செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

வை: வசம்; வாய்: வசம்.

 மனிதராயினும் மற்ற விலங்குகள் ஆயினும் சில சூழ்நிலைகளில் வசமிழந்து தம்போலும் மற்றொரு பிறவிக்குப் பணிந்துவிடுகின்றன(ர்) . இதை வசம் என்று முன் கூறும்வழியே கூறுகிறோம்.

வசம் என்ற சொல்லுக்கு வை என்பதே அடிச்சொல்.

வை -  சொல்லாக்க நெறி நிற்குங்கால் வய் என்று வரும்.

வய் >  வய்+ அம் > வயம்.

யகர சகரப் போலியால்  வயம் > வசம் ஆகும்.  ( ய - ச).  வாயில் -  வாசல் போல.

வை என்பது மேற்குறித்தவாறு வய் என்று ஒலியொற்றுமைத் திரிபு அடையாமல் வை என்றே நின்று  அம் விகுதி பெறுவதுமுண்டு.  அப்போது:

வை > வை+ அம் > வையம்  ஆகும்.  அப்போது வைக்கப்பட்டதான உலகம் என்று பொருள்படும்.  இறைவனால் வைக்கப்பட்டது,  இயற்கையால் வைக்கப்பட்டது என இருவகையாகவும் பொருள்தெரித்துக் கொள்ளலாம்.  தெரிதல்> தெரித்தல் (பிறவினை).  தெரித்தல் என்பது தெரியும்படி செய்தல். தெரிவித்தல் - பிறர் தெரிந்துகொள்ளுமாறு செய்தல்.

வையம் என்பது அம் விகுதி கொள்ளாமல் அகம் என்னும் விகுதி பெற்று வையகம் என்றும் வரும்.

ஒரு பொருளை ( பழத்தை ) எடுத்துக் குரங்கினிடம் வைத்தால்,  பழம் குரங்கின் வசமானது என்க.   ஆகவே வசமென்பது  ஒன்றன்பால் அல்லது ஒருவன்பால் வைக்கப்பட்ட நிலை.  தானே தன்னை வைத்துக்கொள்வதும் பிற ஆற்றலால் வைப்புறுவதும் அடங்கும்.

உயிர்கள் ஓரு கவர்நிலையில் வைக்கப்பட்டுக் கிடக்கும் பருவமே வசம்+தம் ஆகும்.   இங்கு தம் என்பது து+ அம் கலவை விகுதி.   வசம் + து + அம்.  வசத்ததாகி அமைதல்..   வசம் +து : வசத்தது (ஆகி)  அம் - அமைதல், விகுதியும் ஆகும்.  து  இடைநிலை எனினுமது. 

மாலை நேரம் உயிர்களை வயப்படுத்துகிறது. வயந்த ( வசந்த) காலமும் வயம் செய்கிறது. 

இனி வாய் என்ற சொல்லாலும் இதையே விளக்கலாம்.

வாய்  - இது இடம் குறிக்கும்.  எ-டு: தோற்றுவாய் :  தோன்றுமிடம்.

ஓரிடத்து வைப்புற்றுக் கிடத்தலே வாய் + அம் >  வய் + அம் > வயம்.

சாவு + அம் என வந்து குறுகிச் சவமானதுபோல,   வாய் + அம் > வயமென்றும் குறுகுதற் குரித்தேயாம்.

வை, வாய் என்பன ஏனை மொழிகளிலும் பரவியுள்ளது. இதனை இன்னோரிடுகையில் பார்ப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





கருத்துகள் இல்லை: