வெள்ளி, 4 ஜனவரி, 2019

நிவர்த்தி சொல்லமைப்பு.

நிவர்த்தி :  பெயர்ச்சொல்
நிவர்த்தித்தல்  -  பெயர்ச்சொல்.

நிவர்த்தி என்பதொரு புலவர் புனைவாகும்.  இது அமைந்த விதம் உரைப்போம்.

நில்  :  நிற்றல். இதில்  லகரம் போய்,  நி என்று கடைக்குறை ஆனது.

வரு :  வருதல்.   வருத்தி :  வரும்படி செய்தல்.

இது   வர்த்தி ஆனது.

வருந்துதல் குறித்த சொல்லின் வேற்றுமை

இது வருந்து என்ற சொல்லின் வேறானது,  வருந்து,  வருத்து என்பன இதனின்று போந்தவை.

நிவர்த்தி: 

ஒரு சாமி கும்பிடுமிடத்தில் பெண் போகக்கூடாது என்று  என்று விதி உள்ளது.  அங்கு ஒரு பெண் தெரியாமல் போய்விட்டதனால் சாமிக்குற்றம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அங்கு தொழுமிடம் மாசுற்றது என்று பூசாரி கூறுகிறான்.  அந்த மாசை அகற்றிப் பழைய நிலையை வரும்படியாக அவன் சில சடங்குகளை நடத்துகிறான்.

மாசுற்றது தொடராமல் நிற்கவும்   ( நி  )
பழைய தூய்நிலை வருமாறு செய்யவும் :   ( வரு > வருத்தி > வர்த்தி,   அல்லது வர் > வரத்தி >  வர்த்தி ,   அல்லது வரு>  வர் > வர்த்தி  )  ( வர் )

தி : தொழிற்பெயர் விகுதி.

இப்போது இணைக்க:   நி + வர் + தி :  நிவர்த்தி.

எப்படிச் சொன்னாலும் அதுவே.

இந்தத் திரிபுகளைக் கவனிக்கவும்:

வா   -   ஏவல் வினை
வரு -   வினைப்பகுதி     (  வரு > வருகிறான். வருவான் ).
வ  -   வரு> வ:    ( வ >  வந்தான் ).  ( இங்கு வா என்றபாலது வ என்று குறுகிற்று).
வ  >  வர்:   பேச்சுத் திரிபு..    வர்றான், வர்ரியா
வரு > வார்:   வாராய்,  (விளி )
வார்  :   வாரான், வாரார்  (எதிர்மறை ).
வா > வார் > வாரி :   நீர்வரத்து.  நீரலைகள் வரத்து உடைய இடம்:  கடல்.
வரு +  உடு + அம் =  வருடம்.  கணக்கில் மீண்டும் மீண்டும்  வருதலை உடுத்த அல்லது கொண்ட கால அளவு.   உடு என்ற சொற்பயன்பாடு இலக்கியத் தமிழினைக் கொணர்ந்து முற்படுத்தும் அழகினது ஆம்.  இரண்டு உயிர்கள் வரின் ஒன்று தொலையும்.  ஆக ஓர் உகரம் தொலைந்தது காண்க.
வரு > வர்ஷ:  குறித்த காலத்தில் வருவதாகிய மழை.
வரு >  வரத்து:   து தொழிற்பெயர் விகுதி.    (போக்குவரத்து ).(  நீர்வரத்து  ).

நில் நி:  இது நின்றுபோனதையும் நிலையானதையும் தனித்தனியாகவோ இணைத்தோ  குறிக்கும் கடைக்குறை. நிறுத்துதலையும் சுட்டவல்லது.

வர்த்தி :   வருவித்தல்.

அதுவே நிவர்த்தி என்றறிக.





அடிக்குறிப்பு


விதத்தல்,  விதந்துரைத்தல்  என்பன பண்டைத் தமிழில் நன் `கு  வழங்கிய சொல்.   விதம் என்பது அதனின்று அமைந்த சொல்லாகும்.

வித +  அம் =  விதம்.  வித என்ற  வினையில் இறுதி அகரம்.   அம் என்ற விகுதியில் துவக்கம் அகரம்.  இவற்றுள் அகரத்தின் இரு முளைப்பில் ஒன்று அகற்றப்படும்.    வித் + அம் =  விதம் ஆகு.    விதந்து கூறுதலாவது சிறப்பாக எடுத்துரைத்தல்.

விதம் என்பது சிறப்பான ஒரு அல்லது இன்னொரு தோற்றம்.

தட்டெழுத்துப் பிழைகள் இருப்பின் பின் திருத்தம் பெறும்.

கருத்துகள் இல்லை: