வியாழன், 21 மே, 2020

ஓரே எழுத்துச் சொல் - பொருள் ஒன்றாதல்.

ஒன்று சேர்தல் என்பதற்கு ஒரே எழுத்தால் தமிழில் ஒரு சொல்லைத் தருக என்று யாரேனும் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

அந்தச் சொல் "கு" என்பதுதான்.

இந்தக் கு என்ற சொல்லைத் தமிழன் கண்டுபிடித்துப் பேசிய காலம், மனிதன் காட்டுவாசியாகவோ குகைவாசியாகவோ இருந்த தொல்பழங்காலம் ஆகும். காரணம், "ஓரெழுத்து ஒருசொற்கள்" தமிழில் இன்னும் சிலவே உள்ளன.

எடுத்துக்காட்டு:-

ஆ.  இந்த ஆவென்னும் சொல் பசு என்று பொருள்படுகிறது.  தமிழனுக்குப் பசுவுடன் அல்லது ஆவுடன் உள்ள தொடர்பு, தமிழ் உருவாகத் தொடங்கிய நெடுமுற் காலமே ஆகும்.  அக்காலத்தினைப் பற்றி நம் அறிவினால் ஒன்றிரண்டை அறிந்துகூறலாம். அந்நிலை கடந்து மிகுதியாக ஒன்றும் நாம் கூறுதற்கில்லை. ஏன் பசுவை ஆவென்று சொன்னான் என்பது அறிய இயலாமல் இருக்குமானால் அச்சொல்லை  இடுகுறிப் பெயர் என்றே இலக்கணம் கூறும்.

பூ என்ற சொல்லும் ஒரே எழுத்தால் ஆன சொல்தான். ஆகவே தொல்பழந்தமிழன் பூவை அறிந்த காலம் நினைக்கவும் இயலாத பழங்காலமே. பூத்துக் குலுங்குங்கால் அதை நோக்கி  " இவ்வளவு அழகா?" என்று வியந்து பாராட்டிக்கொண்டு "பூ!" என்றுஓசையிட்டிருந்தால், அது வியப்புக் காரணமாக வந்த பெயர் என்று சொல்லலாம்.  ஆனால் இக்காரணம் பலரும் ஒப்பமுடிந்த காரணமாக இருக்கவேண்டும். தமிழில் பூத்தல் என்பது வினைச்சொல்லாகவும் இருக்கிறது. இந்நிலையில்  இது பல்பொருளொரு சொல்.  மலர் பூத்தது என்று வாக்கியமாவது மட்டுமன்று; தோன்றுதல் என்றும் பொருளாகும்:  நிலவு பூத்த இரவு,  கண் பூத்துப் போயிற்று என்றெல்லாம் வழக்குண்மையால், இச்சொல்  பல்வேறு வகைகளில் பயன்பாடு காணும் சொல்லாகும். பாருங்கள்:

காத்திருந்து கண்கள்
பூத்துப் போனதடி,
கையினில் வேலேந்தி
மயிலினில் வருவானென்று   (காத்.)

என்று தமிழிசையில் பாடல் வருகிறது.

பூமியும் தோன்றிய ஒன்றே என்ற பொருளில்  "பூ+ம்+இ" என்று  வந்து தோன்றுதற் பொருளும் தருகிறது.   ம் - எழுத்திடைநிலை; இ என்பது விகுதி ஆகும். நெஞ்சில் பூத்த எண்ணம்,  வானில் பூத்த நிலா ---- என்பவெல்லாம் தோன்றுதல் கருத்தே.

கு என்பதற்கு வருவோம்.  கு என்பது ஒன்றுசேர்தல் பொருள் உடையது. இப்பொருளில் அது வேற்றுமை உருபாகவும் வருகிறது.

மதுரைக்குச் சென்றான்.  ( மதுரை சேர்தல் பொருள்)
கண்ணுக்கு மருந்து இட்டான்.  ( கண்ணிற் சேர்தல் பொருள்).
முகத்துக்குக் கவசம் ( இதுவும் அது).

பொருளில் இஃதே அவற்றோ ரன்ன  என்று  நூற்பா ( சூத்திரம்) செய்திருப்பார் தொல்காப்பியனார்.

இந்தக் கு என்பது சொற்களிலும் பதிவுகண்டு இலங்குவதாகும். இவற்றை நோக்குக.

குவிந்த நெல் -----    குவி என்பது நெல் ஒன்றுசேர்ந்திருத்தல் குறிக்கிறது. இங்கு கு என்பதே சொல்.  வி என்பது வினையாக்க விகுதி.  அவி, தவி என்பனபோல். அன்றி வி என்பது பிறவினை விகுதியுமாகும்.  அறிவி(த்தல்)  காண்க.

குப்பை.  (கு + பு+ ஐ).  இங்கு பு, ஐ என்பன விகுதிகள். வேண்டாதவை, வீசப்பட்டவை ஒன்றுசேர்தல் கருத்து.

குப்பம் (கு + பு+ அம் ).  ஒன்று சேர்தல் குறிப்பு.  மக்கள் சேர்ந்து வாழிடம்.

குவை . (கு + வை).  குவியல்.  இங்கு வை என்பது விகுதி.

கு  > குடு.அடிச்சொல்.

குடு > குடி. (  நீரை வயிற்றுள் சேர்த்தல்)
குடு > குடும்பம். குடும்பு. குடும்பி.
குடு > கூடு>  கூடுதல் ( ஒன்று சேர்தல்)
குடு > குடாப்பு. கோழிக்குடாப்பு.
குடு > கூடு > கூடை (பொருளை ஒன்றுசேர்த்தெடுக்கும் முடைவு).
குடு > கூடம் : மக்கள் அல்லது பிற சேர்ந்திருக்கும் இடம்).
கூ+ இடம் > கூடம் எனினும் ஆகும்.  (பகவொட்டு எனவும் தகும்.)
குட்டை: நீர்சேர் இடம். டகர இரட்டிப்பு.

டு என்பதும் ஒரு சொல்லாக்க விகுதி.

கூடு> குடும்பம்,  இது சா(வு) > சவம் போலும் குறுகி அமைந்த பெயர் எனினும் ஆகும்.

இதுகாறுங்கூறியவற்றால்,  ஒன்றுசேர்தலுக்குக்  கு என்பது ஓரெழுத்து ஒருமொழியாம் அறிந்து மகிழ்க.

ஓய்ந்து சந்திப்போம்.

தட்டச்சுப்பிறழ்வுகள் பின் கவனம்.



கருத்துகள் இல்லை: