திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தோரணமும் தொங்கரணும்

 தொங்கு என்ற சொல் இன்னும் தமிழில் வழங்கிக்கொண்டுள்ளது.  "இந்தத் தையல்காரனிடம் இரவிக்கையைத் தைக்கக் கொடுத்தால் கிடந்து தொங்கிக் கொண்டிருந்தால்தான்  அது திரும்பிவருகிறது" என்பது நம் செவிகளை எட்டும் உரையாட்டின் பகுதி ஆகும்.  என்ன செய்வது?  தீபாவளி பொங்கல் என்று வந்தால்தான் தையற்காரரிடம் தையலார் சென்று எதையும் தைக்கக் கொடுக்கிறார்கள்.  மைவிழியார் முதல் மெய்விழியார்வரை அப்போதுதான் அங்குச் செல்வதால், பாவம் இந்தத் தையற்காரர்கள் அப்போதுதான் கடின உழைப்பில் களைத்துப்போகிறார்கள். அது நிற்க.

தொங்கு என்பதைப் பற்றிப் பல சொல்லலாம்.  எல்லாவற்றையும் எழுதினால் மோசமாகிவிடும்.1  ஆதலால் சில சொல்வோம். "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லத் தேற்றாதவர் என்றார் தம் குறளில் நாயனார். இது ஈண்டு கடைப்பிடிப்போம்.  தொங்கு என்பது துங்கு,  தூங்கு என்பவற்றோடும் தொடர்புடையது என்று பேராசிரியர் மு. அரசங்கண்ணனார் கூறினார். ( 23.10.1956 சிங்கப்பூரில் மந்திரி ஹாஜீ ஜூமாட் அவர்கள் தலைமையில்  அப்பேராசிரியருக்கு  நடந்த வரவேற்புரையில் )  "தூங்குக தூங்கிச் செயற்பால" என்று தொடங்கும் குறளையும் மேற்கோளாக ஓதினார் அப்பேராசிரியர். இது தொங்கு துங்கு தூங்கு என்பவற்றினை நீங்கள் ஆராய ஓர் உந்துதலாகும்.

இவைபோல யாரும் சொல்லாவிட்டாலும் ஆய்வுக்கண்ணுடன் அனைத்தையும் நோக்குதல், விழிப்புற்ற தமிழ் மாணவற்கு வேண்டியதோர் அணுகு முறையாகும்.

பழங்காலத்தில் மனிதன் அல்லது மனிதக் குடும்பம் குடியிருந்த மரத்தின் பக்கக் கிளைகளில் தொங்கரண்கள் இருந்தன.  இந்த அரண்களில் ஒரு குரங்கையோ ஒரு பையனையோ ஒலியெழுப்பும் பறவையையோ  வைத்திருப்பர். கொடிய காட்டுவிலங்கு குடிமரத்தை அணுகுமாயின் இவர்கள் ஒலிசெய்து கவனத்தை  ஏற்படுத்துவர்.  அப்போது மைய மரத்தில் இருக்கும் மனிதர் எழுந்து தயாராய்விடுவர்.  

இப்படி ஒரு காவலுக்காக வைக்கப்பட்ட தொங்கரண்கள்  பிற்காலத்தில் அலங்காரப் பொருட்களாகித் தோரணங்கள் என்று அறியப்பட்டன.

தொங்கு >  தொகு > தோ.    ஓ.நோ:   பகு> பகு(தி) > பா(தி)

அரண் >  அரணம்.   அம் விகுதி.

தோ + அரணம் >  தோ(வ)ரணம் > தோரணம்   ஆயிற்று. 

இதைச் சுருக்கமாக,  தோ + ரணம் >  தோரணம் என்று விரைவிலறியக் காட்டினும் பேதமில்லை.  பேச்சில் வந்த இச்சொல்லை இப்படி அறிதல் எளிதாம். இலக்கணத்துடன் ஒப்ப முடிக்கவென்று சிலர் ஆசைப்படுவர். இலக்கணத்தை ஆதரித்துச் செல்வதும் பழுதின்று.

தொங்கரண் என்பது தொங்குஅரண் - வினைத்தொகை. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:-

மற்ற சொல்லாய்வுகள்:

மோசம் : https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_94.html

நாசம்:  https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_35.html

தீபத்தம்பம் https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html

கடப்பல்> கப்பல்,  அடங்கம் >  அங்கம் என்பனவும் காணலாம்.  இடைக்குறை. கடல்கடக்க உதவுவது.  பன்னிரண்டு.

இதிலேதான். மேற்படி https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html.

அனைத்தும் அறிந்து மகிழ்க.



கருத்துகள் இல்லை: