சனி, 21 ஆகஸ்ட், 2021

அம்மா அருள் பொழிக




படம் எடுத்தவர்  திரு ஜீவா கரு.


கவிதை:



சிந்துகவி


விதிமுறைகள் 
(கோவிட் கட்டுப்பாடு):


 புதிய விதிகளைக் கண்டனர் ----  நோய்ப்

போக்கின் கடுமையை   வென்றிட,

இதுவே செலும்வழி என்றனர் ---  பிறர்

எவரும் வராநிலை கொண்டனர்.    (1)


பூசை நடத்தல்


சிலவரே ஆதரித்  தோர்வர  --- பூசை

செவ்வனே சென்றதே துர்க்கையின்,

மலரழ கேயலங்  காரமே --- கண்டு

மலைத்தன நம்மனோர் உள்ளமே!     (2)


அம்மனை வேண்டுதல்


நோய்வரும்  வாயடைப் பாய்நலம் ---  அம்மா!

நுடங்கா  மலேவரச் செய்திடு!

வாய்வயி றானவை நெஞ்சுடன் ---  நல்ல

வன்மை அடைந்திட நல்குவாய்.    (3)


பூசை முடிவு


ஆவன செய்தனர் பூசைஓர் --- மணி

அடுத்து வராமுனம் ஆனதே!

மேவு மகிழ்வொடும் வந்தவர்  ----  அருள்

பெற்ற நிறைவொடும் ஏகினர்.  (4)


சிவமாலாவின் கவிதை.


பொருள்:

செலும் - செல்லும் (தொகுத்தல் விகாரம்)

நோய் வரும் வாய் - நோய் வரும் வழி.

நலம் - எல்லா நலமும் அல்லது பிற நன்மை யாவும்

நுடங்காமலே - உடல்நலம் கெடாமல்.

பிற நலம் வந்தாலும் உடல்நலம் கெட்டால் பயனில்லை.

வராநிலை -  தடை.

வராமுனம்  -  வரா முன்னம்.   (முன்னம் -  முன்பு.)

நம்மனோர் -  நம் மக்கள்




அறிக மகிழ்க.

மீள்பார்வை பெறும்.

   

கருத்துகள் இல்லை: