புதன், 11 அக்டோபர், 2017

பிள்ளை (சொல்), பிள்ளை (பட்டம்). சொல்லமைப்பு.

இனிப் “பிள்ளை” என்னும் சொல்லினை ஆய்வு செய்வோம்.
பிள்ளை என்பதில் இரு துண்டுகள் உள்ளன. ஒன்று பிள் என்பது.  மற்றது “ஐ”  என்னும் விகுதி.
பிள்ளை (கைப்பிள்ளை, பால்குடிக்கும் பிள்ளை, என்பன போலும் வாக்கியங்களில் வரும் பிள்ளை) என்பதற்குரிய வினைச்சொல்:  பிள்ளுதல் என்பது.

பிள்ளுதல் என்பதென்ன.

இதன் பொருள் :  ‘பிரிந்து தனியாய் இருத்தல்’.

பிள்ளுதல் எனற்பாலதற்கு அகராதி தரும் பொருளையும் அறிதல் நலம்.  1. நொறுங்குதல் 2.  பிளவுண்டாதல்.  3.விள்ளுதல்.  4. வெடித்தல்.  5. வேறுபடுதல்  ---  என்பன இச்சொல்லின் பொருளாகக் கூறப்படுகிறது. வெவ்வேறு அகரவரிசைகள் பொருள் அடைவில் சற்று வேறுபடலாம்.

இச்சொல்லில் மையக்கருத்தாக இருப்பது,  ஒருபொருள் இரண்டாக மூன்றாகப் பலவாகப் பிரிதல் என்பதே.  பாருங்கள்:   நொறுங்குதலில் ஒரு துண்டு பலவாய் ஆகிவிடுகிறது.  உருவில் சிறுமை  பருமை ஏற்படாமலா?
பிள் என்பதோ ஓர் அடிச்சொல்.  அது இன்னும் திரியும். பிள் > பிடு என்று வினைச்சொல் ஆகும். வினையினின்றும் இன்னொரு வினை.  

 பிடு>பிடுதல்.
பிடு> பிட்டு ( உணவுவகை).

பேச்சில் புட்டு,  புட்டு வீசு என்றெல்லாம் வருதல் கண்டிருப்பீர்கள்.  புட்டுபுட்டு வைக்கிறாள் என்பது வாக்கியம்.  கவனிப்பு:   பி ( இகரம் )  உகரமாய்த் திரிந்தது (உ).

இப்போது பிள்ளை என்ற சொல்லமைபு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  1 (அமைபு என்பது அமைநெறி குறிக்கும் சொல். சிறு வேறுபாடுதான். )

பட்டப்பெயர் பிள்ளை:

   பண்டை அரசர்கள் பலதார மணமுறை கடைப்பிடித்தோர். ("பன்மனையம்"POLYGAMY .  )  ஒருவனுக்கு ஒருத்தி என்ற கிறித்துவ நெறி அப்போது நடப்பில் இல்லை.2  எனவே அரசனின் பல்வேறு மனைவியருக்குப் பிறந்தோரும் கொள்வனை கொடுப்பனை உடையோரும் பிறதுறைகளில் சிறந்துவிளங்கினோரும் நிலக் கிழார்களும்  “பிள்ளை”  பட்டம் அடைந்தனர். இதேபோல் பிற பட்டப்பெயர்களும்  நெறிகொண்டன. இராமாயணக் கதையில் இராமன் ஒற்றைமனையம் 3 மேற்கொண்டிருந்தாலும் ( ஏகபத்தினி விரதனானாலும் ) அது மக்களுக்குரிய நடப்பில் இல்லை.



பிள்ளை என்ற சொல்லின் பொருள்:  1.   பெற்றெடுத்தது என்பது நடைமுறைப் பொருள். இது வழக்காற்றினின்று பெறப்படுகிறது.  சொல்லமைப்புப் பொருள்: பிரிந்து தனியானது என்பது.  அதாவது தாயிலிருந்து பிரிந்து தனியானது.  பிறந்து தனியாய் இயல்வது.

2. பிள்ளை என்பது பட்டமாய் வருகையில்,  அரசனிடமிருந்து பிரிந்த தனிவாழ்வினர் என்று சொற்பொருளுரைத்தல் வேண்டும். இவர்களுக்கு அரசன் என்ன உதவிகள் அல்லது ஆதரவுகள் வழங்கினான் என்பது சொற்பொருளில் அடங்காத தனிநடப்பு ஆகும்.


ஆயும் மகளும் ஆயினும் வாயும் வயிறும் வேறென்ற தமிழ்நாட்டுப் பழமொழி இங்கு கவனத்தில் கொள்ளற்பாற்று.
 
-------------------------------------------

Footnotes:-

1.சொல்லமைப்பு என்பது சொல்லமைபு என்றும் சொல்லமைவு என்று ஏற்ப உருக்கொள்ளும், அறிக.

2. (What God hath put together, let no man put asunder ) . The dictum in Bible disallowing divorce.

3 Monogamy 

Further reading:   Polyandry in Ancient India by Daman Singh. 


கருத்துகள் இல்லை: