ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தும்பியும் தம்பியும்.

 வண்டுகள் பறந்துகொண்டே முரல்கின்றன.  முரலுதலாவது ஒலி எழுப்புதல்.  முரல் என்பது குரல் என்பதற்கு எதுகையாகிறதே  என்று ஆனந்திக்கலாம். அது கவிஞனுக்கும் கவர்வரிகள் வரைவோனுக்கும் பயன்படும்.

முரலும் வண்டுகள் முர்ர்ர்ர் என்று ஒலியெழுப்புவன.    அவை ரீ .......ரீ  என்று ஒலிசெய்வதாயும் நாம் சொல்லலாம்.  (ரீ என்று )+ (இங்கு )+  (ஆர்தல்)  இது வாக்கியத்தின் உட்குறிப்பு.  இதிலிருந்து ஆர்தல் என்ற  சொல்லின் பொருளைத் தேடலாம்.  ஆர்தல் - ஒலித்தல்.   ரீ + இங்கு+ ஆர் + அம் = ரீங்காரம் ஆகும்.  ரகரம் மொழிமுதலாகாது என்று தொல்காப்பியனார் சொல்லிக்கொண்டிருப்பதால், அவருக்கும் ஒரு வணக்கம் செலுத்திவிட்டு,  ஓர் இகரத்தை முன்வைத்துக்கொள்ளலாம்.  அப்போது அது  இரீங்காரம்  ஆகிவிடும். ரீங்காரம் தமிழன்று. சரி. அப்புறம் ஏன் உள்ளுறைவுகளெல்லாம் தமிழாக இருக்கிறது? நான் இட்டிலி சாப்பிடமாட்டேன் , எனக்குத் தோசைதான் வேண்டுமென்று அழுதால் தாய் என்ன செய்வது?  நீ தோசையே சாப்பிடு என்று விடவேண்டியதுதான்.  நீ வேண்டுமானால் தோசை சாப்பிடு. நான் இட்டிலியே சாப்பிடுகிறேன்.

தம் தாம் என்பன சந்தங்கள். தம் தம் தம் > தம் தம் > சம் தம் > சம் தம் > சந்தம்.  த - ச போலி.   ஆனால் அந்த வண்டு  தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று ஒலித்துக்கொண்டே பறக்கிறது.    தும்மை எடுத்துக்கொண்டு,  ஒரு ~பி என்னும் விகுதியைச் சேர்த்துவிட்டால்  அது தும்பி  ஆகிவிடுகிறது.

தும்பியும் காமரம் செப்புகிறது என்கின்றது சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூல்.  காம் -  விரும்புகின்ற (ஒலி) .  அர் ...ர்...-  ஒலி.   அம் - விகுதி.    அந்த அர் .......தும்ம்ம்ம்ம்ம்ம் என்று சூழ்புறத்து  ஆர்கின்றது.

ஆனால் தம்பி என்ற சொல்லில் வரும் பி  என்பது பின் என்ற சொல்லின் கடைக்குறை.  தம்பின் வருபவன் தம்பி.   இங்கு வரும் ~பி விகுதியன்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: