சேர்த்தால்  வித்தியாசம் ஆகிறது.



திரிபு விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டுள்ளன என்பதைக் கண்டு மகிழலாம். இதை முறையாக விளக்கியுள்ளோம்.


எழுத்துப்பிழைத் திருத்தம் பின். 

கருத்துகள் இல்லை: